ல, ல, ல, ல, ல = ஐந்து ‘ல’ கார மனைவி!

women are illusions

Post No.842 Dated 15th February 2014

சம்ஸ்கிருத செல்வம் — அத்தியாயம் 27
Compiled by S Nagarajan

சம்ஸ்கிருத செல்வம் — அத்தியாயம் 28

ஐந்து ‘ல’ கார மனைவியும் பெண்ணைப் பாதுகாக்கும் பொறுப்பும்!

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்று சொல்வார்கள். Marriages are made in heaven என்ற ஆங்கிலப் பழமொழியும் உண்டு. மனைவி அமையும்போது குணவதியாகவும் அழகியாகவும் அமைந்து விட்டால் அந்த அதிர்ஷ்டத்தைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமா?

ஐந்து ‘ல’ கார பார்யாவைப் (மனைவி) பற்றி கவிஞர் அழகுறத் தொகுத்துக் கூறி அவளை அடைபவன் புண்யவசத்தினாலேயே அடைகிறான் என்கிறார்.

01) அநுகூலம் – புருஷனுக்கு அநுகூலமாக இருப்பவள் (காதல் ஒருவனைக் கைப்பிடித்து, அவன் காரியம் யாவினும் கை கொடுத்து என்றார் புதுமைப் பெண்ணைப் பற்றி பாரதியார்)

02) விமலாங்கி – கறை படாதவள் அல்லது குற்றம் இல்லாதவள்

03) குலஜா – நல்ல குடியில் பிறந்தவள்

04) குசலா – திறமை வாய்ந்தவள்

05) சுசீலா – நல்ல ஒழுக்கம் உடையவள்

இந்த ஐந்து லகாரம் அமையப் பெற்றவள் மனைவியாக வாய்த்தால் நிச்சயமாக அது இறைவன் கொடுத்த நல்ல வரம் தானே!

facebook karthgai

பாடலைப் பார்ப்போம்:-

அநுகூலாம் விமலாங்கீம் குலஜாம் குஷலாம் சுசீலசம்பன்னாம் I
பஞ்சலகாராம் பார்யா: புருஷ புண்யோதயால்லபதே II

அநுகூலாம் – அநுகூலமுடையவளாயும்
விமலாங்கீம் – கறைபடாதவளாயும்
குலஜாம் – நல்ல குலத்தில் பிறந்தவளாயும்
குஷலாம் – திறமை வாய்ந்தவளாயும்
சுசீலசம்பன்னாம் – சீலம் உடையவளாயும்
பஞ்சலகாராம் – ஆக இந்த ஐந்து ‘ல’காரம் உடைய
பார்யா: -மனைவி
புருஷ புண்யோதயால்லபதே – புருஷனின் புண்யத்தால் கிடைக்கப் பெறுகிறாள்.

பாரத நாட்டில் பெண்ணுக்குரிய மதிப்பே தனி. அவள் விலை மதிக்க முடியாத ரத்தினம் என்பதால் அவளுக்கு எப்போதுமே பாதுகாப்பு வேண்டும் என்பதை நமது அற நூல்கள் வலியுறுத்துகின்றன.

பிதா ரக்ஷதி கௌமாரே பர்தா ரக்ஷதி யௌவனே I
புத்ரஸ்து ஸ்தாவிரே பாவே ந ஸ்த்ரீ ஸ்வாதந்தர்யமார்ஹதி II

பிதா ரக்ஷதி கௌமாரே – இளமையில் தந்தை பாதுகாக்கிறார்
பர்தா ரக்ஷதி யௌவனே –யௌவனத்தில் (வாலிப பருவத்தில்) கணவன் பாதுகாக்கிறான்

புத்ரஸ்து ஸ்தாவிரே பாவே –வயதான காலத்தில் புத்திரர்கள் பாதுகாக்கின்றனர் (பாதுகாக்க வேண்டும்)
ந ஸ்த்ரீ ஸ்வாதந்தர்யமார்ஹதி – பெண் ஒரு போதும் அவள் வாழ்க்கையில் பாதுகாப்பற்று (சுதந்திரமாக) இருக்கக் கூடாது.

சுதந்திரமாக இருக்கக் கூடாது என்ற வார்த்தைக்கு அவள் விலை மதிப்பில்லா மாணிக்கம் என்பதால் எப்போதும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்பதே உண்மைப் பொருள்.

பெண்ணைப் போற்றி வணங்கும் நாடு நமது நாடு என்பதை உணர்ந்து மகிழ்வோம்!

Contact : swami _ 48@ yahoo. com

*********************

Pictures are used from different websites:thanks.

ஐந்து ‘ஜ’ காரமும் ஐந்து ‘வ’ காரமும்!!

bharat matha

Picture of Janma Bhumi (Motherland)

Post No. 841 Dated15-02-14

சம்ஸ்கிருத செல்வம் — அத்தியாயம் 27
Compiled by S Nagarajan

சில விஷயங்களை எளிதில் நினைவு கொள்ள கவிஞர்கள் கையாளும் உத்தியே தனி! எண்ணிக்கையால் சிலவற்றைச் சேர்த்துத் தருவார்கள். சந்தத்தால் அதாவது ஒலியால் சிலவற்றைச் சேர்த்துத் தருவார்கள். சில சமயம் ஒரு எழுத்தைத் தேர்ந்தெடுத்து அதில் ஆரம்பிக்கும் வார்த்தைகளைச் சேர்த்துத் தருவார்கள்.

படிக்கவும் இனிமை; நினைவில் வைத்துக் கொள்வதற்கும் சுலபம். பிறரிடம் எடுத்துக் கூறவோ அதி சுலபம். பாராட்டையும் பெறலாம். கல்வி கேள்விகளில் இதனால் மேன்மையும் பெறலாம்.

இந்த வகையில் கிடைப்பதற்கு அருமையான ஐந்தைச் சேர்த்துத் தர விரும்பிய கவிஞர் அவை அனைத்துமே ‘ஜ’வில் ஆரம்பிப்பதைத் தனக்குச் சாதகமாக்கிக் கொண்டு அற்புதமான கவிதை ஒன்றைத் தருகிறார்.

1) ஜனனி – ஒருவனைப் பெற்றெடுத்த தாய்
2) ஜன்ம பூமி – ஒருவன் பிறந்த தாய் நாடு
3) ஜாஹ்னவி – கங்கையின் மறுபெயர் ஜாஹ்னவி
4) ஜனார்தனன் – ஜனார்தனன் அதாவது விஷ்ணு
5) ஜனகன் – ஒருவனது தந்தை

இந்த ஐந்துமே கிடைப்பதற்கு அரிய விஷயங்கள் என்கிறார் கவிஞர்.
தாயும், தந்தையும், விஷ்ணு பக்தியும், கங்கையில் ஸ்நானம் செய்யும் பாக்கியமும், பாரத தேசத்தில் பிறக்கும் பாக்கியமும் கிடைப்பது அரிதிலும் அரிது!

