
Written by S Nagarajan
Uploaded in London on – 4 JANUARY 2020
Post No.7416
contact – swami_48@yahoo.com
pictures are taken from various sources; thanks.
ச.நாகராஜன்
வேதாந்த தேசிகர் இயற்றியுள்ள நூல்கள் பற்றிய விவரங்களின் தொடர்ச்சி இங்கு தரப்படுகிறது.
- ஸ்ரீ தயா சதகம்
108 சம்ஸ்கிருத பாடல்கள் அடங்கியுள்ள நூல் ஸ்ரீ தயா சதகம். சதகம் என்பது 100 பாடல்கள் அடங்கியுள்ளதைக் குறிக்கும்.
வெங்கடேஸ்வரனின் தயை ஒரு தேவதையாக உருவகப்படுத்திப் பாடப்பட்ட பாடல்கள் இவை. இந்த சதகம் பத்துப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பத்துப் பாடல்களும் சம்ஸ்கிருதத்தின் ஒவ்வொரு சந்த வகையைக் கொண்டு அமைந்துள்ளது.
82 முதல் 90 முடிய உள்ள பாடல்களில் பத்து அவதாரங்கள் சொல்லப்படுகிறது.
பாடல் 104இல் ‘வேதாந்த தேசிக பதே வினிவேஷ்ய பாலம்’ என்று வருவதால், ‘வெங்கேஸ்வரப் பெருமாளே சிறுவனான எனக்கு வேதாந்த தேசிகர் என்று கூறி அருளி என்னை இந்த தயா சதகம் பாடச் செய்திருக்கிறார்’ என்று கூறி இருப்பது தெரிய வருகிறது. வெங்கடேஸ்வரனும் ரங்கநாதனும் ஒருவரே என்பதால் ரங்கநாதர் தான் அவருக்கு வேதாந்த தேசிகர் என்ற பட்டத்தை அருளியுள்ளார் என்று பொதுவாக சொல்லப்படுவதும் சரி தான் என்று உணரலாம்.
ஏராளமான சுவையான தகவல்கள் இறைவனின் அருளுக்குப் பாத்திரமானவர்களைப் பற்றி தயா சதகத்தில் படித்து மகிழலாம்.
- ஸ்ரீ வரதராஜ பஞ்சாசத்
இதில் 51 சம்ஸ்கிருத செய்யுள்கள் உள்ளன. காஞ்சியில் எழுந்தருளியுள்ள காஞ்சி வரதராஜப் பெருமாளை இதில் தேசிகர் போற்றித் துதிக்கிறார்.
தூப்புலில் அவதரித்து காஞ்சியில் வாழ்ந்தவரே தேசிகர் என்பதால் இயல்பாகவே வரதராஜர் மீது வேதாந்ததேசிகர் அளப்பரிய பக்தி கொண்டிருந்ததை சுலபமாக உணரலாம்.
இதில் பல்வேறு வாகனங்களை தேசிகர் சுவையாகக் குறிப்பிடுகிறார். பிரம்மோத்ஸவத்தில் வரும் வாகனங்கள், தேர், பல்லக்கு ஆகியவற்றை குறிப்பிடும் இந்த பஞ்சாசத்தின் இறுதி ஸ்லோகத்தில் இதைப் படிப்பவர்கள் அல்லது கேட்பவர்கள் அனைவருக்கும் கல்ப விருட்சம் தரும் அனைத்தும் கையில் வந்து சேரும் என்று உறுதிபடக் கூறி அருள்கிறார்.
- வைராக்ய பஞ்சகம்
ஆறு சம்ஸ்கிருத ஸ்லோகங்கள் அடங்கியுள்ள வைராக்ய பஞ்சகத்தில் முதல் ஐந்து ஸ்லோகங்களால் உலகில் மதிக்கப்படும் செல்வத்தை மதிக்காமல் இறைவனின் அருள் ஒன்றையே செல்வம் என மதிக்கும் வேதாந்த தேசிகரின் அருள் உள்ளம் புலப்படுகிறது. ஆறாவதாக அமையும் இறுதி ஸ்லோகத்தில் எனது தந்தையால் சம்பாதித்த பொருள் எதுவும் எனக்கில்லை; நானும் சம்பாதிக்கவில்லை. ஆனால் எனக்கு என் தாத்தாவான பிரம்மாவால் தானமாகத் (பைதாமஹம் தானம்) தரப்பட்டுள்ள ஹஸ்தகிரியில் வீற்று அருளும் வரதராஜரின் அருள் உள்ளது என்று உருக்கமாகக் குறிப்பிடுகிறார்.
