400 வகை யாகங்கள்: காஞ்சி பரமாசார்யார் உரை

rudra baba

Sri Sathya Sai Baba in Ati Rudra Maha Yagna

By London Swaminathan லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண் — 890 தேதி 6 மார்ச் 2014

சென்னையில் 20-11-1932-ல் ‘ஹவிர் யக்ஞங்களும் ஸோம யக்ஞங்களும்’ என்ற தலைப்பில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சங்கராசார்ய சுவாமிகள் (காஞ்சி பரமாசார்யார்) நிகழ்த்திய சொற்பொழிவின் சுருக்கம்:

விவாஹ காலத்தில் எந்த அக்கினியை சாக்ஷியாக வைத்துக் கொண்டு விவாஹம் பண்ணுகிறோமோ அதை வரன் வீட்டில் வைத்துக்கொண்டு அதில் ஔபாசனம் ஆரம்பித்துக்கொண்டு ஆயுள்பரியந்தம் அதை வைத்துக் காப்பாற்றிக் கொண்டு வர வேண்டும். வருஷத்தில் ஆறு கர்மாக்கள் ஔபாசனாக்கினியால் பண்ண வேண்டும்.

Homam in front of Sayeeshwara

ஒரு பிள்ளை பிறந்தபின் மயிர் நரைப்பதற்கு முன் அக்னிஹாத்திரம் செய்யவேண்டும். பிள்ளை பிறக்காவிட்டால் அக்னிஹாத்திரம் இல்லை.

ஸந்யாசிக்கு சாதுர்மாஸ்யம் என்று ஒன்று உண்டு. அது ஒரே இடத்திலிருந்து பண்ண வேண்டியது. கிருஹஸ்தனுக்கு அது ஒரு யாகம். அக்கினியாதனம், அக்னிஹாத்திரம், தரிசபூர்ணமாஸம், ஆக்ரஹாயணி, சாதுர்மாஸ்யம், பசுபந்தம், சௌத்ராமணி என்னும் ஏழும் ஹவிர் யக்ஞங்கள்.
வேறு சில சொற்பொழிவுகளில் அவர் கொடுக்கும் தகவல்களின் சுருக்கம்.
ஒவ்வொருவரும் 21 வகை யஜ்ஞங்களை செய்துவரவேண்டும். இவை பாக யஜ்ஞ, ஹவிர் யஜ்ஞ, சோம யஜ்ஞ என்று மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. பாக யஜ்ஞம் ஏழிலும், முதல் ஐந்து ஹவிர்யஜ்ஞங்களிலும் உயிர்ப்பலி கிடையாது. வாஜபேய யஜ்ஞம் முதல்தான் உயிர்ப்பலி உண்டு. பிராமணர்கள் செய்யக்கூடிய பெரிய யஜ்ஞமான வாஜபேய யஜ்ஞத்தில் 23 பிராணிகளும், க்ஷத்ரியர்கள் செய்யும் மிகப்பெரிய யாகமான அஸ்வமேதத்தில் நூறு பிராணிகளும் பலியிடப்பட்டன.
அதர்வ வேதம் யாகங்களை,

அமைதிக்கான சாந்திகம், பலத்துக்கான பௌஷ்திகம், எதிரிகளை நாசம் செய்வதற்காண ஆபிசாரிகம் என மூன்று வகையாகப் பிரித்துள்ளது.

இராமபிரானைத் தோற்கடிக்க இந்திரஜித், நிகும்பிலயாகம் (ஆபிசார வகை) செய்ய முயன்றான்.
‘’காமதேனு போன்று யாகங்கள், மனிதனுக்கு விரும்புவதைக் கொடுப்பவை என்றும் மனிதனைப் படைத்தபோதே பிரம்மா அவர்களுக்கு யாகங்களை அளித்ததையும் பகவத் கீதை ஸ்லோகம் மூலம் சுவாமிகள் விளக்குகிறார்.

யாகங்கள் செய்வதன் மூன்று நோக்கங்களையும் சுவாமிகள் விளக்குகிறார்:1. எல்லா உயிரினங்களும் நலமுடன் வாழப் பிரார்த்திப்பது 2.இறந்தபின்னர் மேலுலகத்தில் சுகமாக வாழ 3. எல்லாவற்றையும் விட மேலாக, பிரதிபலன் எதிர்பார்க்காமல், உலக நலனுக்காக இதைச் செய்வது நமது கடமை என்று எண்ணிச் செய்வது.

யஜ்ஞங்கள் மூன்று தினுஸு, யஜ்ஞம் என்பது யாகம் வேதத்தில் யஜ்ஞாதிகள் சொல்லப்பட்டிருக்கின்றன. வேதத்தில் ஏறக்குறைய 400 வகை யாகங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன.

chennai_04
Ati Rudra in Chennai by Baba

ஒவ்வொரு பிராமணனும் செய்யவேண்டிய யஜ்ஞங்கள் 21. அவைகளில் பாக யஜ்ஞங்கள் ஏழு போக பாக்கி உள்ளவை 14. யாகங்களைப் பற்றிய விஷயங்கள் வேதங்களில் நிறைய சொல்லப்பட்டிருக்கின்றன.
ஸோம யாகங்கள் ஏழு. அக்னிஷ்டோமம் முதல் யாகம். அதைச் செய்தவர்கள் ஸோமயாஜி. கடைசியில் இருப்பது வாஜபேயம். அதைச் செய்தவர்கள் வாஜபேயர்கள். வட தேசத்தில் பாஜபே என்று அவர்களைச் சொல்லுவார்கள். வாஜபேயம் பண்ணினவர்களுக்கு அவப்ருத ஸ்நான காலத்தில் அரசர்கள் சுவேதச் சத்திரம் (வெண்குடை) பிடிக்க வேண்டும். திருவாங்கூர், மைசூர் இந்த ராஜ்யங்களில் அவர்களுக்கு சுவேதச் சத்திரம் கொடுக்கிறர்கள்.

ஸோம யாகம் பண்ணும்பொழுது ஸோமலதைச் சாற்றைப் பிழிந்து ஸோமபானம் செய்வார்கள். ஸோமலதையும் கிருஷ்ணாஜினமும்( மான் தோல்) இப்பொழுது மலையாளத்தில்தான் கிடைக்கின்றன. மற்ற இடங்களில் இல்லை. நம்பூதிரிகளில் பத்துக் குடும்பத்தில் ஒருவராவது ஸோம யாகம் பண்ணுகிறர்ர்கள். யஜ்ஞம், தானம், தபஸ், இவைகளைச் செய்வதினால் சித்த சுத்தி உண்டாகிறது என்று நம்முடைய ஸ்ரீ ஆச்சார்யர்கள் சொல்லியிருக்கிறர்கள்.

ஜோதிஷ்டோமம் ஜன்மாவில் ஒருதடவையாவது பண்ணவேண்டும்.

பரமாத்மாவை அறியப் பிரயத்தனப்படுகிறவர்கள் யஜ்ஞம், உபவாசம் முதலியவைகள் எல்லாவற்றையும் பரமேசுவரப் ப்ரீதியாகப் பண்ணவேண்டும்ம். பூர்வ ஜன்மத்தில் யாகங்கள் பண்ணினவன் இந்த ஜன்மத்தில் விவேகத்தைப் பெறுகிறான்.

(சுவாமிகளின் உரைச் சுருக்கத்தை மேலே கண்டீர்கள்)

27.02.05MahaRudra 009 (1)

Maha Rudar Yagna by several priests.

400 யாகப் பட்டியல் தயாரிப்போம்:

சுவாமிகள் 82 ஆண்டுகளுக்கு முன் நடத்திய உரையை மீண்டும் ஒரு முறை படித்தபோது 400 யாகங்களின் பட்டியல் கிடைக்குமா என்று தேடினேன். சுமார் 40 யாக, ஹோமங்கள் பட்டியலே கிடைத்தது. எதிர் கால ஆராய்சியாளருக்காவது நாம் அந்தப் பட்டியலை வைத்திருப்பது நல்லது.

இதோ இதுவரை நான் சேகரித்த யாக, யக்ஜஞ, ஹோம பட்டியல்:
1.ஸ்ரீ மஹா கணபதி ஹோமம்: எந்தக் காரியத்தைத் தொடங்கும் முன்னரும் நாம் செய்ய வேண்டியது.

2.நவக்ரஹ ஹோமம்: புதிய கட்டிடம், வீடு கட்டிய போதும், மேலும் பல புதிய முயற்சிகள் செய்யும்போதும் ஒன்பது கிரகங்களின் தீய பார்வை படாமல் இருக்க செய்யும் ஹோமம்.

3.சுதர்ஸன ஹோமம்: இது எதிரிகளின் தொல்லையைப் போக்கும்.

கேரளத்தில் திருச்சூர் அருகில் நடத்தப்படும் அதிராத்ர யக்ஞம்: பாஞ்சால் என்னும் கிராமத்தில் 1975 முதல் அதிராத்ர யக்ஞம் நடத்தப்படுகிறது. அமெரிக்க கலிபோர்னியா பல்கலைக் கழக தத்துவ இயல் பேராசிரியர் ப்ரிட்ஸ் ஸ்டால் இதை அப்படியே படம்பிடித்து உலகிற்கு அளித்தார்.

puranapanda_srinivas._1_

100 இரவு யாகங்கள்

100 இரவுகள் நடத்தும் யக்ஞம்: திருநெல்வேலி மாவட்ட அரியநாயகிபுரம் ஆர்.அனந்தகிருஷ்ண சாஸ்திரி 1936 ல் எழுதிய மகாமேரு யாத்திரையில் ஒரு இரவு முதல் நூறு இரவு வரை நடத்தப்படும் (சதராத்ர்க் க்ரது) பற்றி சிரௌத சூத்திரங்களால் தெரிந்துகொள்ளலாம் என்று எழுதியுள்ளார்.
ராஜஸ்தான் பல்கலைக் கழக வரலாற்றுப் பேராசிரியர் விபா உபத்யாய எழுதிய கட்டுரையில் அந்த மாநிலத்தில்தான் யூப ஸ்தம்பங்கள் அதிகம் என்று சொல்லி கல்வெட்டுகளில் குறிப்பிட்ட யாகங்களின் பட்டியலை கொடுத்துள்ளார். இந்தக் கட்டுரையின் ஆங்கில மொழிபெயர்ப்பில் விரிவாகக் கொடுத்துள்ளேன்.

12 ஆண்டுகள் நீடிக்கும் யக்ஞம் பற்றிப் புராணங்கள் கூறுகின்றன. நைமிசாரண்யம் காட்டில் நடந்த ரிஷிகள் கூட்டத்தில்தான் புராணங்கள் இயற்றப்பட்டன.

அஸ்வமேதம்: அரசர்கள் செய்யும் மிகப்பெரிய யாகம் இது. இதில் நூறு வகை மிருகங்கள் பலியிடப்படும். ராஜாவின்யாகக் குதிரை எங்கெல்லாம் செல்கிறதோ அவை எல்லாம் ராஜவுக்குச் சொந்தம். அதை மறுப்பவர்கள் குதிரையைப் பிடித்து கட்டிப்போடலாம். பின்னர் பெரிய யுத்தம் நேரிடும். 200 வகையான பிராணிகள், பறவைகள், பூச்சிகள், தாவரங்கள் முதலியன தீயில் இடப்படும். இறுதியில் நாடு நாடாகச் சென்று திரும்பிய குதிரையும் பலியிடப்படும்.

புருஷமேதம்: நர பலி கொடுக்கும் யாகம். ஆனால் இது நடை பெற்றதாகத் தெரியவில்லை. ஜப்பானியர்கள் ஹராகிரி செய்துகொள்வது போல தமிழ் வீரர்கள் போருக்கு முன், கழுத்தை அறுத்து, தங்களைப் பலியிட்டுக் கொண்ட செய்திகள் தமிழ் இலக்கியம் முழுதும் இருப்பதையும், சிலைகள் தமிழ்நாடு முழுதும் இருப்பதையும் பற்றி ஏற்கனவே படங்களுடன் எழுதிவிட்டேன். மஹாபாரதத்திலும் இப்படி களபலி நிகழ்ச்சி இருப்பதையும் குறிப்பிட்டேன். இது போல புருஷமேதம் இருந்திருக்கலாம். ஆனால் அஸ்கோ பர்போலா போன்ற சம்ஸ்கிருத் அறிஞர்கள் இது அடையாள பூர்வமாக (அதாவது மனித பொம்மை செய்து) நடத்தப்பட்டதாகக் கூறுகின்றனர். பல்லாயிரக் கணக்கான குழந்தைகள் பலிகொடுக்கப்பட்ட கல்லறைகள் பஹ்ரைனில் உள்ளன. பல்லாயிரக் கணக்கான அடிமைகள் பலியிடப்பட்டதை எகிப்திய கல்லறைகளில் காண்கிறோம். பாரத நாட்டில் இப்படி எதுவும் நடக்கவில்லை.

ராஜசூயம்: சோழ மன்னன் பெருநற்கிள்ளீ நடத்திய ராஜசூய யக்ஞத்தில் சேர,சோழ,பாண்டிய மன்னர்கள் மூவரும் ஒரே மேடையில் அமர்ந்ததை பிராமணர்களின் முத்தீக்கு ஒப்பிட்டு அவ்வையார் பாடிய பாடல் புறநானூற்றில் (367) உள்ளது. தர்மன் செய்த ராஜசூய யாகம் பற்றி மஹாபாரதத்தில் மிக விரிவாக உள்ளது.

DSC_0081
At Sri Narayani Peedam

வாஜபேயம்: பாரதத்தின் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயி இந்த வாஜபேய குடும்பத்தில் பிறந்த பிராமணர். இந்த ஜாதியினர் செய்யக் கூடிய மிகப் பெரிய யாகம் இதுதான். இதில் 23 பிராணிகள் பலியிடப்படும்.

புத்ர காமேஷ்டி யாகம்: குழந்தைகள் இல்லாதவர்கள் செய்யும் யாகம். தசரதன் செய்த இந்த யாகம் குறித்து ராமாயணத்தில் விரிவாகப் பேசப்படுகிறது.

புறநானூற்றில் யாகம்

பூஞ்சாற்றுர்ப் பார்ப்பான் கௌணியன் விண்ணந்தாயன் மீது ஆவூர் மூலங்கிழார் பாடிய ஆர்புதமான பாடலில் 21 வகை யாகம் பற்றிய அரிய தகவல்களைப் பாடுகிறார். உரைகாரர்கள் முக்கியத் தகவல்களைச் சேர்த்துள்ளனர்.

ஔபாசனம்: பிராமணர்கள் முதல் நான்கு வருணத்தவர்களும் திருமணம் ஆன பின்னர் செய்ய வேண்டிய தினசரி ஹோமம் இது. சந்யாசி ஆனால் இதைச் செய்ய வேண்டாம்.

சமிதாதானம்: தினமும் இரண்டு முறை பிரம்மச்சாரி மாணவர்கள் செய்யவேண்டிய ஹோமம்.

அக்னிஹோத்ரம்: தினமும் செய்யவேண்டியது. போபாலில் விஷவாயு வெளியேறி 3000 பேர் இறந்தபோது அக்னிஹோத்ரம் செய்த இரண்டு குடும்பத்தினர் மட்டும் விஷவாயு பாதிக்காமல் தப்பிய செய்தி பத்திரிகைகளில் வெளியானது.

