
Post No. 11,801
Date uploaded in London – – 13 MARCH 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx

காஞ்சி காமாட்சி கோவிலை அறியாதோர் எவர்? காஞ்சி காமகோடி மடத்தினால் கோவிலுக்குப் பெருமை; அதே போல கோவிலால் மடத்திற்குப் பெருமை. மஹா சுவாமிகள் படங்கள், பெரும்பாலும் காமாட்சி யுடன் காணப்படுவதும் இதை மெய்ப்பிக்கும்.
காமாட்சியின் பெருமையை அனைவரும் அறிவர். ஆயினும் அந்தக் கோவிலின் கர்ப்பக்கிரகத்தில் – கருவறையில் — ஒரு திவ்ய தேசம் இருப்பது பலருக்கும் தெரியாது. பல புராதன கோவில்களில் பெருமாளும் சிவ பெருமானும் அருகருகே அமர்ந்திருப்பது 2000 ஆண்டுகளுக்கு முன்னர் நிலவிய சைவ- வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக் காட்டாகத் திகழ்கிறது ; அரியும் சிவனும் ஒன்னு அறியாதவன் வாயில் மண்ணு என்பது சிறுவர் வாயிலும் முழங்கிய காலம் அது. பின்னர் பக்தி இயக்கம் வளர வளர , இரு பிரிவினரிடையே போட்டா போட்டி, காட்டா குஸ்தி ஏற்பட்டது.
முதலில் கோவிலுக்குள் புகுவோம்.
சாதாரணமாக, பக்தர்களைக் கருவறையுள்ள மண்டபத்துக்கு வெளியே செல்லுமாறு க்யூ Q வரிசை இருக்கும். விசேஷ பூஜைக்குப் பணம் கட்டியோரும், பட்டர்களின் , கோவில் அதிகாரிகளின் அன்பிறகுப் பாத்திரமானோரும் மட்டும் மிக அருகில் செல்லலாம். அப்படிச் செல்லுகையில் மட்டுமே 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான திருக்கள்வனூர் பெருமாளைத் தரிசிக்கலாம். திரு மங்கை ஆழ்வார் ஒருவரால் மட்டுமே மங்களா சாஸனம் செய்யப்பட பெருமாள்.
காமாக்ஷி அம்மன் கோயிலுக்குள், அம்மன் கர்ப்பக்ரஹத்துக்கு வலப்பக்கத்தில் திருக்கள்வனூர் பெருமாள் நின்ற திருக் கோலத்தில் காட்சி தருகிறார்.
மூலவர்- கள்வர், நின்ற திருக்கோலம்; மேற்கே பார்த்த பெருமாள்
தாயார்- அஞ்சிலை வல்லி ; தீர்த்தம் நித்ய புஷ்கரணி (இரண்டும் இப்போது இல்லை)
லிப்கோ LIFCO நூலில் கண்ட விஷயம் இதோ:
ஒரு காலத்தில் சிவ பெருமானுக்கும் பார்வதிக்கும் தர்க்கம் ஏற்பட,
சிவ பெருமான் கோபமடைந்து பார்வதியைச் சபிக்க,
பார்வதி சிவனடிபணிந்து க்ஷமிக்க வேண்ட,
சிவன் ஆக்ஞைப்படி, ஒரு காலால் நின்று வாமனரை நோக்கித் தவம் செய்து ,காமாக்ஷி என்ற பெயர் பெற்று , சிவனை மணந்ததாக ஐதீகம்.
ஸ்ரீமன் நாராயணன் , காம கோஷ்டத்தில் பஞ்ச தீர்த்தக் கரையில் ,
லக்ஷ்மி , பார்வதியுடன் பேசுவதை ஒட்டுக்கேட்டபடியால் ,
பெருமாளுக்கு பார்வதி கள்வன் என்று பெயர் சூட்டினாள் .
பார்வதியின் பிரார்த்தனைக்கு இணங்க , பகவான் பூதத்தின் மேல் நின்று,
பின்னர் இருந்து, மறுபடி கிடந்தபடியால்,
நின்றான், இருந்தான், கிடந்தான் என்ற சந்நிதிகள் ஏற்பட்டன.
குறிப்பு :
திரு நெடுந்தாண்டகத்தில் காரகத்தாய் கார் வானத்துத்ளாய் கள்வா என்று குறிப்பிட்டுள்ளதைத் தவிர இந்த தலத்தைப் பற்றி ஒரு தகவலும் இல்லை.
ஸ்ரீ காமாக்ஷி அம்மன் திருக்குளத்தின் வடகிழக்கு மூலையில் ஒரு சந்நிதியில் மூன்று அடுக்குகளில் நின்றான், இருந்தான், கிடந்தான் என்று மூன்று திருக்கோலங்கள் உள்ளன இதற்கும் மங்களா சாஸனத்துக்கும் உள்ள தொடர்பு ஆராய்ச்சிக்குரியது.

