டர்பா (DARPA) காண்பிக்கும் அடுத்த தலைமுறை உலகம்!(Post No.3059)

 darpa 2

Article Written S NAGARAJAN

Date: 14th  August 2016

Post No. 3059

Time uploaded in London :– 6-31 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

12-8-16 பாக்யா இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள கட்டுரை

 

 

டர்பா காண்பிக்கும் அடுத்த தலைமுறை உலகம்!

.நாகராஜன்

 

darpa 3

“இனி மேல் பிறக்கப் போகிறவர்களுக்கு நல்லவர்களாக இருங்கள். நீங்கள் வந்து சேர்ந்த இடத்தை விடச் சிறந்ததான இடத்தை அவர்களுக்காக உருவாக்குங்கள். அவர்கள் உங்களுக்கு நன்றியுடைய்வர்களாக இருப்பார்கள்.” – பங்காம்பிகி ஹப்யரிமானா

 

 

செயற்கை அவயவங்களைத் தயாரித்து மூளை செயல்பாட்டுடன் அதை ஒருங்கிணைக்க வைத்த அதிசயத்தை மட்டும் டர்பா (அமெரிக்க இராணுவத்தின் அறிவியல்  மற்றும் தொழில்நுட்பப் பிரிவு) செய்யவில்லை.

 

 

எதிர்கால உலகை எப்படி அமைப்பது என்பதையும் அது திட்டம் தீட்டி வருகிறது – இராணுவ நோக்கில்!

ஆர்டிபிஷியல் இண்டெலிஜென்ஸ் எனப்படும் செயற்கை அறிவு என்பதில் அது காட்டும் அக்கறையே தனி!

ஒரு வினாடிக்கும் கீழான நேரத்தில் எந்த ஒரு மொழியையும் இன்னொரு  மொழியில் கூற வல்ல மொழியாக்கத் தொழில் நுட்பம் அதனிடம் இப்போது தயார்! அதி நவீனமான காண்டாக்ட் லென்ஸுகளையும் அது தயாரித்து விட்டது.

அடுத்ததாக அதன் கவனம் செயற்கை அறிவு மற்றும் ரொபாட் வீரர்கள் ஆகியவற்றின் பயன்பாடு தான்!

2045ஆம் ஆண்டு உலகம் எப்படி இருக்கும் (அல்லது எப்படி இருக்க வேண்டும்) என்பதை அது தீர்மானித்து விட்டது!

எதிர்காலத்தை நோக்கி என்ற பொருள் படும் ‘ஃபார்வேர்ட் டு தி ஃப்யூச்சர்’ (Forward to the Future) என்ற ஒரு வீடியோ தொடரை அது யூ டியூபில் அண்மையில் வெளியிட்டுள்ளது

அதில் டர்பாவைச் சேர்ந்த மூன்று நிபுணர்கள் எப்படி தொழில்நுட்பம் இன்னும் 30 வருடங்களில் (அதாவது ஒரு தலைமுறையை முப்பது வருடங்கள் என்று கணக்கிடும் தற்போதைய கணக்கை எடுத்துக் கொண்டால், அடுத்த தலைமுறையில்) உலகை மாற்றப் போகிறது என்பதை விளக்குகின்றனர்.

 

 

இதில் முதல் அதிசயக் கணிப்பை வெளியிடுபவர் பாம் மெல்ராய் (Pam Melroy) என்னும் விண்வெளி விண்கல எஞ்ஜினியர், இவர் ஏற்கனவே விண்வெளியில் பறந்த விண்வெளி வீரரும் கூட.. இப்போது டர்பாவின் துணை டைரக்டர். தந்திர உத்திகளைக் கையாளும் பிரிவில் ட்ரோன்களை உருவாக்கும் பிரிவில் இவர் பணியாற்றி வருகிறார்.

