செட்டியார் தந்திரம் பலிக்கவில்லை! (Post No. 2420)

GOLU CHETTI

Compiled by london swaminathan

Date: 24 December 2015

Post No. 2420

Time uploaded in London:- 7-49 AM
( Thanks for the Pictures  )

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

பூலோக இன்ப துன்பம் – என்ற பழைய தமிழ்  நூலிலிருந்து எடுக்கப்பட்ட கதை; பழைய தமிழ் நடையில் இருக்கும்:–

 

 

“ஓர் ஊரிலிருக்கும் வைசியனொருவன் தனது கடையை மூடிவிட்டு, வீட்டுக்கு வந்து ஸ்நானபானஞ் செய்துவிட்டு சாப்பிடப்போகும் சமயத்தில் வெளியே வந்து “ஐயோ யாதொரு பிச்சைக்கரனும் காண்கிலனே” யென்று வருத்தபடுபவன் போற் பாசாங்கு செய்துவிட்டு திடீரென்று போய் வீட்டுக் கதவைத் தாளிட்டுக் கொண்டு சாப்பிடுவான். யாராவது அன்னக் காவடிகளாகத் திரியும் ஆண்டிப் பரதேசிகள் வந்து ‘அன்னமோ, அன்னம்’ என்று கூச்சலிட்டால், அடுத்தவீட்டுத் திண்ணையில் படுத்திருப்பவர், “அடடா, உங்களுக்கு அதிர்ஷ்டமில்லை; இப்பொழுதுதான் செட்டியார் கதவைத் தாளிட்டுச் சாப்பிடப்போனார்” என்பார்.

 

இப்படியிருக்கையில் ஒரு நாள் ஒரு கிழட்டு சந்யாசி, பக்கத்து வீட்டிற்றானே வெகுநேரம் உகார்ந்திருந்தனன். செட்டியார் வழக்கம்போல கடையை மூடிவிட்டு வீட்டுக்கு வந்து தான் சாப்பிடப்போகும் தருணம் வெளியில் வந்து, நாற்புறமும் சுற்றிப்பார்த்து, யாதொரு பிச்சைக்கரரும் காணப்படாததால், “ஆரையா, ஆண்டிப் பரதேசிகளே! அன்னம் புசிக்க வாருங்களென்று” கூச்சலிட்டான்.

 

அண்டை வீட்டுத் திண்ணையில் சண்டிபோல் உட்கார்ந்திருந்த கிழட்டு சந்யாசி, “இதோ வந்தேனையா, புண்ணியமாய்ப் போச்சு!” என்று சொல்லி ஓடிவந்தான்.

 

லோபியாகிய வைசியன் மனம் மெலிந்து திகிலுற்று “ஐயோ! நாம் யாரும் இல்லையென்று கூச்சலிட்டால் இவன் எப்படியோ வந்துவிட்டானே. இல்லையென்றாலும் இத்தனை நாளாய் நம்மை மெத்த தர்மவானென்று புகழ்ந்து கொண்டிருந்த ஆட்களெல்லாம் நம்மை பரிகசிப்பரே” யென்று பயந்து வாய்ப்பேச்சுக்குப் பஞ்சமில்லாதவன் போல, “வாருமையா, சாமி” என்று சொல்லி, சந்யாசி வீட்டிற்குள் வருவதற்குள் தன் பெண்சாதியை மெதுவாக நாலைந்து அடி அடித்தனன். அந்த வஞ்சகி சந்யாசி சோற்றுக்கு வருவதை உணர்ந்து  நமது கணவன் உஷார் படுத்துகிறாரென்று ஊகித்து குய்யோமுய்யோவென்று கூச்சலிட்டழத்தொடங்கினாள். வந்த விருந்தாளியாகிய சந்யாசி மனமிரண்டு ஈதென்ன கர்மம், இவ்வளவு நேரம் காத்திருந்தும் வயிற்றுக்குக் கஞ்சியகப்படாமல் கலகாரம்பமாய்விட்டதேயென்றெண்ணி, ஓடிப்போய், நடையிலிருக்கும் தொம்பக்கூண்டின் (நெற்கூடு) பின்னால் போய் ஒளிந்துகொண்டான். ஈது உணரா வைசியன், பீடை ஒழிந்ததென்று போய் வாசற்கதவைத் தாளிட்டுவிட்டு மிகவும் சந்தோஷமாய் பெண்சாதியிடம் வந்து,

 

golu vedam madhu (2)  golu, seetharam2 (2)

“பெண்ணே! நான் நோகாமல்தானே அடித்தேன்?” என்றான்

அவள் உடனே “நான் ஓயாமல்தானே அழுதேன்” என்று சொல்லி சிரித்தாள். ஒளிந்திருந்த சந்யாசி இதையெல்லாம் பார்த்துவிட்டு திடீரென்று அவர்கள் முன் குதித்து,

“யானும் போகாமல்தானே இருந்தேன்” என்றார்.

 

செட்டியாரும் மரியாதைக்கஞ்சி தான் சாப்பிடவைத்திருந்த சோற்றைப் போட்டு இனிமேல் வரவேண்டாமென்று சொல்லி அனுப்பினார்.

–சுபம்–

(இப்படிச் சந்தி பிரிக்காமல் நீண்ட வாக்கியங்களை எழுதுவது உலகில் இரண்டே மொழிகளில்தான் உண்டு; சம்ஸ்கிருதமும் தமிழும்; இதற்கு இந்த இரண்டு மொழிகளில் மட்டுமே இலக்கணமும் உண்டு. ஆகையால் இவ்விரு மொழிகளும் ஒரே மூலத்திலிருந்து உதித்தவை என்பதை முன்னரே சில ஆராய்ச்சிக்கட்டுரைகளில் எழுதியிருக்கிறேன். படித்து மகிழ்க!)