Pictures by London Swaminathan
Post No. 15,485
Date uploaded in Kumbakonam, India – 11 March 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
கும்பகோணத்தில் இரண்டு சிவன் கோவில்கள் பிரசித்தமானவை . கும்பகோணத்துக்குப் பெய கொடுத்த கும்பேஸ்வரர் சிவன் கோவிலும் நாகேஸ்வரர் சிவன் கோவிலும் புகழ் பெற்றவை . கும்பேஸ்வரர் கோவிலுக்கு நான்காவது முறையாக 5-3-2026 ல் சென்றேன் . முந்தைய கட்டுரைகளில் விவரமாக எழுதியுள்ளேன். சென்ற முறை லண்டனிலிருந்து வந்து தரிசித்தபோது எனது பிரிட்டிஷ் பாஸ்போர்ட்டினை யாரோ பிக்பாக்கெட் அடித்து கோவில் பூக்குவியலில் எறிந்துவிட்டனர் . அதை எடுத்த குருக்கள் அவருடைய மனைவியின் கையில் கொடுக்கவே, அவ்வாறு மிகவும் நேரம் செலவழித்துக் கஷ்டப்பட்டு லண்டன் சுவாமிநாதன் என்ற பெயரில் புஸ்தகங்கள் இருப்பதைக் கண்டு அதன் வெளியீட்டாளருக்கு போன் செய்தார். அவர் எனது அண்ணனின் நண்பர் என்பதால் எனக்குத் தகவல் கிடைக்கவே சென்னையிலிருந்து டாக்சியில் வந்து, நள்ளிரவுக்கு முன்னர் பாஸ்போர்ட்டினைப் பெற்றுக்கொண்டு குருக்களுக்கும் அவர் மனைவிக்கும் நன்றி தெரிவித்துவிட்டு பணம் கொடுத்தேன்; வாங்க மறுத்துவிட்டு அதைக் கோவிலுக்கு கொடுத்து விடுங்கள் என்றார். நள்ளிரவில் கோவில் பூட்டியிருந்ததால் இப்போது கோவிலுக்குச் சென்று உண்டியலில் காணிக்கை செலுத்தி இறைவனுக்கும் குருக்களுக்கும் மனதார நன்றி செலுத்தினேன் . அத்தோடு நாகேஸ்வரர் கோவிலுக்கும் சென்றேன் .
(கும்பேஸ்வரர் கோவில் பற்றி எழுதிய கட்டுரைகளின் இணைப்புகள் கீழே உள்ளன)
***
நாகேஸ்வரர் கோவிலின் சிறப்புகள்
கோவிலின் கோபுரத்தில் ஒரு உருவத்தைக் காணலாம் . வேறு எங்கும் காண முடியாத வடிவம் இது . இந்தக் கோவிலை செப்பனிட்டுக் கும்பாபிஷேகம் செய்த பாடகச் சேரி ராமலிங்க சுவாமிகளின் உருவம் அது. அவர் கழுத்தில் பித்தளைச் சொம்பினை மாட்டிக்கொண்டு பிச்சை எடுத்து கோவில் கோபுரத்தில் முளைத்திருந்த புல்பூண்டுகளை அகற்றி கும்பாபிஷேகம் செய்த மகான் ஆவார். அப்பர் பெருமான் செய்த அரும்பணியைப் போன்றது இது .
கோவிலின் ஐந்து நிலைக் கோபுரத்தில் இவரைத் தரிசிப்பதோடு கோவிலுக்குள் உள்ள சந்நிதி ஒன்றிலும் தரிசிக்கலாம்.
