
Post No. 11,881
Date uploaded in London – – 8 APRIL 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx

Swami Sri Santhananda with my father V Santanam and my Brothers
புதுக்கோட்டை ஸ்ரீ சுவாமி சாந்தானந்தாவைப் பார்த்தவர்கள் பாக்கியவான்களே ; நெடிய உருவம்; முகத்தில் தேஜஸ்; சிவந்த மேனி; தரையில் விழுந்து புரளும் ஜடாமுடி; மேலே காவித் துணி. நெற்றியில் விபூதிப் பட்டை; பெரிய குங்குமப்பொட்டு.
மதுரையில் எங்கள் வீட்டுக்கு வருகையில் பிட்சை (அன்னம்= உணவு) ஏற்பார். எனது தாயார் அறுசுவை உண்டி சமைத்து ஆவலோடு காத்திருப்பார் ; அத்தனையையும் கலக்கி உங்கள் கையால் மூன்றே பிடி போடுங்கள் என்று வாங்கிச் சாப்பிடுவார். தாயாருக்கோ மிக மிக வருத்தம். சந்நியாசிகள் நாக்கின் ருசிக்காகச் சாப்பிடுவதில்லை !
எங்கள் எல்லோரையும் பெயர் முதலியவற்றைக் கேட்டு ஆசீர்வதிப்பார். பின்னர் தான் செய்யப்போகும் சஹஸ்ர சண்டி யக்ஞத்தின் மஹிமையை என் தந்தையிடம் உரைத்து , தினமணிப் பத்திரிக்கையில் செய்தி வெளியிடுமாறு கேட்டுக்கொள்வார். அந்த யக்ஞம் முடிவதற்குள் மதுரையில் உள்ள எங்கள் வீட்டுக்கு பல முறை வந்தது எங்கள் அதிர்ஷ்டமே.
எங்களுக்கு சாந்தானதா, ஒரு சிறிய புவனேஸ்வரி மந்திரத்தையும் சொல்லிக்கொடுத்து திரும்பிச் சொல்லும்படி சொல்லுவார். எங்கள் வீட்டிற்கு இவரைப் போலவே பல முறை வந்து மந்திர உபதேசம் செய்த ஆயக்குடி சுவாமிஜி கிருஷ்ணா, அச்சங்கோவில் என்னும் அய்யப்பன் க்ஷேத்திரத்தை எல்லோரும் எளிதில் அடையும் படி செய்தவர் ஆவார். ஆரம்ப காலத்தில் செங்கோட்டை முதலிய இடங்களிலிருந்து செல்வோருக்கு சாலை வசதிகள் கிடையாது. அப்போது சுவாமிஜி கிருஷ்ணாவின் சிஷ்யர்கள் புதர்களையும் செடிகளையும் அரிவாளால் வெட்டி அகற்றிச் செல்லுவார்கள். ஆண்டுதோறும் அங்கு புஷ்பாஞ்ஜலி நடைபெறும். அப்படிச் செல்லுகையில் சுவாமி சாந்தானந்தா அந்த குற்றால மலைக்காடுகளில் இருந்து தவம் செய்துகொண்டிருப்பதை சுவாமிஜியும் பார்த்திருந்தார். அவருடன் பேசும்போது தானே அவர் தவம் செய்யும் காட்சியைக் கண்டதையும் எங்களிடம் சொல்லியிருந்தார்.
xxxx
இதோ சுவாமி சாந்தானந்தாவின் சுருக்கமான வாழ்க்கை வரலாறு

