புனர்ஜென்ம உண்மைகள்! – 1
(அறிவியல், ஆன்மீக நோக்கில் மறுபிறப்பு இரகசியங்கள்!)
ஹிந்துமதத்தின் அடிநாதமான உண்மை: மறுபிறப்பு!
Written by S. Nagarajan
செமிடிக் மதங்கள் என்று கூறப்படும் யூத மதம், கிறிஸ்தவம்,இஸ்லாமியம் ஆகியவற்றிற்கும் ஹிந்துமதத்திற்கும் உள்ள அடிப்படை வேறுபாடுகளில் முக்கியமான ஒன்று புனர்ஜென்மம்.
மனிதப் பிறவியில் ஒருவர் ஆற்றும் நல்வினை தீவினைக்கேற்ப அடுத்த பிறவி அமைகிறது, அனைத்து மானுடரும் படிப்படியாக முன்னேறி முக்தி அடையலாம்; அடைவர் என்பது ஹிந்து மதம் கூறும் உண்மை. மாறாக செமிடிக் மதங்கள் ஒரே ஒரு பிறவி தான் ஒருவருக்கு உண்டு; அவர் இறந்தவுடன் தீர்ப்பு நாள் வரும் வரை காத்திருந்து தீர்ப்பிற்கேற்ப சுவர்க்கத்தையோ அல்லது நரகத்தையோ அடைய வேண்டும் என்று கூறுகின்றன.
தர்க்கரீதியாக சிந்தித்துப் பார்த்தால் ஒரே ஒரு பிறவி தான் ஒருவருக்கு உண்டு என்றால் ஒருவர் நீண்ட ஆயுளுடன் இருக்க, பிறந்த குழந்தை ஒன்று ஏன் மரிக்க வேண்டும், ஒருவர் ஏன் செல்வந்தராகவும் இன்னொருவர் ஏழையாகவும் இருக்க வேண்டும் என்பன போன்ற ஏராளமான கேள்விகள் எழுந்து விடை காண முடியாமல் தவிக்க வேண்டியிருக்கிறது.
மறுபிறப்பில் நம்பிக்கை கொண்ட மாமனிதர்கள்!
ஆனால் பிளேட்டோ,பித்தகோரஸ்,லியனார்டோ டா வின்ஸி, பெஞ்சமின் •ப்ராங்க்ளின்,எமர்ஸன், ஷெல்லி, மாஜினி, தோரோ,ஹென்றி•போர்டு, சி.ஜே.ஜங் உள்ளிட்ட ஏராளமான அறிஞர்கள் ஹிந்து மதத்தின் அடிப்படைக் கொள்கையான மறுபிறப்பில் நம்பிக்கை உடையவர்கள்! அன்னிபெஸண்ட் அம்மையார் இது பற்றித் தீவிரமாக ஆராய்ந்து
‘ரீ இன்கார்னேஷன்’ என ஒரு அரிய புத்தகத்தையே எழுதி இந்தத் தத்துவத்தை விளக்கியுள்ளார்.
விஞ்ஞானியின் ஆராய்ச்சி!
வர்ஜீனியா மாநில பல்க¨லைக் கழகத்தைச் சேர்ந்த பிரபல விஞ்ஞானியான ஐயான் ஸ்டீவன்ஸன் 1040 புனர் ஜென்ம கேஸ்களை ஆராய்ந்து இது உண்மை தான் என ஆய்வு முடிவில் கூறியுள்ளார்!
மிகவும் பிரபலமான எட்கர் கேஸ் 2000 பேரின் பூர்வஜென்மத்தைக் கூறி அவை சரி பார்க்கப்பட்டு அனைவரையும் பிரமிப்பின் உச்சிக்கே ஏற்றியிருக்கிறது.
இதிஹாஸ, புராணங்கள் கூற்று!
