
WRITTEN BY S NAGARAJAN
Post No. 9962
Date uploaded in London – 11 AUGUST 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஞானமயம் சார்பில் சுந்தரர் குருபூஜை தினமான ஆடி சுவாதித் திருநாளையொட்டி சுந்தரர் சப்தாஹ – ஏழு நாள் விழாவில் இரண்டாம் நாள் விழாவில் 9-8-2021 அன்று ச.நாகராஜன் ஆற்றிய உரை. இந்த உரையை facebook.com/gnnamayam தளத்தில் எந்த நேரமும் காணலாம்.
பல் பரிமாணம் கொண்ட காப்பியத் தலைவர் சுந்தரர்! – 2
ச.நாகராஜன்

இதை அறிவியல் நோக்கில் பார்த்தால் டைம் மெஷின் என்னும் கால இயந்திரத்தில் பின்னோக்கிச் சென்று இறந்திருந்த குழந்தை மீட்கப்பட்ட தலம் அவிநாசி என்று சொல்லி அதிசயிக்கலாம். ஆன்மீக நோக்கில் பார்த்தால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இறந்திருந்த குழந்தையை, அருளாளர் சுந்தரர் இறைவனைத் தொழுது வேண்டி, சிவபிரான் அருளால் உயிர்ப்பித்த ஆன்மீக அருள் தலம் என்று கொள்ளலாம். அவிநாசியப்பர் சந்நிதியிலேயே அந்த அந்தணச் சிறுவனுக்கு பூணூல் கல்யாணமும் நடந்தது. இன்றும் இந்த உற்சவம் அவிநாசியில் ஆண்டு தோறும் பங்குனி உத்திரத்தில், ‘முதலை வாய்ப் பிள்ளை உற்சவம்’ என்று விமரிசையாக நடக்கிறது. அவிநாசியப்பர் கோவிலின் தெற்கே ஒரு கிலோமீட்டர் தொலைவில் குளம் உள்ளது. இங்கு சுந்தரரர் பாடல் பாட, முதலை தன் வாயிலிருந்து குழந்தையை உமிழும் விழாவும், சுந்தரர் கோவிலில் உபநயனம் செய்விப்பதும் ஐதீகத்தை விளக்கும் விதமாக நடைபெறுகிறது. விஞ்ஞானிகளின் பார்வையிலும் முக்கியமானதாக விளங்குகிறது இந்தச் சம்பவம். காலத்தில் பின்னோக்கிச் சென்று இறந்தவனை மீட்க முடியும் என்பதை அதிசயமாக நிரூபிக்கும் விழா அல்லவா இது சுந்தரர் ஜோதிட சாஸ்திரத்தில் வல்லவர். எங்கும் போகாமல், திருவொற்றியூரிலேயே இருப்பதாக சத்தியம் செய்து சங்கிலியாரை மணந்து கொண்ட அவர் திருவாரூர் சிவபிரானை பார்க்காமல் இருக்க முடியாமல் திருவொற்றியூர் எல்லையைத் தாண்டவே அவர் கண்கள் குருடாயின. நீ எனக்கு மகத்தில் புகுந்த சனி போல அல்லவா விளங்குகிறாய். என் கண்கள் குருடாகி விட்டனவே. பார்வையைத் தா என்று அன்புடன் அவர் சிவனை நிந்தை செய்கிறார். மகத்தில் சனி புகுந்தால் நாட்டிற்கும் வீட்டிற்கும் கேடு என்கிறது ஜோதிடம். பார்வையைத் தா என்று அவர் வேண்ட பின்னர் பார்வையையும் பெற்றார். சுந்தரர் நாடெங்கும் சிவஸ்தலங்களை நோக்கி யாத்திரை செய்ததால் நாட்டிலே வழக்கில் உள்ள எளிய இனிய பழமொழிகளை வைத்து உணர்தற்கு அரிதாக உள்ள ஆழ்ந்த கருத்துக்களை விளக்குபவர். திருவிடைமருதூர் பதிகத்தை எடுத்துக் கொள்வோம் : கழுதை குங்குமம் தான் சுமந்து எய்த்தால் கைப்பர் பாழ் புக மற்றது போல என்கிறார். அரைத்த மஞ்சள் அது ஆவதை அறிந்தேன், புல் நினைப் பனி வெங்கதிர் கண்டால் போலும் வாழ்க்கை பொருள் இலை, வாழைதான் பழுக்கும் நமக்கு – இப்படி வழக்குப் பழமொழிகளைத் தருகிறார் அவர். இன்னும் ஏராளமான பழமொழிகளை அவர் பாடல்களில் காணலாம்.
சுந்தரர் இனிய தமிழிலே வித்தகர். அவர் பாடல்களில் நாம் காணும் சொற்கள் மொத்தம் 30322.. ஒவ்வொரு சொல்லும் ஆழ்ந்த பொருளை உள்ளடக்கிய் அமிர்தத் துளியே.
சுந்தரர் அனைத்து மகான்களின், அடியார்களின் பாராட்டுகளைப் பெற்றவர். எடுத்துக்காட்டிற்குச் சில!
வாழ்வாவது மாயம் என்று உரைத்தோன் மாமலர்த் தாள்
தாழ்வாம் எப்போதும் தலை என்று பாடினார் அருட்பிரகாச வள்ளலார்.
