ஞானமயம் வழங்கும் உலக இந்துமத செய்தி மடல்  2-3-2025 (Post No.14,264)

Written by London Swaminathan

Post No. 14,264

Date uploaded in Sydney, Australia –  3 March 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;

லண்டன் மாநகரிலிருந்து செய்திகளை  வாசித்து வழங்குபவர் வைஷ்ணவி ஆனந்த்

அனைவருக்கும் வணக்கம்

இன்று ஞாயிற்றுக்கிழமை ; மார்ச் மாதம் இரண்டாம் தேதி ; 2025-ம் ஆண்டு

****

முதலில் மஹா கும்பமேளா செய்திகள்

கும்பமேளாவில்  66 கோடி பேர் நீராடினர்

கின்னஸ் புத்தகத்தில் மஹா கும்பமேளா.. புதிய சாதனைகள்!

மஹா கும்பமேளாவில் புதிய சாதனைகள் நிகழ்த்தப்பட்டு, கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளன.

ஒற்றுமை, சமூக நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் 80 அடி நீளம், 5 அடி அகல துணியில் 10,000 பேர் பங்கேற்று கையால் வரைந்த ஓவியம்; 15,000 துாய்மை பணியாளர்கள் இணைந்து ஒரே நேரத்தில் விழா நடந்த இடத்தில் துாய்மை பணி மேற்கொண்டது உள்ளிட்ட புதிய சாதனைகள் கின்னஸ் அமைப்பால் உலக சாதனையாக அங்கீகரிக்கப்பட்டன. இதற்கான சான்றிதழை முதல்வரிடம் கின்னஸ் அமைப்பினர் வழங்கினர். இதற்கு முன் 10,000 பேர் ஒரே நேரத்தில் துாய்மை பணி மேற்கொண்டதே சாதனையாக இருந்தது.

66.21 கோடி பேர்!

நம்பிக்கை, ஒற்றுமை, சமத்துவத்தின் மிகப்பெரும் திருவிழாவான மஹா கும்பமேளா சிறப்பான முறையில் நடந்து முடிந்துள்ளது. இதில், 66.21 கோடி பேர் பங்கேற்று புனித நீராடினர். பிரதமர் மோடி தலைமையின் கீழ் நடந்த இந்தத் திருவிழா, உலக வரலாற்றில் இதுவரை நடக்காத ஒன்று; மறக்க முடியாத ஒன்று என்று உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்

கும்பமேளா பண்டிகை மூலம் மூன்று லட்சம் கோடி ரூபாய் வருமானம் கிடைத்ததாக உத்தரப்பிரதேச வணிகர்கள் மதிப்பிட்டுள்ளனர்.


உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்ற  மகா கும்பமேளா நிறைவு நாளில் பக்தர்கள் அலை அலையாய் குவிந்து புனித நீராடினர்.  மக்கள் கடலே உருவாகிவிட்டது. மகா சிவராத்திரி என்பதால் பக்தர்கள் கட்டுக்கடங்காமல் குவிந்தனர். இது உலகம் இதுவரை கண்டிராத ஒரு மாபெரும் புதிய சாதனை ஆகும்.

உலகின் மிகப் பெரிய இந்துமத பண்டிகையான மகா கும்ப மேளா  26–ம் தேதி நிறைவு பெறறது. 45 நாட்கள் நடைபெற்ற பிரமாண்ட இந்து மத திருவிழாவில் கலந்து கொள்ள உலகமெங்கும் இருந்து கோடிக்கணக்கான பக்தர்கள் வந்தனர்.

கும்ப மேளாவில் காஞ்சி சுவாமிகள் புனித நீராடல்

மகா கும்பமேளாவில் காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் புனித நீராடினார்.

ஒருமைப்பாடு, கலாச்சார பாரம்பரியத்திற்கு சிறந்த உதாரணம் மகா கும்பமேளா என்று காஞ்சி ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கூறினார்.

பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் நடைபெற்று வரும் மகா கும்ப மேளாவில் நேபாளத்தில் இருந்து இதுவரை 50 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித நீராடியுள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் முழுவதும் மகாகும்பமேளா புனித நீரைக் கொண்டு செல்லஅம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

கும்பமேளாவில் கலந்து கொள்ள முடியாத உத்தரப்பிரதேச மக்களுக்காக 75 மாவட்டங்களுக்கும் திரிவேணி சங்கம புனித நீரை கொண்டு செல்ல யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். அதன்படி 365 தீயணைப்புத்துறை வாகனங்கள் மூலம் புனிதநீர் கொண்டு செல்லப்படுகிறது.

