தொகுத்து வழங்குபவர்- கட்டுரை மன்னன் லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்..1311; தேதி- 26 செப்டம்பர் 2014
லண்டன் நகரில் இருந்து வெளிவரும் ‘டெய்லி டெலிகிராப்’ (Daily Telegraph) பத்திரிக்கையில் சில நாட்களுக்கு முன் ஒரு கட்டுரை வெளியாகி இருக்கிறது. லண்டனில் 60 ஆண்டுகளுக்கு முன் மித்ரனென்னும் தெய்வத்தின் கோவில் கண்டுபிடிக்கப்பட்டது பெரும் பரபரப்பை உண்டாக்கியதன் அறுபதாவது ஆண்டு தின நினைவாக (60th Anniversary) இக்கட்டுரை வெளியானது. அதில் கண்ட வியப்பான, சுவைமிகு தகல்களை மேலும் மூன்று என்சைக்ளோபீடியா தகவல்களுடன் தொகுத்து அளிப்பேன்.
பிரிட்டனை ரோமானியர்கள் 400 ஆண்டுக்காலம் ஆண்டனர். ஆகையால் முதல் 4 நூற்றாண்டுகளைச் சேர்ந்த சின்னங்கள் லண்டனில் ஆண்டுதோறும் கிடைத்து வருகின்றன. சென்ற ஆண்டு மட்டும் 10,000 ரோமானியப் பொருட்கள் கிடைத்தன. இதில் 250 ஜோடி தோல் (Leather Shoes) செருப்புகள், மட்பாண்டங்கள், கோப்பைகள், தட்டுகளும் அடங்கும். ரோமானியரின் ஒரு சின்னமான கழுகும் அதன் வாயில் பாம்பும் உடைய (Eagle and Snake) ஒரு கற்சிலையும் அண்மையில் கிடைத்தது.
மித்ரன் யார்?
மித்ரன் (Vedic God Mitra) என்பது வேத காலத்தில் வழங்கப்பட்ட ஒரு தெய்வம். வியப்பான விஷயம் என்ன வென்றால் இன்றும் பிராமணர்கள் நாள்தோறும் செய்யும் சந்தியா வந்தனத்தில் இந்த தெய்வத்தை வழிபடுகின்றனர். சூரிய நமஸ்காரம் செய்வோர் சொல்லும் முதல் மந்திரம் “ஓம் மித்ராய நம:”. மித்ரன் என்ற சொல்லுக்கு சூரியன், ஒப்பந்தம், நண்பன் (Sun, Contract, Friend) என்ற பொருள் உண்டு. விஷ்ணு சர்மா எழுதிய பஞ்ச தந்திரக் கதைகளில் ஒரு தந்திரம் மித்ர பேதம் என்பதைப் பலரும் அறிவோம்.
Mithra hidden underground in Rome.
இதை எல்லாம் விட வியப்பான விஷயம் மித்ரன் பொறித்த களிமண் பலகைக் கல்வெட்டு சிரியா- துருக்கி ஆகிய முஸ்லீம் நாட்டு பிதேசத்தில் கிடைத்ததாகும். கி.மு. 1380 ஆண்டில் மிட்டனிய (Mittanian) வம்ச அரசன் ஒருவன் பக்கத்து நாட்டுடன் சமாதான நட்புறவு ஒப்பந்தம் செய்து கொண்டான். மிட்டனிய வம்சம் வேத கால இந்துக்கள் ஆவர். அவர்கள் மித்ரன், வருணன், இந்திரன், நாசத்யர்கள் (அஸ்வினி தேவர்கள்) பெயரில் சத்தியப் பிரமாணம் செய்து சமாதான ஒப்பந்தம் நிறைவேற்றினர். ஆகவே 4000 ஆண்டுகளாக மித்ரன் வழிபாடு நடக்கிறது!!!
மித்ரன், காலை நேர தெய்வம், வருணன், இரவு நேர தெய்வம். நம்மை எல்லாம் சூரியன், சந்திரன் போல எப்போதும் கண்காணித்துக் கொண்டே இருப்பார்கள். நல்லாட்சியை மலர வைப்பதும் தீயோரை நையப் புடைப்பதும், விதிகள் (ருதம்) ஒழுங்கு, கட்டுப்பாடு ஆகியனவற்றைச் செயல் படுத்துவதும் இவர்கள்தம் பணி என்று வேதங்கள் முழங்குகின்றன.
