US President Obama bowing to Japanese Emperor.
எழுதியவர்- லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்:-873 தேதி:- 28 பிப்ரவரி 2014
ஆதி சங்கரரின் வினா- விடை ஸ்லோகம் (பிரஸ்ன உத்தர ரத்ன மாலிகா) அற்புதமான கருத்துக்களை சுருங்கச் சொல்லி விளங்க வைக்கிறது. 67 ஸ்லோகங்களில் எதைப் படித்தாலும் அது திருக்குறளிலும் இருப்பதைக் கண்டு அகம் மகிழ்கிறது, உளம் குளிர்கிறது.
இதோ 200 கேள்விகளில் ஒன்று:
கேள்வி:- யார் முன்னேறுவார்?
பதில்:- அடக்கம் உடையோர்
கேள்வி:- யார் தேய்ந்து போவார்?
பதில்: அகந்தை உடையோர்.
இதை லண்டனில் உள்ள எனது இனிய நண்பர் மீனாட்சிசுந்தரம் ராஜகோபாலன் அழகாகக் கவிதை வடிவில் (67 பாடல்களையும்!) தருகிறார். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். இதோ:
“பவ வாழ்வில் உயர்வென்னும் பலன் அடைவார் யாரே?
பணிவு என்ற அணி கொண்ட பண்புடையார் தாமே!
அவமானப்பட்டு அழிவார்கள் யாவர்?
அகம்பாவத் திமிராலே அழிவாரே ஆவர்!
எவராலும் நம்பியே ஏற்கமுடியாதோர்?
எந்நாளும் பொய் கூறி ஏய்க்குமவராவார்” (பாடல் 46)
சம்ஸ்கிருதத்திலும் இதைக் காண்போம்:
கோ வர்த்ததே விநீத: கோ வா ஹீயதே யோத்ருப்த:
கோ ந ப்ரத்யேதவ்யோ ப்ரூதே யஸ்சான்ருதம் ஸஸவத்.
Prime Minister Manmohan Sing bowing to a Hindu Swamiji.
இரண்டு கதைகள்
யாருக்காவது சம்ஸ்கிருதத்தில் உள்ள கீதை, வேதம், உபநிஷத்துக்களைப் படிக்க முடியவில்லையே என்ற வருத்தம் இருந்தால் அவர்கள் ராமகிருஷ்ண உபதேச மஞ்சரியைப் படித்தால் போதும். கதைகள், உவமைகள் மூலம் அத்தனையும் சொல்லிக் கொடுத்து விடுவார்!. இதோ அவர் சொல்லும் கதை:
“ஒரு சீடனுக்கு அவனுடைய குரு மீது அபார பக்தி.. அவர் கூப்பிட்ட உடனே, இருவருக்கும் இடையில் இருந்த நதியைக் கடக்கவேண்டி இருந்தது. குருவின் பெயரைச் சொல்லிக் கொண்டே தண்ணீரில் நடந்து வந்து குருவை நமஸ்கரித்தார். குருவுக்கு அகந்தை வந்து விட்டது. என் பெயருக்கே இவ்வளவு சக்தி இருந்தால் அதைத் தரித்து இருக்கும் எனக்கு எவ்வளவு சக்தி இருக்கும் என்று எண்ணீனார். அவரது சக்தியைச் சோதித்துப் பார்க்க மறு நாள் நதியில் இறங்கினார். “நான், நான், நான்”– எவ்வளவு சக்தி உடையவன் என்று எண்ணிய மாத்திரத்தில் அவர் நதிக்கடியில் போய்ச்சேர்ந்தார். பாவம் நீந்தக் கூடத் தெரியாது!
நம்பிக்கை மகத்தான அற்புதங்களைச் சாதிக்கும். அகந்தை மனிதனை அழித்து விடும்”.
அவர் சொன்ன இன்னொரு கதை:
“சில புத்தகங்களைப் படித்து விட்டவுடனே சிலருக்கு அஹம்காரம் (யான், எனது என்னும் செருக்கு) தலைக்கு ஏறி விடுகிறது. ஒரு நாள் நான் காளிகிருஷ்ண தாகூருடன் கடவுள் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தேன். உடனே அவர் சொன்னார், “ அதான், எனக்குத் தெரியுமே” என்று. நான் உடனே அவரிடம் சொன்னேன்: டில்லிக்குப் போய்விட்டு வந்தவன் அதைப் பற்றித் தம்பட்டம் அடித்துக் கொள்வானா? ஒரு நல்ல கனவான் நான் தான் பெரிய கனவான் – என்று கூறிக் கொள்கிறாரா?
