
Post No. 9660
Date uploaded in London – – –29 May 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
என்ன பேசுவது என்று திகைத்த ஸ்வாமி விவேகானந்தர்!
ச.நாகராஜன்

1
இன்று நாம் ராமகிருஷ்ண பரமஹம்ஸரைப் பற்றிய பல அரிய தகவல்களைப் பெறப் பெரிதும் காரணமாக இருப்பவர் ம (M) என்று அழைக்கப்படும் மஹேந்திர நாத் குப்தா தான்!
அவர் ஒருமுறை பரமஹம்ஸரைப் பற்றி இப்படிக் கூறினார் தன் சிஷ்யரான ஸ்வாமி நித்யாத்மநந்தாவிடம்:
தாகூர் (ராமகிருஷ்ண பரமஹம்ஸரை ‘ம’ இப்படித் தான் குறிப்பிடுவார்) உயிருடன் இருந்த சமயம் நடந்த நிகழ்ச்சி இது. ஒரு நாள் நான் பதூர் பகன் (Badur Bagan) செல்லும் வழியில், வித்யாசாகர் மஹாஷய் வீட்டின் முன்னால் மயங்கி விழுந்து விட்டேன். எனது நிலையைக் கண்ட அக்கம்பக்கத்தார் விரைந்து வந்து என்னைத் தூக்கி ஒரு வண்டியில் வைத்து வீட்டுக்கு அனுப்பினார்கள். இதைக் கேள்விப்பட்ட பரமஹம்ஸர் எனக்கு இந்த மருத்துவ பரிந்துரையை (Prescription) அருளினார்: “சில நாட்கள் நன்றாக உறங்கு. எனக்கு அருகில் வராதே. என்னிடம் வந்து எனது சொற்களைக் கேட்டால் இன்னும் உன் நிலையை அது மோசமாக்கி விடும். எவ்வளவு பாலை அருந்த முடியுமோ, எவ்வளவு ஜீரணமாகுமோ அந்த அளவுக்கு அருந்து.”
பரமஹம்ஸரின் சொற்கள் வலிமை வாய்ந்தவை என்பதை விளக்க அவர் தன் சிஷ்யரிடம் கூறிய வார்த்தைகள் இவை.
2
ஸ்வாமி விவேகானந்தருக்கும் பரமஹம்ஸரின் வார்த்தைகள் எவ்வளவு வலிமை வாய்ந்தவை என்பது தெரியும். சில சமயம் அடுத்து என்ன செய்வது என்று அவர் திகைத்தால் வழி காட்டுதல் பரமஹம்ஸரிடமிருந்து தானே வரும்.
ஸ்வாமிஜியின் சீடரான மன்மதநாத் கங்குலி ஒரு சம்பவத்தைக் குறிப்பிடுகிறார். ஒரு நாள் சம்பாஷணையின் போது ஸ்வாமிஜியே இந்தச் சம்பவத்தை அவரிடம் விவரித்தார்.
ஸ்வாமிஜி ஊர் உராகச் சென்று சொற்பொழிவுகள் ஆற்றி வந்த சமயம் அது. எல்லா விஷயங்களையும் அவர் பேசிக் கொண்டே வந்தார். ஒரு நாள் அவருக்கு மறுநாள் ஆற்ற வேண்டிய சொற்பொழிவில் எதைப் பற்றிப் பேசுவது என்று தெரியவில்லை. சொன்னதையே திருப்பிச் சொல்லவும் அவருக்குப் பிடிக்கவில்லை. இப்படி ஒரு அவலநிலைக்குத் தன்னை தள்ளி விட்டதற்காக அவர் குருநாதர் ராமகிருஷ்ணரை நொந்து கொண்டார். திடீரென்று அவர் தன்னுடன் பேசுவதை அவர் கேட்டார். கண்களை மூடிக் கொண்டார் ஸ்வாமிஜி. ராமகிருஷ்ணரின் திருவுருவம் தெரியவில்லை. ஆனால் குரல் மட்டும் நன்கு கேட்டது. ‘நீ இதைப் பற்றிப் பேசு; இதோ இது பற்றி…. கவலைப்படாதே’ என்றெல்லாம் அவர் நெடு நேரம் பேசிக் கொண்டிருந்தார். எனக்கு ஒரே ஆச்சரியம். எனக்கு மறுநாள் பேச வேண்டிய விஷயங்கள் அனைத்தும் கிடைத்து விட்டன. ஆனால் அதை விட இன்னொரு பெரிய ஆச்சரியம் எனக்குக் காத்திருந்தது. மறு நாள் காலை நான் தங்கியிருந்த அறைக்குப் பக்கத்து அறையில் இருந்தவர் என்னைச் சந்தித்தார்.
அவர், “நேற்று உங்களுடன் யார் பேசிக் கொண்டிருந்தார். அவர் பேசியது ஒன்றுமே எனக்குப் புரியவில்லை. ஏனெனில் அவர் எனக்குப் புரியாத வேறு ஏதோ ஒரு மொழியில் பேசிக் கொண்டிருந்தார்!” என்றார்.
என்னிடம் ராமகிருஷ்ணர் பேசிக் கொண்டிருந்தது வங்க மொழியில்! எனக்கு ஒரே ஆச்சரியம், அந்த மனிதரும் இந்தப் பேச்சை எப்படிக் கேட்டார் என்பது தான்!
இதைத் தொடர்ந்து ராமகிருஷ்ணரைப் பற்றி இன்னும் பல அரிய தகவல்களை அவர் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.
இப்படி தனது நினைவுகளை மன்மதநாத் கங்குலி பகிர்ந்து கொண்டதை, வேதாந்த கேசரி ஆங்கிலப் பத்திரிகை 1960ஆம் வருடம் ஜனவரி, ஏப்ரல் இதழ்களில் வெளியிட்டது.
ஆதாரம் : 1. M- The Apostle and the Evangelist by Swami NItyatmananda – Vol 1 P 10
2. Remniscences of Swami Vivekananda – Manmatha Nath Ganguli P-343
***

tags- ஸ்வாமி ,விவேகானந்தர் ,