பல் பரிமாணம் கொண்ட காப்பியத் தலைவர் சுந்தரர்! –2 (Post No.9962)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9962

Date uploaded in London –  11 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஞானமயம் சார்பில் சுந்தரர் குருபூஜை தினமான ஆடி சுவாதித் திருநாளையொட்டி சுந்தரர் சப்தாஹ – ஏழு நாள் விழாவில் இரண்டாம் நாள் விழாவில் 9-8-2021 அன்று ச.நாகராஜன் ஆற்றிய உரை. இந்த உரையை facebook.com/gnnamayam தளத்தில் எந்த நேரமும் காணலாம்.

பல் பரிமாணம் கொண்ட காப்பியத் தலைவர் சுந்தரர்! – 2

ச.நாகராஜன்

இதை அறிவியல்  நோக்கில் பார்த்தால் டைம் மெஷின் என்னும் கால இயந்திரத்தில் பின்னோக்கிச் சென்று இறந்திருந்த குழந்தை மீட்கப்பட்ட  தலம் அவிநாசி என்று சொல்லி அதிசயிக்கலாம். ஆன்மீக நோக்கில் பார்த்தால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இறந்திருந்த குழந்தையை, அருளாளர் சுந்தரர் இறைவனைத் தொழுது வேண்டி, சிவபிரான் அருளால் உயிர்ப்பித்த ஆன்மீக அருள் தலம் என்று கொள்ளலாம்.      அவிநாசியப்பர் சந்நிதியிலேயே அந்த அந்தணச் சிறுவனுக்கு பூணூல் கல்யாணமும் நடந்தது. இன்றும் இந்த உற்சவம் அவிநாசியில் ஆண்டு தோறும் பங்குனி உத்திரத்தில், ‘முதலை வாய்ப் பிள்ளை உற்சவம்’ என்று விமரிசையாக நடக்கிறது. அவிநாசியப்பர் கோவிலின் தெற்கே ஒரு கிலோமீட்டர் தொலைவில் குளம் உள்ளது. இங்கு சுந்தரரர் பாடல் பாட, முதலை தன் வாயிலிருந்து குழந்தையை உமிழும் விழாவும், சுந்தரர் கோவிலில் உபநயனம் செய்விப்பதும் ஐதீகத்தை விளக்கும் விதமாக நடைபெறுகிறது. விஞ்ஞானிகளின் பார்வையிலும் முக்கியமானதாக விளங்குகிறது இந்தச் சம்பவம். காலத்தில் பின்னோக்கிச் சென்று இறந்தவனை மீட்க முடியும் என்பதை அதிசயமாக நிரூபிக்கும் விழா அல்லவா இது                                                                                                                                                                                                                                                                                                                                                                                        சுந்தரர் ஜோதிட சாஸ்திரத்தில் வல்லவர். எங்கும் போகாமல், திருவொற்றியூரிலேயே இருப்பதாக சத்தியம் செய்து சங்கிலியாரை மணந்து கொண்ட அவர் திருவாரூர் சிவபிரானை பார்க்காமல் இருக்க முடியாமல் திருவொற்றியூர் எல்லையைத் தாண்டவே அவர் கண்கள் குருடாயின. நீ எனக்கு மகத்தில் புகுந்த சனி போல அல்லவா விளங்குகிறாய். என் கண்கள் குருடாகி விட்டனவே. பார்வையைத் தா என்று அன்புடன் அவர் சிவனை நிந்தை செய்கிறார். மகத்தில் சனி புகுந்தால் நாட்டிற்கும் வீட்டிற்கும் கேடு என்கிறது ஜோதிடம். பார்வையைத் தா என்று அவர் வேண்ட பின்னர் பார்வையையும் பெற்றார்.                                                                                                                                                                            சுந்தரர் நாடெங்கும் சிவஸ்தலங்களை நோக்கி யாத்திரை செய்ததால் நாட்டிலே வழக்கில் உள்ள எளிய  இனிய பழமொழிகளை வைத்து உணர்தற்கு அரிதாக உள்ள ஆழ்ந்த கருத்துக்களை விளக்குபவர். திருவிடைமருதூர் பதிகத்தை எடுத்துக் கொள்வோம் : கழுதை குங்குமம் தான் சுமந்து எய்த்தால் கைப்பர் பாழ் புக மற்றது போல என்கிறார். அரைத்த மஞ்சள் அது ஆவதை அறிந்தேன்,  புல் நினைப் பனி வெங்கதிர் கண்டால் போலும் வாழ்க்கை பொருள் இலை, வாழைதான் பழுக்கும் நமக்கு  – இப்படி வழக்குப் பழமொழிகளைத் தருகிறார் அவர். இன்னும் ஏராளமான பழமொழிகளை  அவர் பாடல்களில் காணலாம்.                                        

