அபூர்வ ராமாயண படங்கள்: பாலகாண்டம்

தொகுத்தவர்:லண்டன் சுவாமிநாதன்

கட்டுரை எண்:1795; தேதி 13 ஏப்ரல் 2015

லண்டனில் பதிவு செய்த நேரம்: காலை 8-25

படம்1.ஒரு வேடன் , ஆணும் பெண்ணுமாகக் கூடியிருந்த இரு பறவைகளில் ஒன்றை அம்பு எய்து கொன்றான். அதைப் பார்த்த வால்மீகி அவனைச்  சபித்தார். அந்த சாபம், அவர்   அறியாமலே கவிதையாக மலர்ந்தது. உடனே பிரம்மா   தோன்றி,  நீ  ராமன்    என்னும், உத்தம   அரசனின்  கதையை எழுதலாமே  என்றார். அப்பொழுதுதான்  உலகம் வியக்கும் வால்மீகி ராமாயணம் தோன்றியது. 24,000 செய்யுட்களாக வடிவெடுத்தது. (பறவைகளைக் கொல்வது வேடர்களினன்  தொழில். ஆயினும் ஆணும் பெண்ணுமாகக் கூடியிருக்கையில்,  எந்த மிருகத்தையும் கொல்லக்  கூடாதென்று,   இந்துமத நூல்கள் தடை விதிக்கின்றன).

நாடிய பொருள் கைகூடும் ஞானமும் புகழும் உண்டாம்

வீ டியல் வழியதாக்கும் வேரியம் கமலை நோக்கும்

நீடிய அரக்கர் சேனை நீறு பட்டழிய வாகை

சூடிய சிலை இராமன் தோள்வலி கூறுவார்க்கே. –(பால. காப்பு 12)

e0aeb0e0aebfe0aeb7e0af8de0aeafe0aeb8e0af8de0aeb0e0af80e0aea9e0ae95.jpg (960×960)

படம்2.உலகம்  வியக்கும் வண்ணம், ஆட்சி புரிந்த கோசல மன்னன்   தசரதனுக்குப் பிள்ளைகள் பிறக்கவில்லை. ரிஷ்ய சிருங்கரென்ற முனிவர் நாட்டுக்குள் நுழைந்தால் நல்லது என்றும்  அவர் புத்ர காமேஷ்டி யாகம் செய்தால் குழந்தைப் பேறு உண்டாகுமென்றும் பெரியோர்கள் சொன்னார்கள். பெண்ணென்றால்  என்ன என்றே தெரியாமல் காட்டுக்குள் வசித்து வந்த முனிவரை அழகிகள் மயக்கி அழைத்து வருகின்றனர்.

img_2767.jpg (2448×2448)

படம்3.புத்ர+ காம + இஷ்டி யாகம் செய்த உடனே ஒரு அற்புதம் நிகழ்கிறது. யாகத் தீயிலிருந்து ஒரு தேவன் வெளியே வந்து அற்புத  இனிப்புப் பாயசக் குடத்தைத் தருகிறான். அதை தசரதன், தனது மூன்று மனைவிகளுக்கும் பிரித்துத் தருகிறான். இதற்குப் பின்னர், கௌசல்யா என்பவள், இராம பிரானையும், கைகேயி என்பவள் பரதனையும், சுமித்திரை என்பவள் லெட்சுமணன், சத்ருக்னனனாகிய இரட்டைப் பிள்ளைகளயும் பெறுவதற்கு இந்தப் பாயசம்    உதவுகிறது.

நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே

தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே

சென்மமும் மரணமும் இன்றித் தீருமே

இம்மையே இராம என்ற இரண்டெழுத்தினால். –(பால. காப்பு 13)

img_2768.jpg (2448×2448)

படம்4.விசுவாமித்திரனென்ற முனிவன் ((விசுவ+மித்திரன் = உலக நண்பன்)) வந்து, உனது மகன் ராமனை என்னுடன் பாதுகாப்புக்காக   அனுப்பு என்கிறார். தசரதனுக்கு பயம்,  நானே வருகிறேனே, சின்னப் பையன்கள்  எதற்கு? என்கிறார். ஆயினும் வசிஷ்டர் சொன்னவுடன்  ராம லெட்சுமணர்களை அனுப்பி வைக்கிறார். முக்காலமும் தெரிந்த முனிவன்  வசிட்டனுக்கு  இதிலும் நண்மை  உண்டு  என்று தெரிகிறது.

