மல்லிநாத சூரி–புகழ்பெற்ற சம்ஸ்க்ருத உரையாசிரியர் -1 (Post.10046)

WRITTEN BY B.KANNAN, DELHI

Post No. 10,046

Date uploaded in London – 2 September   2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

மல்லிநாத சூரி–புகழ்பெற்ற சம்ஸ்க்ருத உரையாசிரியர்  -1                                                                             by B.Kannan, Delhi                                

அன்பார்ந்த ஞானமயம் தமிழ் நெஞ்சங்களுக்கு தில்லியிலிருந்து கண்ணன் அநேக நமஸ்காரம்.

இன்றைக்கு நாம் பார்க்கப் போவது புகழ் பெற்றச் சம்ஸ்க்ருத உரையாசிரியர் (Literary Commentator) மல்லிநாத சூரி பற்றித் தான்…..

தமிழகத்தில் படித்தவர்களுக்கு ஒரு விஷயம் நினைவிருக்கலாம். பாடப் புத்தகம் கையில் இருக்கிறதோ, இல்லையோ பள்ளி, கல்லூரி மாணவர்கள் நிச்சயம் உரை நூல் (GUIDE) வைத்திருப்பது வழக்கம்–தமிழுக்குக் கோனார், ஆங்கிலத்துக்குப் பரசு ராமன் சாரின் மினர்வா, பானர்ஜியின் தலையணை போலிருக்கும் நோட்ஸ், சம்ஸ்க்ருதத்துக்கு சங்கரராம சாஸ்திரியாரின் குறிப்புரைப் புத்தகம் என்று நான் வைத்திருந்தது இன்னும் ஞாபகமிருக்கிறது. சம்ஸ்க்ருதக் காவியங்களை நன்றாகப் படித்து, அதில் பொதிந்துள்ள ஆழ்ந்தக் கருத்துக்களைப் புரிந்துகொள்ள வேண்டு மானால் மல்லிநாத சூரியின் வியாக்கியானங்களின் துணை அவசியம் வேண்டியி ருக்கும், திருக்குறளுக்குப் பரிமேலழகர் உரை போல. ஐந்து மகாகாவியங்களுக்கு அவர் எழுதிய விரிவுரைகள் மிகவும் புகழ்ப் பெற்றவை. காளிதாசனைக் கவிகுலகுரு என்றழைத்தால் மல்லிநாதா வியாகரணச் சக்கரவர்த்தி எனக் குறிப்பிடப் படுகிறார்.

அவர் ராசகோண்டா ராஜா சிங்கபூபாலா, விஜயநகரப் பேரரசின் அரசன் முதலாம் தேவராயன் காலத்தில்,(1350-1450 பொ.ஆ) வாழ்ந்ததாகக் கல்வெட்டுச் செய்திகள் கூறுகின்றன. தற்போதைய தெலங்கானா மாநிலம், மேதக் ஜில்லா, கோல்சாரம்  ( கொலிசேலமா, கொலிசேலா ) கிராமத்தில் ஒரு செல்வச் செழிப்பானக் குடும் பத்தில் பிறந்து வளர்ந்தவர். காகதீயர்களின் ஆட்சி முடிவுக்கு வந்தபின் அங்கிருந்த அறிஞர்கள் பலரும் ராசகோண்டாவுக்குப் புலம் பெயர்ந்தனர். இளம் வயதில் படிப்பில் சோடை போனவர், பின்னர் பாட்டனார் சதாவதானி மல்லிநாத சூரியின் மேற்பார்வையில் கல்வி-கேள்விகளில் சிறந்து விளங்கினார். ஏதும் முன்னேற் பாடின்றி உடனடியாகப் பாடல் இயற்றுவதில் புலமைப் பெற்றார். பல சாஸ்திரங்கள், வியாகர்ண மீமாம்சா, நியாயா ஆகியவற்றையும் கற்றுத் தேர்ந்தார், பாஷ்யம்

எழுதுவதைத் தவிர, ரகுவீர சரிதம், வைஸ்யவம்ச சுதாகரா மற்றும் உதர காவியம் ஆகியக் கவிதை நூல்களையும் எழுதியுள்ளார்.

ஒரு சமயம் விஜயநகர வைசியர் குலத்தவருக்கும், காஞ்சியிலிருந்து வந்த வியாபாரிகளுக்கும் இடையே ஏற்பட்டத் தகறாரைத் தீர்த்து வைக்க, மன்னன் இரண்டாம் தேவராயரின் கட்டளையின் பேரில்முயற்சித்து சுமுகமான முடிவை எட்டினார். தெலுங்கு -சம்ஸ்க்ருத மொழி கலந்து அவரால் இயற்றப்பட்ட கவிதை நூல் “வைஸ்யவம்ச சுதாகரா” இதனை விவரித்து, அக்குலத்தவரின் அருமைப், பெருமைகளைச் சொல்கிறது. மன்னன் சிங்கபூபாலன் அவருக்கு மகாமகோபாத்யாய விருது அளித்துக் கௌரவப்படுத்தியுள்ளான். தொடர்ந்து, மல்லிநாதாவின் மகன் குமாரசுவாமின் மகோபாத்யாய பட்டமும் பெற்றுள்ளார். பல தருணங்களில் அவரது விவரணம் மற்ற உரையாசிரியர்களான ஶ்ரீவல்லபாசாரியார், நாராயணப் பண்டிதர் ஆகியோரின் எண்ண ஓட்டத்திலிருந்து மாறுபட்டே இருந்துள்ளது.

இப்போது சில உதாரணங்களைப் பார்க்கலாம்…..

வாக்கியங்களில் பொருளுக்கேற்ப சொற்களிடையே உள்ள தொடர்பு-, இலக்கணப் பகுப்பாய்வு, அவற்றுக்கான அறநூல் சான்றுகள் மற்றும் தன் சீரானச் சிந்தனையால் காவியத்தில் பொதிந்துள்ள அர்த்தத்தைச் சுருங்கச் சொல்லி விளங்க வைத்துவிடு கிறார். தன் விரிவுரையின் வாதத்துக்கு வலு சேர்க்கும் விதமாகவும்,கவியின் கற் பனைவளத்தைச் சிலாகிக்கும் விதமாகவும் பல்வேறு இதிகாச, புராணச்  சம்பவங் களை எடுத்துக் காட்டுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இதோ ரகுவம்சத்தில் ஒரு காட்சி…..

அரசன் திலீபன் தன் மகனுக்கு “வேகமாகச் செல்பவன்” எனப் பொருள்படும்படி ‘ரகு’ என்று பெயரிடுகிறான். இதன் மூலவேர்ச் சொல் ‘லகு’ (‘செல்பவன்’ =லங்கதே கச்சதி லகுகு) என்பதாகும். பதஞ்சலியாரின் மகாபாஷ்யத்தைச் சுட்டிக் காட்டி மல்லிநாதா, வார்த்திகா எனும் இலக்கணத் துணை விதிப்படி உயிர்மெய்யெழுத்து ‘ல’,  “ர’ என உருமாறிவிடுகிறது (வலா=வரா, மூ, ப்லா=மூரா அலம்=அரம், லகு=ரகு) என்று வியாக்கியானம் செய்கிறார். அதாவது லகு என்பதே ரகு என்றாகிவிட்டது!

சிசுபாலவதம் 19-வது அத்.27-ம் செய்யுளைக் குறிப்பிடுகையில் மல்லிநாதா,”கவிமாகா மிகவும் சிக்கலானதும், அழகுற வெகு நேர்த்தியாக அமைக்கப்பட்டுதுமான மாலை மாற்று அணியைக் கையாண்டிருக்கிறார். இலக்கணச் சுத்தியை விரும்பும் அவர் இக்கட்டமைப்பைச் “ஸர்வதோபத்ரா” என அழைத்து வியப்புறுகிறார். அதாவது, வலம்-இடம், இடம்-வலம், மேலிருந்துக் கீழ், கீழிருந்து மேல் என்று எப்படிப் படித்தாலும் செய்யுள் வரிகள் மாறவே மாறாது! நாரிகேலபல சம்மிதம் வாச பாரவே:– பார்ப்பதற்கு கடினமான மட்டைத் தேங்காய் தான்; அதனுள்ளே இருப்பதோ  சுவையான இளநீர் மற்றும் தித்திக்கும் வழுக்கையும் தானே! என்கிறார் மல்லி. இதோ அந்தச் செய்யுள்:

सकारनानारकास-            ஸகாரநா நாரகாஸ

कायसाददसायका ।           காயஸாத தஸாயகா

रसाहवा वाहसार-            ரஸாஹவா வாஹஸார

नादवाददवादना ॥            நாதவாத தவாதநா    (19-27) இதன் பொருள்:    

போரில் வெற்றிப் பெற்ற சேனாவீரர்கள் எதிரிகளைச் சிறைப் பிடித்து, அவர்களது கொட்டம் மற்றும் அடையாளங்களை அடக்கி ஆளுகின்றனர். இவற்றினூடே எழும் யானையின் பிளிறல்,குதிரையின் கனைப்புச் சத்தங்கள் இன்னிசைக் கருவிகளி லிருந்து எழும் இனிய நாதத்தைக் கேட்டு மனமகிழ்ந்து ‘ஆஹா’ காரமிடுவது போல் இருந்ததாம்!                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                   