இன்னுமொரு சிறப்பு சித்திரை மாதத்தில் மூன்று நாட்களுக்கு கோவிலுக்குள் சூரிய ஒளி புகும் வண்ணம் திட்டமிடப்பட்ட பொறியியல் சிறப்பு ஆகும்
இங்குள்ள இறைவன் இறைவியின் சிறப்புகள்
இறைவன் நாமம் – நாகேஸ்வரர்
இறைவியின் நாமம் -பெரியநாயகி
இந்தக் கோயிலை அப்பர் பெருமான் பாடியுள்ளதால் குறைந்தது 1400 ஆண்டுகளுக்கு முன்னரே இது பிரபலமாகியது தெளிவாகிறது
கும்பகோணம் பகுதியில் இரண்டு முக்கிய நாகேஸ்வரர் கோவில்கள் உள்ளன, இரண்டும் பாடல் பெற்ற ஸ்தலங்கள். ஒன்று திருநாகேஸ்வரத்தில் உள்ள நாகேஸ்வரர் கோவில் (கும்பகோணம் நவக்கிரக கோவில்களில் ஒன்று), மற்றொன்று கும்பகோணத்தின் மையத்தில் உள்ள இந்த கோவில்.
இந்தக் கோயில் குடந்தை கீழ்கோட்டம் என்றும் குறிப்பிடப்படுகிறது.
பிரம்மா அனைத்து உயிரினங்களின் விதைகளையும், வேதங்கள் மற்றும் புராணங்களையும் ஒரு பாத்திரத்தில் ஒன்றாக வைத்திருந்தார், இது அமிர்த கலசம் என்று அழைக்கப்பட்டது. பிரளயம் தொடங்கிய போது, பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களையும் அழித்தது. பிரம்மா தயாரித்த கும்பமும் இடம்பெயர்ந்து, பல ஆண்டுகளாக வெள்ள நீரில் மிதந்தது. இறுதியாக, அது ஒரு இடத்தில் குடியேறியது. சிவபெருமான், வேட்டைக்காரன் வேடத்தில், தனது வில் மற்றும் அம்பினால் கும்பத்தை உடைத்தார். கும்பத்தை அலங்கரிக்கும் வில்வம் இலைகள் விழுந்த இடம் இது (இங்கு சிவன் வில்வவனேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார்.).
நாகர்களின் அரசனான ஆதிசேஷன் தன் 1000 தலைகளில் பூமியின் பாரத்தை சுமந்தான். கருணை உள்ளம் கொண்ட இறைவன் அவர் மீது இரக்கம் கொண்டு, எந்த நேரமும் தனது ஒற்றைத் தலையில் பூமிச் சுமையை சுமக்கும் ஆற்றலை அவருக்கு வழங்கினார். ஆதிசேஷனால் லிங்கம் நிறுவப்பட்டு பிரார்த்தனை செய்யப்பட்டதால், இறைவன் நாகேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.
நடராஜ மண்டபம் ரத அமைப்பில் உள்ளது. இரு புறங்களிலும் உள்ள கல் (தேர்ச்) சக்கரம் உள்ளது. இச்சக்கரங்களின் ஆரங்களாக 12 ராசிகளும் இடம்பெற இரண்டு குதிரைகளும் நான்கு யானைகளும் இழுக்கும் நிலையில் இத் தேர்மண்டபம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பெயர் ’ஆனந்தத் தாண்டவ நடராஜ சபை’. சாரங்கபாணி கோவில் ரதம் போலக் காட்சிதருகிறது .
சிவகாமி வடிவில் அம்பாள், நடராஜப் பெருமானின் பிரபஞ்ச நடனத்திற்கு தாளம் போடுவதும், விஷ்ணு புல்லாங்குழல் வாசிப்பதும் வேறெங்கும் காண முடியாத காட்சிகள் .
மகாகாளிக்கும் வீரபத்ரருக்கும் எதிரெதிரே தனித்தனி சன்னதிகள் உள்ளன, சிவனும் காளியும் நடனத்தில் போட்டி போடுவது போல் சிலைகள் வடிக்கப்பட்டுள்ளன., சோழர்களின் கட்டிடக்கலை மற்றும் சிற்பக் கலையின் அற்புதத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. தமிழ் மாதமான சித்திரையில் (ஏப்ரல் – மே) சூரியனின் கதிர்கள் மூலவரின் மீது விழும் வகையில் இந்தக் கோயில் கட்டப்பட்டுள்ளது.
தீர்த்தவாரி திருவிழாவின் போது இறைவன் மகாமகக் குளத்திற்கு வருகை தருகிறார்.