பிறந்த இடம் – மதுரை; தந்தை – அந்தணர் ராமசாமி;
குடும்பத்த்தில் பத்தாவது குழந்தை. அவர் பிறப்பதற்கு முன்னரே மதுரை மீனாட்சி அருள்பெற்ற மாயாண்டி சுவாமிகள், பிறக்கப்போகும் குழந்தை அருள்பொங்கும் முகம் கொண்ட சந்நியாசி ஆவார் என்று அருள்வாக்கு சொன்னார் பிறந்த ஞானக் குழந்தைக்கு சுப்பிரமணியன் என்று பெயர் சூட்டினர் பெற்றோர்கள்.
பாலகனை மீண்டும் சந்தித்தார் மாயாண்டி சுவாமிகள்; அருட்கல்வி கற்கவே அவர் பிறந்தார் என்று சொன்னார். பெற்றோரும், சுப்பிரமணியனை காரைக்குடி நாகநாதபுரம் வேத பாட சாலையில் சேர்த்தனர் .
வேதக் கல்வி முடிந்தது அப்போது நாட்டில் சுதந்திர வேட்கை எங்கும் ஜொலித்தது. சுப்பிரமணியமும் சுதந்திர போரட்டத்தில் பங்கேற்று அலிப்பூர் சிறையில் அடைக்கப்பட்டார் . சிறையில் தவம் செய்யவே அது தவச் சாலையாக மாறியது.
விடுதலையான பின்னர் மீண்டும் மதுரை மீனாட்சியிடம் அடைக்கலம் புகுந்தார்; அங்கே காத்திருந்த மாயாண்டி சுவாமிகள் புவனேச்வரி மந்திரத்தை உபதேசம் செய்தார்.
குற்றால மலைக் காடுகள், திருப்பதி, பழநி , கொல்லிமலைக் காடுகளில் தவம் செய்தார்; பலர் இவரை பைத்தியம், பிள்ளை பிடிப்பவன் என்று கருதி சொல்லாலும், கல்லாலும் அடித்தனர் .சுப்பிரமணியம் வட திசை நோக்கி பயணமானார்.பத்ரி, கேதார்நாத், நேபாளம் வரை சென்று, சிவானந்தாஸ்ரமத்திலும் கைங்கர்யம் செய்தார்.
திருநெல்வேலியில் நெல்லையப்பர் கோவிலில் தவம் செய்தபோது ஒரு அவதூத சாமியார் தோன்றி என்னிடம் வா என்று சொன்னார். ஆனால் முகம் தெரியாது குரல் மட்டும் கேட்கவே, அவரைக் கண்டுபிடிக்க, நாடு முழுதும் அலைந்தார்.
குஜராத்திலுள்ள கிர்நார் மலையில் தத்தாத்ரேய பாதுகா பீடத்துக்குச் சென்றபோது, சேந்தமங்கலம் அவதூத சுவாமிகளிடம் போ என்ற கட்டளை பிறந்தது..
சேலம் மாவட்டம் நாமக்கல் அருகே சேந்தமங்கலம் மலைப்பகுதியில் தத்தாத்ரேயரை பிரதிஷ்டை செய்து வழிபட்டுவந்த ஸ்ரீ ஸ்வயம் பிரகாச பிரும்மேந்திர ஸரஸ்வத் அவதூத சுவாமிகளை சுப்பிரமணியன் தரிசிக்கவே, அவர் சாந்தானந்தா என்ற நாமகரணத்துடன் சந்நியாசம் கொடுத்தார் குருவின் கட்டளையை ஏற்று புதுக்கோட்டையில் சிதிலமடைந்த ஜட்ஜ் சுவாமிகளின் அதிஷ்டானத்தை புதுப்பித்து 1956-ல் கும்பாபிஷேகமும் நடைபெறச் செய்தார்.
சேலம் – ஆத்தூர் சாலையில் உடையாபட்டி கிராமத்தின் அருகில் மலை முகட்டிற்குச் சென்றபோது ஏற்பட்ட மெய்சிலிர்ப்பினால் , அந்த இடத்தின் புனிதத்தை உணர்ந்து அங்கே ஸ்கந்தாஸ்ரமம் அமைத்தார் . 1967ல் கும்பாபிஷேகம் நடந்தது.
ஸ்ரீமத் ஸ்வாமிகள் 27.05.2002 திங்கட் கிழமை வைகாசி மாதம் ப்ரதமை திதி அன்று சேலம் உடையாப்பட்டி ஸ்கந்தாஸ்ரமம் ஸ்ரீஅஷ்டாதசபுஜ மஹா லக்ஷ்மி துர்கை சந்நிதியில் விதேஹ முக்தி அடைந்தார்.
Xxx

சேலையூர் ஸ்கந்தாஸ்ரமம் கோவில் 1999ம் ஆண்டு கட்டப்பட்டது. இப்போது சுமார் 20 சந்நிதிகள் உள்ளன..2022 ஆம் ஆண்டு இரண்டாவது கும்பாபிஷேகம் நடந்தது
இது சென்னை தாம்பரம் பகுதியில் மகாலெட்சுமி நகரில் கம்பர் தெருவிலிருக்கிறது. இங்கே நித்திய ஹோமமும் நடைபெறுகிறது. சுவாமிகளின் சிலை, மகா மேரு, புவனேஸ்வரி மாதா உள்பட அனைத்து தெய்வங்களையும் காண வசதியாக 20 சந்நிதிகள் உள்ளன.
கோவில் இருப்பிடம்
சென்னை ஓம் ஸ்ரீ ஸ்கந்தாஸ்ரமம்
எண் 1, கம்பர் தெரு, மஹாலக்ஷ்மி நகர், சேலையூர் , சென்னை 600 073
போன் 22290134; 22293388
xxx
சேலையூருக்கு வாருங்கள்; ஒரே கல்லில் 20 …
tamilandvedas.com
https://tamilandvedas.com › சே…
2 days ago — சென்னை குரோம்பேட்டை- தாம்பரம் திசையில் ராஜ கீழ் பாக்கம் பகுதியில் சேலையூர் …
–subham—
கந்தாஸ்ரமம், ஸ்கந்தாஸ்ரமம், சேலையூர் , சேந்தமங்கலம், புதுக்கோட்டை, சாந்தானந்தா, சுவாமிகள், மாயாண்டி, அலிப்பூர் சிறை , தத்தாத்ரேயர்