Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
(புரந்தரதாசர் பற்றிய 6–வது கட்டுரை இது)
சங்கீத மும்மூர்த்திகளான தியாகராஜர், முத்துசுவாமி தீக்ஷிதர், சாமா சாஸ்திரிகள் ஆகிய மூவரும் ஆண்டவனைப் பாடிப் பரவிய அழகினை நாம் அறிவோம். புரந்தரதாசர் பிறப்பில் செட்டி; பணத்தில் கெட்டி; பட்டினத்தார் போல திடீர் ஞானோதயம் ஏற்பட்டு பணத்தைத் துறந்து இறைவனை நாடினார் ; பாடினார்.
ராமனை யமன் என்று வருணித்தார்; அவர் யார் யாருக்கு எமன் என்பதையும் விளக்கினார்.அதே போல இன்னும் ஒரு கீர்த்தனையை, செல்வி லெட்சுமியைப் பார்த்து, அழகிய பெண்ணே நீ யாரைக் கல்யாணம் செய்துகொள்ளப் போகிறாய் என்ற தொனியில் கேள்வி கேட்டு ஒரு பட்டியலே தருகிறார் ; கட்டாயம் லெட்சுமி திணறிப் போயிருப்பார்.
பாடலைப் படிக்கும் போதே சுவையாக இருக்கிறது; இதைப் பாடிக்கேட்டால் அமிர்தமாக இனிக்கும்; பக்திப் பரவசத்தோடு பாடினாலோ பெருமாளும் தாயாரும் மகிழ்ந்துபோய் நம்மிடம் வந்துவிடுவார்கள்.
பெருமாளின் பெருமையைச் சொல்வதிலும் எத்தனை வகை, எத்தனை முறை இருக்கிறது என்பதைப் புரந்தரதாசர் காட்டுகிறார்.
இதோ அவரது கீர்த்தனை :
க்ஷீராப்தி கன்னிகே ஸ்ரீ மஹாலக்ஷ்மி
யாரிகே வதுவாகுவே – நீனு யாரிகே வதுவாகுவே
பாற்கடலில் உதித்த கன்னியே ஸ்ரீ மஹாலக்ஷ்மி
யாரை திருமணம் செய்துகொள்வாய் – நீயே..
சாரதி பந்தன ராமசந்திர மூர்த்திகோ
பரமாத்மா அனந்த பத்மனாபனிகோ
சரசிஜனாப ஸ்ரீ ஜனார்த்தன மூர்த்திகோ
உபய காவேரி ரங்க பட்டணத அரசகோ (யாரிகே)
(இலங்கைக்கு) பாலம் கட்டிய ஸ்ரீ ராமசந்திரனையா
பரமாத்மாவான அனந்த பத்மனாபனையா
நாபிக்கமலத்தில் தாமரை மலருடைய ஜனார்த்தனனையா
காவேரிக்கரையில் இருக்கும் ஸ்ரீரங்கத்தின் அரசனையா (யாரிகே)
செலுவ மூர்த்தி பேலூர சென்னிகராயனிகோ
கெலதி ஹேலு ஸ்ரீ உடுப்பி ஸ்ரீ கிருஷ்ண ராயனிகோ
இளெயளு பாண்டுரங்க விட்டல ராயனிகோ
நலினாக்ஷி ஹேளம்மா பதரி நாராயணனிகோ (யாரிகே)
அழகே வடிவான பேலூர் சென்னிகிருஷ்ணனையா
உன் நண்பன் கேட்கிறேன், உடுப்பி கிருஷ்ணனையா
அல்லது பாண்டுரங்க விட்டலனையா
தாமரை போன்ற கண்கள் உடையவளே, பத்ரி நாராயணனைய (யாரிகே)
மலயஜகந்தி பிந்து மாதவ ராயரிகோ
சுலப தேவரு புருஷோத்தமனிகோ
பலதாயக நித்ய மங்கள தாயககோ
செலுவ நாசதே ஹேளு ஸ்ரீ வேங்கடேசனிகோ (யாரிகே)
மலையிலிருந்து வரும் நறுமணத்தை கொண்ட பிந்து மாதவனையா
யாவரும் சுலபமாக தொடர்பு கொள்ளக்கூடிய புருஷோத்தமனையா
வரங்களை அருளும் நித்ய மங்களமானவனையா
வெட்கப்படாமல் சொல், ஸ்ரீ வேங்கடேசனையா (யாரிகே)
வாசவார்சித கஞ்சி வரதராஜனிகோ
ஆ ஸ்ரீமுஷ்ணதல்லி ஆதி வராகனிகோ
சேஷசாயியாத ஸ்ரீமன் நாராயணனிகோ
சாசிர நாமதொடய அழகிரீசகோ (யாரிகே)
இந்திரன் வழிபட்ட காஞ்சி வரதராஜனையா
அந்த ஸ்ரீமுஷ்ணத்தில் இருக்கும் ஆதி வராகனையா
நாகத்தின் மேல் படுத்திருக்கும் ஸ்ரீமன் நாராயணனையா
ஆயிரம் பெயர்களை உடைய அழகிய மலைகளில் வசிப்பவனையா? (யாரிகே)
சரணாகத ரக்ஷக சாரங்கபாணிகோ
வரகள நீடுவ ஸ்ரீநிவாசனிகோ
குரு குலாந்தகனாத ராஜகோபால மூர்த்திகோ
ஸ்திரவாகி புரந்தர விட்டல ராயனிகோ (யாரிகே)
சரணடைந்தவர்களை காப்பாற்றும் சாரங்கபாணியையா
வரங்களைக் கொடுக்கும் ஸ்ரீனிவாசனையா
’குரு’ வம்சத்தை அழித்த ராஜகோபாலனையா
நிரந்தரமாக புரந்தர விட்டலனையா (யாரிகே)
பாடலும் மொழிபெயர்ப்பும் தாசர் சாங்ஸ் .காம் இணைய தளத்திலிருந்து எடுக்கப்பட்டது; நன்றி உரித்தாகுக.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
27-2-25 Kalkionline இதழில் வெளியாகியுள்ள கட்டுரை!
ஜென் பிரிவின் தியானம் ஜாஜென்!
காற்றா, மணியா எது அடிக்கிறது? ஜாஜென் தியானம் சொல்வது என்ன?
