
WRITTEN BY S NAGARAJAN
Date: 13 November 2018
Time uploaded in London – 5-21 AM (GMT)
Post No. 5657
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
நவம்பர் 13, 2018 ஸ்கந்த ஷஷ்டி
தகைமாதொடு வருவன்!
ச.நாகராஜன்
நெஞ்சேயினி செஞ்சேவடி
நிலையாமெனப் பணிய
அஞ்சேலென அருள்நோக்குடன்
நெடுவேலொடு குமரன்
தஞ்சேவலங் கொடியோடொரு
ஜகமேவிய மயிலில்
தஞ்சேயிடைத் துயரோடிட
தகைமாதொடு வருவன்!
(தம் சேவல் அம் கொடியோடு ஒரு ஜகம் மேவிய மயிலில்
தம் சேயிடைத் துயர் ஓடிட தகை மாதொடு வருவன்)
குறிப்பு : – 7-11-1967 அன்று இயற்றியது.
***

சூழும் துன்பத் தளைபோக்கி
சுழலும் மனதைச் சீராக்கி
வாழும் படிக்கு வைத்திடுமோர்
வடிவேல் முருகன் பாதமவை
தாழுஞ் சென்னி தன்னோடும்
தளரா பக்தி யதனோடும்
பாழும் கலியை மறந்திட்டுப்
பணிவாய் நாளும் வணங்கிடுவோம்!
***

வாடி வதங்குதடி நெஞ்சம்!
ஏடி! கதிர்வேலன் என்னை யினியின்று
நாடி வருவானோ நல்வரம்தான் தருவானோ
வாடி வதங்குதடி நெஞ்சம்
சேடி! உளமெல்லாம் தேர்ந்திட்ட வேலனின்னும்
நாடி வரக்காணேன் உளங்குளிர வருவானோ
வாடி வதங்குதடி மஞ்சம்!
பாடி மகிழ்ந்ததையும் பக்கென்று மறந்தானோ
ஆடி யதுமறந்தான் அத்திறம்நீ கேட்டுவுடன்
வாடி, வதங்குதடி நெஞ்சம்!
****
அழகுமயில் மீதேறி மோகனமாய்
அழகுக்கும் அழகன் வந்தான்
அழகுமயில் அலங்காரம் அதிசயித்து
அழகுக்கும் அழகெ தென்றேன்
அழகுநகை சிந்தியபின் அழகனவன்
அழகுக்கும் அழகு கோடி
அழகு சிந்து புவனமென்றான்
–SUBHAM–