
Written by S NAGARAJAN
swami_48@yahoo.com
Date: 3 NOVEMBER 2019
Time in London – 7-34 am
Post No. 7171
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
இது தான் இந்தியா!
தன் புடவையால் இருவரைக் காத்த பெண்மணி!
ச.நாகராஜன்
2012 ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி நடந்த சம்பவம் இது. The Telegraph நாளிதழ் இதை வெளியிட்டது.

கல்ஜனி (Kaljani) ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்தோடியது.
அதன் கரையோரத்தில் இருந்த கிராமங்களில் ஒன்று த்விப் சர் (Dwip Char). நதி வெள்ளப் பெருக்கெடுத்தோட அதை கரையோரம் இருந்த தன் வீட்டிலிருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார் 39 வயதான பெண்மணி ஷ்யாமா ராய்.
தூரத்தில் வெள்ளத்தின் நடுவில் ஒரு பையன் தலை மூழ்கிக் கொண்டிருப்பதை அவர் பார்த்தார். அவன் உதவி கேட்டு அலறிக் கொண்டிருந்தான்.
ஷ்யாமா பின்னால் நடந்ததைக் கூறினார் : “நான் அந்தச் சிறுவன் உதவி கேட்டு அலறிக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். நதியில் மூழ்கி அவன் அந்த ஓலக் குரலை எழுப்புகிறான் என்பதை உணர்ந்தேன். உடனடியாக நதிக் கரையோரம் வெகு வேகமாக ஓடினேன்.ஓடும் போது நானும் உதவி உதவி என்று கத்திக் கொண்டே ஓடினேன்.”
ஷ்யாமா மூன்று குழந்தைகளின் தாய்.
கல்ஜனி நகரின் வெள்ளப் போக்கு அதி தீவிரமாக இருந்தது. அந்த ஓட்டத்தில் நிச்சயமாக அந்தப் பையன் மூழ்கி இறந்து விடுவான் என்பதை உணர்ந்த ஷ்யாமா நதியில் குதித்து அந்தப் பையனை நோக்கி நீந்த ஆரம்பித்தாள்.
அவனை நெருங்கிய ஷ்யாமா அவன் தலைமயிரைப் பிடித்துக் கொண்டார். அவனை இழுத்துக் கொண்டு கரையை நோக்கி நீந்த ஆரம்பித்தார்.
ஆனால் அப்போது தான் அவனது தந்தையும் அந்த வெள்ளத்தில் மாட்டிக் கொண்டிருப்பதையும் அவரையும் காப்பாற்ற வேண்டி இருக்கிறது என்பதையும் அவர் உணர்ந்தார்.
என்ன செய்வது. உடனடியாக தன் புடவையை அவிழ்த்தார். அந்த மனிதரின் இடுப்பில் புடவையைக் கட்டினார்.அவர் சுய நினைவை இழந்திருந்தார்.
அதே சமயம் அவரது சகோதரன் பபுல் நீந்தி அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தார். முதலில் பையனை பத்திரமாகக் கரைக்குக் கொண்டு செல்லுமாறு ஷ்யாமா சொல்ல அப்படியே பையனை பத்திரமாகக் கரைக்குக் கொண்டு சேர்த்த அவர், இன்னும் பலருடன் ஷ்யாமாவிடம் வந்தார்.
சிறுவனின் தந்தையும் காப்பாற்றப்பட்டார்.
இருவரும் பின்னர் பத்திரமாக சாந்தி நகரிலிருந்த அவர்கள் வீட்டுக்கு பத்திரமாக அனுப்பப்பட்டனர்.
இது போன்ற ஆயிரக்கணக்கான சம்பவங்கள் இந்தியாவில் தொன்று தொட்டு ஆங்காங்கே நடந்து கொண்டே இருக்கின்றன.
ஒருவர் ஆபத்தில் தவிக்கும் போது தன் இன்னுயிரையும் பாராமல் ஏராளமானோர் உதவிக்குக் குதிக்கின்றனர்.
பொன்னையும் பொருளையும் புகழையும் எதிர்பார்க்காதவர்கள் இவர்கள்.
அதிலும் ஷ்யாமா நிலைமையை நன்கு உணர்ந்து தன் மானத்தையும் பொருட்படுத்தாமல் ஆபத்கால தர்மத்தை அனுசரித்து, தன் புடவையை அவிழ்த்து இரு உயிர்களைக் காப்பாற்றியுள்ளார்.
இந்திய நாடு எப்படிப்பட்ட மேலான தியாக உள்ளங்களைக் கொண்டுள்ளது என்பதை ஆயிரக் கணக்கான நிகழ்ச்சிகள் நிரூபித்துக் கொண்டே இருக்கின்றன. அதில் இதுவும் ஒன்று.
இது டெலகிராப் நாளிதழில் பதிவு செய்யப்பட்டதால் அனைவருக்கும் தெரிய வருகிறது.
நன்றி: The Telegraph 15-8-2012
***


You must be logged in to post a comment.