ச. நாகராஜன்
டோஜன் ஜெஞ்சி (Dōgen Zenji) என்பவர் சோடோ வழிமுறை என்ற ஒரு புது வழிமுறையை ஸ்தாபித்த ஜப்பானிய ஜென் மாஸ்டர் ஆவார். (தோற்றம் 26-2-1200 நிர்வாணம் 22-9-1253)
இவரிடம் ஏராளமான சீடர்கள் ஜாஜென் என்னும் தியான முறையைக் கற்க வருவதுண்டு.
ஒரு சமயம் பதினேழாவது தலைமுறை குரு ஒருவர் தனது சீடன் ஒருவனுடன் நடந்து கொண்டிருந்தார். அருகில் இருந்த ஆலயத்தில் நான்கு மூலைகளிலிருமிருந்து மணிகள் தொங்க விடப்பட்டிருந்தன. அவைகள் ஒலித்துக் கொண்டிருந்தன.
குரு தனது சீடனிடம் கேட்டார்: “ அப்பனே! எது ஒலிக்கிறது? காற்றா மணிகளா?”
சீடன் உடனே பதில் சொன்னான், ”ஐயனே! காற்றும் இல்லை; மணிகளும் இல்லை. மனம் தான் ஒலிக்கிறது!”
இந்த பதிலால் குரு பெரிதும் சந்தோஷப்பட்டார்.
காற்றா, மணிகளா அல்லது இரண்டுமா?
எதுவுமில்லை. மனம் தான்!
அப்படியானால் மனம் என்றால் என்ன?
இதை குரு கேட்கவே சீடன் உடனே பதில் கூறினார்: “பேரமைதி! சஞ்சலமற்ற நிலை!!”
இதனால் இன்னும் அதிக சந்தோஷப்பட்டார் குரு.
சீடன் மனம் என்றால் என்ன என்பதைச் சரியாக உணர்ந்து கொண்டான். அது அகண்டமானது.
இந்த ஆதிமூலமான ஒரு நிலை தான் பிரிக்கமுடியாத நிலையான ஒன்று.
இந்தச் சம்பவத்தைத் தன் சீடர்களுக்குக் கூறிய டோஜன் ஜெஞ்சி, “காற்று அடிக்கிறது; மணிகள் அடிக்கின்றன. ஒலிப்பது ஒலித்துக் கொண்டிருக்கிறது” என்றார். RINGING RINGING என்று அவர் கூறியதை சீடர்கள் புரிந்து கொண்டார்கள். எந்த வித தடையுமின்றி மணிகள் ஒலிக்கின்றன எல்லையற்ற பேரமைதியில்!
பேரமைதி என்பது இயக்கம் இல்லாத ஒரு மந்தமான நிலை அல்ல! அது உயிர்த்துடிப்புள்ள அகண்டமான ஒரு பெரும் நிலை!
சமுதாயத்திலிருந்து விலகி நின்று ஒருவன் இந்த பேரமைதியைப் பிடிக்க வேண்டும் என்பதில்லை!
வாழ்க்கையில் உள்ளார்ந்து எப்போதும் ஒருவன் அனுபவிக்க வேண்டிய நிலை இது!
சமுதாயத்திலிருந்து விலகி ஒருவன் தனியாக இருந்து எங்கு சென்றாலும் அது அமைதியைத் தந்து விடாது.
மலையின் உச்சிக்குச் சென்று வசிப்பது பேரமைத்திக்கான ஒரு வழியாகத் தோன்றும்.
அது சூழ்நிலைகளை நம் போக்கில் வரச் செய்வதற்கான ஒரு வழி போலத் தோன்றலாம்.
ஆனால் உண்மை அதுவல்ல.
சமுதாயத்தில் மக்களுடன் இணைந்து வாழ்ந்து பேரமைதியை உணர்ந்தால் அது தான் உண்மையான பேரமைதி.
ஆகவே மக்களுடன் இணைந்து இதைக் கொள்ள உதவுவது தான் ஜாஜென் என்னும் தியானம்!
ஆரவார சூழ்நிலை இருந்தாலும் மனத்தின் உள்ளே பேரமைதி எப்போதும் இருப்பதே அதன் உச்சகட்ட பயனாகும்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
கொலம்பியா எங்கே உள்ளது ?
தென் அமெரிக்க கண்டத்தின் உச்சியில் கொலம்பியா என்னும் நாடு இருக்கிறது .
இங்கு என்ன அதிசயங்கள் உள்ளன ?
வைரத்துக்கு அடுத்தபடியான மதிப்புடைய மரகதக் கற்கள் அதிகமாகக் கிடைக்கும் நாடு கொலம்பியா.
உலகிலேயே மிகப்பெரிய கழுகுகள் வசிக்கும் நாடு கொலம்பியா .
தீ வளையம் RING OF FIRE என்னும் மிகப்பெரிய பரப்புக்குட்பட்ட இந்த நாட்டில் எரிமலைகளும் நில நடுக்கமும் அதிகம் உண்டு
புதிய அதிசயம் என்ன ?
வரலாற்றில் புதிர் விடுவிக்கப்படாத விஷயங்கள் நிறைய இருக்கின்றன. இந்தியாவில் சிந்து சமவெளி- சரஸ்வதி நதி தீர எழுத்துக்களை இதுவரை எவராலும் படிக்கமுடியவில்லை இதே போல கொலம்பியா நாட்டின் கல்லறைகளில் காணப்படும் நூற்றுக் கணக்கான சிலைகளை ஏன் உருவாக்கினார்கள்? யார் உருவாக்கினார்கள்? என்று தெரியவில்லை.
இவர்கள் சூரிய வழிபாட்டுக்காரர்கள்; பெரிய, சூரிய தேவன் சிலை புன்சிரிப்புடன் காட்சி தருகிறது
புதிர்போடும் சிலைகள் பற்றி நேஷனல் ஜியாக்ரபிக் மேகசின் படங்களை வெளியிட்டுள்ளது .
இவற்றின் காலம் என்ன?
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இவைகளைச் செதுக்கியிருப்பார்கள் என்று தொல்பொருட் துறை அறிஞர்கள் சொல்கிறார்கள்; சிலைகளுடன் இருந்த மண் மற்றும் தாவர பிராணி வகைகளையும் எலும்புகளையும் ஆராய்ந்ததில் இது தெரிய வந்தது. . எலும்புக்கு கூடுகள் மண்ணோடு மண்ணாகிவிட்டன.