சிலசமயம் நம்மை மாற்றி யோசிக்கவும் வைத்து விடுகிறார். இதோ பட்டிகாவியத்தில் ஒரு ஸ்லோகம்—

दीपतुल्य: प्रबन्धोज्यम् सब्दलक्षणचक्षुषाम् |                                                                                         

हस्तामर्ष इवान्धानां भवेत्  व्याकर्णाद्रुते ||

தீபதுல்ய: பிரபந்தோஜ்யம் சப்தலக்ஷண சக்ஷுஷாம்|

ஹஸ்தாமர்ஷ இவாந்தானாம் பவேத் வ்யாகர்ணாத்துதே||

இந்த வீரகாவியம் நாம் கையில் வைத்திருக்கும் தீபம் போன்றது. அதன் ஒளியால் இலக்கணப் பிரயோகங்களை விளக்கும் இந்நூலை நன்றாகப் படித்துத் தெளிவு பெறலாம். இங்கு ‘हस्तामर्ष’ என்ற வார்த்தைக்குப் பதில், மல்லிநாதா ‘हस्तादर्श’ என்ற சொல்லை உபயோகிக்கிறார், உபமான, உபமேயத்துக்கு மேலும் மெருகூட்ட”பார்வை இழந்தவன் கையில் ஏந்தியிருக்கும் விளக்கினால் என்ன பயன்? என அப்பதத்தை வேறு கோணத்தில் எடுத்து வைக்கிறார்.

மேகதூதத்திலிருந்து மேகத்தின் ஒரு விள்ளல்:

मन्दं  मन्दं  नुदति  पवनस्चानुकूलो  यथा त्वां   

वामस्चायं  नदति  मधुरम् चातकस्ते सगन्ध:|

गर्भादान  क्षणपरिचयान्नूनमाबद्धमाला:

सेविष्यन्ते  नयनसुभगं खे भवन्तं बलाका:|| (1-9)     

மந்தம் மந்தம் நுததி பவனஸ்சானுகூலோ யதா த்வாம்

வாமஸ்சாயம் நததி மதுரம் சாதக ஸ்தே சகந்த:|

கர்பாதான ஷணபரிசயாந்நூநம் ஆபத்தமாலா:

ஸேவிஷ்யந்தே நயநசுபகம் கே பவந்தம் பலாகா:||

கார்மேகக் கூட்டம் மழைக் காலத்துக்குக் கட்டியம் கூறும் அறிகுறி. பெண் நாரைகள் தங்கள் துணையை நாடும் நேரம். ஆண் நாரை அதைப் பார்த்ததும் வந்துவிடுமே! ஆகவே மேகத்துக்கு நன்றி சொல்கிறதாம்,

‘பலாகா: என்றச் சொல் சிலேடையாகச் சொல்லப்பட்டுள்ளதாக மல்லிநாதா குறிப்பிடுகிறார்- பலாகங்கனா நயனசுபகம் என்கிறார் ஆடவரை மயக்கும் மேனாமினுக்கிகளின் கவர்ச்சிப் பார்வையைப் போல் பெட்டை நாரைகள், காற்றினால் தள்ளப்படும் மேகத்தைப் பார்த்துத் தங்கள் பிரகாசமிக்கக்

கண்களைச்  சிமிட்டி, நமுட்டுச் சிரிப்புச் சிந்தியதாம் என்றுக் கூடுதலாக அர்த்தம் சொல்லி விவரிப்பது முறுவலிக்க வைக்கிறது.

To be continued ……………………………………………………………..

Xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

 tags- மல்லிநாத சூரி, சம்ஸ்க்ருத உரையாசிரியர்

ரிக் வேதத்தில் என்ன அதிசயம் இருக்கிறது?- PART 2 (Post No.10,045)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,045

Date uploaded in London – 2 September   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

19. எண்களைக் குறிப்பிடும் ரிஷிகள் எனக்கு நூறு செல்வங்களை, 1000 செல்வங்களை அல்லது பசு மாடுகளை தா என்று வேண்டுகிறார்கள் . எப்போது பார்த்தாலும் இவர்களுக்கு டெசிமல் சிஸ்டம் DECIMAL SYSTEM  நினைப்புதானா ? நல்ல வேளை . இவர்கள் இதைக் கண்டுபிடித்திராவிடில், பசு மாடுகள் மற்றும், பாலின் பயனைக் கண்டுபிடித்திராவிடில் , உலக ஆரோக்கியமும் இராது; கம்ப்யூட்டர், ராக்கெட், விண்வெளிப் பயணமும் நடந்திராது ! வாழ்க  ரிக் வேத ரிஷி முனிவர்கள் .

20.எல்லா முனிவர்களும் நாங்கள் உனக்காக தர்ப்பைப் புல்லை வெட்டி பரப்பி இருக்கிறோம்; இதன் மீது அமர்க என்று பாடுகிறார்கள் ! என்ன அதிசயம்! இயற்கையோடு இயைந்த வாழ்வு என்பதோடு இன்றும் பிராமணர்களும் , ஏனைய  ஜாதியினரும் (ஆடி, தை அமாவாசைகளில் எல்லா ஜாதியினரும்)  தர்ப்பை மீது அமரும்படி இறந்தோரை அழைத்து நீரும் எள்ளும் வார்க்கிறார்களே ! இது இந்துக்கள் ஒரே சமுதாயம், நீண்ட கால பாரம்பர்யத்தைப் பின்பற்றும் சமுதாயம் என்பதைக் காட்டுகிறது.

21.’வ்ருத்ரன்’ என்ற அசுரனையும் ‘அஹி’  என்னும் பாம்பையும் இந்திரன் கொன்றதை பத்து மண்டலங்களில் உள்ள ரிஷிகளும் பாடுகின்றனர். ‘வ்ருத்ர’னும் ‘அஹி’ யும்  இயற்கைச்  சக்திகள் என்பதை வெள்ளைக்காரனும் புரிந்து கொண்டுள்ளான் .

22. என்ன அதிசயம் ! ‘பதி’ என்பதை ஆணுக்கும் ‘வதி’, ‘மதி’ என்பதை பெண்ணுக்கும் ரிக்  வேதம் முழுதும் காண முடிகிறது; இன்றும் என் நண்பர்கள் பெயரில் சரஸ் வதி, இந்து மதி , கண பதி, பார் வதி, வசு மதி, லட்சுமி பதி என்ற பெயர்கள் உள்ளன. கட்டாயம் சிந்து  சமவெளி முத்திரைகளில் (ஜாடி அல்லது மீன் வடிவ முத்திரை)இது இருக்க வேண்டும் !

23.வேதம் முழுதும் ‘கடவுளருக்கு  எல்லாம் தாய் அதிதி’ என்று ரிஷிகள் பாடுகின்றனர். அதிலும் பெண்ணுக்கே முதலிடம். இளா ILA , பாரதி BHARATI , சரஸ்வதி SARASVATI  (அலைமகள், கலைமகள், மலைமகள்) என்றும் போற்றுகின்றனர் . 20+++ பெண் கவிஞர்கள் , 30 பெண் தெய்வங்கள் முதலியோரை முனிவர்கள் பாடுகின்றனர் ; உலகில் பெண் தெய்வங்களை வழிபடும் பழைய மதம் இந்து மதம் என்பதற்கும் இன்றுவரை பெண்களை தெய்வமாகப் போற்றி வழிபடும் மதம் இந்துமதம் ஒன்றே  என்பதற்கும் வேதமே  சான்று

24.தானம், ஈகை முதலியவற்றைப் போற்றும் பாடல்களைப் பார்க்கையில் திருக்குறள், நாலடியார், பழமொழி நூல்கள் நினைவுக்கு வருகின்றன.

25.எப்போதும் வானத்தில் செல்லும் குதிரை, தேர் பற்றியே பாடுகின்றனர். அந்தக் காலத்தில் அவர்கள் விண்  கப்பலில் பூமிக்கு வந்தார்களோ! இதை கற்பனை என்று யாராவது கருதினால், உலகில் முதலில் விஞ்ஞான புனைக் கதைகளை SCIENCE FICTION எழுதியவர் இந்துக்கள்தான் என்பதையாவது ஒப்புக்கொள்ள வேண்டும். பிராமணர்கள் தினமும் மூன்று முறை செய்யும் சந்தியாவந்தனத்தில் ‘ததிக்ராவண்’ என்னும் பறக்கும் குதிரை பற்றிப் பாடுகின்றனர்/ மந்திரம் சொல்கின்றனர். 

