எழுதியவர்-லண்டன் சுவாமிநாதன்
ஆய்வுக் கட்டுரை எண் 1814;
தேதி: 20 ஏப்ரல் 2015
இலண்டனில் பதிவு எற்றிய நேரம் – காலை 9–31
This is already published in English by me.
பீஷ்மர் செய்த தியாகம் எல்லோரும் அறிந்ததே. மகத்தான தியாகம். எப்போதும் குடும்ப சுகம் அனுபவிக்க இளைஞர்களுக்கு பெரியோர்கள் எப்படியாவது உதவுவர். யாருக்காவது திருமணம் ஆகாமல் இருந்தலோ , குழந்தைகள் பிறக்காமல் இருந்தாலோ அந்த இளம் உள்ளங்களுக்காக மனதார கோவில் தோறும் சென்று பிரார்த்திப்பர். ஆனால் இதற்கு நேர் மாறாக நடந்தது மஹாபாரதத்தில்! சத்யவதி மீது சந்தனு என்ற மன்னனுக்கு ஏற்பட்ட திடீர் காதலாலும் அவளுடைய தந்தை போட்ட நிபந்தனையாலும் தேவ விரதன் என்ற பீஷ்மர் தனது வாழ்நாள் முழுதும் பிரம்மசர்யத்தைக் கடைப்பிடிக்க சபதம் செய்தார்.
ஒரு இளைஞன், தனது குடும்ப சுகத்தையே, தனது தந்தையின் குடும்ப (செக்ஸ்) சுகத்துக்காக தியாகம் செய்தது உலக இலக்கியத்தில் வேறு எங்கும் காணக் கிடைக்காத தியாகம். மஹத்தான தியாகம்! இதைக் கண்ட தேவர்கள் வியந்து பீஷ்ம, பீஷ்ம என்று கூச்சல் இட்டனர். “அதி பயங்கரமான சபதம்” என்று இதற்குப் பொருள். அதாவது நம்ப முடியாத அதிசய சபதம். இதனால்தான் ஆண்டுதோறும் பீஷ்மாஷ்டமி அன்று உலக இந்துக்கள் அனைவரும் அவருக்கும் அவரைப் போன்று இறந்த புண்ய பிரம்மசாரிகளுக்கும் தர்ப்பணம் செய்கின்றனர். இனி வருங் காலத்திலும் கூட இப்படி ஒரு அதிசயம் நிகழாது.
இதற்கு இணையான தியாகம் தமிழ் கூறு நல்லுலகத்தில் நடந்தது. சேர மாமன்னன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் அரசவையில் வீற்றிருந்த காலத்தில் ஒரு சோதிடன் வந்து சேர்ந்தான். மன்னர் குடும்ப ஜாதகத்துப் படி அவர் மூத்த மகன் செங்குட்டுவன் மன்னன் ஆக முடியாது என்றும் “இளையவர்தான்” —இளங்கோ தான் — மன்னர் ஆவார் என்றும் சொல்லிவிட்டார். இளங்கோவின் உண்மைப் பெயர் கூட நமக்கு இன்று வரை தெரியாது. இளங்கோ என்றால் இளவரசர் என்று பொருள் (இதே போல மாணிக்கவாசகர் பெயரும் நமக்குத் தெரியாது. அவர் மாணிக்கம் போன்ற ரத்தினச் சொற்களை உதிர்த்ததால் வந்த காரணப் பெயரை மட்டுமே நாம் அறிவோம்).
உடனே இளவரசர் துறவறம் பூண்டார். இந்துக்கள் கணக்குப்படி ஒருவர் துறவறம் பூண்டால் அது மறு ஜன்மம் போல. துறவி என்பதால் அவர் அரசராக முடியாது என்பது மட்டுமல்ல;பின்னர் செங்குட்டுவன் மன்னரானார். ஆதி சங்கரரின் கால்களை முதலை பிடித்தபோது இந்த ஜன்மம் தனக்கு முடிந்துவிட்டதால் சந்யாசம் வாங்க சம்மதித்தால் முதலை காலை விட்டுவிடும் என்றார். அதாவது விதியை வெல்ல – சோதிட விதிகளை மீற – இப்படிச் சில சுருக்கு வழிகள் (ஷார்ட் கட்) உண்டு. இதே போல வித்யாரண்யர் அதிக செல்வம் வேண்டி தவம் இருந்தார். லெட்சுமிதேவி அவர் முன் தோன்றி, ‘டன்’ கனக்கில் தங்கம் தர முடியும் என்றும் ஆனால் இந்த ஜன்மத்தில் அதற்கான யோக ஜாதகம் அவரிடம் இல்லாததால் அடுத்த ஜன்மத்தில் தருவதாகவும் லெட்சுமிதேவி சொன்னார்.