உலகிலேயே நீண்ட மலையான ஆண்டீஸ் மலை இந்த நாட்டின் வழியாகச் செல்கிறது; அந்த மலையில் செயின்ட் அகஸ்தின் என்ற இடத்தில் 600 சிலைகள் கண்டு பிடிக்கப்பட்டன. தென் அமெரிக்கா மத்திய அமெரிக்கா முழுதுமுள்ள செல்வத்தை 500ஆண்டுகளுக்கு முன்னர் ஸ்பெயின் நாட்டு காலனி ஆதிக்கக் கொள்ளையர்கள் எடுத்துச் சென்றனர். அவர்கள் வந்தபோதே இந்தக் கல்லறை கள் கேட்பாரற்றுக் கிடந்தன.
சிலைகள் உடைய கல்லறைகளில் செல்வம் எதுவும் இல்லை. ஆகையால் இவர்கள் செல்வந்தர்களின் கல்லறை அல்ல ; அதீத சக்தி படைத்த சூப்பர் மனிதர்களின் கல்லறைகளாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கணிக்கின்றனர்.
ஏழு அடி உயரமுள்ள ஒரு வீரனின் சிலை இந்த இடத்தைக் காவல் காத்து நிற்கிறது; எரிமலைப் பாறைகளால் சிலைகள் உருவாக்கப்பட்டதால் கனமான பொருளைக் கொண்டு ஓங்கி அடித்தால் சிலைகள் உடைந்து விடும் இப்போது பருவ மழை வெய்யில் முதலியவற்றிலிருந்து சிலைகளைக் காக்க கூடாரங்கள் போட்டுள்ளனர்.
தென் அமெரிக்காவில் உலோகக் கருவிகள் கண்டு பிடிக்கும் முன்னர் இவர் சிலைகளை வடித்தது எப்படி என்பதும் வரலாற்று ஆசிரியர்களுக்குப் புதிராகவே உளது.
இன்கா, மாயா, ஒல்மெக், அஸ்டெக் போன்ற பல நாகரீகங்களைக் கண்ட தென் அமெரிக்காவில் இவர்கள் யார்? என்ன இனம் ?என்பது இதுவரை புதிராகவே நீடிக்கிறது.
சோலையில் வண்டு இனங்கள் சுரும்போடு இசை முரலச், சூழ்ந்த
ஆலையின் வெம்புகை போய், முகில் தோயும் ஆரூரில்,
பாலொடு நெய் தயிரும் பயின்று ஆடும், பரமேட்டி பாதம்,
காலையும் மாலையும் போய்ப் பணிதல், கருமமே
– திருஞானசம்பந்தர் திருவடி போற்றி
ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம்
பெறுவது தமிழ்நாட்டில் உள்ள சப்தவிடங்கத் தலங்களில் ஒன்றாகவும் பஞ்ச பூத தலங்களில் ஒன்றாகவும் விளங்கும் பிரம்மாண்டமான கோவிலைக் கொண்டுள்ள திருவாரூர் திருத்தலமாகும்.
இத்திருத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் தலைநகராகத் திகழ்கிறது. மயிலாடுதுறை, தஞ்சாவூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட ஊர்களிலிருந்து இங்கு செல்ல பஸ் வசதி உள்ளது.
.
ஏராளமான புராண வரலாறுகளையும் மற்ற சிறப்புகளையும் கொண்டிருக்கும் இத்தலத்தின் சிறப்புகளை முழுமையாக யாராலும் உரைக்க முடியாது.
முதலாவது இத்தலம் தோன்றிய காலத்தையும் இங்கு ஈசன் குடி கொண்ட காலத்தையும் யாராலும் வரையறுக்க முடியவில்லை. அப்பர் பெருமான் தில்லைக்கும் முற்பட்ட காலத்தில் தோன்றிய தலம் இது என்று குறிப்பிடுகிறார்.
இறைவன்; வன்மீகநாதர், புற்றிடங்கொண்டார்
உற்சவர்: தியாகராஜன், வீதி விடங்கர் உள்ளிட்ட பல திருநாமங்கள்
இறைவி : கமலாம்பிகை, நீலோத்பலாம்பாள்
தல விருட்சம் : பாதிரி. இது ஆடகேஸ்வரத்திற்குத் தென்பாகத்தில் உள்ளது.
சிவபிரானுக்கு வன்மீகநாதர் சந்நிதியும் தியாகராஜர் சந்நிதியும் ஆக இரு சந்நிதிகள் உள்ளன.
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் பாடப்பெற்ற திருத்தலம் இது.
மநு நீதிச் சோழன் வாழ்ந்த திருத்தலம் இது.
முக்தி தரும் தலங்கள் மூன்றில், பார்த்தால் சிதம்பரமும், இறந்தால் காசியும், பிறந்தால் திருவாரூரும் முக்தியைத் தரும் என்பது ஆன்றோர் வாக்கு.
பஞ்சபூத தலங்களில் இது பிருதிவி தலமாகும். அதாவது மண்ணுடன் தொடர்பு கொண்ட தலமாகும். இங்கு மூலமூர்த்தி பூமியில் புற்றிலிருந்து எழுந்ததால் புற்றிடங்கொண்டார் என்ற பெயரைக் கொண்டுள்ளார். வடமொழியில் வன்மீகநாதர் என்ற பெயரால் அழைக்கப்படுகிறார்.
முக்கியமான புராண வரலாறு இங்கு தியாகராஜர் எழுந்தருளிய வரலாற்றை விவரிக்கிறது.
தேவேந்திரனுக்கும் வலாசுரனுக்கும் முன்னொரு காலத்தில் பெரும் போர் நடைபெற்றது. அசுரனின் வலிமையைத் தாங்காமல் பூலோகத்திற்கு வந்து ஒளிந்தான் தேவேந்திரன்.
அக்காலத்தில் சோழ நாட்டை ஆண்டு வந்தவன் பெரும் பராக்கிரமுடைய முசுகுந்த சக்கரவர்த்தி ஆவான். அவன் தேவேந்திரனின் சிறந்த நண்பன். தேவேந்திரன் முசுகுந்தனின் உதவியை நாடவே அவனும் வலாசுரனிடம் போரிட்டு அவனைத் தோற்கடித்தான்.
மகாவிஷ்ணுவால் தேவேந்திரனுக்கு வழங்கப்பட்ட தியாகராஜரை தினமும் வழிபட்டு வந்தான் தேவேந்திரன். தியாகராஜர் முசுகுந்தனிடம் அவனுக்கு மட்டும் கேட்கும் விதமாக, “என்னைத் திருவாரூக்குக் கொண்டு செல்” என்று கூறினார்.
