
Written by London swaminathan
Date: 5 July 2016
Post No. 2944
Time uploaded in London :– 8-12 AM
( Thanks for the Pictures)
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

திருவிளையாடல் புராணத்திலுள்ள தருமி என்ற பிராமணப் புலவன் கதையும் நக்கீரன் என்ற சங்கப் புலவர் சிவனுடன் மோதிய கதையும் எல்லோரும் அறிந்ததே. தருமி என்ற புலவனுக்கு சிவபெருமானே பாட்டு எழுதிக் கொடுத்தார். அதில் நக்கீரர் பிழை கண்டார். சிவனே அவர் முன் தோன்றி என்ன பிழை? என்று கேட்டார். இருவரிடையே வாக்குவாதம் முற்றியது. சிவன் நெற்றிக் கண்ணைத் திறந்தார். நக்கீரனோ நெற்றிக்க ண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே என்று சாடவே, நக்கீரன் உடல் எரிந்து நோய் ஏற்பட்டது.
இதை 1400 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அப்பர், தனது தேவார பதிகத்தில் பாடிவைத்துள்ளார்.
இதற்குப்பின் என்ன நடந்தது?
அந்தக் கதையை அருணகிரி நாதர் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னர் பாடிய பாடலில் சொல்கிறார்:-
அருவரை திறந்துவன் சங்க்ராம கற்கிமுகி
அபயமிட அஞ்சலென் றங்கீரனுக் குதவி
–பூத-வேதாள வகுப்பு
பிற்காலத்தில் எழுந்த பிள்ளைத்தமிழ் இலக்கியத்தில் இக்கதை மிகவும் விரிவாகச் சொல்லப்பட்டுள்ளது.
கற்கிமுகி என்ற பூதம் சிவபூஜையில் தவறு செய்த 999 பேரை பிடித்து ஒரு குகையில் வைத்திருந்தது. யாராவது ஒருவர் சிவ பூஜையின் போது கவனத்தை இழந்து மனதை வேறுபக்கம் செலுத்தினால் அந்தப் பூதம் பிடித்துவிடும். ஆயிரம் பேரைப் பிடித்தவுடன் அனைவரையும் சாப்பிட அந்த பூதம் திட்டமிட்டிருந்தது.
நக்கீரர், தன் உடலில் தோன்றிய நோய் அகல சிவபூஜை செய்து கொண்டிருந்தார். இவரைச் சோதிக்க விரும்பினார் சிவன்.
நக்கீரர் தவம் செய்த இடத்திலிருந்த ஆலமரத்திலிருந்து ஒரு இலை கீழே விழுந்தது. அருகில் ஒரு நீர்நிலை இருந்தது. இலையின் ஒரு பாதி நீரிலும் மறுபாதி கரையிலும் இருந்தது. நீரிலுள்ள பாதி மீனாகவும் தரையிலிருந்த பாதி பறவையாகவும் காட்சிதந்தது. இது நக்கீரருக்கு வியப்பை ஏற்படுத்தியது. ஆதைக் கவனித்ததால், சிவ பூஜையிலிருந்து அவரது கவனம் திசை திரும்பியது. காத்துக் கொண்டிருந்த கற்கிமுகி பூதம், நக்கீரரைக் கவ்விப் பிடித்து குகைச் சிறையில் அடைத்தது. அவரைப் பார்த்தவுடன், அங்கிருந்த 999 சிறைக்கைதிகளும் ஓவென்று கதறினர். காரணத்தை வினவியபோது நக்கீரர்தான் ஆயிரமாவது ஆள் என்றும், ஆயிரம் பேர் வந்தவுடன் சாப்பிடப் போவதாகப் பூதம் சொன்னது என்றும் கூறினர்.
உடனே நக்கீரர், அஞ்சற்க, நான் என் பிரார்த்தனையின் மூலம் உங்களை விடுவிப்பேன் என்று சொல்லி இறைவனைத் துதித்தார். அப்பொழுது அவர் முருகன் மீது பாடிய பாடல்தான் திருமுருகாற்றுப்படை என்னும் சங்க இலக்கிய நூலாகும்.

இந்த நேரத்தில் , வெளியே குளிக்கச் சென்ற கற்கிமுகி பூதம் திரும்பிவந்தது. முருகனைத் துதித்த நக்கீரர், ஒரு இலையை அதன்மீது தூக்கி எறிந்தார். அது வேலாக உருமாறி பூதத்தை வதைத்தது.
இந்த நிகழ்ச்சி மதுரை அருகிலுள்ள திருப்பறங்குன்றத்தில் நடந்ததாக ஐதீகம்.
–சுபம்–
You must be logged in to post a comment.