புருஷசூக்த ஹோமம் என்பது ரிக்வேதத்தில் உள்ள புருஷசூகத மந்திரத்தைச் சொல்லி செய்வது.
ம்ருத்யுஞ்சய ஹோமம்: ஸ்ரீ ருத்ரத்தில் ஆயுளை வளர்க்கவும் மரண பயத்தைப் போக்கவும் வரும் மந்திரம் ஓம் திரயம்பகம்….. என்ன்னும் மந்திரம் ஆகும். இதைச் சொல்லி செய்யும் ஹோமம் இது.
காயத்ரி ஹோமம்: காயத்ரி மந்திரத்துடனும், பகவத் கீதா ஹோமம் கீதை ஸ்லோகங்களுடனும் செய்யப்படும்.

yagam1

Picture of Sri Narayani Amma at Narayana Peedam (See Largest Golden Temple in the World posted here)

பாபா செய்த மகத்தான யக்ஞம்

ருத்ரம் என்பது சிவனைப் போற்றும் யஜூர்வேதப் பாடலாகும். இதைப் பலமுறை உச்சரித்து ருத்ர யாகம் செய்வார்கள். நமது காலத்தில் சென்னையிலும் புட்டபர்த்தியிலும் ஸ்ரீ சத்ய சாய் பாபா இதைப் பெரிய அளவில் நடத்தி உலகையே வியப்பில் ஆழ்த்தினார்:–

ருத்ர ஏகாதசி: 11 புரோகிதர்கள் 11 முறை ருத்ரத்தைப் பாராயணம் செய்து 121 தடவை ஹோமம் செய்வது
மஹாருத்ரம்: ருத்ரத்தை 1331 (11X11X11) தடவைப் பாடி யாகம் செய்வது
அதிருத்ரம்: ருத்ரத்தை 14641 (11X 11X11X11) தடவைப் பாடி யாகம் செய்வது.

தமிழ்க் கலைகளஞ்சிய தகவல்

நூறு ஆண்டுகளுக்கு முன் ஆ. சிங்காரவேலு முதலியார் தொகுத்த அபிதான சிந்தாமணி என்ற என்சைக்ளோபீடியா தரும் தகவல் பின்வருமாறு:–

யாகங்கள்: இவை பிரமம், தெய்வம், பூத, பிதுர், மானுஷம் என்பன. இவற்றுள் வேதம் ஓதல் பிரம யாகம். ஓமம் வளர்த்தல் தெய்வ யாகம். பலியீதல் பூத யாகம். தர்ப்பணம் செய்தல் பிதுர் யாகம். இரப்போர்க்களித்தல் மனுஷயாகம். இவை வேதங்களிலும் புராணங்களிலும் கூறிய அக்னி காரியங்களாம். இவற்றின் குண்ட மண்டல மந்திராதி கிரியைகள் ஆங்காங்கு வழக்கங்குறைந்து சிதைந்தும் பிறழ்ந்தும் கிடத்தலின் அவைகளின் கிரியைகளையும் குண்ட மண்டல வேதிகைகலையும் எழுதாது பெயர் மாத்திரம் எழுதுகிறேன்.

(1).அக்னிஷ்டோமம் (2)அத்யனிஷ்டோமம் (3) உக்தீயம் (4) சோடசீ (5) வாசபேயம் (6) அதிராத்ரம் (7) அப்தோரியாமம் (8)அக்னியாதேயம் (9) அக்னிஹோத்ரம் (10) தரிச பூர்ணமாசம் (11) சாதுர்மாஸ்யம் (12) நிருட பசுபந்தம் (13) ஆக்கிரயணம் (14) சௌத்திராமணி (15) அஷ்டகை (16) பார்வணம் (17) சிராத்தம் (18) சிராவணி (19) அக்ரசாயணி (20) சைத்திரி (21) ஆச்வயுசீ (22) விசுவசித் (23) ஆதானம் (24) நாசிகேதசயனம் (25) காடகசயனம் (26) ஆருண கேதுக சயனம் (27) கருடசயனம் (28) பௌண்டரீகம் (29) சத்திரயாசம் (30) சாவித்ரசயனம்

N.B. I have given more information in the English version of this article. I am not translating everything to keep it short: swami

Contact swami_48@yahoo.com

அடியார்கள் வானில் அரசாள ஆணையிட்ட அற்புதர் சம்பந்தர்!

For picture of Sambandar click on this
sambandar1

Post No.889 Dated 6th March 2014
By ச.நாகராஜன்

தமிழ் அறிந்தோர் பாக்கியசாலிகள்

தமிழராகப் பிறந்தவர்களும் தமிழைப் பயின்றவர்களும் பாக்கியசாலிகள். ஏனெனில் பெறுதற்கு அரிய சுவர்க்கத்தைப் பெற பக்தியுடன் உள்ளமுருக, தான் பாடிய பாடல்களைப் பாடினாலே போதும் என்று சொல்லக் கூடிய அற்புத பாலகரான சம்பந்தரின் பாடல்கள் தமிழ் மொழியில் தானே அமைந்திருக்கிறது.
நாளும் கோளும் நமக்கில்லை; எந்நாளும் நன்னாளே என்பதை ஆணித்தரமாக பிரகடனப்படுத்தும் திருஞான சம்பந்தரைப் போன்ற மாபெரும் கவிஞரையோ யோகியையோ பக்தரையோ பதினாறு வயதில் தன்னைச் சார்ந்தவர்களுடன் இறைஜோதியில் ஐக்கியமான இன்னொரு அவதாரத்தையோ மனித குல வரலாற்றிலேயே பார்க்க முடியாது!

அஷ்ட கிரஹ சேர்க்கையால் என்ன ஆகுமோ என்று நல்லோர்கள் உளம் பதை பதைக்க காஞ்சி பரமாசார்யாளை அணுகிய போது அவர் மென்மையாக ஞானசம்பந்தரின் கோளறு பதிகம் இருக்கிறதே அதை உள்ளமுருக எங்கும் இசைத்தாலே போதுமே என்றார். தமிழகமெங்கும் பட்டி தொட்டிகளில் எல்லாம் சம்பந்தரின் பதிகம் முழங்கியது. ஒரு வித தீங்கும் நம்மை அணுக வில்லை.

கோளறு பதிகம்

திருமறைக்காட்டில் அப்பரைக் கண்டு ஆனந்தம் கொண்ட சம்பந்தர் மதுரைக்கு கிளம்ப இருந்த தருணத்தில் அப்பர் தயங்கியவாறே நாள் சரியாக இல்லையே என்று கூற சம்பந்தர் திருவாய் மலர்ந்தருளிய பாடல்களே கோளறு பதிகம்.

சாதாரணமாக ஒருவர் ஒரு காரியத்தை உத்தேசித்து வெளியிடங்களுக்குச் செல்லக் கிளம்புகையில் பெரியோரோ அல்லது மனைவியோ மங்களாசாஸனம் செய்து வழி அனுப்புவது நமது பாரம்பரிய வழக்கம்.

பன்னிரெண்டு வருடங்கள் சிவபெருமானை ஆராதித்து ருக்மிணிக்கு புத்திரர்களைப் பெற்றதைச் சுட்டிக் காட்டி ஜாம்பவதி தனக்கும் புத்திரனை வேண்டி கிருஷ்ணரை வேண்டும் போது அவர் “சரி, விடை கொடு நான் கிளம்புகிறேன்” என்று இமயமலைக்குத் தவம் செய்யக் கிளம்பியபோது ஜாம்பவதி கூறிய மங்களாசாஸனம் இது:

“யாதவரே!க்ஷேமமுண்டாகவும் ஜெயமுண்டாகவும் செல்லக் கடவீர்! ப்ரம்மா, சிவன், காஸ்யபர்,நதிகள்,தேவர்கள் புண்யக்ஷேத்திரங்கள், ஓஷதிகள், த்ரேதாக்னிகள், வேதங்கள், ரிஷிக்கூட்டங்கள், யாகங்கள், கடல்கள்,தக்ஷிணைகள்,ஸாமங்கள்,நக்ஷத்ரங்கள்,பித்ரு தேவதைகள், நவக்ரஹங்கள்,தேவபத்தினிகள், தேவகன்னிகைகள், தேவமாதர்கள், மன்வந்தரங்கள், பசுக்கள், சந்திரன், சூர்யன், விஷ்ணு, காயத்ரி, ப்ரம்மவித்தை, ருதுக்கள், ஆண்டுகள், க்ஷணம், லவம், முகூர்த்தம்,நிமிஷம், யுகம் இவையெல்லாம் உமது மனத்திற்கு அனுகூலமாக நீர் செல்லுமிடமெல்லாம் சுகமாக உம்மைக் காப்பாற்றக் கடவன. குற்றமற்றவரே! நீர் ஜாக்கிரதையோடு க்ஷேமமாக வழியில் செல்லும்” (அனுசாஸனபர்வம் 45ஆம் அத்தியாயம், மஹாபாரதம்).

ஒரு காரியத்தை வெற்றிகரமாக ஆக்க எத்தனை தெய்வ சக்திகளும் இயற்கை சக்திகளும் நமக்கு அனுகூலமாக இருக்க வேண்டும் என்பதை இதைப் பார்த்தாலேயே தெரிந்து கொள்ளலாம்.
ஆக சூதிலும் வாதிலும் வல்ல புத்த மற்றும் சமணர்களின் இருப்பிடத்திற்கே செல்லும் சிறு குழந்தையான சம்பந்தரை (தந்தை நிகர்த்த!) அப்பர் கவலையுடன் பார்த்துக் கூறியவை சரி தானே! அவரது கவலையால் சம்பந்தர் கோளறு பதிகம் அருள, தமிழ் அறிந்த அனைவருக்கும் சாசுவதமாக வானில் அரசாளும் வரம் உத்தரவாதமாகக் கிடைத்தது (அப்பருக்கு இப்போது வாழும் இனி வரவிருக்கும் தமிழர்களின் நன்றி!)

சம்பந்தர் மிக வேகமாக வேயுறு தோளிபங்கன் என்று தொடங்கி கோளறு பதிகத்தை அருளினார்.

(பாடல் 1இல்)ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
சனி பாம்பு இரண்டும் உடனே ஆசு அறும் நல்ல நல்ல அவை நல்ல
(பாடல் 2இல்)ஒன்பதோடு ஒன்றோடு ஏழு பதினெட்டொடு ஆறும்
உடனாய நாட்கள் அவை தாம் அன்பொடு நல்லநல்ல அவை நல்ல
(பாடல் 3இல்)திருமகள் கலை அது ஊர்தி செயமாது பூமி
திசை தெய்வம் ஆன பலவும் அரு நெதி நல்ல நல்ல அவை நல்ல
(பாடல் 4இல்)கொதி உறு காலன் அங்கி நமனொடு தூதர்
கொடுநோய்கள் ஆன பலவும் அதிகுணம் நல்ல நல்ல அவை நல்ல
(பாடல் 5இல்)வெஞ்சிண அவுணரோடும் உரும் இடியும் மின்னும்
மிகையான பூதம் அவையும் அஞ்சிடும் நல்ல நல்ல அவை நல்ல

(பாடல் 6இல்) கோளரி உழுவையோடு கொலை யானை கேழல்
கொடு நாகமொடு கரடி ஆள் அரி நல்ல நல்ல அவை நல்ல
(பாடல் 7இல்) வெப்பொடு குளிரும் வாதம் மிகை ஆன பத்தும்
வினை ஆன வந்து நலியா அப்படி நல்ல நல்ல அவை நல்ல
(பாடல் 8இல்) ஏழ்கடல் சூழ் இலங்கை அரையன் தனோடும்
இடரான வந்து நலியா ஆழ்கடல் நல்ல நல்ல அவை நல்ல
(பாடல் 9இல்) மலர்மிசையோனும் மாலும் மறையோடும் தேவர்
வருகாலமான பலவும் அலைகடல் மேரு நல்ல நல்ல அவை நல்ல
(பாடல் 10இல்) புத்தரொடு அமணை வாதில் அழிவிக்கும் அண்ணல்
திருநீறு செம்மை திடமே அத்தகு நல்ல நல்ல அவை நல்ல
என்று பாடி மனிதனுக்குத் தேவையான சகல சக்திகளின் அனுக்ரஹத்தையும் தரும் திருநீறு செம்மை திடமே என பிரகடனப்படுத்திக் கிளம்பி விடுகிறார்.

ஆனால் பதிகம் தொறும் இறுதியான பதினோராம் பாட்டிலே பதிகப் பயனைச் சொல்லும் பழக்கமுடைய “நம் பந்தம் போக்க வந்த” சம்பந்தர் பக்தர்களுக்கு இன்ப அதிர்ச்சியைத் தருகிறார் :-
“ஞான முனிவன் தான் உறு கோளும் நாளும் அடியாரை வந்து நலியாத வண்ணம் உரை செய் ஆன சொல்மாலை ஓதும் அடியார்கள் வானில் அரசு ஆள்வர்; ஆணை நமதே” என்ற அவரது கம்பீரமான அருளுரைக்கு இணையாகத் தமிழ் மொழியில் இன்னொரு ஆணையும் இல்லை; அதை அதிகாரத்துடன் (AUTHORITY) சொல்ல இதுவரை யாரும் பிறக்கவும் இல்லை.

சம்பந்தர் பதினாறே வயதிற்குள் பாடிய பதிகங்கள் பதினாறாயிரம். நமக்குக் கிடைத்தவையோ வெறும் 384. ஒரு பதிகம் எனப்படுவது பத்துப் பாடல்களைக் கொண்டது. பதினோறாவது பாடல் பதிகம் பாடினால் ஏற்படும் பயனைச் சொல்வது. ஆக பதினாறாயிரம் பதிகங்கள் ஒரு லட்சத்தி எழுபத்தாறாயிரம் பாடல்களைக் கொண்டிருக்கும். இன்று நம்மிடம் உள்ள பாடல்களோ எண்ணிக்கையில் சுமார் 4147 தான்!
இந்தப் பாடல்களில் இதே போல இன்னும் மூன்று இடங்களில் ஆணை நமதே என்று ஆணையிடுகிறார்.

sambandar2
Please click here for the picture of Sambandar

ஆணை நமதே பதிகங்கள்

திருநனிபள்ளி தலத்தில், ‘காரைகள் கூகை முல்லை’ எனத் தொடங்கும் பதிகத்தின் இறுதிப் பாடலில்,”நனி பள்ளி உள்க; வினை கெடுதல் ஆணை நமதே!” என்றும் திருவேதிகுடி தலத்தில், ‘நீறு வரி ஆடு அரவோடு’ எனத் தொடங்கும் பதிகத்தின் இறுதிப்பாடலில்,”இமையோர் அந்த உலகு எய்தி அரசாளும் அதுவே சரதம்; ஆணை நமதே!” என்றும்
திருக்கழுமலம் தலத்தில், ‘மடல் மலி கொன்றை” என்று தொடங்கும் பதிகத்தின் இறுதிப் பாடலில்,”வான் இடை வாழ்வர்,மண்மிசைப் பிறவார்,மற்று இதற்கு ஆணையும் நமதே” என்றும் கூறி தன் முத்திரையுடன் கூடிய ஆணையை மொத்தம் நான்கு முறை பிறப்பிக்கிறார்.

இந்த நான்கு பதிகங்களையும் உளம் உருக ஓதுவார்க்கு துயரம் இல்லை; மண்மிசைப் பிறக்க மாட்டார், வானில் அரசாள்வர் என்பது உறுதி!

இதே போல திருவெண்காடு தலத்தில் ‘மந்திரம்’ எனத் தொடங்கும் பதிகத்தில் அல்லலோடு அருவினை அறுதல் ஆணையே என்றும், திருப்பூந்தராய் தலத்தில் ‘மின் அன எயிறு’ எனத் தொடங்கும் பதிகத்தில் சிவகதி சேர்தல் திண்ணமே என்றும் சீர்காழி தலத்தில் ‘நம் பொருள் நம் மக்கள்’ எனத் தொடங்கும் பதிகத்தில் மிக்க இன்பம் எய்தி வீற்று இருந்து வாழ்தல் மெய்ம்மையே என்றும் (போனஸாக) பக்தர்களுக்குத் தனது ஆணைப் பரிசுகளை வழங்குகிறார்.