தேவேந்திரன் முசுகுந்தன் விடை பெறும் போது, “என்ன வேண்டும்” என்று அன்புடன் கேட்,க” எனக்குத் தியாகராஜர் வேண்டும்” என்று பதிலளித்தான் முசுகுந்தன்.
திகைப்படைந்த தேவேந்திரன் ஆறு தியாகராஜர் உருவங்களை ஒரே போல வடிவமைத்து முசுகுந்தனிடம் காட்டினான். ஒரே ஒரு சிலை மட்டும், ‘என்னைத் திருவாரூருக்குக் கொண்டு செல்’ என்று முசுகுந்தனுக்குத் தெரிவிக்க அதை மட்டும் கேட்டான் முசுகுந்தன்.
இந்திரனும் அதைக் கொடுத்தான். வன்மீகர் திருக்கோவிலுக்குத் தெற்கே ஒரு கோவில் அமைத்து அதில் தியாகராஜரை பிரதிஷ்டை செய்தான் முசுகுந்தன்.
முசுகுந்தன் பிறப்பு பற்றியும் ஒரு வரலாறு உண்டு. முன் ஜென்மத்தில் குரங்காய் இருந்த அவன் சிவ பார்வதி மீது வில்வ இலைகளையும் காய்களையும் பிய்த்து எறிந்து கொண்டிருந்தான். வில்வ இலைகளால் பூஜை செய்த புண்ணியத்தால் அவன் இந்த ஜன்மத்தில் முசுகுந்தனாய்ப் பிறந்தான்.
கோயில் ஐந்து வேலி, குளம் ஐந்து வேலி, ஓடை ஐந்துவேலி என்பது இங்கு வழங்கப்படும் பழமொழி)
ஐந்து வேலி நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த பிரம்மாண்டமான ஆலயத்தில் 9 ராஜ கோபுரங்களும் 80 விமானங்களும்,, உயரமான 12 மதில்களும், ,13 மண்டபங்களும்,,15 தீர்த்தக் கிணறுகளும், ஐந்து பிரகாரங்களும்,, 24 உட்கோவில்களும் எண்ண முடியாத சிவலிங்கங்கங்களும் 86 விநாயகர் சிலைகளும் உள்ளன. கீழ்க்கோபுரம் 118 அடி உயரம் கொண்டது;
வேதாரணியம் விளக்கழகு, திருவாரூர் தேர் அழகு, திருவிடைமருதூர் தெரு அழகு என்ற வழக்கு மொழி இந்தத் தேரின் சிறப்பைப் பறைசாற்றுகிறது. இந்தத் திருத்தேரின் உயரம், கனம், கட்டுமானம்,அலங்காரம், ஓட்டம், ,மூலைகளில் திரும்பும் வன்மை ஆகிய எல்லாவற்றிலும் தனிச் சிறப்பைக் கொண்டுள்ளது.
இந்தத் தலத்தில் தான் சுந்தரர் பரவை நாச்சியாரைச் சந்தித்தார். விருத்தாசலத்தில் தான் பெற்ற பொன்னை அங்கு நதியில் போட்டு இதைத் திருவாரூர் கமலாலயத்தில் வருவித்துத் தர வேண்டும் என்று சிவபிரானை சுந்தரர் வேண்ட அவரும் அப்படியே அருளினார். ‘ஆற்றிலே போட்டு குளத்திலே தேடுகிற மாதிரி’ என்ற பழமொழி இந்த வரலாற்றின் அடிப்படையிலேயே எழுந்ததாகும்.
இங்கு தான் நமிநந்தி அடிகள் நீரினால் விளக்கு ஏற்றி எரிய வைத்தார்.
இன்னும் இப்படி ஏராளமான சிறப்புகளைக் கொண்டது திருவாரூர் திருத்தலம்.
காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் தியாகராஜரும் கமலாம்பிகை அம்மனும் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;
லண்டன் மாநகரிலிருந்து செய்திகளைவாசித்து வழங்குபவர் வைஷ்ணவி ஆனந்த்
அனைவருக்கும் வணக்கம்
இன்று ஞாயிற்றுக்கிழமை ; மார்ச் மாதம் இரண்டாம் தேதி ; 2025-ம் ஆண்டு
****
முதலில் மஹா கும்பமேளா செய்திகள்
கும்பமேளாவில் 66 கோடி பேர் நீராடினர்
கின்னஸ் புத்தகத்தில் மஹா கும்பமேளா.. புதிய சாதனைகள்!
மஹா கும்பமேளாவில் புதிய சாதனைகள் நிகழ்த்தப்பட்டு, கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளன.
ஒற்றுமை, சமூக நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் 80 அடி நீளம், 5 அடி அகல துணியில் 10,000 பேர் பங்கேற்று கையால் வரைந்த ஓவியம்; 15,000 துாய்மை பணியாளர்கள் இணைந்து ஒரே நேரத்தில் விழா நடந்த இடத்தில் துாய்மை பணி மேற்கொண்டது உள்ளிட்ட புதிய சாதனைகள் கின்னஸ் அமைப்பால் உலக சாதனையாக அங்கீகரிக்கப்பட்டன. இதற்கான சான்றிதழை முதல்வரிடம் கின்னஸ் அமைப்பினர் வழங்கினர். இதற்கு முன் 10,000 பேர் ஒரே நேரத்தில் துாய்மை பணி மேற்கொண்டதே சாதனையாக இருந்தது.
66.21 கோடி பேர்!
நம்பிக்கை, ஒற்றுமை, சமத்துவத்தின் மிகப்பெரும் திருவிழாவான மஹா கும்பமேளா சிறப்பான முறையில் நடந்து முடிந்துள்ளது. இதில், 66.21 கோடி பேர் பங்கேற்று புனித நீராடினர். பிரதமர் மோடி தலைமையின் கீழ் நடந்த இந்தத் திருவிழா, உலக வரலாற்றில் இதுவரை நடக்காத ஒன்று; மறக்க முடியாத ஒன்று என்று உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்
கும்பமேளா பண்டிகை மூலம் மூன்று லட்சம் கோடி ரூபாய் வருமானம் கிடைத்ததாக உத்தரப்பிரதேச வணிகர்கள் மதிப்பிட்டுள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்ற மகா கும்பமேளா நிறைவு நாளில் பக்தர்கள் அலை அலையாய் குவிந்து புனித நீராடினர். மக்கள் கடலே உருவாகிவிட்டது. மகா சிவராத்திரி என்பதால் பக்தர்கள் கட்டுக்கடங்காமல் குவிந்தனர். இது உலகம் இதுவரை கண்டிராத ஒரு மாபெரும் புதிய சாதனை ஆகும்.