26.அட அதிசயமே ! 100 இடங்களில் கடல் பற்றிப் பாடுவதோடு ‘திரை கடல் ஓடியும் திரவியம் தேடு’ என்கிறார்களே

27.இவர்கள் சிந்து – சரஸ்வதி சமவெளியில் மட்டும் இல்லாமல் ‘மலை’ ‘கடல்’ பற்றியெல்லாம் பாடுகின்றனர். சிந்து முதல் யமுனை வரையுள்ள பிரதேசத்தை ஒரே மந்திரத்தில் சொல்லுகின்றனர் . அப்படியானால் வட இந்தியா முழுதும் இவர்கள் வாழ்ந்திருக்க வேண்டும்!

28.ஏராளமான பறவைகள், மிருகங்கள் பற்றிப் பாடுகின்றனர். சிங்கம், யானை, ஒரே இடத்தில் புலி பற்றி எல்லாம் பாடுகின்றனர். நிறைய இடங்களில் ஓநாய்- ஆடு உவமை வருகிறது ; இயற்கையை ரசித்த மக்கள் போலும் .

29.போர், பகைவர், தாசன், தஸ்யூ சிம்யூ, பாணி , ராக்ஷஸ, கந்தர்வர், சித்தர் பற்றி எல்லாம் பாடுகின்றனர். இவர்களில் பலர் ‘மனிதர்களை அடித்து உண்ணுவோர்’ CANNIBALS  என்றும், இரவில் தாக்குவோர் என்றும், கடவுளை வணங்காதோர் (GODLESS) என்றும் சொல்லுகின்றனர் இப்படி சில கும்பல்கள் இன்றும் இருப்பதைக் காண்கிறோம்

30.குகையில் மறைத்துவைக்கப்பட்ட பசுக்கள் பற்றியும் அவற்றை இந்திரன் மீட்டது பற்றியும் நிறைய ரிஷிகள் பாடுகின்றனர் . இதற்கு மறைபொருள் உளது. புறநானூறு , மஹாபாரதம் ஆகியவற்றில் ‘ஆநிரை கவர்தல்’ வந்தாலும் இதை இரு பொருள்பட ரிஷிகள் உபயோகித்தனர் போலும். சாயனர் என்ற உரைகாரரும் பசு என்பதற்கு பல அர்த்தம் கற்பிக்கிறார்.

31. ஈற்றடிகள் ஒரே மாதிரியாக முடியும் நிறைய துதிகள் பத்து மண்டலங்களிலும் உள . இதே போல நாடகத்துக்கு முன்னோடியான உரையாடல் பாடல்களும் உள . இவை எல்லாம் இலக்கிய கலை வளர்ச்சியைக் காட்டுகின்றன.

32. இந்திரனை ‘’பாடல்களை விரும்புவோன் LOVER OF SONGS  என்று எல்லா ரிஷிகளும் பாடுகின்றனர். சாம கானம் பற்றிய குறிப்புகளும் வருகின்றன. ஏழு என்ற எண் சப்த ஸ்வரங்களைக் குறிப்பிடலாமென்ற தொனியிலும் மந்திரங்கள் உள்ளன. இந்திரனை நாட்டியக்காரன் dancer என்றும் போற்றுகின்றனர். கந்தர்வர் என்னும் பாடும் பாணர்கள் பற்றியும் மந்திரங்கள் உள்ளன. பாடலும் ஆடலும் போற்றப்பட்ட சமுதாயம் வேத கால சமுதாயம்

33. விவசாயம், பார்லி/யவம் , அரிசி, தானியம், அப்பம்,கஞ்சி போன்றவை வருவதால் விவசாய சமூகம் என்பது தெரிகிறது.அபால என்ற பெண் தனக்கு தோல் வியாதி நீங்கி முடி வளரவேண்டும், தன் தந்தைக்கு வழுக்கைத் தலையில் முடிவளரவேண்டும், நிலத்தில் பயிர்கள் வளரவேண்டும் என்று பாடுகிறார். இன்னொரு புலவர் அரிவாள், அறுவடை, நிறைய தானியம் பற்றிப் பாடுகிறார். வேதம் முழுதும் விவசாயம் உளது.

34.மிகவும் அதிசயம் ! ருதம்TRUTH  என்னும் இயற்கை விதியும் /ஒழுங்கும், சத்தியமும் முழுதும் போற்றப்படுகிறது.

35. கவசம் போன்ற பாடல்களின் ‘மூலம்’ ரிக்வேதம், மற்றும் அதர்வ வேதத்தில் உளது

36. உலகில் தினசரி வழிபாட்டில் யாப்பு இலக்கணத்தைப் பயன்படுத்தும் ஒரே சமுதாயம் இந்துக்களே. காயத்ரீ , பிருஹதி , 7 வகை யாப்புகள் குறித்து ரிக் வேத மந்திரங்கள் பாடுகின்றன. பிராமணர்கள் மூன்று வேளை செய்யும் சந்தியா வந்தனத்தில் 7 வகை யாப்புகளையும் சொல்லி வழிபடுகின்றனர். இலக்கணத்தை வழிபடும் சமுதாயம் என்றால் எந்த அளவுக்கு கல்வி அளவு இருக்க வேண்டும்! அதைப் பெண்களுக்கும் பெயராகச் சூட்டுவது அதை விட அருமை !!

To be continued…………………………

 tags – ரிக் வேத,  அதிசயம் , part 2

xxxxxxxxxxxxxxxxxxxxx

மத்வாசாரியர்! – 2 (Post No.10,044)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,044

Date uploaded in London – 2 September   2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

மத்வாசாரியர்! – 2

தனது குருநாதர் போதித்த சில கருத்துக்களை மறுத்து தனது கருத்துக்களை அவர் கூறியதோடு அவரது அருளாசி பெற்று ப்ரஹ்ம சூத்ரம், பகவத் கீதை, உபநிஷதங்கள் ஆகியவற்றிற்கு அற்புதமாக விரிவுரை கூறி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார் ஆனந்த தீர்த்தர்.

தான் நிர்ணயித்த வேதாந்தக் கொள்கைகளை நாடெங்கும் அவர் பரப்பலானார். அவருடன் அவரது குருநாதரும்  மற்றும் பல சீடர்களும் அவருடன் சென்றனர்.

முதன் முதலில் மங்களூருக்குத் தெற்கே 27 மைல் தொலைவில் உள்ள விஜயமங்கலம் என்ற நகருக்கு அவர் விஜயம் செய்தார். அங்கு ஒரு பெரும் அன்னக்குவியலை வியஞ்சனங்களுடன் தான் ஒருவராககே புசித்து விட்டார். இதனால் அவர் சாக்ஷாத் பீமனே என்று அனைவரும் முடிவு செய்தனர்.

காட்டு வழியே ஒரு சமயம் சீடர்களுடன் சென்ற போது அவர்கள் பசியால் வருந்த தம்மிடம் இருந்த சிறிது அன்னத்தை அக்ஷயமாக வளரச் செய்து அனைவரையும் அவர் திருப்திப்படுத்தினார்.

திருவனந்தபுரம் சென்ற அவர் அங்கிருந்த சிருங்கேரி பீடாதிபதி ஸ்ரீ  வித்யா சங்கரருடன் வாதம் செய்தார். வெற்றி தோல்வியின்றி வாதம் முடிந்தது. இருவரும் பிரிந்தனர்.

பின்னர் இராமேஸ்வரம் சென்று அங்கிருந்த அத்வைதிகளுடன் வாதம் செய்தார். அவர் வாதத்தைக் கண்டு வியந்த அவர்களுள் ஒருவர் அவருக்கு ‘அநுமானதீர்த்தர் என்ற சிறப்புப் பெயரைச் சூட்டினார்.

வாது செய்வதில் வல்லவர்களான வாதசிம்ஹன், புத்திசாகரன் ஆகிய இரு பௌத்தர்கள் அவரை வாதுக்கு அழைக்கவே அவர்களுடன் வாது செய்து அவர்களை வென்றார். பின்னர் கேரளம் சென்றார். திவ்ய க்ஷேத்திரங்களிம் தரிசனம் செய்த பின்னர் அவர் பள்ளி கொண்டான் என்ற கிராமத்தை அடைந்து அங்கு வாதப் போரில் வெற்றி பெற்றார்.

அடுத்து கல்வியில் சிறந்த காஞ்சி மாநகரை அடைந்த அவர் அங்கே  மகத்தான ஒரு உண்மையை அனைவரின் முன்னேயும் எடுத்து வைத்தார். வேத வாக்கியங்களுக்கு மூன்று விதமாகவும் மஹாபாரத ஸ்லோகங்களுக்கு பத்து விதமாகவும் விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் உள்ள நாமங்கள் ஒவ்வொன்றுக்கும்  நூறு விதமாகவும் அர்த்தங்கள் உண்டு என்று அவர் கூறியது அனைவரையும் வியக்க வைத்தது. ‘எங்கே, விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் வரும் முதல் நாமமான விஸ்வம் என்ற நாமத்திற்குப் பொருள் கூறுங்கள் என்று ஒருவர் கேட்க, அவர் வரிசையாக அர்த்தம் கூற ஆரம்பித்தார். அனைவரும் வியந்து போதும் போதும் என்று கூவி மகிழ்ந்தனர்.