உலகம் யாவையும் தாமுள ஆக்கலும்

நிலைபெறுத்தலும் நீக்கலும் நீங்கலா

அலகிலா விளையாட்டுடையார் அவர்

தலைவர்; அன்னவர்க்கே சரண் நாங்களே–(பாலகாண்டம் பாயிரம் 1)

img_2769.jpg (2448×2448)

படம்5.காட்டில் நுழைந்தவுடன் தாடகை என்னும்  அரக்கி வருகிறாள். “பெண்  என்பதால் நான் கொல்ல மாட்டேன்” – என்கிறார். அவளொரு பெண்ணே இல்லை , இராட்சஸி என்று  விசுவாமித்திரன் சொன்னவுடன் ராமன்  அவளை ஒரே அம்பில் கொல்கிறார்.

இவ் வண்ணம் நிகழ்ந்த வண்ணம் இனி இந்த உலகுக்கெல்லாம்

உய் வண்ணம் அன்றி மற்று ஓர் துயர் வண்ணம் உறுவது உண்டோ

மை வண்ணத்து அரக்கி போரில் மழை வண்ணத்து அண்ணலே உன்

கை வண்ணம் அங்குக் கண்டேன் கால் வண்ணம் இங்குக் கண்டேன்

img_2770.jpg (2448×2448)

படம்6.காட்டில் சுபாஹு, மாரீசனென்ற  இரண்டு அரக்கர்கள் யாகசாலை மீது தாக்குகின்றனர். உடனே ராமன், சுபாஹுவைக் கொல்கிறான். மாரீசனைக் கடலில் தொலைவில் தூக்கி எறிகிறான்.

படம்7.கௌதம  முனிவர் தனது மனைவி அகலிகையுடன் காட்டில் வசித்து வந்தார். அவர் வெளியே சென்ற பொழுது இந்திரன் , முனிவர் வேடத்தில் வந்து அகலிகையை மான பங்கப்  படுத்துகிறான். இதனால் கோபமமடைந்த கௌதமர் தனது மனைவி கல்லைப் போல சித்தப் பிரமை பிடித்தவளாக  இருக்குமாறு சபிக்கிறார். தான் தவறு செய்யவில்லை என்று மன்றாடுகிறாள். இந்துமதம் சத்தியத்தின்   அஸ்திவாரத்தின் மீது  அமைந்ததால் கடவுளே ஆனாலும்  ஒரு சொல் சொன்னால், அதைத் திருப்பிப் பெற முடியாது;மாற்ற முடியாது. ஆனால் மாற்று வழி கண்டு பிடித்து அதன் மூலம் வெளியேற  உதவலாம். ராமன் காலடி பட்டவுடனே, உனக்கு சாப விமோசனம் கிடைக்குமமென்று கௌதமர் கூறுகிறார். 2000 ஆண்டுகளுக்கு முன்னர், இந்த சம்பவத்தை விளக்குமமோவியம் மதுரை- திருப்பறங்குன்றக் கோவிலில்   இருந்ததாகச் சங்க இலக்கியம் செப்புகிறது.

img_26691.jpg (2448×2448)

படம்8.ராமனின் கை வண்ணத்தை தாடகை வதத்திலும், கால் வண்ணத்தை அகலிகை சாப விமோசனத்திலும் கண்டதைக் கம்பன் அழகாகப் பாடுகிறான். ராமன், பின்னொரு காலத்தில், தனது ஆஸ்ரமத்துக்கு வருவார், என்பதை முக்காலம் உணர்ந்த கௌதமர் முன்னரே  அறிந்தது இந்த சம்பவத்தால் தெரிகிறது. நாம் ஒரு மலையின் மீது நின்று நதி ஓடுவதைப் பார்த்தால் நம்மைக் கடந்து சென்ற நதி, கடக்கும் நதியின் நீர், இனி நம்மை நோக்கி எதிர் வரப் போகின்ற நீர் ஆகியவற்ரைப் பார்ப்பது போல முனிவர்கள் காலத்துக்கு வெளியே சென்று “சென்ற காலம், நிகழ் காலம், வரும் காலம், ஆகியவற்றைப் பார்க்க முடியும். இது காலம் பற்றிய சார்பியல் கோட்பாட்டைக் கொடுத்த, ஐன்ஸ்டைனுக்கும் தெரியாத விஷயம்!!