வித்யரண்யரும் ஏமாந்து போய் ‘சரி’ என்று சொல்லிவிட்டார். பின்னர் ஆலோசித்துவிட்டு, இந்த ஜன்மத்திலேயே செல்வம் கிடைப்பதற்காக துறவறம் பூண்டார். லெட்சுமியும் தங்கம் கொடுத்தாள். ஆனால் மலை போலக் குவிந்த தங்கத்தை அவரால் தொடக்கூட முடியவில்லை. ஏனெனில் சந்யாசிகள் தங்கத்தைத் தொடக்கூடாது. அடடா, இவ்வளவு தங்கத்தையும் நான் என்ன செய்யப் போகிறேன் என்று தத்தளித்த போது, படை யெடுத்து வந்த வெளித்தேச முஸ்லீம்களின் ஆட்சியை அடியோடு ஒழித்து விஜய நகர சாம்ராஜயம் எழுவதற்கு அந்தப் பணத்தைக் கொடுத்தார். இதுபோலவே இளங்கோவும் சந்யாசியானவுடன் அவர் அண்ணன் செங்குட்டுவனுக்கு அரசு கட்டில் கிடைத்தது. இளங்கோ சந்யாசம் வாங்கியதால் செங்குட்டுவனுக்கு ஒரு தம்பி இருந்ததாகவே பொருள் இல்லை. அப்போது ஒரே மகன் என்ற பெயரில் செங்குட்டுவனுக்கு பதவி கிடைத்துவிடும்.
இளங்கோ அடிகள் படம்
தேவாபி செய்த தியாகம்
சந்தனுவின் அண்ணன் உலக வாழ்வைத் துறந்து கானகம் சென்றார். இதனால் சந்தனுவுக்கு ஹஸ்தினாபுர அரச பதவி கிடைத்தது என்ற செய்தி மஹாபாரத ஆதி பர்வத்தில் உள்ளது. ரிக்வேதத்திலும் (10-98). அந்த நாட்டில் நீண்ட காலத்துக்கு வறட்சி நிலவியபோது, தேவாபி ஒரு புரோகிதர் போல செயல்பட்டு யாக யக்ஞங்களை ஏற்பாடு செய்து மழை பெய்ய வைத்ததாகவும் சொல்லப்படுகிறது. யாஸ்கர் எழுதிய நிருக்தத்திலும் (2-10) தேவாபி கதை உள்ளது. தேவாபிக்கு தோல் நோய் இருந்ததால் அவர் ஆட்சிப் பொறுப்பை ஏற்கவில்லை என்று ‘’பிருஹத்தேவதா’’ கூறுகிறது.ஆனால் பல சந்தனுக்கள், பல தேவாபிகள் இருக்க வாய்ப்பு உண்டு. ஆகவே தீர ஆராய்ந்து எந்த தேவாபி என்று கண்டுபிடிக்க வேண்டும்.
இதுதவிர முறை தவறிய ஆட்சி காரணமாக துஸ்தாரிது பௌம்சாயன என்ற மன்னன் ஆட்சி துறந்ததாக சதபத பிராமணம் என்னும் நூல் சொல்லுகிறது (12-9-3-1).
கலிங்க- வங்க நாடுகளை ஆண்டு வந்த விஜயன், முறை தவறிய ஆட்சி செய்த்ததால், நாடு கடத்தப் பட்டதும் அவன் இலங்கையில் போய் இறங்கி புதிய ஆட்சியைத் துவக்கியதையும் நாம் அறிவோம். இது போல நஹுஷன், வேனன், நந்த வம்சத்து அரசர்கள் ஆகியோரும் பதவியிலிருந்து தூக்கி எறியப்பட்டனர். அவை தியாகம் என்னும் வரம்பிற்குள் வாரா.
ஆதி சங்கரர்
வித்யாரண்யருக்கு தங்க மழை