பாடலைப் பார்ப்போம்:-

ஜனனீ ஜன்மபூமிஸ்ச ஜாஹ்னவி ச ஜனார்தன: I
ஜனக: பஞ்சமஸ்சைவ ஜகாரா: பஞ்ச துர்லபா: II

ஜனனீ – பெற்றெடுத்த தாய்
ஜன்மபூமி – தாய் நாடு
ஜாஹ்னவி – கங்கை
ஜனார்தன: -ஜனார்தனன் (மீது பக்தியும் அவன் அருளும்)
ஜனக: – தந்தையும்
பஞ்சமஸ்சைவ – ஆகிய ஐந்து
ஜகாரா: – ‘ஜ-காரங்களும்
பஞ்ச துர்லபா: – துர்லபமாக அமையும் ஐந்து (விஷயங்கள்) ஆகும்.I

இது சுபாஷித ரத்னாகர பாண்டாகாரம் என்னும் சுபாஷித நூலில் தொகுக்கப் பெற்ற அருமையான கவிதையாகும்.

mummy at work
Picture of Janani (Mother)

இதே போல ‘வ’ காரத்தில் ஆரம்பிக்கும் ஐந்து வார்த்தைகள் மனிதனுக்கு மதிப்பைத் தருவதாக அமைவதைப் பார்த்த கவிஞர் அதை அப்படியே அழகுறத் தொகுத்து அளிக்கிறார்:-

1) வஸ்த்ரம் – ஆடை (ஆள் பாதி,ஆடை பாதி அல்லவா!)
2) வபு: – வபு என்றால் வடிவம்
3) வாக் – பேச்சு
4) வித்யா – கல்வி அறிவு
5) வினயா – வினயம் அல்லது எளிமை அல்லது பணிவு
இந்த ஐந்தும் ஒருவனின் மதிப்பைக் கூட்டுகின்றன. கௌரவம் அடையக் காரணமாக அமைகின்றன.

வஸ்த்ரேண வபுஷா வாசா வித்யா வினயேன ச I
வகாரை: பஞ்சாபி: ஹீன: நரோ நாயாதி கௌரவம் II

வஸ்த்ரேண – ஆடையும்
வபுஷா – வடிவமும்
வாசா – வாக்கும்
வித்யா – அறிவும்
வினயேன ச- பணிவும் ஆகிய
வகாரை: பஞ்சாபி: – வ’-காரத்தில் ஆரம்பிக்கும் இந்த ஐந்தும்
ஹீன: நரோ -இல்லாத மனிதன்
நாயாதி கௌரவம் –கௌரவம் பெற மாட்டான்

எளிதில் நினைவு கொள்வதோடு இவற்றை முயன்று அடையப் பார்ப்பதே நமது முதல் வேலையாக அமைய வேண்டும் இல்லையா!

Contact swami_48@yahoo.com

***************

எப்போது பொய் சொல்லலாம்? வள்ளுவர், சங்கரர் அறிவுரை !

tn_state_emblems_over_time

By London Swaminathan
Post No.837 Date. 13-02-2014

திருக்குறளில் வள்ளுவரும், பிரஸ்ன உத்தர ரத்ன மாலிகாவில் (பிரஸ்னோத்த்ரரத்னமாலிகா ஸ்தோத்திரம்) ஆதி சங்கரரும், கிரேக்க நாட்டு அறிஞர் பிளாட்டோவும் எப்போது பொய் சொல்லுவது அனுமதிக்கப்படுகிறது என்பதைத் தெள்ளத் தெளிவாகக் கூறுகின்றனர்.
மஹாபாரத்திலும் சில கதைகள் உண்டு. பொய் சொன்னாரா இல்லையா என்று தீர்மானிக்க முடியாத தர்ம சங்கடமான நிலைமைகள் அவை.

வள்ளுவர் கூற்று

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல் (291)

பொருள்: எந்த ஒரு உயிருக்கும் தீங்கு விளைவிக்காத சொற்களைப் பேசுவதே வாய்மை

பொய்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின் (292)

பொருள்: குற்றமில்லாத நன்மையைத் தரும் என்றால் பொய் கூட வாய்மையாகக் கருதப்படும்
அதாவது ஒரு பொய்யானது மாசு மருவற்ற தூய நன்மையை உண்டாக்குமானல் அது உண்மை எனவே கருதப்படும்.

“சத்யமேவ ஜயதே= வாய்மையே வெல்லும்” என்ற உபநிஷத் வாசகம் தமிழ்நாடு அரசின் மற்றும் இந்திய அரசின் சின்னங்களில் காணப்படுகிறது. குருகுலத்துக்குப் போகும் பையனுக்கு வாத்தியார் சொல்லித் தரும் முதல் பாடம் “சத்யம் வத= உண்மையே பேசு” என்பதுதான். தமிழ், வடமொழி இலக்கியங்களில் நூற்றுக்கணக்கான இடங்களில் இதே கருத்து திரும்பத் திரும்ப வருகிறது. அப்படி இருந்தும் ஆதி சங்கரர் சொல்லுகிறார்:

சங்கரர் கூற்று

யார் நம்பத் தகாதவன்?
எப்போதும் பொய் சொல்பவன்.
எப்போது பொய் சொன்னால் பாபம் ஆகாது?
தர்மத்தைக் காக்கச் சொல்லும் போது.

இந்தக் கேள்வி பதில் பிரஸ்னோத்தர ரத்ன மாலிகா துதியில் வருகிறது. இது ஒரு அற்புதமான துதி. மஹா பாரதத்தில் வரும் யக்ஷப் பிரஸ்ன பாணியில் அவர் எழுதி உள்ளார். 67 பாடல்கள் இருக்கின்றன. ஏறத்தாழ 200 கேள்வி பதில்கள். பிரஸ்ன என்றால் கேள்வி, உத்தர என்றால் பதில். பாடல் 46, 47–ல் இந்த இரண்டு கேள்விகளும் பதில்களும் வருகின்றன.

ஆதி சங்கரரின் கூற்றுப்படி தர்மத்தைக் காக்க பொய் சொல்லலாம். அது பாவமில்லை. ஒருவேளை அவர் மஹாபாரதத்தில் வரும் அஸ்வத்தாமா கதையை மனதில் வைத்து இப்படிச் சொல்லி இருக்கலாம்.

‘அஸ்வத்தாமா ஹத: நரோவா குஞ்சரோவா’:

பொய்யே சொல்லாத தர்மனையும் பொய் சொல்ல வைத்தார் கிருஷ்ணன். எதற்காக? தர்மயுத்தம் வெல்ல வேண்டும் என்பதற்காக. தர்மன் பொய் சொல்ல மாட்டான் என்று தெரிந்த கிருஷ்ணன் ‘அஸ்வத்தாமா’ என்ற பெயருள்ள ஒரு யானையைக் கொல்லச் செய்கிறார். பீமன் அதைக் கொன்றவுடன் அஸ்வத்தாமாவுக்கு சாவு என்று கூச்சல் இடுகிறான். துரோணர் காதில் அது விழவே தர்மனிடம் உண்மையா என்று அறிய வருகிறார். அவன்‘அஸ்வத்தாமா ஹத: நரோவா குஞ்சரோவா’: = அஸ்வத்தாமா சாவு………. யானையோ மனிதனோ– என்று சொல்கிறான்.