 

 

இராணுவத்திற்காகக் கண்டு பிடிக்கப்பட்ட ‘வாம்பயர் ட்ரோன்ஸ்’ (Vampire Drones) என்று ஒரு திட்டம் உள்ளது. சூரிய ஒளியில் இந்த வாம்பயர் ட்ரோன் பறக்கும் போது அது இருப்பதே யாருக்கும் தெரியாது. மாயாஜாலமாகப் பறக்கும் பிசாசு ட்ரோன் அது. நமது குரலை இனம் கண்டு ஆணைகளை நிறைவேற்றும் செயற்கை அறிவைப் பயன்படுத்தும் ட்ரோன்கள் இப்போது தயாரிக்கப்படும் நிலையில் உள்ளன1 சிக்கலான பல காரியங்களை இந்த ட்ரோன்கள் ஒரே சமயத்தில் செய்யும்!

எம்பதடிக் சிஸ்டம்  (Empathetic System) என்று ஒரு அமைப்பு. இதில் ரொபாட்டுகள் போர் புரிய போர்க்களம் செல்லும், அங்கு அந்த வினாடியில் எதிரிகளில் யார் என்ன உணர்ச்சியைக் கொண்டிருக்கிறார்கள்., அவர்களது உடல் தகுதி, திறன் எப்படி  இருக்கிறது என்பதை இவை நன்கு கணித்து அதற்குத் தக போரிடும்! 2030இல் மனிதர்கள் போர்க்களம் செல்ல மாட்டார்கள். கைகலப்பிற்காக ரொபாட்டுகள் களத்திற்குச் செல்லத் தயாராகிவிடும்.

 

DARPA_Logo

 

அடுத்து ஸ்டெஃபானி டாம்ப்கின்ஸ் (Stefanie Tompkins) என்ற நிலவியல் நிபுணர், 2045இல் நேனோ தொழில்நுட்பம் உலகை ஆளும் என்று கூறுகிறார். இவர் டர்பாவின் இராணுவ அறிவியல் அலுவலகத்தில் டைரக்டராக இருப்பவர். கற்பனைக்கு அப்பாற்பட்ட மிகச் சிறிய உலோகங்கள் பயன்பாட்டிற்கு வந்து விடும் என்கிறார் இவர். இப்போதே செயற்கை அங்கங்கள் வந்ததைச் சுட்டிக் காட்டும் இவர் அந்த அங்கங்களின் கனம் சில அணுக்களின் கனம் தான் என்கிறார். காண்டாக்ட் லென்ஸ்  உணரவே முடியாத அளவு மெலிதாக இருக்கும்1 எதிர்கால உலோகங்கள் மிக மெலிதாக இருக்கும். ஆனால் அதே சமயம் கற்பனைக்கும் அப்பாற்பட்ட அளவில் வலிமையுடன் இருக்கும் என்பது இவர் தரும் கணிப்பு.

ஜஸ்டின் சான்செஜ் (Justin Sanchez) என்பவர் மூளையியல் விஞ்ஞானி. டர்பாவின் உயிரியல் துறையில் பணியாற்றுபவர். இவர் கூறுவது : 2045இல் எண்ணத்தின் மூலமாக இயக்கப்படும் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டு விடும். 2045இல் நண்பர்களும் உறவினர்களும் மூளையின் மூலமாகவே ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ள  முடியும். (அதாவது டெலிபோன் உள்ளிட்டவை அவுட் ஆஃப் டேட்!)

எலக்ட்ரானிக் ஆர்கிடெக்சர் எனப்படும் மின்னணுவியல் கட்டிடத் தொழில்நுட்பம் வீட்டைக் கட்ட உதவும். நினைத்தால் எண்ணம் மூலமாகவே பல்புகள் எரியும். சிறிய சென்ஸர்கள் தனக்குள்ளேயே சக்தியைக் கொண்டிருப்பதால் வயர்கள், மின்சாரம் என்பதெல்லாம் அவுட் ஆஃப் டேட்!

எதிர்கால வீடுகளுக்கும் இன்றைய வீடுகளுக்கும் துளிக் கூட சம்பந்தம் இருக்காது. அறிவியல் வீடுகளில் அடுத்த தலைமுறை வாழத் தொடங்கும்!

 

துள்ளிக் குதித்து ஓடி வரும் தொழில்நுட்பங்கள் மனிதர்களுக்குச் சேவை செய்யுமா அல்லது அவர்களை ஆளுமா?

 

முப்பதே வருடங்கள், பொறுத்திருங்கள்! முடிவு தெரிந்து விடும்!!