புராணத் திருமலை நாதர் தனது சொக்கநாத உலாவில், “ மலரடைந்த புள்ளவாம் பொய்கையிடைப் புக்க முதலைவாய்ப் பிள்ளை, வா என்ற பெருமாளும்” என்றும்,“தேன் படிக்கும் அமுதாம் உன் திருப்பாட்டு” என்றும் இன்னும் பலவாறாக அவரைப் புகழ்கிறார். குமரகுருபரரோ,”சொல்மாலை தொடுத்தணிந்த தொண்டர்” என்று புகழ்கிறார். சேக்கிழார் பிரானோ அவரது சொல்மாலைகளைத் தமிழ் மாலை என்றும் இன்னும் பல விதத்திலும் புகழ்ந்து கூறுகிறார். அவர் இயற்றிய திருத்தொண்டர் புராணத்தின் காப்பியத் தலைவர் அல்லவா சுந்தரர்! அவரைப் புகழ்ந்துரைக்க அவரிடம் புகழுரைக்குப் பஞ்சமேது?! ஆனால் இவை எல்லாம் பொய்யுரை அன்று; பொருளுரையாகும்!
சுந்தரர் அடியார்க்கு அடியானாக இருக்க விரும்புவதை திருவாலங்காடு பதிகம் முழுவதிலும் காணலாம். “ஆலங்காடா! உன் அடியார்க்கு அடியேன் ஆவேனே” என்று குறிப்பிடுகிறார்! அத்துணை எளிமையும் சிவனடியார் பால் மதிப்பும் கொண்டவர் அவர்!
கடவுள்எப்படி இருப்பார் என்பதைச் சுவைபட அவர் சொல்லும் விதமே தனி! பண்ணிடைத் தமிழ் ஒப்பாய், பழத்திடைச் சுவை ஒப்பாய் கண்ணிடை மணி ஒப்பாய், கடு இருள் சுடர் ஒப்பாய் என்று திருக்குருகாவூர் வெள்ளடைத் தலத்தில் அவர் விவரிக்கிறார். கடவுளைக் காட்டு என்னும் நாத்திகர்களுக்கு அவர் தரும் நல்ல பதில் இது. பழத்தின் சுவையை எவனாலாவது காண்பிக்க முடியுமா, அனுபவிக்க அல்லவோ வேண்டும் அது! தமிழ்ப் பண்ணின் சுகமே சுகம் என்றால் அதை எப்படிக் காட்ட முடியும்? அனுபவிப்பது அல்லவோ சங்கீத சுகம்! ஆண்டவன் அருளை அடைதல் அன்றோ விவரிக்க முடியாத சுகம்! கடவுள் எங்கு இருக்கிறார்? வஞ்சம் கொண்டார் மனம் சேரகில்லார் அவர், சரண் அடைந்தார் நெஞ்சம் கொண்டார் என்பதுவே அவர் பதில்! நினைவார் தம் உள்ளத்தே நிறைந்து தோன்றும் காற்றானை, தீயானை கதிரானை என்று கூறி சரணடைந்தவர் தம் உள்ளத்திலேயே அவன் உறைகின்றான் என்கிறார் அவர்!
திருஞானசம்பந்தர் தொடங்கி சுந்தரர் வரை வளர்க்கப்பட்ட கேள்விகளாகக் கேட்கும் பதிகம் ஒன்று புதுப் பாணிப் பாடல் உத்தியைத் தருகிறது. பாறு தாங்கிய காடரோ, தேனை ஆடு முக்கண்ணரோ, கோணல் மாமதி சூடரோ என்ற பாடல்களால் பின்னாலே வந்த திரைப்படக் கவிஞர்கள் கூட அதைத் தமக்கு உகந்தது என எடுத்துக் கொண்டனர் இல்லையா? என்ன தவம் செய்தனை யசோதா, உள்ளிட்ட அருமையான கீர்த்தனைகளைக் கேட்டு ரசிக்கிறோம். இன்னும் அவரால் உத்வேகம் பெற்ற கவிஞர்கள் நூற்றுக் கணக்கான மெல்லிசைப் பாடல்களையும் ஒரு நாள் போதுமா இன்று ஒரு நாள் போதுமா, நான் பாட இன்றொரு நாள் போதுமா, பேசுவது கிளியா, பாடுவது குயிலா என்று இப்படி கேள்விப் பாடல்களாக அல்லவா இயற்றியுள்ளனர்! இரு சொற்களை அடுக்கிப் பாடும் அவரது உத்தியும் இன்றைய நாட்களில் கவிஞர்களால் பெரிதும் பின்பற்றப்படுகிறது. பொன்னவன் பொன்னவன்,மின்னவன் மின்னவன், அன்னவன், அன்னவன் ,என்னவன் என்னவன் என்ற பாணியில் எத்தனை பாடல்களை இன்று நாம் கேட்கிறோம்!
அவரது நகைச்சுவைக்கு ஒரு அளவே இல்லை; அப்படி ஒரு நகைச்சுவைத் திலகம் அவர்; எடுத்துக்காட்டிற்கு ஒரே ஒரு பாடல் - நமண நந்தியும் கரும வீரனும் தருமசேனனும் என்று இவர் குமணன் மாமலைக் குன்று போல் நின்று தங்கள் கூறை ஒன்று இன்றியே ஞமண ஞாஞண ஞாணம் ஞோணம் என்று ஓதி யாரையும் நாணிலா அமணரால் பழிப்பு உடையரோ நமக்கு அடிகள் ஆகிய அடிகளே!
எப்படி ஒரு கிண்டல் பாருங்கள் - ‘ஞமண ஞாஞண ஞாணம் ஞோணம் என்று ஓதி’ என்கிறார்!
* தொடரும் tags- பரிமாணம் ,காப்பியத் தலைவர், சுந்தரர்! –2