என் கருத்து
பல்லவர்களின் தலை நகரமாவதற்கு முன்னரே காஞ்சி புகப்பெற்ற ஊராகத் திகழ்ந்தது; சங்க இலக்கியத்திலும் இடப்பெற்றது. காமக்கண்ணியார் என்ற சங்க கால பெண் புலவரின் பெயர் காமாக்ஷி என்பதை தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத ஐயரும் , காஞ்சி மஹா சுவாமிகளும் நமக்குத் தெரிவித்துள்ளனர்.
காஞ்சி மஹா நகரம் நூற்றுக்கும் மேலான கோவில்களை உடைத்து . பல மன்னர்களின் படை எடுப்புகளில் இந்த நகரம் சின்னாபின்னம் அடைந்தது ஆகையால் பல உருவங்கள், சிலைகள் இடம்பெயர்ந்தும் அழிந்தும் போயின. நம் காலத்தில் நடக்கும் கும்பாபிஷேகம், திருப்பணிகளின் பொழு து எத்தனை ஓவியங்கள், கல்வெட்டுகள் அழிந்தன, அழிக்கப்பட்டன என்பதை நாம் பத்திரிகைகளில் படித்தவண்ணம் இருக்கிறோம். ஆகையால் இது திவ்ய தேசம் என்பதில் ஐயம் இல்லை ; காலப்போக்கில் பல மாறுதல்கள் நடந்தன என்பதை நாம் ஊகிக்கமுடிகிறது.
திருமங்கை ஆழ்வார் பாசுரம் 2059
அவரது காலத்திலேயே இந்த வைணவ தலம் புகழ் இழந்து இருக்கவேண்டும். ஆழ்வார்களில் காலத்தால் பிந்திய ஆழ்வார்களில் அவரும் ஒருவர்
Xxxxx

கோவிலுக்குள் மேலும் ஒரு அதிசயம்!
காமாட்சி கோவில் கர்ப்பக்கிரகத்தில் அரூபலட்சுமி
காமாட்சி சந்நிதி 24 தூண்கள் உள்ள காயத்ரீ மண்டபத்தில் அமைந்துள்ளதையும் காயத்ரீ மந்திரம் 24 அக்ஷரங்களால் அமைக்கப்பட்டுள்ளதையும் அனைவரும் அறிவர். கருவறையின் வலது புறத்தில் கள்வர் என்ற பெயரில் திருமால்/விஷ்ணு இருப்பதை அறிந்தோம்.அதேபோல காயத்ரீ மண்டபத்தின் இடது புறத்தில் அரூப லெட்சுமி சந்நிதி இருக்கிறது.
இங்கு வினோதமான ஒரு நடைமுறை பின்பற்றப்படுகிறது.அங்கு அம்பாள் பிரசாதமான குங்குமம் இருக்கும். அதைக் கீழேயிருந்து எடுத்து மேலிருந்து கீழாகத் தடவ வேண்டும் .
ஏன் ? என்று எல்லோரும் கேட்பார்கள்.
மஹா விஷ்ணுவின் சாபத்தால் உருவமிழந்த லெட்சுமி தேவி , காமாட்சியைப் பிரார்த்தித்து , உருவம் பெற்றாளாம் . அதாவது காமாட்சியின் குங்குமத்தை லெட்சுமியின் மீது தடவும்போது அவள் உருவம் பெறுவாள் என்று காமாட்சி அனுக்கிரஹித்தாள் . அதை இன்றும் எல்லோரும் பின்பற்றுகிறோம்.
நாங்களும், எங்களை அழைத்துச் சென்ற பட்டர் சொன்னபடி குங்குமத்தைத் தடவி நெற்றியில் பிரசாதமாக இட்டுக்கொண்டோம்.
Xxxx

காமாட்சி அம்மன் கோவிலுக்குப் பல முறை சென்றுள்ளதால் முன்னரே கோவிலின் மஹிமையை எழுதிவிட்டேன். கண்டு மகிழ்க!!
–subham—
Tags– திருக்கள்வர் கோவில், காஞ்சீபுரம், திவ்யதேசம், அரூப லெட்சுமி, காமாட்சி சந்நிதி