உலகின் மிகப் பெரிய இந்துமத பண்டிகையான மகா கும்ப மேளா 26–ம் தேதி நிறைவு பெறறது. 45 நாட்கள் நடைபெற்ற பிரமாண்ட இந்து மத திருவிழாவில் கலந்து கொள்ள உலகமெங்கும் இருந்து கோடிக்கணக்கான பக்தர்கள் வந்தனர்.
கும்ப மேளாவில் காஞ்சி சுவாமிகள் புனித நீராடல்
மகா கும்பமேளாவில் காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் புனித நீராடினார்.
ஒருமைப்பாடு, கலாச்சார பாரம்பரியத்திற்கு சிறந்த உதாரணம் மகா கும்பமேளா என்று காஞ்சி ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கூறினார்.
பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் நடைபெற்று வரும் மகா கும்ப மேளாவில் நேபாளத்தில் இருந்து இதுவரை 50 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித நீராடியுள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் முழுவதும் மகாகும்பமேளா புனித நீரைக் கொண்டு செல்ல, அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
கும்பமேளாவில் கலந்து கொள்ள முடியாத உத்தரப்பிரதேச மக்களுக்காக 75 மாவட்டங்களுக்கும் திரிவேணி சங்கம புனித நீரை கொண்டு செல்ல யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். அதன்படி 365 தீயணைப்புத்துறை வாகனங்கள் மூலம் புனிதநீர் கொண்டு செல்லப்படுகிறது.
மகா கும்பமேளா விழா முடிவடைந்ததும், அங்கு தூய்மைப் பணியில் ஈடுபட்டு வந்த பணியாளர்களின் சேவையை பாராட்டி உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் அவர்களை கவுரவித்தார். அவர்களுடன் அமர்ந்து உணவும் உண்டார் .மகா கும்பமேளா நடந்த இடத்தில்15 நாட்கள் துப்புரவுப் பணி தொடங்கப்பட்டுள்ளதாக உத்தர பிரதேச அரசு தெரிவித்துள்ளது .
மகா கும்பமேளாவில் பணியாற்றிய போலீசாருக்கு போனஸ், 7 நாள் விடுப்பு – யோகி ஆதித்யநாத் அறிவிப்பு
மகா கும்பமேளாவில் பணியாற்றிய போலீசாருக்கு போனஸ் மற்றும் 7 நாள் விடுப்பு வழங்கப்படும் என யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.
பிரயாக்ராஜில் நடைபெற்று வந்த கும்பமேளா நிறைவடைந்ததை தொடர்ந்து, முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் பிரயாக்ராஜ் சென்றார். அங்குள்ள கங்கா மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, மகா கும்பமேளாவில் பணியாற்றியவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்தார். அப்போது அவர் கூறுகையில், இந்த பிரமாண்ட விழாவை சிறப்பாக நடத்துவதற்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட 75 ஆயிரம் போலீசாரின் பணி மிகவும் மகத்தானது. அவர்களுக்கு அரசு ரூ.10 ஆயிரம் சிறப்பு போனஸ் மற்றும் ‘மகா கும்ப சேவா பதக்கம்’ மற்றும் 7 நாள் விடுப்பு வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
*****
விதவிதமாக நடக்கும் கும்பமேளா புனித நீராடல்: வீடியோ காலில் கணவரை தண்ணீரில் மூழ்கி எடுத்த மனைவி
மகா கும்பமேளா புனித நீர் ஆன்லைனில் கூட விற்பனை செய்யப்படுகிறது.
மகா கும்பமேளாவுக்கு ஒரு பெண் சென்றுள்ளார். அவர் புனித நீராடிய நிலையில் அவருடைய கணவரால் வர முடியவில்லை. இதனால் அவருடைய கணவர் வீடியோ கால் செய்த போது அப்படியே செல்போனை தண்ணீரில் 3 முறை மூழ்கி எடுத்தார். அப்பெண் நீரில் செல்போனை தண்ணீரில் 3 முறை மூழ்கி எடுத்தார். அப்பெண் நீரில் செல்போனை நனைத்து எடுக்கும் வீடியோ வைரலாகிறது.
******
மோடி புகழாரம்
இந்த மஹா கும்பமேளா குறித்து, சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்ட பதிவு:
பிரயாக்ராஜில், 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மஹா கும்பமேளா விழா சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. இது தொடர்பாக என் எண்ணங்களை பதிவிட விரும்புகிறேன். முதலில் இந்த விழாவை சிறப்பாக நடத்திய முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தர பிரதேச பாரதீய ஜனதா கட்சி அரசுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த மாநிலத்துக்குட்பட்ட தொகுதியின் எம்.பி., என்ற முறையில் பெருமை அடைகிறேன். துாய்மை பணியாளர், போலீஸ், சுகாதாரப் பணியாளர், படகு ஓட்டிகள், சமையற்காரர் என, ஒவ்வொருவரும் தன்னார்வத்துடன், தன்னலமில்லாமல் சேவையாற்றினர். விழா சிறப்பாக நடப்பதற்கு உதவிய, உத்தர பிரதேச மக்களுக்கும் பாராட்டுகள்.
முந்தைய கும்பமேளாக்களின் அடிப்படையில், இந்த ஆண்டு எவ்ளவு பேர் வருவர் என, கணிக்கப்பட்டது.
ஆனால், அந்தக் கணிப்புகளை எல்லாம் தாண்டி, 66 கோடி பேர் புனித நீராடியுள்ளனர். இது அமெரிக்க மக்கள் தொகையைவிட இரண்டு மடங்கு அதிகம். இந்த திருவிழா, உலகளவில் நிர்வாகவியல் நிபுணர்கள், திட்டமிடல் மற்றும் கொள்கை நிபுணர்களுக்கு புதிய ஆய்வுகளை மேற்கொள்ள வழிவகுத்துள்ளது . என்று பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்
*****
அடுத்ததாக சிவராத்திரி செய்திகள்
மகா சிவராத்திரி – கொதிக்கும் நெய்யில் வெறும் கையால் அப்பம் சுட்டு பிரசாதமாக வழங்கிய 92 வயது மூதாட்டி!