“கடவுளே! ஒருவனுக்கு அகந்தை வந்து விட்டால் தலைக் கிறுக்கு வந்து விடுகிறது! அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான் அன்றோ! தட்சிணேஸ்வரத்தில் கோவில் தோட்டத்தைக் கூட்டிச் சுத்தம் செய்யும் ஒரு பெண்மணி இருந்தார். அவளுக்கு கொஞ்சம் நகைகள் கிடைத்துவிட்டன. அவ்வளவுதான்! தலை–கால் புரியவில்லை! ஒரு நாள் தோட்டத்தில் சிலர் அந்தப் பெண்மணியைக் கடந்து போய்க் கொண்டு இருந்தார்கள். இந்தப் பெண் அவர்களிடம் வலியப் போய், : ஏய்! கண் தெரியவில்லையா? விலகிப் போங்கடா— என்றாள். தோட்டத்தைக் கூட்டிப் பெருக்கும் பெண்ணுக்கே இவ்வளவு திமிர் என்றால் மற்றவர்களைப் பற்றி என்ன சொல்வது?”
(ஆதாரம் ஸ்ரீ ராமகிருஷ்ணர் சொன்ன கதைகள். ஆங்கிலப் புத்தகம்).
ஸ்ரீ ராமகிருஷ்ணரின் உபதேசங்கள் எல்லா மொழிகளிலும் கிடைக்கும். சென்னை மயிலாப்பூரில் உள்ள ராமகிருஷ்ண மடம் எல்லா புத்தகங்களையும் வெளியிட்டுள்ளது.
BJP leader Nithin Gadkri bowing to Yoga Guru Baba Ramdev.
தமிழ்ப் புலவன்– தெய்வப் புலவன்– வள்ளுவன் செப்புவதும் அஃதே:
அடக்கம் அமரருள் உய்க்கும்; அடங்காமை
ஆர் இருள் உய்த்து விடும் —121
மற்றொரு குறளில்
எல்லார்க்கும் நன்றாம் பணிதல்; அவர் உள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து –125
பொருள்: அடக்கம் உடையோர் தேவர். அடங்காதோர் வாழ்வது இருள் சூழ்ந்த நரக வாழ்வு. எல்லோருக்கும் அடக்கம்/ பணிவு தேவை. இது பணக்காரன் இடம் இருந்தால் அவனுக்கு அது மேலும் ஒரு செல்வம் போலத் திகழும்!
இது மட்டுமா? நன்றாக நாக்கை அடக்குங்கள் என்று எச்சரிக்கவும் செய்கிறார்: ஆமை போல் ஐந்து புலன்களையும் அடக்குங்கள்; யா காவாராயினும் நா காக்க= அட! அட்லீஸ்ட் நாக்கையாவது அடக்குங்களேன். ஏன் என்றால் தீயினால் சுட்ட புண் உள் ஆறும், நாவினால் சுட்டதோ வடுப் போல் என்றும் இருக்கும் என்றும் பகர்வார்.
பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணி அல்ல மற்றுப் பிற—95
பணிவுன் இனிய சொல்லற்றலும் ஒருவனுக்கு இருந்து விட்டால் அவனுக்கு வேறு எந்த அணிகலன்களும் தேவையே இல்லை!
கிருஷ்ண பரமாத்மாவும் பகவத் கீதை 16:1 முதல் 3 ஸ்லோகங்களில் 26 தெய்வீக குணஙகளைப் பட்டியல் இடுகிறார். அதில் புறக்கரணங்களை அடக்குதல் (தம:), பணிவு (ஹ்ரீ:/ நாணம்) ஆகிய இரண்டையும் சேர்த்துள்ளார்.
Ex President of India Abdul Kalam and Sri Sathya Sai Baba.
தமிழ் இலக்கியத்தில் தலை சாய்ந்த நெற்கதிர்களைப் பணிவுக்கு உவமையாக்குவர் புலவர் பெருமக்கள். கதிர்கள் கனம் தாங்காமல் அவைகள் மணப் பெண் போல தலை குனிந்து பணிவுடன் நிற்கும். நற்குடியில் பிறந்த கற்றோரும், செல்வந்தரும் இது போல அடக்கத்துடன் செயல்படுவராம்.
Contact: swami_48@yahoo.com
You must be logged in to post a comment.