
தொகுத்தவர்:லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்:1795; தேதி 13 ஏப்ரல் 2015
லண்டனில் பதிவு செய்த நேரம்: காலை 8-25
படம்1.ஒரு வேடன் , ஆணும் பெண்ணுமாகக் கூடியிருந்த இரு பறவைகளில் ஒன்றை அம்பு எய்து கொன்றான். அதைப் பார்த்த வால்மீகி அவனைச் சபித்தார். அந்த சாபம், அவர் அறியாமலே கவிதையாக மலர்ந்தது. உடனே பிரம்மா தோன்றி, நீ ராமன் என்னும், உத்தம அரசனின் கதையை எழுதலாமே என்றார். அப்பொழுதுதான் உலகம் வியக்கும் வால்மீகி ராமாயணம் தோன்றியது. 24,000 செய்யுட்களாக வடிவெடுத்தது. (பறவைகளைக் கொல்வது வேடர்களினன் தொழில். ஆயினும் ஆணும் பெண்ணுமாகக் கூடியிருக்கையில், எந்த மிருகத்தையும் கொல்லக் கூடாதென்று, இந்துமத நூல்கள் தடை விதிக்கின்றன).
நாடிய பொருள் கைகூடும் ஞானமும் புகழும் உண்டாம்
வீ டியல் வழியதாக்கும் வேரியம் கமலை நோக்கும்
நீடிய அரக்கர் சேனை நீறு பட்டழிய வாகை
சூடிய சிலை இராமன் தோள்வலி கூறுவார்க்கே. –(பால. காப்பு 12)

படம்2.உலகம் வியக்கும் வண்ணம், ஆட்சி புரிந்த கோசல மன்னன் தசரதனுக்குப் பிள்ளைகள் பிறக்கவில்லை. ரிஷ்ய சிருங்கரென்ற முனிவர் நாட்டுக்குள் நுழைந்தால் நல்லது என்றும் அவர் புத்ர காமேஷ்டி யாகம் செய்தால் குழந்தைப் பேறு உண்டாகுமென்றும் பெரியோர்கள் சொன்னார்கள். பெண்ணென்றால் என்ன என்றே தெரியாமல் காட்டுக்குள் வசித்து வந்த முனிவரை அழகிகள் மயக்கி அழைத்து வருகின்றனர்.

படம்3.புத்ர+ காம + இஷ்டி யாகம் செய்த உடனே ஒரு அற்புதம் நிகழ்கிறது. யாகத் தீயிலிருந்து ஒரு தேவன் வெளியே வந்து அற்புத இனிப்புப் பாயசக் குடத்தைத் தருகிறான். அதை தசரதன், தனது மூன்று மனைவிகளுக்கும் பிரித்துத் தருகிறான். இதற்குப் பின்னர், கௌசல்யா என்பவள், இராம பிரானையும், கைகேயி என்பவள் பரதனையும், சுமித்திரை என்பவள் லெட்சுமணன், சத்ருக்னனனாகிய இரட்டைப் பிள்ளைகளயும் பெறுவதற்கு இந்தப் பாயசம் உதவுகிறது.
நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே இராம என்ற இரண்டெழுத்தினால். –(பால. காப்பு 13)

படம்4.விசுவாமித்திரனென்ற முனிவன் ((விசுவ+மித்திரன் = உலக நண்பன்)) வந்து, உனது மகன் ராமனை என்னுடன் பாதுகாப்புக்காக அனுப்பு என்கிறார். தசரதனுக்கு பயம், நானே வருகிறேனே, சின்னப் பையன்கள் எதற்கு? என்கிறார். ஆயினும் வசிஷ்டர் சொன்னவுடன் ராம லெட்சுமணர்களை அனுப்பி வைக்கிறார். முக்காலமும் தெரிந்த முனிவன் வசிட்டனுக்கு இதிலும் நண்மை உண்டு என்று தெரிகிறது.
உலகம் யாவையும் தாமுள ஆக்கலும்
நிலைபெறுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகிலா விளையாட்டுடையார் அவர்
தலைவர்; அன்னவர்க்கே சரண் நாங்களே–(பாலகாண்டம் பாயிரம் 1)

படம்5.காட்டில் நுழைந்தவுடன் தாடகை என்னும் அரக்கி வருகிறாள். “பெண் என்பதால் நான் கொல்ல மாட்டேன்” – என்கிறார். அவளொரு பெண்ணே இல்லை , இராட்சஸி என்று விசுவாமித்திரன் சொன்னவுடன் ராமன் அவளை ஒரே அம்பில் கொல்கிறார்.
இவ் வண்ணம் நிகழ்ந்த வண்ணம் இனி இந்த உலகுக்கெல்லாம்
உய் வண்ணம் அன்றி மற்று ஓர் துயர் வண்ணம் உறுவது உண்டோ
மை வண்ணத்து அரக்கி போரில் மழை வண்ணத்து அண்ணலே உன்
கை வண்ணம் அங்குக் கண்டேன் கால் வண்ணம் இங்குக் கண்டேன்