ஆணை நமதென்னவலான்!

இப்படி இவர் ஆணையிட்ட திறத்தையும் அதிகாரத்தையும் கண்டு வியந்த நம்பியாண்டார் நம்பி தனது ஆளுடைய பிள்ளையார் திருத்தொகையில் (65 அடிகள் கொண்ட பாடலில் 45ஆம் அடியில்) ‘திருவடியை அத்திக்கும் பத்தரெதிர் ஆணை நமதென்னவலான்” என்று பாடுகிறார்.

ஆணை நமதே என்று சொல்லக்கூடிய வல்லவரான சம்பந்தர் முருகனின் அவதாரம் என திடமுடன் உரைத்த அருணகிரிநாதர், கந்தர் அந்தாதியில் (29ஆம் பாடலில்) “திகழு மலங்கற் குரைத்தோனலதில்லை தெய்வங்களே” என்று கூறி சம்பந்தப் பெருமான் ஆகிய குமரக் கடவுள் அன்றி வேறு பிரத்யக்ஷ தெய்வங்கள் இல்லை என்று கூறுகிறார். இதே பாடலில் சம்பந்தர் பதிகம் ஓதும் பயனைக் கூறுவதையும் வியந்து போற்றுகிறார்.

வள்ளலாரோ சம்பந்தரை தன் ஞானகுருவாக ஏற்றுக் கொண்டு உத்தம சுத்த சற்குருவே என்றும் இன்னும் பல பாடல்களில் சிவ குருவே, என் உயிர் எனும் குருவே என்றும் அவரை பக்தியுடன் வியந்து ஓதுகிறார்.ஆதி சங்கரரோ சௌந்தர்யலஹரியில் 75ஆம் ஸ்லோகத்தில் தேவியின் பாலை அருந்தி கவிதை மழை பொழிந்த திராவிட சிசு என்று அவரைப் போற்றுகிறார்.

சம்பந்தரின் அருள் செயல்கள்

ஏராளமான தெய்வீக அற்புதங்களைக் காட்டி அனைவரையும் ஆட்கொண்டவர் சம்பந்தர். அந்த அற்புதங்களில் முக்கியமானவற்றை 12ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திருக்கடவூர் உய்யவந்த தேவநாயனார் தான் பாடிய திருக்களிற்றுப்படியார் என்ற நூலில் இப்படிப் போற்றுகிறார்:

ஓடம், சிவிகை,உலவாக்கிழி, அடைக்கப்
பாடல்,பனை, தாளம், பாலை நெய்தல் – ஏடு எதிர், வெய்யு
என்புக்கு உயிர் கொடுத்தல் ஈங்கிவைதாம் ஓங்கு புகழ்த்
தென்புகலி வேந்தன் செயல்
ஓடம் – திருக்கொள்ளம்பூதூர்ப் பதிகம் (கொட்டமே எனத் தொடங்கும்)
சிவிகை – நெல்வாயில் அரத்துறைப் பதிகம்
உலவாக்கிழி – திருவாவடுதுறைப்பதிகம்
அடைக்கப்பாடல் – மறைக்காட்டுச் ‘சதுரம் மறை’ப் பதிகம்
பனை –திரு ஓத்தூர்ப் பதிகம்
தாளம் – திருக்கோலக்காப் பதிகம்
பாலை நெய்தல் – திருநனிப்பள்ளிப் பதிகம் (காரைகள் எனத் தொடங்கும்)
ஏடு எதிர் – திருப்பாசுரம் (வாழ்க அந்தணர் எனத் தொடங்கும்)
வெப்பு – திருநீலகண்டப்பதிகம் (அவ்வினைக்கு இவ்வினை எனத் தொடங்கும்)
என்புக்கு உயிர் கொடுத்தல் – திரு மயிலாப்பூர்ப் பதிகம் (மட்டு இட்ட எனத் தொடங்கும்).

ஆணையிடும் அதிகார ரகசியம்!

சம்பந்தரின் புகழ் எழுத்துக்கும் மனிதப் புலன் உணர்வுக்கும் அப்பாற்பட்டது. அவரால் எப்படி இப்படி அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே என்று ஆணையிட முடிந்தது என்று அதிசயித்து வியப்போருக்கு அவரே தன் பாடலில் பதிலைத் தந்து விடுகிறார்.
திருஇலம்பையங்கோட்டூர் தலத்தில் ( சென்னைக்கு அருகே திருவிற்கோல தலத்திற்கு அருகில் கூவம் ஆற்றின் மறுகரையில் உள்ளது இத்தலம்) பத்துப் பாடல்களிலும் ஒவ்வொரு பாடலின் இரண்டாம் அடியிலும் “எனதுரை தனதுரையாக” என்று அருளுகிறார்.
அதாவது முருகனாக வந்த சம்பந்தரின் உரை சிவபிரானது உரையே என்பது இதிலிருந்து தெளிவாகிறது. சிவனது உரை என்னும் போதே ஆணை நமதே என்று திருஞானசம்பந்தர் சொல்வதற்கான (அதாரிடி எனப்படும்) அதிகாரத்தின் காரணமும் நமக்குத் தெளிவுபடுகிறது.
சம்பந்தர் அருளியதெல்லாம் முருகன் அருளியது; அது சிவபிரானின் உரை என்ற முத்திரையையும் பெற்றது!

சிவப்பிரகாசரின் புகழ்மாலை

சிவப்பிரகாச சுவாமிகள் தனது நால்வர் நான்மணி மாலையில் பாடிய பாடலை மனத்தில் இருத்தி ஞானசம்பந்தரை வணங்கி அவர் இட்ட ஆணையைப் பயன்படுத்தி அடியாரான எல்லோரும் வானில் அரசாளலாம்!

வல்லார் பிறப்பறுப்பர் வண்மை நலம் கல்வி
நல்லாதரவு இன்ப ஞானங்கள் – எல்லாம்
திருஞான சம்பந்தன் சேவடியே என்னும்
ஒரு ஞான சம்பந்தமுற்று!

சின்ன உண்மை:
சோழ நாட்டில் சீர்காழி திருத்தலத்தில் அந்தணர் குலத்தில் அவதரித்த திருஞானசம்பந்தரின் குரு பூஜை வைகாசி மாதம் மூல நட்சத்திரத்தில் ஆண்டு தோறும் நடக்கிறது.தெய்வத் தமிழ் தினம் இது!

சிறந்த ஆன்மீக மாத இதழான ஞான ஆலயம் செப்டம்பர் 2013இல் வெளியாகியுள்ள கட்டுரை.

*************************************

Contact swami_48@yahoo.com

ராமருக்குச் சீதை சொன்ன ஆயுதம் பற்றிய கதை!

ram sita jungle

Post no.888 Dared 5th March 2014
ராமாயண வழிகாட்டி — அத்தியாயம் 19

ச.நாகராஜன்

ராமாயணத்தின் நாயகியான சீதை பெரும் மேதை என்பதை வால்மீகி ராமாயணத்தை நுணுகிப் படிப்போர் புரிந்து கொள்ள முடியும். பாரம்பரியம் பாரம்பரியமாக வரும் பழைய கதைகளையும் அருமையான சமுதாயத்தின் வழக்கு மொழிகளையும் அவர் ஆங்காங்கே எடுத்துக் கூறுவதே இதற்குச் சான்றாகும்.

யுத்த காண்டத்தில் சீதை கூறிய கரடி கதையை முன்னர் பதினொன்றாம் அத்தியாயத்தில் பார்த்தோம். இன்னொரு கதையை அவர் ராமருக்கு எடுத்துக் கூறுவது ஆரண்ய காண்டத்தில் ஒன்பதாவது ஸர்க்கத்தில் அழகுற அமைந்துள்ளது. அதைப் பார்ப்போம்.

ஸுதீக்ஷ்ண முனிவரால் விடை கொடுக்கப்பட்டு தண்டகை என்று பெயரிடப்பட்டுள்ள காட்டிற்குச் செல்லும் போது சீதை தண்டகாவனத்திற்கு எழுந்தருளத் தனக்கு இஷ்டமே இல்லை என்று ராமரிடம் கூறி, “ராக்ஷஸர்களைக் கண்டதுமே தேவரீர் பாணப் பிரயோகம் செய்வீர்; ஆயுதம் எடுத்தல் தகாது”, என்று கூறி ஒரு கதையைக் கூற ஆரம்பிக்கிறார்.

ram in jungle

“ மஹா பாஹுவே! முன்னொரு காலத்தில் உண்மையையே பேசுபவரும் பரிசுத்தருமான ஒரு முனிவர் பரிசுத்தமாய் இருப்பதும், களிப்புற்ற மான்களையும் பறவைகளையும் கொண்டதுமான ஒரு வனத்தில் வசித்து வந்தார். சசி தேவியின் மணாளனான இந்திரன் அவரது தவத்திற்கு இடையூறை செய்வதற்கென்றே கத்தியைக் கையில் கொண்டு போர் புரியும் வீர உருவத்தைக் கொண்டு அவரது ஆசிரமத்திற்கு வந்தான். அந்த ஆசிரமத்தில் அப்போது புண்ணிய தவத்தில் ஆஸக்தியுடைய அவருக்கு கூர்மையானதும் சிறந்ததுமான அந்தக் கத்தியானது பாதுகாப்பு திரவியம் என்ற முறையில் கொடுக்கப்பட்டது.

அவர் அந்த ஆயுதத்தை ஏற்றுக் கொண்டு பாதுகாப்புப் பொருளாக அதைப் போற்றி தனது அடைக்கலப் பொருளான அதைக் கையில் எடுத்துக் கொண்டே எப்போதும் வனத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்தார். பாதுகாப்புப் பொருளில் மனதைச் செலுத்தி அவர் பழங்களையோ அல்லது கிழங்குகளையோ கொண்டு வர எங்கு சென்றாலும் அந்தக் கத்தியின்றி போவதில்லை. அந்த முனிவர் சதா ஆயுதத்தைத் தரிப்பவாய் இருந்து காலக் கிரமத்தில் தவத்தில் ஊக்கத்தை விடுத்து தனது புத்தியை குரூரமாக ஆக்கிக் கொண்டார். அந்த ஆயுதத்தினுடைய சேர்க்கையால் அந்த முனிவர் சுய நிலை தவறி கொடுமையில் ஈடுபட்டு தருமம் க்ஷீணிக்கப்பெற்று அதனால் நரகத்தை அடைந்தார்.

ஆயுத சகவாசத்தால் விளைவது இப்படித்தான் ஆகும் என்பதாய் உள்ள இது ஒரு பழங்கதை” (ஒன்பதாவது ஸர்க்கம் 16 முதல் 23வது ஸ்லோகம் முடிய சீதை கூறும் இந்தக் கதையைக் காணலாம்)

சீதையின் கதையைக் கேட்ட ராமர் சீதையைப் போற்றி, “ தேவீ! க்ஷத்திரியர்களால் வில்லானது கஷ்டப்படுகிறவர்களின் முறையீடு இருக்கக் கூடாது என்கிற காரணத்தால் தரிக்கப்படுகிறதென்ற இந்த நியமனமானது உன்னாலேயே சொல்லப்பட்டு விட்டது. நான் அதைத் தவிர வேறு இல்லை என்று பதில் கூறுகிறேன்” என்கிறார்.

ramas arrow

ஸ்லோகத்தைப் பார்ப்போம்:-
கிம் து வக்ஷயாம்யஹம் தேவி த்வயைவோக்தமிதம் வச: I

க்ஷத்ரியைதார்யதே சாபோ நார்தஷப்தோ பவேதீதி II

(பத்தாவது ஸர்க்கம் மூன்றாவது ஸ்லோகம்)

தேவி – தேவீ
க்ஷத்ரியை: – க்ஷத்திரியர்களால்
சாப: – வில்லானது
ஆர்த ஷப்த: – கஷ்டப்படுகிறவர்களின் முறையீடு

ந பவதே இதி – இருக்கக் கூடாது என்கிற காரணத்தால்
தார்யதே – தரிக்கப்படுகிறதென்கிற
இதம் வச: – இந்த நியமனமானது
த்வயா ஏவ – உன்னாலேயே சொல்லப்பட்டு விட்டது.
அஹம் கிம் து – நான் அதைத் தவிர வேறு இல்லை என
வக்ஷயாமி – பதில் கூறுகிறேன்

ஆயுதம் ஆபத்தையே விளைவிக்கும் என்ற இந்த சாசுவதமான மொழியை சீதை கூறுவது எந்தக் காலத்துக்கும் பொருந்தும். இந்தக் காலத்துக்குக் கூடவே பொருந்தும்.

பழமையான இதிஹாஸமான ராமாயணம் உலகின் ஆதி காவியம் என அழைக்கப்படுகிறது. அதில் பழங்கதை என சீதை கூறுவதை நோக்கும் போது நமது ஹிந்து நாகரிகம் கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே தோன்றியது என்று கூறுவதில் தடை என்ன இருக்கிறது?

ஆரண்ய காண்டம் ஒன்பதாவது ஸர்க்கமும் பத்தாவது ஸர்க்கமும் சுவாரசியமான ஸ்லோகங்களைக் கொண்டுள்ளவை என்பதோடு அனைவரையும் கவர்வதுமாகும்.

(This article is written by my elder brother S Nagarajan: swami)
Contact swami_48@yahoo.com

*****************

‘மலர்ந்தும் மணம் வீசாத மலர்’

hibiscus

எழுதியவர்- லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்–887 தேதி: 5 மார்ச் 2014

ஆதி சங்கரர் எழுதிய அற்புதமான வினா – விடை (பிரஸ்னோத்தர ரத்னமாலிகா) துதியில் இருந்து இதுவரை பல அரிய கருத்துக்களை வள்ளுவன் முதலிய தமிழ்ச் சான்றோர்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தோம். பொது இடங்களில் பேசுவது எப்படி? art of public speaking பற்றி இன்று மேலும் சில கருத்துக்களை நோக்குவோம்.

நன்றாகக் கற்ற பின்னரும் சபையில் அதை எடுத்துரைக்க முடியாத ஆட்களை மலர்ந்தும் நல்ல மணம் பரப்பாத பூக்கொத்துகளுக்கு ஒப்பிடுகிறான் வள்ளுவன்:

இணரூழ்த்தும் நாறா மலர் அனையர் கற்றது
உணர விரித்து உரையாதார் (குறள் 650)

ஆதிசங்கரரும் இதே கருத்தைதான் கொண்டுள்ளார்:

புத்தி இல்லாமையின் அடையாளம் என்ன?
தான் கற்றதை எடுத்துரைக்க இயலாததே. (பாட்டு 10)

யார் செவிடன்?
நல்லவர்களின் பேச்சைக் கேட்காதவன் என்பார் சங்கரர்.

என்ன அற்புத ஒற்றுமை! திருவள்ளுவரும் செவிடனென்ற சொல்லையே பயன்படுத்துகிறார்:
கேட்பினும் கேளாத் தகையவே கேள்வியால்
தோட்கபடாத செவி (குறள் 418)

பொருள்: கேள்வி ஞானத்தால் துளைக்கப்படாத காதுகள், மற்ற ஒலிகளைக் கேட்கும் நல்ல காதுகளாக இருந்தாலும் அவை செவிட்டுக் காதுகளே.