தமிழகத்தில் உள்ள நான்கு நாகர் கோயில்கள் : கும்பகோணம் நாகேஸ்வரர் ,கும்பகோணம் அருகேயுள்ள திருநாகேஸ்வரம், புதுக்கோட்டை அருகேயுள்ள பேரையூர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோயில் .
நாகராஜனான வாசுகியும், இன்னும் சில பாம்புகளும் ஒரு மகாசிவராத்திரி இரவில் முதல் காலத்தில் கும்பகோணம் நாகேஸ்வரர் கோயிலிலும், இரண்டாம் காலத்தில் திருநாகேஸ்வரத்திலும், மூன்றாம் காலத்தில் திருப்பாம்புரத்திலும், நான்காம் காலத்தில் நாகூரிலும் வழிபட்டு பலன் அடைந்ததாகத் தலபுராணங்கள் கூறுகின்றன.
***
பாடகச்சேரி இராமலிங்க சுவாமிகள்
பாடகச்சேரி இராமலிங்க சுவாமிகள் (1876-1949) கோயம்புத்தூர் மாவட்டத்தில் பிறந்து வலங்கைமானுக்கருகில் உள்ள பாடகச்சேரியில் தனது 12 வயதிலிருந்து வாழ்ந்தவர்; இவர் திருவொற்றியூரில் சமாதி அடைந்தார்.
வெள்ளை வெளேர் என்று வேட்டி அணிந்திருப்பார். ஒரு பித்தளைச் செம்பைக் கயிற்றில் கட்டியிருப்பார். அவருடைய இடுப்பில் தொங்குகிற பாத்திரத்தில் அனைவரும் தங்களால் முடிந்த சில்லறையைப் போட்டுவிடுவர்.
நாகேஸ்வரர் கோயில் கோபுரத்தில் மரம் செடிகள் முளைத்து அது பிளப்புண்டு கிடப்பதைப் பார்த்து மனம் வருந்தி அந்த கோபுரத்தை சீரமைக்க உறுதி கொண்டார். தனிநபராக அவர் சிறுகச்சிறுகப் பொருள் சேர்த்து, அக்கோயிலை திருப்பணி செய்து 1923ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் செய்துவைத்தார்.
***
அப்பர் பெருமான் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்
ஆறாம் திருமுறை
பதிகம் – 75
காவிரி தென்கரைத் தலங்களில் இருபத்து ஏழாவது தலம் – திருக்குடந்தைக்கீழ்க்கோட்டம்
சொன்மலிந்த மறைநான்கா றங்க மாகிச்
சொற்பொருளுங் கடந்தசுடர்ச் சோதி போலுங்
கன்மலிந்த கயிலைமலை வாணர் போலுங்
கடல்நஞ்ச முண்டிருண்ட கண்டர் போலும்
மன்மலிந்த மணிவரைத்திண் டோ ளர் போலும்
மலையரையன் மடப்பாவை மணாளர் போலுங்
கொன்மலிந்த மூவிலைவேற் குழகர் போலுங்
குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே.
கானலிளங் கலிமறவ னாகிப் பார்த்தன்
கருத்தளவு செருத்தொகுதி கண்டார் போலும்
ஆனவிளங் கடுவிடையொன் றேறி அண்டத்
தப்பாலும் பலிதிரியும் அழகர் போலுந்
தேனலிளந் துவலைமலி தென்றல் முன்றிற்
செழும்பொழிற்பூம் பாளைவிரி தேறல் நாறுங்
கூனலிளம் பிறைதடவு கொடிகொள் மாடக்
குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே.
நீறலைத்த திருவுருவும் நெற்றிக் கண்ணும்
நிலாவலைத்த பாம்பினொடு நிறைநீர்க் கங்கை
ஆறலைத்த சடைமுடியும் அம்பொற் றோளும்
அடியவர்க்குக் காட்டியருள் புரிவார் போலும்
ஏறலைத்த நிமிர்கொடியொன் றுடையார் போலும்
ஏழுலகுந் தொழுகழலெம் மீசர் போலுங்
கூறலைத்த மலைமடந்தை கொழுநர் போலுங்
குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே.