 

Wallace_Carothers,_in_the_lab

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ,,

அமெரிக்க இரசாயன நிபுணரான வாலஸ் ஹ்யூம் கரொதர்ஸ் (Wallace Hume Carothers 1895-1937) 1935ஆம் ஆண்டு நைலானைக் கண்டுபிடித்தார். அதைக் கண்டுபிடிக்க ஏழு வருடங்கள் அவர் கடுமையாக உழைக்க வேண்டிய்தாயிற்று. ஒரு சிறிய அதிர்ஷ்டமும் அவருக்குத் துணை செய்தது. நைலானைப் போன்ற ஒன்றை அவர் முதலில் தற்செயலாகக் கண்டு பிடிக்கவே, அதை மேம்படுத்தி தான் நினைத்தவாறு நைலானைக் கண்டுபிடித்தார்.

பட்டுப்பூச்சிகளைக் கொன்று அதிலிருந்து செய்யப்பட்ட பட்டு காலுறைகளின் விலை மிக அதிகம். ஆனால் நைலான் சாக்ஸ்களோ விலை  மிகவும் குறைவு. நைலான் முதன் முதலில் அமெரிக்காவில் 1940ஆம் ஆண்டு மே மாதம் 15ஆம் தேதி உபயோகத்திற்கு வந்தது. 50 லட்சம் காலுறைகள் உற்பத்தி செய்யப்பட்டன. அவை அனைத்தும் ஒரே நாளில் விற்றுத் தீர்க்கப்பட்டது! இரண்டாம் உலகப் போர் மூளவே நைலானுக்கு ஏக கிராக்கி ஏற்பட்டது. பாராசூட்டுகளில் நைலான் பயன்படுத்தப்படவே அதன் மதிப்பு இன்னும் அதிகமானது.

தான் கண்டுபிடித்த நைலான் சந்தையில் இப்படி சக்கைப் போடு போட்டு விற்பனை ஆவதைப் பார்க்க வாலஸ் ஹ்யூமுக்குக் கொடுத்து வைக்கவில்லை.

மிக்க மனச்சோர்வினால் பாதிக்கப்பட்ட அவர் 1937இல் சயனைடைச் சாப்பிட்டுத் தன் உயிரைப் போக்கிக் கொண்டார். அவரது மனைவி அப்போது கர்ப்பிணி. வாலஸ் இறந்த பின்னர் அவருக்கு மகள் பிறந்தாள்.

நைலான் என்ற பெயர் வரக் காரணம் டூ பாண்ட் நிறுவனத்தின் இரு தலைமையகங்களான நியூ யார்க் மற்றும் லண்டன் ஆகியவை இணைக்கப்பட்ட வார்த்தை (New York LONdon) என்று சொல்வது வழக்கம். ஆனால் உண்மை அதுவல்ல. அனைவராலும் சுலபமாகச் சொல்லும் வார்த்தை எது என்று கண்டு பிடிக்க ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு அமைத்த வார்த்தையே இது. ஆனால் இதை ஒப்புக் கொள்ள மறுப்பவர்களும் உண்டு. நுசில்க், வகாரா(வாலஸை கௌரவிக்கும் பெயர் இது) என்ற பெயர்களெல்லாம் பரிசீலிக்கப்பட்டு நைலான் என்ற பெயர் பின்னால் தேர்ந்தெடுக்கப்பட்டது. இப்போது நைலானின் உற்பத்தி ஆண்டொன்றுக்கு 54 லட்சம் டன்கள் என்ற அளவையும் தாண்டி விட்டது!

நைலான் இன்று பயன்படாத இடமே இல்லை!

******

 

டர்பாவின் அதிசய ஆய்வுகள்!(Post No.3034)

b.myers

Article Written S NAGARAJAN

Date: 4th  August 2016

Post No. 3034

Time uploaded in London :– 8-25AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

பாக்யா 5-8-16 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள கட்டுரை

 

 

டர்பாவின் அதிசய ஆய்வுகள்!

