சிவ சிவ என்றால் தீய கோள்களின் குற்றம் போகும் (Post No.4463)

Date: 6 DECEMBER 2017

 

Time uploaded in London- 5-52 am

 

WRITTEN BY S NAGARAJAN

 

Post No. 4463

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

சிவ நாம மகிமை

 

சிவ சிவ என்றால் தீய கோள்களின் குற்றம் போகும்; ஆயுள் பெருகும்!

 

ச.நாகராஜன்

 

1

சிவ நாம மகிமையை முற்றிலும் சொன்னவர் யாரும் இல்லை.

தமிழில் ஆயிரக்கணக்கான துதிப் பாடல்களால் சிவனைத் துதிக்கலாம்.

பன்னிரெண்டு திருமுறைகளும், ஏராளமான துதிப் பாடல்களும் இருக்கின்றன. இத்துணை துதிகள் இருந்தாலும் கூட, சிவ சிவ என்று சொன்னாலே அனைத்து தீவினைகளும் போகும்; நல்வினை சேரும்; அதன் விளைவாக அனைத்து நலன்களும் அடைய முடியும் என்று சிவப்பிரகாச சுவாமிகள் அருளியுள்ளார்.

பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்த மாபெரும் அருளாளர் சிவப்பிரகாச சுவாமிகள். இவரை ‘துறைமங்கலம் சிவபிரகாசர், கற்பனைக் களஞ்சியம், சிவன் அநுபூதிச் செல்வர் என்ற பெயர்களால் பக்தர்கள் போற்றிப் புகழ்வர்.

 

32 வயதே வாழ்ந்தார்; 34 நூல்களுக்கும் அதிகமான நூல்களை இயற்றினார்; ஏராளமான அற்புதங்களை நிகழ்த்தினார்.

தமிழ் இவர் வாக்கில் விளையாடியது; அற்புதங்களை நிகழ்த்தியது.

 

கிறிஸ்தவ மதக் கொள்கைகளை கண்டனம் செய்து இவர் இயற்றிய ஏசு மத நிராகரணம் அபூர்வமான ஒரு நூல். ஆனால் அதன் பிரதிகளில் ஒன்று கூட இப்போது கிடைக்கவில்லை.

ராபர்ட் டி நொபிலி என்ற கபட வேஷதாரியிடம் வாதிட்டு அவரை இவர் வென்றார் என்பர். சிலரோ வீரமாமுனிவருடன் வாதிட்டு அவரை இவர் தோற்கடித்தார் என்பர்.

தமிழ் கற்க விரும்பும் அனைவரையும் முதலில் சிவப்பிரகாச சுவாமிகளின் நூலைப் படிக்குமாறு தமிழ்ப் பண்டிதர்கள் கூறுவது மரபு.

 

அப்படி ஒரு அற்புதமான கற்பனை வளமும் கருத்து வளமும் சொல் வளமும் இலக்கண நயமும் இவரது நூல்களில் மிளிரும்.

சிறந்த சிவ பக்தரான இவர் இயற்றியுள்ள நூல்களில் ஒன்று தான் சிவ நாம மகிமை என்னும் குறு நூல். அதைப் பற்றி இங்கு பார்ப்போம்.

 

2

சிவ நாம மகிமை என்ற இந்த நூல் பத்துக் கலிவிருத்தப் பாடல்களையும் இறுதியில் ஒரு அறுசீர் விருத்தத்தையும் கொண்டுள்ளது.

 

சிவ நாமம் எல்லையற்ற மகிமை கொண்டது. சாதாரணமாக சிவ சிவ என இரட்டித்து இந்த நாமத்தைக் கூறுவது வழக்கம்.

எல்லையற்ற பெருமைகளில் சிலவற்றை இந்த நூல் விளக்குகிறது.

 

வேத மாகமம் வேறும் பலப்பல

ஓதி நாளு முளந் தடு மாறன்மின்

சோதி காணிருள் போலத் தொலைந்திடுந்

தீதெ லாமுஞ் சிவசிவ வென்மினே

என்பது முதல் பாடல்.

 

வேதம் ஆகமம் போன்ற அனைத்தும் கற்பதற்குக் கடினம். அதை ஓதி உளம் தடுமாற வேண்டாம். எளிமையாக சிவ சிவ என்று கூறுங்கள் தீதெலாம் தொலைந்திடும் என்று அருளுகிறார் சுவாமிகள் இதி.

 

சாந்தி ராயண மாதி தவத்தினான்

வாய்ந்த மேனி வருத்த விறந்திடாஅப்

போந்த பாதக மேனும் பொருக்கெனத்

தீந்து போகுஞ் சிவசிவ வென்மினே

என்பது நான்காவது பாடல்.

