ராம நாமம் ஒரு வேதமே!

home3

Ramayana Ballet in Indonesia

Post No 1712; Date 13th March 2015

 

தமிழ் திரைப்படங்களில் ராமர் – 11

by ச.நாகராஜன்

ராம நாமம் ஒரு வேதமே!

ராமாயணம் வேத சாரம்

எழுதாக் கிளவி என தமிழ் நூல்களால் சிறப்பித்துக் கூறப்படும் வேதங்கள் பாரத தேச மக்கள் அனைவருக்குமான சொத்து. அதன் சாரமே ராமாயணம் என மகான்கள் அருளியுள்ளனர்.

 

वेद वेद्ये परे पुंसि जाते दशरथात्मजे ।
वेदःप्रचेतसादासीद् साक्षाद् रामायणात्मना ॥
வேத வேத்யே பரே பும்ஸி ஜாதே தசராத்மஜே I

வேத: ப்ரசேதசாதாஸீத் சாக்ஷாத் ராமாயணாத்மனா II

 

“வேதங்களினால் அறியப்படும் இறைவன் தசரதனின் புதல்வனாகப் பிறந்தான்; வேதம் ப்ரசேதஸ் (வால்மீகி) முனிவரிடமிருந்து) ராமாயணமாகப் பிறந்தது” என்பது இதன் பொருள்.

இதை மீண்டும் மீண்டும் மகான்கள் வலியுறுத்தி வந்துள்ளனர். இப்படி அவதரித்த பெரும் அருளாளர்களின் ஒருவர் குரு ராகவேந்திரர். மந்த்ராலய மகான் என போற்றப்படும் இவரது திவ்ய சரித்திரம் ராம நாம மஹிமையை வெளிப்படுத்தும் அற்புதமான வரலாறு ஆகும்.

 

ram

சூப்பர் ஸ்டாரின் நூறாவது படம்!

இவரது வாழ்க்கையை தமிழ் மக்களுக்கு அளிக்க வேண்டும் என்ற உன்னத நோக்கம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்குத் தோன்றியது. தனது நூறாவது படமாக இதை எடுத்து அதில் ராகவேந்திரராக நடிக்க அவர் தீர்மானித்தார். படத்தின் இயக்குநர் எஸ்.பி. முத்துராமன். அவர் சற்று தயங்கிய போது இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் அவரை ஊக்குவித்து கவிதாலயா வெளியீடாக அதை வெளியிட்டார்.ஶ்ரீராகவேந்திரா படம் 1985ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.

சாதாரணமாக ஸ்டைல் மன்னர் என்று அழைக்கப்படும் சூப்பர் ஸ்டார் சண்டைக் காட்சிகளிலும் காதல் காட்சிகளிலும் அனாயாசமாக நடிப்பார்; ரசிகர்கள் அவரிடம் எதிர்பார்க்கும் விதவிதமான ஸ்டைல்களுடன் பஞ்ச் டயலாக்குகளும் அனைவரையும் பரவசப்படுத்தும்.

அவர் இப்படி ஒரு அருளாளர் வேடத்தில் சோபிக்க முடியுமா? இந்த ஐயத்தை நீக்கியதோடு, தான் ஒரு சிறந்த நடிகர் என்பதை இந்தப் படத்தின் மூலம் நிரூபித்து அனைவரையும் வியக்க வைத்து உயர்தர குணசித்திர நடிகர் பட்டியலில் இடமும் பெற்றார் சூப்பர்ஸ்டார்.

படம் வசூலில் சற்று பின் தங்கினாலும், பண்பாட்டைப் பரப்பியதில் முன்னணி இடத்தைப் பிடித்தது.

படத்தில் நடித்தோர் வியாழக்கிழமை விரதம் இருப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு பக்தியுடன் நடித்தனர். மக்கள் விரும்பிப் பார்த்த படமாக இது அமைந்தது.

இந்தப் படத்திற்கு இசையமைத்தவர் இளைய ராஜா. பாடல்களை எழுதியவரோ வாலி.

