Written by London swaminathan
Date: 17 January 2017
Time uploaded in London:- 22-09
Post No.3553
Pictures are taken from different sources; thanks.
Pictures from Dhanyavarshini’s posts on Facebook; thanks
contact:– swami_48@yahoo.com
பரத நாட்டிய சாஸ்திரத்தில் ஒன்பது ரசங்கள், முக பாவங்கள், உணர்ச்சி வெளிப்படுத்தல்கள் இருப்பதை இந்தியர் அனைவரும், மற்றும் இந்தியக் கலையைப் பாராட்டுவோர் பலரும் அறிந்திருக்கிறார்கள். பிற்காலத் தமிழ் நூல்களும் ஒன்பான் ரசங்களை அங்கீகரித்துள்ளன. ஆனால் தொல்காப்பியர் மட்டும் நவரசத்தை —அஷ்ட ரசம்— ஆக்கிவிட்டார். இது ஒரு புதிராகவே இருந்து வருகிறது. ஏன் என்று தெரியவில்லை!
தொல்காப்பியம்–பொருளதிகாரம், மெய்ப்பாட்டியல்
நகையே அழுகை இளிவரல் மருட்கை
அச்சம் பெருமிதம் வெகுளி உவகை என்று
அப்பால் எட்டே மெய்ப்பாடு என்ப (1197)
நகை (Laughter) என்பது இகழ்ச்சியிற் பிறக்கும்
அழுகை (Weeping) என்பது துன்பத்தில் பிறக்கும்
இளிவரல் (Despise/disgust) என்பது அருவெறுப்பால் உண்டாகும்
மருட்கை (Wonder) என்பது வியப்பில் தோன்றும்
அச்சம் (Fear) என்பது பயத்தில் பிறக்கும்
பெருமிதம் (Fortitude, Heroism) என்பது வீரத்தால் பிறக்கும்
வெகுளி (Anger) என்பது கோபத்தால்/வெறுப்பால் தோன்றும்
உவகை (Delight/Happiness) என்பது மகிழ்ச்சியில் பிறக்கும்
சாந்தம் (Peaceful/ Tranquility) என்பது தொல்காப்பியத்தில் இல்லை!
சிருங்காரம் என்பதும் இல்லாவிடினும் அதை உவகையில் சேர்க்கமுடியும்
நவரசம் என்பது எவை?
சிருங்காரம், ஹாஸ்யம், கருணா, ரௌத்ர, வீர, பயங்கர, பீபத்ஸ, அத்புத, சாந்த என்று வடமொழி நூல்கள் விளம்பும்.
இடமொன்றுமைக்கரனீந்த மெய்ப்பகதெழிற்கிணையாத்
திடமொன்றியவணச் சிங்காரம் வீரஞ்சிரிப்பருளே
யடமின்றியஞ் சினம் குற்சையுஞ் சாந்தமுமற்புதமுங்
கடியென்று மொன்பது மாலிரதத்தைக் காட்டுதற்கே
–உபமான சங்கிரஹம் இரத்தினச் சுருக்கம்
இடது பக்கத்தை உமைக்கு சிவன் கொடுத்த சரீரத்தின் அழகிற்கு இணையாக உறுதியாகிய வண்ணம் 1.சிங்காரம், 2.வீரம், 3.சிரிப்பு, 4.அருள், 5.அடமில்லாத சினம், 6.குற்சை, 7.சாந்தம், 8.அற்புதம், 9.கடி என்ற ஒன்பதும் அழகிய ரசத்தைப் புலப்படுத்துவதற்காம்.
பரத நாட்டியம் பயின்று அரங்கேறுவோர் அனைவரும் இந்த ஒன்பது உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் வகையில் முகபாவங்களைக் காட்டும் அழகு தனி அழகுதான்!
–சுபம்–