சில விஞ்ஞானிகள் பாசிட்டிவ், நெகட்டிவ் (Positive & Negative energy) என்ற இருவகை சக்திகளையே இந்துக்கள் மித்ர—வருண என்று சொன்னார்கள் என்பர். ஏனெனில் வேதத்தில் மித்ர—வருணன் என்று ஜோடியாகவே சொல்லுவர். பிரித்துச் சொல்வது அபூர்வம்.

Mthra temple under San Clementine church.
ரோமானிய மித்ரன்
ரோமானிய படை வீரர்கள் இடையே 2000 ஆண்டுகளுக்கு முன்னரே மித்ரன் (Mithras) வழிபாடு பரவிவிட்டது. இவர்கள் ஏது காரணத்தினாலோ மித்ரன வழிபாட்டை ரகசியக் காப்பு பிரமாணத்தோடு, பாதாள குகைகளிலும், அறைகளிலும் நடத்தினர். ஒரு நேரத்தில் ரோம் நகரில் மட்டும் 700 மித்ரன் கோவில்கள் இருந்தன. ரோமானிய மித்ரன், ஈரான் வழியாக வந்த மித்ரன் என்பதால் பாரசீகக் குல்லாயைக் காணலாம். பாரசீக மித்ரன், (Azura Mazda) அசுர மஸ்தாவுடன் சேர்ந்தவன் இவர்கள் மித்ரன், ஒரு காளை மாட்டை கொல்லுவது போல சிலைகள் வடித்துள்ளனர். இதுவே ரோமாபுரி முழுதும் காணக்கிடக்கும். இந்தக் காளையைக் கொல்லும் சின்னம் வானியல் தொடர்பான சின்னமாகும். உண்மையில் காளை வதை அல்ல.
ரோமானியர், காளையை பலியிட்டு வணங்குவர். ஆயினும்அக் காளை வழிபாடு வேறு ஒரு பெண் தெய்வத்துகானதாகும்.
பாரசீக (ஈரான்) மித்ரன்
பாரசீக நாட்டில் வாழ்ந்த சொராட்ஸ்ரர் (Zoroaster) இந்தியாவின் குஜராத்/சௌராஷ்ட்ர (Saurashtra= Zoroastra) மாநிலத்தில் இருந்து சென்றவர் என்பது காஞ்சி மஹாபெரியவரின் கணிப்பு. அவரது காலமும் கி.மு.800-ஐ ஒட்டியதே. . அவர் வேதத்தின் ஒரு பகுதியை தலை கீழாக மாற்றி வைத்துக் கொண்டார். வேதம் அசுரன் என்று சொன்னால் அவர் தேவர் என்பார். ஆயினும் அவர்களும் தீயை வழிபடுவர், பூணூல் போட்டுக் கொள்வர். பல வகைகளில் ஒருமைப்பாடு காணலாம். அவர்களுடைய மித்ரன் நான்கு குதிரை பூட்டிய ரதத்தில் செல்லும் சூரியனாகவும், போர்த் தெய்வமாகவும், நீதி தேவனாகவும் வழிபடப்பட்டான். இந்த தெய்வம் அவருக்கு ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் ரோமானிய சாம்ராஜ்யத் துக்குள் நுழையும்போது இன்னும் உருமாறிப்போனார். எல்லோரும் ஒப்புக் கொள்ளக்கூடிய ஒரு விஷயம் இவர் முதலில் வேதகால தெய்வம் என்பதாகும்.
ரோம் ஆட்சி எங்கு எங்கெல்லாம் பரவியதோ அங்கு எல்லாம் ரோமானிய படைவீரர்கள் இந்த தெய்வத்தையும் கொண்டு சென்றனர். லண்டனில் இவரைப் போற்றும் கல்வெட்டுகளும் கிடைத்தன. இப்போது உலகம் முழுதுமுள்ள மியூசியங்களில் மித்ரன் சிலைகளைக் காணலாம். இந்துக்கள் மட்டும் உள்ளத்தில் மித்ரன் வழிபாடு செய்வர். மற்றவர்கள் மியூசியத்தில் காட்சிப்பொருளாகக் காண்பர்.
வாழ்க மித்ரன் புகழ்!
–சுபம்–




You must be logged in to post a comment.