தக்கனது பெருவேள்வி தகர்த்தார் போலுஞ்
சந்திரனைக் கலைகவர்ந்து தரித்தார் போலுஞ்
செக்கரொளி பவளவொளி மின்னின் சோதி
செழுஞ்சுடர்த்தீ ஞாயிறெனச் செய்யர் போலும்
மிக்கதிறல் மறையவரால் விளங்கு வேள்வி
மிகுபுகைபோய் விண்பொழியக் கழனி யெல்லாங்
கொக்கினிய கனிசிதறித் தேறல் பாயுங்
குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே.
காலன்வலி தொலைத்தகழற் காலர் போலுங்
காமனெழில் அழல்விழுங்கக் கண்டார் போலும்
ஆலதனில் அறம்நால்வர்க் களித்தார் போலும்
ஆணொடுபெண் ணலியல்ல ரானார் போலும்
நீலவுரு வயிரநிரைப் பச்சை செம்பொன்
நெடும்பளிங்கென் றறிவரிய நிறத்தார் போலுங்
கோலமணி கொழித்திழியும் பொன்னி நன்னீர்க்
குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே.
முடிகொண்ட வளர்மதியும் மூன்றாய்த் தோன்றும்
முளைஞாயி றன்னமலர்க் கண்கள் மூன்றும்
அடிகொண்ட சிலம்பொலியும் அருளார் சோதி
அணிமுறுவற் செவ்வாயும் அழகாய்த் தோன்றத்
துடிகொண்ட இடைமடவாள் பாகங் கொண்டு
சுடர்ச்சோதிக் கடிச்செம்பொன் மலைபோ லிந்நாள்
குடிகொண்டென் மனத்தகத்தே புகுந்தார் போலுங்
குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே.
காரிலங்கு திருவுருவத் தவற்கும் மற்றைக்
கமலத்திற் காரணற்குங் காட்சி யொண்ணாச்
சீரிலங்கு தழற்பிழம்பிற் சிவந்தார் போலுஞ்
சிலைவளைவித் தவுணர்புரஞ் சிதைத்தார் போலும்
பாரிலங்கு புனலனல்கால் பரமா காசம்
பருதிமதி சுருதியுமாய்ப் பரந்தார் போலுங்
கூரிலங்கு வேற்குமரன் தாதை போலுங்
குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே.
பூச்சூழ்ந்த பொழில்தழுவு புகலூ ருள்ளார்
புறம்பயத்தார் அறம்புரிபூந் துருத்தி புக்கு
மாச்சூழ்ந்த பழனத்தார் நெய்த்தா னத்தார்
மாதவத்து வளர்சோற்றுத் துறையார் நல்ல
தீச்சூழ்ந்த திகிரிதிரு மாலுக் கீந்து
திருவானைக் காவிலோர் சிலந்திக் கந்நாள்
கோச்சோழர் குலத்தரசு கொடுத்தார் போலுங்
குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே.
பொங்கரவர் புலித்தோலர் புராணர் மார்பிற்
பொறிகிளர்வெண் பூணநூற் புனிதர் போலுஞ்
சங்கரவக் கடன்முகடு தட்ட விட்டுச்
சதுரநட மாட்டுகந்த சைவர் போலும்
அங்கரவத் திருவடிக்காட் பிழைப்பத் தந்தை
அந்தணனை அறஎறிந்தார்க் கருளப் போதே
கொங்கரவச் சடைக்கொன்றை கொடுத்தார் போலுங்
குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே.
ஏவியிடர்க் கடலிடைப்பட் டிளைக்கின் றேனை
இப்பிறவி யறுத்தேற வாங்கி யாங்கே
கூவிஅம ருலகனைத்து முருவிப் போகக்
குறியிலறு குணத்தாண்டு கொண்டார் போலுந்
தாவிமுதற் காவிரிநல் யமுனை கங்கை
சரச்வதிபொற் றாமரைப்புட் கரணி தெண்ணீர்க்
கோவியொடு குமரிவரு தீர்த்தஞ் சூழ்ந்த
குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே.