படம்6.காட்டில் சுபாஹு, மாரீசனென்ற இரண்டு அரக்கர்கள் யாகசாலை மீது தாக்குகின்றனர். உடனே ராமன், சுபாஹுவைக் கொல்கிறான். மாரீசனைக் கடலில் தொலைவில் தூக்கி எறிகிறான்.
படம்7.கௌதம முனிவர் தனது மனைவி அகலிகையுடன் காட்டில் வசித்து வந்தார். அவர் வெளியே சென்ற பொழுது இந்திரன் , முனிவர் வேடத்தில் வந்து அகலிகையை மான பங்கப் படுத்துகிறான். இதனால் கோபமமடைந்த கௌதமர் தனது மனைவி கல்லைப் போல சித்தப் பிரமை பிடித்தவளாக இருக்குமாறு சபிக்கிறார். தான் தவறு செய்யவில்லை என்று மன்றாடுகிறாள். இந்துமதம் சத்தியத்தின் அஸ்திவாரத்தின் மீது அமைந்ததால் கடவுளே ஆனாலும் ஒரு சொல் சொன்னால், அதைத் திருப்பிப் பெற முடியாது;மாற்ற முடியாது. ஆனால் மாற்று வழி கண்டு பிடித்து அதன் மூலம் வெளியேற உதவலாம். ராமன் காலடி பட்டவுடனே, உனக்கு சாப விமோசனம் கிடைக்குமமென்று கௌதமர் கூறுகிறார். 2000 ஆண்டுகளுக்கு முன்னர், இந்த சம்பவத்தை விளக்குமமோவியம் மதுரை- திருப்பறங்குன்றக் கோவிலில் இருந்ததாகச் சங்க இலக்கியம் செப்புகிறது.

படம்8.ராமனின் கை வண்ணத்தை தாடகை வதத்திலும், கால் வண்ணத்தை அகலிகை சாப விமோசனத்திலும் கண்டதைக் கம்பன் அழகாகப் பாடுகிறான். ராமன், பின்னொரு காலத்தில், தனது ஆஸ்ரமத்துக்கு வருவார், என்பதை முக்காலம் உணர்ந்த கௌதமர் முன்னரே அறிந்தது இந்த சம்பவத்தால் தெரிகிறது. நாம் ஒரு மலையின் மீது நின்று நதி ஓடுவதைப் பார்த்தால் நம்மைக் கடந்து சென்ற நதி, கடக்கும் நதியின் நீர், இனி நம்மை நோக்கி எதிர் வரப் போகின்ற நீர் ஆகியவற்ரைப் பார்ப்பது போல முனிவர்கள் காலத்துக்கு வெளியே சென்று “சென்ற காலம், நிகழ் காலம், வரும் காலம், ஆகியவற்றைப் பார்க்க முடியும். இது காலம் பற்றிய சார்பியல் கோட்பாட்டைக் கொடுத்த, ஐன்ஸ்டைனுக்கும் தெரியாத விஷயம்!!

படம்9.இராம லெட்சுமணர்களை ஜனகன் என்னும் விதேக நாட்டு மன்னனிடம் விசுவாமித்திரர் கூட்டிக் கொண்டு செல்கிறார். இந்த இளைஞன் என்னிடமுள்ள சிவ தனுஷை முறித்தால் அமிழ்தினும் இனிய எனது மகள் சீதையை மணம் முடிப்பேன் — என்கிறான் ஜனகன். ராமன் வில்லை எடுத்தவுடனே அதில் நாணேற்றி வெற்றி பெறுகிறார்.வில் முறிந்தும் போகிறது. “எடுத்தது கண்டனர், இற்றது கேட்டார்” — என்று கம்பன் பாடுகிறார். அதாவது வில்லை எடுத்ததைத் தான் மக்கள் பார்த்தனர். அடுத்த நிமிடம், அது முறிந்த சப்தம்தான் மக்களுக்குக் கேட்டது. அவ்வளவு வேகத்தில் ராமன் செயலைச் செய்து முடித்தார்.

படம்10.பரசுராமன், ஒரு பிராமணர். அவரது தந்தைக்கு, க்ஷத்ரியர்கள் தீங்கு இழைத்ததால், அவர் 21 முறை தாக்கி, அரசர்கள் எல்லோரையும் அழிக்கிறார். ராமரும் க்ஷத்ரியரென்பதால் கோபக் கனல் பொங்க, அவரை எதிர்க்கிறார். எல்லோரும் விட்டுவிடுங்கள்” – என்று கெஞ்சுகின்றனர். சிவ தனுஷென்னும் வில்லை முறித்த ராமன், என்னிடமுள்ள விஷ்ணு தனுஷென்னும் வில்லை முறித்தால் போய் விடுகிறேன் என்கிறார். இராமன் அதை நொடிப் பொழுதில் முடிக்கவே, அவர் வந்த வழியே போய் விடுகிறார்.

swami_48@yahoo.com






You must be logged in to post a comment.