சுந்தரர் இனிய தமிழிலே வித்தகர். அவர் பாடல்களில் நாம் காணும்  சொற்கள் மொத்தம் 30322.. ஒவ்வொரு சொல்லும் ஆழ்ந்த பொருளை உள்ளடக்கிய் அமிர்தத் துளியே.                                                                       

சுந்தரர் அனைத்து மகான்களின், அடியார்களின் பாராட்டுகளைப் பெற்றவர். எடுத்துக்காட்டிற்குச் சில!                                               

வாழ்வாவது மாயம் என்று உரைத்தோன் மாமலர்த் தாள்                

தாழ்வாம் எப்போதும் தலை என்று பாடினார் அருட்பிரகாச வள்ளலார். 

புராணத் திருமலை நாதர் தனது சொக்கநாத உலாவில், “ மலரடைந்த புள்ளவாம் பொய்கையிடைப் புக்க முதலைவாய்ப் பிள்ளை, வா என்ற பெருமாளும்” என்றும்,“தேன் படிக்கும் அமுதாம் உன் திருப்பாட்டு” என்றும் இன்னும் பலவாறாக அவரைப் புகழ்கிறார்.   குமரகுருபரரோ,”சொல்மாலை தொடுத்தணிந்த தொண்டர்” என்று புகழ்கிறார்.  சேக்கிழார் பிரானோ அவரது சொல்மாலைகளைத் தமிழ் மாலை என்றும் இன்னும் பல விதத்திலும்  புகழ்ந்து கூறுகிறார். அவர் இயற்றிய திருத்தொண்டர் புராணத்தின் காப்பியத் தலைவர் அல்லவா சுந்தரர்! அவரைப் புகழ்ந்துரைக்க அவரிடம் புகழுரைக்குப் பஞ்சமேது?! ஆனால் இவை எல்லாம் பொய்யுரை அன்று; பொருளுரையாகும்!           

                                         சுந்தரர் அடியார்க்கு அடியானாக இருக்க விரும்புவதை திருவாலங்காடு பதிகம் முழுவதிலும் காணலாம். “ஆலங்காடா! உன் அடியார்க்கு அடியேன் ஆவேனே” என்று குறிப்பிடுகிறார்! அத்துணை எளிமையும் சிவனடியார் பால் மதிப்பும் கொண்டவர் அவர்!

கடவுள்எப்படி இருப்பார் என்பதைச் சுவைபட அவர் சொல்லும் விதமே தனி! பண்ணிடைத் தமிழ் ஒப்பாய், பழத்திடைச் சுவை ஒப்பாய் கண்ணிடை மணி ஒப்பாய், கடு இருள் சுடர் ஒப்பாய் என்று திருக்குருகாவூர் வெள்ளடைத் தலத்தில் அவர் விவரிக்கிறார். கடவுளைக் காட்டு என்னும் நாத்திகர்களுக்கு அவர் தரும் நல்ல பதில் இது. பழத்தின் சுவையை எவனாலாவது காண்பிக்க முடியுமா, அனுபவிக்க அல்லவோ வேண்டும் அது! தமிழ்ப் பண்ணின் சுகமே சுகம் என்றால் அதை எப்படிக் காட்ட முடியும்? அனுபவிப்பது அல்லவோ சங்கீத சுகம்! ஆண்டவன் அருளை அடைதல் அன்றோ விவரிக்க முடியாத சுகம்! கடவுள் எங்கு இருக்கிறார்? வஞ்சம் கொண்டார் மனம் சேரகில்லார் அவர், சரண் அடைந்தார் நெஞ்சம் கொண்டார் என்பதுவே அவர் பதில்! நினைவார் தம் உள்ளத்தே நிறைந்து தோன்றும் காற்றானை, தீயானை கதிரானை என்று கூறி சரணடைந்தவர் தம் உள்ளத்திலேயே அவன் உறைகின்றான் என்கிறார் அவர்!