மீண்டும் உடுப்பி வந்து சேர்ந்த அவர் மத்வாசாரியர் என்ற நாமத்துடன் பிரசித்தி பெற்றார். ஏராளமான அற்புதங்களை அவர் தொடர்ந்து ஆற்றி வந்தார்.

மைசூருக்குத் தெற்கே பலிஹொன்னூர் என்னும் தாலுக்காவில் கலாசம் என்னும் ஒரு கிராமத்தில் பிரம்மாண்டமான பாறை ஒன்று உண்டு. அதை யாராலும் தூக்க முடியாது. அதை தான் ஒருவராகவே எளிதாக மத்வர் தூக்கிக் காட்டியதோடு அதை பத்திரை என்னும் ஆற்றின் வலக்கரைக்கு கொண்டு சென்றார். அங்கு அம்புதீர்த்தம் என்னும் புனித தீர்த்தத்திற்கு எளிதாகச் செல்லும் வகையில் அதை வாராவதியாக வைத்தார். இந்த நிகழ்ச்சியைச் சொல்லும் வடமொழி சிலாசாஸனத்துடன் அந்தப் பாறை இன்றும் அங்கே இருப்பதை அனைவரும் காணலாம்.

    ஒரு சமயம் மஹராஷ்டிரத்தில் அவர் யாத்திரை சென்ற போது ஈஸ்வர தேவன் என்னும் ஒரு அரசனை அவர் சந்திக்க நேர்ந்தது. வழிப்போக்கர்கள் அனைவரையும் கட்டாயமாக குளம் வெட்டச் சொல்வது அவன் பழக்கம். மத்வரையும் அவன் குளம் வெட்டச் சொன்னான். எங்கே சற்று வெட்டிக் காட்டுங்கள் அதன் படியே நானும் வெட்டுகிறேன் என்றா மத்வர். அரசன் வெட்டிக் காண்பிப்பதற்காக மண்வெட்டியை எடுத்து வெட்டினான். அவ்வளவு தான், மாலை வரை வெட்டிக் கொண்டே இருந்தான். அவரது பெருமையை உணர்ந்த அவன் தன்னை மன்னிக்குமாறு வேண்டி அவரது சீடரானான்.

கொள்ளைக்கூட்டம் ஒன்று மத்வரின் குழுவை வழி மறிக்க, அவர்களே தங்களுக்குள் ஒருவரோடு ஒருவர் சண்டையிட்டு அழியுமாறு மத்வர் செய்தார். அடுத்து ஓரிடத்தில் நூறு கள்வர்களைத் தான் ஒருவராகவே எதிர் கொண்டு அவர்களை அடித்து விரட்டினார்.

ஹரித்வாரத்தில் சில நாட்கள் தங்கி இமயமலைக் காட்டின் உள்ளே சென்ற மத்வருக்கு வேத வியாஸர் தரிசனம் தந்தார். மீண்டும் உடுப்பி நோக்கித் திரும்பும் போது அவர் சாளுக்கிய நாட்டிற்கு வந்தார். சாளுக்கிய மன்னனின் அரசவையில் சோபன பட்டர் என்ற ஒரு பெரும் அறிஞர் இருந்தார். அவருடன் வாது புரிந்து தனது துவைதக் கொள்கையை ஸ்தாபித்தார் மத்வர். சோபன பட்டர் அவரது சீடராக ஆகவே அவருக்கு பத்மநாப தீர்த்தர் என்ற பெயரைச் சூட்டினார். அவரே மத்வருக்குப் பின்னர் ஆசாரிய பரம்பரையை ஏற்படுத்தினார்.

    மத்வருக்கு இஷ்ட தெய்வம் உடுப்பி கிருஷ்ணரே. அவருக்கு ஒரு கோயில் கட்ட அவர் விரும்பினார். ஒரு நாள் தனது ஆசிரமத்திற்கு அருகே உள்ள கடற்கரையில் அவர் அனுஷ்டானம் செய்து கொண்டிருந்த போது கடலில் ஒரு கப்பல் மூழ்கிக் கொண்டிருப்பதைக் கண்டார். அந்தக் கப்பலின் தலைவன் அவரை அணுகி நமஸ்கரித்து கப்பலைக் காப்பாற்றுமாறு வேண்டினான். மத்வர் காற்று அடிக்கும் திசையை மாற்றி கப்பலை மூழ்காமல் கரைக்கு வாச் செய்தார். கப்பலுக்குரியவன் கப்பலிலிருந்து எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூற மத்வர் கப்பலில் இருந்த கோபீ சந்தனக் கட்டைகளை மட்டும் எடுத்துக் கொண்டார்.  அந்தக் கட்டைகளுக்கு இடையே ஒரு ஸ்ரீ கிருஷ்ண விக்ரஹம் இருந்தது. அதனால் மத்வர் மிகுந்த மகிழ்ச்சியை அடைந்தார். அந்த விக்ரஹம் ருக்மிணி தேவியால் த்வாரகையில் பூஜிக்கப்பட்டு வந்த விக்ரஹம். த்வாரகை கடலில் மூழ்கிய போது மூழ்கி இருந்த அதுவே மத்வரின் கைக்கு இப்போது வந்து சேர்ந்திருந்தது. அதைத் தான் வாழ்நாள் முழுவதும் தன் கையினாலேயே அர்ச்சித்து வந்தார் மத்வர். தனக்குப் பின்னர் கிருஷ்ணருக்குப் பூஜை செய்பவர் யார் என ஆலோசித்த மத்வாசாரியர்  தனது சீடர்களில் விஷ்ணுதீர்த்தர் உள்ளிட்ட எட்டு பேரைத் தேர்ந்தெடுத்தார். ஒவ்வொருவரும் இரண்டிரண்டு ஆண்டுகள் அர்ச்சனை செய்யுமாறும் இந்த முறை தொடர்ந்து பின்பற்றப்பட வேண்டும் என்றும் அருளாணை பிறப்பித்தார். அதன் படியே இன்றளவும் அங்குள்ள எட்டு மடங்கள் ஒவ்வொன்றும் முறைப்படி இரண்டிரண்டு ஆண்டுகள் உடுப்பி கிருஷ்ணருக்கு அர்ச்சனை புரிந்து வருகின்றன.

மத்வர் ஸ்தாபித்த த்வைத சித்தாந்தம் அற்புதமான கொள்கைகளை முன் வைக்கிறது.

ஸ்ரீ மஹாவிஷ்ணுவே பர தெய்வம். அவரது புத்திரரான வாயுதேவனை அன்றி வேறொரு வகையால் மனிதருக்கு உய்வில்லை. மாத்வ மதத்தை அனுசரிக்கும் ஒவ்வொரு மாத்வரும் விஷ்ணுவின் பஞ்சாயுத முத்திரையைத் தங்கள் தேகங்களில் தரிக்க வேண்டும். ஒவ்வொருவரும் விஷ்ணுவின் ஏதேனுமொரு திரு நாமத்தைக் கொண்டிருக்க வேண்டும். விஷ்ணுவுடன் தொடர்புடைய பண்டிகைகளை அனுசரித்தல், பஜனைகளைச் செய்தல், உபந்யாசங்களைச் செய்தல் அல்லது கேட்டல் உள்ளிட்டவற்றைத் தொடர்ந்து செய்ய வேண்டும். பஜனையை விசேஷமாகச் செய்வோர் தாஸக் கூட்டத்தவர் ஆவர். சித்தாந்த பிரசாரத்தைச் செய்வோர் வியாஸ கூட்டத்தவரைச் சேர்ந்தவர் ஆவர்.

இப்படி எல்லா ஏற்பாடுகளையும் செய்து முடித்த மத்வாசாரியர் பத்மநாபதீர்த்தர், நரஹரி தீர்த்தர், மாதவ தீர்த்தர், அக்ஷோப்ய தீர்த்தர் ஆகிய நால்வரைத் தேர்ந்தெடுத்தார். பத்மநாபதீர்த்தருக்கு அபிஷேகம் செய்வித்துத் தன் ஸ்தானத்தில் அவரை அமர்த்தினார். ஜயதீர்த்தர் என்பவரை தனது நூல்களுக்கு உரை செய்யும்படி பணித்தார். உரை என்னும் டீகாவை செய்ததால் ஜெயதீர்த்தர் டீகாசாரியர் என்ற சிறப்புப் பெயரைப் பெற்றார்.  தனது அவதார நோக்கம் நிறைவேறியதால் திருப்தியுற்ற மத்வாசாரியார் பிங்கள நாம வருடத்தில் மாக சுத்த நவமியன்று சிஷ்யர்களுக்கு பாடம் சொல்லிக் கொண்டிருக்கும் போது திடீரென்று அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அந்தர்தானமாகி மறைந்தார். அவர் புவியில் வாழ்ந்த காலம் எழுபத்தொன்பது வருடம், ஆறு மாதம் 20 நாட்களாகும்.