 

IMG_0275

Vali- Sugreeva Fight

வாலி சிறந்த ராம பக்தர். ஶ்ரீரங்கத்தைச் சேர்ந்தவர். வார்த்தைக் கோவைகளை இடம் பார்த்து இசை நோக்கி அமைப்பவர். அவர் எழுதிய ஒரு பாடலை ஶ்ரீ ராகவேந்திரர் கோவில் மண்டபத்தில்  வீணை இசைத்துப் பாடுவதாக ஒரு காட்சி படத்தில் இடம் பெற்றது. ரஜினியின் நடிப்பு இந்தக் காட்சியில் மிக அருமையாக இருப்பதை அனைவரும் ரசித்தனர். ஸ்வர வரிசைகளை உச்சரித்து, நல்ல முகபாவம் காட்டி, சொற்களின் வேகத்திற்கேற்ப வீணையையும் மீட்டி,  தானும் பரவசப்பட்டு பக்தர்களையும் பரவசப்படுத்தினார்.

பாடலைப் பாடியவர்கள் சீனுக்குட்டி பாகவதர், இளமையாக ராகவேந்திரர் பாடும் போது வாணி ஜெயராம், பெரியவராகப் பாடும் போது கே ஜே ஜேசுதாஸ்.

பாடல் இது தான்!

 

ராம நாமம் ஒரு வேதமே!

ராம நாமம் ஒரு வேதமே

ராக தாளமொடு கீதமே

மனம் எனும் வீணை மீட்டிடுவோம்

இசை எனும் மாலை சூட்டிடுவோம்

அருள் மிகு  ராம நாமம் ஒரு வேதமே

ராக தாளமொடு கீதமே

அவன் தான் நாரணன் அவதாரம்

அருள்சேர் ஜானகி அவன்தாரம்

கௌசிக மாமுனி யாகம் காத்தான்

கௌதமர் நாயகி சாபம் தீர்த்தான்  (ராம நாமம் ஒரு வேதமே)

ஓர் நவமி அதில் நிலவெலாம் புலர, நினைவெலாம்  மலரவே,  உலகு புகழ்            தாய் மடியில் ஒரு மழலையாய் உதிக்க, மறையெலாம் துதிக்கவே,  தயரதனின் வம்சத்தின் பேர் சொல்ல, வாழ்த்துக்கள் ஊர் சொல்ல,  விளங்கிய திருமகனாம் ஜனகர் மகள் வைதேகி பூச்சூட, வைபோகம் கொண்டாட, திருமணம் புரிந்தவனாம்

மணிமுடி இழக்கவும் மரவுரி தரிக்கவும்

அரண்மனை அரியணை துறந்தவனாம்

இனியவள் உடன்வர இளையவன் தொடர்ந்திட                                 வனங்களில் உலவிடத் துணிந்தவனாம்

ஶ்ரீ ராம சங்கீர்த்தனம்

நலங்கள் தரும் நெஞ்சே

மனம் இனிக்க, தினம் இசைக்க, குலம் செழிக்கும்

தினம் நீ சூட்டிடு பாமாலை

இது தான் வாசனைப் பூமாலை

இதைவிட ஆனந்தம் வாழ்வில் ஏது

இசைத்தே நாமமே நாளும் ஓது  (ராம நாமம் ஒரு வேதமே)

0487

Sita in Asoka Vana

 

வாலி என்ற புனைப்பெயரில் தன்னை அடையாளம் காட்டிய டி.எஸ்.ரங்கராஜன் 15000 பாடல்களுக்கு மேல் எழுதிய அரும் கவிஞர். ராமகாதையை எளிய நடையில் அவதாரபுருஷன் என்ற தலைப்பில் எழுதி வந்த இவரது தொடரை ஆனந்தவிகடனில் பல்லாயிரக்கணக்கான வாசகர்கள் படித்துப் பாராட்டினர்.