திருஞானசம்பந்தர் தொடங்கி சுந்தரர் வரை வளர்க்கப்பட்ட கேள்விகளாகக் கேட்கும் பதிகம் ஒன்று புதுப் பாணிப் பாடல் உத்தியைத் தருகிறது. பாறு தாங்கிய காடரோ, தேனை ஆடு முக்கண்ணரோ, கோணல் மாமதி சூடரோ என்ற பாடல்களால் பின்னாலே வந்த திரைப்படக் கவிஞர்கள் கூட அதைத் தமக்கு உகந்தது என எடுத்துக் கொண்டனர் இல்லையா? என்ன தவம் செய்தனை யசோதா, உள்ளிட்ட அருமையான கீர்த்தனைகளைக் கேட்டு ரசிக்கிறோம். இன்னும் அவரால் உத்வேகம் பெற்ற கவிஞர்கள் நூற்றுக் கணக்கான மெல்லிசைப் பாடல்களையும் ஒரு நாள் போதுமா இன்று ஒரு நாள் போதுமா, நான் பாட இன்றொரு நாள் போதுமா, பேசுவது கிளியா, பாடுவது குயிலா என்று இப்படி கேள்விப் பாடல்களாக அல்லவா இயற்றியுள்ளனர்! இரு சொற்களை அடுக்கிப் பாடும் அவரது உத்தியும் இன்றைய நாட்களில் கவிஞர்களால் பெரிதும் பின்பற்றப்படுகிறது. பொன்னவன் பொன்னவன்,மின்னவன் மின்னவன், அன்னவன், அன்னவன் ,என்னவன் என்னவன் என்ற பாணியில் எத்தனை பாடல்களை இன்று நாம் கேட்கிறோம்!
அவரது நகைச்சுவைக்கு ஒரு அளவே இல்லை; அப்படி ஒரு நகைச்சுவைத் திலகம் அவர்; எடுத்துக்காட்டிற்கு ஒரே ஒரு பாடல் -                   நமண நந்தியும் கரும வீரனும் தருமசேனனும் என்று இவர்           குமணன் மாமலைக் குன்று போல் நின்று தங்கள் கூறை ஒன்று இன்றியே ஞமண ஞாஞண ஞாணம் ஞோணம் என்று ஓதி யாரையும் நாணிலா அமணரால் பழிப்பு உடையரோ நமக்கு அடிகள் ஆகிய அடிகளே!
எப்படி ஒரு கிண்டல் பாருங்கள் - ‘ஞமண ஞாஞண ஞாணம் ஞோணம் என்று ஓதி’ என்கிறார்!

                          *                     தொடரும்


tags-  பரிமாணம் ,காப்பியத் தலைவர்,  சுந்தரர்! –2


 

பல் பரிமாணம் கொண்ட காப்பியத் தலைவர் சுந்தரர்! –1 (Post No.9957)

Sundaramurthy swamikal in Colombo Museum, Sri Lanka

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9957

Date uploaded in London –  10 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஞானமயம் சார்பில் சுந்தரர் குருபூஜை தினமான ஆடி சுவாதித் திருநாளையொட்டி சுந்தரர் சப்தாஹ – ஏழு நாள் விழாவில் இரண்டாம் நாள் விழாவில் 9-8-2021 அன்று ச.நாகராஜன் ஆற்றிய உரை. இந்த உரையை facebook.com/gnnamayam தளத்தில் எந்த நேரமும் காணலாம்.