அறிஞர்கள் எப்படிச் சிந்திக்கின்றனர் பாருங்கள்!
மற்றொரு கேள்வியை சங்கரர் கையாளும் விதத்தைப் பார்ப்போம்:

lecture
யார் முட்டாள்?
தேவையான நேரத்தில் இனிமையாகப் பேசத் தெரியாதவன்

வள்ளுவனும் சொல்லுவான்:–
இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று (குறள் 100)

அடே, வந்திருக்கும் விருந்தாளிக்கு மாம்பழம் கொடுடா என்றால் புளிப்பு மாங்காயைக் கொடுப்பது போல சிலர் நல்லதையே சொல்லமாட்டார்கள். அவர்கள் எல்லாம் துரியோதனன் வாரிசுகள்!

புத்திசாலிகள் எதைத் தவிர்க்க வேண்டும்? என்ற கேள்விக்கு
மற்றவர்களைப் பற்றி வம்பு பேசுவதைத் தவிர்க்க வேண்டும் என்பார் சங்கரர்.

எந்த வார்த்தை மகிழ்ச்சி தரும்? சத்தியம் (உண்மை விளம்புவது) என்பார் சங்கரர். இவை எல்லாம் இருவேறு கருத்துக்கு இடம் கொடுக்காத பெரிய உண்மைகள். ஆகவே விட்டு விடுவோம்.

எவனை ஊமை என்று அழைக்கலாம்?
தக்க நேரத்தில் ஆறுதல் சொல்லாதவனை என்பார் ஆதி சங்கரர்.

இதை வள்ளுவன்
வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர் சொல் பயன் கோடல்
மாட்சியின் மாசு அற்றார் கோள் (646) —
என்ற குறள் மூலம் ஆமோதிக்கிறான்.

எவனுக்கு உலகமே அடிமையாகும்? என்ற கேள்விக்கு இனிமையான சொற்கள் உடையவனுக்கு உலகமே அடிமை ஆகும் என்பார் சங்கரர்.

lecture

சொல்லாற்றல் இருந்தால் அவன் சொல்லை உலகம் விரைந்து கேட்கும் என்று வள்ளுவனும் மொழிவான்:

விரைந்து தொழில் கேட்கும் ஞாலம் நிரந்தினிது
சொல்லுதல் வல்லார்ப் பெறின் (648)

இன்னொரு கேள்வியில் வள்ளவனும், சங்கரரும் 100 விழுக்காடு ஒத்துப் போகிறார்கள். காதில் தேனாகப் பாய்வது எது? என்ற கேள்விக்கு ஆதி சங்கரர் அளித்த பதில் பெரியோரின் நல்லுரை என்று மறுமொழி தருகிறார். இதையே வள்ளுவனும்

செவி உணவின் கேள்வி உடையார் அவி உணவின்
ஆன்றோரோடு ஒப்பர் நிலத்து (413) என்கிறார்.

நல்ல விஷயங்களைக் காதில் போட்டுக் கொள்பவர்கள் தேவ லோகத்தில் அமிர்தம் சாப்பிடும் தேவர்களுக்குச் சமமானவர்கள் என்று சொல்லுகிறார்.

ஆதிசங்கரரின் பிரஸ்னோத்தர ரத்ன மாலிகாவை எனது லண்டன் நண்பர் மீனாட்சிசுந்தரம் ராஜகோபாலன் கவிதை வடிவில் அழகாக மொழி பெயர்த்திருக்கிறார். மேலே கண்ட ஒரு வினா-விடைப் பகுதியை மட்டும் தருகிறேன்:–

செவியுள் அமுதெனச் சேர்க்கும் அனுபவம்?
சீரிய ஞானியர் செப்பிடும் நீதி!
புவியுள் எது மரியாதை தருவது?
பூமியுள் இரந்து பயனுற மறுப்பது (பாடல் 8)

seminar1a-resized

அனுமனின் சொல்லாற்றல்

அனுமனின் சொல்லாற்றலால் அவனை ‘சொல்லின் செல்வன்’ என்று போற்றுவார் கவிச் சக்ரவர்த்தி கம்பர்.

ராமனின் குண நலன்களை வருணிக்கும் வால்மீகியோ, ராமனை

மித பாஷி= (குறைவாகப் பேசுபவன்)

ஹித பாதி= ( மற்றவர்களுக்கு மகிழ்ச்சி தருவதை சொல்பவன்)

ஸ்ருத பாஷி= (உண்மையே பேசுபவன்)

பூர்வ பாஷி (தலைக் கனம் கொஞ்சமும் இல்லாமல் நதானே போய் முதலில் பேசுபவன்)

என்று நான்கு அடைமொழிகளால் வருணிப்பார். இந்த நான்கு குணங்களும் இருந்தால் அவனை யார் வெல்ல முடியும்?

அனுமனின் சொல்லாற்றலுக்கு எடுத்துக் காட்டு, சீதையைக் கண்டு பேசிவிட்டு, முதல் முதலில் ராமனைச் சந்தித்தவுடன்,

கண்டெனன் கற்பினுக்கு அணியைக் கண்களால்
தெண் திரை அலை கடல் இலங்கைத் தென் நகர்
அண்டர் நாயக இனி துறத்தி ஐயமும்
பண்டு உள துயரும் என்று அனுமன் பன்னுவான்

-சுந்தர காண்டம், திருவடி தொழுத படலம், கம்ப ராமாயணம்

இந்தக் காலத்தில் பத்திரிக்கைகளில் தலைப்புச் செய்தி போடுவது போல கண்டேன் கற்பினுக்கு அணியை (சீதையை) என்று சொல்லிவிட்டு என் கண்களால் பார்த்தேன் என்றும் சேர்க்கிறான். இக்காலப் பத்திரிக்கைகள் போல சொல்லப்படுகிறது, அறியப் படுகிறது, நம்பப்படுகிறது என்றெல்லாம் சொல்லாமல் என் கண்களால் கண்டேன் என்கிறான். இங்கே அனுமனின் சொல்லாற்றலையும் கம்பனின் கவி புணையும் ஆற்றலையும் ஒருங்கே காண்கிறோம்.

இதனால்தான் ராமன் – அனுமன் முதல் சந்திப்பின் போதே

இல்லாத உலகத்து எங்கும் ஈங்கிவன் இசைகள் கூறக்
கல்லாத கலையும் வேதக் கடலுமே – என்னும் காட்சி
சொல்லாலே தோன்றிற் றன்றே! யார் கொல் இச் சொல்லின் செல்வன்!
வில்லார் தோள் இளைய வீர! விரிஞ்சனோ! விடைவலானோ!

இந்தச் சொல்லின் செல்வன் நான்மறைகளை நாலு வாயாலும் சொல்லும் பிரம்மாவா? மொழிகளுக்கு எல்லாம் மூல முதல்வனான விடை ஏறு சிவ பிரானா? என்று வியக்கிறான் ராமன். காரணம் முதலில் அனுமன் தன்னைப் பணிவுடன் அறிமுகப் படுத்திக் கொண்ட முறை!!

ஆக பொது இடங்களில் பேசுவது எப்படி என்பதில் ஆதி சங்கரரரும் வள்ளுவரும் ஒன்றிப்போவதைக் கண்டு சுவைத்து மகிழலாம். இவ்வாறு வடமொழி தென் மொழிப் பாடல்களில் இருவேறு உள்ளங்கள் இணையும் போது அளப்பற்ற மகிழ்ச்சி ஏற்படுகிறது.

contact swami_48@yahoo.com

உலகம் கெட்டுப் போனதற்கு பிராமணர்களே காரணம்?

18TH_CLIMATE_CHANG_1656852f

Picture of Topsy-Turvy World

கட்டுரையாளர் லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்…885 தேதி 4-3-14

பிராமணர்களுக்கு தமிழ் மன்னர்கள் வாரி வழங்கியது ஏன்?

சங்க இலக்கியத்திலுள்ள எட்டுத் தொகை, பத்துப் பாட்டு ஆகிய 18 நூல்களில் உள்ள 27,000+ வரிகளைக் கரைத்துக் குடித்தவர்களுக்கும் அதற்குப் பின் எழுந்த திருக்குறள் முதலான 18 கீழ்க்கணக்கு நூல்களைப் படித்துக் கரை கண்டவர்களுக்கும் ஒன்று தெள்ளிதின் புலனாகும். ஐயர்களுக்கு மன்னர்கள் வாரி வழங்கினர். அவர்களுக்கு தானம் செய்து வார்த்த நீர் ஆறு போல ஓடியதாம். கரிகால் பெருவளத்தான், பருந்து வடிவத்தில் யாக குண்டம் செய்து வேள்வி செய்ததையும். மகத்தான வல்லமை பொருந்திய பல் யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி, பாண்டிய நாடு முழுதும் யாகக் கம்பங்களை (யூப நெடுந்தூண்) நட்டதையும், சோழன் பெருநற்கிள்ளி மஹாபாரத தருமனுக்கு நிகராக ராஜசூய யக்ஞம் செய்ததையும் புறநானூறு போற்றிப் புகழ்வதை பல கட்டுரைகளில் தந்துவிட்டேன்.

80,000 தமிழ்க் கல்வெட்டுகளைப் படித்தோருக்கு இது இன்னும் நன்றாகவே விளங்கும். பெரும்பாலான கல்வெட்டுகள் பிரமதேயம் ( பிராமணர்களுக்கு நிலம் தானம்) அல்லது தேவதானம் ( கோவில்களுக்கு மான்யம் வழங்கல்) பற்றியே பேசுகின்றன.

இவ்வாறு எதற்காகப் பார்ப்பனர்களுக்கு வாரி வழங்கினார்கள்? பார்ப்பனர்கள் அவர்களை நன்றாக ஏமாற்றினார்களா? பாவ புண்யம் என்று சொல்லி மிரட்டினார்களா? இல்லை, இல்லவே என்றே சொல்லவேண்டும்.

ஏனெனில் சங்க இலக்கியத்தில் அதிகமாகப் பாடப்படவர், போற்றப்பட்டவர் ஒரே புலவர்தான். அவர் பெயர் கபிலர். அவரை புலன் அழுக்கற்ற அந்தணாளன் என்று பாராட்டினர். அவர்தான் சங்க காலத்தில் அதிகப் பாடல்கள் பாடியவர். அதற்காக அவரைப் பாராட்டவில்லை. புலன் அழுக்கற்ற பிராமணன் என்பதற்காகப் பாராட்டினர். மூவேந்தர்களையும் எதிர்க்கும் ஆற்றல்பெற்ற ஒரே தைரியசாலி அவர் ஒருவரே. வேற்று ஜாதியைச் சேர்ந்த பாரி என்ற குறு நில மன்னனின் புதல்விகளை ஏற்றுக் கொண்டு , ஒவ்வொரு அரண்மனையாக ஏறி இவளை திருமணம் செய்துகொள்ளுங்கள் என்று கெஞ்சிக் கதறினார். ஒரு மன்னனுக்கும் துணிவு இல்லை!!!

இதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் அப்பர் பெருமான் பெயரை தன் பிள்ளைகளுக்கும் தண்ணீர் பந்தலுக்கும் சூட்டிய இன்னொரு புரட்சிப் பிராமணன் அப்பூதி அடிகள். அதற்குப் பின்னர் வந்தப் புரட்சிப் பார்ப்பான் பாரதியை உலகமே அறியும்.

ஆக தமிழ் மன்னர்களும், கற்றோரும் மற்றோரும் எதற்காகப் பிராமணர்களுக்கு வாரி வழங்கினர்?

1.அவர்களுடைய ஒழுக்கத்திற்காக; காதலிக்குத் தூது அனுப்பவும், மன்னர்களுக்குத் தூது செல்லவும், மந்திராலோசனை வழங்கவும் அவர்களே நம்பத் தகுந்தவர்கள்.

2.தனக்கென வாழா பிறர்குரியாளராகத் திகழ்ந்தனர். கபிலர் போல பலர் இருந்தனர். வேத மந்திரங்கள் மூலம் எப்போது பார்த்தாலும் ஆக்க பூர்வ எண்ணங்களைப் பரப்பி (positive thoughts பாஸிட்டிவ் தாட்ஸ்) மனித குல முன்னேற்றத்துக்கு உதவினர். ஆயிரம் Self Improvement ‘’செல்F இம்ப்ரூவ்மென் ட்’’ புத்தகங்களில் உள்ளதை சூத்திர வடிவில் சொல்லிக்கொண்டே இருந்தனர்.

3.இறந்துபோன அத்தனை முன்னோர்களுக்கும் (departed souls) நீர்க்கடன் (தர்ப்பணம்) செய்தனர். அவர்கள் தர்ப்பண முடிவில் உறவினர் இல்லாதோர், நண்பர்கள் எல்லோருக்கும் சேர்த்து எள் இரைக்கும் ஒரு மந்திரத்தைச் சொல்லியே முடிப்பர்.

4.எப்போது பார்த்தாலும் நாடு வாழவேண்டும், தீங்கின்றி மும்மாரி மழை பெய்ய வேண்டும், ஓங்கு செந்நெல் வளர வேண்டும், மன்னர்கள் நல்லாட்சி நடத்த வேண்டும். நோய் நொடியில்லாமல் இருக்க வேண்டும் மாதா, பிதா, குரு, தெய்வத்தை வணங்க வேண்டும் என்று சொல்லி எல்லோருக்கும் மஞ்சள் அட்சதை போட்டு மங்களம் பாடினர். (ஸ்வஸ்தி பிரஜாப்ய பரி பாலயந்தாம்………….). நூறாண்டுக் காலம் வாழ்க, நோய் நொடியில்லாமல் வாழ்க என்ற சினிமாப் பாட்டு வேத மந்திரத்தின் மொழி பெயர்ப்பு என்பதை எல்லாம் முன்னரே காtடிவிட்டேன்.

இவ்வாறு இருந்த பிராமணர்கள் அவர்களுடைய அன்றாடக் கடமைகளைச் செய்யாததே உலக வீழ்ச்சிக்குக் காரணம் என்கிறார் விவேக சூடாமணி ஆசிரியர். வள்ளுவருக்கும் அக்கருத்து உடன்பாடானதே.

ஆசாரம் செய்வாராகில் அறிவொடு புகழும் உண்டாம்
ஆசாரம் நன்மையானால் அவனியில் தேவர் ஆவார்
ஆசாரம் செய்யாராகில் அறிவொடு புகழும் அற்றுப்
பேசார்போற் பேச்சுமாகிப் பிணியொடு நரகில் வீழ்வார்
— விவேக சிந்தாமணி

பொருள்; ஆசாரங்களை அனுசரித்து ஒழுக்கத்தோடு வாழ்ந்தால்அறிவும் புகழும் உண்டாகும். ஒழுக்கம் இருந்தால் அவரை இந்தப் பூவுலகிலேயே தெய்வமாகக் கருதுவர். ஆசாரம் தவறினால் ஊமை போல நடிக்க நேரிடும்; நோய்கள் பெருகும்; இறுதியில் நரகத்தில் வீழ்வர்.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான் உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும் ( திருக்குறள் 50)—என்றான் வள்ளுவன்.
காஞ்சி பரமாசார்ய சுவாமிகள், ரமண மகரிஷி, ராமகிருஷ்ண பரஹம்சர் முதலிய பெரியோர்களை நாம் தெய்வமாகப் போற்றுவது வள்ளுவனின் மேற்கண்ட குறளைப் பின்பற்றியே.

இந்திரன் பதங்கள் குன்றும்
இறையவர் பதங்கள் மாறும்
மந்தரம் நிலைகள் பேற
மறுகு அயல் வறுமையாகும்
சந்திரன் கதிரோன் சாயும்
தரணியில் தேகம் மாளும்
அந்தணர் கருமம் குன்றில்
யாவரே வாழ்வர் மண்ணில்?
— விவேக சிந்தாமணி

பொருள்: வேதியர்கள் அவர்களுக்குரிய ஆசார அனுஷ்டானங்களைப் பின்பற்றாவிடில்:
1.இந்திரனுடைய செல்வம் குறையும்
2.அரசாங்கம் ( மன்னர் ) நடக்கும் முறை தேயும்
3.மலைகளும் ( பூமி அதிர்ச்சி, சுனாமி ) இடம் பெயரும்
4.வறுமை அதிகரிக்கும்
5.சந்திரனும் சூரியனும் சரியாக (வறட்சி) ஒளி தராது
பிறகு யார்தான் நல்ல வாழ்க்கை வாழ முடியும்?

