
Brahma on temple wall
Post No. 11,871
Date uploaded in London – – 5 APRIL 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
சேலையூர் சென்றால் ஒரே கல்லில் 20 மாங்காய்களை / மாம் பழங்களை அடிக்கலாம். அதாவது எல்லா இஷ்ட தெய்வங்களையும் கும்பிட்ட பலன் கிடைக்கும் இதில் சைவ, வைணவ, சாக்த தெய்வங்கள் மட்டுமல்ல. அதர்மத்தை அழிக்கும் , எதிரிகளை ஒழிக்கும் , பில்லி, சூனிய, செய்வினைகளை அகற்றும் உக்கிர தெய்வங்களும் அடக்கம். அதுமட்டுமல்ல இந்துக்கள் வழிபடும் பசுவையும் வணங்கலாம். மேலும் அன்னதானமும் செய்யலாம்; தினசரி யாகத்திலும் பங்கு கொள்ளலாம்
சில ஆண்டுகளுக்கு முன்னர் சேலையூர் ஸ்கந்தாஸ்ரமம் கோவிலுக்குச் சென்றபோது, பெண்கள் பூஜை செய்து கொண்டிருந்ததால் ஸ்ரீ சாந்தானந்தா ஸ்தாபித்த மிகப்பெரிய மகா மேருவைக் காண அருகில் செல்ல முடியவில்லை. ஆகையால் பிப்ரவரி 2023 இந்தியப்பயணத்தின் போது மீண்டும் சென்று தரிசித்தேன். காலை நேரம் எங்களைத் தவிர யாருமே இல்லை..
எனக்கு ஸ்ரீ சாந்தானந்தா ஒரு சிறிய புவனேஸ்வரி மந்திரத்தை, நான் சின்னப் பையனாக இருந்த பொழுது சொல்லிக்கொடுத்ததால் எப்போதும் குரு காணிக்கை செலுத்துவேன். நல்ல வேளை , அலுவலகம் திறந்து இருந்ததால் ஒரு அன்னதான டொனேஷன் கொடுத்து வந்தேன்.
எல்லாக் கடவுளரையும் வலம் வருகையில் ஒரு சில புரோகிதர்கள் பிரமாண்டமான யாக குண்டத்தின் முன்னர் அமர்ந்து ஒரு பெரிய மரத்துண்டை பதம் பார்த்துக்கொண்டு இருந்தனர். புத்தகத்தை படித்தபோதுதான் அது என்ன என்று விளங்கியது
கோவில் இருப்பிடம்
சென்னை ஓம் ஸ்ரீ ஸ்கந்தாஸ்ரமம்
எண் 1, கம்பர் தெரு, மஹாலக்ஷ்மி நகர், சேலையூர் , சென்னை 600 073
போன் 22290134; 22293388
xxxx
சென்னை குரோம்பேட்டை- தாம்பரம் திசையில் ராஜ கீழ் பாக்கம் பகுதியில் சேலையூர் இருக்கிறது. அங்குள்ள ஸ்கந்தாஸ்ரமம், பிரத்யங்கரா தேவி, சரபேஸ்வர் போன்ற பெரிய, மிகப்பெரிய, விக்ரகங்களை உடைய கோவில் ஆகும்.
புதுக்கோட்டை ஸ்ரீ சாந்தானந்தா கட்டிய கோவில்.
புவனேஸ்வரி அம்மனுடன் அமைந்த பெரிய மஹா மேரு முக்கியமாக தரிசிக்க வேண்டிய சந்நிதி. அதற்கு அருகிலேயே ஸ்ரீசாந்தானந்தாவின் சிலையும் உள்ளது.
xxx

நீங்கள் தரிசிக்கவேண்டிய சந்நிதிகள் :
பஞ்ச ஹேரம்ப கணபதி,
ஸ்ரீ மாதா புவனேஸ்வரி ,
ஸ்ரீ மஹா மேரு – 4 அடி உயரமுள்ள பஞ்சலோக மேரு
சரபேஸ்வரர்
சுவாமிநாத சுவாமி (முருகன்)
உக்ர பிரத்யங்கரா தேவி
பஞ்சமுக ஆஞ்சநேயர்
சுதர்சன மூர்த்தி
தர்ம சாஸ்தா ஐயப்பன்
அஷ்டா தச புஜ மஹாலஷ்மி
சஹஸ்ரலிங்கம்
சனைச் சரன்
தத்தாத்ரேயர்
சங்கடஹர கணபதி
தன்வந்திரி
ஸ்வர்ணாகர்ஷண பைரவர்
கோசாலை
யாக குண்டம்/ யாகம்
ஸ்ரீசாந்தானந்தா
மேற்கண்ட தெய்வங்களில் பிரத்யங்கரா தேவி, சரபேச்வரர் , தன்வந்திரி ஆகியோருக்கு வெகு சில கோவில்களிலேயே சந்நிதிகள் உண்டு.
Xxxx
ஸ்கந்தாஸ்ரம புஸ்தகம் சொல்லும் தகவல் இதோ :-

