பூமிக்கு பாரம் யார்? வேதப் பிரான்பட்டர் பதில் (Post No.4274)

Written by London Swaminathan

 

Date: 5 October 2017

 

Time uploaded in London- 17-45

am

 

Post No. 4274

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

பூமிக்குப் பாரம் யார்? இந்த பூமி சுமப்பதே வீண் என்று யாரைச் சொல்லலாம்?

 

5X 5 + 5 தெரியாதோர் இந்த உலகில் வாழ்வதே  பிரச்சினைதான்!

 

இது என்ன பிரமாதம்? விடை முப்பது 5X5+5=30!

 

வேதப் பிரான் பட்டர் சொல்லும் 30 அதுவல்ல.

வையம் புகழும் பாவைப் பாடல் முப்பதை அவர்  குறிப்பிடுகிறார்.

 

திருப்பாவை தெரியாதோரை இந்த பூமி சுமப்பதே வீண்.

 

இதைச் சொல்வதையும் அழகாகப் பாடல் வடிவில் பகர்வார்

 

பாதகங்கள் தீர்க்கும்

பரமன் அடிகாட்டும்

வேதமனைத்துக்கும்

வித்தாகும்- கோதைத் தமிழ்

ஐயைந்து மைந்தும்

அறியாத மானிடரை

வையம் சுமப்பதூஉம் வம்பு!

 

–வேதப் பிரான் பட்டர், ஆண்டாள் வாழித் திருநாமம்

வம்பு

ஆனந்த விகடன் அகராதி (1937-ம் ஆண்டு) தரும் பொருள்:-

கயிறு, அசப்பியம் ( சபைக்கு அடாத சொல்), சண்டை, தீச் செயல், தீச் சொல், நிலையின்மை, புதுமை, மிடா (பானை), முலைக் கச்சு, வாசனை, வீம்பு.

xxxx

கிரியா அகராதி தரும் அர்த்தம்:–

Unnecessary trouble; issue leading to quarrel; gossip

 

 

சுமப்பது என்ற வினைச் சொல்லை பொறுக்கி எடுத்திருப்பது ஆழந்த சிந்தனைக்குரியது. ‘கழுதை பொதி சுமக்கும்’ என்று சொல்லுவோம். அது போல பாரம்தான் திருப்பாவை தெரியாத, படியாத, கேளாத அறிவிலிகள்!

 

அடுத்த படியாக ‘வம்பு’ என்ற சொல். இதற்குப் பல பொருள் உண்டு.

நான் யார் தெரியுமா?

‘வம்புச் சண்டைக்குப் போக மாட்டேன்; வந்த சண்டையை விட மாட்டேன்’ என்று வீராப்பு பேசுவோம்.

 

‘அவள் ஊர் வம்புக்குக் கிடந்து அலைகிறாள்’ என்று சிலர் மீது புகார் சொல்வோம்.

 

‘வேண்டாத வம்பை விலை கொடுத்து வாங்காதே’ என்றும் கேட்டிருப்போம்.

வேதப் பிரான் சொல்லும் ‘வம்பு’ எதுவோ?

ஊர் வம்பு பேசும் வெட்டிக் கும்பலில் ஒருவர்; சபைக்கு ஏற்றதல்லாத சொற்களைப் பேசும் ஆட்களில் ஒருவர் என்று சொல்லுவதே சாலப் பொருத்தம்.

 

ஆக திருப்பாவை என்பதும் ஆண்டாள் பாடிய நாச்சியார் திருமொழி என்பதும் (143 பாடல்கள் ) பெண் இனத்துக்கே பெருமை சேர்ப்பதாகும். 1400 ஆண்டுகளுக்கு முன்னர், ஒரு TEENAGE GIRL –டீன்  ஏஜ் கேர்ல்– பெண்– இப்படி ஊர்ப் பெண்களை (gossip) வம்பு பேசவிடாமல்- திருமாலின் பெருமைதனைப் பேச அழைத்திருப்பது அதிசயம்தானே. இவருக்கும் முன்னால் காரைக்கால் அம்மையாரைக் காண்கிறோம், மங்கையற்கரசியைக் காண்கிறோம், சங்கத் தமிழ் இலக்கியத்தில் இருபது பெண் புலவர்களைக் காண்கிறோம்; அவர்களில் மாமணியாக விளங்கும் அவ்வையாரையும் அறிவோம். ஆனால் ஆண்டாள் போல இளம் வயதும் இல்லை; கோழி கூவுவதற்கு முன்னால் ஊர்மக்களை, பெருமாளின் பெருமையைச் சொல்லி அழைத்த ஆண்டாளின் திருப்பாவை 5X 5 +5 = 30 அறியாதோர் பூமிக்கு வம்பு, பாரம், குப்பை!

 

நாமும் ஆண்டாள் பெருமையைப் பாடுவோம்:–

 

திரு ஆடிப் பூரத்து செகத்து உதித்தாள் வாழியே!

திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே!

பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண் பிள்ளை வாழியே!

பெரும்புதூர் மாமுனிக்குப் பின் ஆனாள் வாழியே!

 

ஒரு நூற்று நாற்பத்து மூன்று உரைத்தாள் வாழியே!

உயர் அரங்கற்கே கண்ணி உகந்தளித்தாள் வாழியே!

மரு ஆரும் திருமல்லி, வள நாடி வாழியே!

வண் புதுவை, நகர்க் கோதை, மலர்ப் பதங்கள் வாழியே!!!

 

 

 

–SUBHAM—