ஸ்ரீ மத்வாசாரியார் 37 அபூர்வமான நூல்களை இயற்றியுள்ளார். அவற்றில் முக்கியமானவை பகவத் கீதா பாஷ்யம், ஸுத்ர பாஷ்யம், கீதா தாத்பர்யம், மஹாபாரத தாத்பர்ய நிர்ணயம், தசோபநிஷத் பாஷ்யம், பாகவத தாத்பர்ய நிர்ணயம், அனு பாஷ்யம், த்வாதச ஸ்தோத்ரம், தந்த்ர ஸாரம் ஆகியவையாகும். ருக் வேதத்தில் உள்ள முதல் 40 சூக்தங்களுக்கு அவர் பாஷ்யமும் செய்து அருளியுள்ளார். இவை அனைத்தும் நமக்கு இன்று கிடைத்துள்ள செல்வமாகும்.

ஸ்ரீ மத்வாசாரியரின் பொன்னடி போற்றி!

நமஸ்தே ப்ரானேஸ ப்ரணத விபவாயாவநிமகா

நம: ஸ்வாமிந் ராம ப்ரியதம ஹனூமன் குருகுண |

நமஸ்துப்யம் பீம ப்ரபலதம க்ருஷ்ணேஷ்ட பகவந்

நம: ஸ்ரீமந் மத்வ ப்ரதிஸ ஸுத்ருஸ நோ ஜய ஜய ||  

நன்றி வணக்கம்!

*** முற்றும்

INDEX

மத்வர் அவதாரம், உடுப்பி கிருஷ்ணரை ஸ்தாபித்தது, எட்டு சீடர்கள்,

திவ்ய லீலைகள், குருநாதர், பாரத திக்விஜயம், த்வைத சித்தாந்தம், 37 நூல்கள் இயற்றி அருளல், அந்தர்தானமாகுதல்

tags –  மத்வர், உடுப்பி ,  சீடர்கள், த்வைதம்

MY VISIT TO AN OLD BRITISH WAR SHIP (Post No.10043)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,043

Date uploaded in London – 1 September   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your

We went to Portsmouth port on 28, 29 and 30th of August 2021. This was a trip organised to show the sea, beach, port and warships to my grandchildren. Of ourse,  it is we who enjoy more than the children when we go out with them. For me it was the first trip to a warship. There were several ships in the harbour, but we chose the largest warship of Victorian period. It was huge with 40 cannons / guns on it. The length and weight of the ship will amaze anyone. Touching every part of the weaponry was a thrilling experience. Here are the interesting details in bullet points. The rest are in attached pictures.

Joined the British navy in 1861

The largest warship in the world at that time.

Name – The Warrior 

It was the pride of Queen Victoria Navy

Armoury – 40 cannons/ guns

Crew – 706 men

Length -418 feet

Speed – appr. 35 miles per hour.

It took one hour for us to go round the ship.

Three decks are there.

Now it is not in use.

Location – Portsmouth Harbour

See the pictures(taken by London Swaminathan):-

tags –  Portsmouth, Warrior, War ship, 40 cannons, My visit 

—subham—

ரிக் வேதத்தில் என்ன அதிசயம் இருக்கிறது?- PART 1 (Post No.10042)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,042

Date uploaded in London – 1 September   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com


ரிக் வேதத்தில் என்ன அதிசயம்  இருக்கிறது?- PART 1 (Post No.10043)

ரிக் வேதத்தை மேம்போக்காக வேகமாகப் படித்தாலும் நூற்றுக் கணக்கான அதிசய, அபூர்வ விஷயங்களைக் காண முடிகிறது. இதன் ஆழ்ந்த பொருளை அரவிந்த மகரிஷி போன்றோர் சொல்லுவதைப் படித்தால் இன்னும் அதிசயங்களைக் காணலாம். மந்திரங்களுக்கு அர்த்தம் பார்க்கக்கூடாது ; அதன் சப்தமே நன்மைகளைச் செய்யும் என்று சங்கராசார்யார் மடங்களின் தலைவர்கள் சொல்வதிலும் பொருள் உண்டு. இதனால்தான் பாரதி சொன்னான் – “நம்பினார் கெடுவதில்லை; இது நான்கு மறைத் தீர்ப்பு” என்று!

ஒரு பள்ளிக்கூட மாணவனிடம் ரிக் வேத புஸ்தகத்தைக் கையில் கொடுத்து  இதில் உள்ள 1000+++ துதிகளில் ஏதாவது 100 துதிகளை படித்து என்ன கண்டாய் என்று எழுது பார்க்கலாம் என்று சொன்னாலும் கீழ்க்கண்ட அதிசய விஷயங்களைக் காணத் தவறமாட்டான் ; இதோ ஸ்கூல் பாய் SCHOOL BOY LIST தரும் பட்டியல்:-

1. அட அதிசயமே ! கடவுளரை எல்லாம் ரிஷிகள் “நீ என் நண்பன், என்னுடைய DEAREST FRIEND டியரெஸ்ட் ப்ரண்ட்” என்று அழைக்கிறார்களே !

2. OH MY GOD ஓ  மை காட்! பக்கத்திலுள்ள ரிஷிகளை காம்ரேட்ஸ் , COMRADES தோழர்களே வாருங்கள் ; நாம் சேர்ந்து பாடுவோம் என்று அழைக்கிறார்களே!

3. இதுவரை நான் நடராஜர் ஒருவரைத்தான் உலகின் முதல் DANCER டான்சர் என்று எண்ணினேன். இங்கு குறைந்தது இரண்டு இடங்களில் இந்திரனை டான்ஸர் DANCER என்று அழைக்கிறார்களே ! ஊர்வசிக்கும் சிந்து சமவெளியில் காணப்படும் டான்சிங் DANCING WOMAN பெண்ணுக்கும் இந்திரன்தான் பரத நாட்டியம் கற்பித்தானோ! ரிக் வேதத்தை தமிழில் முழுதும் மொழி பெயர்த்த ஜம்புநாத அய்யர் அழகாக “கூத்தனே” என்று மொழிபெயர்த்து இருக்கிறாரே !

4. அட, பெரும்பாலான ரிஷிகள் தன்னுடைய பெயர்களையே துதிகளில் சொல்லி, நான் கூப்பிடுகிறேன் என்று சொல்கிறார்கள் . இதை பார்த்துதான் கர்நாடக , இந்துஸ்தானி பாடகர்கள் பாட்டிலேயே தங்கள் பெயர்களை முத்திரையாகச் சேர்த்தார்களோ ? ஜெயதேவர், புரந்தர தாசர் , மீராபாய், தியாகராஜர், போன்ற நூற்றுக் கணக்கான சாஹித்ய கர்த்தாக்கள் பாடலில் முத்திரை எப்படி வந்தது என்பது இப்போது புரிகிறது.

5. ‘திராவிட சிசு’ என்று சவுந்தர்ய லஹரியில் வருவது, திரு ஞான சம்பந்தரையல்ல , தன்னைத்தானே சங்கரர் அப்படி பாடிக்கொண்டார் என்று காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் சொல்லுவது பொருள்படைத்தது என்பதும் இப்போது தெரிகிறது

6. என்ன அற்புதம் ! ‘எனக்கு’ என்று பிரார்த்திக்காமல் எல்லா ரிஷிகளும் ‘எங்களுக்கு’, ‘நமக்கு’, ‘என் நண்பனுக்கு’ என்று கூட்டுப் பிரார்த்தனை செய்கிறார்கள்! ‘லோகா சமஸ்தா சுகினோ பவந்து’ என்பதும் ‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’ என்பதும் இதிலிருந்து வந்ததே !!

7. உறவு முறை எப்படி போற்றப்பட்டிருக்கிறது! தந்தையை அணைக்கும் மகன், தாயின் அரவணைப்பிலுள்ள குழந்தை, கன்றுக்குட்டியை நக்கிக் கொடுக்கும் தாய்ப்பசு என்ற உவமைகள் நூற்றுக் கணக்கில் வருவது வியப்பைத் தருகிறது.

8. அட, சங்கத் தமிழ் இலக்கியத்திலுள்ள ஆறு பருவ காலங்கள் ரிக் வேதத்திலிருந்து எடுத்ததுதான். ஏனெனில் உலகில் வேறு இடங்களில் 4 பருவ காலங்களே!

9. தாயாருக்குத்தான் எவ்வளவு மதிப்பு! பூமியையும் வானத்தையும் தாய் என்று ரிஷிகள் பாடுகின்றனர். நதிகளை சகோதரிகள் என்று பாடுகின்றனர் எந்த இடத்தில் பாடினாலும் முதலில் தாய், பின்னர் தந்தை பெயரைக் குறிப்பிடுகின்றனர். தாய்க்கு அவ்வளவு மதிப்பு!!!