இந்த விவேக சிந்தாமணி நூல் யார் எழுதியது என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் இவருக்கு 1500 ஆண்டுகளுக்கு முன் திருக்குறளை எழுதிய வள்ளுவனும் இதே கருத்தை மொழிகிறான்:
மறப்பினும் ஒத்துக்கொளல் ஆகும் பார்ப்பான்
பிறப்பு ஒழுக்கம் குன்றக்கெடும் (134)

ஐயா, இந்த ஐயர்கள் வேதத்தை மறந்தால் கூடப் போனால் போகட்டும் என்று விட்டு விடலாம். காரணம்—திருப்பியும் படித்து மனப்பாடம் செய்து விடலாம். ஆனால் அவர்கள் பிறந்த காலத்திலேயே அவர்களிடம் சில ஒழுக்கங்கள் எதிர் பார்க்கபடுகின்றன. அது ஒரு முறை கெட்டுவிட்டாலும் ஆபத்து என்கிறார் வள்ளுவர்.

இந்தக் குறளையும் மேற்கண்ட விவேக சிந்தாமணி செய்யுளையும் காணும்போது உலகம் ஏன் கெட்டுப்போச்சு என்பது சொல்லாமலே விளங்கும். பிராமணர்/ அந்தணர் என்ற சொல்லை எல்லாம் மறந்துவிட்டு அவர்களைப் போல வேறு யாராவது சிலர் இருந்தாலும் போதும் உலகம் சிறக்கும்.

நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை என்பது தமிழர் கண்ட புதுமை அறிவியல்!!

contact swami_48@yahoo.com

முஸ்லீம் பக்தருக்கு உபதேசம் செய்த இந்து சாமியார்

nerur 3

Samadhi at Nerur near Karur

Compiled by London Swaminathan
Post No. 883 Dated 3rd March 2014.

சதாசிவ பிரம்ம யோகீந்திரர் என்பவர் மிகப் பெரிய யோகி. அவர் ஒரு அவதூத (நிர்வாண) சுவாமிகள். சுமார் 200 வருடங்களுக்கு முன் வாழ்ந்தவர். அவருடைய தாய் பெயர் பார்வதி, தந்தை பெயர் மோக்ஷ சோமசுந்தர அவதானி. அவர்கள் தெலுங்கர்கள். அவருடைய இயற் பெயர் சிவராமகிருஷ்ணன். 17 வயதில் திருமணம் ஆகிவிட்டது. கும்பகோணத்தில் வசித்தார். புகழ்பெற்ற யோகிகளான ஸ்ரீஈதர அய்யாவாள், போதேந்திர சரஸ்வதி ஆகியவர்களுடன் படித்தவர். அவருடைய வாழ்வில் பல அற்புதங்கள் நடந்தன. இது பற்றி பரமஹம்ச யோகானந்தா அவருடைய “ஒரு யோகியின் சுயசரிதை” என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார்.

இப்போது விஞ்ஞான கற்பனைக் கதைகளில் படிக்கும் ‘டெலி ட்ரான்ஸ்போர்டேஷன்’ முதலியவற்றை நடத்திக் காட்டி இருக்கிறார். அதாவது ஒரு இடத்தில் இருந்துகொண்டு பல இடங்களில் தோன்றுதல், மற்றவர்களையும் அப்படி அழைத்துச் செல்லல், காலப் பயணம் செய்தல் முதலியன. கோபியர்களுடன் விளையாடிய கிருஷ்ண பரமாத்மா ஒரே நேரத்தில் நூற்றுக் கணக்கான இடங்களில் இருந்ததாக நமது புராணாங்கள் கூறுவதைப் போல.
sadasiva-brahmendra-color-lstamp

பிற்காலத்தில் சதாசிவ பிரம்மேந்திராள் என்ற சந்நியாசப் பெயருடன் வாழ்ந்த இவர் சமாதி கூட, மூன்று இடங்களில் இருக்கிறது. அதாவது மூன்று இடங்களில் இறந்தார்!. வீரனுக்கு ஒரே சாவு, கோழைகளுக்கு ஆயிரம் முறை சாவு என்ற பழமொழி கூட இவரது அற்பதங்களில் தப்பாகிப் போய்விட்டது. புலன் ஐந்தையும் வென்ற இம்மாவீரரின் சமாதி பாகிஸ்தானில் கராச்சி, இந்தியாவில் மதுரை அருகில் மானா மதுரை, கரூர் அருகில் நெரூர் ஆகிய மூன்று இடங்களில் இருக்கின்றன( காண்க ‘விக்கிபீடியா’).

இனி அபிதான சிந்தாமணி என்ற பழைய தமிழ் என்சைக்ளோபீடியாவில் உள்ள விஷயத்தைத் தருகிறேன்:
இவர் கரூர் பட்டினத்தில் சற்றேரக்குறைய (150) வருஷங்களுக்கு முன் வசித்தவர். பிறப்பால் வேதியர். காவிரி தீர்த்தத்தின் கண்ணுள்ள திருவிசைநல்லூரில் கல்வி பயின்றவர். இவருடன் கல்விபயின்ற சகபாடிகளினும் இவர் நுண்ணறிவினராய் விளங்கினர். இவருடன் கல்வி பயின்றோர் மகாபாஷ்யம் கோபாலகிருஷ்ண சாஸ்திரியார் முதலாயினோர்.

Karur

அவர் கல்வி பயின்று வருகையில் தமது பார்யை பருவமடந்தனள். இதனால் இவரது தாயார் அந்நாளை மங்கல நாளாக விசேடங்கொண்டாடப் பலவித உணவுகளைச் சமைத்தனள். அன்று யோகீந்திரர் வழக்கம்போல உணவுகொள்ளச் சென்று நடப்பதுணர்ந்து காலந்தவறி உணவு கிட்டுமென எண்ணி, இச் சம்சார துக்கத் தொடக்கத்திலேயே உணவுகிட்டாத் துக்கம் தொடங்குமாயின் இதனை மேற்கொள்ளின் வெகு துக்கமாமெனவெண்ணி அது முளைக்கும்போதே கெடுக்கவெண்ணிப் பரிபாகமுடையோராய்ப் பரமசிவேந்திர சரஸ்வதியென்னு மாசாரியரை யடைந்து ஞானோபதேசம் பெற்றனர்.

இவர் தம் குருவிடம் ஞானோபதேசத்திற்கு வருபவரை பற்பல வினாக்கள் வினவி அவமதித்து வருவதையுணர்ந்த ஆசாரியர் உன் வாயெப்போது அடங்குமென, அன்று முதல் மவுனம் சாதித்து சிஷ்டை கூடிப் பித்தர்போல் சர்வசங்கப் பரித்தியாகஞ் செய்து சமபுத்தியுடையராய் வீதிகளில் கிடக்கும் எச்சிலுண்டு திரிவாராயினர். இவரைக் கண்டோர் யாவரும் பித்தரென்று பரிகசிப்ப உலாவி வந்தனர். இவர் தம்மூர்விட்டுப் பரதேச சஞ்சாரியாய் ஆண்டுள்ள காடுகளில் ஒருவருக்கும் புலப்படாது நிஷ்டையிலிருப்பர்.

ஒருமுறை காவிரி நதியில் மணல்திடரில் நிட்டை புரிகையில் காவிரி வெள்ளங்கொண்டு இவரை மூழ்த்த இவர் மணலில் புதைந்திருந்தனர். கரையினின்றோர் யோகியார் மூழ்கினதைக் கண்டு வருந்திச் சென்றனர். மூன்று மாதங்கள் கழிந்த பின் அரசன் ஆணையால் மணலையகற்ற வேலையாட்கள் புகுந்து நதியில் வெட்டுகையில் ஒருவன் வெட்டிய மண்வெட்டி தடைப்பட்டதுணர்ந்து மண்வெட்டியைப் பார்க்க அதில் ரத்தக் கறை இருந்தது கண்டு மெல்ல அவ்விடமிருந்த மணலையொதுக்க யோகியர் நிஷ்டை கூடியிருக்கக் கண்டு வெளிப்படுத்தினர்.

IMG_9179-Edit

Sringeri Jagadguru Sri Shanaracharya doing abishek at the Samadhi

இவர் கரூரையடுத்துள்ள கிராம வழி நள்ளிருளில் செல்லுகையில் நெற்போர் படுப்பர் காவலிருந்த இடம் வழியறியாது சென்று, இடறி விழுந்தனர். காவற்காரர் இவரைக் கள்ளர் என தடிகொண்டெறியக் கைதூக்க, அக்கைகள் விழுந்து அவர்களின் தலைவன் வருமளவும் தம்பிக்க வேலையாட்களஞ்சிப் பணிய தம்பித்தல் நீக்கிச் சென்றனர்.

ஒருக்கால் ராஜ அதிகாரிகளுக்கு விறகிற்காக ஆட்கள் போதாமையால் இவரையும் அதிகாரிகள் ஒரு ஆளாகக் கொண்டு சுமைதூக்கிச் செல்ல யோகீந்திரரும் அவ்வாறு தூக்கிச் சென்று அந்த ஆட்களிட்ட விறகுச் சுமைகளின் மேல் இவர் சுமகளை இட அக்கட்டைகள் முழுதும் தீப்பற்றி எரிந்தன.

ஒரே நேரத்தில் பல இடங்களில் காட்சி

இவரைக் கண்ட பிள்ளைகள் இவரைப் பித்தரென்று பரிகசிக்க இவர் தமக்குக் கிடைத்த பொருள்களை அவர்க்கு பகுத்தளித்து வருவர். இவரை அப்பிள்ளைகள் மிக்க தூரமாகிய மதுரையில் நடக்கும் ரிஷப வாஹன உற்சவங் காண அழைக்க இவர் அப்பிள்ளைகளைத் தமது முதுகின்மேல் ஏற்றிக் கொண்டு ஒரு கணம் கண்ணை மூடிக்கொள்ள கட்டளையிட்டு மறுகணத்தில் திருவிழா தரிசனஞ் செய்வித்து அச்சிறுவர்க்கு வேண்டிய சிற்றுண்டிகளும் வாங்கித் தந்து விடியுமுன் வீட்டில் சேர்த்தனர். பிள்ளையர் தந்தையோர் முதலியோர்க்கு அற்புதச் செய்கை அறிவித்துச் சிற்றுண்டிகளையும் காட்டினர்.

இவர் சிவராத்ரி முதலிய புண்ய காலங்களில் காசி முதலிய பல தேசங்களில் தரிசனம் செய்யக் கண்ட பலரிவரை யொரே காலத்தில் வெவ்வேறு தலங்களிலும் கண்டதாகக் கூறுவர். தம்மைப் பின் தொடர்ந்த பிரம்மச்சாரிக்கும் ஒருகணத்தில் கண்ணை மூடிக்கொள்ளக் கட்டளையிட்டு ஸ்ரீரங்கத்தில் பெருமாளைத் தரிசனஞ் செய்வித்து மறைந்தனர். பிரம்மச்சாரி யோகியாரைக் காணாது நீருக்குவந்து நிஷ்டை கூடியிருக்கக் கண்டனர். யோகீந்திரர் இவரிடத்துக் கருணை கொண்டு வித்யா பலமுண்டாக அருள் புரிந்தனர்.

nerur 2
Picture of Bilva Tree at the Samadhi

முஸ்லீம் பக்தர்

மற்றொருகால் இவர் நிர்வாணியாகச் சஞ்சரிக்கையில் தேவியருடன் வந்திருந்த மகமதிய தலைவனவரிருந்த வழிசெல்ல, மகமதியன் இவரைச் சினந்து ஒரு கையை வெட்டினன். இவர் அதனையறியாது செல்ல மகமதியனிவனைப் பெரியறெண்ணிப் பின்றொடர நெடுநாட்களுக்குப் பின் இவனைக் கண்ட யோகியர் பின்பற்றக் காரணம் வினவ, நடந்தது அறிவித்துப் பிழைபொறுக்க வேண்ட மற்றொரு கரத்தால், அக்கையைத் தடவ அக்கை வளர்ந்தது. மகமதியன் அருள் பெற்று நீங்கினன்.

இவர் சிவதர்சனம் செய்யப் புகுந்து மந்திரார்ச்சனை செய்கையில் அந்தரத்தில் இருந்து ஓர் ஓர் மலர் வீழ்வதுண்டு. இவர் 1738ஆம் வருஷத்தில் புதுக்கோட்டைத் திருவரங்குளத்தைச் சார்ந்த காட்டில் திரிந்து கொண்டிருக்கையில் புதுக்கோட்டைத் தொண்டைமான் அதிக விரக்தியுள்ளவராகையில் இவரை (8) வருடம் பின் தொடர இவர் அவர்க்கு மணலில் சில உபதேச மொழிகளையெழுதி மற்றவைகளைத் தமது சகபாடியாகிய கோபாலகிருஷ்ண சாஸ்திரியாரிடம் அறியக் கட்டளையிட்டனர்.

இவர் மிதுன ரவி ஜேஷ்ட சுத்த தசமியில் பரிபூரணமடைவதாகவும் அன்று காசியிலிருந்து ஒரு வேதியன் பாணலிங்கம் கொண்டுவர அவனை இவர் தாமேயிறங்கிய சமாதிக் குழிக்கருகில் பிரதிஷ்டை செய்தனர் எனவும் கூறுப. இவர் ஒரே காலத்தில் மூன்று இடங்களில் சமாதி ஆயினர் என்பர். ஆயினும் நீருரிலுள்ள சமாதி பிரசித்திபெற்றது. இவர் குருபூசை புதுக்கோட்டைத் தொண்டைமான் அரசர்களால் செய்யப்பட்டுவருகிறது.

இவர் செய்த நூல்கள், பிரம்மசூத்ரவிருத்தி, த்வாதசோப நிஷத்தீபிகை, சித்தாந்த கல்பாவளி, அத்வைதரஸமஞ்சரி முதலிய.
—-அபிதான சிந்தாமணி, பக்கம் 557/ 558

பரமஹம்ச யோகானந்தா மற்றொரு விஷயத்தைக் கூறுகிறார். இவரைப் பின் தொடர்ந்த முஸ்லீம் , இவரது சீடராகி, உபதேசம் செய்யுமாறு வேண்ட, ‘’ நீ உனக்கு வேண்டுவதைச் செய்யாதே, அதற்குப் பின்னால் நீ விரும்புவதைச் செய்யலாம்’’ என்றாராம்.

(அதாவது மனம்போன போக்கில் போக வேண்டாம்; சுய கட்டுப்பாடு வந்துவிட்டால் பின்னர் நம்முடைய செயல்கள் நம்மைப் பாதிக்காது என்று அர்த்தம் செய்து கொள்ளலாம்.ஆனால் இந்த உபதேசம் ஒரு விடுகதை போன்றது. ஆழமான அர்த்தமுடையது: “Do not do what you want, and then you may do what you like”).

பிரபல கீர்த்தனைகள்

‘விக்கிபீடியா’ ஆங்கிலப் பகுதி, இவர் எழுதிய நீண்ட புத்தகப் பட்டியலைக் கொடுத்துள்ளது. மஹாசக்தி மாரியம்மன் என்ற திரைப்படத்தில் இவரது வாழ்க்கை காட்டப்படுவதாகவும் தெரிவிக்கிறது. பாலகுமாரன் எழுதிய ‘தோழன்’ என்ற நாவல் இவரது வாழ்க்கையைத் தழுவி எழுதப்பட்டது.