அத்வைத ஆசாரியரான வித்யாரண்யர் காலத்தில் வாழ்ந்தவர் வேதாந்த தேசிகர். இருவரும் சிறுவயதுத் தோழர்கள். காஞ்சியில் எளிமையாக வேதாந்த தேசிகர் வாழ்ந்து வருவதை அறிந்த வித்யாரண்யர் ஹரிஹரர், புக்கர் நிறுவிய விஜயநகர சாம்ராஜ்யத்திற்கு வருகை புரியுமாறு அரசாங்க அழைப்பை அனுப்பினார். ஹரிஹரரும் புக்கரும் விஜயநகர சாம்ராஜ்யத்தை நிறுவக் காரணகர்த்தரே வித்யாரண்யர் தான். ஆனால் தேசிகர் அந்த அழைப்பை ஏற்றுக் கொள்ளவில்லை. உலகியல் செல்வங்களின் மீது அவர் பற்றுக் கொள்ளாததே இதன் காரணம்.
- சரணாகதி தீபிகா
சம்ஸ்கிருதத்தில் அமைந்துள்ள இதில் 59 செய்யுள்கள் உள்ளன. சரணாகதி ப்ரபத்தி என்பது வைஷ்ணவ தர்மத்தின் ஒரு முக்கிய அம்சமாகும். சரணாகதியே முக்திக்கான வழி.
மடப்பள்ளியாச்சான் என்பவர் ஸ்ரீ ராமானுஜருக்கு உணவு சமைக்கும் சமையல் வேலையப் பார்த்து வந்தவர். அவர் ராமானுஜரின் அருளால் வைஷ்ணவ சம்பிரதாயம் அனைத்தையும் நன்கு தெரிந்து கொண்டார். இது சரணாகதியின் மூலம் கிடைக்கப்பெற்ற ஒன்று. இந்த சரணாகதி தத்துவத்தை இவரிடமிருந்து கிடாம்பி ராமானுஜாசாரியர் கற்றுக் கொள்ள அவரிடமிருந்து கிடாம்பி அப்புல்லர் கற்றுக் கொண்டார். அப்புல்லரின் தேசிகரின் சொந்த தாய்மாமன் ஆவார்.
விளக்கொளி எம்பெருமானை நோக்கி கூறப்படும் இந்த ஸ்லோகங்கள் சரணாகதி தத்துவம் முழுவதையும் விளக்குகிறது.
தேசிகரின் கடைசி ஸ்லோகம் அருமையாக முடிகிறது இப்படி:
இந்த சரணாகதி தீபிகா என்னும் விளக்கின் திரி தேசிகரின்(தாஸ) மனம். அளப்பரிய பக்தியே (ஸ்நேகம்) எண்ணெய். இதைக் கொள்பவர் எம்பெருமானே. அவரே விஷயம். அவர் உலகெங்கும் சூழ்ந்துள்ள அஞ்ஞானமென்னும் காரிருளைப் போக்குவார்.
‘அன்பே தகளியா’ என்று தொடங்கும் பாடல் உள்ளிட்ட ஆழ்வார்கள் ஏற்றியுள்ள விளக்குப் பாடல்களுடன் இதை ஒப்பிட்டு மகிழலாம்.
வேதாந்த தேசிகரின் பாடல்களில் பக்திச் சுவையுடன் கவி நயம்,பொருள் நயம், சொல் நயம் உள்ளிட்ட அனைத்தும் துள்ளிக் குதிக்கும் என்பதை அதைப் படிப்போர் உணர்வர்.
****









































































You must be logged in to post a comment.