.நாகராஜன்

durpa

ஒவ்வொரு மனிதரின் வாழ்க்கையிலும் ஏதோ ஒரு தருணத்தில் மருத்துவ துணை சாதனம் தேவையாக இருக்கிறது. உங்கள் கண்களுக்கான கண்ணாடிகள், அல்லது இடுப்பு அல்லது  முழங்கால் மூட்டை பொருத்துதல் என இப்படி ஏதோ ஒன்று தேவையாக இருக்கிறது. செயற்கை அங்கங்கள் பொருத்தப்பட்ட தலைமுறை நம்மைச் சுற்றிலும் உள்ளது – எய்மி மல்லின்ஸ்

 

 

அமெரிக்காவின் இராணுவத்திற்கான தொழில்நுட்ப மேம்பாடுகளை ஆராய்ச்சி செய்து வழங்கும் ஒரு அமைப்பின் பெயர் தான் டர்பா!  டிஃபென்ஸ் அட்வான்ஸ்ட் ரிஸர்ச் ப்ராஜக்ட்ஸ் ஏஜன்ஸி (Defense Advanced Research Projects Agency) என்பதின் சுருக்கமே டர்பா!

 

 

1957 ஆம் ஆண்டு ரஷியா ஸ்புட்னிக்கை விண்ணில் ஏவியதும் பதறிப் போன அமெரிக்கா தொழில்நுட்பத்தில் தான் மேம்பட வேண்டும் என்று எண்ணியது. ஜனாதிபதி ஐஸன்ஹோவர் உடனடியாக 1958இல் உயரிய ஆராய்ச்சி நிறுவனம் ஒன்றை நிறுவினார். பல முறை பெயர் மாற்றப்பட்டு இப்போது டர்பா என அழைக்கப்படும் ஆய்வு நிறுவனம் முதலில் விண்வெளி சம்பந்தமான ஆய்வைத் தொடங்கினாலும் நாஸா அமைக்கப்பட்டவுடன் விண்வெளி சம்பந்தமான அனைத்துத் திட்டங்களையும் அதன் செயல்பாட்டிற்கு விட்டு விட்டது. இதர துறைகளில் கவனம் செலுத்திய அது பல்வேறு அதிசயக் கண்டுபிடிப்புகளைக் கண்டு பிடித்துள்ளது.

 

சுமார் 240 ஆய்வாளர்கள் இதில் பணியாற்றுகின்றனர். இதன் பட்ஜெட்டோ கற்பனைக்கு அப்பாற்பட்ட பல கோடி ரூபாய்கள்!

 

defense-advanced-research-projects-agency

ஆரம்ப காலத்தில் எதிரிகளின் ஆயுதங்களைக் கண்டுபிடித்து இலக்கை நிர்ணயித்து அழிக்கும் தானியங்கி இலக்கு நோக்கிகளை அது கண்டு பிடித்தது.

 

பின்னர் மனத்தைக் கட்டுப்படுத்தும் ஏராளமான அதிசயக் கண்டுபிடிப்புகளை அது கண்டு பிடித்து வருகிறது.

தொழில்நுட்ப மேம்பாடுகளைத் தெரிவிக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளை அவ்வப்பொழுது டர்பா ஏற்பாடு செய்து வருகிறது. செப்டம்பர் 2015 மற்றும் மே 2016இல் டர்பாவின் கண்டுபிடிப்புகளை நேரில் பார்த்த பத்திரிகையாளர்கள் அசந்து பிரமித்து நின்றனர்!

 

 

பத்திரிகையாளர்கள் பார்த்தது ஒரு செயற்கை கையை! 45 பவுண்டு எடையுள்ள ஒரு கர்லாக் கட்டையை நாள் முழுவதும் அது சுழற்றிக் கொண்டே இருந்தது – அதன் பாட்டரியின் சார்ஜ் போகும் வரை! எந்த வலுவுள்ள  மனிதனாலும் இப்படித் தொடர்ந்து கர்லாக் கட்டையை 24 மணி நேரம் தொடர்ந்து சுழற்ற முடியாது!

 

 

இந்த கையின் செயல்பாட்டை விளக்கினார் ஜானி மாத்னி என்ற விஞ்ஞானி. அந்தச் செயற்கை கையை ஒரு  பெண் நிருபரின் கையைப் பிடித்து  குலுக்க வைத்ததோடு டர்பாவின் கண்டுபிடிப்பைப் பற்றி எழுதவும் வேண்டுகோள் விடுத்தார்!

