“திருப்புகழ் நெருப்பு என்று அறிவோம் யாம்”

திருப்புகழ் ஆராய்ச்சிக் கட்டுரை -5

“திருப்புகழ் நெருப்பு என்று அறிவோம் யாம்”

 

அருணகிரிநாதர் பாடியதில் நமக்குக் கிடைத்த திருப்புகழ் பாடல்கள் 1300க்கும் சற்று அதிகம். அவைகளில் அவரே திருப்புகழின் பெருமையைக் கூறும் இடங்கள் நவில்தொறும் நூல்நயம் பயக்கும். படிக்கப் படிக்கத் தெவிட்டாதது. திருப்புகழைப் பழிப்பவர்க்கு விடும் எச்சரிக்கையைப் பாருங்கள்:

 

“சினத்தவர் முடிக்கும் பகைத்தவர் குடிக்கும்

செகுத்தவர் உயிர்க்கும் சினமாகச்

சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும்

திருப்புகழ் நெருப்பு என்று அறிவோம் யாம்

நினைத்தது அளிக்கும் மனத்தையும் உருக்கும்

நிசிக்கரு அறுக்கும்       –பிறவாமல்

நெருப்பையும் எரிக்கும் பொருப்பையும் இடிக்கும்

நிறைப் புகழ் உரைக்கும்   –செயல் தாராய்

 

திருத்தணியில் பாடிய இன்னொரு பாட்டில்

பலகாலும் உனைத் தொழுவோர்கள்

மறவாமல் திருப்புகழ் கூறி

படி மீது துதித்துடன் வாழ        –அருள்வாயே

என்பார்.

 

திருப்புகழ் படித்தால் இடர்கள் பறந்தோடும் என்று உறுதிபடக் கூறுகிறார்:

இருப்பவல் திருப்புகழ் விருப்பொடு படிப்பவர்

இடுக்கினை அறுத்திடும் எனவோதும்”

இதே கருத்தை வேல் வகுப்பிலும் கூறுவார்:

“ துதிக்கும் அடியவர்க்கு ஒருவர் கெடுக்க இடர்

நினைக்கின் அவர் குலத்தை முதல் அறக் களையும்

எனக்கோர் துணையாகும்

சொலர்க்கறிய திருப்புகழை உரைத்தவரை

அடுத்த பகை அறுத்து எறிய உறுக்கி எழு

மறத்தை நிலை காணும்”

 

சந்த நடை

சந்த நடை என்ற சொல் வரும் திருச்செங்கோட்டுப் பாடலில்:

“பத்தர் கணப்ரிய நிர்த நடித்திடு

பக்ஷி நடத்திய           குகபூர்வ

பச்சிம தக்ஷிண உத்தர திக்குள

பத்தர்கள் அற்புதம்        எனவோதும்

சித்ர கவித்துவ  சத்த மிகுத்த  தி

ருப்புகழைச் சிறிது அடியேனும்”

வரும் வரிகள் படிக்கப் படிக்கச் சுவைதரும்

கிருஷ்ண தேவராயரின் கல்வெட்டுகளில் பூர்வ தக்ஷிண உத்தர பச்சிம சதுஸ் சமுத்ராதிபதி என்று எழுதி இருக்கிறார். நான்கு திசைகளிலும் அவர் வெற்றி வாகை சூடியதை இது குறிக்கும். ஏறத்தாழ அதே காலத்தில் வாழ்ந்த அருணகிரியின் பாடல்களில் அதன் தாக்கம் தெரிகிறது.

 

 

எல்லோரும் நன்கு அறிந்த சின்ன எட்டு வரிப் பாடல்

பத்தியால் யான் உனைப் பலகாலும்

பற்றியே மா திருப்புகழ் பாடி என்று துவங்கும் பாடல்.

பெங்களூர் ரமணி அம்மாளின் இனிய குரலில் இந்தப் பாட்டைக் கேட்டவர்கள் மீண்டும் மீண்டும் கேட்பார்கள்.

 

வயலூர் திருப்புகழில்

“வீசா விசாலப் பொருப்பெடுத்து எறி

பேர் ஆரவாரச் சமுத்திரத்தினில்

மீளாமல் ஓடித் துரத்தியுட் குறுஒருமாவை (மா மரம்)

வேரோடு வீழத் தறித்து அடுக்கிய

போராடும் சாமர்த்திய திருக் கையில்

வேல் ஆயுதம் மெய்த் திருப்புகழ் பெறு வயலூரா”

என்றும் பாடுகிறார்.

 

 

அற்புதத் திருப்புகழ்

அவரே தன் வாயால் ‘அற்புதத் திருப்புகழ்’ என்றும் முருகன் புகழைப் பாடுவார்:

யானாக நாம அற்புதத் திருப்புகழ்’

தேனூற ஓதி எத்திசைப் புறத்தினும்

ஏடேவு ராஜ தத்தினைப் பணித்ததும் இடர் ஆழி”

 

 

யமன் வரும் போதும் முருகன் வந்து ‘அஞ்சாதே’ என்று சொல்லிக் காப்பாற்றுவானாம்:

“ படிக்கும் திருப்புகழ் போற்றுவன், கூற்றுவன் பாசத்தினால்

பிடிக்கும் பொழுது வந்து அஞ்சல் என்பாய் ”

நாமும் திருப்புகழைப் பாடி இடர் களைந்து இன்புறுவோமாக.

(படங்கள்: முக நூல்; நன்றி.)

 

 

எனது முந்தைய திருப்புகழ் ஆராய்ச்சிக் கட்டுரைகள்

1.தமிழில் திட்டத் தெரியுமா? வசை பாடுவது எப்படி?

2.சம்பந்தருக்கு அடிமை அருணகிரிநாதர்

3. தனிமையில் இனிமை: அருணகிரிநாதர்

4. டாக்டர் முருகனும் ‘பேஷன்ட்’ அருணகிரிநாதரும்

5. அருணகிரிநாதருடன் 60 வினாடி பேட்டி

Contact London Swaminathan at swami_48@yahoo.com for the list of all the 400+ articles.