அவர், ‘வேத: ப்ரசேதசாதாஸீத் சாக்ஷாத் ராமாயணாத்மனா’ என்ற கருத்தை வேதமே வால்மீகி முனிவரால் ராமாயணமாக வெளிப்பட்டது என்பதை உள்ளடக்கி ராம நாமமே ஒரு வேதமே என்று இயற்றி மகிழ்ந்தார்; அனைவரையும் மகிழ்வித்தார்.

சிறியன சிந்தியாதான்!

கம்பன் வாலியை சிறியன சிந்தியாதான் (தீயன பொறுத்தி என்றான் சிறியன சிந்தியாதான்வாலி வதைப் படலம் பாடல் 119) என்று போற்றுவான். மிக உயர்ந்த சிந்தனைகளிலேயே தோய்ந்து ஊறி இருக்கும் அவன் ராமன் தன்னை மறைந்து நின்று கொன்றான் என்று சிறிய மனதுடன் சிந்தியாதவன்; ஆனால் கம்பன் பிறிதோரிடத்தில் பின்னால் எடுத்துக் காட்டுவது போலமுந்தைய கேள்விச் செல்வத்தால்ஊறிய அவனுக்கு ராம நாம மஹிமை நன்கு தெரியும்!

அவன் தன் மார்பில் ஊடுருவிய அம்பு யாருடையது என்று பார்க்கும் போது அதில் பொறித்திருக்கும் ராம நாமத்தைக் காண்கிறான். அதை கம்பன் சித்தரிக்கும் பாடல் இது:-

மும்மைசால் உலகுக்கெல்லாம் மூல மந்திரத்தை முற்றும்

தம்மையே தமர்க்கு நல்கும் தனிப் பெரும் பதத்தைத் தானே

இம்மையே எழுமை நோய்க்கு மருந்தினை ராமனென்னும்

செம்மை சேர் நாமம் தன்னைக் கண்களில் தெரியக் கண்டான்

(கம்ப ராமாயணம்கிஷ்கிந்தா காண்டம், வாலி வதைப்படலம் பாடல் 71)

ராம நாம தாரக மந்திரத்தின் சிறப்பைச் சொல்லும் இந்தப் பாடலின் சிறப்பை யாராலும் முழுவதுமாகச் சொல்லி விட முடியாது.

 0603

Ramayana sculptures in Temples

அந்த வாலியும் இந்த வாலியும்!

 

உலகுக்கு எல்லாம் மூல மந்திரம்

தன்னை தன்னை அண்டியவர்க்கு தருபவன்; வைகுண்ட பதம் அருள்பவன்

எழுமை நோய்க்கு மருந்து

இதுவே ராம நாமம்

இப்படி அனைத்து மஹிமைகளையும் கொண்ட ராம நாமம் வேத சாரம்!

இதை சிறியன சிந்தியாத வாலியின் மூலம் தெரிந்து கொள்ளும் போதே பெரியன சிந்திக்கும் கவிஞர் வாலி ராம நாமம் ஒரு வேதமே என்று கூறி இருப்பது எவ்வளவு பொருத்தமாக அமைகிறது.

இரண்டு வாலிகளும் ஒரே கருத்தையே மனதில் ஊன்றி வைத்துள்ளதைத் தான் இது காட்டுகிறதோ?!

****************

 

ரகுராமன், ராஜாராமன், சிவராமன், சீதாராமன், ஜெயராமன், ஜானகிராமன்,வெங்கடராமன்….

எழுதியவர் –Santanam Nagarajan

கட்டுரை எண்: 1694 தேதி 6 மார்ச் 2015

rama beauty

தமிழ் திரைப்படங்களில் ராமர் – 8

ச.நாகராஜன்

சீதைக்கேற்ற ராமனோ!