img_2794.jpg (2448×3264)

படம்9.இராம லெட்சுமணர்களை ஜனகன் என்னும் விதேக நாட்டு மன்னனிடம் விசுவாமித்திரர் கூட்டிக் கொண்டு செல்கிறார். இந்த  இளைஞன் என்னிடமுள்ள சிவ தனுஷை முறித்தால்  அமிழ்தினும் இனிய எனது மகள்  சீதையை மணம் முடிப்பேன் — என்கிறான்  ஜனகன். ராமன் வில்லை எடுத்தவுடனே  அதில் நாணேற்றி வெற்றி பெறுகிறார்.வில் முறிந்தும் போகிறது. “எடுத்தது கண்டனர், இற்றது கேட்டார்” — என்று கம்பன் பாடுகிறார். அதாவது வில்லை எடுத்ததைத் தான் மக்கள் பார்த்தனர். அடுத்த நிமிடம், அது முறிந்த சப்தம்தான் மக்களுக்குக் கேட்டது. அவ்வளவு வேகத்தில் ராமன் செயலைச் செய்து  முடித்தார்.

img_2576.jpg (2448×2448)

படம்10.பரசுராமன், ஒரு பிராமணர். அவரது தந்தைக்கு, க்ஷத்ரியர்கள் தீங்கு இழைத்ததால், அவர் 21 முறை  தாக்கி, அரசர்கள்  எல்லோரையும்   அழிக்கிறார். ராமரும் க்ஷத்ரியரென்பதால் கோபக் கனல் பொங்க, அவரை எதிர்க்கிறார். எல்லோரும் விட்டுவிடுங்கள்” – என்று கெஞ்சுகின்றனர். சிவ தனுஷென்னும் வில்லை முறித்த ராமன், என்னிடமுள்ள விஷ்ணு தனுஷென்னும் வில்லை முறித்தால் போய் விடுகிறேன் என்கிறார். இராமன் அதை நொடிப் பொழுதில் முடிக்கவே, அவர் வந்த வழியே போய் விடுகிறார்.

IMG_2575

swami_48@yahoo.com

இராமாயண வெண்பா!

IMG_2564

Rare Pictures of Ramayana from Picture Ramayana

Shabari worshipping Rama

Article No.1751; Date:- 27  March, 2015

Written by S NAGARAJAN

Uploaded at London time  8-19 GMT

 

28-3-2015  ஶ்ரீ ராம நவமி. அதையொட்டிய சிறப்புக் கட்டுரை இது! ராமரின் அருள் வேண்டி அவர் பாதம் பணிவோம்; நலம் பெறுவோம்! லோகாஸ் ஸமஸ்தா சுகினோ பவந்து!

.நாகராஜன்

 

 

இராமாயண நூல்கள்

ஆதி கவி வால்மீகி ராமாயணத்தைப் பற்றிய பல்லாயிரக்கணக்கான கட்டுரைகள் பல்வேறு மொழிகளில் எழுதப்பட்டுள்ளன. இராமாயணத்தை பல்வேறு கவிஞர்களும் காவியங்களாகத் தங்கள் தங்கள் மொழியில் இயற்றியுள்ளனர். பல்வேறு நாடுகளில் இன்று புழக்கத்திலிருந்து வரும் இராமாயணக் கதைகளும் ஏராளம். கம்ப இராமாயணம், துளஸி இராமாயணம், பவபூதியின் உத்தர ராம சரிதம், வாசிஷ்ட இராமாயணம், ஆனந்த ராமாயணம் என்று நூல்களின் பட்டியலைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