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் நடைபெற்ற சிவராத்திரி விழாவில் கொதிக்கும் நெய்யில் வெறும் கையால் 92 வயது மூதாட்டி அப்பம் சுட்டு எடுத்தார். மேலும் அப்பத்தை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கினார். இந்த நிகழ்ச்சியை நள்ளிரவு நேரத்திலும் ஏராளமான பக்தர்கள் கண்டு களித்தனர்.
தேனி மாவட்டம், பெரியகுளம் திரௌபதி அம்மன் கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு பூக்குழி இறங்கும் விழா நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் பூக்குழி இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இந்த நிகழ்வில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மகா சிவராத்திரியை முன்னிட்டு கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில் நாட்டியாஞ்சலி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. விடிய விடிய நடைபெற்ற நாட்டியாஞ்சலி விழாவை ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கண்டுகளித்தனர்.
மதுரையிலுள்ள மீனாட்சி அம்மன் கோவிலில் விடிய விடிய சிறப்பு பூஜை நடந்தது; பக்தர்கள் இரவு முழுவதும் சாமி தரிசனம் செய்தார்கள்.
****
கன்னியாகுமரி மாவட்டத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க சிவாலய ஓட்டம் நடைபெற்றது. மஹா சிவாலய ஓட்டம் நடைபெறும் பனிரெண்டு சிவாலயங்களிலும் RSS சுயம் சேவகர்கள் கோஸ் இசை வாசித்த வண்ணம் பேரணியாக சென்றனர்.
ஜில்லா கோஸ் ப்ரமுக் சுவாமிதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்சியில் 35க்கும் மேற்பட்ட சுயம் சேவகர்கள் கலந்து கொண்டனர்.
*****
ஈஷா மஹாசிவராத்திரி விழா; உள்துறை அமைச்சர் அமித் ஷா புகழாரம்!
கோவை ஈஷா யோக மையத்தில் மஹாசிவராத்திரி விழா பிப்.,26 ஆம் தேதி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது: சத்குருவின் அழைப்பை ஏற்று ஆதியோகி தரிசனம் பெறுவதிலும், மகாதேவரின் மகத்துவத்தை வெளிப்படுத்தும் மஹாசிவராத்திரி விழாவில் பங்கேற்பதை பெரும் பேறாக கருதுகிறேன்.
இன்று ஆன்மீகத்தில் சோமநாத்திலிருந்து கேதார்நாத் வரை, பசுபதிநாத்திலிருந்து ராமேஸ்வரம் வரை, காசியிலிருந்து கோவை வரை முழு பாரதமும் சிவபெருமானின் திருவருளில் திளைத்துக் கொண்டிருக்கிறது. பிராயாக்ராஜ்ஜில் மஹா கும்பமேளா நிறைவு பெறுவதை சுட்டும் வகையில் ஈஷாவில் மஹாசிவராத்திரி விழா பக்தியின் கும்பமேளாவாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
சத்குரு உருவாக்கியிருக்கும் இந்த இடம் பக்திக்கான இடமாக மட்டுமல்லாமல் யோகம், ஆத்ம சாதனை, பக்தி, தன்னை உணர்தல் ஆகியவற்றிற்கான இடமாக இருக்கிறது. ஈஷா பல லட்சம் உயிர்களை யோகா மற்றும் தியானத்தின் மூலமாக நெறிப்படுத்தி, சரியான சிந்தனையை விதைத்து சரியான பாதையில் செல்ல உலகெங்கும் வழிகாட்டி கொண்டிருக்கிறது.
இளைஞர்களையும், ஆன்மீகத்தையும் இணைப்பதில் சத்குரு மகத்தான பங்கை ஆற்றி இருக்கிறார்கள். மிகுந்த ஞானம் கொண்டதும், அதே நேரத்தில் தர்க பூர்வமானதுமான முறையில் கருத்துகளை இளைஞர்களிடம் கொண்டு சேர்த்திருக்கிறார்கள். நம்முடைய சத்குருவை நான் வர்ணிக்க வேண்டுமென்றால் ‘ஒரு லட்சியத்தோடு இயங்கிக் கொண்டிருக்கிற ஞானி’ என வர்ணிக்க வேண்டும். உலகத்தை மாற்ற வேண்டும் என்றால் முதலில் உங்களை மாற்ற வேண்டும் என்பதை சத்குரு உணர்த்தி வருகிறார்.
சத்குரு மேற்கொண்ட மண் காப்போம் இயக்கத்தின் போது அவரோடு நானிருந்தேன். சத்குருவைப் பற்றி நான் பணிவோடு சொல்லி கொள்கிறேன், நீங்கள் இந்த பாரத தேசத்திற்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம். மகரிஷி திருமூலர் ஞானிகளின் அடையாளமாக, தீவிரமான தவத்தின் மூலம் சைவ மரபில் திருமந்திரம் எனும் 3000 அற்புத பாடல்களை அருளியிருக்கிறார்.
அந்த வரிசையில் மகத்துவமான மற்றொரு உதாரணம் மகரிஷி அகத்தியர், அவர் சனாதனத்தின் பல்வேறு பரிமாணங்களை வெளிப்படுத்திய ஞானி. தமிழ் பண்பாட்டில் சிவ வழிபாட்டிற்கு சிறப்பான இடம் உண்டு. சத்குருவின் மஹாசிவராத்திரியை பற்றி கேள்வி பட்டிருக்கிறேன். இன்று நேரில் கலந்து கொண்ட பிறகு உலகித்திற்கே நான் சொல்ல விரும்புவது இது மிகவும் மகத்தான ஆச்சரியமான நிகழ்ச்சி.
சத்குரு இந்த மஹாசிவராத்திரியை ஆன்மீக விஞ்ஞானத்தின் அடிப்படையாக கொண்டு ஞானத்தையும், அறிவியலையும் இணைக்கின்ற அற்புதத்தை செய்திருக்கிறார் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார்.