சதாசிவ பீரம்மேந்திராளின் சம்ஸ்கிருதப் பாடல்கள் மிகவும் சுருக்கமானவை. ஆனால் ஆழ்ந்த கருத்துள்ள அற்புத ரத்தினங்கள்!! கர்நாடக இசைக் கச்சேரிகளில் பெரும்பாலும் இவரது கீர்த்தனைகள் இடம்பெறும். சிந்தா நாஸ்தி கில, மானச சஞ்சரரே, க்ரீடதி வனமாலி, ப்ரூஹி முகுந்தேகி, கேளதி மமஹ்ருதயே, காயதி வனமாலி, பஜரே கோபாலம், பஜரே யதுநாதம், பிபரே ராமரசம் முதலிய பாடல்கள் நினைவில் நிற்கும் பாடல்களாகும்.

Contact swami_48@yahoo.com

மாணிக்கவாசகரின் காலம்—2

delhi mus.manikka2

By London Swaminathan
Post No. 882 Date: 3-3- 2014
Part 2 of Age of Manikkavasagar in Tamil

மாணிக்கவாசகரின் காலம் தேவார மூவருக்கு முந்தியது என்றும் அவருடைய பெயர் சத்தியதாசன் என்றும் ஊர்க் கடவுளரின் பெயரான வேதபுரீஸ்வரர் (வாதவூரர்) மற்றொரு பெயர் என்றும் முதல் பகுதியில் ஆதாரங்களுடன் எழுதினேன். இப்போது மேலும் சில தகவல்களைத் தருகிறேன்.

1.அவர் சம்பந்தருக்கு ஓரிரு நூற்றாண்டுகள் முன்னர் வாழ்ந்திருக்கலாம். மாணிக்கவாசகர் மீது அரசாங்கப் பணம் கையாடல் சுமத்தப்பட்டதாலும் அப்போதைய அரசர்கள் சமண மத ஆதரவாளர்கள் என்பதாலும் சம்பந்தர், அப்பர் முதலானோர் அவரைப் பாராட்டுவதைத் தவிர்த்திருக்கலாம்.

2. மாணிக்கவாசகரின் திருவாசகம் கண்டெடுக்கப்பட்டது தேவாரக் கண்டுபிடிப்புக்கும் பின்னர் நிகழ்ந்ததால் சேக்கிழார் முதலானோர் அவரை விட்டிருக்கலாம். எட்டாம் திருமுறையாக திருவாசகம் எப்போது சேர்க்கப்பட்டது என்பதை ஆராய வேண்டும். இவை எல்லாம் ஊகங்களே. இதைவிட வலுவான அகச் சான்றுகளைக் காண்போம்.

3.ஆகமங்கள் பற்றி மாணிக்கவாசர் பாடியதால் அவர் பிற்காலத்தவர் என்பது பசையற்ற வாதம். சம்பந்தருக்கு முந்தைய திருமூலர், ஆகமங்கள் பற்றி நிறைய பாடி இருக்கிறார்.

4. ஆண்டாள் பாடிய திருப்பாவைக்கும் மாணிக்கவாசகர் பாடிய திருவெம்பாவைக்கும் மிக மிக நெருக்கமான ஒற்றுமை இருக்கிறது. பாவை என்பது ஒரு குறிப்பிட்ட வகைப் பாட்டு என்பதால் இப்படி ஒற்றுமை இருக்கலாம் என்பது சரியல்ல. மாணிக்கவாசகர் தனது பாடல்களில் உபநிஷதக் கருத்துக்களை அபரிமிதமாகப் பொழிந்து தள்ளியதை சுவாமி சித்பவானந்தர் போன்றோர் எழுதிய உரைகள் மூலம் அறிகிறோம். ஆனால் ஆண்டாள் ஓர் ‘டீன் ஏஜ் கேர்ள்’ என்பதால் உபநிஷதத்துக்கு இணையான உயர் தத்துவங்களைக் காணமுடியவில்லை. அவர் மிகவும் ‘பிராக்டிகலா’கப் பாடி இருப்பதை பல கட்டுரைகளில் முன்னரே குறிப்பிட்டேன். ஆக, அவருடைஅய நாச்சியார் திருமொழி என்பது திருக்கோவையாரை மனதில் வைத்துப் பாடப்பட்டதாகவும், அவருடைய திருப்பாவை மாணிக்கவாசகரின் திருவெம்பாவையை வைத்துப் பாடப்பட்டதாகவுமே கருத வேண்டியுள்ளது. இரண்டு பாவைகளையும் கையில் வைத்துக் கொண்டு ஒருவர் ஆராய்ந்தால் நான் சொல்லுவது நன்கு புரியும்.

5. மற்றொரு அகச் சான்று பிள்ளையார் பற்றி அவர் எங்கும் பாடாதது ஆகும். அப்பர், சம்பந்தர் முதலியோர் பாடிய கணபதி வழிபாடு, மாணிக்கவாசகர் காலத்தில் பெரிய அளவில் இல்லை. இதனாலும் அவர் காலத்தால் முந்தியவரே.

Thiruvathavur,December 1997-2

6. பிற்காலத்தில் பாடல்களில் குறிப்பிடப்படும் லிங்க வழிபாடும் இது போன்றதே. கணபதி, லிங்க வழிபாடு அறவே இல்லை என்று நான் சொல்லவில்லை. இவை எல்லாம் பாடல்களில் இடம்பெறும் அளவுக்குப் பெரிதாகவில்லை.

7. மாணிக்கவாசகர் பயன்படுத்திய அகவல்பா முதலியன முற்காலத்தியவை. பின்னர் வந்தவர்கள் வெண்பாக்களாகப் பாடித் தள்ளிவிட்டனர். இவர் ஏழு அந்தாதிகளைப் படி இரூக்கிறார். முதல் மூன்று ஆழ்வார்களும் இப்படி அந்தாதி பாடி யிருப்பதால் அவர்கள் காலத்தில் இவரும் இருந்திருக்கலாம். தனி ஒருவர் என்று எடுத்துக் கொண்டால் மாணிக்கவாசகர் மட்டுமே அதிகம் அந்தாதி பாடி இருக்கிறார். முதல் மூன்று ஆழ்வார்களைப் பாராட்டும் வகையில் பாடல்களில் பூதம், பேய், பொய் என்ற சொற்களைப் பிரயோகிக்கிறார்.

8. சொல்லாட்சி: பல பழைய சொற் பிரயோகங்களையும், வழக்கங்களையும் திருவாசகத்தில் காணமுடிகிறது. ஆக அவர் சங்கம் மருவிய காலத்தில், ஒருவேளை ஐந்து அல்லது ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்திருக்கலாம். ஆனால் தேவார மூவருக்கும் இவருக்கும் பெரிய இடைவெளி இல்லை.
9. மாணிக்கவாசகர் குறிப்பிடும் சில க்ஷேத்திரங்கள் எது என்றுகூடத் தெரியவில்லை. அவர் சொல்லும் மண்டோதரி சம்பவம் முதலியன மற்றைய இடங்களில் கானப்படவில்லை. மதுரையில் நடந்த பல திருவிளையாடல் நிகழ்ச்சிகளைக் குறிப்பிட்ட அவர் சம்பந்தருக்குப் பின்னால் வாழ்ந்திருந்தால் அதைத்தான் முதலில் குறிப்பிட்டிருப்பார்.

10. மாணிக்கவாசகர் பாடல்களில் திருக்குறளின் தாக்கமும் தெரிவதால் வள்ளுவவர் காலத்தை (ஐந்தாம் நூற்றாண்டு) ஒட்டியே வாழ்ந்திருக்க வேண்டும்

11. பொன் அம்பலம், காஞ்சி செம்பொற் கோவில் ஆகியன எல்லாம்பாட்டில் வருவதால் பல்லவர்கள் இதைச் செய்த காலத்தில் வாழ்ந்திருக்கலாம். ஐயடிகள் காடவர்கோன் (கி.பி 550-575) என்ற பல்லவ மன்னன் பொன் வேய்ந்ததை நாம் அறிவோம்.

12.இவர் அரிமர்த்தன பாண்டியன் காலத்தில் வாழ்ந்ததாக திருவிளையாடல் புராணம் கூறுகிறது. ஆனால் வரலாற்றில் அப்படி ஒரு பாண்டியனைக் காணமுடியவில்லை. இருந்த போதிலும் திருவிளையாடல் புராணம் குறிப்பிடும் மன்னர் பட்டியலைக் கொண்டு பார்த்தால் இவருக்குப் பின்னரே சம்ப்ந்தர் கதை வருகிறது. மாணிக்கவாசகருக்கும் சம்பந்தருக்கும் இடையே பெரிய மன்னர் வரிசை இருக்கிறது!!!

13.சம்பந்தருக்கு முந்தி வாழ்ந்த கண்ணப்பர், சண்டீசர் ஆகியோரை மாணிக்கவாசகர் பாடுகிறார். சம்பந்தருக்குப் பிற்பட்ட யாரையும் பாடவில்லை என்பது கவனிக்கப்படவேண்டியது
14. மாணிக்கவாசகர், தமிழ்ச் சங்க காலத்தைஒட்டி வாழ்ந்தவராக இரூக்கவேண்டும் திருக்கோவையில் ‘உயர் மதில் கூடலில் ஆய்ந்த ஒண் தீந்தமிழின் துறைகள்’ என்றும் திருவாசகத்தில் ‘தண்ணார் தமிழ் அளிக்கும் தண்பாண்டி நாட்டானே’ என்றும் பாடுவது இவர் சங்க காலத்தை ஒட்டி வாழ்ந்தவர் என்று காட்டுகிறது. இவர் ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்தால் இப்படிப் பாடி இருக்க மாட்டார். கடந்தகாலத்தில் நடந்ததை ‘இறந்த கால’த்தில் பாடி இருப்பார்.

Thiruvathavur,December 1997-3
15.சிதம்பரத்துக்கு ஆதித்ய சோழன் பொன் வேயும் முன்னர் காடவர்கோன் (பல்லவ மன்னன்) பொன் வேய்ந்ததாக அறிகிறோம். ஆக திருமூலரும், மாணிக்கவாசகரும் குறிப்பிடும் பொன் அம்பலம் மிகப் பழைய பொன் அம்பலமே.

16. அப்பர் போல நேரடியாகக் குறிப்பிடாமல் சம்பந்தர், மாணிக்கவாசகரை மறைமுகமாகக் குறிப்பிடுகிறார்: இரண்டாம் திருமுறையில் ‘தெரிந்த அடியார் திசைதோறும் குருந்த மரும் குரவின் அலரும் கொண்டேந்தி இருந்து நின்றும் இரவும் பகலும் ஏத்தும்’ — என்று பாடுகிறார். மாணிக்கவாசகர், குருந்த மரத்தடியில் இருந்த குருவிடம் உபதேசம் பெற்றதால் குருந்த மரத்தை அடிக்கடி குறிப்பிடுவது முக்கிய தடயமாகும்.

17.கோவைக்கு இலக்கணமாக இவர் எழுதிய திருக்கோவையாரையே பேராசிரியர் போன்ற உரைகாரர்கள் குறிப்பிடுவதால் மாணிக்கவாசகர், பாண்டிக்கோவைக்கு மிகவும் முந்தியவர்.

18. நவீன எழுத்தாளர்கள் மாணிக்கவாசகரை வரகுணன் காலத்தவர் என்று சொன்னாலும் இஅர் அரிமர்த்தன பாண்டியன் அவையில் மந்திரியாக இருந்தவர் என்று திருவிளையாடல் புராணம் கூறுவதையும் கவனிக்கவேண்டும்.

19.மாணிக்கவாசகரின் வாழ்வில் நடந்த முக்கிய நிகழ்ச்சி நரி – பரி ஆன லீலை ஆகும். அவரை பாண்டிய மன்னன் அனுப்பியது குதிரை வாங்குவதற்கே. குதிரை வியாபாரம் நமது கடற்கரையிலும், அருகில் இலங்கையிலும் நடந்தது சங்க இலக்கியக் குறிப்பாலும் இலங்கையில் தமிழ்க் குதிரை வியாபாரிகள் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே ஆட்சியைக் கைப்பற்றியதாலும் தெரிகிறது.
Thiruvathavur,December 1997

20. மதுரையின் முக்கியப் பெயர்களில் ஒன்று ஆலவாய். இதை மாணிக்கவாசகர் பயன்படுத்தவில்லை ஆனால் சம்பந்தர் பயன்படுத்துகிறார். ‘ஞாலம் நின்புகழே மிகவேண்டும், தென் ஆலவாயில் உறையும் எம் ஆதியே’ என்று சம்பந்தர் பாடுவது, தென்னாட்டுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி– என்ற மாணிக்கவாசகரின் வரிகளின் எதிரொலியாகத் திகழ்கிறது

தொடரும்………………..
Contact swami_48@yahoo.com

மாணிக்கவாசகரின் காலம் என்ன? மிகப் பெரிய சைவப் புதிர்!!

asia soci,NYmanik

By London Swaminathan
Post No 880 Date: 2-3- 2014
This article is available in English as well.

Q.1.மாணிக்கவாசகரின் காலம் என்ன?
Q.2.அவருடைய உண்மைப் பெயர் என்ன?
A.1.மாணிக்கவாசகரின் காலம் தேவாரம் பாடிய மூவருக்கும் முந்தியது.
A.2.அவருடைய இயற்பெயர் வேதபுரீஸ்வர சத்தியதாசன்.

அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் என்ற நால்வர் சைவ சமயத்தின் மாபெரும் தூண்கள். தமிழகத்தைக் காப்பாற்றிய காவலர்கள். நாத்திகம் பேசி நாத்தழும்பி ஏறியவர்களைப் பாதாளப் படுகுழியில் தள்ளிய சமய வீரர்கள். நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பிய ஞானிகள். 30,000 தமிழ் நாட்டுக் கோவில்களுக்குப் புத்துயிர் ஊட்டிய புனிதர்கள். வேத ஆகம நெறியை வேரூன்ற வைத்த வித்தகர்கள், சத்திய சீலர்கள். இந்த நால்வரும் தமிழ் கூறு நல்லுலகத்துக்கு இட்ட விடுகதையை, புதிரை விடுவிக்க முடியாமல் அறிஞர்கள் தவித்தனர்.

என்ன புதிர்?

மாணிக்கவாசகர் வாழ்ந்த காலம் என்ன? அவருடைய பெயர் என்ன? யாருக்கும் விடை தெரியாத கேள்வி. தேவாரம் பாடிய மூவருக்கு முன்னால் இவர் வாழ்ந்திருந்தால் அப்பர், சம்பந்தர், சுந்தரர் மூவரும் இவர் பெயரைச் சொல்லாதது ஏன்? நாயன்மார்கள் பட்டியலில் இவர் பெயர் இல்லாதது ஏன்?
இந்த மூவருக்கும் பின்னால் அவர் வாழ்ந்திருந்தால் திருவாசகத்திலோ, திருக்கோவையாரிலோ மூவரையும் மாணிக்கமாவது குறிப்பிட்டிருப்பாரே! ஏன் குறிப்பிடவில்லை? மதுரை வரை வந்து கூன் பாண்டியனை நின்ற சீர்நெடுமாறனாக்கிய சம்பந்தரை எப்படி மாணிக்கம் மறக்கமுடியும்?
இனி ‘மா’ என்ற சுருக்கெழுத்தில் நான் குறிப்பிடுவதை மாணிக்கவாசகர் என்று நீட்டிப் படிக்கவும்:–
சுருக்கமாகச் சொன்னால் மூவரை ‘மா’ குறிப்பிடவில்லை. ‘மா’வை மூவர் குறிப்பிடவில்லை. ஆனால் சில குறிப்புகள் சில ஆராய்ச்சியாளர்களை ஒரு முடிவுக்கு வர உதவியது. பாவை பாடிய வாயால் கோவையும் பாடியவர் மாணிக்கம். அதாவது திருவாசகத்தில் உள்ள திருவெம்பாவையைப் பாடியவர், திருக்கோவையார் என்னும் நூலையும் அவர் இயற்றியதை அறிஞர் உலகம் ஒப்புக்கொள்கிறது. அதில் சைவத்தில் பற்றுள்ள ஒரு வரகுணனைப் பற்றி ஒரு குறிப்பும் உள்ளது. அதைக் கொண்டு ‘மா’ ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என்று பலரும் முடிவு கட்டிவிட்டனர். ஆனால் எனது ஆராய்ச்சிகள் இது பிழை என்றே காட்டுகின்றன.