10. ஓ மை காட்OH MY GOD  ! பிரம்மாண்டமான சரஸ்வதி நதியை நிறைய ரிஷிகள் பாடுகின்றனர். இப்போது அது இல்லையே ? ஆக 4000 ஆண்டுகளுக்கு முன்னர் ஒடிய சரஸ்வதி நதியைப் பல ரிஷிகள் போற்றுவதிலிருந்து இவர்கள் அனைவரும் மிகப் பழங்கால முனிவர்கள் என்பது தெரிகிறது

11. பல ரிஷிகள் பாவ மன்னிப்புப் பாடல்களைப் பாடியுள்ளனர். நான் நினைத்தேன்; ஆழ்வார்கள், நாயன்மார்கள் பட்டினத்தார், கந்த சஷ்டிக் கவசம் பாடிய தேவராய சுவாமிகள்தான் “எத்தனை குறைகள் எத்தனை செயினும் பொறுப்பது உன் கடன்” என்று பாடினார்கள் என்று.

12.இது என்ன வேடிக்கை! எல்லா ரிஷிகளும் எங்களுக்கு வீரமிகு (HEROIC CHILDREN) புதல்வர்கள் , நல்ல  வீடு, குதிரை,  தங்கம், செல்வம்,, ஏராளமான பசு மாடுகள்  வேண்டும் என்று பாடுகிறார்கள் !

13. அது சரி, இது என்ன ஆச்சர்யம் ! இரண்டு தங்க நிற குதிரை மீது வரும் இந்திரன் என்று பல நூறு பாடல்களில் வருகிறதே ; நாம் சிலைகளிலும் புராணங்களிலும் ஐராவதம் என்னும் யானை மீது வரும் இந்திரனைத் தானே அறிவோம். யாரவது எங்காவது குதிரை மீது வரும் இந்திரன் சிலை இருந்தால் தயவு செய்து எனக்கு எழுதுங்கள்.

14. அடக் கடவுளே ! ஆயிரக்கணக்கான இடங்களில் இந்திரன் உள்பட எல்லாக் கடவுளருக்கும் சோமரசம் கொடுக்கிறார்களே! இது என்ன கொடி ? பருந்து FALCON OR HAWK  கொண்டு வருகிறதே ! இதை யாராவது விளக்குங்களேன் ?

15. அந்த சோமரசம் மனதை சுத்தப்படுத்தும், வியாதிகளைப் போக்கும் என்றும் ரிஷிகள் பாடுகின்றனர். வெள்ளைக்காரர்களோ வேதத்தையும் இந்து மதத்தையும் இந்தியாவைத் தகர்க்கவும் வந்தவர்கள்; அவர்கள் இது போதை மருந்து (NARCOTIC DRUG)  என்று சொல்லுகிறார்களே!

16. எனக்கு ஒரு சந்தேகம்; போதை மருந்து சாப்பிடுபவன் எவனாவது அதி  காலையில் சூரிய உதயத்துக்கு முன்னால் எழுந்து குளித்துவிட்டு, பாதியை தீயில் ஆஹுதி செய்துவிட்டு குடிப்பானா ?அதுவும் மூன்று வேளை இப்படி சோம யாகம் செய்கிறார்களே. குடிப்பவனும் போதை மருந்து சாப்பிடுவோனும் இப்படியா செய்வார்கள் ? செய்கிறார்கள் ? உலகிலேயே மிகப்பெரிய அதிசயம் 4 வேதத்தில் உள்ள 20,000 வேத மந்திரங்களை பல ஆயிரம் ஆண்டுகளாக நினைவில் வைத்துக் காப்பாற்றி இருக்கிறார்களே. போதை மருந்து  சாப்பிடும் சமுதாயமாக இருந்தால் நினைவாற்றல் மறைவதோடு அந்த சமூகமே அழிந்து இருக்குமே.!

17. பல பாடல்களில் 100 ஆண்டுகள் வாழ வேண்டும் என்று பாடுகிறார்கள் . என்ன பெருந்தன்மை ! 100 க்குப் பிறகு எப்போதும் வேண்டாம் ; நூறுக்குக் குறைவாக எப்போதும் வேண்டாம் என்கின்றனர்! யார் அவர்களுக்கு 100 என்று எல்லை விதித்தார்கள்?

18. அது என்ன 99 அதிசயம்? பல முனிவர்களும் 99 நதிகள், 99 கோட்டைகள் , 3339 கடவுளர், 33 கடவுளர் என்று என்ன என்ன எண்களையோ பயன்படுத்துகின்றனர். இந்திரன் 300 எருமை சாப்பிட்டான் என்று வெள்ளைக்காரர்கள் மொழி பெயர்க்கின்றனர். ஓரிடத்தில் லட்சம்பேரைக் கொன்றான், 60,000 பேரை வென்றான் என்றெல்லாம் வருகிறதே !

To be continued……………………………………………………..

tags- ரிக் வேத அதிசயம் , PART 1 ,

ருக்மிணீ விஜயம் மகா காவியம்-2 (Post No10041)

WRITTEN BY B.KANNAN, DELHI

Post No. 10,041

Date uploaded in London – 1 September   2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ருக்மிணீஷ விஜய மகிழ்ச்சித் ததும்பும், மேன்மையான ஓர் இலக்கியம். மேலே கூறிய மகா காவியத்துக்கு உரிய எல்லாவித லட்சணங்களையும் கொண்டது.

இது பக்திரசத்தையே முன்நிறுத்தியுள்ளது. பாரதம் 10-வது காண்டத்தில் முதலிலிருந்து விவரிக்கப்பட்டுள்ளச் சம்பவங்களையே காவியத்தின் கதைக் கருவாக எடுத்துக் கொண்டுள்ளார்.அந்த உயர்ந்த, கம்பீரமான கிருஷ்ணாவதாரம் எனும் பேசும் பொருளும், அவனது தீராத விளையாட்டுச் செயல்களுமே தனிச் சிறப்பைக் கொடுத்து விட்டது. இதில் சுயக் கட்டுப்பாடு, தன்னடக்கம்,(தீரோதாத்த), உயர்ந்தக் குண,நலம் வாய்ந்த ஶ்ரீகிருஷ்ணப் பரமாத்மாவே நாயகன், நாயகி தேவி ருக்மிணி.

முதல் சர்கத்தில்,தேவேந்திரனின் தூதுவராக கிருஷ்ணனைக் காண வரும் நாரதர், சிசுபாலனுடன் போருக்குத் தயாராகுமாறு கோரிக்கை வைக்கிறார். மகான் வாதி ராஜர் தீமை விலகி நன்மைப் பயக்கும் பாற்கடல் கடையும் சம்பவத்தை மிக அழகாக, ரசனையுடன் ரூபக அணியில் விவரித்து ஒரு படி முன்னேறி விடுகிறார். மாகா, ரைவதகா மலைத் தொடரிலுள்ள ரிஷிகள் பதஞ்சலி யோக சாஸ்திரத்தை

அனுஷ்டிக்கிறார்கள் என விவரிக்கிறார். ஶ்ரீவாதிராஜர் கிருஷ்ணன் நிகழ்த்தும் கோவர்தனகிரி லீலைகளையும், அதன் சுற்றுப்புறச் சூழல் பயன்பாட்டையும் சொல்கிறார். பருவகால சிலேடையுடன் கூடிய குரு மாத்வாச்சாரியார் பற்றிய வர்ணனை (5-36-39) நம்மை ஈர்க்கிறது. இன்னும் இதுமாதிரி பல உண்டு.

மிகச் சிறந்தச் செய்யுட்களும், தத்துவ ஞானமும் இணைபிரியாதவை. ஒரு வெற்றிகரமானப் புலவருக்கு இவையிரண்டும் இன்றியமையாதவை ஆகும்.  அதைச் செவ்வனே செய்து முடித்திருக்கிறார் ஶ்ரீவாதிராஜர்.

துவைதம்-அத்துவைதம் இடையேயுள்ள வித்தியாசத்தை விளக்கியுள்ளார். காளிங்க நர்த்தன விவரணையில் கிருஷ்ணனின் பாதங்களை கருடனின் உள்ளங்கைகளாகப் பாவித்துள்ளார்(4-63). “தேவர்களின் அதிகாரி பிரம்மா, அவர் தேவி லக்ஷ்மிக்குக் கட்டுப்பட்டவர், நான் ஶ்ரீதேவியின் தலைவன்… தேவர்களின் படிநிலையைக் குறிப் பிடுகிறார். மேலும் சர்கம்3-ல் அசுரன் த்ருனாவ்ரதா ஆகாயத்திலிருந்து விழுவதில் அடங்கியுள்ள வேதாந்தக் கருத்தையும் (காரண காரியத்துக்குக் கிடைக்கக் கூடிய சரியான பலன்-cause & effect) விளக்குகிறார். அனைத்துவித உருவக அணிகளையும் கையாண்டிருக்கிறார். கிருஷ்ணனும், கோபிகையரும் உரையாடுவது லதானுப்ராசா அணியில் அமைந்துள்ளது.(4-32,33) அதாவது, ஒரு சொல்லை ‘ஏற்புடையது அல்ல’ என்றுப் பொருள்படும்படி குறிப்பிட்டு அடுத்து அதே சொல்லை அனுமதிக் கலாம் ,ஏற்கத்தக்கது’ என்றுப் பொருள்பட பேசுவதாகும். கோபிகையரைக் குழப்புவது மட்டுமின்றி நம்மையும் சிந்திக்க வைத்துவிடுகிறார். தாயார் யசோதை கஷ்டப்பட்டு கிருஷ்ணனைத் தூங்கவைக்கையில், ‘ஏன் தூங்க வேண்டும்? என்று அடம் பிடிப்பது முறுவலிக்க வைத்தாலும், அதற்கு யசோதை தரும் விளக்கத்தில் பொதிந்திருக்கும் தத்வார்த்தம் சிந்திக்க வைக்கிறது! (3-12) ராசக்க்ரீடை (அத் 8, 9), ருக்மிணி தேவியின் கேசாதி-பாத வர்ணனை (அத். 18) பிரமிக்க வைக்கின்றன. சித்திரக் கவியில், தாமரை இதழ் பந்தம் (17-70), சக்கர பந்தம் (19-36) வியக்க வைக்கின்றன.

