
Date: 3 FEBRUARY 2018
Time uploaded in London- 7-58 am
Compiled by London swaminathan
Post No. 4697
PICTURES ARE TAKEN BY LONDON SWAMINATHAN
WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST
WITH YOU.
லண்டன் மாநகரில் யூஸ்டன் (Euston or Euston Square) ரயில் நிலையம் அருகில் வெல்கம் சென்டர் (Wellcome Centre) என்ற புகழ்பெற்ற மருத்துவ ஆராய்ச்சி நிலயம் உள்ளது. இந்தியாவின் ஆயுர்வேத, யுனானி மருத்துவ முறைகள் தொடர்பான ஏராளமான மருத்துவ பொக்கிஷங்களின் உறைவிடம் இது. இப்பொழுது ஒரு ஆயுர்வேத கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளனர். இது ஏப்ரல் எட்டாம் தேதி வரை நடைபெறும். ஆனால் திங்கட்கிழமையில் கண்காட்சி மூடப்பட்டிருக்கும்.
இந்தக் கண்காட்சி பற்றியும் வெல்கம் என்பவர் யார் என்றும் சில செய்திகளைக் காண்போம்.

ஹென்றி வெல்கம் (1853-1936) என்பவர் அமெரிக்காவில் பிறந்தவர். அவர் லண்டனுக்கு ஒரு மருந்து விற்பனையாளராக வந்தார். பின்னர் ஒரு பெரிய மருத்துவ தொழில் நிறுவனத்தை அமைத்து வெற்றி கண்டார். அவருக்கு வரலாற்றில்– குறிப்பாக மருத்துவ வரலாற்றில்— பேரார்வம் இருந்தது. அவர் ஒரு தர்ம சிந்தனையாளர், ஆராய்ச்சியாளர், பழம்பொருள் சேகரிப்பாளர். ஆகையால் உலகம் முழுதும் குறிப்பாக இமய மலைப் பகுதி மூலிகைச் செல்வங்கள், ஆயுர்வேத நூல்கள் ஆகியவற்றைச் சேகரித்தார். அவர் சேகரித்த நூல்களும், பொக்கிஷங்களும் உலகம் முழுதும் பரவலாக வைக்கப்பட்டுள்ளன. அவர் அமைத்த அறக்கொடை நிறுவனமான வெல்கம் ட்றஸ்ட் (Wellcome Trust) இன்று 70 நாடுகளில் ஆரய்ச்சிப் பணிகளுக்கு நிதி உதவி செய்கிறது.
வெல்கம் சென்டரில் எப்போதும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள பொருட்களுடன் புதிதாக ஆயுர்வேத கண்காட்சியும் வைக்கப்பட்டுள்ளது. பெரிய புத்தகக் கடை, காப்பிக் கடை, நூலகம் ஆகியன இந்த இடத்தின் சிறப்புகள்; எப்போதும் மாணவர்களும் ஆராய்ச்சியாளர்களும், சுற்றுலாப் பயணிகளும் கூடி இருப்பர்.
ஆயூர்வேதக் காட்சியில் நிறைய விஷயங்கள் உள்ளன. சம்ஸ்கிருத பாரசீக, திபெத்திய மொழி நூல்களும் சுவடிகளும் இருக்கின்றன. ஒரு புறம் வீடியோவில் திபெத்திய மூலிகைச் செல்வம் பற்றிய ஒரு படம் ஓடிக்கொண்டிருக்கும். மறுபுறம் சம்ஸ்கிருத ஸ்லோகங்களுடன் மருத்துவ செய்தி ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கும்.
2600 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் அவதரித்த சுஸ்ருதர் என்ற மஹா மேதைதான் உலகில் அறுவைச் சிகிச்சையின் தந்தை (Father of Surgery) என்ப போற்றப்படுகிறார். அவர் சம்ஸ்க்ருத மொழியில் எழுதிய விஷயங்கள் உலகப் பிரசித்தமானவை.

சுஸ்ருதர் செயற்கை மூக்கு எப்படிச் செய்வது எப்படிப் பொருத்துவது (Rhinoplasty) என்று சொன்ன விஷயங்களும், அவர் வருணிக்கும் நூற்றுக்கணக்கான அறுவைச் சிகிச்சை கருவிகளும் (Surgical Instruments) உலக மக்களை வியப்பில் ஆழ்த்தின. இந்த மருத்துவக் கருவிகள் நம்மிடையே இன்று இல்லாவிடினும், அதன் மாதிரிகளைத் (Replicas) தயாரித்துக் காட்சிக்கு வைத்துள்ளனர்.
இந்தக் கண்காட்சிக்கு ஆயுர்வேத மனிதன் என்ற பெயர் சூட்டியதற்குக் காரணமாக அமைந்ததது ஒரு 18ஆவது நூற்றாண்டின் நேபாளி ஓவியம் ஆகும். இந்த ஓவியத்தில் ஆயுர்வேத நூல்களில் சொல்லப்பட்ட வண்ணம் ஒரு மனிதனின் உடலுறுப்புகள் ரத்த நாளங்கள் வரையப்பட்டுள்ளன.
ஆயுர்வேதம் இன்று இந்தியாவுக்கு அப்பாலும் பயிலப்படுகிறது.
கண்காட்சியிலுள்ள வேறு பல சுவையான விஷயங்களைத் தனியாகத் தருகிறேன்.

–Subham–