மகா கும்பமேளா விழா முடிவடைந்ததும், அங்கு தூய்மைப் பணியில் ஈடுபட்டு வந்த பணியாளர்களின் சேவையை பாராட்டி உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் அவர்களை கவுரவித்தார். அவர்களுடன் அமர்ந்து உணவும் உண்டார் .மகா கும்பமேளா நடந்த   இடத்தில்15 நாட்கள் துப்புரவுப் பணி தொடங்கப்பட்டுள்ளதாக உத்தர பிரதேச அரசு தெரிவித்துள்ளது .

மகா கும்பமேளாவில் பணியாற்றிய போலீசாருக்கு போனஸ், 7 நாள் விடுப்பு – யோகி ஆதித்யநாத் அறிவிப்பு

மகா கும்பமேளாவில் பணியாற்றிய போலீசாருக்கு போனஸ் மற்றும் 7 நாள் விடுப்பு வழங்கப்படும் என யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.

பிரயாக்ராஜில் நடைபெற்று வந்த கும்பமேளா நிறைவடைந்ததை தொடர்ந்து, முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் பிரயாக்ராஜ் சென்றார். அங்குள்ள கங்கா மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, மகா கும்பமேளாவில் பணியாற்றியவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்தார். அப்போது அவர் கூறுகையில், இந்த பிரமாண்ட விழாவை சிறப்பாக நடத்துவதற்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட 75 ஆயிரம் போலீசாரின் பணி மிகவும் மகத்தானது. அவர்களுக்கு அரசு ரூ.10 ஆயிரம் சிறப்பு போனஸ் மற்றும் ‘மகா கும்ப சேவா பதக்கம்’ மற்றும் 7 நாள் விடுப்பு வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

*****

விதவிதமாக நடக்கும் கும்பமேளா புனித நீராடல்: வீடியோ காலில் கணவரை தண்ணீரில் மூழ்கி எடுத்த மனைவி

மகா கும்பமேளா புனித நீர் ஆன்லைனில் கூட விற்பனை செய்யப்படுகிறது.

மகா கும்பமேளாவுக்கு ஒரு பெண் சென்றுள்ளார். அவர் புனித நீராடிய நிலையில் அவருடைய கணவரால் வர முடியவில்லை. இதனால் அவருடைய கணவர் வீடியோ கால் செய்த போது அப்படியே செல்போனை தண்ணீரில் 3 முறை மூழ்கி எடுத்தார். அப்பெண் நீரில் செல்போனை தண்ணீரில் 3 முறை மூழ்கி எடுத்தார். அப்பெண் நீரில் செல்போனை நனைத்து எடுக்கும் வீடியோ வைரலாகிறது.

******

மோடி புகழாரம்

இந்த மஹா கும்பமேளா குறித்து, சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்ட பதிவு:

பிரயாக்ராஜில், 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மஹா கும்பமேளா விழா சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. இது தொடர்பாக என் எண்ணங்களை பதிவிட விரும்புகிறேன். முதலில் இந்த விழாவை சிறப்பாக நடத்திய முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தர பிரதேச பாரதீய ஜனதா கட்சி அரசுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த மாநிலத்துக்குட்பட்ட தொகுதியின் எம்.பி., என்ற முறையில் பெருமை அடைகிறேன். துாய்மை பணியாளர், போலீஸ், சுகாதாரப் பணியாளர், படகு ஓட்டிகள், சமையற்காரர் என, ஒவ்வொருவரும் தன்னார்வத்துடன், தன்னலமில்லாமல் சேவையாற்றினர். விழா சிறப்பாக நடப்பதற்கு உதவிய, உத்தர பிரதேச மக்களுக்கும் பாராட்டுகள்.

முந்தைய கும்பமேளாக்களின் அடிப்படையில், இந்த ஆண்டு எவ்ளவு பேர் வருவர் என, கணிக்கப்பட்டது.

ஆனால், அந்தக் கணிப்புகளை எல்லாம் தாண்டி, 66 கோடி பேர் புனித நீராடியுள்ளனர். இது அமெரிக்க மக்கள் தொகையைவிட இரண்டு மடங்கு அதிகம். இந்த திருவிழா, உலகளவில் நிர்வாகவியல் நிபுணர்கள், திட்டமிடல் மற்றும் கொள்கை நிபுணர்களுக்கு புதிய ஆய்வுகளை மேற்கொள்ள வழிவகுத்துள்ளது . என்று பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்

*****

அடுத்ததாக சிவராத்திரி செய்திகள்

மகா சிவராத்திரி – கொதிக்கும் நெய்யில் வெறும் கையால் அப்பம் சுட்டு பிரசாதமாக வழங்கிய 92 வயது மூதாட்டி!

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் நடைபெற்ற சிவராத்திரி விழாவில் கொதிக்கும் நெய்யில் வெறும் கையால் 92 வயது மூதாட்டி அப்பம் சுட்டு எடுத்தார். மேலும் அப்பத்தை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கினார். இந்த நிகழ்ச்சியை நள்ளிரவு நேரத்திலும் ஏராளமான பக்தர்கள் கண்டு களித்தனர்.

தேனி மாவட்டம், பெரியகுளம் திரௌபதி அம்மன் கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு பூக்குழி இறங்கும் விழா நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் பூக்குழி இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இந்த நிகழ்வில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மகா சிவராத்திரியை முன்னிட்டு கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில் நாட்டியாஞ்சலி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. விடிய விடிய நடைபெற்ற நாட்டியாஞ்சலி விழாவை ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கண்டுகளித்தனர்.

மதுரையிலுள்ள மீனாட்சி அம்மன் கோவிலில் விடிய விடிய சிறப்பு பூஜை நடந்தது; பக்தர்கள் இரவு முழுவதும் சாமி தரிசனம் செய்தார்கள்.

****

கன்னியாகுமரி மாவட்டத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க சிவாலய ஓட்டம்  நடைபெற்றது.  மஹா சிவாலய ஓட்டம் நடைபெறும் பனிரெண்டு சிவாலயங்களிலும் RSS சுயம் சேவகர்கள் கோஸ் இசை வாசித்த வண்ணம் பேரணியாக சென்றனர்.

ஜில்லா கோஸ் ப்ரமுக் சுவாமிதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்சியில் 35க்கும் மேற்பட்ட சுயம் சேவகர்கள் கலந்து கொண்டனர்.

*****

ஈஷா மஹாசிவராத்திரி விழா; உள்துறை அமைச்சர் அமித் ஷா புகழாரம்!

கோவை ஈஷா யோக மையத்தில் மஹாசிவராத்திரி விழா பிப்.,26  ஆம் தேதி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா   பேசியதாவது: சத்குருவின் அழைப்பை ஏற்று ஆதியோகி தரிசனம் பெறுவதிலும், மகாதேவரின் மகத்துவத்தை வெளிப்படுத்தும் மஹாசிவராத்திரி விழாவில் பங்கேற்பதை பெரும் பேறாக கருதுகிறேன்.

இன்று ஆன்மீகத்தில் சோமநாத்திலிருந்து கேதார்நாத் வரை, பசுபதிநாத்திலிருந்து ராமேஸ்வரம் வரை, காசியிலிருந்து கோவை வரை முழு பாரதமும் சிவபெருமானின் திருவருளில் திளைத்துக் கொண்டிருக்கிறது. பிராயாக்ராஜ்ஜில் மஹா கும்பமேளா நிறைவு பெறுவதை சுட்டும் வகையில் ஈஷாவில் மஹாசிவராத்திரி விழா பக்தியின் கும்பமேளாவாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

சத்குரு உருவாக்கியிருக்கும் இந்த இடம் பக்திக்கான இடமாக மட்டுமல்லாமல் யோகம், ஆத்ம சாதனை, பக்தி, தன்னை உணர்தல் ஆகியவற்றிற்கான இடமாக இருக்கிறது. ஈஷா பல லட்சம் உயிர்களை யோகா மற்றும் தியானத்தின் மூலமாக நெறிப்படுத்தி, சரியான சிந்தனையை விதைத்து சரியான பாதையில் செல்ல உலகெங்கும் வழிகாட்டி கொண்டிருக்கிறது.

இளைஞர்களையும், ஆன்மீகத்தையும் இணைப்பதில் சத்குரு மகத்தான பங்கை ஆற்றி இருக்கிறார்கள். மிகுந்த ஞானம் கொண்டதும், அதே நேரத்தில் தர்க பூர்வமானதுமான முறையில் கருத்துகளை இளைஞர்களிடம் கொண்டு சேர்த்திருக்கிறார்கள். நம்முடைய சத்குருவை நான் வர்ணிக்க வேண்டுமென்றால் ‘ஒரு லட்சியத்தோடு இயங்கிக் கொண்டிருக்கிற ஞானி’ என வர்ணிக்க வேண்டும். உலகத்தை மாற்ற வேண்டும் என்றால் முதலில் உங்களை மாற்ற வேண்டும் என்பதை சத்குரு உணர்த்தி வருகிறார்.

சத்குரு மேற்கொண்ட மண் காப்போம் இயக்கத்தின் போது அவரோடு நானிருந்தேன். சத்குருவைப் பற்றி நான் பணிவோடு சொல்லி கொள்கிறேன், நீங்கள் இந்த பாரத தேசத்திற்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம். மகரிஷி திருமூலர் ஞானிகளின் அடையாளமாக, தீவிரமான தவத்தின் மூலம் சைவ மரபில் திருமந்திரம் எனும் 3000 அற்புத பாடல்களை அருளியிருக்கிறார்.

அந்த வரிசையில் மகத்துவமான மற்றொரு உதாரணம் மகரிஷி அகத்தியர், அவர் சனாதனத்தின் பல்வேறு பரிமாணங்களை வெளிப்படுத்திய ஞானி. தமிழ் பண்பாட்டில் சிவ வழிபாட்டிற்கு சிறப்பான இடம் உண்டு. சத்குருவின் மஹாசிவராத்திரியை பற்றி கேள்வி பட்டிருக்கிறேன். இன்று நேரில் கலந்து கொண்ட பிறகு உலகித்திற்கே நான் சொல்ல விரும்புவது இது மிகவும் மகத்தான ஆச்சரியமான நிகழ்ச்சி.

சத்குரு இந்த மஹாசிவராத்திரியை ஆன்மீக விஞ்ஞானத்தின் அடிப்படையாக கொண்டு ஞானத்தையும், அறிவியலையும் இணைக்கின்ற அற்புதத்தை செய்திருக்கிறார் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார்.

ஈஷா மஹாசிவராத்திரி விழாவிற்கு அனைவரையும் வரவேற்று சத்குரு பேசியதாவது: உள்துறை அமைச்சர் ஒரு விதத்தில், சர்தார் வல்லபாய் பட்டேல் செய்ததை போல நாட்டை ஒன்றாக கொண்டு வந்திருக்கார். காஷ்மீரை நம் இந்தியாவின் பாகமாக கொண்டு வந்து இருக்கிறார். காஷ்மீர் சிறப்புச் சட்டம் 370 நீக்கம் மூலம் அந்த பகுதி இயல்பு நிலைக்கு திரும்பி இருக்கிறது. தற்போது லட்சக்கணக்கான மக்கள் காஷ்மீருக்கு சுற்றுலா செல்கிறார்கள். நாட்டின் இறையாண்மை மற்றும் சட்டம் ஒழுங்கை சரியாக கவனிக்கவில்லை என்றால், கல்வி, தொழிநுட்பம், ஆன்மீகம், பொருளாதாரம் உள்ளிட்டவைகள் வீணாகிப் போகும். நம் மத்திய அமைச்சருக்கு நன்றி  என்று சத்குரு ஜாக்கி வாசுதேவ்  கூறினார்.

****

தினமும் யோகா: அரசு மருத்துவமனையில் ஏற்பாடு

சென்னை: அரசு மருத்துவமனைகளில், 1,300 யோகா பயிற்றுநர்களை நியமிக்க, இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை இயக்குநர் எம்.விஜயலட்சுமி உத்தரவிட்டுள்ளார்.

உடல் மற்றும் மனதிற்கு பல்வேறு நன்மைகளை யோகா பயிற்சி தருகிறது. குறிப்பாக, உடல் வலிமை, நெகிழ்வுத்தன்மை, ஆற்றல் அளவு அதிகரிப்பதுடன், மன அமைதியும் மேம்படுகிறது. தினமும் யோகா பயிற்சி செய்வது, பல்வேறு நோய்களுக்கு தீர்வாக இருப்பதுடன், உடல் புத்துயிர் பெறவும் உதவுகிறது.

எனவே, அனைத்து தரப்பு மக்களும் யோகா பயிற்சி மேற்கொள்ளும் வகையில், அரசு மருத்துவமனைகளில், அனைத்து ஆயுஷ் தேசிய நல்வாழ்வு மையங்களில், 650 இருபாலர் யோகா பயிற்றுநர்கள் மற்றும் 650 பெண் யோகா பயிற்றுநர்கள் என, 1,300 பேரை நியமிக்க முடிவாகி உள்ளது.

இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர்களுக்கும், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை இயக்குநர் விஜயலட்சுமி உத்தரவிட்டுள்ளார்.