இரு கவிகளுமே ஒரே எழுத்தைக் கொண்டுப் பாடல் புனைவதில் வல்லவர்கள். ஆனால் அதிலுள்ள வித்தியாசத்தைப் பாருங்கள்….

மாகா பாடியதோ ‘த’ எழுத்து வரிசையின் 3-வது மெய்யெழுத்து d=द வைக் கொண்டுச் சாதாரணமாக இயற்றப்பட்டதாகும்.

दाददो दुद्ददुद्दादी दाददो दूददीददोः ।            

தாததோ துத்துத்தாதி தாததோ தூததீததோ:

दुद्दादं दददे दुद्दे दादाददददोऽददः ॥18-114       

துத்தாதம் தததே துதே தாதாததததோ தத:

இதன் பொருள்-

“கேட்பதைக் கொடுப்பவனும், தீய எண்ணம் கொண்டவர்களுக்குக் கசையடி தண்டனை அளிப்பவனும்,உள்ளத்தைத் தூய்மைப் படுத்துபவனும், துஷ்டர்களைச் சம்ஹாரம் செய்பவனுமான பகவான் கிருஷ்ணன் எதிரியின் மீது ரணவலி உண் டாக்கும் தன் அம்பைச் செலுத்தினான்”

இதற்குச் சவால்விடும் தொனியில் மகான் வாதிராஜர் ‘த’ எழுத்து வரிசையின் 5-வது மெய்யெழுத்தான n=न வைக் கொண்டு ஒரு பன்முகத்தன்மை வாய்ந்தப் பாடலை

இயற்றியுள்ளார். அதில் உயிர் எழுத்துக்களின் கூட்டு வார்த்தைகளும் (அ+அ, அ+இ, அ+ஐ, அ+உ),பூர்வரூப சந்தி (ते + अत्र = तेऽत्र), விசர்க சந்தி ( तप: + वन =तपोवन) என்ற வெவ்வேறு அணிகள் அமைக்கப்பட்டுப் பாடலுக்கு ஏற்றம் தந்துள்ளன.         

नानाननाननुत् नूनम् न एन: अनन्ने अन्निनाम् नु नौ: ।

நாநாநநாநநுத் நூநம் ந ஏந: அநந்நே அந்நிநாம் நு நௌ: |

नानान्ननुन्नेन अनेन न ऊन: ना इन न नो ननु ॥ 8-3      

நாநாந்நநுந்நேந அநேந ந ஊந: நா இந ந நோ நநு || 

இதன் பொருள்……

ஹே, ஒப்பற்றத் தலைவனே! ஒருவனுக்கு உணவளிப்பவனுக்குப் பாபம் சேராது. இந்திரியச் சுகங்களில் மூழ்கியிருப்போரை விட்டு அவ்வளவு எளிதில் ஆசை அகலாது. அது விடுபடுவது ஆத்மானந்தத்தை அனுபவித்தப் பிறகுதான். களியாட் டத்தில் உழல்பவனைப் படகு எனும் யோகி கரை சேர்த்து,பிரம்மானந்தத்தை அடைய வழி காட்டுவான்!” என்பதே இதன் உட்பொருளாகும்.

இங்கே அருணகிரிநாதர்,  வில்லிப்புத்தூராருடன் வாதிட்ட போது பாடியச் சவால் பாட்டுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம் தானே! ஆஹா, எவ்வளவு அருமை!

திதத் தத்தத் தித்தத, திதிதாதை தாததுத் தித்தத்திதா       

திதத் தத்தத் தித்த திதிதித்த தேதுத்து த்திதத்தா              

திதத் தத்தத் தித்தத்தை தாததி தேதுதை தாததத்து

திதத் தத்தத் தித்தித்தி தீதீ திதி துதி தீ தொத்ததே!

அவரது உணர்ச்சியூட்டும் பாடல் வரிகள் நமக்குப் பாரதியாரையும், ஆங்கிலக் கவிஞன் பெர்சி ஷெல்லியையும் நினைவூட்டுகின்றன. இப்படிப்பட்ட ஓர் அமர காவியத்தை வெரும் 19 நாட்களில் தினம் ஒரு காண்டமாக இயற்றி, கெடுவுக்கு இரண்டு தினங்களுக்கு முன்பே வித்வத் சபையோரிடம் சமர்ப்பித்து விட்டார்.

அதைப் படித்தப் பண்டிதர்கள் ஆச்சரியமடைந்தனர். மகானின் இனிமையான எழுத்து நடை அவர்களைப் பரவசத்தில் ஆழ்த்தியது. எளிதில் புரியக் கூடியப் பாடல் வரிகள், இன்னிசை இழையோடும் சொற்கள், அசர வைக்கும் உபமானங்கள், ஊக்குவிக்கும் உருவகம், யமகம், சிலேடை,சித்திரக் கவிதைகள் அனைத்தும் அவர்கள் மனதைப் பெரிதும் கவர்ந்து விட்டன. ‘மாகாவின் தலைப்பு எதிர்மறை எண்ணங்களையே

தரும்,ஆனால் என்னுடையது கிருஷ்ணனின் வெற்றியைக் குறிக்கும் ஒரு மங்கலச் சொல், அது நேர்மறை எண்ணங்களையேத் தரவல்லது. தெய்வத்தைச் சிறுமைப் படுத்தி ஒரு லடகனை (வில்லன்) உயர்த்திக் காட்டுவது ஏற்புடையது ஆகாது!’ என்ற மகானின் வாக்கிலுள்ள நிதர்சனத்தை ஆமோதித்தனர். மகா காவியத் தகுதியையும் ஒருமனதாக அளித்தனர்.                                    

மகான் ஶ்ரீவாதிராஜருக்குக் கவிசமூகத்தின் திலகம் என்றப் பட்டத்தையும் கொடுத்துக் கௌரவித்தனர். அது மட்டுமின்றி, நன்கு அலங்கரிக்கப்பட்ட “கண்டாமாகா” யானை மீது ஶ்ரீருக்மிணீஷ விஜய காவியப் பிரதி

வைக்கப்பட்டு, புண்ணியபுரி முழுதும் வெகு கோலாகலத்துடன் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டுக் கௌரவிக்கப் பட்டது.

மகாவிஷ்ணுக்குரிய சாதுர்மாஸ்ய விரதக்காலத்தில் அவரது கிருஷ்ணாவதாரத்தைப் போற்றி இயற்றப்பட்ட ஶ்ரீருக்மிணீஷ விஜய நூல் ஆறாவது மகாகாவியமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது என்ன பொருத்தம்!                                                                                                                                                                                                                                                                             

இரு காவியங்களுக்கிடையே என்ன ஒற்றுமை, வேற்றுமை இருந்தாலும் முடிவில் வெற்றிவாகைச் சூடியது என்னவோ, சம்ஸ்க்ருதம் தான்!

ஜயது, ஜயது சம்ஸ்க்ருதம்!

நன்றி, வணக்கம். ஜெய்ஹிந்த்.      

——————————————————————————————————-

tags- ஶ்ரீ  , ருக்மிணீஷ விஜய நூல்-2, வாதிராஜர், B Kannan

மத்வாசாரியர்! – 1 (PostNo.10040)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,040

Date uploaded in London – 1 September   2021          

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

வாரந்தோறும் திங்கள் கிழமை இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியில் 30-8-2021 அன்று ச.நாகராஜன் ஆற்றிய உரை.

எந்த நேரமும் ஞானமயம் நிகழ்ச்சிகளை யூ டியூபிலும் facebook.com/gnanamayam என்ற இணைய வழித் தொடுப்பிலும் காணலாம். (இந்த உரை இரு பகுதிகளாக வெளியிடப்படுகிறது.)

மத்வாசாரியர்! – 1

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே சந்தானம் நாகராஜன் வணக்கம், நமஸ்காரம்.

அனைவருக்கும் ஜன்மாஷ்டமி நல் வாழ்த்துக்கள். உடுப்பி ஸ்ரீ கிருஷ்ணரையே இஷ்ட தெய்வமாகக் கொண்டு அவரை அங்கு ஸ்தாபித்து வழிபட்டு, அனைவரும் வழிபட வகை செய்த ஸ்ரீ மத்வாசாரியர் திருவடி போற்றுவோம்.

