
WRITTEN BY S NAGARAJAN
Post No. 9558
Date uploaded in London – – –3 May 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great
மலைப்பாம்பு விழுங்கிய சிறுவனைக் காப்பாற்றியது எப்படி?
ச.நாகராஜன்
சிறை இலக்கியம்!

சுதந்திரப் போராட்டத்தில் எவ்வளவோ தியாகங்கள்! எவ்வளவோ வீரர்கள் தங்கள் சொத்து சுகத்தை இழந்து சிறையில் வாடினார்கள்.
அந்தச் சிறைவாசத்தில் மலர்ந்தது ஒரு சிறைவாச இலக்கியம். பண்டிட் ஜவஹர்லால் நேரு சிறையிலே படித்தார்; எழுதினார். மஹாத்மா காந்திஜி சிறையிலே படித்தார்; எழுதினார். வினோபா பாவே கீதைச் சொற்பொழிவுகளை சகாக்களுக்காக சிறையிலே நிகழ்த்தினார்; அது கீரைப் பேருரைகளாக மலர்ந்தது. ராஜாஜி ஜெயில் டைரி எழுதினார். அது சரித்திரக் குறிப்பாக மாறியது. அதே போல சுதந்திரப் போராட்ட வீரரான பட்டாபி சீதாராமையா சிறையிலே பல அருமையான சுவையான செய்திகளைப் படித்தார்; சேகரித்தார். தேதியிட்டு எழுதப்பட்ட அந்தக் குறிப்புகள் பின்னால் Feathers and Stones என்று அழகிய புத்தகமாக மலர்ந்தது.
அதில் சில பகுதிகளை இங்கு பார்க்கலாம். அவரது செய்தி சேகரிக்கும் பாங்கு மற்றும் அழகிய நடை ஆகியவற்றிற்காக.
7-11-1942 தேதியிட்ட அழகிய தகவல் இது.
இதோ அவரது எழுத்து (தமிழாக்கம் என்னுடையது) :
மௌலானா சில பழைய சரித்திரப் புத்தகங்களை ஆர்டர் செய்திருந்தார். அதில் கிராமப் புறத்தில் வாழும் மக்களின் நுண்ணறிவு பற்றிய செய்திகள் இருந்தன. ஒரு செய்தி இது!
xxx
மலைப்பாம்பு விழுங்கிய சிறுவன்!

ஒரு மிகப் பெரிய மலைப்பாம்பு ஒரு பையனை விழுங்க ஆரம்பித்தது. அவன் கால்களைப் பிடித்து அது இழுக்க அவன் ஓவென்று அலறினான். என்னென்னவோ முயற்சிகளைச் செய்து பார்த்தான் அந்தச் சிறுவன். ஒன்றும் பலிக்கவில்லை. பாம்பு பிடித்த பிடி விடவில்லை. பாம்பின் கண்களில் புழுதியை வாரி இறைத்தான். ஆனால் அதுவோ கொஞ்சம் கொஞ்சமாக அவனை மார்பு வரை விழுங்கி விட்டது. அவன் கைகளை வெளியில் நீட்டிக் கொண்டு ஓவென்று உரக்கக் கத்தினான். அந்தக் கூக்குரலைக் கேட்டு கிராம மக்கள் குழுமினர். பாம்பின் தலையில் அடித்தால் அது அந்தப் பையனையும் பாதிக்கும். ஏனெனில் அவன் உடலின் பெரும்பகுதி அந்தத் தலைப் பகுதியில் தான் இருந்தது. வாலைப் பிடிக்கலாமோ என்றால் அது கோபத்தில் பையனை ஏதாவது செய்து விட்டால் என்ன செய்வது? ஆகவே அவர்கள் யோசித்தனர். அனைவரும் கழிகளை எடுத்துக் கொண்டு பாம்பின் முதுகெலும்பில் அடித்தனர். அது இறந்தது. பையன் காப்பாற்றப்பட்டான். அவனை உடனே வெளியில் இழுத்தனர். அவன் உயிருக்கு ஆபத்து ஒன்றும் ஏற்படவில்லை. உடம்பு முழுவது சிறு சிறு காயங்கள் மட்டும் இருந்தன.
பின்னர் அனைவரும் பாம்பின் உடலைப் பிளந்தனர். உள்ளே பார்த்தால் ஒரு ஆடும் ஒரு முயலும் இருந்தது.
xxxx
கழுகு தூக்கிச் சென்ற குழந்தை!

அதே புத்தகம் இன்னொரு சம்பவத்தையும் குறிப்பிட்டிருந்தது.
ஒரு பெரிய கழுகு ஒரு சிறு குழந்தையைத் தூக்கிச் சென்று விட்டது. கிராம மக்கள் குழந்தையின் தந்தை போட்ட கூக்குரலைக் கேட்டு குழுமி விட்டனர். கழுகோ குழந்தையை ஒரு பாறையின் மேல் வைத்து விட்டது. குழந்தையின் தந்தை பாறை மீது ஏறினார். ஆனால் வழுக்கி விழுந்து விட்டார். பின்னர் குழந்தையின் தாய் துணிச்சலுடன் பக்குவமாக பாறையின் மீது ஏறினார். குழந்தையைக் காப்பாற்றி விட்டார். குழந்தைக்கு ஒன்றும் ஆகவில்லை. அந்தக் கழுகு குழந்தைக்கு ஒரு தீங்கும் இழைக்காமல் பறந்து விட்டது.
xxx
சிறுத்தைகள் வேட்டையாடும் மான்கள்!
இன்னொரு குறிப்பு வேட்டையாடுவது பற்றியது. 1943இல் பதிவு செய்யப்பட்ட சுவையான குறிப்பு இது:-
ஹர்லாட் லாம்ப்ஸ் (Harlod Lamb) உருதுவிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஒரு சம்பவம் இது. தைமூரைப் பற்றியது. அந்தக் காலத்தில், (ஏன் இந்தக் காலத்திலும் கூடத்தான்,) மான்களை வேட்டையாட மன்னர்கள் சிறுத்தைகளைப் பயன்படுத்துவார்களாம். எப்படி? சிறுத்தைகளின் கண்களைக் கட்டி விட்டு அவற்றை குதிரைகளின் மீது ஏற்றிக்கொண்டு செல்வார்கள். மான்கள் கூட்டமாக இருக்கும் இடத்திற்குச் சென்றவுடன் சிறுத்தைகளின் கண் கட்டை அவிழ்த்து குதிரையிலிருந்து அவற்றைக் கீழே இறக்கி விடுவார்கள். கண்களைத் திறந்தவுடன் எதிரிலிருக்கும் மான்களின் மீது பாய்ந்து அவற்றைச் சிறுத்தைகள் கொன்று விடுமாம். இது அவர்களுக்கு ஒரு பொழுது போக்கு!

இப்படி ஏராளமான செய்திகளைப் பார்க்கிறோம் பட்டாபி சீதாராமையா புத்தகத்தில்!
***
tags– மலைப்பாம்பு, பட்டாபி சீதாராமையா,சிறுத்தை