ஸ்ரீ ராமர் அழுதார்; அரை மணி நேரம் மரம் போல நின்றார்! (Post No.11,725)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,725

Date uploaded in London – –  29 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

எளிய சம்ஸ்க்ருத மொழியில் உலகத்தின் முதல்  காவியத்தை எழுதியவர் வால்மீகி முனிவர். அவருடைய அற்புதமான, உணர்ச்சிப் பரவசமூட்டும் உன்னத காவியத்ததைக் கண்ட  ஒரு சங்கத் தமிழ்ப் புலவர் தன்னுடைய பெரையும் வான்மீகி என்று வைத்துக்கொண்டு தமிழ்க்  கவிதை புனைந்தார் . அது புறநானூற்றில் உள்ளது . நிற்க. 

 வால்மீகி முனிவர் பெரிய மகரிஷி. அவர் வாயிலிருந்து உண்மைகள் மட்டுமே வரும்; இத்தகைய அற்புதமான காட்சி கிஷ்கிந்தா காண்டத்தில் வருகிறது . வாலியை ராமர்,  மரத்தின் பின்னாலிருந்து நின்றுகொண்டு வில் அம்பினால் அடித்துக் கொன்றார். இதை வால்மீகி மறைக்கவில்லை. உள்ளதை உள்ளபடியே எழுதினார். இதைக் கண்டு நகைத்து  வாலி எழுப்பிய வினாக்களையும் ராமரது மறு மொழியையும் நமக்கு அப்படியே தந்தார் . எதையும் மறைக்கவில்லை. அப்பொழுது வாலியின் மனைவி தேம்பித் தேம்பி அழுதார். அடுத்தாற்போல சுக்ரீவன் அழுது புலம்பினார் அதைக் கண்டு ராமனும் அழுதார். அது மட்டுமல்ல ஒரு முகூர்த்த காலத்துக்கு பிரமை பிடித்தவர் போல நின்றார்.

நமக்கு ஏதேனும் அதிர்ச்சிதரும் செய்தி கிடைத்தால் எனக்கு அரை மணி நேரத்துக்கு ஒன்றுமே ஓடவில்லை அப்படியே நின்றேன் என்று சொல்லுவோம். இதை முதலில் சொன்னவர்  வால்மீகி முனிவர் ; ஒரு முஹூர்த்தம் என்பது 24 நிமிடம் ; இதோ  வால்மீகியின் சொற்கள் :

ததோ நிபதிதாம் தாராம் ச்யுதாம் தாராமிவாம்பராத்

சனை ராச்வா ஸயாமாஸ ஹனுமான் ஹரியூதபஹ

பின்னர் வானர கூட்டத்தலைவனான ஹனுமான் , வானத்திலிருந்து விழுந்த விண் மீன்போல தரையில் வீழ்ந்து கிடந்த தாரைக்கு மெள்ள ஆறுதல் வார்த்தை கூறினார் . சம்ஸ்க்ருத மொழி தெரிந்தவர்கள் கவியின் அழகையும் ரசிக்கலாம் ; வானத்திலிருந்து விழுந்த தாரா = நட்சத்திரம் ; தமிழில் தாரகை என்று சொல்லுவோம்; கீழே விழுந்த பெண் தாரா = வாலியின் மனைவி ; சோகமான கட்டத்திலும் முனிவர் தன் கவிப்புலமையைக் காட்ட சிலேடையைப் பயன்படுத்துகிறார் .

அடுத்தாற்போல சுக்ரீவன் அழுது புலம்பினார் இதையல்லாம் பார்த்த ராமபிரான் என்ன செய்தார் ?

இத்யேவ மார்த்தஸ்ய ரகுப் ரவீரஹ ச்ருத்வா வாச்சோ வால் யநுஜஸ்ய தஸ்ய

சஞ்சாத பாஷ்ப ஹ பரவீர ஹந்தா ராமோ முஹூர்த்தம் விமனா பபூவ

இவ்வண்ணமே வருந்திப் புலம்பும் அந்த சுக்ரீவன் உரைகளைக் கேட்டு , எதிரிகளை அழிக்கவல்ல ரகுகுல சிரேஷ்டரான ராமர் , கண்ணீர் பெருக்கியவராக ஒரு முஹூர்த்த காலத்துக்கு ஒன்றுமே தோன்றாதவராகக் கலங்கி நின்றார்.

xxxxx

 தாரையின் புகழ்மாலை

ஸா தம் ஸமா ஸா த்ய விசுத்த ஸத்வா சோகேன ஸம்ப் ராந்த சரீர பாவா

மனஸ்வினீ வாக்யமுவாச தாரா ராமம்  ரணோத் கர்ஷண லப்த லக்ஷம்

அந்த தாரை வருத்தத்தால் உடலும் உள்ளமும் நிலை கொள்ளாதவளாய் , யுத்தத்தில் நினைத்ததை நடத்திக்கொள்ளும் பெருமையுடைய ஸ்ரீ ராமரை அணுகி கோப தாபம் நீங்கப் பெற்ற சுத்த மனத்தினளாய் இவ் வார்த்தையைக் கூறினாள் ,

த்வமப்ரமேயச்ச துராசதச்ச ஜிதேந்த்ரிய ச்சோத்தம தார்மிகச்ச

அக்ஷய்ய கீர்த்திகிச்ச விசக்ஷணநச்ச க்ஷிதி க்ஷமாவான் க்ஷத ஜோபமாக்ஷஹ

தாரா சொல்கிறாள் :

நீ அளவிடற்கரிய  இயலாதவர் ; யாராலும் எதிர்க்க முடியாதவர், புலன்களை அடக்கியவர், தர்ம நெறியில் நிற்பவர்களின் சிறந்தவர், அழிவற்ற புகழை உடையவர், எல்லாம் செவ்வனே அறிந்தவர், பூமி போல பொறுமை உடையவர், சிவந்த திருக்கண்களை உடையவர் .

“க்ஷ” என்ற எழுத்தைக்கொண்டு பல சொற்களை வால்மீகி முனிவர் உண்டாக்கியதோடு, பூமி போல பொறுமை என்று சொல்லுவதைக் கவனிக்க வேண்டும்..

சங்க இலக்கியத்திலும் திருக்குறளிலும் இந்த உவமையைக் காண் கிறோம்.(அகழ்வாரைத் தாங்கும் நிலம்போல ……குறள் )

பின்னர் அவர்களுடைய துக்கத்தை ராமனும் பகிர்ந்துகொண்டார் என்று சொல்லி இக்காட்சியை முடிக்கிறார் வால்மீகி .பின்னர் வாலியை தகனம் செய்கிறார் சுக்ரீவன் .

ராவணன், வாலி போன்றோர் தகனம் செய்யப்பட்டது அவர்கள்  இந்து சமய நெறிகளைக் கடைப்பிடித்தவர்கள் என்பதைக் காட்டுகிறது.

தாரா பயன்படுத்தும் அப்ரமேய (அள விடற்கரியவர்), ஜிதேந்த்ரிய  (புலன்களை வென்றவர்), உத்தம  என்பனவெல்லாம் விஷ்ணு ஸஹஸ்ர நாமத்திலும் வருகிறது . 

–subham—

tags- வாலி, தாரா, ராமர், அழுதார், சுக்ரீவன் 

Leave a comment

Leave a comment