ஈஷா மஹாசிவராத்திரி விழாவிற்கு அனைவரையும் வரவேற்று சத்குரு பேசியதாவது: உள்துறை அமைச்சர் ஒரு விதத்தில், சர்தார் வல்லபாய் பட்டேல் செய்ததை போல நாட்டை ஒன்றாக கொண்டு வந்திருக்கார். காஷ்மீரை நம் இந்தியாவின் பாகமாக கொண்டு வந்து இருக்கிறார். காஷ்மீர் சிறப்புச் சட்டம் 370 நீக்கம் மூலம் அந்த பகுதி இயல்பு நிலைக்கு திரும்பி இருக்கிறது. தற்போது லட்சக்கணக்கான மக்கள் காஷ்மீருக்கு சுற்றுலா செல்கிறார்கள். நாட்டின் இறையாண்மை மற்றும் சட்டம் ஒழுங்கை சரியாக கவனிக்கவில்லை என்றால், கல்வி, தொழிநுட்பம், ஆன்மீகம், பொருளாதாரம் உள்ளிட்டவைகள் வீணாகிப் போகும். நம் மத்திய அமைச்சருக்கு நன்றி என்று சத்குரு ஜாக்கி வாசுதேவ் கூறினார்.
****
தினமும் யோகா: அரசு மருத்துவமனையில் ஏற்பாடு
சென்னை: அரசு மருத்துவமனைகளில், 1,300 யோகா பயிற்றுநர்களை நியமிக்க, இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை இயக்குநர் எம்.விஜயலட்சுமி உத்தரவிட்டுள்ளார்.
உடல் மற்றும் மனதிற்கு பல்வேறு நன்மைகளை யோகா பயிற்சி தருகிறது. குறிப்பாக, உடல் வலிமை, நெகிழ்வுத்தன்மை, ஆற்றல் அளவு அதிகரிப்பதுடன், மன அமைதியும் மேம்படுகிறது. தினமும் யோகா பயிற்சி செய்வது, பல்வேறு நோய்களுக்கு தீர்வாக இருப்பதுடன், உடல் புத்துயிர் பெறவும் உதவுகிறது.
எனவே, அனைத்து தரப்பு மக்களும் யோகா பயிற்சி மேற்கொள்ளும் வகையில், அரசு மருத்துவமனைகளில், அனைத்து ஆயுஷ் தேசிய நல்வாழ்வு மையங்களில், 650 இருபாலர் யோகா பயிற்றுநர்கள் மற்றும் 650 பெண் யோகா பயிற்றுநர்கள் என, 1,300 பேரை நியமிக்க முடிவாகி உள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர்களுக்கும், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை இயக்குநர் விஜயலட்சுமி உத்தரவிட்டுள்ளார்.
*****
தர்காவுக்குள் இந்து அமைப்பினர் சிவலிங்க பூஜை
கர்நாடக மாநிலம் கல்புர்கியில் உள்ள தர்காவுக்குள் சிவலிங்க பூஜை செய்ய அம்மாநில உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதையடுத்து நேற்று இந்து அமைப்பினர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிவலிங்க பூஜை செய்து வழிபட்டனர்.
கர்நாடகா மாநிலம் கல்புர்கி மாவட்டத்தில் ஆலந்து பகுதியில் லட்லே மஷாக் என்ற பழமையான தர்கா அமைந்துள்ளது. சூஃபி துறவி லட்லே மஷாக்கின் நினைவிடம் அமைந்துள்ள இந்த தர்காவில் இந்து துறவி ராகவ சைதன்யாவின் சமாதியும் அமைந்துள்ளது. இந்த சமாதியில் உள்ள சிவலிங்கத்துக்கு இந்துக்கள் சிவராத்திரி தினத்தன்று பூஜை செய்து வழிபாடு செய்தனர்.
ஹனுமன் சேனா அமைப்பை சேர்ந்த சித்தராமையா ஹிரேமத், லட்லே மஷாக் தர்காவில் சிவலிங்க பூஜை செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என கர்நாடக உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி நடராஜன், ‘’சிவராத்திரி தினத்தன்று (26ம் தேதி) காலை 8 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை முஸ்லீம்கள் வழிபாடு நடத்தலாம். பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணிவரை இந்துக்கள் 15 பேர் லட்லே மஷாக் தர்காவுக்குள் சிவராத்திரி பூஜை செய்யலாம்’’என அனுமதி அளித்தார்.
சிவராத்திரி தினமான நேற்று சித்தராமையா ஹிரேமத் உள்ளிட்ட 15 பேர் அந்தலோனா சித்தலிங்கையா சுவாமி தலைமையில் சிவலிங்க பூஜை நடத்தினர். 4 மணி நேரம் நடந்த இந்த பூஜையின் போது பலத்த போலீஸ் போடப்பட்டிருந்தது.
*****
மாசி மகம்: புதுவை, காரைக்காலில் 13-ந்தேதி பள்ளிகளுக்கு விடுமுறை
மாசி மகத்தையொட்டி வருகிற மார்ச் 13-ம் தேதி அன்று புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு கல்வித்துறை விடுமுறை அறிவித்துள்ளது. அன்றைய தினம் பொதுத்தேர்வுகள் இருந்தால், அவை வழக்கம் போல நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
ஒவ்வொரு ஆண்டு மாசி மகம் திருவிழா நடைபெறும் வைத்திக்குப்பம் கடற்கரையில், புதுச்சேரி மட்டுமில்லாது தமிழகத்தைச் சேர்ந்த ஏராளமான கோயில்களைச் சேர்ந்த உற்சவர்கள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் புரிவது வழக்கம்.ஒரே இடத்தில் அனைத்து முக்கியக் கோயில்களின் உற்சவர்களும் எழுந்து அருள்வதால் ஏராளமான பக்தர்கள் மாசி மகத்துக்கு தங்கள் குடும்பத்துடன் வந்து சாமி தரிசனம் செய்வார்கள் .
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசி திருவிழா : மார்ச் 3-ஆம் தேதி தொடக்கம்
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித் திருவிழா வரும் 3ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, 12 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மாசி திருவிழாவை முன்னிட்டு நாள்தோறும் சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வருவார் என கூறப்பட்டுள்ளது. மேலும், திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 12ஆம் தேதி நடைபெறும் என்றும், மார்ச் 14-ஆம் தேதி இரவு தெப்பத்திருவிழா நடைபெறும் எனவும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
****
இத்துடன் செய்திகள் நிறைவடைந்தன.
உலக இந்துமதச் செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;
லண்டன் மாநகரிலிருந்து செய்திகளை வாசித்து வழங்கியவர் வைஷ்ணவி ஆனந்த் .