இராமாயண வெண்பா

இந்த வரிசையில் தமிழில் வெண்பாவைக் கொண்டு மட்டுமே இயற்றப்பட்டுள்ள அரிய நூல் இராமாயண வெண்பா. இதை இயற்றியவர் சமீப காலத்தில் மதுரையில் வாழ்ந்த மதுரகவி ஶ்ரீநிவாசையங்கார் என்பவர். இவர் வாழ்ந்த காலம் 1863-1937 என்பது தெரிய வருகிறது. இயற்றுவதற்கு மிகவும் கஷ்டமான வெண்பா பாக்களால் அமுதூறும் அழகிய சொற்களால் இராமாயணத்தை இயற்றியுள்ளது ஒன்றே இவரது அரிய புலமைக்கு ஒரு சான்றாகும்.இருபதாம் நூற்றாண்டில் மதுரையில் உள்ள சிறிய கிராமத்தில் இவர் வாழ்ந்திருந்தார் என்பதையும் தனது இந்த நூலை தமிழ்ச் சங்கத்திடம் ஒப்படைத்திருந்தார் என்பதையும் நாம் அறிய முடிகிறது. கிட்கிந்தா காண்டம் முடிய 1853 வெண்பாக்களும், சுந்தர காண்டம் மற்றும் யுத்த காண்டத்தில்  2061 வெண்பாக்களும் அடங்கியுள்ள அரிய நூல் இது!

IMG_2560

Hanuman crossing the Ocean

நூலின் பெருமையை முதல் பாடலே நன்கு விளக்கி விடுகிறது!

உலகம் புகழ் அமுதம் ஒப்பாகும் தூய
நலன்மலிரா மாயணத்தை நன்கு – நிலன்மிசையான்
வெண்பாவால் பாடி வினைகடிய எப்பொழுதும்
கண்பாராய் மாருதிநீ காண்….   பாடல் 9

‘அமுதத்திற்கு ஒப்பாகும்; தூய நலன் மலி இராமாயணம்’ என்று இராமாயணத்தைப் புகழ்ந்து துதித்து அதை வெண்பாவால் பாட அனுமனைத் துதிக்கிறார் கவிஞர்.

ஆழ்வார்கள் பாடிய பாடல்களில் தெரிந்தெடுத்த அமுதூறும் சொற்களை நூல் முழுவதும் ஆங்காங்கே பார்க்க முடியும்.

கவிச் சுவையும் சொற் சுவையும் பொருள் சுவையும் உள்ள பாடல்களில் சுந்தர காண்டத்தில் உள்ள சில பாக்களை இங்கு பார்ப்போம்.

தவம் இருந்த தையல்!

எண்ண லெழுத லிசைத்த லெழின்மலர்ப்பூங்

கண்ணுறவே நோக்கல் கவினறிதல் – உண்ணுதலோ

டெல்லா மிராம னெனத் துயிலுங் கொண்டறியாள்

பொல்லா மணிநேரப் பொன்            —–சுந்தர காண்டம் பாடல் 120

எண்ணுதல், எழுதல், இசைத்தல், கண்ணுற நோக்கல், கவின் அறிதல், உண்ணுதல் இவை எல்லாம் சீதைக்கு இராமன் என்ற எண்ணம் தான் என்பதைச் சொல்லி அவள் தூங்காமல் தவம் இருந்ததை துயிலும் கொண்டறியாள் என்ற வார்த்தைகளால் சொல்லி சீதையின் தவத்தை கவிஞர் அற்புதமாக ஒரே வெண்பாவில் விளக்கி விடுகிறார்.

IMG_2568

Ravana attacking Jatayu

அனுமன் சீதையைக் கண்ட காட்சியைக் கவிஞர் இப்படி நயத்துடன் கூறுகிறார்:

இலக்கணமுஞ் சீரு மெழிலு மியல்புஞ்

சொலத்தகுந்த மற்றைத் துறையுஞ் – சிலைப்புயத்தான்

எம்பிரான் சொற்ற எமதனையே யென்றறிந்தான்

வம்புலாந் தார்க்கான் மகன்               — சுந்தர காண்டம் பாடல் 142

“எம்பிரான் சொன்ன எம் அன்னை சீதை இவளே தான்” என்பதை இலக்கணமும் சீரும் அழகும், அவள் இயல்பும், இதர துறைகளும் காட்டி விடுவதை பல்துறை வித்தகனான அனுமன் அறிந்து கொண்டான்.

IMG_2572

Ramayana donning garments to go to forest

யான் செய்த தவமோ!

சீதையைக் கண்ட அனுமன் வியக்கிறான்!

யான் செய்த மாதவமோ வன்றே லருளுடையான்

தான் செய்த வாடாத் தனித்தவமோ – வான் செய்த

நல்லுலகு செய் தவமோ நாகாப திர்தவமோ

சொல்லரிய தென்றான் துதித்து

நான் செய்த தவமா? அருள் உடையான் செய்த தவமா? வான் உலகு செய்த தவமா? நாகாபதிர் தவமோ? என்று மகிழ்கிறான் அனுமன்.

