Written by London Swaminathan
Date: 6 NOVEMBER 2017
Time uploaded in London- 18-36
Post No. 4372
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.
Sacred Tree in Varanasi/ Benares
விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் நியக்ரோத, உதும்பர, அஸ்வத்த என்று மூன்று மரங்களின் பெயர்கள் விஷ்ணுவின் அம்சமாக வழிபடப்படுகின்றன. மஹாபாரதத்தில் உள்ளதும், ஸ்ஹஸ்ரநாமங்களில் பழையதுமான ஒரு துதியில் மூன்று மரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. மர வழிபாடு வேத காலத்திலேயே உண்டு. மேலும் இந்துக்கள் ஐரோப்பாவில் குடியேறி அவர்கள் பண்பாட்டைப் பரப்பியபோது விட்டு வந்த மிச்ச சொச்சங்களை இன்றும் ஐரோப்பாவில் காணலாம். இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் ஹாலிவுட் (ஹோலி உட் = புனித மரம்) ஹோலிஓக் (புனித ஓக் மரம்) இப்படி நூற்றுக் கணக்கான இடப் பெயர்கள் உண்டு.
2000 ஆண்டுகளுக்கு முன்னர் ஓவிட் (Ovid) என்னும் ரோமானியப் புலவர் மரங்களுக்கு காணிக்கை செலுத்துவது, நூல் கட்டுவது, கந்தைத் துணிகள் சாத்துவது பற்றிப் பாடியுள்ளார். இந்துக்கள் இயற்கையின் எல்லா றை அம்சங்களையும் வணங்கினர். மற்ற நாடுகளில் பழைய மர வழிபாடு இலக்கியத்திலும் மியூஸியங்களிலும் மட்டும் உள்ளது. ஆனால் இந்தியாவிலோ இமயம் முதல் குமரி வரை இன்றும் மர வழிபாடு இருக்கிறது.
தமிழ் நாட்டின் கோவில்களில் தல விருட்சங்கள் இருப்பது போல வட இந்தியாவில் புனித க்ஷேத்ரம் முழுவதும் புனித மரங்கள் இருக்கின்றன. வேத காலத்தில் பிப்பலாடன் (அரச மரம்) என்ற பெயரில் ரிஷி முனிவர்கள் வாழ்ந்தனர். பிராமணர்கள் அரச மரக் குச்சி (ஸமித்து) இல்லாமலோ தர்ப்பைப் புல் இல்லாமலோ வாழ முடியாது– அந்த அளவுக்கு அவர்கள் வாழ்க்கையில் குஸ ( தர்ப்பை) புல், அரச, பலாச மரங்கள் இணைந்து பிணைந்துள்ளன. ராமனின் புதல்வர்கள் இருவரில் ஒருவர் பெயருக்குக் காரணமே தர்ப்பைப் புல் (குஸ) தான்.
ஓரிரு வேதக் கதைகளைக் காண்போம்
பூமி, பிரஜாபதி ஆகியோரின் முடி (மயிர்) தான் தாவரங்கள் என்று சதபத பிராமணம் கூறும்; அதாவது ஒரு காலத்தில் தாவரங்களே இல்லாத பூமியில் தாவரங்கள் வளர்ந்ததை கதை போலச் சொல்லும் பகுதி இது.
அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உண்டு- என்ற முது மொழியின்படி பூமியில் உள்ள தாவரங்கள்= மனிதனின் உடலிலுள்ள முடி
பூமியிலுள்ள ஆறுகள்= மனிதனின் உடலிலுள்ள ரத்தக் குழாய்கள்
–இவ்வாறு பல விளக்கங்கள் உண்டு.
கதை போலச் சொல்லுவதால் அதன் பின்னுள்ள மறை பொருளை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
முக்கியமான விஷயம் என்ன வென்றால் தர்ப்பை (குஸ), தூர்வா (அருகம் புல்) உதும்பர, அஸ்வத்த, வட/ஆலம் மரங்கள் பற்றிய குறிப்புகள் வேத காலம் முதற்கொண்டே இருக்கின்றன என்பதே.
Kadamba Tree in Chir Ghat near Yamuna River
காட்டிலுள்ள தாவரங்களையும் மரத்திலுள்ள பழங்களையும் சாப்பிடலாம் என்று பிராமண நூல்கள் சொல்லும்.