அன்னியரின் படையெடுப்பைத் தடுத்து ஆக்கிரமிப்பு எண்ணத்தைத் தூள் தூளாக்கி அவர்களை விரட்டியடித்த இந்திய மன்னர்களின் வீரம் வர்ணனைக்கு அப்பாற்பட்டது.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர்கள் அனைவரது வீரமும் தீரமும் திறமையும் சாதுரியமும் சரியாக இந்திய வரலாற்றில் பதிவு செய்யப்படவில்லை – இன்னும்!
அப்படிப்பட்ட ஒரு சரித்திரம் தான் பண்டையகாலத்தில் ப்ராக்ஜோதிஷ்புரம் என்று பிரசித்தமான பெயரைப் பெற்ற இன்றைய ராஜதுர் என்ற வட கௌஹாத்தி நகரை ஆண்ட மன்னன் பிருதுவின் வரலாறு! காமரூபம் என்று அனைவராலும் அறியப்படும் இடம் இது.
ஆண்டு கி.பி. 1206.
இந்து மற்றும் புத்தமத கல்வி நிலையங்களையும் கோவில்களையும் தரைமட்டமாக்கும் வெறியுடன் பத்தாயிரம் வீரர்களுடன் வந்த பக்தியார் கில்ஜியின் கண்கள் திபெத்தின் மீது பதிந்தன.
கி.பி. 1197ம் ஆண்டு நாலந்தாவை தரைமட்டமாக்கினான் கில்ஜி. ஹிந்து மற்றும் புத்தமத அறிவு சால் நிலையங்கள் மற்றும் நூல்களை அழிப்பது அவனது குறிக்கோள்களில் தலையாய ஒன்றாக இருந்தது.
வங்காளத்தை வென்ற பக்தியார் கில்ஜி தன் மதத்திற்கு மாறி தன்னிடம் பணியாற்றிய அலி மெக் என்பவனின் உதவியைப் பெரிதும் நாடினான்.
காமரூபத்தின் வழியாக திபெத்திற்குச் செல்வது அவன் எண்ணம்.
ஆனால் காமரூபத்தை ஆண்ட மன்னன் பிருது இதற்குச் சற்றும் உடன்படவில்லை.
கில்ஜியின் வேண்டுகோளை நிராகரித்த அவன் அதை விட்டுவிடுமாறு பதில் அனுப்பினான்.
ஆனாலும் கில்ஜியின் ஆசை விடவில்லை. தன் படைவீரர்களுடன் முன்னேறலானான்.
பிரம்மபுத்ராவின் கிளை நதியான பாக்மதி ஆறு வெள்ளப் பெருக்கோடு பாயும் ஜீவ நதி. அதைக் கடக்க ஆங்காங்கே பாலங்கள் உண்டு.
காமரூபத்திற்கு வரும் கல்பாலத்தை உடைக்க ஆணையிட்டான் பிருது. வழியில் எங்கும் உணவு கிடைக்கக்கூடாது என்றும் அங்கு வாழும் பழங்குடியினருக்கு ஆணையிட்டான்.
அவர்கள் அனைவரும் தங்கள் நிலப்பரப்பை நன்கு உணர்ந்தவர்கள்.
விளைவு – படைவீரர்களுக்கு. உணவே இல்லை. கில்ஜி திகைத்தான்
தங்களது குதிரைகளைக் கொன்று தின்ன வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளானார்கள் அவனது படைவீரர்கள்.
திருப்பிச் செல்ல முயன்ற போது அவன் செல்லும் வழியில் இருந்த பாலங்கள் உடைந்திருந்தன.
என்ன செய்வது? வீரர்கள் அனைவரும் ஆற்றை நீந்திக் கடந்தனர். சேனையில் வீரர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து விட்டது.
ஓட்டம் பிடிப்பவர்கள் மீது ஆங்காங்கே இருந்த பழங்குடியினர் தங்கள் மூங்கில் வித்தைகளைக் காண்பித்தனர். மூங்கிலினால் ஆன வில் மற்றும் இதர ஆயுதங்களுடன் அவர்கள் கொரில்லா தாக்குதலை மேற்கொண்டனர். கில்ஜியை செயலிழக்கச் செய்தனர்.
இறுதியாக காமரூபம் காம்தேவ் ஆலயத்தில் அடைக்கலம் புகுந்தான் கில்ஜி.
ஆனால் அங்கும் மூங்கிலினால் ஆன ஒரு வேலியைச் சுற்றி அமைத்தான் பிருது.
தப்பித்தோம் பிழைத்தோம் என்று பின்வாங்கி ஓடினான் கில்ஜி. அவனது கூடப் பிழைத்தவர்கள் சில நூறு பேர்கள் மட்டுமே தான்.
அந்த படையெடுப்புக்குப் பின் எந்த ஒரு படையெடுப்பிலும் ஈடுபட அவனுக்குத் துணிவு ஏற்படவில்லை.
ஆனால் அதே ஆண்டிலேயே அவனது படைத்தலைவனான அலி மர்தான் என்பவனால் அவன் தேவ்கோட்டில் கொல்லப்பட்டான்.
இந்திய சரித்திரத்தில் முக்கியமான ஒரு காலகட்டத்தில் கில்ஜி போன்ற ஒரு வெறிபிடித்தவனைத் துரத்தி அடித்த மன்னன் பிருதுவைப் பற்றி மூன்று கல்வெட்டுகள் அனைத்து விவரங்களையும் தருகின்றன.
இவற்றில் இரண்டு கல்வெட்டுக்கள் நன்கு பராமரிக்கப்பட்டு வருகின்றன. ஒன்று சற்று சிதைந்துள்ளது.
நமது வரலாற்றில் ஆர்வமுள்ளோர் இப்படிப்பட்ட இடங்களுக்குப் பயணம் மேற்கொண்டு மறைந்திருக்கும் வீரதீர சாகஸங்களை ஆதாரத்துடன் வெளிப்படுத்துகின்றனர்.
அப்படி ஒரு அன்பரான நாபாருன் பரூவா என்பவர் சமீபத்தில் இங்கு சென்று அனைத்தையும் கண்டு விவரங்களை வெளியிட்டுள்ளார்.
மாமன்னன் பிருது போற்றுதற்குரிய பெரும் வீரன் என்பதில் ஐயமில்லை, அல்லவா!
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
When I visited the botanic garden in Sydney on 28-2-2025, I took 150 photos of plants, birds and statues. Here are some of the pictures of the statues: