சென்னையிலிருந்து
வெளியாகும் மாத இதழ் கோகுலம் கதிர். அதில் ஜூலை 2019 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை
உலக உலா
உலக
உலாவில் இடம் பெறும் முதல் நாடு அமெரிக்கா!
பூலோக
சொர்க்கம் அமெரிக்கா!
ச.நாகராஜன்
உலகப் புகழ் பெற்ற
அமெரிக்கக் கவிஞரான வால்ட் விட்மன் “அமெரிக்கா பாடுவதை நான் கேட்கிறேன்; பல்வேறு
ஆனந்தக் களிப்புப் பாடல்களை நான் கேட்கிறேன்” ( I hear
America singing, the varied carols I hear) என்று ஆனந்தக் களிப்புடன்
பாடினார். பல்வேறு தொழில்புரிவோரின் ஆனந்த இசையை அவர் தன் கவிதையில்
பட்டியலிட்டார்!
இன்னொரு கவிஞரோ, “வாழ்வின் எல்லாப்
பிரச்சினைகளுக்கும் விடை அமெரிக்கா தான்; அதுவே சுதந்திரத்தின் இல்லம், தனி
ஒருவனின் உள்ளார்ந்த திறமைகளை வெளிப்படுத்தி திருப்தி அடையும் இடம்,
உலகம் அமெரிக்காவைப் போற்றுகிறது, அழகின் ஒப்பற்ற வடிவம், பெருமிதத்தின்
எடுத்துக்காட்டு -அமெரிக்கா தான்” என்று
புகழ்கிறார்.
(America is the answer,
To all of life’s problems
America, the home of freedom
And self actualization.
The world revers America,
Paragon of beauty,
Epitome of pride; -Samuel
Nze)
உலகம் போற்றும் முதலிடத்தைப் பெற்றுள்ள அமெரிக்காவின்
சிறப்புக்கள் பல.
முதலில் கருத்துச் சுதந்திரம் அங்கு 100 விழுக்காடு
முழுமையாக உள்ளது. தன் கருத்தை – மனதில் பட்டதை – தைரியமாகச் சொல்லலாம்.
ஒவ்வொருவரின் தனித் திறமையும் அங்கு மதிக்கப்படுகிறது; அதை
பரிபூரணமாக வெளிப்படுத்தும் வாய்ப்பும் அங்கு கிடைக்கிறது. அறிவின் சிகரமாகக்
கோலோச்சும் அமெரிக்காவில் லைப்ரரி ஆஃப் காங்கிரஸில் 838 மைல் நீளம் புத்தக
அலமாரிகள் உள்ளன. இவற்றில் உள்ள நூல்களின் தொகுப்புகள் சுமார் 16.80 கோடி என்ற
எண்ணிக்கையில் உள்ளது.
சந்திரனில் முதலில் காலடி எடுத்து வைத்தவர் ஒரு அமெரிக்கர்
என்ற பெருமையில் ஆரம்பித்து எந்த ஒரு உலக மாற்றத்திற்கும் காரணம் அமெரிக்கக்
கண்டுபிடிப்பு தான் என அடித்துச் சொல்லும் அளவு அமெரிக்கக் கண்டுபிடிப்புகள்
உள்ளன.
உலகின் பல்வேறு
மாறுதல்களுக்குக் காரணமான டிரான்ஸிஸ்டர், மின்சார பல்பு, ஆகாய விமானம், மொபைல்
செல், இண்டர்நெட் என்று ஒரு நீண்ட பட்டியலை உருவாக்கியது அமெரிக்காவே.
இப்போது சான்பிரான்ஸிஸ்கோவில் கூகிள் இயக்கும் டிரைவர்
இல்லாத காரின் சோதனை ஓட்டத்தைப் பார்த்து வியக்கும் போதே அருகில் டெஸ்லா (TESLA)
தயாரிக்கும் படிம எரிபொருளான பெட்ரோல்,
டீஸல் இல்லாத எலக்ட்ரிக் கார்களை ஏராளமாகப் பார்க்க முடிகிறது. 2020 இல ஊபர்
பறக்கும் டாக்ஸிகளை இங்கு இயக்க இருக்கிறது! ஆக, அடுத்த உலக மாற்றம் தயார்!
நாஸா என்ற அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் செவ்வாயை
நோக்கித் தன் பார்வையைப் பதித்திருப்பதோடு பன்னாட்டு விண்வெளி
நிலையத்திலிருந்து விண்வெளியில் ஒரு
சாலையை உருவாக்கி வேற்று கிரகங்களுக்குப் போக வழியை உருவாக்கும் வழிகாட்டியாக
ஆகும் அளவு விண்ணளவு உயர்ந்து விட்டது.
ஒரு அமெரிக்கர் உலகின் எந்தப் பகுதிக்குச் சென்றாலும்
வரவேற்பு தான்! 116 நாடுகளுக்கு விஸா இல்லாமல் ஒரு அமெரிக்கரால் செல்ல முடியும்;
இன்னும் ஒரு 44 நாடுகளில் அங்கு சென்றவுடன் விஸாவைப் பெற்றுக் கொள்ளலாம்! எந்தவித
கெடுபிடியும் கிடையாது!
இரும்புத்திரை
நாடான ரஷியாவுடன் ஒரு குளிர் யுத்தத்தைத் தொடர்ந்து நடத்தி வந்த அமெரிக்கா சோவியத்
பிளவுபட்டவுடன் போட்டி போட ஆளின்றித் தலை நிமிர்ந்து நிற்கிறது.
இத்தனைக்கும் ரஷியாவிற்கும் அமெரிக்காவிற்கும் எல்லை அளவில்
உள்ள இடைவெளி 3.8 கிலோமீட்டர் தான்.
ஆம், பெரிங் ஸ்ட்ரெய்ட் (Bering Strait) என்னும்
தீவுப் பகுதியில் ரஷ்யாவிற்கும் தீவுகள் உண்டு; அமெரிக்காவிற்கும் தீவுகள் உண்டு.
ரஷியத் தீவுக்கும் அமெரிக்க தீவிற்கும் இடையே உள்ள குறைந்த தூரம் 3.8 கிலோ
மீட்டர்!
உலகின் பெரிய
பொருளாதாரத்தைக் கொண்ட நாடு அமெரிக்கா என்றாலும் அமெரிக்கர்கள் க்ரெடிட் வழியிலியே
வாழ்க்கையைக் கழிக்கின்றனர். கடன் இல்லாமல் ஒரு பத்து டாலர் நோட்டைச் (சுமார் 700
ரூபாய் தான்) சொந்தமாகக் கொண்ட ஒரு அமெரிக்கர் பெரும் பணக்காரர் என்று
வேடிக்கையாகச் சொல்லப்படுவதிலிருந்தே அவர்களின் வாழ்க்கை ஒரு ‘கடன்கார வாழ்க்கை’ என்று
தெரிந்து கொள்ளலாம்; என்றாலும் அபரிமிதமான செல்வ வளத்தோடு இருக்கும் ஒருவன்
அனுபவிக்கும் வாழ்க்கையை ஒவ்வொரு அமெரிக்கரும் அனுபவிக்க முடியும் என்பதும் தெரிய
வரும்!
உலகின் பொழுதுபோக்குத் தலங்களை எடுத்துக் கொண்டாலும்
முன்னணியில் இருப்பது அமெரிக்காவே.
‘சின் சிடி’ -பாவ
நகரம் – (Sin
city) என்று அழைக்கப்படும் லாஸ் வேகாஸ் நகரானது இரவில் மட்டும் ஆட்டம் போடும் நகரம்!
சூதாடிகளின் சொர்க்கமும் இது தான்!
மாலை ஐந்து மணிக்கு இங்கு உலவ ஆரம்பித்து மறு நாள் காலை
ஐந்து மணிக்கு உலாவை முடிக்கும் போது சொர்க்கம் என்றால் என்ன என்பதை நேரடியாகப்
பார்த்து, உணர்ந்து, அனுபவித்து மகிழ முடியும். ஐம்புலன்களுக்கும் விருந்து தரம்
நகரம் இது. இங்குள்ள ஹோட்டல் அறைகளில் ஒருவன் தங்க ஆரம்பித்து அனைத்து
ஹோட்டல்களிலும் தங்கி முடிக்க வேண்டுமென்றால் நானூறு ஆண்டுகளுக்கு மேல் ஆகும்.
ஆக, இணையில்லா இன்ப புரி இந்தப் ‘பாவ நகரம்’ தான்.
அருகில் இருப்பது ஹாலிவுட். அமெரிக்காவின் பல பகுதிகளில்
ஷூட்டிங்கை முடித்து திரைப்படம் வெளியிடப்பட்டாலும் அதை ஹாலிவுட் படம் என்றே சொல்ல
ஆரம்பித்து விட்டனர். யுனிவர்ஸல் ஸ்டுடியோவில் சுற்றுலா செல்ல ஒரு நாளக்கு
பல்லாயிரக்கணக்கானோர் வருகை புரிகின்றனர்.
எப்படி ‘ட்ரிக் ஷாட்கள்’ எடுக்கப்படுகின்றன
என்பதை ஒரு காட்சியாக அங்கு பார்க்கும் போது விழுந்து விழுந்து சிரிப்போம்; ‘அட’ இதையா
தியேட்டரில் பிரமிப்புடன் பார்த்தோம்’ என்று
தோன்றும்.
ஒரு அடி ஆழமுள்ள சிறிய குட்டையில் கதாநாயகன் நீந்துவதை
ஆழ்கடலில் அவன் உயிருக்குப் போராடும் அளவு போராட்டம் நடத்தி நீந்துவதாக
திரைப்படத்தில் பார்க்கிறோம் என்பதை இன்னொரு கண்காட்சி காண்பிக்கிறது; வியப்பின்
எல்லைக்கே சென்று விடுவோம்; இப்படிப் பல காட்சிகள்! கம்ப்யூட்டர் கிராபிக்ஸைப்
பற்றிச் சொல்லவே வேண்டாம்!!
இசைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அமெரிக்கா எல்விஸ்
ப்ரீஸ்லி போன்ற பிரம்மாண்டமான இசைக் கலைஞர்களை உருவாக்கி இருக்கிறது.
அமெரிக்காவின் இசைத் துறை பிரம்மாண்டமான ஒன்று. 2018இல் உலகளாவிய விதத்தில் 5150
கோடியாக இருந்த போது அமெரிக்க இசைத்துறையின் பங்கு 1960 டாலர் என்ற அளவு இருந்தது.
38 லட்சம் சதுரமைல் பரப்பளவுள்ள அமெரிக்காவில் 50
மாகாணங்கள் உள்ளன. இதன் தேசியக் கொடியில் உள்ள 50 நட்சத்திரங்கள் இந்த 50
மாகாணங்களையே குறிக்கிறது.
65.8 லட்சம் நீளமுள்ள சாலைகளைக் கொண்டதால் உலகில் அதிக அளவு
சாலை வசதியைக் கொண்ட முதல் நாடாக இது திகழ்கிறது.
எந்த ஒரு நேரத்திலும் அமெரிக்க வானில் 5000 விமானங்கள்
பறந்து கொண்டே இருக்கின்றன! அமெரிக்கன் ஏர்லைன்ஸ் சொந்தமாக 965 விமானங்களை
இயக்குகிறது.
அமெரிக்காவில் மொழிச் சண்டையே கிடையாது. ஏனெனில்
அதிகாரபூர்வமான அரசு மொழி என்று ஒன்று அங்கு இல்லை. மக்கள் ஆங்கிலம் மற்றும்
ஸ்பானிஷ் மொழிகளைப் பேசுகின்றனர், அவ்வளவு தான்!
ஒஸாமா பின் லேடன்
இரட்டை கோபுரத்தை 2001 செப்டம்பர் 11ஆம் தேதி தாக்கி அழித்தான். தேசபக்தியுள்ள
அமெரிக்கர்கள் அந்த இடத்தில் ஒரு பெரும் நினைவுச் சின்னத்தை எழுப்பியுள்ளனர்.
அங்கு நாளும் அஞ்சலி செலுத்த வருவோர் ஏராளம். பின் லேடனை எப்படிப் பிடித்து
நாட்டின் கௌரவத்தை நிலை நாட்டினர் என்பதை 2012இல் வெளியான ஜீரோ டார்க் தர்ட்டி (Zero
Dark Thirty) என்ற படம் அற்புதமாகச் சித்தரிக்கிறது.
மொத்தத்தில் அமெரிக்கன் என்பதில் வரும் கடைசி நான்கு
எழுத்துக்கள் அமெரிக்கர்களின் தேசியப் பண்பைச் சுருக்கமாகச் சொல்லி விடுகிறது! ஆம்
AMERICAN
என்பதில் வரும் கடைசி நான்கு எழுத்துக்கள் I CAN.
இந்தப்
பிரபஞ்சத்தைக் கட்டுவதற்கு இறைவன் 118
விதமான செங்கற்களைப் பயன்படுத்தினான். அவைகளை நாம் மூலகம் என்றும் தனிமம் (ELEMENT) என்றும் அழைக்கிறோம். நாம்
சுவாசிக்கும் ஆக்ஸிஜன் ஒரு மூலகம். நாம் பயன்படுத்தும் இரும்பு, வெள்ளி, தங்கம், வைரம்,பிளாட்டினம் தாமிரம் ஆகியனவும் மூலகங்களே. அணுகுண்டு
தயாரிக்கப்பயன்படும் யுரேனியம், ப்ளூட்டோனியம்
ஆகியவையும் மூலககங்களே.
இவ்வகையில்
பிஸ்மத் (BISMUTH)
என்னும் மூலகம் ஒரு உலோகம் ஆகும். வெள்ளை நிறக்கட்டி(WEISSE MASSE= WISMUTH= BISMUTH) என்ற ஜெர்மன் சொல்லிலிருந்து வந்தது இந்த
பிஸ்மத். நமது உடலில் இது மிக மிக மிகக் குறைந்த அளவே உள்ளதால் இது உடலுக்குத்
தேவை இல்லை என்று சொல்லலாம். ஆயினும் ஆரோக்கியமாக வாழவும், அழகுடன் வாழவும் பிஸ்மத் உதவுகிறது.
பெண்களின் நகங்களில் போடும் நெயில் பாலிஷ் பள,பள (PEARL EFFECT) என்று பிரகாசிக்கும். இதற்கு அதிலுள்ள பிஸ்மத் ஆக்ஸி க்ளோரைட் உதவுகிறது இது போல அவர்கள் பூசும் உதட்டுச் சாயமும் பள பள என்று இருக்க வேண்டுமானால் அதில் பிஸ்மத் இருக்கும்!
வயிற்று
வலிக்கு பிஸ்மத் மருந்து
வயிற்றில்
புண் ஏற்படுவதை அல்சர் (PEPTIC ULCER & GASTRIC ULCER) என்போம். இப்படிப் புண் ஏற்பட்டால் வயிற்று வலி இருக்கும்; காரமான பொருட்களைச் சாப்பிட்டால் வலி
அதிகமாகும். இதை வயிற்று எரிச்சல் என்றும் சொல்வர். இது குடலின் முன்பகுதி வரையும்
பரவ வாய்ப்பு உண்டு. ஒரு காலத்தில் இதைத் தீர்க்க பிஸ்மத் மிக்ஸர் (BISMUTH MIXTURE) கொடுத்தனர். இப்போது மில்க் ஆப்
மக்னீஷியா, மற்றும்
சோடியம், கால்சியம்
கார்பனேட் கலந்த மருந்துகள் பிரபலமாகிவிட்டன. ஆயினும் இப்போதும் பிஸ்மத்
பயன்படுத்தப்படுகிறது.
வயிற்றில் அமிலத்தன்மை (ACIDIC) உடைய திரவங்கள் சுரந்து பொருட்களை
ஜீரணம் செய்ய உதவுகின்றன. இந்த அமிலம், புண்களுள்ள பகுதிகள் மீது படும்போது
வலியோ எரிச்சலோ ஏற்படும். பிஸ்மத் சப்சிட் ரேட் (BISMUTH SUBCITRATE) கலந்த கரைசல் இதற்கு தீர்வு தரும்.
அதாவது வயிற்றுச் சுவரில் பதிந்து, புண்கள் ஏற்பட்ட பகுதி மீது அமிலம்
படாதபடி பார்த்துக்கொள்ளும்.
மேலும்
வயிற்றில் சுரக்கும் பெப்டிக் என்ஸம் (PEPTIC ENZYME) எனப்படும் திரவத்தைச் செயல்பட விடமல் தடுக்கிறது
தற்போதைய ஆராய்ச்சிகள் குடலில் வரும் புண்ணுக்கு —அல்சருக்கு—ஹெலிகோபாக்டர் பைலோரி (HELICO BACTER PYLORI) என்னும் பாக்டீரியா காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது . நமது உடலுக்குள் நன்மை செய்யும், தீமை செய்யும் – இரண்டு வகை பாக்டீரியாக்களும் இருக்கின்றன. தீமை செய்யும் — வயிற்றில் புண் ஏற்படுத்தும் –ஹெலிகோ பாக்டர் பைலோரி எளிதில் போகாது. இவைகளை அகற்ற பிஸ்மத் பொருளுடன் வேறு சில சக்திவாய்ந்த ஆண்ட்டிபயாடிக்ஸ் (பாக்டீரியா கொல்லி) உடன் அளிப்பர்.
இந்த
பிஸ்மத்துக்கு வேறு ஏதேனும் உபயோகம் உண்டா?
உண்டு.
இந்த உலோகத்துக்கு உருகு நிலை (271 டிகிரி
சி) குறைவு. ஆகையால் மற்ற உலோகங்களுடன் இதைச் சேர்க்கையில் அவைகளையும் எளிதில்
பயன்படுத்த முடிகிறது. எலெக் ட் ரி க் ப்யூஸ், தீயை அணைக்கும் தண்ணீர் தெளிப்பான் (AUTOMATIC SPRINKLE
SYSTEM) , ரப்பர் பொருட்கள் ஆகியவற்றில் பிஸ்மத் பயன்படுகிறது..
கண்டுபிடித்தவர்
யார்?
1400ம் ஆண்டில் பெயர் தெரியாத ஒருவர் இதைக் கண்டு பிடித்தார். அதற்குப் பின்னர் இதையும் ஈயத்தையும் ஒன்றோ
என்று எண்ணிக் குழம்பினர். பின்னர் ஜார்ஜியஸ் அக்ரிகோலா, காஸ்பர் நியூமான், கிளாட் பிரான்ஸ்வா ஜெப்ப்ராய் ஆகியோர்
வெவ்வேறு காலத்தில் இது ஒரு மூலகம் என்றனர்.
அமெரிக்கா, பொலிவியா, பெரு, ஜப்பான், மெக்ஸிகோ, கனடா முதலிய நாடுகளில் நிக்கல், கோபால்ட், வெள்ளி, தகரம் ஆகியவற்றை எடுக்கும் போது பிஸ்மத்தும் கிடைக்கிறது.
ரசாயனத்
தகவல்கள்
இதனால்
புறச் சூழலுக்கு ஆபத்து இல்லை.
இது கனமான, வெள்ளி போன்றநி றம் உடைய உலோகம். கொஞ்சம் இளம் சிவப்பு சாயல் இழை ஓடும்.
இதன்
மூலக அட்டவணை எண்- 83
குறியீடு-
பி ஐ — Bi
கொதி
நிலை- 1560 டிகிரி C ஸி
உருகு
நிலை 271 டிகிரி C
இதன்
ஐஸ்டோப்புகளுக்கு கதிரியக்கம் கிடையது.
இது
எளிதில் உடையக்கூடிய உலோகம் என்பதால் பிற உலோகங்களுடன் சேர்ந்து கலப்பு உலோகமாகவே
பயன்படுகிறது.
இதை
யுரேனியத்துக்கு மேல்வைசையில் வரும் உலோகங்களுடன் சேர்ந்து பயன்படுத்தியபோது போஹ்ரியம் (BOHRIUM)
, மெய்ட்நே ரியம்
(MEITNERIUM) முதலிய புதிய தனிமங்கள் கண்டு பிடிக்கப்பட்டன.
அதாவது திரைப்படத்தில் புதுமுகங்களை
அறிமுகப்படுத்தும்
டைரக்டர் போலச் செயல்பட்டது.
கோகுலம் கதிர் ஜூன் 2019 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை
சிகரத்தில் ஏறும் இயற்கை
ஆர்வலர்களின் வாகனம்!
ச.நாகராஜன்
அதிசயம் ஆனால் உண்மை!
ஏழைகளின் வாகனம் எனப் போற்றப்படும் சைக்கிள் அதன் பெருமையை நிலை
நாட்டுவதோடு அனைத்து நாடுகளின் பேராதரவையும் அதிகமாகப் பெற ஆரம்பித்து விட்டது.
காரணங்கள் பல.
மக்கள் இயற்கையை நேசிக்க ஆரம்பித்து பூமி வெப்பமயமாதலை நிறுத்த
பெரிதும் ஆர்வம் கொண்டுள்ளனர். வளி மண்டலத்தை நச்சு மயமாக்கும் வாகனப் புகையைக் கட்டுப்படுத்த
ஒரே வழி சைக்கிள் தான் என்பது ஒரு காரணம். உடல் நலத்தைப் பேணிக் காக்க உதவும் உடல்
பயிற்சிக்கு உறுதுணையாக இருப்பதும் சைக்கிளே என்பது இன்னொரு காரணம்.
இன்றைய வேக மயமான வாழ்க்கையில் தேவைப்படும் பல நலன்களைத் தருவதும் சைக்கிளே.
1817ஆம் ஆண்டு ஜெர்மனியில் முதன் முதலாக சைக்கிள் வடிவமைக்கப்பட்டது.
ஆனால் அதன் இன்றைய வடிவத்தைத் தந்தவர் பிரிட்டனைச் சேர்ந்த ஜேம்ஸ்
ஸ்டார்லி (James
Starley) என்பவரே.
அவர் இங்கிலாந்தில் வெஸ்ட் சசெக்ஸில் உள்ள அல்போர்ன் என்ற இடத்தில் 1831ஆம் ஆண்டு பிறந்தார். இயற்கையிலேயே புதிய வடிவமைப்பில் ஆர்வம் கொண்டிருந்த அவர் தையல் மெஷினைத் தயார் செய்தார்.
ஒரு நாள் தனது பையனுடன் சைக்கிளில் சென்று கொண்டிருந்த அவர்
தனது மகனுக்கு சுலபமாக ஓட்டும்படி தனது சைக்கிள் இல்லை என்பது புரிந்தது. அந்தக் காலத்திய
சைக்கிளின் முன் சக்கரம் பெரிதாகவும் பின் சக்கரம் மிகச் சிறிதாகவும் இருக்கும். காரணம்
அப்போது தான் வண்டியை வேகத்துடன் ஓட்ட முடியும் என்பது தான். அதில் ஏறி உட்காருவதும்
எளிதல்ல; நீண்ட ஸ்கர்ட் உடை அணிந்திருந்த பெண்களால் அதில் ஏறி அமரவே முடியாது; ஆகவே
பெண்கள் சைக்கிளை உபயோகிக்க முடியாமல் இருந்தது.
ஆனால் வேகத்தைக் கொள்வதோடு, எளிதில் ஏறி அமர்ந்து, சுலபமாக அனைவரும்
ஓட்டும் வண்ணம் உள்ள சைக்கிளை ஸ்போக்குகளுடனும் கியருடனும் (Spokes and gear) அவர் அமைக்க
எண்ணினார். அதைச் செய்தும் பார்த்தார். வெற்றி கிடைத்தது. உடனே அதற்கு பேடண்டையும் (காப்புரிமை) எடுத்தார்.
பின்னர் இன்னும் சில திருத்தங்களுடன் அது வடிவமைப்பைப் பெற அது
இன்றளவும் தொடர்ந்து உலக மக்களின் ஆதரவைப் பெற்றிருக்கிறது.
2019 ஜனவரியில் 8 முதல் 11ஆம் தேதி வரை லாஸ்வேகாஸில் நடந்து
முடிந்த, உலகில் இனி வரும் மாற்றத்தைச் சுட்டிக்
காட்டும் கண்காட்சியில், பறக்கும் காரை பிரபல நிறுவனமான ஊபர் அறிமுகப்படுத்தியுள்ளது.
2020 முதல் அனைத்து உலக நகரங்களிலும் இனி கார்கள் பறக்கும்!
கலிபோர்னியாவில் உள்ள சான்பிரான்ஸிஸ்கோ நகரிலோ இன்று டிரைவர் இல்லாமல் தானே இயங்கும் தனது காரை பிரபல்
கூகிள் நிறுவனம் பல மாதங்களாகச் சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்தியுள்ளது.
ஆனால் அப்படிப்பட்ட சான்பிரான்ஸிஸ்கோ நகரிலேயே வேகமாகச் செல்லும்
கார்களுக்கான பிரதான சாலைகளில் ஒரத்தில் சைக்கிளுக்கான தனிப் பாதைப் பிரிவு உண்டு.
அதில் ஏராளமானோர் சைக்கிளை ஓட்டிச் செல்வதை இன்றும் பார்க்கலாம். அத்துடன் மட்டுமல்ல,
வீட்டிலிருந்து பஸ் ஸ்டாப்பிற்கு சைக்கிளில் செல்வோர் பஸ்ஸின் முன் புறம் இதற்கென இருக்கும்
இடத்தில் சைக்கிளை மாட்டி விட்டுக் கொண்டு செல்வர்.
ஆக பறக்கும் கார் யுகத்திலும் தன் செல்வாக்கை இழக்காமல் சைக்கிள்
இருக்கிறது.
உலகின் இயற்கை ஆர்வலர்கள் சைக்கிளைப் பெரிதும் நேசிக்கின்றனர்;
அதிகம் அதிகமாகப் பயன்படுத்த முன் வருகின்றனர்!
ஏனெனில் பூமியை வெப்பமயமாக்கும் காரின் நச்சுப் புகை சைக்கிளில்
கிடையாது.
ஒரு கார் தனது ஆயுள் காலத்தில் வெளிப்படுத்தும் நச்சுப் புகை 1.3 பில்லியன் அதாவது 130 கோடி கியூபிக் கஜம் (1.3 billion cubic yards of pollutants) அளவு மாசுப் பொருளை வளி மண்டலத்தில் விடுகிறது. உலகெங்கும் உள்ள பல கோடிக் கார்கள் விடும் நச்சுப் புகையை எளிதில் நாமே மனக்கண்ணில் கொண்டு வந்து நிறுத்தித் திகைத்து பிரமிக்க முடியும்! அத்துடன் ஒரு காரை பெயிண்ட் அடிப்பதில் மட்டும் 400 லட்சம் பவுண்ட் மாசுப் பொருள்கள் காற்றில் கலக்கிறது. இப்படிப் பல கோடி கார்களின் வண்ணத்தால் ஏற்படும் மாசை நினைத்துப் பார்த்தால் பகீரென்று மனம் நோகும்.
Desert Cycling
இது ஒரு புறமிருக்க கார் போன்ற வாகனங்களால் ஏற்படும் செலவைக்
கணக்கிட்டு ஒப்பிட்டுப் பார்த்தால், ஒரு ஆண்டுக்கு காருக்கு ஆகும் மலைக்க வைக்கும்
தொகையான சுமார் 4,20,000 ரூபாயிலிருந்து சைக்கிளுக்கு ஆகும் செலவு வெறும் 10, 500 ரூபாய்
தான் என்பது எவ்வளவு பெரிய ஆறுதல்! அமெரிக்க அய்வு தரும் தகவல் இது!
அனைவருக்குமான வாகனம் சைக்கிளே என்று ஆகிறது.
சைக்கிளைப் பராமரிப்பதில் செலவே இல்லை; காற்று அடிப்பதும் சில
சில்லறை வேலைகளும் நமது பட்ஜெட்டுக்குள் அடங்கக் கூடியது. ஆனால் காருக்கோ ஒரு கிலோ
மீட்டருக்கு சுமார் 700 ரூபாய் ஆகிறது (முதலீடு, எரிபொருள், பராமரிப்புச் செலவு உள்ளிட்ட
அனைத்தையும் கணக்கில் எடுத்தால்)
நடந்து செல்வதைப் போல சைக்கிளும் கூடச் செலவில்லாதது; அல்லது
மிகக் குறைந்த செலவு உடையது.
உடல் நலம் பேண இன்று அனைத்து மருத்துவர்களும் சைக்கிள் ஓட்டுமாறு
பரிந்துரைக்கின்றனர்.
ஏன்?
அது உடல் பருமனை வெகுவாகக் குறைத்து உடலைச் சரியான எடையுடன்
இருக்கச் செய்கிறது.
உடலின் பாலன்ஸை – சமச்சீர் தன்மையை நிலை நிறுத்தி உடலில் மிடுக்கான
தோற்றத்தை ஏற்படுத்துகிறது.
இரத்த அழுத்தத்தைக் குறைத்து சரியான அளவில் அதை நிலை நிறுத்துகிறது.
உடல் சக்தியை அதிகரிக்கிறது.
உடலில் நெகிழ்வுத் தன்மையை ஏற்படுத்துவதோடு தசைகளை வலுவுள்ளதாக
ஆக்குகிறது.
மன அழுத்தத்தைக் குறைத்து சீரான மனநிலையை உறுதி செய்கிறது. மனம்
இலேசாக ஆவதால் படைப்பாற்றல் திறன் கூடுகிறது!
தினமும் 30 நிமிடம் சைக்கிளை ஓட்டுவது சிறந்த உடல் பயிற்சியாக
அமைகிறது என்பது மருத்துவர்களின் அறிவுரை.
இயற்கையின் உற்ற துணைவனாக இருக்கும் சைக்கிள் பசுமை வாயுக்கள்
எனப்படும் நச்சு வாயுவை வெளியிடுவதில்லை.
கார்பன் டை ஆக்ஸைடால் வளி மண்டலத்தில் ஏற்படும் மாசை அறவே நீக்குகிறது
சைக்கிள்.
வீதியில் கார், லாரிகளால் ஏற்படும் இரைச்சல் சைக்கிளில் இல்லை.
அதாவது சைக்கிள் ஒலி மாசை அறவே இல்லாமல் செய்கிறது.
மேலை நாடுகளிலும் ஏன் இந்தியாவிலும் கூட இன்று வாகனங்களை நிறுத்தும்
பார்க்கிங் ப்ளேஸ் (வாகனம் நிறுத்துமிடம்) ஒரு பெரிய பிரச்சினையாக உருவாகியுள்ளது.
மேலை நாடுகளில் இதற்காக
வசூலிக்கப்படும் கட்டணம் ஒரு மணிக்கு சுமார் 350 ரூபாய்கள்! சில இடங்களில் இது 900
ரூபாய்! (இந்தியாவில் 5 முதல் 50 ரூபாய் தான் என்று ஆறுதல் கொள்ளலாம்!)
சைக்கிள் நிறுத்துவதில் பிரச்சினையே இல்லை. குறைந்த இடம், நிறைந்த
மகிழ்ச்சி.
உலகெங்கும் சைக்கிள் ஓட்டும் ஆர்வலர்கள் வெவ்வேறு விழாக்களை
நடத்தி மகிழ்கின்றனர். சமீபத்தில் 2019ஆம் ஆண்டில் நமது 70வது குடியரசு தினத்தை ஒட்டி
கர்நாடகாவில் ஹூப்ளியில் ஹூப்ளி பை-சைக்கிள் சங்கம் ஒரு பெரிய சைக்கிள் விழாவை நடத்தியது.
1235 சைக்கிள் வீரர்கள் ஒருவர் பின் ஒருவராக ஒரே வரிசையில் சைக்கிளை அணி வகுக்க அது
சுமார் நான்கு கிலோ மீட்டர் தூரம் நீண்டு அருகிலிருந்த கிராமம் வரை சென்றது.இவர்கள்
அனைவரும் இந்தியாவின் பல இடங்களிலிருந்து வந்து இந்த அணியில் கலந்து கொண்டனர் என்பது
ஒரு சுவையான செய்தி.
கின்னஸ் ரிகார்டை வழங்கும் நிபுணர்கள் இதைப் பார்த்து மகிழ,
புதிய கின்னஸ் ரிகார்டு உருவாகியது.
இதற்கு முன்னர் பங்களா தேஷில் 2016ஆம் ஆண்டு 1186 சைக்கிள்கள்
இதே போல அணிவகுத்து ஏற்படுத்தி இருந்த கின்னஸ் ரிகார்டை நமது இந்திய சைக்கிள் வீரர்கள்
முறியடித்து புதிய கின்னஸ் சாதனையை ஏற்படுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத் தகுந்தது.
சைக்கிளில் ஸ்பீடாக ஓட்ட முடியாதே என்று ஒரு குறையை யாரும் முன்
வைக்க முடியாது.
டெனிஸ் ம்யூலர் கொரினெக் (Denise Mueller Korenek) என்பவர்
16-9-2018 அன்று ஒரு வேக ரிகார்டை ஏற்படுத்தி உள்ளார். மலைக்க வைக்கும் அவரது சைக்கிள்
ஓட்டத்தின் ஸ்பீட் எவ்வளவு தெரியுமா?
மணிக்கு 296.009 கிலோமீட்டர். அதாவது மணிக்கு 183.93 மைல்.
என்ன மலைப்பு வருகிறதா?
இயற்கை ஆர்வலர்கள் சைக்கிளை சிகரத்தில் ஏற்றி விட்டார்கள் இப்படி!
அட,சைக்கிளை எடுக்க கிளம்பீட்டிங்களா?
நல்லது – நமக்கும் நல்லது, நமது வாரிசுகளுக்கும் நல்லது, அவர்கள்
வாழ இருக்கும் எதிர்கால உலகிற்கும் நல்லது.
அபூர்வ ஓவியர் – ஸ்டீபன் வில்ட்ஷைர் (Stphen Wiltshire)
ஒரே ஒரு முறை பார்த்தால் போதும் எந்த இயற்கை காட்சியாக இருந்தாலும் சரி, நகர்ப்புறத் தோற்றமானாலும் சரி, கட்டிடமானாலும் சரி அப்படியே துல்லியமாக வரைந்து விடும் ஆற்றல் கொண்ட அபூர்வ கலைஞர் ஸ்டீபன் வில்ட்ஷைர். லண்டனில் 1974, ஏப்ரல் 24ஆம் தேதி பிறந்த ஸ்டீபன் குழந்தையாக இருந்த போது ஊமை போல இருந்தார். ஆனால் எதையும் பார்த்தவுடன் வரையும் தன் அபூர்வ ஆற்றலை மூன்று வயதிலேயே வெளிப்படுத்தி விட்டார்.ஐந்தாம் வயதில் அவரை லண்டனில் உள்ள க்வீன்ஸ்மில் பள்ளிக்கு அனுப்பினர். அங்கு அவரது அபூர்வ ஓவியத் திறமை கண்டறியப்பட்டது. பள்ளியில் அவரிடம் அவரது ஓவியம் பற்றி அனைவரையும் கேட்க வைக்கவே இறுதியில் பேப்பர் என்ற வார்த்தையை முதன் முதலாகப் பேசினார். ஒன்பது வயதில் பேச ஆரம்பித்தார். உலகெங்கும் அவர் பெயர் பிரபலமானது. அமெரிக்க கார்களைப் பற்றிய என்சைக்ளோபீடியா என அவர் புகழப் படுகிறார். உலகெங்கும் அவரது ஓவியங்களைப் பார்க்காதவர்கள் இல்லை; பாராட்டாதவர்கள் இல்லை!
இசை மேதை – டெரிக் பரவிசினி (Derek Paravicini)
ஹ்யூமன் ஆர்கெஸ்ட்ரா என புகழப்படுபவர் டெரிக் பரவிசினி.
ஒரே ஒரு முறை ஒரு இசையைக் கேட்டால் போதும் அதை அப்படியே இசைப்பார் அவர். 1979, ஜூலை 26ஆம் தேதி பிறந்த பரவிசினி லண்டனில் வசித்து வருகிறார். பார்வையில்லாத இவர் பிரபல எழுத்தாளரான சாமர்செட் மாமின் கொள்ளுப் பேரன். இவரது அதிசயத் திறமை இளம் வயதிலேயே வெளிப்பட்டது. ஒன்பதாம் வயதில் லண்டனில் பொது அரங்கம் ஒன்றில் தனது இசை நிகழ்ச்சியை நடத்தினார். 2010, ஆகஸ்ட் 26ஆம் தேதியன்று ஹிஸ்டரி சேனலில் உலகப் புகழ் பெற்ற ஸ்டான் லீயின் சூப்பர் ஹ்யூமன்ஸ் நிகழ்ச்சியில் பங்கு கொண்டு பல சோதனைகளையும் எதிர்கொண்டு தன் திறமையைக் காண்பித்து அனைவரையும் அயரச் செய்தார். பி.பி.சியும் இவரது நிகழ்ச்சியை ஒலிபரப்பியது. இவரது அபாரத் திறமை இன்றும் தொடர்கிறது.
வேகமாகப் படிக்கும் பெண்மணி – ஆன்னி டோன்ஸ் (Anne Tones)
உலகின் அதி வேகமாகப் படிக்கும் பெண்மணி என்ற புகழைப் பெற்றவர் ஆன்னி டோன்ஸ்! பிரபல நாவல் தொடரான ஹாரி பாட்டர் தொடரில் ஏழாவது நாவல் 608 பக்கம் உடையது. அதை அவர் 47 நிமிடம் ஒரு வினாடியில் படித்து முடித்தார். இப்படியும் படிக்க முடியுமா என்ற வியப்பை உலகெங்கும் ஏற்பத்துபவர் இந்த அதிசயப் பெண்மணி.
மாரத்தான் மன்னர் – டீன் கர்னாஸஸ் (Dean Karnazes)
லாஸ் ஏஞ்சல்ஸ் அருகில் உள்ள இங்கிள்வுட் என்ற இடத்தில் 1962, ஆகஸ்ட் 23ஆம் தேதி பிறந்த டீன் கர்னாஸஸ் உலகின் அதிவேக ஓட்டக்காரர். இவரை ‘அல்ட்ரா மாரதான் மேன்’ என்று அழைக்கின்றனர். 50 மாரத்தான்களை 50 நாட்களில் அமெரிக்காவில் உள்ள 50 மாகாணங்களில் இவர் 2006இல் ஓடிக் காட்டவே உலகினர் பிரமித்துப் போனார்கள். இவரது திறமை எப்படிப்பட்டது தெரியுமா? 2005இல் 350 மைல்களை 80 மணி நேரம் 44 நிமிடங்களில் தூங்காமல் ஓடிக் காட்டினார்.
மூச்சைப் பிடிக்கும் ஆற்றல் கொண்டவர் – ஸ்டிக் செவெரின்ஸென் (Stig Severinsen)
டென்மார்க்கைச் சேர்ந்த ஸ்டிக் செவெரின்ஸென் 1973, மார்ச், 8ஆம் தேதி பிறந்தவர். கின்னஸ் வோர்ல்ட் ரிகார்டில் நான்கு முறை மூச்சைப் பிடித்து நீந்தும் ஆற்றல் உடையவராக அறிவிக்கப்பட்டவர். 22 நிமிடங்கள் மூச்சைப் பிடித்து இவர் தனது ஆற்றலைக் காட்டிய போது உலகமே வியந்தது.நல்ல ஆரோக்கியமான ஒருவர் இரு நிமிடங்களுக்கு மேல் மூச்சைப் பிடித்து நிறுத்த முடியாது. ஸ்டான் லீயின் சூப்பர்ஹ்யூமன் நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்ட போது இவரைச் சோதித்துப் பார்த்தனர். அப்போது அவரது இந்த அபூர்வ ஆற்றலுக்குக் காரணம் அவரது இரத்தச் சிவப்பு அணுக்களை அவர் தனது மண்ணீரலில் சேமித்து வைத்திருப்பது தான் என்பதைக் கண்டறிந்தனர். இதே போல டால்பினும் செய்வது குறிப்பிடத் தகுந்த ஒரு விஷயம்!
பல் மொழி வல்லுநர் – ஹரால்ட் வில்லியம்ஸ் (Harold Williams)
இவர் (தோற்றம் 6-4-1876 மறைவு 18-11-1928) நியூஜிலாந்தைச் சேர்ந்தவர். ஒரு மொழியை நன்கு கற்பதிலேயே அனைவரும் படும் கஷ்டம் அனைவரும் அறிந்ததே. ஆனால் இவரோ 58 மொழிகளை நன்கு அறிந்திருந்தார். சிறந்த பத்திரிகையாளர்; தி டைம்ஸ் பத்திரிகையின் அயல்நாட்டு ஆசிரியராகவும் பணியாற்றினார். சீன மொழி, ஜப்பானிய மொழி, எகிப்திய மொழி உள்ளிட்ட பல மொழிகளில் இவர் கொண்டிருந்த அறிவு திகைப்படையச் செய்யும் ஒன்று.
ரப்பர் பாய் – டேனியல் ப்ரௌனிங் ஸ்மித் (Daniel Browning Smith)
தன் உடலை ரப்பர் பந்து போல வளைத்து நெளித்து உலகின் மிகவும் நெகிழ்வான நபர் தான் என்பதை நிரூபிப்பவர் டேனியல் ப்ரௌனிங் ஸ்மித்! இவரது செல்லப் பெயர் ரப்பர் பாய்! 1979 மே மாதம் 8ஆம் தேதி பிறந்த இவர், தனது உடலை முன்னும் பின்னுமாக வளைப்பார். கை கால்களை 180 டிகிரி சுழற்றிக் காட்டுவார். கின்னஸ் வோர்ல்ட் ரிகார்ட் இவரை வாழ்ந்து கொண்டிருக்கும் உலக மக்களில் உலகின் அதி நெகிழ்வான மனிதன் (most flexible man alive) என்று அறிவித்திருக்கிறது; ஏழு கின்னஸ் ரிகார்டுகளை வழங்கி இருக்கிறது.இவர் ஒரு நடிகர். காமெடியன்.விளையாட்டு வீரர். தொலைக்காட்சியில் பேட்டி எடுப்பவர். ஸ்டண்ட்மேன்.
இன்னும் சிலரை அடுத்துப் பார்ப்போம்.
அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..
உலகம் கண்ட விசித்திரமான விஞ்ஞானிகளில் ஒருவர் ஜோஸா டெல்காடோ. (Josa Delgado). யேல் பல்கலைக் கழகத்தில் பேராசிரியாரக்ப் பணியாற்றினாலும் கூட அவர் ஆர்வம் கொண்டிருந்தது மனம் பற்றிய ஆராய்ச்சியில் தான். ஆயிரத்தி தொள்ளாயிரத்து ஐம்பதுகளிலும் அறுபதுகளிலும் டெல்காடோ உயர் விலங்குகளின் மூளையில் எலக்ட்ரோடுகளைச் செருகிப் பதித்தார். தன் கையில் ஒரு ரிமோட் கண்ட் ரோலை வைத்துக் கொண்டு அந்த விலங்குகளைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து தான் சொன்னபடி அவற்றை ஆட்டுவித்தார். கஷ்டமான இயக்கங்களை அவை செய்யுமாறு கட்டளையிட்டார். ஒரு காளையின் மூளையில் எலக்ட்ரோடைப் பதித்து அதை ஒரு ரிங்கில் தன்னுடன் சண்டை போடுமாறு செய்து அது தன்னை முட்ட வரும் போது டிரான்ஸ்மிட்டரை உபயோகித்து அது தன்னை முட்ட வருவதை நிறுத்தினார்.
25 மனிதர்களிடமும் இப்படி எலக்ட்ரோடுகளைப் பதித்தார். எப்படியேனும் அவர்களின் மனங்களைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து ஆட்டிப் படைக்க வேண்டும் என்று நினைத்தார். வலுச்சண்டைக்குப் போவதில் தான் அவரது ரிமோட் கண்ட்ரோல் வேலை செய்தது. ஒரு முறை அவர் இப்படிச் சொன்னார் : “நாம் மின்னணு ஆற்றலால் மூளையைக் கட்டுப்படுத்த வேண்டும். ஒரு நாள் இல்லாவிட்டால் ஒரு நாள் படைகளும் போர் தளபதிகளும் மூளையில் செய்யப்படும் மின்சக்தி தூண்டுதலால் கட்டுப்படுத்தப்படுவர்.”
மனக் கட்டுப்பாடு ஆராய்ச்சியில் ஈடுபட்ட இவரது நோக்கம் நிறைவேறுமா? காலம் தான் பதில் சொல்ல வேண்டும்!
உங்களின் ஜீரண மண்டல அமைப்பு உங்களை
நோயுறச் செய்கிறதா, பருமனாக ஆக்குகிறதா? – 2
கட்டுரை ஆக்கம் : Mark Hyman MD
மொழியாக்கம் ச.நாகராஜன்
tamilandvedas.com,
swamiindology.blogspot.com
உங்கள் குடல் நாளம் சீராக இல்லை
என்பதை எப்படி உணர்வது?
உங்கள் ஜீரண அமைப்பைச் சரியாக இருக்குமாறு செய்ய முதலில் உங்கள் உடலின் குடல்நாளத்தை சீரற்றதாகச் செய்யும் எந்தப் பொருள்கள் குடலுக்கு அனுப்பப் படுகின்றன என்பதை அறிய வேண்டும். பட்டியல் இதோ:
பைபர் சத்து குறைவாக
உள்ளவை, அதிக இனிப்புள்ளவை , பதப்படுத்தப்பட்டவை, சத்துக் குறைவானவை, அதிக கலோரி
உணவுத் திட்டம் ஆகியவை தப்பான பாக்டீரியாக்களையும், நுரைமங்களையும் (wrong Bacteria abd
yeast) குடல் நாளத்திற்கு அனுப்புவதால் குடலானது பாதிப்புக்குள்ளாகிற்து.
அதிக
மருந்துகளை உட்கொள்வதால், அமிலத் தடைகளைப் போல (acid blockers – Prilosec,
Nexium etc.), அவை குடல்நாளத்தின் ஜீரண வேலையைத்
தடுக்கிறது – வீக்கத்தைக் கட்டுப்படுத்தும் மருந்துகளான ஆஸ்பிரின், அட்வில். ஆலிவ்
(Aspirin, Advil and Aleve) மற்றும் அதிக அளவில் ஆன்டி
– பயாடிக்ஸ், ஸ்டிராய்ட்கள், ஹார்மோன்கள் ஆகிய மருந்துகளையும் குறிப்பாகச்
சொல்லலாம்.
*
கண்டுபிடிக்கப்படாத குளூட்டன் சகியாமை (Gluten intolerance), குளூட்டன் ஒவ்வாமை, (Celiac disease) அல்லது
பால் பொருள்கள், முட்டைகள் அல்லது சோளம் போன்ற குறைந்த கிரேடு உணவு ஒவ்வாமைகள்
*
தொடர்ந்து இருக்கும் குறைந்த கிரேடு தொற்று வியாதிகள் அல்லது சிறுகுடலில்
பாக்டீரியாக்கள் அதிகமாக இருக்க அதனால் ஏற்படும் குடல் நாளத்தின் சீரற்ற தன்மை,
ஈஸ்டின் அதிக வளர்ச்சி (Overgrowth of Yeast),
பாராசைட்டுகள் (Parasites) அல்லது இன்னும் மோசமான
குடல்நாளத் தொற்றுக்கள்
*
குடல் நாளத்தைச் சேதப்படுத்தும் மெர்க்குரி (Mercury – பாதரஸம்)
மற்றும் பாசி (mold toxins) போன்ற விஷங்கள்
*
அமிலத்தைத்தடை செய்யும் மருந்துகளின் உபயோகத்தால் ஏற்படும் ஜீரணத்திற்கான போதுமான
என்ஜைம் இயக்கம் இல்லாமை அல்லது துத்தநாகம் போதுமான அளவு இல்லாமல் இருப்பது (Zinc
deficienty)
*
குடல்நாள நரம்பு மண்டலத்தை மாற்றக் கூடிய மன அழுத்தம், ஒழுகக்கூடிய குடல் நாளத்தை
உருவாக்குகிறது. சாதாரணமான பாக்டீரியாக்களை குடல்நாளத்தில் மாற்றுகிறது.
பிறகு என்ன நடக்கிறது என்று சொல்ல வேண்டியதே இல்லை; நீங்கள் நோய்வாய்ப்படுகிறீர்கள்.
குடல் நாளத்திற்குக் கொஞ்சம்
கூடச் சம்பந்தமில்லாதது போலத் தோன்றும் எக்ஸிமா, சொரியாஸிஸ் அல்லது ஆர்த்ரிடிஸ் (eczema, psoriasis, or arthritis) ஆகியவை
உண்மையில் குடல்நாளப் பிரச்சினைகளாலேயே ஏற்படுகின்றன என்பதை முக்கியமாக அறிந்து கொள்ள
வேண்டும். குடல்நாளத்தை நன்கு கவனித்தால் நீங்கள் நலமுடையவராக ஆகி விடுவீர்கள். இதோ
ஒரு சின்ன எடுத்துக்காட்டு:
எக்ஸிமா குடல்நாளத்தில் ஆரம்பிக்குமா?
அலிஸன் எனது நோயாளிகளில் ஒருவர்.
அவர் எக்ஸிமாவினால் பாதிக்கப்பட்டிருந்தார். செம்மையான, ஒழுகும், கறை படிந்த, அரிப்புக் கொண்ட தடிப்புகள்
அவளது உடல் முழுதும் பரவி இருந்தது. உங்கள் குடல்நாளம் சீரற்றிருந்தால் என்ன நடக்கும்
என்பதற்கான சரியான எடுத்துக்காட்டு இது தான். உங்கள் ஜீரணத்தை சரியாக ஆக்கி விட்டால்
எப்படிப்பட்ட அசாதாரணமான பரிபூரண குணத்தை நீங்கள் அடைய முடியும் என்பதற்கான உதாரணமும்
இவர் தான்.
ஒரு டாக்டர், இன்னொரு டாக்டர் என்று ஒவ்வொருவரையாக இந்தப் பெண் பார்த்துக் கொண்டே இருந்தார். பூச்சுத் தைலங்கள், லோஷன்கள், திரவ மருந்துகள் (slves, lotions and potions) ஆகியவற்றைத் தன் தோலின் மீது தடவிக் கொண்டிருந்தார். அத்துடன் ஸ்டிராய்டுகள் , ஆன்டி பயாடிக் மருந்துகளையும் எடுத்துக் கொண்டிருந்தார். ஆனால் அவர் பார்த்த டாக்டர்களில் ஒருவராவது அவரது நோயின் அடிப்படையான காரணத்தை அறிந்து கொண்டு சிகிச்சை செய்யவில்லை.
அலிஸனுக்கு
வயது 57. தொடர்ந்து எட்டு வருட காலம் கடுமையான, கொஞ்சம் கூட குணமடையாத, எக்ஸிமாவினால்
அவதிப் பட்டுக் கொண்டிருந்தார். அவர் அதிக இனிப்புக் கொண்ட உணவுத் திட்டத்தை மேற்கொண்டிருந்தார்.
அடிக்கடி ஜனன உறுப்பில் ஈஸ்ட் தொற்றுக்களைக் கொண்டவராகவும் இருந்தார் (frequent vaginal yeast infections).
நான் அவரைப்
பார்த்த போது அவரது குடல்நாளத்தைச் சோதனை செய்தேன்; ஒழுகும் குடல்நாளத்தை அவர் கொண்டிருப்பதையும்
கண்டேன். அவரது குடல்நாளத்தில், ஒரு செல் கனத்தைக் கொண்ட பூச்சு உடைபட்டு சரியாக இயங்காமல்
இருந்தது. அவர் 24 lg G என்ற உணவு ஒவ்வாமையைக் கொண்டிருந்தார்; அவரது
மலமோ ஆரோக்கியமான பாக்டீரியாக்களைக் கொண்டிருக்கவில்லை, பல வருடங்களாக ஆன்டி பயாடிக்
மருந்துகளை எடுத்துக் கொண்டிருந்தமையால் ஈஸ்டின் அதிக வளர்ச்சியையும் கொண்டிருந்தார்.
ஈஸ்டிற்கு எதிராக அதிக அளவில் ‘ஆன்டி பாடிஸ்’(Antibodies) அளவுகளையும் இரத்தத்தில் கொண்டிருந்தார்.
ஆகவே அவரது
குடல்நாளம் சரியாக ஆவதற்கு நான் உதவி செய்தேன். அவருக்கு எதிர்வினை செய்த அனைத்து உணவுகளையும்
அவரை நிறுத்தச் சொன்னேன். இனிப்பைத் தவிர்த்து அவரது கேஸ்ட்ரோ இண்டெஸ்டினல் பாதையில்
ஈஸ்டையும் பதப்படுத்தப்பட்ட கார்போஹடிரேட்டுகளையும்
அளிப்பதை நிறுத்தச் சொன்னேன் (to stop
feeding the yeast in her gastrointestinal tract by cutting sugar and refined
carbohydrates). அவரது குடல் நாளத்தில் இருந்தஈஸ்டைக் கொல்ல, பூசண எதிர்ப்பு மருந்துகளையும்(antifungal
medications) மூலிகைகளையும் அளித்தேன்.
பின்னர் ப்ரோபயாடிக்ஸ்களை அளித்து (probiotics)
அவர் உடலில் ஆரோக்கியமான பாக்டீரியாக்கள்
இருக்கும் சூழ்நிலையை உருவாக்கினேன். அத்துடன் குடல்நாளத்தை குணப்படுத்தும் ஊட்டச்சத்துக்களை அளித்து
அவரது குடல்நாள பூச்சைச் சரி செய்து இயல்பான உடல் இயக்கம் அவருக்கு வருமாறு செய்தேன்.
விளைவு?அவரது
எக்ஸிமா எட்டு வருடங்களில் முதல் தடவையாக மறைந்தே போனது. அது மீண்டும் வரவே வராமல்
ஒழிந்தது!
அலிஸனுக்கு
ஏற்பட்ட அனுபவத்தை நீங்களும் அனுபவிக்கலாம். உங்களது ஜீரணத்தைச் சரியாக ஆக்குவதன் மூலம்
உங்கள் தொடர் வியாதி அடையாளங்களை நீக்கிக் குணமாகலாம்.
நல்ல ஜீரண ஆரோக்கியத்திற்கான
ஏழு படிகள் இதோ:
உங்களது உள் குழாயைச் சரி செய்ய நீங்கள் செய்ய வேண்டியது இது தான்:
பதப்படுத்தப்படாத முழுமையான உணவுகளை உண்ணுங்கள். அதிகமான பைபர் இருக்கும்படியான
கறிகாய்கள், பீன்ஸ், பருப்புகள்,
விதைகள் முழுமையான தானியங்கள் ஆகியவற்றைச் சேர்த்துக் கொள்ளுங்கள்.
உணவு ஒவ்வாமையை நீக்குங்கள். சில உணவுகள் சேராவில்லை
என்ற நிலை இருந்தால் அதைத் தவிர்த்து வேறு உணவுத் திட்டத்தை மேற்கொள்ளுங்கள். க்ளூடன்,
பால் பொருள்கள், ஈஸ்ட், சோளம், சோயா, முட்டைகள் ஆகியவற்றை ஒரு வாரம் நிறுத்துங்கள்.
(cut out gluten, dairy, yeast,
corn, soy and eggs). உங்கள் குடல்நாளம்
எப்படி இருக்கிறது என்று பாருங்கள். மற்ற நோய்க்குறிகளின் அடையாளங்கள் எப்படி இருக்கிறது
என்பதையும் பாருங்கள்.
பூச்சிகள் அதிகமாக இருக்கிறதா என்பதையோ அல்லது தொற்றுக்கள்
இருக்கிறதா என்பதையோ பார்த்து அதற்குத் தக்க சிகிச்சையை எடுத்துக் கொள்ளுங்கள். பாராசைட்டுகள்,
சின்ன குடல்பகுதி பாக்டீரியா மற்றும் ஈஸ்ட் ஆகியவை சரியாக குடல்நாளம் இயங்குவதைத் தடைப்படுத்தும்.
நீங்கள் குணமடைய விரும்பினால், இந்தத் தொற்றுக்களுக்கு சிகிச்சை எடுக்க வேண்டும்.
உங்கள் ஜீரண என்ஜைம்களை மீண்டும் நிறைவு செய்யுங்கள்.
போதுமான அளவு ஜீரண என்ஜைம்கள் உங்கள் குடல்நாளத்தில் இல்லையென்றால் உங்கள் உடல் மற்றும்
மூளை சரியாக இயங்குவதற்கான மூலப்பொருள்களை உங்கள் உணவுகள் சரியாக மாற்றித்தரச் செய்ய
முடியாது. இந்தப் பிரச்சினையைத் தீர்க்க சரியான ஜீரண என்ஜைம்களை உங்கள் உணவுடன் சேர்த்துக்
கொள்ளுங்கள் (take a
broad – spectrum digestive enzymes with your food).
நட்பான
பாக்டீரியாக்களைக் கொண்டு உங்கள் உடல் மண்டலத்தை அருமையாக ஆக்கி மீண்டும் நிர்மாணியுங்கள்.
ப்ரோபயாடிக் துணை உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள் (Take
probiotic supplements). அவைகள் நல்ல
குடல்நாளத்திற்கான ஆரோக்கியமான் பாக்டீரியாக்களை மீண்டும் அடைய உதவும்.
நல்ல கொழுப்பைக்
கொள்ளுங்கள். ஒமேகா -3 துணை உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். இது குடல்நாளத்தில் இருக்கும்
வீக்கத்தைக் கட்டுப்படுத்தும்.
உங்கள் பூச்சை (lining) குணப்படுத்துங்கள்.
குடல்நாளத்தைக் குணப்படுத்தும் க்ளூடாமைன் மற்றும் துத்தநாகம் போன்ற ஊட்டச்சத்துக்களை
உங்களின் குடல்நாள பூச்சைச் (gut
lining)சரி செய்வதற்காக உண்ணுங்கள். அது தனது இயல்பான இயக்கத்தை
அடையும்.
இப்படி ஜீரணத்தைச் சரி செய்ய சில காலம் பிடிக்கும், ஆனால் அதில்
நிச்சயம் வெற்றி உறுதி. நீங்கள் துடிப்பான ஆரோக்கியத்தை விரும்பினால் அது மிக மிக அவசியமானது.
ஆகவே உங்கள் உள் குழாயை சரி செய்ய மேற்கொண்ட சிகிச்சை வழிமுறைகளைக் கடைப்பிடித்து உங்கள்
நோய் அறிகுறிகள் மறைவதைக் கண்டு மகிழுங்கள்!
இப்போது நான் உங்களிடம்
கேட்க விரும்புவது : –
உங்களின் குடல்நாளம் உங்களின் முழு ஆரோக்கியத்திற்கு எவ்வளவு
முக்கியமானது என்பதை நீங்கள் உணர்கிறீர்களா?
உங்கள் ஜீரணத்தைச் சரியாக்க என்னென்ன வழிமுறைகளை நீங்கள் எடுக்கிறீர்கள்?
எப்படி அவை வேலை செய்கின்றன?
ஏன் மருத்துவக் கம்பெனிகள்
குடல்நாளத்தின் சரியான இயக்கத்தைத் தடை செய்யும் மருந்துகளைத் தயார் செய்து
அவற்றை தீவிரமாக விளம்பரப்படுத்துகின்றன? உடல் ஆரோக்கியத்தைக் கெடுக்கின்றன?
உங்கள் எண்ணங்களைத் தாராளமாகப் பகிர்ந்து கொள்ளலாமே!
உங்கள் ஆரோக்கியத்தை விரும்பும் நலம் விரும்பி
மார்க் ஹைமேன்
MD
****
நன்றி : மார்க் ஹைமேன் MD – க்ளீவ்லாண்ட் க்ளினிக் சென்டர் ஃபார் ஃபங்ஷனல் மெடிசின் – இன் டைரக்டர். அல்ட்ரா வெல்னெஸ் சென்டரின் நிறுவனர்.