தியாகராஜருடன் 60 வினாடி பேட்டி

(கேள்விகள்: சுவாமிநாதனின் கற்பனை, பதில்கள்- மஹான் தியாகராஜரின் பாடல்களிலிருந்து)

சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைப்போம் என்று எங்கள் சுப்ரமணிய பாரதி சொன்னது உங்கள் கீர்த்தனைகளைக் கேட்டுத்தானோ!  13 வயதில் நீவீர் பாடிய முதல் பாட்டு என்ன?

நமோ நமோ  ராகவாய

சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரே, 96 கோடி தடவை  ராம நாமம் ஜபித்தீர், எழுதினீர்.  “ஓ ராம, நீ நாமமு ஏமி ருசிரா ,ஸ்ரீ ராம, நீ நாமமு எந்த ருசிரா”

என்று பத்ராசலம் ராமதாசர் பாடினார். நீங்கள் ராமனை எப்படிப் பாடினீர்கள்?

மேலு மேலு ராம நாம சுகமு ஈதரலோ

நிண்டு தாஹமு கொன்ன மனுஜுலகு நீருத்ராஹின சுகம் புகண்டே

சண்ட தாரித்ர மனுஜுலகு தன பாந்தமு அப்பின——–

( பொருள்: ராம, இந்தப் பூமியில் உன் நாமமே சுகம் தரும். தாகத்தால் தவிக்கும் மனிதனுக்கு தண்ணீர் கிடைத்ததைவிட, ஏழைக்குப் பணம் கிடைத்ததைவிட, வெப்பம் தாங்காதவனுக்கு குளிர்ந்த குளம் கிடைத்ததைவிட, பயத்தால் நடுங்குபவனுக்கு துணிவு கிடைத்ததைவிட, தீராப் பசியுடையவனுக்கு பாயசத்துடன் அறுசுவை விருந்து கிடைத்ததைவிட———– ராமா, உன் நாமமே சுகம் தரும்)

அருமையான பாட்டு. ஆழமான பொருட்சுவை. உங்களைத் திருடர்கள் தாக்கி வழிமறித்த போது ராம லெட்சுமணனே வந்து காப்பாற்றினார்கள். என்ன பாட்டு பாடியவுடன் அவர்கள் வந்தார்கள்?

முந்து வெனுக இரு பக்கல தோடை முரகர ஹர ராரா (தர்பார் ராகத்தில்)

(பொருள்: முர, கரகளை வதம் செய்தோனே, எனக்கு இருபக்கத்திலும் துணையாக வாரும் ஐயா—-)

ஒரு முறை ஒரு கிழ தம்பதியர் வந்து உம் கையில் காசையும் கொடுத்துவிட்டு ராமனும் சீதையுமாய் மறைந்தார்களே.என்ன பாடினீர்?

பவனுத நா ஹ்ருதயமுன (மோகன ராகத்தில்)

திருவாரூரில் அவதரித்த த்யாகப்ரம்மமே, உமது தந்தை ராமப்ரம்மத்தின் ராமாயண கதாகாலச்சேபத்தை கேட்டுத்தான் ராம பக்தி ஏற்பட்டிருக்க வேண்டும்.உமது குரு ராமக்ருஷ்ணானந்தா நாரத மந்திரம் உபதேசித்தார். ராமன் மட்டுமின்றி சிவன் முதலியோர் மீதும் கிருதிகள் பாடினீரா?

சிவ சிவ சிவ யனராதா,  பவ பய பாதலனண சுகோராதா (பந்துவராளி ராகம்) பொருள்: சிவ சிவ சிவ என்று சொல்லக் கூடாதா? உங்கள் பிறவி என்னும் துயரைப் போகக்கூடதா?)

உமது சங்கீத குரு வேங்கடரமணய்யா உமது கிருதிகளை வியந்து அவருடைய பதக்கங்களையே எடுத்து உம் மீது சூட்ட அதை பெருந்தன்மையுடன் அவரது மகள் கல்யாணத்தில் கொடுத்தீர்கள்.

சரபோஜி மன்னன் அழைத்தபோது போக மறுத்து “பணம் சுகம் தருமா, ராமா உன் முன்னிலையில் இருப்பது சுகமா” என்று பாடினீரே, அந்தப் பாட்டைக் கொஞ்சம்………

நிதி சால சுகமா ராமுனி சந்நிதி சேவ சுகமா (கல்யாணி ராகம்)

இதனால் உங்கள் தமையனார் கோபத்தில் நீர் பூஜித்த விக்ரகங்களை ஆற்றில் போட்டார். அதையும் கண்டுபிடித்தீர். 2000க்கும் அதிகமான கிருதிகளை எழுதினீர், 200க்கும் அதிகமான ராகங்களைப் பயன் படுத்தினீர்கள். எங்களுக்குக் கிடைத்ததோ 700 கிருதிகள்தான்.உங்கள் தமையன் செய்த அநியாயங்களை ராமனிடம் முறையிட்டீராமே!

அநியாயமு சேயகுரா ராம நன்னன்யுனிகா……..

(ராமா, எனக்கு அநீதி இழைக்காதே, என்னை வேற்று மனிதனாகப் பார்க்காதே………..என் அண்ணன் தரும் தொல்லைகள் தாங்கவில்லை.)

உங்களுக்குக் கோபம் அதிகமாமே. ஒருமுறை உங்கள் மனைவி இதைச் சுட்டிக் காட்டியவுடன் கோபத்தின் தீமையை உணர்ந்து ஒரு பாடல்…….

சாந்தமுலேக சவுக்கியமுலேது —–(சாந்த குணம் இல்லாவிடில் சௌக்கியமும் இல்லை)

நாதத்தின் தோற்றம், சப்தஸ்நரங்களின் பிறப்பு, ராகங்களின் குணம் பற்றியே 15 கிருதிகள் எழுதினீர். அவைகளில்  சில……

சோபில்லு ஸப்தஸ்வர ஸுந்தரலு பஜிம்பவே

நாபி, ஹ்ருத், கண்ட, ரசன நாச ஆதுலயந்து

சோபில்லு ஸப்தஸ்வர ஸுந்தரலு பஜிம்பவே

(பொருள்: ஏழு ஸ்வரங்கள் எனப்படும் சுந்தரர்களை வழிபடுவாய். கொப்பூழ், இதயம், தொண்டை, நாக்கு, மூக்கு ஆகியவற்றில் திகழும் சுந்தரர்களை வழிபடுவாய். ருக் சாம முதலிய வேதங்களிலும் காயத்ரி மந்திரத்திலும்,வானோர், அந்தணர் உள்ளங்களிலும், தியாகராஜனின் கீர்த்தனைகளிலும் நடமாடும் சப்தஸ்வரங்களை வழிபடு).

வெறும் வாய்ப்பாட்டு மட்டும் இறைவனிடம் அழைத்துச் செல்லுமா?

சங்கீத ஞானமு பக்தி வினா சன்மார்கமு கலதே

ப்ருங்கி, நடேச, சமீரஜ, கடஜ, மதங்க நாரத ஆதுலு உபாசிஞ்சே

சங்கீத ஞானமு பக்தி வினா சன்மார்கமு கலதே

(பொருள்: பக்தி இல்லாமல் பாடும் இசை, சன்மார்க்கத்துக்கு இட்டுச் செல்லாது. ப்ருங்கி முனிவர், நடேசன், வாயு மைந்தன், அகத்தியன், மதங்கர், நாரதர் முதலியோரால் உபாசிக்கப்பட்ட இசை ஞானம் (அவர்களைப் போல பக்தியுடன் பயிலப்பட வேண்டும்) பக்தி இலாவிடில் நல் வழிக்கு கொண்டுசெல்லாது.)

18 வயதில் பார்வதியையும் அவர் 5 ஆண்டுகளில் இறக்கவே அவர் தங்கை கமலாம்பாவையும் கல்யாணம் செய்தீர். ஒரு மகளை ஈன்றெடுத்தீர். நீங்கள் மூன்று நாடகங்கள் எழுதினீர்கள், அவை யாவை?

பிரஹலாத பக்தி விஜயம், நவ்க சரித்திரம், சீதாராம விஜயம்

புத்தூரில் கோவில் கிணற்றில் ஒருநல்ல மனிதர் தவறி விழுந்து இறந்தபோது என்ன பாட்டு பாடி அவரை உயிர்ப்பித்தீர்கள்?

நா ஜீவாதார நாநோமு பலமா

ராஜீவ லோசன ராஜராஜ சிரோமணி

நாஜீபு ப்ரகாசமா, நா நாசிகா பரிமளா

நா ஜப வர்ண ரூபமா, நாது பூஜாஸீமமா (பிலஹரி ராகம்)

(பொருள்: என் ஜீவனுக்கு ஆதாரமே, என் நோன்புகளின் பலனே, தாமரைக் கண்ணனே, ராஜ ராஜனே, என் கண்களின் ஒளியும் நீயே, மூக்கில் நறுமணமும் நீயே, என் ஜபங்களின் வடிவும் நீயே, என் பூஜை மலரும் நீயே)

திருவையாயாற்றில் சமாதி அடையும் முதல் நாளன்று பிரம்மாநந்தாவிடம்  சந்யாசம் பெற்றீர். இறுதி நாள் நெருங்கிவிட்டதை அதற்கு சில நாட்களுக்கு  முன் கனவில் கண்டு பாடிவிட்டீரே, அது என்ன பாட்டு?