செறிகொண்ட சிந்தைதனுள் தெளிந்து தேறித்
தித்திக்குஞ் சிவபுவனத் தமுதம் போலும்
நெறிகொண்ட குழலியுமை பாக மாக
நிறைந்தமரர் கணம்வணங்க நின்றார் போலும்
மறிகொண்ட கரதலத்தெம் மைந்தர் போலும்
மதிலிலங்கைக் கோன்மலங்க வரைக்கீ ழிட்டுக்
குறிகொண்ட இன்னிசைகேட் டுகந்தார் போலுங்
குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே.
திருச்சிற்றம்பலம்
குடந்தைக் கீழ்க்கோட்டம் (நாகேசுவரசுவாமி திருக்கோயில்) 612001.
இறைவர் திருப்பெயர்:
நாகேஸ்வரர், நாகநாதர்.
இறைவியார் திருப்பெயர்:
பிருகந்நாயகி, பெரியநாயகி.
தல மரம்:
வில்வம்
தீர்த்தம் :
சிங்கமுக தீர்த்தம். மகாமகத்தீர்த்தம்.
கும்பேஸ்வரர் கோவிலில் மீண்டும் நல்ல …
https://tamilandvedas.com › கு…
11 Apr 2025 — மகாமக குளம் , மற்றும் கோவில் பற்றி முன்னர் எழுதிய இணைப்புகள் கீழே உள்ளன . விருந்தினர் அறைக்குச் செல்வதற்கு முன்னர் மீண்டும் ராமசாமி
கும்பேஸ்வரர் கோவிலில் தரிசனம் (Post No.11860)
https://tamilandvedas.com › கு…
1 Apr 2023 — கோவிலில் கலை விழா நடந்து கொண்டிருந்தது. நிறைய டான்ஸ்; நிறைய கைதட்டு. கொஞ்சம் அதை வேடிக்கை பார்த்துக்கொண்டே கோவில் யானையின் சேட்டைகளையும் புகைப்படம் எடுத்தேன். சந்நிதிக்குள் நுழைந்தோம் . என்னைப் போன்ற தஞ்சை மாவட்டத்தில் பிறந்த …Read more
கும்பகோணத்திலும் ஆழ்வார் திருநகரியிலும் …
https://tamilandvedas.com › கு…
21 Nov 2025 — ஆதி கும்பேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் அடுத்த மாதம் டிசம்பர் முதல் நாள் தேதி நடைபெறவுள்ளது. … கோயில் நகரம் என்றழைக்கப்படும் கும்பகோணத்தில் அமைந்துள்ள மகாமக தீர்த்தவாரியின் முதன்மை திருக்கோயிலான ஆதி கும்பேஸ்வரர் கோயிலில் உள்ள …Read more
கடவுள் இருக்கும் இடம் பாஸ்போர்ட் பை ! (Post …
https://tamilandvedas.com › கட…
21 Mar 2025 — … சுவாமிமலை, கும்பகோணம் ராமசுவாமிகோவில், கும்பேஸ்வரர் கோவில் ஆகிய இடங்களுக்குச் சென்றோம். அப்போது பாஸ்போர்ட் பையில் மலேசியா பத்துமலை முருகன் கோவில் தங்க வர்ண கீ செயின் இரண்டினை நண்பர்களுக்கு கொடுக்க வைத்திருந்தேன்.Read more
இருபது நாட்களில் 40++ கோவில்கள் …
https://tamilandvedas.com › இர…
3 Mar 2023 — பிப்ரவரி 10 ஆம் தேதி (2023) லண்டனிலிருந்து சென்னைக்குச் சென்றேன் நேற்று மார்ச் 2ம் தேதி லண்டனுக்குத் திரும்பினேன் . சுமார் 20 நாட்களில் நாற்பது +++ கோவில்கள், ஆஸ்ரமங்கள் , அதிஷ்டானங்களைத் தரிசிக்கும் பாக்கியம் கிடைத்து.Read more
–subahm—
Tags- பாடகச்சேரி இராமலிங்க சுவாமிகள்,கும்பகோணம் நாகேஸ்வரர், கோயில், கும்பேஸ்வரர் , தேர் மண்டபம், கல் ரதம் , சிவன் கோவில்கள், ஆதிசேஷன்