சாந்திராயணம் உள்ளிட்ட கடினமான விரத முதாலனவற்றை மேற்கொண்டு உடலை ஏன் வருத்துகிறீர்கள்? எந்தப் பாதகமானாலும் பொருக்கெனப் போய் விடும் சிவ சிவ என்று சொன்னால் என்று அருளுகிறார் சுவாமிகள் இந்தப் பாடலில்.

தீய நாளொடு கோளின் செயிர்தபும்

நோய கன்றிடு நூறெனக் கூறிய

ஆயுள் பல்கு மறம் வளர்ந் தோங்குறுந்

தீய தீருஞ் சிவ சிவ வென்மினே

என்பது ஆறாவது பாடல்.

 

நவ கிரகங்களின் தோஷம் சிலரது ஜாதகத்தில் காணப்படும். சில நாள்கள் தீய பலனைத் தருவதாக அமையும். இந்த தீய நாளொடு, நவ கிரகங்களின் குற்றமும் தீரும் – சிவ சிவ என்று சொன்னால் என்று அருளுகிறார் சுவாமிகள் இதில்.

இறுதியாக உள்ள ஆசிரிய விருத்தப் பாடல் மூலம் எப்படிப்பட்ட இழிந்தவன் ஆனாலும் கூட சிவ நாமத்தால் உய்யலாம் என்று அறுதியிட்டு உறுதி கூறி மனித குலத்திற்கு ஆறுதல் அளிக்கிறார் சிவப்பிரகாச சுவாமிகள்.

 

 

இழிவுறுபுன் கருமநெறி யினனெனினுங்

கொலைவேட னெனினும் பொல்லாப்

பழிமருவு பதகனெனி னும் பதிக

னெனினுமிகப் பகரா நின்ற

மொழிகளுண்முற் றவசனாய்ச் சிவசிவவென்

றொரு முறைதான் மொழியில் லன்னோன்

செழியநறு மலரடியின் றுகளன்றோ

வெங்கள் குல தெய்வ மென்ப.

 

எப்படிப்பட்ட பாதகனாக இருந்தாலும், பதிதனாக – இழிந்தவனாக – இருந்தாலும் கூட சிவ சிவ என்று ஒரு முறை சொன்னாலும் கூட அவன் உய்வான் என்பதை அநுபூதி கண்ட பெரியவர் கூறுகிறார்.

 

 

சிவப்பிரகாச சுவாமிகளின் வரலாறு மிக அற்புதமானது. அவரது பாடல்களோ நம்மை மேல் நிலைக்கு உடனடியாக உயர்த்தக் கூடியது.

 

பாடலகளை ஓதுவோம். சிவ சிவ என்போம். நாளும் கோளும் நமக்குத் தீயன செய்யா; நல்லதே செய்யும் என்று நம்புவோம்.

 

சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ!

***

Leave a comment

4 Comments

  1. nparamasivam1951

     /  December 6, 2017

    மிக மிக அருமை. சிவப்பிரகாச சுவாமிகள் அவர்களின் நூல் (பதவுரையுடன்) எங்கு கிடைக்கும் என தெரிவித்தால் நன்றி.

  2. நன்றி. இப்படி ஒரு ஆர்வத்தை இந்தக் கட்டுரை ஏற்படுத்தியதே இந்தக் கட்டுரையிந் வெற்றியாகும்.
    சிவப்பிரகாச சுவாமிகளின் 24 நூல்கள் அழகுற முக்கியச் சொற்களுக்கு அர்த்தத்துடன் சிவப்பிரகாச சுவாமிகள் பனுவல் திரட்டு என்ற பெயரில் திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், 79, பிரகாசம் சாலை, சென்னை வெளியிட்டுள்ளது. இது பழைய முகவரி. ஆனால் இப்போது தி.நகரில் இயங்குகிறது. திருநெல்வேலியிலும் கிடைக்கும். அழகான நூல். வாங்கலாம். பக்கங்கள் 450 சுவாமிகளின் அற்புத வரலாறும் இதில் உள்ளது.
    நன்றி (from S Nagarajan)

  3. thambippillai krishnapahavan

     /  December 7, 2017

    I FIND THAT VALUABLE MESSAGE HERE.VAALKA VALAMUDAN.I LIKE TO CONTACT WITH MR.NAGARAJAN.SHALL I HAVE HIS EMAIL ADDRESS.THANK YOU,DR.T.KRISHNAPAHAVAN,KRISHNA SIDDHA AYURVEDA VAIDYASALAI,CROSS ROAD,NEERVELY NORTH,NEERVELY,SRILANKA.MOBILE-0094779723369.

  4. thanks.You may always contact me at any time. my email id:snagarajans@gmail.com

Leave a comment