அதாவது யானையோ மனிதனோ ஒரு‘அஸ்வத்தாமா காலி! யானையோ மனிதனோ என்பது சம்ஸ்கிருத வாக்கியத்தில் பின்னால் வரும். அந்த நேரத்தில் பாண்டவ சேனை பெரிய டமார துந்துபி ஒலிகளை உண்டாக்கி துரோணர் காதில் விழமுடியாதபடி செய்கின்றனர். துரோணர் மகனின் “மரணச் செய்தி” கேட்டு ஆயுதங்களைத் தூக்கி எறிந்துவிட்டு தியானத்தில் அமர்கிறார். அவரை திருஷ்டத்யும்னன் கொல்கிறான்.

Emblem_of_India.svg

ஆயிரம் பொய் சொல்லியும் ஒரு கல்யாணத்தைச் செய்யலாம் என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. ஒரு நல்ல காரியம் நடக்கத் தீமை இல்லாத பொய்களைச் சொல்லலாம். பையன் அழகானவனா, பெண் அழகானவளா என்று கேட்கும்போது ஆம் அழகானவர் என்று சொல்வதில் தப்பில்லை. அழகு என்பது பார்ப்பவர்களின் பார்வையைப் பொறுத்தது.!!

கௌசிகர் கதை

மஹாபரதத்தில் இன்னொரு சுவையான கதையும் உண்டு. வாழ்நாள் முழுதும் பொய் சொல்ல மாட்டேன் என்று கௌசிகர் என்ற பிராமணர் சபதம் செய்கிறார். அவர் காட்டில் இருக்கையில் வழிப்போக்கர் குழு ஒன்றைத் திருடர்கள் துரத்தி வருகின்றனர். அந்த வழிப்போக்கர்கள் கௌசிகர் இருக்கும் இடத்தைக் கடந்து ஓரிடத்தில் ஒளிந்து கொள்கிறார்கள். திருடர்கள் சற்று நேரத்துக்குப்பின் அங்கே வந்து கௌசிகரிடம் யாராவது இப்படி வந்தார்களா? என்று கேட்டனர். அந்த ‘உண்மை விளம்பி’ (!) ‘ஆமாம் அதோ அங்கே ஒளிந்து கொண்டு இருக்கிறார்கள்’ என்று உண்மையைக் கூறுகிறார். பின்னர் வழிப்போக்கர்களைத் திருடர்கள் என்ன செய்தார்கள் என்பதைச் சொல்லத் தேவை இல்லை. இது வாய்மை அல்ல என்பது வள்ளுவனின் கருத்து.

பொருள்: எந்த ஒரு உயிருக்கும் தீங்கு விளைவிக்காத சொற்களைப் பேசுவதே வாய்மை (291) என்பது வள்ளுவன் துணிபு.

சத்யகாம ஜாபாலா கதை

உபநிஷதத்தில் இன்னும் ஒரு அற்புதமான கதை உண்டு. சத்யகாமன் என்ற சிறுவன், குருவிடம் போய் வகுப்பில் சேர ‘அப்ளிகேஷன்’ கொடுக்கிறான். அவரோ தம்பி மனுவை சரியாக பூர்த்தி செய்யவில்லையே. அப்பா பெயர், குலம், கோத்ரம் எல்லாம் எழுதாமல் ‘பிளாங்க்’ ஆக இருக்கிறத- என்றார். அவன் எங்கள் அம்மா பெயர் ஜாபாலா என்கிறான். வீட்டுக்குப் போய் காலியான இடங்களை நிரப்பி உங்கள் அப்பா பெயர், குலம், கோத்ரம் எல்லாவற்றோடும் வா என்கிறார். அவன் அம்மாவிடம் போய் நடந்த கதையைச் சொல்கிறான். அவளும் ‘மஹா உத்தமி!’ (!) ‘உன் அப்பா யார் என்று எனக்கே தெரியாது’ என்கிறாள். அவனும் உடனே குருவிடம் போய் அம்மா சொன்னதை அப்படியே சொல்கிறான்.
குரு அவனைக் கட்டிப் பிடித்துக் கொண்டு இன்று முதல் உன்பெயர் ‘சத்ய காமன் (உண்மை நாடுவோன்)’. நீ எனது சீடன். பிராமணன் பொய்யே பேசமாட்டான். ஆகையால் நீயும் ஒரு பிராமண குலத்தில் உதித்தவனே என்று சொல்கிறார். உண்மைக்கு அவ்வளவு மதிப்பு (அந்தக் காலத்தில்!!!)

546px-TamilNadu_Logo.svg
பிளாட்டோ கூற்று

கிரேக்க நாட்டு அறிஞர் சாக்ரடீஸின் சீடர் பிளாட்டோ. அவர் Noble Lie “நோபிள் லை” (உன்னத பொய்) சொல்லலாம் என்று ‘ரிபப்ளிக்’ புத்தகத்தில் எழுதி இருக்கிறார். எஸ். எம். டயஸ் எழுதிய ஆங்கில திருக்குறள் விளக்கத்தில் இதைக் கூறுகிறார்.அதாவது கல்வி மற்றும் ராஜாங்க விஷயங்களில் இப்படி உன்னத காரியங்களுக்குப் பொய் சொல்லலாம் என்பது அவரது கருத்து. சாக்ரடீஸ் போன்றோர் இந்திய கலாசாரத்தை நன்கு அறிந்தவர்கள்.

சாக்ரடீஸின் சீடர் பிளாட்டோ. அவருடைய சீடர் அரிஸ்டாடில். அவருடைய சீடர் அலெக்ஸாண்டர். இந்தியாவை எப்படியாவது பார்த்து ரிஷி முனிவர்களை அழைத்துச் செல்லவேண்டும் என்று அலெக்ஸாண்டர் துடியாய்த் துடித்தார். (இது பற்றிய விஷயத்தை சுவாமி விவேகானந்தர், பரமஹம்ச யோகானந்தர் புத்தகங்களில் இருந்து ஏற்கனவே விரிவாகக் கொடுத்துவிட்டேன். அரைத்த மாவையே அரைக்க விருப்பம் இல்லை!).

தொடர்பு கொள்க: swami_48@yahoo.com

‘Every town a Home town’: Famous Tamil Poem

tamil food

Every town a Home town: Famous Tamil Poem
(யாதும் ஊரே; யாவரும் கேளிர்;)

Post No 832 Dated 10th February 2014

Indians think in the same from the Himalayas to the Land’s end Kanyakumari.
I have found out that every great thought in the south or north is echoed in the other part. Great men think alike, they say. Great Indians think very much alike, we can say. Karma theory of oriental religions Hinduism ,Buddhism, Jainism and Sikhism is beautifully explained in the following Tamil poem.