வலிமையிலும் நெளிவு சுளிவுகளுடன் லாகவமாக செயல்படுவதிலும் உலகிலேயே திறமை வாய்ந்த ஒரே கை இது தான் என்றார் ஜானி மாத்னி!

 

 

உலகின் பல இடங்களிலிருந்தும் போர்களில் ஈடுபட்டுத் திரும்பிய கை இழந்த அமெரிக்க வீரர்களுக்கு கரம் கொடுப்பது இனி சுலபம் என்றார் டர்பாவின் உயிரியல் தொழில்நுட்ப டைரக்டரான ஜஸ்டின் சி. சான்செஸ் (Justin C. Sanchez).

 

 metallic cheetah

Metallic Cheetah by Darpa

மூளையின் இயக்கங்களையும் அதன் நுட்பமான செயல்பாட்டையும் அறிந்த பின்னரே இந்த செயற்கைக் கையை உருவாக்க முடிந்தது என்று கூறிய ஜஸ்டின் இயற்கையான கையைப் போலவே இது செயல்படும் என்றார்.

விபத்துக்களில் கைகள் துண்டிக்கப்பட்டோருக்கு இனி இந்தத் தொழில்நுட்ப மேம்பாடு உடலில் பதிக்கப்படும். இந்தத் தொழில்நுட்பம் தசைகள் செயல்பட வேண்டிய விதத்தை அது பதிக்கப்பட்டவரின் எண்ணத்திற்கு ஏற்ப அவரது மூளைக்கு அறிவிக்கும்.

 

 

கைகள், கால்கள் இழந்தவருக்கு இந்த செயற்கை அங்கங்கள் இனி கிடைக்க இருப்பது அறிவியலின் ஒரு மாபெரும் வெற்றியாகும்.

 

 

எதிர்பாராத விபத்துக்களில் கைகளையும் கால்களையும் இழந்தவர்கள் வாழ்க்கையையே இழந்ததாக இனி கருத வேண்டாம் என்பதை எடுத்துக்காட்ட வீரர்கள் பலர் உள்ளனர்!

இரண்டு கால்களையும் சர்ஜரி மூலம் அகற்ற நேர்ந்த ஹ்யூ ஹெர் செயற்கைக் கால்களைப் பொருத்தி உயரமான மலைகளில் ஏறி சாகஸம் செய்கிறார்! செயற்கை கால்களைச் செய்யும் ஒரு லாபரட்டரியையும் அவர் இயக்கி வருகிறார்.

இறுதிச் சுற்றுக்கான தகுதியை இழந்தாலும் கூட 400 மீட்டர் ஒலிம்பிக் இறுதிப் போட்டியில் பங்கு கொண்ட தென்னாப்பிரிக்க வீரர் ஆஸ்கார் பிஸ்டோரியஸ் கால்களை இழந்து நொந்து கொண்டிருப்பவர்களுக்கான ஒரு ரோல் மாடல்! இவரைப் பார்த்து உத்வேகம் பெறாத ஆட்களே உலகில் இல்லை!

 

 

ஆப்கானிஸ்தானத்தில் ஒரு சாலையில் குண்டுத் தாக்குதலில் தனது இரு கால்களையும் கைகளையும் இழந்தார் ஸ்காட் ஷ்ரோடெர். மனம் கலங்காத அவர் செயற்கை அங்கங்களைப் பொருத்திக் கொண்டார். இப்போது ஸ்கூபா டைவிங் அடிக்கிறார்!

 darpa_02

 

நம்ப முடியாத இவரின் சாகஸ செயல்கள் கை, கால்களை இழந்தவர்களுக்கு நம்பிக்கையும் உத்வேகமூம் ஊட்டும் செயல்பாடுகள்!