கிரிபை நெல (சகானா ராகம்)

திருவையாற்றிலுள்ள உங்கள் சமாதியில் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் ஆராதனையில் பாடப்படும் (ஐந்து) பஞ்ச ரத்தின கீர்த்தனைகள் எவை?

நாட்டை ராகத்தில்- ஜகதாநந்த காரக

ஆரபி ராகத்தில் – சாதிஞ்செனே, ஓ மனசா

கௌளை ராகத்தில் – துடு குகல நன்னே தொர

வராளி ராகத்தில் – கன கன ருசிரா

ஸ்ரீ ராகத்தில் –எந்தரோ மஹானுபாவுலு அந்தரிக்கு வந்தனமுலு

கர்நாடக சங்கீத பிதாமஹர் புரந்தர தாசர் தனது பாடல்களில் புரந்தர விட்டல என்றும் சியாமா சாஸ்திரிகள் சியாம கிருஷ்ண என்றும் முத்து சுவாமி தீட்சிதர் குரு குஹ என்றும் முத்திரை வைத்து பாட்டு எட்டுக் கட்டினர். உங்கள் முத்திரை என்னவோ?

பவமான சுதுடுபட்டு, பாதார விந்தமுலகு

நீ நாம ரூபமுலகு நித்ய ஜய மங்களம்

ப்ர்ஹ்லாத நரதாதி பத்லு பொகடி ஸண்டு

ராஜீவ நயன தியாகராஜாதி வினுதனமன

(தியாகராஜரின் சுந்தரத் தெலுங்கு வாழ்க, எங்கும் மங்களம் பொங்குக)

60 second interview with Socrates

 

(Questions are Imaginary; answers are from Plato’s Dialogues and Xenophon’s writings)

Sir , Who are you?

 

“I am not an Athenian nor a Greek, but a citizen of the world.”

Socrates, you were accused by the authorities in Athens that you spoiled the youths. The second accusation against you was that you denied the established gods and introduced strange divinities. What did you say in the court?

 

“Esteemed friend, citizen of Athens, the greatest city in the world, so outstanding in both intelligence and power, aren’t you ashamed to care so much to make all the money you can, and to advance your reputation and prestige–while for truth and wisdom and the improvement of your soul you have no care or worry?”

 

Did you corrupt the youth by your teachings?

I cannot teach anybody anything. I can only make them think. To find yourself, think for yourself.

The only good is knowledge and the only evil is ignorance.

 

You are one of the greatest philosophers. The Oracle of Delphi told that you were the wisest.

Did you agree?

 

I know one thing, that I know nothing.

 

Did you learn Hindu Upanishads? Your philosophy sounds similar to our philosophy.

 

Wonder is the beginning of wisdom. Know thyself.

All men’s souls are immortal, but the souls of the righteous are immortal and divine
An honest man is always a child.
We understand that your wife was very rude to you. One day she scolded you for lecturing. When you did not stop, she poured on you a bucket full of water. Shakespeare in his play “Taming of the Shrew” mentions your wife’s rudeness. What did you say to your friends then?

 

You heard thunder and now it is raining.

 

It looks like you wouldn’t advise any youth to get married. Is it correct?

 

By all means marry; if you get good wife, you will become happy; if you get a bad one, you will become a philosopher.

 

Socrates, you had a sense of humour. Out of the 501 juries in the court only 281 supported your conviction and death sentence. What did you say about it in your three speeches?

 

“Death may be the greatest of all human blessings. To fear death, my friends, is only to think ourselves wise, without being wise: for it is to think that we know what we do not know. For anything that men can tell, death may be the greatest good that can happen to them: but they fear it as if they knew quite well that it was the greatest of evils. And what is this but that shameful ignorance of thinking that we know what we do not know?”

 

“I am surprised that only by a small majority I was convicted and sentenced to death. I knew the outcome already. My conviction was a foregone conclusion. I am old. I have to die soon. I am not scared of death.”

 

O, philosopher, you have not left us any book written by you. Whatever we know is through the writings of your friends Plato, Crito and Xenophon. What did you think about friendship?

 

Be slow to fall into friendship, but when you are in, continue firm and constant.

Socrates, you said something about the youths of your time 2500 years ago. That is what we also say today. What did you say?

 

Our youth now love luxury. They have bad manners, contempt for authority; they show disrespect for their elders and love chatter in place of exercise; they no longer rise when elders enter the room; they contradict their parents, chatter before company; gobble up their food and tyrannise their teachers.

 

Socrates, you must visit our university campus and see how my colleagues use the mobile phones. You are absolutely right. My teachers will give you a rousing welcome for this statement. What is your view on poverty and suffering?

 

“If you don’t get what you want, you suffer; if you get what you don’t want, you suffer; even when you get exactly what you want, you still suffer because you can’t hold on to it forever. Your mind is your predicament. It wants to be free of change. Free of pain, free of the obligations of life and death. But change is law and no amount of pretending will alter that reality.”

What is your advice to our people?

“Do not do to others what angers you if done to you by others.”

“Envy is the ulcer of the soul.”

“When the debate is lost, slander becomes the tool of the loser.”

“Thou should eat to live; not live to eat.”

“The secret of happiness, you see, is not found in seeking more, but in developing the capacity to enjoy less. He is richest who is content with the least, for content is the wealth of nature”.

O, You sound like our Gandhi. He also advised us to live with minimum needs. What did you say to Crito before you died?


Crito, I owe a cock to Asclepius; will you remember to pay the debt?

 

**************

 

சாக்ரடீஸுடன் 60 வினாடி பேட்டி

(கேள்விகள்-சுவாமிநாதனின் கற்பனை- பதில்கள் பிளாட்டோ நூல்களிலிருந்து)

சாக்ரடீஸ், நீரோ தத்துவ ஞானி, உமது மனைவியோ அடங்காப் பிடாரி. ஒரு முறை நீர் உரையாற்றும்போது அவள், உம்மீது வசை மாரி பொழிந்து ஒரு வாளி தண்ணீரையும் கொட்டினாளே, அப்போது என்ன சொன்னீர்?

இதுவரை இடி இடி இடித்தது. இப்போது மழை பெய்கிறது.

 

அட, பொறுமையின் இலக்கணமே ! கிரேக்க நாடு பெற்றெடுத்த தவப் புதல்வா! அப்படியானால் நங்கள் எல்லாம் கல்யாணமே கட்டக் கூடாதோ?

வாய்ப்பு கிடைத்தால் விடாதீர்கள். கல்யாணம் செய்துகொள்ளுங்கள். நல்ல மனைவி கிடைத்தால் மகிழ்ச்சியுடன் வாழுங்கள். மோசமான மனைவி கிடைத்தால் தத்துவ ஞானி ஆகிவிடுவீர்கள்.

இப்போது புரிகிறது, நீங்கள் எப்படி தத்துவ வித்தகர் ஆனீர்கள் என்று. எங்கள் உபநிடத்தில் கூறியதை நீரும் கூறினீரா?

உன்னையே நீ அறிவாய்

நல்ல வாசகம், சாக்ரடீஸ், நீவீர் வறுமையில் வாழ்ந்தீர், ஆனால் ஞானச் செல்வத்துக்குக் குறைவில்லை. இளஞர்களில் உள்ளத்தைக் கொள்ளை கொண்டீர். இதுதான் உம் மீதுள்ள பெரும்பழி.

நான் யாருக்கும் எதையும் சொல்லித்தர முடியாது. சிந்தனை செய்யத் தூண்டுவதே என் பணி. உன்னை நீ அறிய சிந்தி, நன்றாகச் சிந்தித்துப் பார்.

 

தெய்வவாக்கில் உமக்கு நம்பிக்கை அதிகம். டெல்பியில் குறி சொல்லும் தெய்வத்திடம் மிகப் பெரிய அறிவாளி யார் என்று கேட்டதற்கு உம்முடைய பெயரை அது கூறியது.அப்போது என்ன தோன்றியது?

என்னை விடச் சிறந்த அறிவாளி யாரையாவது நான் தேடிக் கண்டுபிடிப்பேன். உடனே தெய்வத்திடம் போய் ஏன் என்னைச் சொன்னாய் என்று கேட்பேன்

 

அஞ்சாத சிங்கம்,ஆனால் ஒரு ஞானி, எங்கள் ஊர் ஜனக மகாரஜா போல,

அறிவாளி யாரையாவது கண்டுபிடித்தீர்களா?

(பல அரசியல்வாதிகளையும் தத்துவ அறிஞர்களையும் பார்த்தபின்)

அவர்களை விட நான் சிறந்தவனே, தெய்வம் சொன்னது பொய்யன்று.

 

உமக்கு எப்படி இவ்வளவு துணிவு பிறந்தது?

நல்ல செயலைத் துவங்கும்போது அது நேர்மையானதா என்றுதான் பார்ப்பேன். உயிருக்கு ஆபத்து விளையுமா என்று சிந்திப்பது கோழைத் தனம்.

 

உமது புகழ்பெற்ற பொன்மொழி எங்கள் சரஸ்வதி தேவி “கற்றது கை மண் அளவு, கல்லாதது உலகளவு” என்பதைப் பிரதிபலிக்கிறதே:

எனக்கு ஒன்று தெரியும் ,அது என்னவென்றால் எனக்கு ஒன்றும் தெரியாது

I know one thing, that I know nothing.