The oft quoted Sangam Tamil verse from Purananuru (192) goes like this:

“Every town our home town; everyman a kinsman.
Good and evil do not come
From others
Pain and relief of pain
Come of themselves
Dying is nothing new.
We do not rejoice
That life is sweet
Nor in anger
Call it bitter
Our lives, however dear,
Follow their own course,
Rafts drifting
In the rapids of a great river
Sounding and dashing over the rocks
After a downpour
From skies slashed by lightning’s
We know this
From the vision
Of men who see
So,
We are not amazed by the great
And we do not scorn the little”
————————-Kaniyan punkundran (Pura Nanuru, verse 192)

Following comparisons will prove my point.
1.Every town our home town; Everyman a kinsman.
‘Earth is my mother; I am her son’, says Veda.
‘God is one; we are his children
World is a happy lake – says the Veda’ (Bharathyar song)

2.Dying is nothing new.
We do not rejoice
That life is sweet
Nor in anger
Call it bitter

Bhagavad Gita says (2-27)

For to the one that is born death is certain and certain is birth for the one that has died. Therefore for what is unavoidable, you should not grieve.

Gautama the Buddha consoled the mother who lost her only son while yet a child by asking her to go into the town and bring him a little mustard seeds from any house where no man has yet died. She went and found that there was no family where death had not entered. She discovered that it is the law of all things that they will pass away.

The Buddhist nun Patacara is represented as consoling many bereaved mothers in the following words:

“Weep not, for such is here the life of man
Unasked he came, unbidden went he hence
Lo! Ask thyself again whence came thy son
To bide on earth this little breathing space
By one way come and by another gone…..
So hither and so hence— why should ye weep?”

— Psalms of Sisters (E.T. by Mrs Rhys Davids (1909) quoted by Dr S Radhakrishnan in his Bhagavad Gita commentary.

Vyasa and Tamil Valluvan also said the same in the Mahabharata and Tirukkural, which I have given in detail in my earlier post: Most Amazing thing in the World!! (in Tamil உலகிலேயே எது பெரிய அதிசயம்? எது ஆச்சர்யம்?)

3.Good and evil do not come
From others
Pain and relief of pain
Come of themselves

Garuda Purana says
Sukhasya dukkhasya na kopi data
Paro dadatiti kubhuddir esa
Swayam krtam svena phalena yujyate
Sarira he nistara yat tvatya krtam

“No one gives joy or sorrow. That others give this is an erroneous conception. our own deeds bring to us their fruits. Body of mine, repay what you have done.”

4.Rafts drifting
In the rapids of a great river
Sounding and dashing over the rocks
After a downpour
From skies slashed by lightning’s
We know this
From the vision
Of men who see

Adi Shankara in his Viveka Cudamani (verse 550) says,
As a piece of wood is borne by the current to a high or low ground, so is his body carried on by the momentum of past actions to the varied experience of their fruits, as these present themselves in due course.

5.We are not amazed by the great
And we do not Scorn the little
Lord Krishna in Bhagavad Gita says,

Sages see with an equal eye, a learned and humble Brahmin, a cow, an elephant or even a dog or an outcaste.(5-18)

Full verse for Tamil Readers:

யாதும் ஊரே; யாவரும் கேளிர்;
தீதும் நன்றும் பிறர்தர வாரா;
நோதலும் தணிதலும் அவற்றோரன்ன;
சாதலும் புதுவதன்றே; வாழ்தல்
இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்
இன்னாது என்றலும் இலமே; ’மின்னொடு
வானம் தண் துளி தlலைஇ, ஆனாது
கல் பொருது இரங்கும் மல்லல் பேர் யாற்று
நீர் வழிப்படூஉம்’ புணை போல் ஆர் உயிர்
முறை வழிப்படூஉம்’ என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.
—-புறம்.192, கனியன் பூங்குன்றன் ( பொருண்மொழிக் காஞ்சித் துறை))

இந்து தர்மக் கோட்பாடுகளை விளக்கும் அருமையான பாட்டு இது.
இவை அத்தனையும் பகவத் கீதையில் உள்ள வரிகள்!!!

Contact swami_48@yahoo.com

This blog has more than 825 research articles on Indian Culture in English and Tamil.

சிந்தனைச் சிற்பிகள் காலண்டர் (மார்ச் 2014- ஸ்ரீ விஜய- 2014)

Please click here
மார்ச்-சிந்தனைச் சிற்பிகள் காலண்டர்

ஜனவரியில் வள்ளுவரின் குறள்
பிப்ரவரியில் மாணிக்கவாசகரின் திருவாசகம்
மார்ச்சில் திருமூலரின் திருமந்திரம்!

31 முக்கிய திருமந்திரப் பாடல்களைப் படித்து பயன்பெறுங்கள்.
எங்கு பயன்படுத்தினாலும் தொகுத்தவர் பெயரையோ
பிளாக்-கின் பெயரையோ கொடுத்து
தமிழன்பர்களை ஊக்குவியுங்கள்

பனை மரங்கள் வாழ்க!

palmyrah_palm_trees

nature's painting

பனைமரங்கள் வாழ்க!
—லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்- 804 தேதி 27 ஜனவரி 14

மரத் தமிழன் வாழ்க- வாழை மரத் தமிழன் வாழ்க என்ற கட்டுரை வரிசையில் பனைமரத் தமிழர்களைக் காண்போம்.

மரங்கள் குறித்த தமிழன் அன்பு தனிப்பட்டது. கோவில் தோறும் தல மரங்களை வைத்தவன் தமிழன். அரசாட்சி தோறும் காவல் மரங்களை வைத்தவன் தமிழன். குறிஞ்சிப் பாட்டில் கபிலன் என்ற “புலனழுக்கற்ற அந்தணாளன்”, 99 மலர்களை அடுக்கிப் பாடினார். பனை மரத்தையும் தமிழன் விட்டு வைக்கவில்லை. பழமொழிகள் மற்றும் பாடல்கள் வாயிலாக நமக்கு அரிய பெரிய கருத்துகளைப் புகட்டுகின்றனர் தமிழ் கவிஞர்கள். இதோ சில சுவை மிகு கவிகள்:

உத்தமர்தாம் ஈயுமிடத்து ஓங்குபனை போல்வரே
மத்திமர்தாம் தெங்குதனை மானுவரே—முத்தலரும்
ஆம் கமுகு போல்வார் அதமரவர்களே
தேன் கதலியும் போல்வார் தேர்ந்து (நீதி வெண்பா)

பனை மரம் தண்ணீர் ஊற்றாமலேயே பழம் தருகிறது. அதே போல மேன் மக்கள் யாதொரு உதவியையும் பெறாமலேயே உதவி செய்வர். தென்னை மரம் இடையிடையே தண்ணீர் ஊற்றினால் காய்தருகிறது அதே போல மத்திமர் ஒருவர் உதவி செய்தால் பிரதி உபகாரமாக உதவி செய்வர். கமுகும் வாழையும் எப்போதும் நீர் பாய்ச்சினால்தான் பலன் தரும். இப்படி உதவி செய்பவர்கள் கீழ்மக்கள்.
இன்னொரு வகையிலும் பொருள் கொள்ளலாம். பனம் பழம் தானாகவே பழுத்து பலன் தரும் இத்தகையோர் மேல்மக்கள். தென்னையோ ஏறி காய்களைப் பறித்தால்தான் உதவும் இத்தகையோர் மத்திய மக்கள். கமுகையும் வாழையையும் வெட்டிப் புகைத்தால்தான் பழங்கள் பழுக்கும் இத்தகையோர் கீழ் மக்கள்.இதற்கு நேர்மாறாக, வேறு இரண்டு கவிஞர்கள் பனை மரத்தை கீழ்மக்களோடு உவமிக்கின்றனர்.