ஹிந்து மத இதிஹாஸங்களான ராமாயணம், மஹாபாரதம் புனர்ஜென்மங்களைப் பற்றிக் கூறும் நூற்றுக்கணக்கான சம்பவங்கள் மிகவும் சுவையானவை; பெரிய ஆராய்ச்சிக்கு உரியவை. பதினெட்டு புராணங்கள் தரும் மறுபிறப்பு சம்பவங்களோ நுணுகிப் படித்து உண்மை உணரவேண்டியவை!
சீதையின் முன் ஜென்மம்!
முதலில் ராமாயணத்தில் முக்கியமான சம்பவத்தைப் பார்க்கலாம்!
சுந்தரகாண்டத்தில் அசோகவனத்தில் துன்பப்படும் சீதை, “முன் ஜன்மாந்தரத்தில் எப்படிப்பட்ட பாபம் என்னால் செய்யப்பட்டதோ!ஆகவே தான் கொடுமை கொண்டு மிக வருத்துகின்ற இந்தத் துயரம் என்னால் அனுபவிக்கப்படுகிறது” (கீத்ருஸம் து மயா பாபம் புரா ஜன்மாந்தரே க்ருதம்I யேநேதம் ப்ராப்யதே துக்கம் மயாகோரம் ஸ¤தாருணம்II 26ம் அத்தியாயம் 18ம் சுலோகம்) என்று கூறுவது நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும்!
சீதைக்கு ஏது முன் ஜென்மம் என்று ஆச்சரியப்படும் போதே, யுத்த காண்டத்தில் மீண்டும் ஒரு குட்டி சம்பவத்தைப் பார்க்கிறோம். ராவணன் வதம் செய்யப்பட்ட நிலையில் ஹனுமன் சீதையைக் கொடுமைப் படுத்திய ராக்ஷஸிகளைக் கொல்வதற்கு சீதையிடம் அனுமதி கேட்கிறான். நன்கு யோசித்து விட்டு சீதை கூறுகிறாள்:”அவர்கள் வெறும் ஊழியர்கள் தான்!அவர்கள் மீது ஏன் கோபப்படுகிறாய்!நான் அடைந்த துன்பங்கள் அனைத்தும் எனது முன் ஜென்மங்களில் செய்த செயல்களின் விளைவு தான்!” என்று திட்டவட்டமாகக் கூறுகிறாள்! (யுத்தகாண்டம் 113ம் அத்தியாயம்,39ம் சுலோகம்)
சீதையின் முன் ஜென்மம் தான் என்ன? இதற்கு உத்தரகாண்டத்தில் 17ம் அத்தியாயத்தில் 44 சுலோகங்களில் விடையைக் காண்கிறோம்;வியக்கிறோம்!
சீதையின் முன் ஜென்மக் கதை சுருக்கமாக இது தான்:-
ஒரு முறை ராவணன் பூமியைச் சுற்றி வரும் போது ஹிமயமலைக் காட்டுப் பகுதியில் தவம் புரியும் ஒரு மாபெரும் அழகியைப் பார்க்கிறான் காம வசப்பட்ட ராவணன் இளமை பொங்கி வழியும் அழகியிடம் தவத்தை விட்டு விட்டுத் தன்னை மணம் புரிய வேண்டுகிறான். அந்த அழகியோ, பிருஹஸ்பதியின் புத்திரரான பிரம்ம ரிஷி குஸத்வஜரின் புதல்வி தான் என்றும், தன் பெயர் வேதவதி என்றும், வேதங்களின் பிறப்பாகத் தான் பிறந்ததாகவும்,தன்னை அடையத் தக்கவர் விஷ்ணு ஒருவரே என்று தன் தந்தை கருதியதாகவும்,இதைக் கேட்டுக் கோபம் கொண்ட தைத்ய அரசன் சம்பு இரவில் தூங்கிக் கொண்டிருந்த தந்தையைக் கொன்றதாகவும்,இதனால் துக்கப்பட்டுத் தனது தாயார் அவருடன் சிதை ஏறியதாகவும் அதன்பின்னர் தந்தையின் ஆசையை நிறைவேற்ற நாராயணரை நோக்கித் தவம் புரிவதாகவும் கூறினாள்.