 

ஆஹா, புரிகிறது. எங்கள் வள்ளுவரும் “ அறிதோறு, அறியாமை கண்டற்றால்” என்றுதான் சொல்வார்.படிக்கப் படிக்கத்தான், அடடா, இவ்வளவு நாள் கிணற்றுத் தவளையாக இருந்தோமே என்று நினைக்கிறோம்

கிரேக்க மக்கள் தொழுதுவந்த தெய்வங்களை நீர் புறக்கனிக்கச் சொன்னதாக உம் மீது பழி சுமத்தப் பட்டுள்ளது, இளைஞர்களை ஒழுக்கத்திலிருந்து தவறச் செய்தீர்களாமே?

புதிய தெய்வங்களை உண்டாக்கியதாகக் குற்றம் சாட்டுகிறீர்கள். மற்றொரு புறம் நான் நாத்தீகம் பேசியதாகச் சொல்கிறீர்கள். இது முரணாக இல்லையா? வெறுப்பும் பொறாமையும் தான் உங்கள் குற்றச் சாட்டுகளுக்குக் காரணம்.

 

எழுபது வயது, மூன்று பிள்ளைகளுக்கு தந்தை. நீதி மன்றத்தில் மூன்று சொற்பொழிவுகள் செய்தீர்கள்.முதல் சொற்பொழிவில் என்ன சொன்னீர்கள்?

வீண் கர்வத்தாலும், அறியாமையாலும் கஷ்டப்படும் மக்களைத் திருத்துவதே ஆண்டவன் எனக்கு இட்டிருக்கும் பணி. அறம் தவறாது நீதி நிலை நாட்டப்படவேண்டும். இதுவே என் விருப்பம். என்ன தண்டனை கொடுத்தாலும் அதை ஏற்பேன்.

 

உமக்கு மரண தண்டனை விதித்த நீதி மன்றத்தில் 501 பேர் இருந்தனர்.ஒரு கவிஞனும் தோல் வியாபாரியும் உமக்கு எதிராக நின்றனர். இவர்களில் 220 பேர் உமக்கு ஆதவளித்தபோது இரண்டாவது உரையில் என்ன சொன்னீர்?

உங்கள் தீர்ப்பு எனக்கு வியப்பளிக்கவில்லை. முன்கூட்டியே குற்றவாளி என்று முடிவுகட்டி விட்டீர்கள். ஆனால் இத்தனை குறைந்த வாக்குகள் தான் எனக்கு மரண தண்டனை அளித்தது என்பது ஆச்சரியமாக இருக்கிறது.

 

நான் குற்றமற்றவன் என்று என் மனச் சாட்சி சொல்லுகிறது எனக்கு நீங்கள் பசியும் பிணியும் ஏற்படாதவாறு மானியம் தந்திருக்க வேண்டும். ஆனால் நான் சிறையில் அடிமாடு போல வாழ விரும்பவில்லை நான் வேறு நாட்டுக்கு சென்று வசிக்கவும் விரும்பவில்லை. நான் ஒரு ஏழை, அல்லது அபராதத் தொகை கொடுத்திருப்பேன். எனக்கு பொருளை இழப்பதில் ஒரு கஷ்டமும் இல்லை.

 

மேலை நாட்டு வள்ளுவா, நீயோ வள்ளுவனுக்கும் கிட்டதட்ட ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தாய்,மூன்றாம் சொற்பொழிவு பற்றி…….

ஏதன்ஸ் நகர மக்களே! நீங்கள் எனக்கு மரண தண்டனை விதித்திருக்கிறீர்கள். இதனால் உங்களுக்கு ஒரு லாபமும் கிடைக்கப் போவதில்லை. நான் வயதானவன். இந்தத் தண்டனை இல்லாவிட்டாலும் குறுகிய காலத்துக்குள் நான் இறக்கத்தான் போகிறேன் போர்ககளத்தில் ஒரு வீரன் எப்படி நடந்துகொள்வானோ அப்படியே நீதிமன்றத்திலும் நடக்கவேண்டும். மனிதனுக்கு மரணம் ஆபத்தல்ல. அதர்மமே ஆபத்து தர்ம வழியில் நடப்பவனுக்கு இம்மையிலும் மறுமையிலும் துன்பமில்லை.

 

எனக்கு ஆதரவாக செயல்பட்டவர்களுக்கு ஒரு வேண்டுகோள், நான் எப்படி செல்வர்களையும் பிறரையும் கேள்விகள் கேட்டு துளைத்தேனோ அப்படியே நீங்களும் செய்ய வேண்டும்.அவர்கள் போக்கில் விட்டு விடாதீர்கள். காலம் அதிகரித்து விட்டது. இன்னும் கொஞ்ச காலம் நீங்கள் உயிரோடு இருப்பீர்கள். நானோ இப்போதே உங்களை விட்டுப் போகிறேன். விடை கொடுங்கள்.

 

(விஷம் கொடுத்து கொல்வதற்கு முன் சிறைச் சாலையில் நடந்தது: நம் ஊரில் கோவில் திருவிழாவுக்கு கொடி ஏற்றிய பிறகு முக்கிய காரியங்களை நிறுத்திவைப்பது போல, ஏதன்ஸ் நகர மக்கள் அருகிலுள்ள தீவின் விழாவுக்கான கப்பல் புறப்பட்டுவிட்டால் அது திரும்பும் வரை எதையும் செய்ய மாட்டார்கள். இதனால் சாக்ரடீஸின் மரண தண்டனை சிறிது தடைப்பட்டது)

நண்பர் :கெட்ட செய்தி கொண்டுவந்திருக்கிறேன்

சாக்ரடீஸ்: கப்பல் வந்து விட்டதா?

நண்பர்: நாளை வரப்போகிறது. நாளை உமது ஆயுள் முடியும்

சாக்ரடீஸ்: நண்பரே நான் தூங்குவதால் என்னை எழுப்பாமல் காத்திருந்தீர். அப்பொழுது நான் ஒரு கனவு கண்டேன்.மங்கை ஒருத்தி மங்கல உடை தரித்து என் முன் தோன்றினாள். இன்றைக்கு மூன்றாம் நாள் நீர் அழகிய சொர்க்கத்திற்கு வந்து விடுவீர் என்றாள்.

 

விஷம் அருந்தும் முன் நீர் என்ன சொன்னீர்?

உடல் நமக்கு இறைவன் தந்த சிறைச் சாலை; இதிலிருந்து நாமாகத் தப்பிவிடக்கூடாது. ஆண்டவனே நம்மை விடுதலை செய்யவேண்டும் என்று ஞானிகள் கூறுகிறார்கள்.

 

விஷ பானம் உடலில் வேலை செய்யத் துவங்கியவுடன் நீர் கடைசியாகச் நண்பரிடம் சொன்ன வார்த்தைகள்…….?

நான் ஒரு கோவிலுக்கு பலிக் கடன் செய்ய வேண்டும். அதை எனக்காக நீர் செலுத்திவிடும்.

 

(சாக்ரடீஸ் எந்த புத்தகமும் எழுதவில்லை. அவரது சீடர்கள் ,குறிப்பாக பிளாட்டோ எழுதிய நூலிலிருந்தும் சாக்ரடீஸை கிண்டல் செய்து அரிஸ்டபனீஸ் எழுதிய நாடகத்திலிருந்தும் பல விஷயங்களை அறிகிறோம்.)

அப்பருடன் 60 வினாடி பேட்டி

 

 

(கேள்விகள்-சுவாமிநாதனின் கற்பனை, பதில்கள்-அப்பர் தேவாரத்திலிருந்து)

 

வாகீசரே, கூற்றாயினவாறு விலக்ககிலீர் என்ற வரியுடன் பதிகம் பாடியவுடம் உமது தீராத சூலை நோய் திர்ந்தது. உமது  பணிதான்  என்ன?

நம் கடம்பனைப் பெற்றவள் பங்கினன்

தென் கடம்பைத் திருக்கரக் கோயிலான்

தன் கடன் அடியேனையும் தாங்குதல்

என்கடன் பணி செய்து கிடப்பதே

 ‘கொலவெறி’ யானையை உங்கள் மீது பல்லவ மன்னன் ஏவிவிட்டானே, எப்படி சமாளித்தீர்கள்?

சுண்ணவெண் சந்தனச்சாந்தும் சுடர் திங்கட் சூளாமணியும்

…………………………………………….

அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்சவருவதும் இல்லை

 

இதைப் பாடியவுடம் மத யானை உங்களை வலம் வந்து வணங்கியதை உலகமே அறியும். மனிதகுலத்துக்கு ஒரு அறைகூவல் விடுத்தீர்களோ?

மனிதர்காள் இங்கே வம்மொன்று சொல்லுகேன்

கனி தந்தால் கனி உண்ணவும் வல்லிரே

புனிதன்  பொற்கழல் ஈசன் எனும் கனி

இனிது சாலவும் ஏசற்றவர்கட்கே

 

பெற்றோர்கள் மருள்நீக்கியார் என்றும், சம்பந்தர் அப்பரே என்றும், சிவ பெருமான் நாவுக்கரசு என்றும் அழைத்தனர். கடும் விதியையும் தூக்கி எறியலாம் என்று பாடினீரா?

தண்டி குண்டோதரன் பிங்கிருடி சார்ந்த புகழ் நந்தி சங்கு கன்னன்

பண்டை உலகம் படைத்தான் தானும் பாரை அளந்தான் பல்லாண்டிசைப்ப

திண்டி வயிற்றுச் சிறுகட் பூதஞ் சில பாடச் செங்கன் விடை ஒன்றூர்வான்

கண்டியூர் கண்டியூர் என்பீராகில் கடுக நும் வினையைக் கழற்றலாமே.