விரும்பியடைந்தார்க்கும் சுற்றத்தவர்க்கும்
வருந்தும் பசி களையார் வம்பர்க்குதவல்
இரும்பணை வில்வென்ற புருவத்தாய்! ஆற்றக்
கரும்பணை யன்ன துடைத்து (பழமொழி)
வளைத்த மூங்கில் வில்களை வெல்லும் புருவத்தை உடையவளே! தன்னை அண்டி வந்தவர்க்கும் சுற்றத்தார்க்கும் உதவாமல், அவர்களுடைய பசியைப் போக்காமல், அயலாருக்கு உதவும் மக்கள் கரிய பனை மரத்தை ஒப்பர். (பனை மரம் வித்தை ஊன்றியவர்க்கு உதவாமல் முப்பது ஆண்டுகளுக்குப் பின் தான் பலன் கொடுக்கும்.
தேம்படு பனையின் திரள் பழத்தொரு விதை
வானுற ஓங்கி வளம்பெற வளரினும்
ஒருவர்க்கிருக்க நிழலாகாதே (வெற்றி வேர்க்கை)

பனை மரத்தின் இனிமையான திரண்ட ஒரு கொட்டையானது ஆகாயத்தை நோக்கி நெடிது வளர்ந்தாலும் ஒருவர் கீழே நிற்கக்கூட நிழல் கிடைக்காது. அது போல கீழ்மக்கள் கையில் எவ்வளவு செல்வம் சேர்ந்தாலும் யாருக்கும் பயன்படாது. இது பிறிது மொழிதல் அணி.
ஊர்ப் பனையும் சுடுகாட்டுப் பனையும்
நடுவூருள் வேதிகை சுற்றுக்கோட்புக்க
படுபனை யன்னர் பலர் நச்ச வாழ்வார்
குடிகொழுத்தக் கண்ணும் கொடுத்துண்ணா மாக்கள்
இடுகாட்டுள் ஏற்றைப் பனை (நாலடியார்)

பலரும் விரும்பும்படி வள்ளல் தன்மையுடன் வாழ்பவர் ஊர் நடுவில் மேடையால் சூழப்பட்ட பெண் பனை மரத்தைப் போன்றவர். செல்வம் இருந்தும் பிறருக்குக் கொடுக்காதவர் சுடுகாட்டில் இருக்கும் ஆண் பனை மரத்தைப் போன்றவர்.
கற்றறிந்த நாவினார் சொல்லார்தம் சோர்வஞ்சி
மற்றையராவார் பகர்வர் பனையின் மேல்
வற்றிய ஓலை கலகலக்கும், எஞ்ஞான்றும்
பச்சோலைக்கு இல்லை ஒலி (நாலடியார்)

பொருள்: கற்றுத் தேர்ந்தவர்கள், பேசினால் பிழை வந்துவிடுமே என்று அஞ்சி கண்டபடி பேசமாட்டார்கள். நன்கு கல்லாதவர்கள் பனை மரத்தில் உலர்ந்த ஓலைகள் எப்போதும் சப்தம் உண்டாக்குவது போல பேசிக்கொண்டே இருப்பர் (நிறை குடம் தழும்பாது, குறைகுடம் கூத்தாடும் என்பது போல இது)

வள்ளுவனுக்குப் பிடித்த பனங்கொட்டை
திருவள்ளுவருக்கு மிகவும் பிடித்த சொல் தினையும் பனையும். மூன்று குறள்களில் ( 104, 433, 1282) தினை அளவையும் பனை அளவையும் உவமையாக வைத்து பல விஷயங்கள் சொல்லுகிறார். இதோ ஒரு உதாரணம்:

தினைத் துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன் தெரிவார் (104)
பொருள்: ஒருவன் தினை அளவு நன்றி செய்தாலும் அதைச் சிறியது என்று எண்ணாமல் பனை அளவு பெரிதாகவே கருதுவர் உதவியின் பயனை அறிந்தவர்கள்.
இதே கருத்தை நாலடியாரிலும் காணலாம்:
தினை அனைத்தே ஆயினும் செய்த நன்றுண்டால்
பனை அனைத்தா உள்ளுவர் சான்றோர்………………

பலராமனின் பனைக்கொடி
கண்ணனின் சகோதரன் பலராமன். அவனுடைய கொடி பனைக்கொடி. இந்தக் கொடியை தொல்காப்பியம் (உயிர் மயங்கியல் சூத்திரம்: பனை முன் கொடிவரின்………..), சங்கத் தமிழ் நூல்கள் கலித்தொகை (104-7), பரிபாடல் (2-22), புறநானூறு 56-4,58-14), ஆகியன குறிப்பிடுகின்றன. ஆரிய-திராவிட வாதம் பேசிப் பிதற்றித் திரிவோருக்கு மேற்கூரிய சங்கப் பாடல்கள் செமை அடி கொடுப்பதையும் இங்கே குறிப்பிடுதல் பொருத்தம்.
பாண்டியன் தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியனை மாங்குடிக்கிழார் பாடிய புறப்பாட்டில் (புறம்.24) கடலோர பரதவர் மகளிர் இளநீர், பனை நுங்கின் நீர், கர்ப்பஞ்சாறும் கலந்து உண்டார்கள் என்பார்.

அதிசயப் பனை
விபீஷணன் ராம பிரானுக்கு ஏழு பொன்பனைகளைக் கொடுத்ததாக ராமாயணம் கூறுகிறது. இந்த ஏழு பொன் பனை மரங்கள் என்ன, ஏன் என்று விளக்கப்படவில்லை. இது ஒரு ஆராய்ச்சிக்குரிய விஷயம். ஒருவேளை ராமன் ஏழு மராமரங்களை ஒரே அம்பில் துளைத்ததால் இது கொடுக்கப்படதோ?

சம்பந்தரும் பனைமரமும்
காஞ்சிக்கு அருகில் இருக்கும் திரு ஓத்தூரில் (செய்யாறு) உள்ள பனை மரங்களை ஒரு சிவபக்தர் கோவிலுக்கு என்று எழுதிவைத்தார். அவைகள் எல்லாம் ஆண்பனைகளாக இருந்தமையால் காய்க்கவில்லை. நாத்திகர்கள் அவரைக் கிண்டல் செய்தனர். உன் கடவுளுக்கு சக்தி இருந்தால் அவைகளைக் காய்க்கச் செய்யலாமே என்று பகடி பேசினர் (நெற்) பதடிகள். அந்த நேரத்தில் திருஞான சம்பந்தர் திரு அண்ணாமலையானைத் தரிசனம் செய்துவிட்டுத் திரும்பிவந்து கொண்டிருந்தார். பக்தர் தனது மன வருத்தத்தைச் சொன்னவுடன் சம்பந்தர் ஒரு பதிகம் பாடினார். பனை மரங்கள் எல்லாம் காய்த்துக் குலுங்கின.1300 ஆண்டுகளுக்கு முன்னர் இது நிகழ்ந்தாலும் அந்தப் பனை மரங்கள் இறவாப் புகழ் பெற்றுவிட்டன.