அம்பிகையின் கேள்வி

கோடானுகோடி பிரம்மாண்டங்களைப் படைத்துக் காக்கும் அம்பிகைக்கு ஒரு பெரிய கவலை – தான் படைத்துக் காக்கும் இந்த மனிதர்கள் எப்போது கடைத்தேறப் போகிறார்கள்!  உள்ளம் கருணையினால் ததும்ப சிவபிரானை நோக்கி அம்பிகை இந்தக் கேள்வியைக் கேட்க சிவபிரானோ புன்முறுவலுடன் அது தான் விஷ்ணுவைத் துதிக்கும் ஆயிரம் நாமங்கள் உள்ளனவே, அதைச் சொன்னால் சம்சார சாகரத்தைக் கடந்து விடலாமே என்கிறார். ஆயிரம் நாமங்களையா? இருக்கின்ற கொஞ்ச நேரத்தில் சுயமாக உருவாக்கிக் கொண்ட தமது பிரச்சினைகளையே இவர்களால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை, எப்படி ஆயிரம் நாமங்களைச் சொல்வதாம்! அம்பிகை கவலை மிகக் கொண்டு சிவபிரானை நோக்கிக் கேட்கிறாள்:

“கேனோபாயேன லகுனா விஷ்ணோர் நாம ஸஹஸ்ரகம் I

பட்யதே பண்டிதைர் நித்யம் ஸ்ரோதுமிச்சாம்யஹம் ப்ரபோ II”

“ப்ரபோ! பண்டிதர்கள் சொல்லும் விஷ்ணுவின் ஆயிரம் நாமங்களைச் சொல்ல லகுவான வழி ஒன்று இருக்கிறதா? அதைக் கேட்க எனக்கு விருப்பமாக உள்ளது!”

என்று இவ்வாறு அம்பிகை லகுவான உபாயத்தை கேட்க சிவபிரான் அதற்கான இரகசியத்தை இப்படி அருளுகிறார்:-

“ஶ்ரீராம ராமேதி ரமே ராமே மனோரமே I

ஸஹஸ்ரநாம தத்துல்யம் ராமநாம வரானனே II”

ஆயிரம் நாமங்களுக்குச் சமமான ராம நாமத்தைச் சொன்னாலே, போதுமே – இது சிவனாரின் அருளுரை. மானுடர் அனைவருக்கும் லகுவான ஒரு உபாயத்தைக் காண்பித்து விட்ட திருப்தி அன்னைக்கு!

 rama with anuman

எங்கும் ராமர்; எதிலும் ராமர்

  இந்த அன்னையின் ஆணையை ஏற்றுக் கொண்ட பாரத தேச மக்கள் தொன்று தொட்டு இந்த இரு எழுத்துக்களைத் திருப்பித் திருப்பிச் சொல்ல வேண்டும் என்பதற்காக ஆங்காங்கே ராமர் கோயிலைக் கட்டுகின்றனர்; பிறக்கும் பிள்ளைகளுக்கு ராமர் பெயரை வைக்கின்றனர். முடிந்த வழிகளில் எல்லாம் ராமரை நினைக்க வழி செய்து கொள்கின்றனர்!

பெயர்களில் தான் எத்தனை ராமர்!

ரகுராமன், ராஜாராமன், கோதண்டராமன், சீதாராமன், சிவராமன், ஜானகிராமன், ஆத்மாராமன், ஶ்ரீராமன், வெங்கடராமன்,சங்கரராமன், சாந்தாராம், ஹரிராம், விஷ்ணுராம், மாதவராம், கேசவ் ராம், கோவிந்தராம்,கோபால்ராம், விநாயக்ராம், சகாராம்,கல்யானராமன், ஜெயராமன், செண்பகராமன், சேதுராமன்,முரளிராமன், ராமலக்ஷ்மி, ராமராஜன், ராமசுப்ரமணியன், ராமசந்திரன், ராமகோபாலன், ராமமகிருஷ்ணன்,ராமேசன்,ராமசேஷன், ராமகூலம், சிவராம கிருஷ்ணன்,சங்கர ராமலிங்கம் .இப்படி ராமனை முதலிலும் இடையிலும், பின்னும் கொண்டுள்ள பெயர்களுக்கு முடிவே இல்லை! இப்படி, குழந்தைகள், நண்பர்கள், உறவினர்கள் பெயர்களை அழைக்கும் போதெல்லாம் ராம நாமம் சொல்லும் பாக்கியம் கிட்டட்டும் என்பதாலேயே நம் முன்னோர் இப்படி வாழ்க்கையின் ஒரு அங்கமாக ராமரைப் பெயரில் அமைக்கலாயினர்!