 

சமணர்களின் சொற்கேட்டு மகேந்திர பல்லவ மன்னன் உம்மை சுண்ணாம்புக் காளவாயில் போட்டபோது என்ன பாடினீர்?

மாசில் வீணையும் மாலை மதியமும்

வீசு தென்றலும் வீங்கிளவேனிலும்

மூசு வண்டறை பொய்கையும் போன்றதே

ஈசன் எந்தை இணையடி நீழலே

 

அற்புதம் பல செய்த பெரியாரே, இதைப் பாடியவுடன் அந்த வெப்பம் எல்லாம் தணிந்து வெளியே வந்தீர். கல்லைக் கட்டி உம்மைக் கடலில் போட்டானே, அப்பொழுது என்ன செய்தீர்கள்?

சொற்றுணை வேதியன் சோதி வானவன்

பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்

கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்

நற்றுணை ஆவது நமச்சிவாயவே

 

திரு அங்க மாலைப் பாடலில் எல்லா உடல் உறுப்புகளையும் சொல்லி பாடல் செய்தீர். மற்றொரு பதிகத்தில் பழமொழி ஒவ்வொன்றையும் வைத்து பாடல் செய்தீர்.ஒன்று முதல் பத்து வரை உள்ள எண்களை வைத்து பாடல் செய்தீர்.நால்வரில் உம் பாட்டில்தான் அதிக தமிழ் மணம் வீசுகிறது.

 

மாதர் பிறைக் கண்ணியானை மலையான் மகளோடும் பாடிப்

போதொடு நீர் சுமந்தேத்திப் புகுவார் அவர் பின் புகுவேன்

யாதும் சுவடு படாமல் ஐயாறு அடைகின்றபோது

காதன் மடப் பிடியோடும் களிறு வருவன கண்டேன்

கண்டேன் அவர் திருப் பாதம் கண்டறியாதன கண்டேன்

 

கங்கைகொண்ட சோழபுர வெளிப் பிரகார புற நடராஜர் சிலை, உம் பாட்டில் உள்ளது போலவே சிரிக்கிறாரே!

குனித்த புருவமும் கொவ்வை செவ்வாயிற் குமிண் சிரிப்பும்

பனித்த சடையும் பவளம் போல் மேனியிற் பால் வெண்ணீறும்

இனித்தம் உடைய எடுத்த பொற்பாதமும் காணப் பெற்றால்

மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே

 

மனமே படகு, அறிவே துடுப்பு, கோபமே சரக்கு, நமது செருக்கே பாறை என்று உருவகப்படுத்தி பாடினீர்களே, அது என்ன பாட்டு?

மனம் என்னும் தோணி பற்றி மதி என்னும் கோலை ஊன்றி

சினம் என்னும் சரக்கை ஏற்றிச் செறி கடல் ஓடும்போது

மதனெனும் பாறை தாக்கி மறியும் போது அறியவொண்ணா

துனை உனும் உணர்வை நல்காய் ஒற்றியூர் உடைய கோவே.

 

மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் என்று சம்பந்தர் சொன்னார்.

துன்பமில்லாமல் வாழ முடியுமா?

 

துன்பமின்றித் துயரின்றி என்றும் நீர்

இன்பம் வேண்டில் இராப்பகல் ஏத்துமின்

என் பொன் ஈசன் இறைவன் என்று உள்குவார்க்கு

அன்பனாயிடும் ஆனைக்கால் அண்ணலே

“நாம் ஆர்க்கும் குடி அல்லோம் நமனை அஞ்சோம்

நரகத்தில் இடர்ப் படோம் நடலை இல்லோம்

ஏமாப்போம் பிணி அறியோம் பணிவோம் அல்லோம்

இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை”

 

“ஞாலம் நின் புகழே மிக வேண்டும்” என்று சிவனைப் பாடிய நீங்கள் யார் யாரை வணங்குவீர்கள்?

சங்க நிதி பதும நிதி இரண்டும் தந்து

தரணியொடு வான் ஆளத் தருவரேனும்

மங்குவார் அவர் செல்வம் மதிப்போம் அல்லோம்

மாதேவர்க் ஏகாந்தர் அல்லாராகில்

அங்கம் எல்லாம் குறைந்து அழுகு தொழு நோயராய்

ஆவுரித்து தின்று உழலும் புலையரேனும்

கங்கைவார் சடைக்கரந்தார்க்கு அன்பராகில்

அவர் கண்டீர் நாம் வணங்கும் கடவுளாரே

 

“தோன்றாத் துணைவன்” என்றும் “நினைப்பவர் மனம் கோயிலாகக்கொண்டவன்” என்றும் “ஞானப் பெரும் கடலுக்கு ஓர் நாவாய்” என்றும் சிவனை அற்புதமாக வருணித்த வள்ளலே, கோவில் கோவிலாகச் சென்று செடி கொடிகளை அகற்றி உளவாரப் பணி செய்த உத்தமரே, சிறுவயது விளையாட்டிலும், இளம் வயது காதலிலும் கழிகிறது என்று ஆதிசங்கரர் பஜ கோவிந்தத்தில் பாடியதை——-

 

பாலனாய்க் கழிந்த நாளும் பனி மலர்க் கோதை மார்தம்

மேலனாய்க் கழிந்த நாளும் மெலிவொடு மூப்பு வந்து

கோலனாய்க் கழிந்த நாளும் குறிக்கோள் இலாது கெட்டேன்

சேலுலாம் பழன வேலித் திருக்கொண்ட்டீச் சுரத்துளானே

 

புனித நீராடலால் மட்டும் பலன் இல்லையா??

கங்கை ஆடில் என் காவிரி ஆடில் என்

கொங்கு குமரித் துறை ஆடில் என்

ஓங்கு மாகடல் ஓத நீராடில் என்

எங்கும் ஈசன் எனாதவர்க்கில்லையே

 

நரியைப் பரியாக்கிய திருவிளையாடலை நீவீர் பாடியதன் மூலம் மாணிக்கவாசகர் உங்கள் மூவருக்கும் முன் வாழ்ந்தவர் என்பதைச் சொல்லாமல் சொன்னீர்கள். “சங்கரா செய போற்றி” என்ற வரிகள் மூலம் ஆதி சங்கரரும் உங்களுக்கு முந்தியவர் என்பதைக் கூறிவிட்டீர்கள். கருவுற்ற நாள் முதலாக உன் பாதமே  காண்பதற்கு உருகிற்று என் உள்ளமும் என்பதால் நீவீர் ஜீவன் முக்தர் என்பதையும் எங்களுக்குக் காட்டிவிட்டீர்கள். உங்களைப் பல கோடி முறை வணங்கி வழிபடுகிறோம்.

(மேலும் இருபது பெரியார்களுடன் 60 வினாடிப் பேட்டிகள் உள்ளன. படித்து இன்புறுக)

*************************

 

திரு ஞான சம்பந்தருடன் 60 வினாடி பேட்டி

 

Child Saint Sambandhar meets Appar the Great (Photo: The Hindu)

 

(கேள்விகள்: சுவாமிநாதனின் கற்பனை; பதில்கள்- சம்பந்தர் தேவாரத்திலிருந்து)

நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞான சம்பந்தரரே, வணக்கம். தமிழிலும் மந்திரங்கள் உண்டு என்பது உம்மால் அன்றோ உலகுக்குத் தெரிந்தது. பாண்டிய மன்னன் நோய் தீர விபூதி பூசி என்ன சொன்னீர்கள்?

 

மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு

சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு

தந்திரமாவது நீறு சமயத்தில் உள்ளது நீறு

செந்துவர் வாய் உமை பங்கன் திருவாலவாயான் திரு நீறே

 

ஐந்து வயதிலேயே தமிழ் கவிதை பாடி இந்துக்களின் ரிகார்ட் புத்தகத்தில் பதிவான குழந்தை மேதையே. உங்கள் திரு வாயால். மீண்டும்…..

 

தோடு உடைய செவியன் விடை ஏறி ஓர் தூவெண் மதி சூடிக்

காடுடைய சுடலைப் பொடி பூசி என் உள்ளம் கவர் கள்வன்

ஏடு உடைய மலரான்  உனை நாள் பணிந்து ஏத்த அருள் செய்த

பீடு உடைய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே

 

கணபதி பற்றி நீவீர் பாடிய பாடலைக் கேட்க ஆசை. அதை வேகமாகப் படித்தால் வாயில் போட்ட கடலை மிட்டாய் கூட தூள்தூள் ஆகிவிடுமோ?

 

பிடியதன் உருவுமை கொளமிகு கரியது

வடி கொடு தனதடி வழிபடும் அவர் இடர்

கடி கண பதிவர வருளினன் மிகு கொடை

வடிவினர் பயில் வலி வலமுறை இறையே

 

சம்பந்தன் தன்னைப் பாடினான், சுந்தரன் பெண்ணைப் பாடினான், அப்பர் என்னைப் பாடினான் என்று சிவனே சொன்னாராமே?

 

ஒரு நெறிய மனம் வைத்து உணர் ஞான சம்பந்தன் உரை செய்த

திரு நெறிய தமிழ் வல்லவர் தொல்வினை தீர்தல் எளிதாமே

 

அற்புதம், உம்மை முருகனின் மறு அவதாரம் என்று அருணகிரியே திருப்புகழ் பாடியது உமது திரு நெறிய தமிழால் அன்றோ!  உமது பாடல் படிக்கப் படிக்க எதுகை மோனையுடன் வருமே, அது என்ன பாட்டு?