யார் அந்த விஷ்ணு என்று ஏளனமாகக் கூறியவாறே வேதவதியின் கூந்தலைப் பிடித்து ராவணன் தூக்கவே வேதவதி தன் கையைத் தூக்கினாள். அது வாளாக மாற தன் கூந்தலை அறுத்துக் கொண்டு தீயை மூட்டி, “நான் இனியும் உயிர் வாழ ஆசைப்படவில்லை; பெண்ணான என்னால் உன்னைக் கொல்ல முடியாது; நான் சாபமிட்டாலோ என் தவத்தை இழக்க வேண்டியிருக்கும்.ஆகவே அக்னியில் புகுந்து என் தவ வலிமையால் அயோனிஜையாக (கர்ப்பத்தில் பிறக்காதவளாக) மீண்டும் வருவேன்” என்று கூறி அக்னியில் புகுந்தாள்.
பின்னர் மீண்டும் ஒரு தாமரை மலரிலிருந்து தோன்றினாள்.அவளை மீண்டும் பிடித்த ராவணன் தன் அரண்மனைக்குக் கொண்டு வந்து தனது மந்திரியிடம் காண்பித்தான்.அவளது சாமுத்ரிகா லட்சணத்தைக் கூர்ந்து கவனித்த மந்திரி, “இவள் இங்கு இருந்தால் உன் அழிவுக்குக் காரணமாவாள்” என்று கூறினார். இதனால் ராவணன் அவளை கடலில் தூக்கி எறிந்தான்.கரையை நோக்கி வந்த அவள் ஒரு யாகபூமியை அடைந்தாள்.அங்கு ஜனக மஹாராஜன் உழும் போது பூமியிலிருந்து அவள் வெளிப்பட்டாள்.
உழு சாலிலிருந்து (சீதை) வெளி வந்ததால் சீதை என்ற நாமகரணத்துடன் வளர்ந்தாள். ராமனை மணம் புரிந்தாள்.
கிருத யுகத்தில் வேதவதியாய் இருந்து த்ரேதா யுகத்தில் சீதையாக வெளிப்பட்ட சீதையின்
முற்பிறப்பு ரகசியம் பற்றிய அழகிய பெரிய கதையின் சுருக்கம் இது தான்!
உத்தரகாண்டம் தரும் முன்பிறப்பு இரகசியங்கள்!
சாதாரணமாக ராமபட்டாபிஷேகத்துடன் சுபம் என்று நாம் ராமாயணத்தை முடித்து விடுவதால் உத்தரகாண்டத்தில் உள்ள அரிய ரகசியங்களை நாம் தெரிந்து கொள்ள முடியாமல் போய் விடுகிறது. வால்மீகி அரிய முன்பிறப்பு ரகசியங்களையும் ராமாயணத்திற்கு ஆதாரமாக விளங்கும் பல ரகசியங்களையும் (பிருகு முனிவர் விஷ்ணுவை பூமியில் மானிடனாக அவதரிக்க சாபம் தந்ததால் அவர் ராமனாக அவதரித்தது உள்ளிட்டவற்றை)
உத்தர காண்டத்திலேயே விளக்குகிறார்! சீதையின் முற்பிறவியைப் போலவே ராவணன், கும்பகர்ணன், விபீஷணன் உள்ளிட்ட ராமாயண கதாபாத்திரங்களின் முற்பிறவி பற்றிய சம்பவங்கள் சுவையானவை; படித்து அறிந்து கொள்ள வேண்டியவை.
இனி அடுத்து மஹாபாரதத்தைப் பார்க்கலாம்!
(இந்தக் கட்டுரையை எழுதியவர் என் சகோதரர் எஸ். நாகராஜன்)

You must be logged in to post a comment.