நித்திய ஸ்ரீ பிரத்யங்கரா – ஸரப– சூலினி ஹோமம்
“நெல்லிக்கனி அளவு அன்னத்தையும் நெய்யையும் ஹவிர்ப்பாகமாகக் கொடுத்தாலும் அக்னி, அதைப் பெரியதாக்கி , தெய்வங்களுக்குக் கொடுப்பதாக யஜுர் வேதம் கூறுகிறது.
ஸ்ரீ சரபேஸ்வரர் ஆலயம் ஒன்று, இரண்டுக்கு மேல் இல்லை. ஸ்ரீ பிரத்யங்கரா தேவிக்கும் ஸ்ரீ சூலினி துர்காதேவிக்கும் ஆலயங்கள் இல்லை என்றே சொல்லலாம் . இந்த நிலையில் கலியுகத்திற்கு தற்சமயம் அவசியமான மேற்படி தேவதைகளை நமது குருநாதர் ஸத்குரு ஸ்ரீமத் சாந்தானந்த சுவாமிகள் அவர்கள் சென்னை ஸ்ரீ ஸ்கந்தாஸ்ரமத்தில் பிரும்மாண்டமாக பஞ்ச லோகத்தில் பிரதிஷ்டை செய்துள்ளார்கள். ஆஸ்ரமத்தில் பூஜை, ஹோமம் முதலியன 25-6-1999 முதல் உலக க்ஷேமத்துக்காக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஸ்ரீ பிரத்யங்கரா தேவிக்கும் ஸரப சூலினி தேவதைகளுக்கும் சக்தி அதிகரிக்கவும், தெய்வ சாந்நித்யம் ஏற்படவும் பிரத்யங்கரா , ஸரப சூலினி மஹா மூல மந்திரங்களை பல கோடி தடவை வேள்வியாகச் செய்வதாக சுவாமிகள் ஸத்ய சங்கல்பம் எடுத்துக் கொண்டார்கள் பக்தர்கள், நாம நட்சத்திரங்களுடன் உபயதாரர்களாக பங்கு கொள்ள வேண்டும். தொலைதூரத்தில் உள்ளவர்களும் இதைச் செய்யலாம். கோவிலில் விவரங்களைப் பெறலாம்” .
xxx
எனது கருத்து My Comments
சுவாமிகள் ஸ்தாபித்த விக்ரகங்கள், சிலைகள் எல்லாம் அளவில் பெரியவை. அதற்குத் தக பிரசாதம், பூஜை, அபிஷேகம் நடைபெற் றால்தான் அவற்றின் ஆற்றல் அதிகரிக்கும் . அந்த வகையில் பார்த்தாலும் நாம் உதவி செய்வது அவசியம்.
இந்தக் கலியுகத்தில் தினமும் அக்நி காரியம் செய்யவேண்டிய பிராமணர்கள் கூட அதைச் செய்வதில்லை; ஆகையால் சுவாமிகளின் ஸத்ய சங்கல்பத்தை நிறைவேற்ற நாமும் உதவலாமே .
மேலும் சுவாமிகள் எதையுமே மிகப்பெரிய அளவில் சிந்த்தித்து நிறைவேற்றியும் காட்டியுள்ளார். 1960-களில் அவர் புதுக்கோட்டையில் சஹஸ்ரசண்டி ஹோமம் ஏற்பாடு செய்தபோது எனது தந்தை வெ . சந்தானம், தினமணிப் பத்திரிகையில் தினமும் செய்தி வெளியிட்டு அது வெற்றி அடைய உதவினார். அதுமட்டுமல்ல. அப்போது மதுரை மீனாட்சி கோவில் ஆடிவீதியில் நடந்த அனந்த ராம தீட்சிதர் உபன்யாசத்துக்கு நாள் தோறும் பல்லாயிரக் கணக்கானோர் வந்தனர் . நிதியெழுப்ப ஏற்பாடு செய்த அந்த நிகழ்ச்சியில் நாங்கள் நாள் தோறும் தொண்டர்களாகப் பணியாற்றினோம்.
மேலும் எங்கள் வீட்டுக்கு பலமுறை வந்து ஸ்ரீ சாந்தாந்னதா ஆசீர்வதித்ததாலும் , எங்களுக்கு மந்திர உபதேசம் செய்த ஆயக்குடி சுவாமிஜி கிருஷ்ணா, இவர் பற்றிச் சொல்கையில் , தானே காடுகளில் அவர் தவம் செய்வதைக் கண்டதாகச் சொன்னதாலும் சாந்தானந்தா மீது கூடுதல் மரியாதை உண்டு.
ஸாந்தானந்த சுவாமிகள் மதுரையில் அவதரித்து, சுதந்திர போரட்டத்தில் அலிப்பூர் சிறை சென்று, குஜராத், ராஜஸ்தான் ரிஷிகேஷ் சிவாநந்தாஸ்ரமம் வரை சென்று , குற்றாலம், மேற்கு மலைத் தொடர்ச்சி காடுகளில் தவம் செய்து, சேலம், புதுக்கோட்டை , சேலையூர் கோவில்களை ஸ்தாபித்து, சமாதி அடைந்த கதையை தனியாகக் காண்போம்.
xxxx

18-2-23 சிவராத்திரி
18-2-23 சிவராத்திரி அன்று இரவில் சென்னை கே கே நகர் பிள்ளையார் கோவிலில் சிவனுக்கு பால், தேன் அபிஷேகம் நடந்ததையும் கண்டு களித்தேன். என் அண்ணன் குடும்பத்தினர், லிட்டர் லிட்டராக பாலையும் தேனையும் வாங்கிக் கொடுத்தனர். மறுநாள் குடந்தை வட்டாரக் கோவில் பயணம் இருந்ததால் அரை மணி நேர தரிசனத்துடன் திரும்பி வந்தேன். ஓம் நம சிவாய.
—subham—
Tags- சேலையூர் ,ஸ்கந்தாஸ்ரமம், பிரத்யங்கரா தேவி, ஸரப சூலினி, சாந்தானந்தா