
Post No. 11,942
Date uploaded in London – – 27 APRIL 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
தஞ்சாவூர் பிராமண பாஷையில் மாளயம் என்றால் மஹாளயம் என்று பொருள்; மாமாங்கம் என்றால் மகா மகம் என்று அர்த்தம் .
அது என்ன மஹாளயம்?
புரட்டாசி மாதத்தில் அமாவாசைக்கு முன்னால் வரும் 14 நாட்களும் மாளயம் என்று சொல்லப்படும். சிலர் கணக்கில் இதை ஆஸ்வீன மாதம் (ஐப்பசி) என்றும் கணக்கிடுவர்.
புரட்டாசி (பாத்ரபத) மாதத்தில் பிரதமை முதல் அமாவாசை வரையுள்ள 15 நாட்களும் இந்துக்களுக்கு மிகவும் முக்கியமானவை . இறந்த மூதாதையருக்கு பிராமணர்கள், குறைந்தது 96 முறை எள்ளும் நீரும் இறைக்க (தர்ப்பணம்) வேண்டும் என்பது விதி. இதில் கடைசி மந்திரம் யார் யாருக்கு நண்பர்கள் சொந்தக்காரர்கள் இல்லையோ அவர்களுக்காகவும் என்று சொல்லி கூர்ச்சம் வழியாக நீர் விடுவார்கள். சொந்த பந்தமில்லாத மஹாபாரத மஹான் பீஷ்ம பிதாமஹருக்கும் கூட இப்படித் தர்ப்பணம் செய்வர் . உலகில் இப்படி மூதாதையரை நினைக்கும் கலாசாரம் வேறு எங்கும் இல்லை. இந்துக்கள் இந்த நாட்டிலேயே பிறந்து இங்கு வளர்ந்து உலகம் முழுதும் கலாசாரத்தைப் பரப்பினர் என்பதற்கு இது மிகப்பெரிய சான்று.
அதுமட்டுமல்ல மாக்ஸ்முல்லர் குமேபல், கால்டு வெல் கும்பல்களுக்குச் செமை அடி கொடுப்பதும் இந்த தர்ப்பண சடங்குதான். ஏனெனில் இந்துக்கள் பிறப்பு முதல் இறப்பு வரை தண்ணீர் இல்லாமல் எந்தச் சடங்கையும் செய்யமாட்டார்கள். அது மட்டுமல்ல இந்தியாவில் தோன்றிய எள் , அரிசி ஆகிய இரண்டையும் பயன்படுத்து வதிலிருந்தும் இவர்கள் மண்ணின் மைந்தர்கள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல தெள்ளத் தெளிவாகத் தெரிந்துவிடும் . பிராமணர்களாகப் பிறந்து விட்டாலோ ஒரு நாளைக்கு 3 முறை, வழிபாட்டுக்கு நீர் வேண்டும். உலகில் தண்ணீர், தாவரம் இரண்டின் மஹிமையை உணர்ந்தோர் இந்துக்கள்.
பிராமண ஜாதியில் பிறவாதோறும் ஆடி, தை அமாவாசைகள் , மஹாளய அமாவாசைகளை விட்டுக் கொடுக்காமல் ஆறு, குளம் , கடல் கரைகளுக்குச் சென்று பிராமணர் உதவியுடன் நீர்க்கடன் (தர்ப்பணம்) செய்வார்கள். இது இந்து சமுதாயம் ஒன்றே என்பதைக் காட்டி நிற்கும்.
xxxx
மாளயத்தின் சிறப்பு என்ன?
எம தர்மனின் கட்டுப்பாட்டிலுள்ள லோகங்களில் வசிக்கும், நம்முடைய மூதாதையர்களுக்கு ஆண்டில் 15 நாள் விடுமுறை (15 day holiday in the Abode of Yama) அப்போது அந்த ஆவிகள் அனைத்தும் பூலோகத்துக்கு வந்து அவரவர் உறவினர் வீட்டில் காத்துக்கொண்டிருக்கும். அப்போது தர்ப்பணம் என்னும் எளிய கடனைச் செய்தால் அவர்களுக்கு பரம திருப்தி ஏற்பட்டு , ஆசீர்வாதம் செய்த்துவிட்டுப் போவார்கள்.
பலர் சிராத்தமும் (திதி) செய்வார்கள். சிராத்த என்பது சிரத்தை/ நம்பிக்கை என்பதிலிருந்து வந்தது. 15 நாட்களும் செய்ய முடியாதோரும் அவர் தந்தை, இறந்த திதியில் சிராத்தம் செய்வார். அதாவது ஒருவரின் தந்தை ஏதோ ஒரு ஆண்டு, ஏதோ ஒருமாதத்தில் அஷ்டமி திதியில் (எட்டாம் நாள்) இறந்தார் என்று வைத்துக்கொண்டால் மாளயத்தில் வரும் அஷ்டமி அன்றாவது திதி கொடுக்க வேண்டும் என்பது விதி.
ஸம்ஸ்க்ருத்தில் உள்ள ஒரு ஸ்லோகம் சொல்கிறது :
மாளயத்தில் எவன் ஒருவன் இவ்வாறு ஒரு நாள் சிராத்தம் கொடுக்கிறானோ அவன் ஆண்டு முழுதும் கயாவில் திதி கொடுத்ததற்கு சமம் என்கிறது.
தற்கால பாஷையில் சொல்ல வேண்டுமானால் Buy One; Get 364 Free பை ஒன் , கெட் 364 ப் ஃரீ !!
xxx
அது என்ன கயா?
