
Compiled by London swaminathan
Date: 22 February 2016
Post No. 2564
Time uploaded in London :–17-22
( Thanks for the Pictures )
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
Please go to swamiindology.blogspot.com
OR
tamilandvedas.com
என் அருமைத் தங்கையே!
உன் கடிதம் கிடைத்தது. என் க்ஷேமத்தைப்(நலம்) பற்றி நீ எழுதச் சொன்னாய். நான் என்னுடைய க்ஷேமத்தை (நலம்) என்னவென்று எழுதப்போகிறேன் இன்னும் என் குமாரனுக்கு விவாகம் (திருமணம்) நடந்து நான்கு மாதங்கள் கூட ஆகவில்லை. அதற்குள் என் மருமகள் என்னிடத்தில் கொஞ்சமும் மரியாதையின்றி நடக்க ஆரம்பித்து விட்டாள். நான் ஒன்று சொன்னால் அவள் ஒன்பது சொல்கின்றாள்.
என் குமாரன் (மகன்) மனைவியின் மாய்கையில் மூழ்கினவனாய், நான் ஒன்று சொன்னால், தன் மனைவியைக் கீழே விடாமல் தாங்கிப் பேசுகிறான். அதனால் அவள் என்னைக் கொஞ்சமும் மதிப்பதேயில்லை.
அவள் படுக்கையை விட்டு தினமும் காலையில் எட்டு மணிக்கு எழுந்து வருகிறாள். அதற்குள் வீட்டிலுள்ள வேலைக்காரியைக் கொண்டு நான் எல்லா வேலைகளையும் தயாராய் செய்து வைக்கவேண்டும். இல்லாவிட்டால் அவள் கடுகடுத்த முகத்துடன் பாத்திரங்களை தடதடவென்று உருட்டுகிறதும், ஜாடை பேசித் திட்டுகிறதுமாக என்னைத் துன்பப்படுத்துகிறாள். அவள் எழுந்திருக்கும் போது வெந்நீர் என்கிறாள். வேலைக்காரி கொண்டுபோய் கொடுக்கவேண்டும். இல்லாவிட்டால் வேலைக்காரியின் பாடு அன்றைய தினம் திண்டாட்டம்தான். வெந்நீரைக்கொண்டு என் மருமகள், காலைக் கடனை முடித்துக்கொள்கிறாள்.
அதற்குப் பின் தயாராய் இருக்கும் பலகாரத்தைத் தின்று பின்னர் தானே எல்லா வேலைகளையும் செய்தது போல காப்பியையும் பலகாரத்தையும் கோப்பையிலும் தட்டிலும் எடுத்துக்கொண்டுபோய் கணவனை எழுப்புகிறாள். கணவனை வெந்நீரைக் கொண்டு பல்விளக்கும்படி உபசரிக்கிறாள். இத்தகைய தளுக்கால் என் மூட மகன் அவளிடத்தில் மயங்கிக் கிடக்கிறான்.
அவள் ஒரு வேலையும் செய்வதே இல்லை. வேலைக்காரி இருந்தால் தானென்ன? அவளைப்போல ஒரு சோம்பேறியை நான் உலகில் பார்த்ததேயில்லை. பகலில் புருஷன் சாப்பிட உட்கார்ந்தால், சாதம் முதலியவைகளை தானே கஷ்டப்பட்டு சமைத்தவைகளைப் போல எடுத்துக்கொண்டுபோய் வட்டித்து அவனுக்கு விசிறுகிறாள். அம்மம்மா! அவள் தந்திரமும் சாமர்த்தியமும் யாருக்கு வரும்? இப்படியெல்லாம் அவள் செய்வதால் அவள் வார்த்தைக்கு குறுக்கு பேசாமல் என் மகன், ‘பெண்டாட்டி தாயே, பெரிய தாயே’ – என்று அவளைக் கொஞ்சுகிறான். என் பாடு பெரும்பாடாயிருக்கிறது.
உனக்குத் தெரியும் அவள் பெயர் ஜானகி என்று. நானோ அவள் செய்யும் ஜாலங்களையெல்லாம் மனதிற்கொண்டு அவள் பெயரை ஜாலகி என்று மாற்றிவிட்டேன். ஆனால் வெளியே சொல்ல பயம். மனதிற்குள் சொல்லிக்கொள்வேன்.
இப்படிக்கு அன்புள்ள
அம்மாக்கண்ணு
You must be logged in to post a comment.