பனைமரப் பழமொழிகள்
பனை நிழலும் நிழலோ, பகைவர் உறவும் உறவோ?
பனை மரத்துக்குக் கீழே நின்று பாலைக் குடித்தாலும் கள் என்றுதான் சொல்லுவார்கள்.
பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சுமா?
பட்டணத்து நரியை பனங்காட்டு நரி ஏய்த்துவிடும்
பனை ஏறி விழுந்தவனை கடா ஏறி மிதித்ததாம்
பனையிலிருந்து விழுந்தவனை பாம்பு கடித்தது போல
பனை ஏறியும் பாளை தொடாது இறங்கினாற் போல
பனை மட்டையில் மழை பெய்ததுபோல
பனை மரத்துக்கு நிழல் இல்லை, பறையனுக்கு முறை இல்லை
பனை மரம் ஏறுகிறவனை எத்தனை தூரம் தாங்கலாம்?
பனை வெட்டின இடத்திலே கழுதை வட்டம் போட்டது போல
பழமொழி நானூறு என்னும் பதினென்கீழ்க்கணக்கு நூலில் பல பனை மரப் பழமொழிகள் காணப்படுகின்றன:
குறைப்பர் தம்மேலே வீழப் பனை
பனைப் பதித்து உண்ணார் பழம்

மரம் பற்றிய எனது பழைய கட்டுரைகள்:
1.இந்திய அதிசயம்: ஆலமரம் 2.அருகம்புல் ரகசியங்கள்
3.சிந்துசமவெளியில் அரசமரம் 4.ஒன்றுக்கும் உதவாத உதியமரமே
5.நெல்லிக்காய் மகிமை: அவ்வையாரும் ஆல்பிரூனியும் அருணகிரிநாதரும் 6.இளநீர் மகிமையும் தென்னையின் பெருமையும்
7.Indian Wonder: The Banyan Tree 8.Flowers in Tamil Culture
9.Power of Holy Durva Grass 10.Ancient Tamil Dress 11 மரத் தமிழன் வாழ்க- வாழை மரத் தமிழன் வாழ்க 12. ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது.
தொடர்பு முகவரி swami_48@yahoo.com

nungu1

nungu

Pictures of Palmyra Tress and Fruits taken from other websites;thanks.

சங்கத் தமிழ் இலக்கியத்தில் யக்ஷிணி, அணங்குகள்

Please click here for the article:

சங்கத் தமிழ் இலக்கியத்தில் யக்ஷிணி

214px-Didarganj-Yakshi-3bc-Patna

yakshi13

yakshi6

Images of Yakshis.

25 முக்கிய வள்ளலார் பாடல்கள்

Compiled by London Swaminathan; Post No 792 dated 17th January 2014.

Please click here for the most popular Thiru Arutpa songs of Ramalinga Swamigal

அருட்பெரும் ஜோதி வள்ளலார் பாடல்கள்

vallalr stamp

Thiruvarupa_cover

Sathya_gnana_sabha,_vadalur_3

Pictures are taken from Wikipedia and other sites;thanks.

இனியது கேட்கின் தனிநெடு வேலோய்!

avvaiyum muruganum

By London Swaminathan; post No. 753 dated 21st December 2013.

அவ்வையாரிடம், முருகப் பெருமான் ‘அம்மையே! இனியது எது?’ என்று கேட்டார்; அவ்வை சொன்னார்:

“இனியது கேட்கின் தனிநெடு வேலோய்!
இனிது! இனிது! ஏகாந்தம் இனிது !
அதனினும் இனிது ! ஆதியைத் தொழுதல்
அதனினும் இனிது ! அறிவினர் சேர்தல்
அதனினும் இனிது! அறிவுள்ளோரை
கனவிலும் நனவிலும் காண்பதுதானே!”

பொருள்: தனிமையில் இருப்பது இனிது. அதைவிட இனிது அந்தத் தனிமையிலும் இறைவனைத் தொழுவது இனிது. அதைவிட இனிது சத்சங்கம், அதாவது ஞானம் படைத்த நல்லோரைச் சேர்ந்து வாழ்வது. எல்லாவற்றையும் விட இனிது கனவிலும் நனவிலும் அந்த பெரியோரை நினைப்பதே! அதாவது அவர்களைப் பின்பற்றுவதே!

இதையே வாக்குண்டாம் என்ற பாடலில் மேலும் தெளிவாகச் சொல்கிறார்:

“நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க
நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே—நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே அவரோடு
இணங்கி இருப்பதுவும் நன்று” —-(வாக்குண்டாம்)

இந்த அவ்வையாருக்கு முன் வாழ்ந்த, பாரதத்தின் மிகப் பெரிய தத்துவ ஞானி ஆதி சங்கரர், அவருடைய ‘பஜ கோவிந்தம்’ என்னும் பாடல் நூலில் கூறுகிறார்:
சத் சங்கத்வே நிஸ்ஸங்கத்வம்
நிஸ்ஸங்கத்வே நிர்மோஹத்வம்
நிர்மோஹத்வே நிஸ்ஸலதத்வம்
நிஸ்ஸலதத்வே ஜீவன் முக்தி —— (பாடல் 9, ‘பஜ கோவிந்தம்’)

பொருள்; ஞானிகளின் சேர்க்கையினால், ஆசைகள் அறவே நீங்கும்; ஆசைகள் நீங்கினால் மோஹம் நீங்கும்; மோஹம் நீங்கினால் சஞ்சலமற்ற திடச் சித்தம் தோன்றும்; இந்த திடச் சித்தம் வந்துவிட்டால் முக்தி கிடைக்கும், அதாவது, உயிர்வாழும்போதே யோகிகள் ஆகிவிடுவோம்.

மேற்கூறிய நிலைக்கு எடுத்துக்காட்டாக, நமது காலத்தில் வாழ்ந்த காஞ்சி பரமாச்சார்ய சுவாமிகள், ரமண மகரிஷி, ராமகிருஷ்ண பரமஹம்சர் ஆகியோரைக் கூறலாம்.
பகவான் ரமணர் எழுதிய ‘உள்ளது நாற்பது’ நூலின் அனுபந்தத்தில் ஆதி சங்கரரின் மேற்கூறிய ஸ்லோகத்தைத் தமிழில் தந்துள்ளார்.