கயா என்னும் நகரம் பீஹார் மாநிலத்தில் உள்ளது.. அங்குள்ள பல்கு நதி இறுதியில் கங்கை நதியில் கலக்கிறது. அதில் ஒரு முறையாவது இந்துக்கள் சிராத்தம் செய்வது, அவர்களுடைய கடமை என்று புராணங்கள் செப்பும் . எல்லோராலும் கயா செல்ல முடியாது. அவர்களுக்கு மாளயம் கை கொடுத்து உதவும்.
மாளயத்தின் 15 நாட்களிலும் விரதம் அனுஷ்டிப்போர் வெளியே ஹோட்டல் முதலியவற்றில் சாப்பிடமாட்டார்கள். வெங்காயம், பூண்டு முதலிய உணவுப் பொருட்களைத் தவிர்ப்பார்கள்.
xxx
பெண்களுக்கு ஒரு சிறப்பிடம்
மாளயம் என்னும் காலத்தில் பிரதமை முதல் அமாவசை வரை 15 நாட்கள் உண்டல்லவா ? இதில் ஒன்பதாவது (நவமி) நாளை பெண்களுக்காக ஒதுக்கிவைத்து இருக்கிறார்கள்.அதாவது இறந்து போன பெண்களுக்கு அன்று மரியாதை செய்வார்கள். மனைவியை இழந்த கணவன்மார்கள் அன்று மனைவிக்காக கடன் செலுத்துவார். இந்த நாளுக்கு அவிதவா நவமி என்று பெயர். அன்று ஒரு சுமங்களிப் பெண்ணை அழைத்து சகல உபசாரங்களையும் செய்து புடவை முதலியன கொடுத்து, ஆண்கள் சாப்பிடும் முன்னால் , அவருக்கு விருந்து படைப்பார்கள்.
இதற்கு மற்றும் ஒரு பெயரும் உண்டு. மாத்ரி நவமி (தாயாருக்கான ஒன்பதாம் நாள்). அன்று தாயாரை இறந்தோர் திதி கொடுப்பர். ஆக, பெண்கள் எந்த நாளில் இறந்திருந்தாலும் அவர்களுக்கு என்று ஒரு சிறப்பு மரியாதை . உலகில் இந்துக்கள் அளவுக்கு வேறு எந்த இனமும் பெண்களுக்கு மரியாதையை செய்வதில்லை. பிறந்த குழந்தையை மனையில் அமர்த்தி கன்யா பூஜை செய்வது முதல், கல்யாண மந்திரத்தல் நீயே வீட்டின் மகாராணி என்று புகழ்வதோடு, இறந்த பின்னாலும் தனி மரியாதை..
மனு ஸ்ம்ருதியோ மூன்று ஸ்லோகங்களில் பெண்களை இமய மலை உயரத்தில் வைக்கிறது. எந்தக் குடும்பத்தில் பெண்கள் அழும் நிலைமை உண்டாகிறதோ அந்தக்குடும்பம் வேரோடு அழியும் . எங்கு பெண்கள் பூஜிக்கப்படுகிறார்களோ அங்குதான் இறைவன் இருப்பான்.
சகோதரிகளுக்கு ஆடை அணிகலன்களைக் கொடுத்து அவர்களை எப்போதும் மகிழ்ச்சிக்கடலில் மிதக்க விடுவது சகோதரர்களின் கடமை என்று சொல்லி எச்சரிக்கிறார் மனு

அதே மனு , சிராத்தம் பற்றி பயங்கர எச்ச ரிக்கை விடுகிறார். கடவுளுக்கு நீங்கள் செய்யும் பூஜை புனஸ்காரங்களில் குற்றம் குறை இருந்தால் உங்களுக்கு மன்னிப்பு உண்டு. ஆனால் முன்னோர்களுக்கு நீங்கள் கொடுக்கும் திதியில் ஒரு பிசகும் இருக்கக்கூடாது; ஆசார அனுஷ்டானங்களை பிழையின்றி செய்யவேண்டும் என்று திட்டவட்டமாகப் பேசுகிறார்.
Xxx
கட்டுரையின் இரண்டாம் பகுதியில் நாந்தி வழிபாடு, மோட்ச தீபம், ஜப்பானின் விளக்குத் திருவிழா முதலிய விஷயங்களைக் காண்போம்
To be continued………………………………….
96 முறை
tamilandvedas.com
https://tamilandvedas.com › tag › 9…
26 Oct 2014 — 12 அமாவாசை தர்ப்பணங்கள் 12 அஷ்டக தினங்கள் (மார்கழி, தை,மாசி,பங்குனி ஆகிய 4 …
திதி
tamilandvedas.com
https://tamilandvedas.com › tag › த…
28 Dec 2017 — தென்புலத்தாருக்கு 96 கும்பிடு! … 4 மாதங்களின் சப்தமி,அஷ்டமி, நவமி தினங்கள்)
அமாவாசைக்கு பெயர் வந்தது எப்படி? சூரிய- …
https://tamilandvedas.com › அம…
8 Dec 2021 — tamilandvedas.com, swamiindology.blogspot.com … சந்திரன் மற்றும் அமாவாசை , பெளர்ணமி பற்றிய …
வியட்நாமில் இந்துப் பண்டிகை மஹாளய …
Blogger
https://swamiindology.blogspot.com › …
13 Oct 2019 — … இந்துப் பண்டிகை மஹாளய அமாவாசை! … posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously.
—subham—
மஹாளய அமாவாசை, மூதாதையர் வழிபாடு , தர்ப்பண தினங்கள்