ஹிந்து தர்மத்தில் ஆசார்ய தேவோ பவ என்று ஸ்மிருதியில் கூறப்பட்டிருக்கிறது. அத்வைதத்தை ஸ்தாபிக்க ஆதி சங்கரர் அவதரித்தார். அதே போல த்வைதத்தை ஸ்தாபிக்க ஸ்ரீ மத்வாசாரியர் அவதரித்தார். பாரதத்தில் தென் கன்னட தேசத்தில் உடுப்பி தலத்திற்கு அருகில் உள்ள பாஜக க்ஷேத்ரத்தில்  கி.பி.1199ஆம் ஆண்டு மத்வாசாரியர் அவதரித்தார். த்ரேதா  யுகத்தில் ஆஞ்சநேயராகவும் துவாபர யுகத்தில் பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான பீமராகவும் அவதரித்த இவர் கலியுகத்தில் மத்வராக அவதரித்துள்ளார். இந்த மூன்றுமே வாயு தேவனின் அவதாரங்களே!

இவர் ஸ்வஸ்தி ஸ்ரீ விளம்ம்பி வருடம்  ஆடி மாதம் கிருஷ்ணபக்ஷ சதுர்த்தியன்று அந்தண குலத்தில் மத்யகேஹர் – வேதவதி ஆகிய தம்பதியருக்கு திருக்குமாரராக அவதரித்தார். இவருக்கு பெற்றோர் வாசுதேவன் என்று பெயர் சூட்டினர்.

இவர் தெய்வீகக் குழந்தை என்பதை நிர்ணயம் செய்யும் விதத்தில் இவரது குழந்தைப் பருவத்திலேயே சில திவ்ய லீலைகள் ஏற்பட்டன. இவர் சுமார் இரண்டு வயதுக் குழந்தையாக இருக்கும் போது இவரது தாயார் ஏதோ வேலையாக வெளியில் சென்றிருந்தார். அந்தச் சமயம் குழந்தை அழ ஆரம்பித்தது. இவரது தமக்கை அடுப்பில் ஒரு அண்டாவில் வேக  வைத்துக் கொண்டிருந்த முப்பது படி கொள்ளிலிருந்து ஒரு சிறிது எடுத்து இவரது வாயில் ஊட்டி விட்டுச் சென்றாள். சிறிது நேரத்தில் அவள் திரும்பி வந்து பார்க்கும் போது குழந்தை 30 படி கொள்ளையும் தின்றிருந்தது. இது கண்டு அனைவரும் வியந்தனர்.

இன்னொரு சமயம் சிறுவராக இவர் இருந்த போது வீட்டுத் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அவரது தந்தை ஒரு வியாபாரியிடம் எருதுக்காக வாங்கிய கடனைத் திருப்பிக் கேட்டு அந்த வியாபாரி அங்கு வந்தார். தான் கொடுத்த பணத்தை தனது தந்தையாரிடம் அவர் வலியுறுத்திக் கேட்பதைப் பார்த்த வாசுதேவன் தனது புளியங்கொட்டைகளில் சிலவற்றைத் அவரிடம் தந்து இன்று முதல் உங்களுக்குச் செல்வம் பெருகும் என்றார். அதே போலவே அந்த வியாபாரிக்குச் செல்வம் அன்றிலிருந்து கொழிக்க ஆரம்பித்தது. பின்னர் ஒரு நாள், வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்க அவரது தந்தை சென்ற போது அந்த வியாபாரி தனது செல்வ நிலையைக் காண்பித்து பணத்தை வாங்க மறுத்து விட்டார். இப்படிப் பல லீலைகள் தொடர்ந்து நடந்தன.

மகனுக்கு உபநயன வயது வரவே தந்தையார் உபநயனத்தைச் செய்வித்து ஆசாரியர் ஒருவரிடம் அவரை ஒப்படைத்தார்.  ஒரு நாள் குருதேவர் சொல்லி வந்ததை இவர் கவனிக்காமல் இருந்ததைக் கவனித்த அவர், “நான் சொன்னதைச் சொல் என்றார். வாசுதேவரோ குரு சொன்ன வேத வாக்கியங்களை அப்படியே திருப்பிச் சொன்னார்.

ஒரு சமயம் பெரிய பாம்பு ஒன்று அவரைக் கடித்து விட்டது. அந்தப் பாம்பின் தலையை தன் கால் கட்டை விரலாலேயே நசுக்கி விட்டு எதுவும் நடக்காதது போல அவர் இருந்தார்.

அவரது நண்பரான சக மாணவன் ஒருவனுக்குத் தீராத தலைவலி ஏற்பட அவன் துடித்தான். உடனே அவர் அவன் காதில் ஊதினார். உடனடியாகத் தலைவலி நின்று விட்டது. கல்வி கற்கும் நாட்களில் அவர் செய்த சாகஸங்கள் பல. ஓடுவது, குதிப்பது, மல்யுத்தம் செய்வது உள்ளிட்டவற்றில் அவர் அசாத்திய திறமையைக் காட்டியதால் அவரை பீமன் என அனைவரும் அழைக்கலாயினர்.

காலப்போக்கில் ஒரு நாள் அச்யுதப்பிரக்ஷர் என்னும் ஒரு துறவி அவர் இருந்த இடத்திற்கு வந்தார். அவரை தரிசித்த வாசுதேவர் தனது தந்தையாரிடம் இவரிடம் நான் முறைப்படி சந்யாச தீக்ஷை பெற விரும்புகிறேன் என்றார்.

இதனால் அதிர்ச்சியுற்ற மத்யகேஹர், “நாங்கள் இறந்தால் எங்கள் அந்திமக் கிரியைகளை யார் செய்வார், உன் முடிவை மாற்றிக் கொள் என்றார்.

உடனே வாசுதேவர், “தந்தையே! இன்றையிலிருந்து 314நாட்கள் கழித்து உங்களுக்கு சிம்ம லக்னத்தில் ஒரு மகன் பிறப்பான். அவன் உங்களை நன்கு ரக்ஷிப்பான். அவன் பிறக்கும் வரை நான் துறவறம் ஏற்கவில்லை என்றார்.

அதன்படியே 315ஆம் நாளில் மத்யகேஹரின் மனைவிக்கு சிம்ம லக்னத்தில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது.

வேத அத்யயனம் முடிந்த பின்னர் தர்க்கம் வியாகாரணம் உள்ளிட்ட அனைத்து கலைகளிலும் தேர்ச்சி பெற்றார் வாசுதேவர். உலக வாழ்க்கையில் சற்றும் பற்றில்லாத நிலையில் உடுப்பி தலத்தில் ஸ்ரீ அனந்தேஸ்வரர் ஆலயத்திற்கு அருகில் உள்ள மடத்தில் ஸ்ரீ அச்யுதப்பிரக்ஷர் இருப்பதை அறிந்தார் அவர். அவரை அணுகி தனக்கு சந்யாச தீக்ஷை அளிக்குமாறு வேண்டினார். அவரும் இவரது ஆர்வத்தையும் தகுதியையும் பார்த்து அவருக்கு அதிக நிர்பந்தம் இல்லாத துறவற தீக்ஷையைக் கொடுத்து ‘பூர்ண ப்ரஜ்ஞர் என்னும் சந்யாச நாமத்தை அளித்தார். அன்று முதல் அவர் பூர்ண ப்ரஜ்ஞர் என அழைக்கப்படலானார்.

துறவறம் ஏற்ற 41ஆம் நாள் கங்கா ஸ்நானம் செய்வதாக அவர் சங்கல்பம் செய்தார். ஆனால் வெகு தொலைவில் உள்ள கங்கா நதிக்கு எப்படிச் செல்வது என்று யோசித்த அவர் ஸ்ரீ அனந்தேஸ்வரரைப் பிரார்த்தித்தார். உடனே கங்கா நதி உடுப்பியில் உள்ள குளத்தில் பிரவேசித்தது. அதில் ஸ்நானம் செய்து தன் சங்கல்பத்தை நிறைவேற்றினார் பூர்ண ப்ரஜ்ஞர். அன்று முதல் அந்தத் தடாகம் ‘மத்வஸரோவரம் என்று பெயர் பெற்று புண்ய தீர்த்தமானது.

அச்யுதப்பிரக்ஷர் அந்தக் காலத்தில் நடைமுறையில் இருந்த அத்வைத கோட்பாடுகளையே தம் சீடர்களுக்குப் போதித்து வந்தார். குருநாதர் கூறியவற்றை நன்கு கிரஹித்த பூர்ண ப்ரஜ்ஞர் அவ்வப்பொழுது தன் சூக்ஷ்ம புத்தியைக் காண்பிக்கவே வியந்து போன குருநாதர் அவர் மீது விசேஷ அன்பு பாராட்டியதோடு அவருக்கு பரமஹம்ஸ பத தீக்ஷையை அளித்தார். ஆனந்த தீர்த்தர் என்ற நாமத்தையும் சூட்டினார்.

                      **                 தொடரும்

tags- மத்வாசாரியர்! – 1