இராவணன் காம வெறியுடன் சீதையை அணுகி அவள் காலில் விழுவதையும் சீதா பிராட்டி வெகுண்டு அவனைக் கடிந்து துரத்துவதையும் மதுர கவி கவிஞர் விவரிக்கும் பாங்கே அலாதி!-

அணியிழாய்! காதல் அடங்காததாக , பிணி அகல வாழ்வி! எனப் பேணி – மணி வாள் முடி கீழ் உறவே முழு மாமலை போல அடி மேல் வீழ்ந்தான் அயர்ந்து!

IMG_2576

Rama breaking the Bow (Shiva Dhanus)

ஏடா! மாடே! பேயே! முடி பத்தும் விழும்! திண்ணம் இது!

சீதை கூறுகிறாள்:-

ஏடா! நிருதற் கிறையே யிரக்கமிலா

மாடே! யறிவிலாவன் பேயே – நாடாமல்

என் சொன்னாய் வாழ்நாட் கிறுதியேன் செய்வாய்

வான் மின் செய்த தென்ன விரைந்து

ஆழிமழைக்கண்ண னருத னாடவர் கோன்

பாழியந்தோள் வீரன் படு சரத்தா – லேழைமதி

நின்முடிகள் பத்துநிலன் வீழுந் திண்ணமிது

கன்மனத்தா யெனவழிவாய் காண்!

ஏடா, இரக்கமிலா மாடே, வன் பேயே என்ற இந்த சுடு சொற்கள் போதாதா ராவணன் அழிவிற்கு!

என் தெய்வமும் நீ; செல்வமும் நீ!

அனுமன் அண்ணல் ராமனைப் பற்றிக் கூற அதைக் கேட்ட சீதை கூறுகிறாள்:-

எங்கோ மகனுக் கிருந்தூது வந்தெனது

பங்கமெலாம் நீத்துயிரும் பாலித்தாய் – இங்குனக்குச்

செய்யுங் கைமாறுளதோ தெய்வமுநீ செல்வமுநீ

அய்யனுநீ யன்னையுநீ யால்!

“என் கோமனுக்காக தூது வந்து என் பங்கம் நீத்து உயிர் பாலித்தாய். உனக்கு நான் என்ன கைம்மாறு செய்யப் போகிறேன். என் தெய்வம் நீ! செல்வமும் நீ! என் தந்தை நீ! என் தாயும் நீயே” என்ற சீதா பிராட்டியின் வார்த்தைகள் நம்மை உருக்குகின்றன!

அழகு ஊறும் அமுதச் சொற்களை உடைய இராமாயண வெண்பாவில் சில பாக்களைப் படிக்கும் போதே அதை முழுவதும் படிக்கும் ஆர்வம் எழும்.

rama

Ramayana Sculptures from South East Asia

கம்பனுடன் கலந்து வாழி

இறுதியாக நூலின் முடிவில் உள்ள வாழ்த்துப் பாவில் கம்பனையும் மறக்கவில்லை கவிஞர்.

வாழி அனுமந்த நகர் வாழி மதுரகவி

வாழியவன் நூல்கள் வழிவழியே –வாழியவே

இம்பர் இராமாயண வெண்பா இன்னுரை

கம்பனுடன் வாழி கலந்து

காலம் காலமாகத் தோன்றி வரும் இராமபிரான் அடியார்களில் அற்புதமாக சமீபத்தில் மதுரையில் தோன்றி அழியாத நூலைத் தந்துள்ள மதுரகவி ஶ்ரீநிவாசையங்காரை வணங்கி அவர் நூலை  வாழ்த்தி மகிழ்வோம்!

************

குறிப்பு:-

இந்த நூலை www.projectmadurai.org என்ற தளத்திலிருந்து இலவசமாகத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த அரும் பணியைச் செய்துள்ள மதுரை தமிழ் இலக்கிய  மின் தொகுப்புத் திட்டத்தின் பொறுப்பாளர்களையும் இதற்கு உறுதுணையாக இருந்து அரும் பணி ஆற்றியோரையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்! அவர்களுக்கு தமிழ் உலகம் நன்றி பாராட்டக் கடமைப்பட்டுள்ளது. நன்றி!