 

உண்ணா முலை உமையாளொடும் உடனாகிய ஒருவன்

பெண்ணாகிய பெருமான் மலை திருமாமணி திகழ

மண்ணார்ந்தன அருவித் திரள் மழலைம் முழவதிரும்

அண்ணாமலை தொழுவார் வினை வழுவா வண்ணம் அறுமே

 

வயதில் மூத்த அப்பர் பெருமான் எச்சரித்தும் தைரியமாக மதுரை சென்று ஆபத்துக்களைச் சந்திthதீரே, இது அசட்டுத் தைரியம் இல்லையா?

 

வேயுறு தோளி பங்கன் விடம் உண்ட கண்டன் மிக நல்ல வீணை தடவி

மாசறு கங்கை முடிமேல் அணிந்து என்  உளமே புகுந்த அதனால்

ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி பாம்பு இரண்டும் உடனே ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே

 

காலம் கலி யுகம், இதில் நல்ல படியாக நேர்மையாக ஒருவன் வாழ முடியாதென்று எனக்குத் தோன்றுகிறது.

 

மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்

எண்ணில் நல்ல கதிக்கு  யாதும் ஓர் குறைவு இல்லை

கண்ணில் நல்லஃதுறும் கழுமல வளநகர்ப்

பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே.

 

திருமணம் ஆனவுடன் பொதுமக்கள், புது மணப் பெண் புடைசூழ சோதியில் கலந்த போது என்ன பாடினீர்?

 

காதல் ஆகிக் கசிந்து கண்ணீர் மல்கி

ஓதுவார் தமை நன்னெறிக்கு உய்ப்பது

வேதம் நான்கினும் மெய்ப் பொருளாவது

நாதன் நமம் நமச்சிவாயவே

 

சென்னை மயிலாப்பூரில் பாம்பு கடித்து இறந்த வணிகர் குலப் பெண் பூம்பாவையை பல ஆண்டுகளுக்குப் பிறகு சாம்பல், அஸ்தி நிறைந்த பானையிலிருந்து உயிருடன் கொணர்ந்தது எப்படி?

 

மட்டிட்ட புன்னையங் கானல் மடமயிலை

கட்டிடங் கொண்டான் கபாலீச் சரமமர்ந்தான்

ஒட்டிட்ட பண்பின் உருத்திரப் பல் கணத்தார்க்கு

அட்டிட்டல் காணாதே பூம்பாவாய்

 

நோய் வந்தால் கடவுளை வழி பட முடியுமா?

“தும்மல் இருமல் தொடர்ந்த போழ்தினும்

வெம்மை நரகம் விளைந்த போழ்தினும்

இம்மை வினை அடர்த்தெய்தும் போழ்தினும்

அம்மையினும் துணை அஞ்செழுத்துமே”

 

“இடரினும் தளரினும் எனதுறு நோய்

தொடரினும் உன் கழல் தொழுது எழுவேன்”

 

நற்றமிழ் வல்ல ஞான சம்பந்தா, நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர் என்று பாரதியார் பாடியது உம் பாடலைக் கேட்டுத் தானோ?

வாசி தீரவே காசு நல்குவீர்

மாசின் மிழலையர் ஏசலில்லையே

 

வேத நெறி தழைத்தோங்க, மிகு சைவத் துறை விளங்க பூதலத்தில் வந்துதித்த ஞானச்சுடரே, ஒவ்வொரு பதிகத்திலும் எட்டாம் பாட்டில் ராவணனையும் பத்தாம் பாட்டில் சமணர்களையும் சாடுகிறீரே?

“ஏழ் கடல் சூழ் இலங்கை அரையன் தனோடு

இடரான வந்து நலியா”

“புத்தர் சமண் கழுக்கையர் பொய் கொளாச்

சித்தத்தவர்கள் தெளிந்து தேறின”

 

ஆளுடையப் பிள்ளையாரே, அப்படி என்ன சேக்கிழார் பெருமானை மயக்கினீர்? “பிள்ளை பாதி, புராணம் பாதி” என்று சொல்லும் அளவுக்கு 4000 செய்யுளில் 2000 செய்யுட்கள் எல்லாம் உமது கதையாக இருக்கிறதே?

 

“கண்காட்டு நுதலானும் கனல் காட்டும் கையானும்

பெண் காட்டும் உருவானும் பிறைகாட்டும் சடையானும்

பண் காட்டும் இசையானும் பயிர் காட்டும் புயலானும்

வெண்காட்டில் உறைவானும் விடை காட்டும் கொடியானே”

 

“நற்றமிழ் ஞான சம்பந்தன் நான் மறை

கற்றவன் காழியர் மன்னன் உன்னிய

அற்றமில் மாலை ஈரைந்தும் அஞ்செழுத்து

உற்றன வல்லவர் உம்பர் ஆவரே”

 

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்று மனம் உருகினார் வள்ளலார். ஒரு ஏழையின் நிலை கண்டு இரங்கி கனகதாரா துதி பாடி தங்க மழை பொழிவித்தான் சங்கரன். நீரும் வறட்சி நீங்க பாடினீராமே

 

காரைகள் கூகை முல்லை கள வாகை ஈகை

படர் தொடரி கள்ளி கவினிச்

சூரைகள் பம்மி விம்மு சுடுகாடு அமர்ந்த

சிவன் மேய சோலை நகர்தான்

தேரைகள் ஆரைசாய மிதி கொள்ள வாளை

குதிகொள்ள வள்ளை துவள

நாரைகளால் வாரி வயல் மேதி வைகு

நனிபள்ளி போலு நமர்காள்

 

நனி பள்ளியை பதிகம் பாடியே வளப் படுத்திய உமது தினசரி பிரார்த்தனை என்னவோ?

வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்

வீழ்க தண்புனல், வேந்தனும் ஓங்குக,

ஆழ்க தீயது எல்லாம், அரன் நாமமே

சூழ்க, வையகமும் துயர் தீர்கவே

 

நல்ல பிரார்த்தனை. அந்தணர் முதலாகவுள்ள எல்லா குலங்களும் பசு மாடு முதல் உள்ள எல்லா மிருகங்களும் வாழ்ந்து வையகத் துயர்கள் எல்லாம் மறைய வேண்டும். கேட்கவே ஆனந்தம், நன்றி.

 

 

 

நெல்லிக்காய் மகிமை: அவ்வையாரும் ஆல்பிரூனியும் அருணகிரிநாதரும்

Statue of Al Biruni

அதியமான், அவ்வையார், ஆல்பிரூனி, அருணகிரிநாதர் ஆகிய நால்வருக்கும் நெல்லிக்காயுக்கும் இடையே சுவையான தொடர்பு உண்டு.

 

அதியமான் நெடுமான் அஞ்சி என்ற குறுநில மன்னன் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்நாட்டின் தகடூர் பகுதியை ஆண்டு வந்தான்.தமிழ்ப் புலவர்களை ஆதரித்த வள்ளல்களில் முதல் வரிசையில் நின்றவன். ஒரு முறை அவனை தமிழ் மூதாட்டி அவ்வையார் சந்திக்க வந்தார். நல்ல விருந்து கொடுத்து நிறைய பரிசுகளையும் கொடுத்தான். தமிழ் கூறு நல்லுலகில் அவ்வைக்குள்ள புகழழாலும் விரல் விட்டு எண்ணக்கூடிய பெண்பால் புலவர்களில் ஒருவர் என்பதாலும் அவரை விஷேசமாகக் கவனிக்க விரும்பினான் அதியமான்.

 

நெல்லிக்காய் ஆரோக்கியம் தரும் ஒரு அருமருந்து. பழங்களையுயும் மிஞ்சும் அளவுக்கு சத்து உடையது. ஆயுளை வளர்க்கச் செய்வது. வைட்டமின் சி சத்தும் புத்தியை வளர்க்கும் பாஸ்பரஸ் சத்தும் மிக்கது.

 

வட இந்தியாவில் ரத்த சுத்திக்குப் பயன்படுத்தும் திரிபலா சூர்ணத்திலும்  சியவனப் ப்ராஷிலும் நெல்லிக்காய் பயன்படுத்தப் படுகிறது. தென் இந்தியாவில் ஊறுகாய், துவையல்,பச்சிடியில் முக்கிய அங்கம் வகிப்பது.

 

இவ்வளவு புகழ் உடைய நெல்லிக்காயிலும் ஒரு அரிய வகை நெல்லிக்காய் மரம் அதியமான் ஊரில் இருந்தது. அது கரு நெல்லி மரம். அதில் நன்கு வளர்ந்து முற்றிய ஒரு நெல்லிக்காய் மன்னன் கைக்கு வந்தது. நாட்டில் ஏதேனும் அரிதாகக் கிடைத்தால் அதை ஓடோடி வந்து மன்னரிடம் ஒப்படைப்பது பழங்கால இந்திய வழக்கம். புதையல் ஆனாலும் சரி, பெரிய வைரமானாலும் சரி, அரிதான பொருள் எல்லாம் இறைவனுக்குச் சமமான மன்னனுக்கே உரியது. இப்படிக் கிடைத்த அரிய நெல்லிக்காயை மன்னன் சாப்பிட்டால் நீண்ட காலம் வாழ்ந்து எல்லோருக்கும் மேலும் மேலும் உதவுவான் என்று மக்கள் எண்ணினர்.