கண்ண பிரானும், பகவத் கீதையில், சொல்லுவார்:
பார்த்தா! எப்பொழுது மனத்தில் உள்ள ஆசைகள் அனைத்தையும் தூரத் தள்ளுகிறானோ, ஆத்மாவிடத்தில் ஆத்மாவினாலேயே அடைந்த மகிழ்ச்சி நிறைந்த அவன் அப்போது ஸ்திதப் ப்ரக்ஞன் என்று சொல்லப்படுகிறான் (கீதை 2—55)

ராமகிருஷ்ண பரமஹம்சர் இந்த நிலையை இன்னும் அழகாக விளக்குவார்: “நுனியில் பிளவு உடைய நூல் ஊசியின் காது வழியே செல்லாது. அதைப்போல ஆசைகள் அற்பம் இருந்தாலும் ஒருவன் ஈசுவர சந்நிதானத்தை அடையமாட்டான்”.

upadesh

வள்ளுவர் அறிவுரை:

தமிழ் முனிவன், தெய்வப் புலவன் திருவள்ளுவரும் திருக்குறளில் பெரியாரைத் துணைக்கோடல், சிற்றினம் சேராமை எனப் பல அதிகாரங்களில் இந்தக் கருத்தை விளக்குவார்:
“ஒருவன் அடையும் பேறுகள் எல்லாவற்றிலும் அரிய பேறு எனப்படுவது தம்மைவிட மூத்த ஆறிவுடையோரப் போற்றித் தமக்கு சுற்றமாகக்கொள்ளும் செயலாகும் ( குறள் 443)
ஏறத்தாழ அவ்வையார், இனியது கேட்கின் தனிநெடு வேலோய் …பாடலில் சொன்ன கருத்தை ரத்தினச் சுருக்கமாகச் சொல்லிவிட்டார் வள்ளுவர் !

அறத்தின் கூறுபாடுகளை அறிந்த மூத்த அறிவுடையவர்களின் அரிய நட்பினைக் கொள்ளும் வகையினை ஆராய்ந்து அறிந்துகொள்ள வேண்டும் (குறள் 441)

உற்ற துன்பத்தை முதலில் நீக்கி, மீண்டும் அந்த துன்பம் வராமல் முன்கூட்டியே காக்கவல்ல பெரியோர்களை போற்றி நட்பாகக் கொள்ள வேண்டும் (442)

கதாசரித் சாகரம் என்ற உலகிலேயே மிகப் பெரிய கதை நூலிலும் அழகான மேற்கோள்கள் சம்ஸ்கிருதத்தில் உள்ளன. பெயர் தெரியாத ஒரு புலவர் எழுதிய விவேக சிந்தாமணி நூலில் அதற்கு இணையான மேறோள்கள் இருப்பதால் அந்தப் பாடல்களைத் தருகிறேன். எளிய தமிழ் என்பதால் பொழிப்புரையே தேவை இல்லை:

இம்மையில் சுவர்க்கம்
நற்குணன் உடைய வேந்தை
நயந்து சேவித்தல் ஒன்று;
பொற்பு உடை மகளிரொடு
பொருந்தியே வாழ்தல் ஒன்று;
பற்பலரோடு நன்னூல்
பகர்ந்து வாசித்தல் ஒன்று;
சொற்பெறும் இவைகள் மூன்றும்
இம்மையில் சுவர்க்கம் தானே! —(விவேக சிந்தாமணி)

மூன்று வகை சொர்க்கலோக இன்பங்களில் ‘வாசகர் வட்டமும்’ ஒன்று. அந்த வாசகர்கள் நன்னூலை வாசித்து , விவாதித்து பகிர்ந்து கொள்வராம்; அதாவது சத் சங்கம்!

Natha-Swamis-2008

அறிவுள்ளோர் தமக்கு நாளும்
அரசரும் தொழுது தாழ்வார்
நிறையொடு புவியில் உள்ளோர்
நேசமாய் வணக்கம் செய்வார்
அறிவுள்ளோர் தமக்கும் யாதோர்
அசடது வருமே யாகில்
வெறியர் என்று இகழார் என்றும்
மேதினி உள்ளோர் தாமே!
அறிவுள்ளோருக்கு அரசரும் பணிவர் என்பது சொல்லாமலே விளங்கும் !

அருட் பிரகாச வள்ளலார் ராமலிங்க சுவாமிகள்:
“ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற
உத்தமர் தம் உறவு வேண்டும்
உள்ளொன்று வைத்து புறம்பொன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்” என்று பாடுகிறார்.
சத் சங்கம் வேண்டும் என்பதை வள்ளலார் தூய தமிழில் கூறிவிட்டார்!

நாமும் ஞானிகளின் சந்நிதியில் நலம் பெறுவோம்!
சத் சங்க பஜனைகளில் பங்கு கொள்ளுவோம்!!

contact swami_48@yahoo.com

ஔவையாரை மிரட்டிய பேய் !

ghost4

By London Swaminathan; Post No. 751 dated 19th December 2013.

தமிழ் உலகம் அறிந்த மூதாட்டி ஔவை. சங்க காலம் முதல் 16, 17 ஆம் நூற்றாண்டு வரை பல ஔவையார்கள் தமிழ் நாட்டில் வாழ்ந்தது அவர்களின் மொழி நடையிலிருந்து தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. குறைந்தது மூன்று முதல் ஆறு ஔவையார்கள் வரை வாழ்ந்ததாக ஆராய்ச்சியாளர் கருதுகிறார்கள். பேயால் மிரட்டப்பட்ட ஔவைப் பாட்டி சமீப காலத்தில் வாழ்ந்த புலவர் என்பது அவரது பாடல்களில் தெரிகிறது. ஒருவேளை அவர் காலத்தில் நடந்த நிகழ்ச்சிகளைப் பிற்காலப் புலவர்கள் ஔவையாரின் பெயரில் எழுதியிருந்தாலும் வியப்பதற்கில்லை.

எது எவ்வாறாகிலும் ‘நெருப்பு இல்லாமல் புகையாது’, ஏதோ ஒரு ஔவையார் பேயைக் கண்டதால்தான் இந்தக் கதை இன்றுவரை நீடிக்கிறது. மேலும் ஔவை என்று சொன்னவுடன் தமிழ் மொழிப்பற்றும், தெய்வ பக்தியும் பளிச்சென மின்னுவதையும் காண்கிறோம். ஏற்கனவே சிந்து சமவெளியில் சில முத்திரைகளில் பேய் இருப்பதையும், நீலி என்ற பெண்பேய் 72 தமிழர்களைக் கொன்றதையும், விவேகானந்தர், பேய்கள் பற்றி சொன்னதையும் தனித் தனியே எழுதிவிட்டேன். இதே பிளாக்—கில் நீங்கள் படித்திருப்பீர்கள்.

இதோ மற்றும் ஒரு சுவையான உண்மைக் கதை:

ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தார். அவருக்குப் பிறந்த பிள்ளையோ மஹா மூடன். எவ்வளவோ வாத்தியார்கள் வந்தும் அவனுக்கு அரிச்சுவடி கூட கற்பிக்க முடியவில்லை ஆனால் உடல்வாகில் ஆண் அழகன். மனம் உடைந்த ராஜா, இவனிடம் அரசாட்சி போய்விடக்கூடாது என்று கருதி அவனை நாடு கடத்தினார்.