*****

தர்காவுக்குள் இந்து அமைப்பினர் சிவலிங்க பூஜை

கர்நாடக மாநிலம் கல்புர்கியில் உள்ள தர்காவுக்குள் சிவலிங்க பூஜை செய்ய அம்மாநில‌ உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதையடுத்து நேற்று இந்து அமைப்பினர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிவலிங்க பூஜை செய்து வழிபட்டனர்.

கர்நாடகா மாநிலம் கல்புர்கி மாவட்டத்தில் ஆலந்து பகுதியில் லட்லே மஷாக் என்ற பழமையான தர்கா அமைந்துள்ளது. சூஃபி துறவி லட்லே மஷாக்கின் நினைவிடம் அமைந்துள்ள இந்த தர்காவில் இந்து துறவி ராகவ சைதன்யாவின் சமாதியும் அமைந்துள்ளது. இந்த சமாதியில் உள்ள சிவ‌லிங்கத்துக்கு இந்துக்கள் சிவராத்திரி தினத்தன்று பூஜை செய்து வழிபாடு செய்தனர்.

ஹனுமன் சேனா அமைப்பை சேர்ந்த சித்தராமையா ஹிரேமத், லட்லே மஷாக் தர்காவில் சிவலிங்க பூஜை செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என கர்நாடக உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி நடராஜன், ‘’சிவராத்திரி தினத்தன்று (26ம் தேதி) காலை 8 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை முஸ்லீம்கள் வழிபாடு நடத்தலாம். பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணிவரை இந்துக்கள் 15 பேர் லட்லே மஷாக் தர்காவுக்குள் சிவராத்திரி பூஜை செய்யலாம்’’என அனுமதி அளித்தார்.

சிவராத்திரி தினமான நேற்று சித்தராமையா ஹிரேமத் உள்ளிட்ட 15 பேர் அந்தலோனா சித்தலிங்கையா சுவாமி தலைமையில் சிவலிங்க பூஜை நடத்தினர். 4 மணி நேரம் நடந்த இந்த பூஜையின் போது பலத்த போலீஸ் போடப்பட்டிருந்தது.

*****

மாசி மகம்: புதுவை, காரைக்காலில் 13-ந்தேதி பள்ளிகளுக்கு விடுமுறை

மாசி மகத்தையொட்டி வருகிற மார்ச் 13-ம் தேதி அன்று புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு கல்வித்துறை விடுமுறை அறிவித்துள்ளது. அன்றைய தினம் பொதுத்தேர்வுகள் இருந்தால், அவை வழக்கம் போல நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

ஒவ்வொரு ஆண்டு மாசி மகம் திருவிழா நடைபெறும் வைத்திக்குப்பம் கடற்கரையில், புதுச்சேரி மட்டுமில்லாது தமிழகத்தைச் சேர்ந்த ஏராளமான கோயில்களைச் சேர்ந்த உற்சவர்கள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் புரிவது வழக்கம்.ஒரே இடத்தில் அனைத்து முக்கியக் கோயில்களின் உற்சவர்களும் எழுந்து அருள்வதால் ஏராளமான பக்தர்கள் மாசி மகத்துக்கு தங்கள் குடும்பத்துடன் வந்து சாமி தரிசனம் செய்வார்கள் .

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசி திருவிழா : மார்ச் 3-ஆம் தேதி தொடக்கம்

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித் திருவிழா வரும் 3ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, 12 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மாசி திருவிழாவை முன்னிட்டு நாள்தோறும் சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வருவார் என கூறப்பட்டுள்ளது. மேலும், திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 12ஆம் தேதி நடைபெறும் என்றும், மார்ச் 14-ஆம் தேதி இரவு தெப்பத்திருவிழா நடைபெறும் எனவும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

****

இத்துடன் செய்திகள் நிறைவடைந்தன.

உலக இந்துமதச் செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;

லண்டன் மாநகரிலிருந்து செய்திகளை வாசித்து வழங்கியவர் வைஷ்ணவி ஆனந்த் .

அடுத்த ஒளிபரப்பு , மார்ச் மாதம் 9-ஆம் தேதி

லண்டன் நேரம் நண்பகல் 12 மணிக்கும்,

இந்திய நேரம் மாலை ஐந்தரை மணிக்கும்,

ஆஸ்திரேலிய நேரம் இரவு 11 மணிக்கும் ஒளிபரப்பாகும்.

வணக்கம்.

—SUBHAM—

 tags-ஞானமயம் , உலக இந்துமத செய்தி மடல் , 2-3-2025

Leave a comment

Leave a comment