பல் பரிமாணம் கொண்ட காப்பியத் தலைவர் சுந்தரர்! – 1

ச.நாகராஜன்

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே சந்தானம் நாகராஜன் நமஸ்காரம். வணக்கம். இன்றைய தினம் ஆடி மாதம் சுவாதி நன்னாளையொட்டி சுந்தரர் சப்தாஹம் – ஏழு நாள் விழாவின் இரண்டாவது நாளாக இன்றைய நன்னாள் அமைகிறது. இந்த நாளில் உலகெங்கும் வாழும் சைவர்களை ஒருங்கிணைத்து சிவனருளைப் பெற்றுத் தரும் அரிய பணியில் ஈடுபட்டிருக்கும் சிவ ஸ்ரீ கல்யாண்ஜி அவர்களுக்கும், ஞானாசிரியர்களுக்கும் எனது நமஸ்காரங்கள். சிவனடியார்களுக்கும் மெய்யன்பர்களுக்கும் தாய்க்குலத்தோருக்கும் என் நமஸ்காரம் வணக்கம். நாயன்மார்களில் பன்முகப் பரிமாணமும் சிறப்புக்களையும் கொண்ட காப்பியத் தலைவராகவும் ஒரு அபூர்வமான நாயனாராகவும்  சுந்தர மூர்த்தி நாயனார் திகழ்கிறார்.

அது என்ன பன்முகப்பரிமாணம் என்றால் அதற்கு பதிலை விரித்துக் கொண்டே போகலாம்.

முதலாவதாக நாயன்மார்களின் சரிதத்தை உலகெலாம் என்று ஆரம்பித்து உலகெலாம் என்று முடித்து பெரியபுராணத்தை இயற்றி அருளிய சேக்கிழார் பெருமானுக்கு அதை இயற்ற வழி வகுத்துக் கொடுத்தவர் சுந்தரரே. அதுமட்டுமல்ல, 4286 பாடல்களைக் கொண்ட அந்தப் புராணத்தின் காப்பியத் தலைவராக சுந்தரரையே சேக்கிழார் பிரான் சித்தரிக்கிறார். அவர் திருத்தொண்டத்தொகையில் கூறிய 60 நாயன்மார்களோடு அவரையும் அவரது தாயார் இசைஞானியார் தந்தையார் சடையனார் ஆகிய மூவரையும் சேர்த்து 63 நாயன்மார் கொண்ட சரித நூலாக அதைப் படைத்தார். ஆக மற்ற நாயன்மார்களுக்கு இல்லாத தனி நாயகச் சிறப்பு அவருக்குக் கிடைத்துள்ளது.

சம்பந்தரின் வரலாற்றை 1256 பாடல்களிலும் நாவுக்கரசர் வரலாற்றை 419 பாடல்களிலும் சித்தரித்த சேக்கிழார் பிரான் சுந்தரரின் வரலாற்றை ஐந்து இடங்களில் 879 பாடல்களில் சித்தரித்துள்ளார்.

திருஞானசம்பந்தர், அப்பர், மாணிக்கவாசகர் போலல்லாது சிவபிரானை சகா த்வமேவ, த்வமேவ ஸர்வம் மம தேவ தேவ என்று சகாவாக, ஏன் அனைத்துமாக அவர் சிவபிரானை வழிபட்டதும் அவரது வாழ்க்கையில் ஒரு தனிச் சிறப்பாகும்.

நடுநாட்டில் அமைந்துள்ள திருநாவலூரில் அவதரித்தவர் சுந்தரர். அவரது இயற்பெயர் ஆரூரன். ஆலாலசுந்தரர் என்ற பெயரைக் கொண்ட அவர் சிவலோகத்தில் பார்வதி தேவியாருக்கு சேடியராக இருந்த கமலினி, அனிந்திதை ஆகிய இருவரைப் பார்த்து ஆசை கொண்டார். அதனால் அவரை பூலோகம் சென்று அதன் பயனை அனுபவிக்குமாறு சிவபிரான் அருள்பாலிக்க அவர் பூவுலகில் பிறந்தார். தேவியாரின் சேடியர் இருவரும் பரவையாராகவும் சங்கிலியாராகவும் பிறந்தனர். 18 தேவ நாட்கள் அதாவது 18 மனித ஆண்டுகள் பூவுலகில் வாழ்ந்து செயற்கரிய பணியை எல்லாம் செய்து முடித்து தன் இருப்பிடம் மீண்டார் அவர்.