 

ஆனால் அதியமானோ தமிழின் மீது ஆராக் காதல் கொண்டவன். நான் சாப்பிடுவதை விட, வயதான அவ்வைப் பாட்டி சாப்பிட்டு இன்னும் நீண்ட காலம் உயிர்வாழ்ந்தால் தமிழ் மொழியும் வாழும் உலகமும் உய்வு பெறும் என்று எண்ணி அதை அவ்வையாரிடம் கொடுக்கிறான். என்ன அதிசயம் பாருங்கள். அவ்வையார் வாழ்ந்தாரோ இல்லையோ அது பற்றி ஒன்றும் இலக்கியச் சான்று இல்லை. ஆனால் ஈராயிரம் ஆண்டுகளாக அதியமானின் புகழ் வாழ்கிறது. இன்னும் ஈராயிரம் ஆண்டுகளுக்கு தமிழ் வாழும் வரை அவன் புகழும் வாழும். தங்கமும் வைரமும் சாதிக்காத பணியை நெல்லிக்காய் சாதித்தது என்றால் அது அதிசிய நெல்லிதானே! இது காலத்தால் அழியாத புறநானூற்றுக் கவிதையில் (91) இடம் பெற்றுவிட்டது.

 

நீல மணிமிடற்று ஒருவன் போல

மன்னுக பெரும நீயே! தொன்னிலைப்

பெருமலை விடர் அகத்து அருமிசை கொண்ட

சிறி இலை நெல்லி தீங்கினி குறியாது,

ஆதல் நின்னகத்து அடக்கிச்

சாதல் நீங்க எமக்கு ஈந்தனையே.

(அதியமான் நெடுமான் அஞ்சி மீது ஔவையார் பாடியது-புறம் 91)

பொருள்: மலைச் சரிவிலே கடு முயற்சியுடன் பெற்ற நெல்லியின் இனிய கனியைப் பெறுதற்கு அரிது என்றும் கருதாது, அதனால் விளயும் பலனையும் கூறாது, அதை உன் மனதில் மட்டும் வைத்துக் கொண்டு என் மரணத்தைத் தவிர்க்க எனக்குக் கொடுத்தாயே நீ சிவ பெருமான் போல நீண்ட புகழோடு வாழ்வாயாக.

 

இந்தியவியலின் தந்தை ஆல்பிரூனி

 

ஆல்பிருனி என்பவர் இஸ்லாமியர்களில் மாமேதை. லியார்னோ டா வின்சி போல அவர் பல் துறை வித்தகர். பன் மொழிப் புலவர். கணிதம், மருத்துவம் ,வான சாத்திரம், உயிரியல், மொழியியல் என்று எல்லா துறைகளிலும் புலமை பெற்றவர். ஒரு பாரசீக மன்னர், அவரை இந்தியாவுக்கு அனுப்பி இந்து மத சாத்திர ரகசியங்களை அறிந்துவர உத்தரவிட்டார். அவர் கி.பி.1017 முதல் இந்தியாவில 13 ஆண்டுகள் தங்கி இந்திய அறிவியல் ரகசியங்களை அராபியர் மூலம் உலகத்துக்கு அறிவித்தார். இந்தியவியல் (Father of Indology) படிப்பின் தந்தை என்று இன்று அவரை உலகம் பாராட்டுகிறது. அவர் இந்தியாவின் சரித்திரம் என்ற புத்தகம் எழுதியுள்ளர். கஜினி முகமது படை எடுப்பு பற்றியும் எழுதியுள்ளார். அவர் நெல்லிக்காய் மகிமையை இந்தியர்களிடமிருந்து அறிந்து தனது மருத்துவப் புத்தகத்தில் எழுதியுள்ளார். திரிபலா சூர்ணத்தில் பயன்படும் கடுக்காய் மகிமையையும் எழுதியுள்ளார். நெல்லிக்காய், புளி ஆகியவற்றுடன் தயாரிக்கும் சில பொருட்களை அவர் குறிப்பிடுகிறார்.

 

நெல்லிக்காய் நிற விஷ்ணு

 

அருணகிரிநாதர் திருப்புகழில் விஷ்ணுவை கரு நெல்லி நிறத்துடன் ஒப்பிடுவது வியப்பான ஒரு உவமை. ஒருவேளை நெல்லி போல விஷ்ணுவும் நமக்கு ஆரோக்கியம் அருள்வான் என்பதை அருணகிரி நாதர் நமக்குச் சொல்லாமல் சொல்ல நினைக்கிறாரோ!! (கரு நெல்லி நிறமுடைய அரியின் மருகன் நீ)

 

“மருமல்லி யார் குழலின்    மடமாதர்

மருளுள்ளி நாயடியன்       அலையாமல்

இருநல்ல வாகும் உனது    அடிபேண

இனவல்ல மான மனது     அருளாயோ

கரு நெல்லி மேனியரி         மருகோனே

கன வள்ளியார் கணவ           முருகேசா

திருவல்லிதாயம் அதில்     உறைவோனே

திகழ் வல்ல மாதவர்கள்    பெருமாளே.

 

நெல்லிக்காயின் மகிமை 2000 ஆண்டுகளாக எழுதப்பட்டாலும் அந்த ஏழைகளின் ஆப்பிளுக்கு தமிழர்களிடையே இன்னும்  சரியான புகழ் கிட்டவில்லை! வட இந்தியர்கள் இதை தங்க பஸ்பம் போல கருதி பயன்படுத்துகிறார்கள்.

***

 

தாயுமானவருடன் 60 வினாடி பேட்டி

(கேள்விகள்: சுவாமிநாதனின் கற்பனை, பதில்கள்:தாயுமானவர் பாடல்களிலிருந்து)

 

நீவீர் தினமும் இறைவனிடம் வேண்டுவது யாதோ?

 

எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே

அல்லாமல் வேறொன்றும் அறியோம் பரபரமே

 

அருமையான வரிகள். இதை தினமும் ஒருவர் நினைத்தால் உலகம் முழுதும் அமைதி நிலவுமே. மந்திர தந்திரங்கள் செய்யத் தெரியுமா?

கந்துக மதக் கரியை வசமா நடத்தலாம்

கரடி வெம் புலி வாயையும்

கட்டலாம் ஒரு சிங்கம் முதுகின் மேல் கொள்ளலாம்

கண் செவி எடுத்தாட்டலாம்

வெந்தழலின் இரதம் வைத்து ஐந்து உலோகத்தையும்

வேதித்து விற்று உண்ணலாம்

வேறு ஒருவர் காணாமல் உலகத்து உலா வரலாம்

விண்ணவரை ஏவல் கொள்ளலாம்

சந்ததமும் இளமையொடு இருக்கலாம் மற்றும் ஒரு

சரீரத்தினும் புகுதலாம்

சலமேல் நடக்கலாம் கனல் மேல் இருக்கலாம்

தன் நிகரில் சித்தி பெறாலாம்

சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற

திறம் அரிது  சத்தாகி என்

சித்தமிசை குடி கொண்ட

தேசோ மயானந்தமே

 

புரிகிறது, புரிகிறது, அஷ்டமா சித்திகள் கிடைத்தாலும் மனதை

அடக்குவதுதான் கடினம். “சும்மா இரு சொல் அற” என்றும் “பேசா அனுபூதி பிறந்ததுவே” என்றும் அருணகிரிநாதர் கூறுகிறாரே?

 

சொல்லும் பொருளும் அற்றுச் சும்மா இருப்பதற்கே

அல்லும் பகலும் எனக்கு ஆசை பராபரமே

 

மனதை சும்மா இருக்கவைப்பது எவ்வளவு கடினம் என்று அழகாகச்

சொல்லிவிட்டீர்கள். “இறைவன் சாணிலும் உளன் ஓர் தன்மை அணுவினைச்

சத கூறு இட்ட கோணிலும் உளன்” என்று கம்பன் கூறுகிறானே?

 

மண்ணும் மறிகடலும்  மற்றுளவும் எல்லாம் உன்

கண்ணில் இருக்கவும் நான் கண்டேன் பராபரமே

 

ஓ! உமக்கும் அர்ஜுனனைப் போல விசுவ ரூப தரிசனம் கிடைத்ததா? புலால் சாப்பிடாதவர்களை “எல்லா உயிரும் கை கூப்பித் தொழும்” என்று எங்கள் வான் புகழ் வள்ளுவன் கூறுகிறானே?

 

“கொல்லா விரதம் ஒன்று கொண்டவரே நல்லார் மற்று

அல்லாதோர் யாரோ அறியேன் பராபரமே”

“கொல்லா விரதம் குவலயம் எல்லாம் ஓங்க

எல்லோர்க்கும் சொல்லுவது என் இச்சை பராபரமே”

 

அட, நீங்களும் வள்ளுவர் கட்சிதானா? கடவுளை நம்பினால் கிரகங்கள்

ஒன்றும் செய்யாது என்று தேவாரம் கூறுகிறதே?

கன்மம் ஏது? கடு நரகு ஏது? மேல்

சென்மம் ஏது? எனைத் தீண்டக் கடவதோ!

 

சுகர், ஜனகர் போன்று தாமரை இலைத் தண்ணீர் போல வாழ்க்கை

நடத்தியவர்களை உங்களுக்குப் பிடிக்குமாமே.