 

 

எய்மி மல்லின்ஸ் ஒரு அழகான வலிமையான உத்வேகமூட்டும் பெண்மணி. பிறக்கும் போதே அவருக்கு கால்களில் குறைபாடு. அதனால்  மனம் தளரவில்லை அவர். முழங்காலுக்கு கீழே ஆம்புடேட் செய்யப்பட்டது. இரண்டு வயதாகும் போதே செயற்கைக் கால்கள் பொருத்தப்பட்டு நடக்க ஆர்மபித்தார். பின்னர் வயதானவுடன் நீந்த அரம்பித்தார். சைக்கிள் ஓட்டுவது, கால்பந்து விளையாடுவது என அனைத்து விளையாட்டுக்களிலும் பங்கேற்றார். மாடலாகக் கூட மாறினார். அவரைப் பார்த்து உத்வேகம் பெறாதவர்களே இல்லை என்ற நிலையில் அவரது செயல்பாடுகள் இப்போது உள்ளன! பிரபலமான பீப்பிள் பத்திரிகை உலகின் 50 அழகிகளில் அவரையும் ஒருவராகத் தேர்ந்தெடுத்து உள்ளது.

 

 

இந்த வீரர்களையும் வீராங்கனைகளையும் பார்த்து விட்டு அமெரிக்க டர்பாவின் கண்டுபிடிப்பையும் நினைத்துப் பார்த்தால் மனித குலத்தில் அங்கங்களை இழந்தவர்கள் இனி வருத்தப்பட வேண்டியதில்லை என்ற நிலை தோன்றி விட்டதை அறிந்து மகிழலாம்!

 

 

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ,,

 

இன்று நம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தப்படும் அலுமினியம் ஒரு காலத்தில் வெள்ளியை விட விலை அதிகமாக விற்கப்பட்ட உலோகமாகும். பிரான்ஸ் மன்னனான நெப்போலியன் ராஜாங்க விருந்துகளில் சிறப்பு விருந்தினர்களுக்கு அலுமினிய பாத்திரங்களில் தான் உணவுப் பொருள்களைப் பரிமாறச் செய்வானாம். அதுமட்டுமல்ல, விழாக்காலங்களில் அவன் அணியும் கிரீடமும் அலுமினியத்தால் செய்யப்பட்ட ஒன்றாக இருந்தது.

அப்படி அலுமினியம் விலை உயர்ந்த பொருளாக இருந்ததன் காரணம் அதைத் தாதுப் பொருளிலிருந்து பிரித்தெடுக்கும் முறை எளிதாக இல்லை என்பது தான்.

 

 Charles_Martin_Hall_1880s  Paul-Heroult-1863-1914-Chemist

Charles Martin and Paul, who made Aluminium cheaper.

ஆனால் அலுமினியத்தை எப்படி எளிதாகப் பிரித்தெடுப்பது என்பதை இரு வேறு விஞ்ஞானிகள் தனித்தனியே ஒருவர் செய்வதை இன்னொருவர் அறியாமல் ஆராய்ந்து வந்தனர். ஒருவர் சார்லஸ் மார்டின் ஹால் (Charles Martin Hall) என்ற அமெரிக்கர். இன்னொருவர் பால் ஹெரால்ட் (Paul Heroult) என்ற பிரான்ஸ் தேசத்து விஞ்ஞானி. எலக்ட்ராலிஸிஸ் முறை மூலமாக அலுமினியத்தைப் பிரித்தெடுப்பது எளிதாக ஆகவே அதன் விலை வீழ்ந்து, இன்று மிகவும் மலிவாகக் கிடைக்கும் உலோகமாக ஆகியுள்ளது..

 

 

அட்லாண்டிக்கின் வெவ்வேறு  பக்கங்களில் இருந்து ஆராய்ந்த இந்த இருவரும் 1886ஆம் ஆண்டு – அதாவது ஒரே ஆண்டில் –  தங்கள் ஆராய்ச்சியில் வெற்றி பெற்றனர். ஒரே ஆண்டில் இருவரும் வெற்றி பெற்றது மட்டுமல்ல, இவர்கள் இருவரும் 1863 ஆம் ஆண்டு – ஒரே ஆண்டில் பிறந்தனர். அது மட்டுமல்ல, இருவரும் 1914ஆம் ஆண்டில் – ஒரே ஆண்டில் மரணமடைந்தனர்.

 

என்ன அதிசய ஒற்றுமை!

 

Tags: டர்பா, செயற்கைக் கை, கால்கள், கர்லாக் கட்டை, அலுமினியம்

-Subham-