பிதகோரஸ் என்ற கிரேக்க தத்துவ அறிஞர், அவரை (Beans) விதைகளை சாப்பிடக்கூடாது என்று தடுத்ததாகச் சொல்லுவர். இந்துக்களும் இப்படிப் பல தாவரங்களைத் தவிர்த்தனர். ரோமன் கத்தோலிக்க மதத்தினரும் , விரத காலத்தில் சில வகை உணவுகளை உண்ண மாட்டார்கள்.
உதும்பர என்பது அத்தி வகைத் தாவரம். இதில் செய்யப்பட்ட நாற் காலி அல்லது ஆசனத்தின் மீதமர்ந்து குளிப்பது பற்றி பல குறிப்புகள் பிராமண நூல்களில் உள.
உதும்பர மரம் பறிய கதை ஒன்று:–
தேவர்களும் அசுரர்களும் பிரம்மாவிடம் தோன்றினர். அவர்கள் அக்னியை முன் நிறுத்தி, அசுரர்களிடம் சென்றனர். அவர்கள் அக்னியை வெட்டி வீழ்த்தவே அது பூமியில் ‘க்ரிமுக’ மரம் ஆனது இதனால்தான் அது செந்நிற,,,,,தில் உளது.
பிரஜாபதி, முதல் யாகம் செய்தபோது அங்கிருந்து ‘வின்கங்கட’ மரம் வந்தது. அதன் மூலம் அவர் கைகளை சுத்தப்படுத்திக் கொண்டார்.
தேவர்களும் அசுரர்களும் பிரஜாபதியிடம் தோன்றினர். அவர்கள் ஒன்றாகச் செய ல்பட்ட காலத்தில் உதும்பர மரம் தவிர ஏனைய மரங்கள் எல்லாம் அசுரர் தரப்பில் நின்றன. ஆனால் தேவர்கள் வெற்றி பெற்றவுடன் எல்லா மரங்களும் தேவர் வசம் வந்தன. தோற்றுப்போன மரங்கள் எல்லாம் உதும்பர மரத்தில் நுழைந்து கொண்டன. இதனால்தான் உதும்பர மரம் பால் வடியும் மரமாகவும் ஏராளமான பழங்கள் உடைய (அத்திப் பழம்) தாகவும் உளது.
Picture from Lalgudi Veda
இப்படிப் பல கதைகள் சதபத, ஐதரேய பிராமனங்களில் இருக்கின்றன. அந்தக் காலத்திலேயே மரங்கள் பற்றி அக்கறை செலுத்தியதும், அதில் ஒரே இனத்தைச் சேர்ந்த (பைகஸ் FICUS குடும்பம்) மூன்று மரங்களை விஷ்ணு சஹஸ்ரநாமம் வேதம் முதலியன குறிப்பிடுவதும் தாவர இயல் அறிவைக் காட்டும்.
மறை பொருள் உடைய கதைகள் என்பதால் இதன் மூலம் வேறு ஏதேனும் சொல்ல முற்பட்டனரா என்பதும் ஆராய்ச்சிக்குரியது.
எல்லாவற்றையும் விட முக்கியமானது—
தேவர்களும் அசுரர்களும் பிரஜாபதி என்னும் பிரம்மாவிடம் தோன்றியதாக கி.மு 1000 ஆண்டைச் சேர்ந்த பிராமண நூல்கள் கூறுவதாகும். இவைகளை மறைத்துவிட்டு ஒரு தரப்பை பழங்குடியினர் அல்லது திராவிடர் என்று சித்தரிப்பது பிரித்தாளும் சூழ்ச்சியில் வல்ல வெளிநாட்டினரின் சதியாகும். சூத்திரர்களையும் கடவுளின் ஒரு பகுதி என்று ரிக் வேதத்தில் உள்ள புருஷ சூக்தம் சொல்லும். தேவர்கள், அசுரர்கள், ராக்ஷசர்கள் ஆகியோர் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் என்றும் வேதம் சொல்லும்— ஆனால் இவைகளை மறைத்து அவர்களை ஆதிப் பழங்குடி போல சித்தரிப்பது விஷமிகளின் வேலை. ஆக தாவரவியல் தவிர மானுடவியலும் சமூகவியலும் இந்த நூல்களில் காணக்கிடக்கின்றன என்ப தை அறிக.
—சுபம்—-