புராணங்களின் காலம் என்ன?

puranas (1)

வேத, இதிஹாச புராணங்களைப் படித்த வெள்ளைகாரர்கள் அவைகளுக்கு மனம் போன போக்கில் காலத்தை நிர்ணயித்துவிட்டனர். வெள்ளைக் காரர்கள் ஆட்சியில் இருந்ததால் அப்போதைய இந்து அறிஞர்களும் அவர்களைப் பின்பற்றி எழுதத்துவங்கினர். பர்ஜிட்டர் என்பவர் மட்டும் இதில் வரலாறு இருக்கிறது என்று எண்ணி 1913ல் ஒரு புத்தகம் எழுதினார். அதற்குப் பின் புராணங்களில் வரலாறு, பூகோளம், தத்துவம், கதைகள் எனப் பல நூல்கள் வெளியானபோதும் இன்னும் சரியான ஆராய்ச்சி நடைபெற்ற திருப்தி ஏற்படவில்லை. இதற்குக் காரணம் 18 புராணங்கள் சுமார் நாலு லட்சம் ஸ்லோகங்களைக் கொண்டவை. எட்டு லட்சம் வரிகள்—40 லட்சம் சொற்களைக் கொண்டவை! உலகில் இந்து மத நூல்கள் அளவுக்கு எந்த மதத்திலும் நூல்கள் இல்லை. தமிழ், வடமொழி சமய நூல்களைக் கணக்கில் எடுத்துக் கொண்டால் மற்ற மதங்கள் கொசு, இந்துமதம் இமய மலை!

 

கிரேக்கர்கள் புத்தகம் எழுதத் துவங்குவதற்கு முன்னர் இந்துமதத்தில் பிரம்மாண்டமான அளவுக்கு வேதங்கள், பிராமணங்கள், உபநிஷத்துகள் வந்துவிட்டன. இதிஹாசங்களான ராமாயண, மஹாபாரதமும் 18 புராணங்களும் இதற்குப் பின் வந்தவை என்பது ஆராய்ச்சியாளரின் துணிபு. உண்மையில் புராணக் கதைகள் எல்லாவற்றுக்கும் முந்தையவை. அவைகளைக் கடைசியாக எழுத்தில் வடித்த காலச் சான்றுகளைக் கொண்டு அவைகளுக்கு தவறாகக் காலம் கணிக்கப்பட்டுள்ளது.

 

உபநிஷத்துக்களில் பழையது பிருஹத் ஆரண்யக உபநிஷத். அதில் கூட இதிஹாச புராணக் குறிப்புகள் இருக்கிறது:

அஸ்ய மஹதோ பூதஸ்ய நிச்வசித்

மேதத் ருக்வேதோ யஜூர்வேதஸ்ஸாம

வேத சுதர்வாங்கிரச இதிஹாச

புராணம் வித்யா உபநிஷத் —என்று

பிருஹதாரண்யம் கூறுகிறது. இதை 2800 ஆண்டுகளுக்கு முந்தையது என்று எல்லோரும் ஒப்புக்கொள்கின்றனர்.

பொருள்: இருக்கு, யஜூர், சாமம், அதர்வணம், இதிஹாசம், புராணம், வித்தை, உபநிடதம் முதலியவை பரம்பொருளின் சுவாசம்.

puranas

 

இந்த ஒருகுறிப்பு மட்டுமல்ல. இதுபோல வேத இதிஹாசங்களில் பல குறிப்புகள் வருகின்றன.

புராணம் என்றால் பழைய கதைகள் என்று பொருள். அதாவது ‘’புரா அபி நவம்’’ என்று வடமொழியில் விளக்கம் தருவர். பழையது ஆனால் என்றும் புதியது. மாணிக்கவாசகர் சிவபெருமானைப் பாடுகையில் முன்னைப் பழமைக்கும் பழமையாய், பின்னைப் புதுமைக்கும் புதுமையாய்’ என்று புகழ்வார். அது புராணத்துக்கும் பொருந்தும்

 

புராணம் என்பது பூதக் கண்ணாடி

‘’புராணம் என்பது வேதத்துக்கு பூதக் கண்ணாடி. வேதத்தில் உள்ளது உத்திரவுகளாக இருக்கும்—ஸத்யம் வட=உண்மை பேசு என்று வேதம் சொல்லுகிறது அது நமக்கு நினைவுக்கு வராது. பல அத்தியாயங்களாகச் செய்யப்பட்ட அரிச்சந்திர புராணததை வாசித்தாதான் அது நினைவுக்கு வருகிறது. வாஸ்தவமான சரித்திரம் தான் புராணம். வேதம் கட்டளை இடுகிறது. அது பிரபு சம்மிதம். புராணம் சுஹ்ருத் சம்மிதம். நண்பனைப் போன்றது. காவியங்கள் காந்த சம்மிதம்.கற்பனை என்னும் காவிய ரசத்துடன் சேர்ந்தது’’—- காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் 24-101932 சென்னை உபந்யாசம்

புராணங்களில் ஐந்து பகுதிகள் இருக்கவேண்டும் என்பது மரபு:

1.சர்கம்: பிரபஞ்சத்தின் தோற்றம்

2.பிரதி சர்கம்: மற்ற உயிர்களின் தோற்றமும் மறைவும்

3.வம்சம்: ரிஷிகள், தேவர்களின் சரிதம்

4.மன்வந்தரம்: 14 மனுக்களின் காலம்

5.வம்சானுசரிதம்: சூரிய, சந்திர குல அரசர்களின் வரலாறு

 

புராணங்கள் சுகர், பராசரர் முதலியோரால் கூறப்பட்டவை. மஹாபாரத்தில் எல்லாக் கதைகளும் சுருக்கமாக உள்ளன. ஆகவே புராணம் என்பது மிகப் பழையது. அதில் பல ராஜ வம்சங்கள் போகப்போக சேர்க்கப்பட்டன. இதனால் அவைகளின் காலம் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டன.

 

பழையகாலத்தில் ஒவ்வொரு குழுக்களும் வாழ்ந்த இடம் அவர்கள் பெயரால் அழைக்கப்பட்டன. இதுவும் வெள்ளைக்காரர் ம்மனதில் குழப்பத்தை விளைவித்தது. காம்போஜ இனம் வாழ்ந்த இடம் காம்போஜம் என்று அழைக்கப்படது. ஆனால் காலப்போக்கில் யவனர்கள், ஹூணர்கள், சகரர்கள், காம்போஜர்கள் இடம் பெயர்ந்தவுடன் அவர்கள் நாடுகளும் ‘’நகரத்துவங்கின’’.

 

காஞ்சி பராமாசார்ய சுவாமிகள் கூறியதுபோல இதில் நல்ல ஆராய்ச்சிசெய்து உண்மை வரலாற்றை அறிவது நமது கடமை. புராண, ஸ்தல புராண ஆராய்ச்சிக கழகத்தை நிறுவி விரிவான ஆய்வு செய்வது உடனடித் தேவை.

Pictures are taken from other sites;thanks

Leave a comment

1 Comment

  1. Ahilesh Yadav's avatar

    Pretty interesting information you have here, thank you for sharing the information. I gain little bit knowledge about that.

Leave a comment