பூவுலகில் சுந்தரத் தோற்றத்துடன் அவதரித்த அவருக்கு சிவபிரானே சுந்தரர் என்ற அழகிய நாமத்தை அளித்தார்.

தெருவீதியில் விளையாடிக் கொண்டிருந்த அழகிய சிறுவனைக் கண்ட திருமுனைப்பாடி அரசர் நரசிங்கமுனையரையர் அந்தப் பையனை அழைத்துக் கொண்டு போய் அரண்மனையில் வளர்க்கலானார். மணமுடிக்கும் வயதில் அவருக்குப் புத்தூரில் சடங்கவி சிவாச்சாரியாரின் மகளை மணம் முடிக்கும் வேளையில் சிவபிரான் அங்கு வந்து அவரை தடுத்தாட் கொண்டார். சிவபிரானுக்கே அவர் மீளா அடிமையானார். அவர் பாடிய பாடல்கள் மொத்தம் 38000 என்று கூறப்படுகிறது. ஆனால் இப்போது ஏழாம் திருமுறையில் அவர் இயற்றியுள்ள பதிகங்களாக நமக்குக் கிடைத்துள்ளவை 101 பதிகங்கள். 84 தலங்களுக்குச் சென்று அவர் பாடியுள்ள பாடல்களின் எண்ணிக்கை 1037.  சுந்தர நாயனாரின் பாடல்கள் அனைத்தும் அவற்றின் சிறப்பைக் கருதி, திருப்பாட்டு என்று விசேஷமாக அழைக்கப்படுகிறது.

அவர் ஒரு சிறந்த இசைக் கலைஞர். அவர் பாடிய பாடல்கள் அனைத்திற்கும் பண்கள் உண்டு. ஆகவே அவை பண் சுமந்த பாடல்கள் என்று சிறப்பாகக் கூறப்படுகின்றன.அத்தோடு தேவாரப் பாடல்களில் செந்துருத்திப் பண்ணில் பாடலை இயற்றியவர் அவர் ஒருவரே தான். வேறு யாரும் இந்தப் பண்ணில் பாடல்களைப் பாடவில்லை.

அவர் ஆற்றியுள்ள அற்புதங்கள் பல.

 Time and Space என்று கூறுகின்றோமே காலம், வெளி என்று! – இவை இரண்டையும் கடந்த அருளாளர் அவர். ஏனெனில் காலமும் கணக்கும் நீத்த காரணனின் தோழர் அல்லவா அவர்!

சிவபிரான் கொடுத்தருளிய பன்னீராயிரம் பொன்னை விருத்தாசலத்தில் ஆற்றிலே போட்டு திருவாரூர்க் குளத்தில் அவர் எடுத்த போது உலகமே வியந்தது. Space – இடம் என்பது தனக்கு ஒரு பொருட்டல்ல என்று அவர் நிரூபித்தார்.

அடுத்து அவிநாசி என்று இன்று அழைக்கப்படும் திருப்புக்கொளியூரில்,  அவர் சிவனடியார் வீட்டில் நடந்த ஒரு உபநயன விழாவில் கலந்து கொள்ளச் சென்ற போது எதிர் வீட்டிலிருந்து வந்த அழுகைக் குரலைக் கேட்டு அது என்ன அழுகைக் குரல் என்று விசாரிக்க, சிவனடியாரின் பிள்ளையின் வயதை ஒத்த தன் மகனை இழந்த தாயின் புலம்பல் அது என்று கேட்டு பச்சாதாபம் கொண்டார். இரு வருடங்களுக்கு முன்னர் ஐந்து வயதாகியிருந்த போது அவனை குளத்திலிருந்த முதலை ஒன்று விழுங்கிற்று என்று அறிந்து கொண்ட அவர் நேராக குளத்தருகே சென்றார். தனது நெருங்கிய தோழரான சிவபிரானை நோக்கிப் பாடலானார். இரண்டாவது பாடலில் உன்னை வணங்க வந்த அந்தணச் சிறுவன் செய்த குற்றம் என்ன (புக்கொளியூரில் குளத்து இடை இழியாக் குளித்த மாணி என்னைக் கீறி செய்ததே?) என்று வினவினார். சிவபிரானைத் தோழனாகக் கொண்ட வன்தொண்டர் இல்லையா அவர்! நான்காவது பாடலில்,                                                                உரைப்பார் உரை உகந்து உள்க வல்லார் தங்கள் உச்சியாய்                அரைக்கு ஆடு அரவா ஆதியும் அந்தமும் ஆயினாய                       புரைக்காடு சோலைப் புக்கொளியூர் அவிநாசியே                                                               கரைக்கால் முதலையைப் பிள்ளை தரச் சொல்லு காலனையே            என்று இப்படி கட்டளை இடும் தொனியில் பாடினார்.