Thiruvathavur,December 1997
Thiruvathavur near Madurai

சைவ வரலாற்றில் மிக முக்கியமான நக்கீரர்– சிவ பெருமான் மோதல் நிகழ்ச்சியைக் குறிப்பிட்டு திருவிளையாடல் புராணத்தை உண்மை என்று நிரூபித்தவர் அப்பர் பெருமான்.

நான்கு சைவ சமயத் தூண்களில் நெடுங்காலம் வாழ்ந்தவரும் இவர்தான். பழுத்த சமயவாதி, புரட்சிவாதியும் கூட. சைவத்தில் இருந்து சமணத்துக்குத் தாவி, பின்னர் சமணத்தில் இருந்து சைவத்துக்குத் தாவி, மகேந்திர பல்லவனுடன் பயங்கரமாக மோதிப் பின்னர் அவரையும் சைவ சமயத்துக்கே அழைத்துவந்த—இழுத்து வந்த புரட்சிவாதி. ஆகையால் அவர் சொல்லுவது தவறாக இராது. தருமி என்னும் பார்ப்பனப் புலவர் தமிழ் சங்கம் ஏறியது பற்றி இவர் பாடியதை ‘திருவிளையாடல் புராணம் உண்மையே என்ற கட்டுரையில் காட்டினேன். அதே வாயால் ‘மா’வின் வாழ்க்கையில் நடந்த நரி-பரி ஆக்கல் திருவிளையாடலையும் இவர் பாடி இருக்கிறார். இதை யாரும் புறக்கணிக்க முடியாது.ஆக மா’ அப்பருக்கும் முன் வாழ்ந்தவர் என்பது தெள்ளத் தெளிவு.

இப்போது வரகுணன் பற்றிய குறிப்பை ஆராய்வோம். வரலாற்றுக்குத் தெரிந்த வரகுணன்கள் இருவர் உண்டு. அதில் சைவ சமயப் பற்றுடைய ஒருவருடன், ‘மா-’ வை தொடர்புபடுத்துவது நியாயமாகவே தோன்றும். ஆனால் இவரைத் தவிர வேறு வரகுணன்கள் இருந்திருக்கலாம் என்பதையும் நினைவிற் கொள்ள வேண்டும். ஏனெனில் ‘வரகுண’ என்பது ஒரு அடைமொழி. யாரும் வைத்துக் கொள்ளலாம். ஆனால் இது வெறும் ஊகமே. ஆகையால் வேறு சில சான்றுகளைக் காண்போம்.

63 நாயன்மார்களைப் பாடிய சேக்கிழார் பெருமான் ஏன் இவரை (மா–வை) விட்டுவிட்டார்? என்பது மற்றொரு புதிர். இந்தப் புதிருக்குப் பலரும் கூறிய விடை ஏற்புடையதே. திருத்தொண்டர் தொகையில் ‘மா’ பெயர் இல்லாததால் சேக்கிழார் பாடவில்லை. அவருக்கு திருத்தொண்டர் தொகையே ஆதார நூல் என்பர் அறிஞர் பெருமக்கள். ஆனால் திருத்தொண்டர் தொகையிலும் ஒரு புதிர் உள்ளது. அதை விடுவித்தால் மா’ பற்றிய புதிர் விட்டுப்போகும்.

திருத் தொண்டர் தொகையில் பொய்யடிமை இல்லாத புலவர் என்று ஒரு வரி வருகிறது. யார் இவர்? அல்லது யார் இவர்கள்?

பொய் அடிமை இல்லாத புலவர்

பொய் அடிமை இல்லாத புலவர் என்பது மாணிக்கவாசகரே. இதுவரை ‘மா’ பற்றி எழுதிய யாரும் அவருடை இயற்பெயரைக் கூறாமல் திருவாதவூரர் என்று அவர் பிறந்த ஊரின் பெயராலும் கடவுள் கொடுத்த மாணிக்கவாசகர் என்ற பெயராலுமே அழைத்து வருகின்றனர். மாணிக்கவாசகரின் இயற் பெயர் –தாய் தந்தை இட்ட உண்மைப் பெயர் ‘பொய் அடிமை இல்லாதவர்’ என்பதாகும். இதற்கு ஆதாரம் என்ன?

Thiruvathavur,December 1997-2

Manikkavasagar shrine

டாக்டர் நாகசாமி புத்தகம்

எனது குருநாதர் டாக்டர் இரா. நாகசாமி எழுதிய கட்டுரையில் இதற்கு ஆதாரம் இருக்கிறது:
டாக்டர் நாகசாமியின் புத்தகத்தின் பெயர் ‘பொய்யிலிமாலை’ அதில் பக்கம் 189-ல் பொய்யடிமை இல்லாத புலவர் என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார். அவருடைய கட்டுரைச் சுருக்கம்:

1.திருத் தொண்டத் தொகையில் சுந்தரமூர்த்தி சுவாமிகள், ‘பொய்யடிமை இல்லாத புலவர்க்கும் அடியேன்” என்று பாடுகிறார். இது ஒருவரா பலரா என்று தெரியாது.

2. சுந்தரமூர்த்திக்குப் பின், நம்பியாண்டார் நம்பி, இத்தொகையை விரிவாக்கி திருத் தொண்டர் திருவந்தாதி பாடுகையில் கபிலர், பரணர், நக்கீரர் முதலிய பலர் என்றும் சங்கப் புலவர் என்றும் பாடிவிட்டார்.
#

3.அடியார் புராணத்தை விரித்துரைத்த சேக்கிழார் பாடலில் பொய்யடிமை இல்லாத புலவர் ஒருவரா பலரா என்று தெளிவாக இல்லை. ஆனால் நம்பி குறிப்பிடும் கபிலர், பரணர், நக்கீரர் பற்றி சேக்கிழார் எதுவுமே குறிப்பிடவில்லை. இது ஏன் எனக் கூற இயலவில்லை.

4.அடியார்கள் புராணத்தை வடமொழியில் தரும் உபமன்யு பக்த விலாசம், இரண்டு விதமாக பொய் அடிமை இலாத புலவரை மொழி பெயர்த்துள்ளது: ‘அஸத்ய தாஸ்ய ரஹித கவி’, ‘ஸத்ய தாஸ்ய கவி’. இதைக் கூர்ந்து படித்தால் புலவர் என்னும் சொல் ஒருவரையே குறிக்கிறது என்பது தெளிவாகிறது
5.அந்தக் கவி (ஸத்யதாஸர்) சிவபெருமானைத் தவிர வேறு எவரையும் பாடவில்லை. அவர் பக்தியை மெச்சி பரமன் அவருக்குக் கவிபாடும் வரம் அளித்தார். அன்றிலிருந்து எப்பொழுதும் கவிதையால் மகிழ்வித்து சிவபதம் அடைந்தார்.

6. அறுபத்து மூவர் வரலாற்றைக் கூறும் அகஸ்திய பக்த விலாசம் என்ற சம்ஸ்கிருத நூலும் பொய் அடிமை இலாத புலவரை ‘ஒருவர்’ என்றே கூறி அவருடைய பெயர் ஸத்யதாசன் என்றும் குறித்துள்ளது. அவர் வேதபுரம் என்ற ஊரைச் சேர்ந்தவர், அந்தண குலத்தவர் 12 ஆண்டுப் பரமனைப் பாடிப் பரவி சிவபதம் அடைந்தார்.

7. நம்பி மட்டும் கபிலர்,பரணர் முதலியோரைக் குறிப்பிட, மற்றவர்கள் ஒருவரே என்று கூறுவது மேலும் ஆராய்ச்சிக்கு உரித்தாகும்
என்று சொல்லி திரு நாகசாமி கட்டுரையை முடிக்கிறார்.

இனி எனது கருத்துகளைக் கூறுகிறேன்:

மாணிக்க வாசகரின் பெயர் ஸத்தியதாசன். ஏனெனில் மேலே சத்யதாசனுக்குச் சொன்ன எல்லா விஷயங்களும் ‘மா’வுக்குக் கச்சிதமாகப் பொருந்துகிறது. அதைவிட முக்கிய விஷயம் வேதபுரம் என்பது திருவாதவூரே! வேதபுர என்பது தமிழில் வாதவூர் என்று எழுதப்படும். திருவாதவூர் சுவாமிக்குப் பெயர் வேதபுரீஸ்வரர்!!!!

மதுரையில் ஒருவர் பிறந்தால் சுந்தரேஸ்வரன் என்றும் திருவாரூரில் ஒருவர் பிறந்தால் தியாகராஜன் என்றும் பெயர் சூட்டுவது போல வேதபுரத்தில் பிறந்த ‘மா’-வுக்கு வேதபுரீஸ்வரர் (தமிழில் வாதவூரர்) என்றும் மற்றொரு செல்லப் பெயராக சத்தியதாசன் என்றும் வைத்திருப்பர். ஆகவே பொய்யடிமை இல்லாத= ஸத்யதாச என்பதும் வேதபுரீஸ்வரர்=வாதவூரர் என்பதும் நாம் வணங்கும் மாணிக்கவாசகரே ஆவார்.

மேலும் பல சான்றுகளை கட்டுரையின் இரண்டாம் பகுதியில் தருவேன்.

மேற்கோள்கள்
1.தருமி பொற்கிழி கதை
நன் பாட்டுப் புலவனாய்ச் சங்கமேறி
நற்கனகக் கிழி தருமிக்கு அருளினோன் காண்
– திருப்புத்தூர் தாண்டகம், அப்பர் தேவாரம்

2.நரி—பரி லீலையும் அப்பர் தேவாரத்தில் வருகிறது.

நரியைக் குதிரை செய்வானும் நரகரைத் தேவு செய்வானும்
விரதங் கொண்டு ஆடவல்லானும் விச்சின்றி நாறு செய்வானும்
முரசு அதிர்ந்து ஆனை முன் ஓட முன் பணிந்து அன்பர்கள் ஏத்த
அரவு அரைச்சாத்தி நின்றானும் ஆரூர் அமர்ந்த அம்மானே
–(4-33 அப்பர் தேவாரம்,திருவாரூர் பதிகம்)

தொடர்பு கொள்ள: Contact swami_48@yahoo.com

தமிழ் இலக்கியத்தில் குரங்கு பற்றிய அதிசயச் செய்திகள்

monkey photo

This article is availabe in English as well.

By London swaminathan
Post no 878 dated 1st March 2014

தமிழ்க் குரங்குகளுக்கு அறிவு ஜாஸ்தி!!
குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்!……..இல்லை…… இல்லை,…..
தமிழ்க் குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் என்று சொல்லுவதே பொருத்தமாக இருக்கும். ஏனெனில் நாம்தான் உலகில் முதலில் பிறந்தோம் என்று பறை சாற்றிக் கொள்கிறோம் அல்லவா?

“கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு
முன் தோன்றிய மூத்த குடி”

— தமிழ்க் குடி என்று சொல்லுவது உண்மையானால் முதல் குரங்கு தமிழ் குரங்காகத்தானே இருக்க வேண்டும்! நிற்க.

தமிழன் இயற்கையில் ஊறித் திளைத்தவன் என்பது சங்க இலக்கியத்தின் 2000+ பாடல்களைப் படிப்போருக்கு தெள்ளிதின் விளங்கும். அவன் வருணிக்கும் மரம், செடி, கொடி, விலங்கினங்கள், பறவைகள் எல்லாவற்றையும் ஓவியமாக வரைந்து வைத்தால் காணக் கண்கள் ஆயிரம் வேண்டும். இன்று நமக்கு மிக நெருங்கிய உடன் பிறப்பான குரங்கை மட்டும் எடுத்துக் கொள்வோம்.

மனிதனைப் போன்ற உணர்வு குரங்குகளுக்கும் உண்டு என்பதெல்லாம் இப்போதுதான் ‘டிஸ்கவரி சேன்னல்’ முதலியவற்றில் ஆராயப்படுகின்றன. ஆனால் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழன், பிராணிகளை உன்னிப்பாகக் கவனித்து அவைகளை உவமைகளாகவும் எழுதி வைத்துவிட்டான்.

“இஞ்சி தின்ன குரங்கு போல”, “குரங்கு கையில் கொடுத்த பூமாலை போல”, “குரங்குப் பிடி” என்ற பழமொழிகளை எல்லாம் மனக் கண் முன்னால் ஓவியமாகக் கண்டு பாருங்கள். எவ்வளவு கன கச்சிதமாகச் சொல்லியிருக்கிறான் என்பது புரியும்.

baboon puzzled

இதோ சில காட்சிகள்:
காடுகளில் மயில்கள் ஆடும்போது வண்டுகள் பாடுகின்றனவாம். குரங்குகள் பலாப் பழத்தை மத்தளம் போல வைத்துக் கொண்டு தாளம் போடுகின்றனவாம்.காட்டிற்குள் ஒரு ஆர்க்கெஸ்ட்ரா/ இசைக் குழு! இப்படி ஒரு காட்சி. (அகம்.352)

இன்னொரு இடத்தில் ஒரு குரங்கு மழைத் தண்ணீரில் எழும் காற்றுக் குமிழ்களைக் கம்பால் அடித்து மகிழ்கிறதாம் (ஐங்கு 275)

மற்றொரு குரங்கு மயில் முட்டையை எடுத்து பாறை மீது உருட்டி பந்து விளையாடுகிறதாம் (குறு. 38)
கான மஞ்ஞை அறையீன் முட்டை
வெயிலாடுமுசுவின் குருளை உருட்டும்—(குறு. 38)

குரங்குகள் மரத்தில் கிளைக்கு கிளை தாவிப் போவதையும், ஊஞ்சல் ஆடுவதையும் புலவர்கள் வருணித்து மகிழ்கின்றனர்.

kurangu ramayan
பெண்கள் ‘மேக் அப்’

குரங்குகளுக்குக் கூடப் புணர்ச்சிக்குப் (செக்ஸ்) பின் வெட்கம் வரும் என்பதைக் கவனித்துப் பாடியும் வைத்திருக்கிறான் தமிழன் (நற்றிணை 151)

கடுவன், முறியார் பெருங்கிளை அறிதல் அஞ்சிக்
கறிவளர் அடுக்கத்து கள்வினிற் புணர்ந்த
செம்முக மந்தி செல்குறி கருங்காற்
பொன்னினர் வேங்கைப் பூஞ்சினைச் செலீஇயர்
குண்டுநீர் நெடுஞ்சுனை நோக்கி கவிழ்ந்து தன்
புன்தலைப் பாறு மயிர் திருத்தும் — ( நற்றிணை 151)

ஒரு ஆண் குரங்குடன், செம்முக மந்தி களவினில் தொடர்பு கொண்டதாம். தன்னுடைய கோஷ்டிக்குக் கலைந்த தலை முடியையும் முகத்தையும் காட்டினால் ரகசியம் வெளியாகி விடும் என்று அஞ்சி ஒரு மரத்தின் மீது ஏறி நீர்ச் சுனையில் கண்ணாடி போல முகம் பார்த்து தலை மயிரை அழகாக சரி செய்து கொண்டதாம். பெண் (குரங்கு) கள் ‘மேக் அப் போடுவது’ ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கண்ணாடிக்கு முன் நடந்திருக்கிறது!!