பக்கத்து நாட்டுக்குப் போன ராஜ குமாரன், தெருவில் சுற்றிக் கொண்டிருந்தான். அந்த நாட்டு இளவரசி ‘தமிழறியும் பெருமாள் ஏலவார்குழலி’ உப்பரிகையில் இருந்து வேடிக்கை பார்த்தபோது இந்த இளவரசன்- ஆண் அழகனைக் கண்டு காதல் வசப்பட்டாள். ஒரு ஓலையில் காதல் கடிதம் எழுதி அதை அவனிடம் சேர்ப்பிக்க தோழியை அனுப்பினாள். கடிதம் மூலம் இரவில் ஊரின் வடக்குப் புற சத்திரத்துக்கு வரும்படி அழைத்தாள்.

ghost-3

எழுதறிவில்லாத அந்த இளவரசன் ரோட்டில் பிச்சை எடுதுக் கொண்டிருந்த குஷ்டரோஹி ஒருவனிடம் ஓலையைக் காண்பித்தான். அவனுக்கு ரொம்ப சந்தோஷம். சரியான ஏமாளி என்பதை உணர்ந்து, அந்தக் கடித வாசகத்தை மாற்றிச் சொன்னான். அந்த இளவரசன் ஒரு குற்றவாளி என்று ராஜா கருதுவதால் அவன் உயிர்பிழைக்க உடனே தலைநகரை விட்டு வேறிடத்துக்குப் போகவேண்டும் என்று கடித ஓலையில் இருப்பதாகப் பொய் சொன்னான்.

இளவரசன் ஓலையை வாங்கிக் கொண்டு ஓட்டம் பிடித்தான். குஷ்டரோஹி அன்று இரவில் சத்திரத்துக்குச் சென்று இருட்டில் காத்திருந்தான். ராஜகுமாரி வந்தவுடன் அவளுடன் காதல் மொழி பேசிக் கட்டித் தழுவி இரவைக் கழித்தான். பொழுது புலர்ந்தது. உண்மையை அறிந்த ராஜகுமாரி மனம் உடைந்து அங்கேயே தற்கொலை செய்துகொண்டாள்.

இதற்குள் ராஜகுமாரன், வேறு ஒருவனிடம் ஓலையைக் காண்பிக்க, அவன உண்மையைக் கூறினான். இளவரசன் ஓடோடி சத்திரத்துக்கு வந்தான். ராஜகுமாரி சடலத்தைக் கண்டு அவனும் தற்கொலை செய்துகொண்டான். இருவரும் இளமையில் வாழ்க்கையை முடித்துக் கொண்டதால் பேயாகி சத்திரத்தில் அலைந்தார்கள். வருவோர் போவோருக்கு எல்லாம் தொல்லையும் கொடுத்தார்கள்.

ஒருநாள் நமது தமிழ் மூதாட்டி ஔவையாரும் அந்தப் பக்கம் வந்து சத்திரத்தில் இரவில் ஓய்வெடுக்கப் போனார். அதைப் பார்த்த பொது மக்கள் அங்கே அலையும் பேய்களின் சேட்டைகளை எடுத்துரைத்தனர். அவரோ ‘என்னை ஒரு பேயும் ஒன்றும் செய்யமுடியாது’ என்று துணிச்சலாக பாயை விரித்துப் படுத்தார்.

முதல் ஜாம முடிவில் ஒரு பெண் பேய் அலறிக்கொண்டு வந்தது. ஔவையாரை ‘எற்று எற்று’ என்று சொல்லிக்கொண்டு எற்ற வந்தது. ஔவையார் ஒரு வெண்பாப் பாடலைப் பாடியவுடன் அது ஓட்டம் பிடித்தது.
Ghosts-spirits2

வெண்பா இருகாலிற் கல்லானை வெள்ளோலை
கண்பார்க்கக் கையால் எழுதானைப்—பெண்பாவி
பெற்றாளே பெற்றாள் பிறர் நகைக்கப் பெற்றாளே
எற்றோமற் றெற்றோமற் றெற்று

வெண்பாவை இரண்டுமுறை கற்றாலும் அறியாத மூடன், ஓலையில் எழுதமுடியாத பேதையை எல்லோரும் நகைக்கும்படி பெற்றாளே அவளைப் போய் எற்றி உதை என்பது முதல் பாட்டின் பொருள்.

மீண்டும் இரண்டாம் ஜாம முடிவில் இதே போல நடந்தது. ஔவையார் மீண்டும் ஒரு வெண்பா ஆயுதத்தைப் பிரயோகித்தார். பெண் பேய் ஒட்டம் பிடித்தது.

கருங்குளவி சூளுரைத்து ஈச்சங்கனி போல்
வருந்தினர்க் கொன்றீயாதான் வாழ்க்கை – அரும்பகலே
இச்சித் திருந்த பொருள் தாயத்தார் கொள்வரே
எற்றோமற் றெற்றோமற் றெற்று

விஷக் குளவி வசிக்கும் ஈச்ச மரம் யார்க்கும் உதவாதது போல, வருந்தியவர்களுக்கு தானம் செய்யாதவன் வைத்திருக்கும் பொருள், இறுதியில் சுற்றத்தார்க்குப் போய்ச் சேரும். அத்தகைய கருமிகளை எட்டி உதை என்பது இரண்டாம் பாட்டின் பொருள்.

மூன்றாம் ஜாம முடிவிலும் இதே கதை. மேலும் ஒரு வெண்பா குண்டு!! பேய் ஓட்டம்!!

வானம் உளதால் மழையுளதால் மண்ணூலகில்
தானம் உளதால் தயை உளதால்—ஆனபொழுது
எய்த்தோம் இளைத்தோம் என்றே ஏமாந்திருப்பாரை
எற்றோமற் றெற்றோமற் றெற்று

வானமும் தானமும், மழையும் இவ்வுலகில் உண்டு. இதனை எண்ணி சோம்பித் திரிவாரை எத்தி உதை என்பது மூன்றாம் பாட்டின் பொருள்.

நான்காம் ஜாம முடிவிலும் மேலும் ஒரு வெண்பாவை வீசவே பேய் அவர் காலில் விழுந்து விமோசனம் வேண்டவே, அடுத்த ஜன்மத்தில் நீ புலவனாகப் போவாய் என்று வாழ்த்தினார்.

எண்ணாயிரத்தாண்டு நீரில் கிடந்தாலும்
உண்ணீரம் பற்றாக் கிடையே போல் – பெண்ணாவாள்
பொற்றொடி மாதர் புணர்முலை மேல் சேராரை
எற்றோமற் றெற்றோமற் றெற்று

எட்டாயிரம் ஆண்டுகள் நீரில் கிடந்தாலும் ஈரப்பசையே ஏறாத நெட்டிமரம் போல சிலர் உள்ளனர். மாதர் இன்பம் என்பதையே அனுபவியாத அத்தகைய மரக்கட்டை போன்றோரை போய் எத்தி உதை என்று சொல்லவே, பேய் ஔவையார் காலில் விழுந்தது.
ghost 1

பேய்கள் எனது முந்தைய கட்டுரைகளையும் காண்க:

1.தமிழ்நாட்டை உலுக்கிய பேய்
2.சிந்து சமவெளியில் பேய் முத்திரை
3.வள்ளுவன் சொன்ன பேய்க்கதை
4.பேய்கள் பற்றி பாரதி & விவேகானந்தர்

எனது பிளாக்—கில் ஆங்கிலத்திலும் இக்கட்டுரைகள் கிடைக்கும்.
தொடர்பு முகவரி swami_48@yahoo.com