பாடலின் பொருள் :  “உன்னைத் தோத்திரம் செய்பவர் உரையை உகப்பவனே! உன்னை நினைப்பவர் தலை மேல் இருப்பவனே! அரையில் ஆடும் பாம்பை அணிந்தவனே! ஆதியும் அந்தமுமாய் இலங்குபவனே! சிறந்த முல்லை நிலமும் சோலைகளையும் கொண்ட திருப்புக்கொளியூர் அவிநாசியில் எழுந்தருளியிருப்பவனே! காலனையும் முதலையையும் பிள்ளையைக் கொண்டுவந்து தருமாறு ஆணையிடுக”               

                                                       உடனே நீரில்லாமல் வற்றி இருந்த குளத்தில் நீர் நிரம்பியது. அதனுள்ளிருந்து இரண்டு வருடங்கள் முன் ஐந்து வயதாக இருந்த பாலகனை  விழுங்கிய முதலை இப்போது ஏழு வயதாக் வளர்ந்த நிலையில் அவனை உயிருடன் உமிழ்ந்து விட்டுச் சென்றது. இது அவர் காலம் கடந்த அருளாளர் என்பதைக் காட்டுகிறது. விஞ்ஞானிகள் வியந்து ஆராயும் TIME TRAVELஐ இது மெய்ப்பிக்கிறது. காலம் என்பது ஒரு அற்புதமான விஷயம். அதில் அவதாரங்களும் அருளாளர்களும் எப்படி வேண்டுமானாலும் பயணிக்கலாம்.

ஸ்ரீ கிருஷ்ணர் சாந்தீபனி ம்ஹரிஷியின் குருகுலத்தில் குருகுலவாசம் முடிந்த நிலையில் குருதக்ஷிணையாக என்ன வேண்டும் என்று கேட்ட போது ஆசாரியர் நீ எனக்கு மாணவனாக வந்ததே என் பாக்கியம் என்கிறார். ஆனால் ஆசிரமத்தின் உள்ளிலிருந்து குரு பத்னியின் அழுகைக் குரல் கேட்கவே கிருஷ்ணர் பதறிப் போய் என்ன விஷயம் என்று கேட்கிறார். குரு பத்னி தன் மகன் காலன் வசம் அகப்பட்டுக் கொண்டதைக் கூறி வருந்த, கிருஷ்ண பிரான், இதோ கொண்டு வருகிறேன் உங்கள் மகனை என்று கூறி விட்டு ஒரே பாய்ச்சலில் அவன் மகன் இருந்த பிரபஞ்சம் சென்று அவனை மீட்டு வரும் வரலாறு அதிசயமான ஒன்று. அதே போல திருஞானசம்பந்தர் இறந்து அஸ்தியாக இருந்த பூம்பாவையை மயிலையில் உயிருடன் மீட்ட சம்பவமும் அற்புதமானதே.  Miracles are  visiting cards of Saints! -அற்புதங்கள் என்பது அருளாளர்களின் அடையாள முகவரிகள்-என்பதே உண்மை!  

தொடரும்

tags-  பரிமாணம், காப்பியத் தலைவர்,  சுந்தரர்! ,