“மதுவுண்ட வண்டு எனவும் சனகன் ஆதி

மன்னவர்கள் சுகர் முதலோர் வாழ்ந்தார்”

“ஓதரிய சுகர் போல் ஏன் ஏன் என்ன

ஒருவர் இலையோ எனவும் உரைப்பேன்”

 

யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று திருமூலர் சொல்லுகிறார். நீங்கள்……

“சைவ சமயமே சமயம் சமயாதீதப் பழம்பொருளைக்

கை வந்திடவே மன்றுல் வெளி காட்டும் இந்தக் கருத்தை விட்டுப்

பொய் வந்துழலும் சமய நெறி புகுத வேண்டா முக்தி தரும்

தெய்வ சபையை காண்பதற்கு சேரவாரும் சகத்தீரே”

“காகம் உறவு கலந்து உண்ணக் கண்டீர் அகண்டாகார சிவ

போகம் என்னும் பேரின்ப வெள்ளம் பொங்கித் ததும்பி பூரணமாய்

ஏக உருவாய்க் கிடக்குதையோ இன்புற்றிட நாம் இனி எடுத்த

தேகம் விழும் முன் புசிப்பதற்கு சேர வாரும் சகத்தீரே!”

 

நீர் எல்லா சமயங்களும் ஒன்று என்று அழகாகப் பாடியிருக்கிறீர்.

இதை எல்லோரும் கேட்டுத் தெளிவு பெற வேண்டும்.

வேறுபடும் சமயம் எல்லாம் புகுந்து பார்க்கின்

விளங்கு பரம் பொருளே! நின் விளையாட்டல்லால்

மாறுபடும் கருத்து இல்லை; முடிவில் மோன

வாரிதியில் நதித் திரள் போல் வயங்கிற்றம்மா

 

சாக்கிய நாயனார் கல்லால் அடித்தபோதும் அர்சுனன் வில்லால்

அடித்தபோதும் கூட சிவன் அருள் செய்தாராமே?

கல்லால் எறிந்தும் கை வில்லால்

அடித்தும் கனி மதுரச்

சொல்லால் துதித்தும் நற் பச்சிலை

தூவியும் தொண்டர் இனம்

எல்லாம் பிழைத்தனர் அன்பற்ற

நான் இனி ஏது செய்வேன்!

கொல்லா விரதியர் நேர் நின்ற

முக்கட் குரு மணியே!

 

நன்றி, தாயமானவரே.அருமையான செய்யுட்கள். “அவன் அன்றி ஓர் அணுவும் அசையாது”, “மனம் ஒரு குரங்கு” என்று பல பொன்மொழிகளைப் பாட்டில் வைத்துப் பாடியுள்ளீர்கள்.உமது புகழ் தமிழ் உள்ள வரை வாழும்.

 

பட்டினத்தாருடன் 60 வினாடி பேட்டி

 

காதற்ற ஊசியும் வாராது காண் கடை வழிக்கே என்று நீங்கள் வளர்த்த பிள்ளையே எழுதி ஒரு ஊசியை வைத்துவிட்டுச் சென்றதாமே? 

வாதுற்ற திண்புயர் அண்ணாமலையர் மலர்ப் பதத்தை

போதுற்ற எப்போதும் புகலும் நெஞ்சே? இந்தப் பூதலத்தில்

தீதுற்ற செல்வமென்? தேடிப் புதைத்த திரவியம் என்?

காதற்ற ஊசியும் வாராது காணும் கடைவழிக்கே

 

பெரிய பணக்காரரான நீவீர் இப்படி திடீரென்று வீட்டை விட்டுப் போனால் ரோட்டில் எப்படி வாழ முடியும்?

 

உடை கோவணம் உண்டு, உறங்கப் புறத் திண்ணை உண்டு உணவு இங்கு

அடை காய் இலை உண்டு, அருந்தத் தண்ணீர் உண்டு, அருந் துணைக்கே

விடை ஏறும் ஈசர் திரு நாமம் உண்டு இந்த மேதினியில்

வட கோடு உயர்ந்தென்ன, தென் கோடு சாய்ந்தென்ன வான் பிறைக்கே?

 

அப்படியானால் உங்கள் வீடு?

வீடு நமக்குத் திரு ஆலங்காடு, விமலர் தந்த

ஓடு நமக்கு உண்டு வற்றாத பாத்திரம்

உமது தமக்கை உமக்கு விஷ அப்பம் கொடுத்தவுடன் அதை எறிந்தவுடன் வீடே எரிந்து போயிற்றாமே?

தன் வினை தன்னைச் சுடும் ஓட்டப்பம் வீட்டைச் சுடும்

அட, இந்த சொற்களே வீட்டை எரித்து விட்டதா? ஆதி சங்கரர் போலவே நீரும் அம்மா இறந்தவுடன் 10 பாடல் பாடியே சிதைக்கு தீ மூட்டினீரா?

முன்னை இட்ட தீ முப்புறத்திலே

பின்னை இட்ட தீ தென் இலங்கையில்

அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே

யானும் இட்ட தீ மூள்க மூள்கவே

 

இது ஒரு அற்புதமே!! என்ன என்ன பிழைகளுக்கு இறைவனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்?

கல்லாப் பிழையும் கருதாப் பிழையும்   கசிந்து உருகி

நில்லாப் பிழையும் நினையாப் பிழையும் நின் அஞ் செழுத்தைச்

சொல்லாப் பிழையும் துதியாப் பிழையும் தொழாப் பிழையும்

எல்லாப் பிழையும் பொருத்து அருள்வாய் கச்சி ஏகம்பனே.

 

அலை பாயும் மனதைக் கட்டுப் படுத்த ஒரு வழி சொல்லுங்களேன்?

ஒன்று என்று இரு; தெய்வம் உண்டு என்று இரு

உயர் செல்வம் எல்லாம் அன்று என்று இரு; பசித்தோர் முகம் பார்

நல் அறமும் நட்பும் நன்று என்று இரு; நடு நீங்காமலே நமக்கு இட்ட படி

என்றுன்றிரு; மனமே உனக்கு உபதேசம் இதே!

 

சிறுத்தொண்டர், திருநீலகண்ட நாயனார், கண்ணப்பர் போன்று தியாகங்களைச் செய்ய முடியுமா?

வாளால் மகவு அரிந்து ஊட்ட வல்லேன் அல்லன்; மாது சொன்ன

சூளால் இளமை துறக்க வல்லேன் அல்லன்; தொண்டு செய்து

நாள் ஆறில் கண் இடத்து அப்ப வல்லேன் அல்லன்; நான் இனிச் சென்று

ஆள் ஆவது எப்படியோ திருக் காளத்தி அப்பனுக்கே.

 

கையில் வெண்ணெயை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைவார் பற்றி உங்கள் கருத்து என்னவோ?

ஆரூரர் இங்கு இருக்க அவ்வூர் திருநாள் என்று ஊர்கள் தோறும்

உழலுவீர்;–நேரே உளக் குறிப்பை நாடாத ஊமர்காள்! நீவீர்

விளக்கு இருக்க தீ தேடுவீர்

 

விளக்கு இருக்கும்போது தீயைத் தேடுவார்கள்- அருமையான பழமொழி. அது சரி, அபு என்பவன் தேவதூதனைப் பார்த்து தன் பெயரை மக்களை நேசிப்பவர் பட்டியலில் எழுதச் சொன்னான். உங்கள் வரிகளைப் பார்த்துதான் Abu Ben Adam கவிதை வந்ததோ?

தமர் பெயர் எழுதிய  வரி நெடும் புத்தகத்து

என்னையும் எழுத வேண்டுவன் (கோயில் நான் மணி மாலை)

 

நியமம், நிஷ்டை இவைகள் பற்றி நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?

நேமங்கள் நிட்டைகள் வேதங்கள் ஆகம நீதி நெறி

ஓமங்கள் தர்ப்பணம் சந்தி செப மந்திர யோக நிலை

நாமங்கள் சந்தனம் வெண்ணீறு பூசி நலமுடனே

சாமங்கள் தோறும் இவர் செய்யும் பூசைகள் சர்ப்பனையே

 

சிவவாக்கியர் “நட்ட கால்லைச் சுற்றி நாலு புஷ்பம் போடாதே”

என்கிறாரே. நீங்கள் அவர் சொல்வதை ஆதரிக்கிறீர்களா?

உளியிட்ட கல்லையும் ஒப்பற்ற சாந்தையும் ஊத்தை அறப்

புளியிட்ட செம்பையும் போற்றுகிலேன்

உங்கள் பாடல்களில் பெண்ணாசையை நிறைய கண்டிக்கிறீர்களே.

ஆசாரம் இல்லா அசடருடன் கூடிப்

பாசாங்கு பேசிப் பதி இழந்து கெட்டேனே

குரு மார்க்கம் இல்லா குருடருடன் கூடிக்

கரு மார்க்கத்துள்ளே கருத்தழிந்து கெட்டேனே

ஆலம் அருந்தும் அரன் பெருமை எண்ணாமல்

பாலர் பெண்டிர் மெய் என்று பதி இழந்து கெட்டேனே

நன்றி. உமது பாடல்கள் எல்லாவற்றையும் படிக்க எனக்கு ஆசை

சிவவாக்கியருடன் 60 வினாடி பேட்டி

(கேள்விகள்: எனது கற்பனை, பதில்கள்: சித்தர் பாடல்களிலிருந்து)

 

சாமி, குருட்டுத் தனமாக ,அர்த்தம் புரியாமல் செய்யும் சடங்குகளைச் சாடுகிறீர்களாமே?

நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலு புட்பம் சாத்தியே

சுற்றி  வந்து முணுமுணுத்துச் சொல்லும் மந்திரம் ஏதடா

நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்

சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ

 

அம்மாடியோவ், பாட்டில் அனல் பறக்குதே! நீங்கள் எல்லோரும் எட்டு வகை சித்துக்களைச் செய்வீர்களாமே? இதனால் என்ன பயன் ?

யோகசாலை கட்டுவார் உயரவும் எழும்புவார்

வேகமாக அட்ட சித்து வித்தை கற்று நெட்டுவார்

மோகம் கொண்டு மாதரின் மூத்திரப் பை சிக்கிப் பின்

பேயது பிடித்தவர் போல் பேருலகில் சாவரே

 

அட, எட்டு சித்தி கிடைத்து அற்புதம் செய்தாலும் வழுக்கி விழ வாய்ப்பு உண்டு. அப்ப, புண்ய நதிகளில் குளித்தால் என்ன?

எத்திசை எங்கும் எங்குமோடி எண்ணிலாத நதிகளில்

சுற்றியும் தலை முழுக சுத்த ஞானி ஆவரோ?

 

அது சரி, இப்படி எதை எடுத்தாலும் எதிர்த்துப் பேசுவதை எங்கள் ஊர் எதிக் கட்சித் தலைவர்களும் செய்ய முடியும். ஏதேனும்  செய்ய வேண்டியதை சொல்லுங்களேன்.

 

தீர்த்தலிங்க மூர்த்தி என்று தேடி ஓடும் தீதரே

உள்ளில் நின்ற சீவனைத் தெளியுமே

உம்முளே தெளிந்து காண வல்லீரேல்

தான் அதாய்ச் சிறந்ததே சிவாயமே

 

நல்ல யோசனை. சித்தர்கள் எல்லோருக்கும் ஜாதியே கிடையாதா?

சாதியாவது ஏதடா? சலம் திரண்ட நீரெலாம்

பூத வாசல் ஒன்றலோ, பூத ஐந்தும் ஒன்றலோ?

காதில் வாளி , காரை, கம்பி, பாடகம் பொன் ஒன்றலோ?

சாதி பேதம் ஓதுகின்ற தன்மை என்ன தன்மையோ?

 

யார் போட்டாலும் தங்க நகைகள் மாறாதாக்கும் சித்தர்கள் சாகாமல் இருப்பார்களா?

கறந்த பால் முலைப் புகா, கடைந்த வெண்ணெய் மோர் புகா

உடைந்து போன சங்கின் ஓசை உயிர்களும் உடல் புகா;

விரிந்த பூ உதிர்ந்த காயும் மீண்டும் போய் மரம் புகா;

இறந்தவர் பிறப்பதில்லை இல்லை இல்லை இல்லையே

 

எங்களை மாதிரித்தான் நீங்களும். அரியும் சிவனும் ஒன்னு, அறியாதவன் வாயில் மண்ணு என்று சொல்லக் கேட்டிருக்கிறேன்.அது சரியா?

நாழி அப்பும் நாழி உப்பும் நாழியானவாறு  போல்

ஆழியோனும் ஈசனும் அமர்ந்து வாழ்ந்திருந்த இடம்

ஏறில் ஆறு ஈசனும்  இயங்கு சக்ரதரனையும்

வேறு கூறு பேசுவோர் வீழ்வர் வீண் நரகிலே

 

நீரும் உப்பும் போல இருவரும் ஒருவரே, சரி, கடவுளை நாடுவோர் கல்யாணம் கட்டி குடும்பம் நடத்தலாமா?

மனத்தகத்து அழுக்கறாத மவுன ஞான யோகிகள்

வனத்தகத்து இருக்கினும் மனத்தகத்து அழுக்கறார்

மனத்தகத்து அழுக்கறுத்த மவுன ஞான யோகிகள்

முலைத்தடத்து இருக்கினும் பிற்ப்பறுத்திருப்பரே

 

ஆக அவர்கள் குடும்ப வாழ்க்கை நடத்தினாலும் தாமரை இலைத் தண்ணீர் போல இருப்பார்கள். தெய்வத் தமிழில் நிறைய ஆகமங்கள் துதிகள் இருக்கின்றனவே. எதைப் படிப்பது?

“நூறு கோடி ஆகமங்கள் நூறு கோடி மந்திரம்

நூறு கோடி நாள் இருந்தும் ஓதினாலும் அது என்ன பயன்?”

 

“சாம நாலு வேதமும் சகல சாஸ்திரங்களும்

சேமமாக ஓதினும் சிவனை நீர் அறிகிலீர்”

 

நீங்கள் 600 பாடல்களில் சொன்ன கருத்துக்கள்: மனதில் கடவுள் இருக்கிறான். சடங்குகளோ கோவிலோ தேவை இல்லை. தூய்மையாக இருந்தால் சாதி பேதம் இன்றி எல்லோரும் இறைவனை அடையலாம். நல்ல கருத்துக்கள் தாம், நன்றி.

 

 

ஆண்டாளுடன் 60 வினாடி பேட்டி

ஆண்டாள் அம்மாள், அனந்த கோடி வணக்கங்கள். திருமாலையே கணவனாக வரித்த தாயே, எங்கள் ஊர் பெண்கள் விரைவில் திருமணம் நடக்க ஒரு பாட்டு சொல்லுங்களேன்

 

மத்தளம் கொட்ட, வரி சங்கம் நின்றூத

முத்துடைத் தாமம் நிரை தாழ்ந்த பந்தற்கீழ்

மைத்துனன் நம்பி மதுசூதன் வந்தென்னை

கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன்.

வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து

நாரணன் நம்பி நடக்கின்றான் என்று எதிர்

பூரண பொற்குடம் வைத்துப் புறம் எங்கும்

தோரணம் நாட்டக் கனாக் கண்டேன் தோழி!

 

ஓ, எனக்குத் தெரியும். வாரணம் ஆயிரம், எல்லா ஐயங்கார் கல்யாணங்

களிலும் கேட்டிருக்கிறேன். இதைப் பாடினால் ஏழேழ் பிறவிக்கும் அன்புடை கணவன் கிடைப்பானா?

இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா

எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன் தன்னோடு

உற்றோமே ஆவோம்; உனக்கே நாம் ஆட் செய்வோம்;

மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம் பாவாய்

 

சூடிக் கொடுத்த சுடர்க் கொடியே, பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண் பிள்ளையே. கண்ணனைக் கும்பிட்டால் கவலைகள் எல்லாம் சாம்பல் ஆய்விடுமாமே?

மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத்

தூயப் பெருநீர் யமுனைத் துறைவனை

ஆயர் குலத்தில் தோன்றும் அணிவிளக்கைத்

தாயை குடல் விளக்கஞ் செய்த தாமோதரனை

தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது

வாயினால் பாடி மனதினால் சிந்திக்க

போய பிழையும் புகு தருவான் நின்றனவும்

தீயினில் தூசாகும் செப்பு ஏல் ஒர் எம்பாவாய்

 

இவ்வளவு சிறு வயதில் உங்களுக்கு எவ்வளவு விஷயம் தெரிந்திருக்கிறது. நீங்கள் வீனஸ், ஜூபிடர் கிரகங்கள் பற்றிப் பாடியதால் தான் உங்கள் காலத்தை அறியமுடிந்தது. தமிழ் பெண்கள் கெட்டிக்காரிகள்.

புள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனை

கிள்ளிக் களைந்தானைக் கீர்ந்திமைப் பாடிப் போய்

பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம் புக்கார்

வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று புள்ளும் சிலம்பின காண்

 

உங்களுக்கு பறவைகள், மிருகங்கள் பற்றிய அறிவு அதிகம் இருக்கிறதே. உயிரியல் பாடம் படித்தீர்களா? ஒரு பாட்டில் சிங்கத்தை நேரில் பார்த்தது போலவே பாடினீர்களே!

மாரிமலை முழைஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும்

சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீ விழித்து

வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்து உதறி

மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப் போதருமா போலே

 

பலே,பலே சர்கஸில் கூட சிங்கத்தை இப்படிப் பார்த்ததில்லை.

30 பாவைப் பாடல்களையும் பாடினால் என்ன கிடைக்கும்?

சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே

இங்கு இப் பரிசு உரைப்பார் ஈரிரண்டு மால்வரைத் தோள்

செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்

எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்.

 

கோதைத் தமிழ் ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானிடரை

வையம் சுமப்பதும் வம்பு என்று ஒருவர் பாடுகிறாரே.

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி

நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்

தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து

ஓங்கு பெருஞ் செந்நெல் ஊடு கயல் உகள

பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண் படுப்ப

தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி

வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்

நீங்காத செல்வம் நிறைந்து ஏல் ஓர் எம்பாவாய்.

 

திடீரென்று ஒரு பாட்டு நினைவுக்கு வருகிறது, கருப்புரம் நாறுமோ…

கருப்புரம் நாறுமோ? கமலப் பூ நாறுமோ?

திருப் பவளச் செவ்வாய்தான் தித்தித்திருக்குமோ?

மருப்பு ஒசித்த மாதவன் தன் சுவையும் நாற்றமும்

விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல், ஆழி வெண் சங்கே!

 

நன்றி, தாயே.

 

(Please read other 60 second interviews with Adi Shankara, Sathya Sai Baba, Swami Vivekananda, Bharathiyar, Kamban, Arunagirinathar, Maniikavasagar,Valluvar,Tirumular,Ilango and Pattinathar)