இந்தக் காட்சி மிகைப் படுதப்பட்டதல்ல, இப்போது குரங்குகளைப் பற்றி ஆராய்சி செய்வோர் அதற்கு மனிதன் போல சிந்தித்து முடிவு எடுக்கும் புத்தி இருக்கிறது என்பதைச் சோதனைகளில் கண்டு பிடித்து இருக்கிறார்கள். நாம் அவர்களை 2000 ஆண்டு இடைவெளியில் தோற்கடித்து விட்டோம். இது புலவர் இள நாகனார் பாடிய பாடல்.

குரங்கின் மனநிலையை, ராமாயணத்தில் கிஷ்கிந்தா காண்டத்திலும் சுந்தர காண்டத்திலும் கவிஞர்கள் (வால்மீகி, கம்பன்) அழகாகச் சித்தரித்துள்ளனர். சீதா தேவியைக் கண்டுபிடிக்க முடியவில்லையே என்ற ஆதங்கத்தில், குரங்குகள் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்கின்றன.
( நமது அரசியல்வாதிகளுக்கு கோப்பெருஞ்சோழனும், ராமாயணக் குரங்குகளும்தான் உண்ணாவிரத முன்னோடிகள்).

tamil kurangu
தற்கொலை செய்து கொண்ட குரங்கு

தமிழ் இலக்கியமும் இரண்டு பரிதாபக் காட்சிகளை வருணிக்கின்றன:
ஒரு பெண் குரங்கின் குட்டி மலைப் பள்ளத்தாக்கில் தவறி விழுந்து இறந்துவிட்டது. அது கண்டு பொறாது, தனது கூட்டத்தில் நின்று அழுதது. இதை வருணிக்கிறார் மலைபடுகடாம் கவிஞர் பெருங் கவுசிகனார்:

“கைக்கோள் மறந்த கருவிரல் மந்தி
அருவிடர் வீழ்ந்ததன் கல்லாப் பார்ப்பிற்கு
முறிமேல் யாக்கை கிளையொடு தவன்றி
சிறுமையுற்ற களையாப் பூசல்:- — ( மலைபடு வரி 311- 314)

“தேக்கடி ராஜா” போன்ற தமிழ் நாவல்களைப் படித்தவர்களுக்கு யானைகள் முறையாக துக்கம் அனுஷ்டிப்பது தெரிந்து இருக்கும். மேலை நாட்டினர் இப்போதுதான் விலங்கின அறிவாற்றலை உணரத் துவங்கி இருக்கின்றனர். நமக்கு முன்பே தெரியும்.

மற்றொரு குரங்கு அதன் காதல் கணவன் இறந்ததால், குட்டிகளை சுற்றத்தாரிடம் ஒப்படைத்துவிட்டு மலை மீது இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாம் (குறுந்தொகை 69)

கருங்கண் தாக்கலை பெரும்பிறிது உற்றெனக்
கைம்மை உய்யாக் காமர் மந்தி,
கல்லா வன்புறழ் கிளைமுதற் சேர்த்தி
ஓங்குவரை அடுக்கத்து பாய்ந்து உயிர் செகுக்கும்
–(கடுந்தோட் கரவீரனார், குறு. 69)

ஒரு புலவர் குரங்குச் சேட்டையைக் கண்டு அப்படியே வருணிக்கிறார்:
மந்திக் காதலன் முறிமேய்க் கடுவன்
தண்கமழ் நறைக்கொடி கொண்டு வியலறைப்
பொங்கல் இளமழை புடைக்கும் (ஐங்குறு 276)

மேகங்கள் வேகமாக ஓடுவதைப் பார்த்துவிட்டு ஒரு நறைக்கொடியின் தண்டை எடுத்து அதை அடிக்கப் போகுமாம்.

இன்னொரு பாடலில் எருமை மாட்டின் மீது சவாரி செய்யும் பையனைப் பார்த்த புலவர் அவனை பாறை மேல் உட்கார்ந்து இருக்கும் குரங்குக்கு ஒப்பிட்டு மகிழ்கிறார். (அக.206)

பால் கறந்து விநியோகித்த திருட்டுக் குரங்கு

குரங்குகள் பழங்களைத் திருடுவதையும் தட்டிப் பறிப்பதையும் நாம் கோவில்களில் கண்டிருக்கிறோம். ஆனால் திருட்டுத் தனமாக காட்டுப் பசுவின் பாலைக் கறந்து தன் குட்டிகளுக்கு விநியோகித்த அபூர்வக் காட்சியை ஒரு புலவர் பாடி வைத்திருக்கிறார். “இளிச்சவாயனைக் கண்டால் எருதும் மச்சான் முறை கொண்டாடும்” என்பது தமிழ்ப் பழமொழி. அபடிப்பட்ட ஒரு காட்டுப் பசு ஒரு வேங்கை மரத்தின் கீழ் நின்று உண்ட மயக்கம் தொண்டருக்கும் உண்டு என்று உறங்கும் வேளையில் இந்தக் குரங்கு தன் கைவரிசையைக் காட்டிவிட்டது. அது மட்டுமல்ல. சுற்றத்தாரிரிடம், உஷ், பேசாமல் சும்மா இருங்கள்! என்று சைகை செய்துவிட்டுச் சென்றதாம்! எவ்வளவு குசும்பு!!

இதோ அதை வருணிக்கும் பொதும்பில் கிழாரின் நற்றிணைப் பாடல்:
தடங்கோட்டு ஆமான் மடங்கல் மா நிரைக்
குன்ற வேங்கைக் கன்றொடு வதிந்தென,
துஞ்சுபதம் பெற்ற துய்த் தலை மந்தி
கல்லென் சுற்றம் கை குவியாக் குறுகி,
வீங்கு சுரை ஞெமுங்க வாங்கி, தீம் பால்
கல்லா வன் பரழ்க் கை நிறை பிழியும்
மா மலை நாட! ( நற்றிணைப் பாடல் 57, பொதும்பில் கிழார்)

தற்காலத்தில் திரிகூடராசப்பக் கவிராயர் பாடிய குற்றாலக் குறவஞ்சியில் வரும் அழகான காட்சி:

வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்
மந்தி சிந்து கனிகளுக்கு வான் கவிகள் கெஞ்சும்
கானவர்கள் விழியெறிந்து வானவரை அழைப்பர்
தேனருவித் திரை எழும்பி வானின் வழி ஒழுகும்
செங்கதிரோன் பரிக்காலும் தேர்க்காலும் வழுகும்
கூனல் இளம்பிறை முடித்த வேணி அலங்காரர்
குற்றாலத் திரிகூட மலை எங்கள் மலையே

இது போன்ற பாடல் குறுந்தொகை 278 லும் உண்டு. தந்தைக் குரங்கு சிந்தும் கனிகளைக் குட்டிக் குரங்குகள் உண்டு உண்டு மகிழ்ந்தனவாம். இன்னும் இப்படிப் பல உள. அத்தனையும் ஒரே நேரத்தில் சுவைத்தால் திகட்டி விடும் அல்லவா !

Contact swami_48@yahoo.com

பரதனிடம் ராமன் கேட்ட கேள்விகள்

IMG_0556

Ramayana Paintings

ராமாயண வழிகாட்டி — அத்தியாயம் 18 — ராம ராஜ்யம் -4
By ச.நாகராஜன்

நூறாவது ஸர்க்கத்தில் 70வது ஸ்லோகமாக அமைவது இது.

யாத்ராதண்டவிதானம் ச த்வியோனி சந்திவிக்ரஹௌ I
கச்சிதேதான்மஹாப்ராக்ஞ யதாவதனுமன்யஸே II

யாத்ராதண்டவிதானம் ச – ஐந்து வித யானங்களையும்

த்வியோனி – இரண்டு வகையாயுள்ள

சந்திவிக்ரஹௌ – ஸந்தி விக்ரஹங்களென்ற

ஏதான் – மேற்கண்டவைகளை

தத்வத்த – உள்ளபடி

புத்த்வா – ஆராய்ந்து

யதாவது – அதற்கேற்றவாறு

அனுமன்யஸே கச்சித் – நடந்து வருகின்றனையா

மஹாப்ராக்ஞ ராகவ! – மஹாபுத்திமானான பரத!

(அர்த்தம் புரிவதற்காகச் சில சொற்கள சென்ற 68,69 ஸ்லோகங்களிலிருந்து மேலே சேர்க்கப்பட்டிருக்கிறது)
இங்கு ராமர் ஐந்து வித யானம் என்று குறிப்பிட்டது :- 1) பகைவரைப் பகைத்துச் செல்லுதல் 2) நேசித்துச் செல்லுதல் 3) பலருடன் கூடிச் செல்லுதல் 4) வஞ்சனை செய்து செல்லுதல் 5) அலக்ஷியம் செய்து செல்லுதல்

ராமர் பரதனைக் கேட்கும் கேள்விகள் ஒரு மன்னன் எப்படி அரசாள வேண்டும் என்பதைச் சுட்டிக் காட்டுகிறது. ஸர்க்கம் முழுவதையும் படித்தால் ராமராஜ்யத்தின் இலக்கணத்தை ஒருவாறு நாம் அறிய முடியும்.

“சக்கரவர்த்தி குமாரா! பிரதி தினமும் காலை வேளையில் ராஜ வீதியில் அங்கங்கிருந்து எல்லோரும் பார்க்கத் தகுந்தபடி மனிதர்களுக்குக் காட்சி தருகின்றனையா”

“பரதா! உனது வரவு அதிகமாயிருக்கிறதா? செலவு அதற்குக் குறைந்திருக்கிறதா? உன் பொக்கிஷமானது தகுதியற்றவரிடம் சேராமல் இருக்கிறதா?”

இப்படி எல்லாம் ஏராளமான கேள்விகளைக் கேட்கும் போது பரதனை அவர் பாராட்டவும் செய்கிறார்; தன் அன்பைச் சொல்லில் குழைத்து அழைக்கிறார்!

ram on stone

ஜயதாம் வர – வெற்றி பெற்றவர்களுள் சிறந்தவனே
காலக்ஞ – உசிதமான காலத்தை அறிந்தவனே
தாத – குழந்தாய்!
சௌம்ய – சௌம்யனே
கைகேயி புத்ர – கைகேயியின் புத்திரனே
ராஜபுத்ர – சக்கரவர்த்தி திருக்குமாரா
நரர்ஷப – புருஷோத்தமனே
மஹாப்ராக்ஞ – மகா புத்திமானே

இவை அனைத்தும் பரதனுக்குப் பொருத்தமாக இருப்பதைக் கண்டு வியக்கிறோம்.

வன: கிம் ஆகத: – காட்டிற்கு ஏன் வந்தாய்?
பத – ஏன் இந்தக் கஷ்டம்?
என்று அன்புடன் கேட்கும் ராமனின் அன்புக்கு ஈடு இணை உண்டோ?
சகோதர பாசத்தைத் தெள்ளென எடுத்துக் காட்டும் ராம – பரதன் சந்திப்பு அற்புதமாக வால்மீகி முனிவரால் விவரிக்கப்பட்டுள்ளது.
காலம் காலமாக மனித குலத்தின் ரத்த சம்பந்த உணர்வையும், அன்பையும் இப்படித் தகுந்த சொற்களால் வடித்தெடுக்கும் இன்னொரு காவியம் இல்லை என்றே சொல்லலாம்!
******

ram ki nam

ராமாயண வழிகாட்டி — அத்தியாயம் 17 — ராம ராஜ்யம் -3
By ச.நாகராஜன்

நூறாவது ஸர்க்கத்தில் 68-வது ஸ்லோகத்தைத் தொடர்ந்து 69 வது ஸ்லோகமாக அமைவது இது:

இந்த்ரியாணாம் ஜயம் புத்த்வா ஷாட்குண்யம் தைவமானுஷம் I
க்ருத்யம் விம்சதிவர்கம் ச ததா ப்ரக்ருதி மண்டலம் II

இந்த்ரியாணாம் ஜயம் – ஐம்புலன்களையும் அடக்குதலையும்
ஷாட்குண்யம் – ஆறு குணத்தையும்
தைவ மானுஷம் – மனிதரால் தோன்றும் ஐந்து வியசனங்களையும்
க்ருத்யம் – பகைவரிடம் விசுவாசமற்றவர்களைத் தன் வசமாக்கிக் கொள்ளலையும்
விம்சதி வர்கம் ச – இருபது வர்க்கங்களையும்
ததா ப்ரக்ருதி மண்டலம் – அவ்வாறே ப்ரக்ருதி மண்டலங்களையும்
(ஆராய்ந்து அதற்கேற்றபடி நடந்து வருகிறாயா?)

இங்கு ராமர் ஆறு குணம் என்று குறிப்பிட்டது:- 1) சந்தி 2) விக்ரகம் 3) போருக்குச் செல்லல் 4) போருக்குச் செல்லாதிருத்தல் 5) பகைவரை ஒருவருக்கு ஒருவர் பேதமுறச் செய்தல் 6) பகைவரை ஆஸ்ரயித்தல்

தைவ மானுஷம் என்பது தீ, நீர், பிணி க்ஷாமம், இறப்பு எனும் ஐவகை தெய்வ துன்பங்களையும், அதிகாரிகள், கள்வர், அன்னியர், அரசனுக்கு இஷ்டர், அரசனது கோப குணம் ஆகிய ஐந்து துன்பங்களையும் குறிக்கும்.

இருபது வர்கங்கள் என்று குறிப்பிட்டது:- 1) ராஜ்யம் 2) பெண் 3) ஸ்தானம் 4) தேசம் 5) இனத்தார் 6) பொருள் இவைகளைப் பறித்துக் கொள்ளல் 7) மதம் 8) மானம் 9) விஷய பீடை 10) மதியின்மை 11) சக்தியின்மை 12) குணமின்மை 13) தெய்வத்தை இகழ்தல் 14) நேசரை இகழ்தல் 15) பொருளை இகழ்தல் 16) சுற்றத்தாரைக் கொலை செய்தல் 17) கருணையின்மை 18) தேசத்தை இகழ்தல் 19) பொருள் ஒன்றிலேயே விருப்புறுதல் 20) தான் கோரிய விஷயத்திலேயே ஆசையுற்று இருத்தல்

ப்ரக்ருதி மண்டலம் என்று குறிப்பிட்டது :- 1). மந்திரி 2) தேசம் 3) கோட்டை 4)கோசம் 5) தண்டம் என்னும் ஐந்து பிரகிருதிகளையும் நடுவில் அரசன், முன்னரசனுக்குச் சத்ரு, தன் மித்திரன், சத்துருவின் மித்திரன், தன் மித்திரனுக்கு மித்திரன், சத்துருவின் மித்திரனுக்கு மித்திரன் ஆகிய ஐவர்கள், பின்னர் பார்ஷ்ணிக்ராஹன், ஆக்ரந்தன், பார்ஷ்ணிக்ராஹாஸாரன், ஆக்ரந்தாஸாரன் என்னும் நால்வர்கள், பக்கத்திலிருப்பவன், மத்தியமன், புறத்திலிருப்பவன், உதாசீனன் ஆகிய இவர்கள் அனைவருமாவர்.
ராஜ்ய கட்டமைப்பையும் விரிவான நடைமுறைகளையும் இந்த ஸ்லோகம் விளக்குகிறது அல்லவா.
இத்துடன் அடுத்து வரும் இன்னொரு ஸ்லோகத்தையும் சேர்த்துப் பார்த்துப் பொருள் கொள்ள வேண்டும்.

Swami_48@yahoo.com
**********