ஆக இந்த ராமனை திரைப்படப் பாத்திரங்களில் ஆயிரக்கணக்கானோருக்குச் சூட்டுவது இயல்பு தான்! இதைக் கணக்கெடுக்கவும் முடியாது; தேவை யுமில்லை1

 ram gambira

இதே பாரம்பரியத்தைப் பாடல்களிலும் திரையிசைக் கவிஞர்கள் கடைப் பிடித்தனர். இதில் அவர்களுக்கு பெருத்த லாபம் ஒன்று இருந்தது. ராமர், சீதா, லக்ஷ்மணன், பரதன் என்று சொற்களை அமைத்து விட்டால் ஆயிரமாயிரம் ஆண்டு பாரம்பரியப் பின்னணியைக் கொண்டு, சொல்ல வேண்டிய விஷயத்தையும்  சுலபமாக அவர்களால் சொல்லி விட முடிகிறது.காதல், நட்பு, அரசாட்சி, அறத்தை வெல்லுதல், தந்தை தாய் சொல்லைக் கடைப்பிடித்தல், வீரம், ஈகை போன்ற குணங்களைச் சுட்டிக் காட்டல், இப்படி எதை எடுத்தாலும் ராமாயணம் நமக்கு உதவும். ஏன், எதிர்மறை குணங்களான வஞ்சகப் பேராசைக்கு ஒரு கைகேயி, சூழ்ச்சிக்கு ஒரு கூனி, தகாத காமத்திற்கு ஒரு சூர்ப்பநகை, ஆணவம், சர்வாதிகாரத்திற்கு ஒரு ராவணன் என்று கூடாத விஷயங்களைச் சுட்டிக் காட்டவும் ராமாயணமே போதும்!

 இந்த வகையில் ராமரை எப்படியெல்லாம் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்பது ஒரு சுவையான விஷயம். நெகடிவ் பாத்திரங்களாக இருக்கும் சூர்ப்பநகை, ராவணன், கும்பகர்ணன் கூட பாடல்களிலும், நகைச்சுவை உரையாடல்களிலும் இடம் பெற்று வந்து கொண்டே இருந்ததையும் நீண்ட காலத் தமிழ் திரைப்பட வரலாறு சுட்டிக்காட்டுவதைப் பார்க்கலாம்!

ராமர் எப்படியெல்லாம் பாடல்களில் பயன்படுத்தப்பட்டார் என்பதற்குச் சில உதாரணங்களைப் பார்க்கலாம்.

 rama,sarathy bhattar

எதிர்காலக் கணவனைக் கற்பனையில் காண – ராமர்!

1962ஆம் ஆண்டு ஶ்ரீதர் இயக்கத்தில் வெளியான சுமைதாங்கி திரைப்படத்தில் எம்.எஸ்.விஸ்வநாதன் டி.கே.ராமமூர்த்தி இசையில் எஸ்.ஜானகி பாடும் பாடலுக்கான கவிஞர் கண்ணதாசனின் வரிகள் இவை:-

ராதைக்கேற்ற கண்ணனோ சீதைக்கேற்ற ராமனோ

கோதைக்கேற்ற கோவலன் யாரோ

அழகுக் கோட்டைக் கேற்ற காவலன் யாரோ

காதலிப்பவனோ அதில் பேர் எடுப்பவனோ

கண்ணிரண்டில் பெண்ணைக் கைது செய்பவனோ

ஆதரிப்பவனோ உன்னை அனுசரிப்பவனோ

இல்லை, ஆசை தீரும்போது நெஞ்சம் மாறுகின்றவனோ – ராதைக்கேற்ற

17 மொழிகளில் பாடி சாதனை படைத்துள்ள எஸ்.ஜானகியின் இன்குரலில் இந்தப் பாடலை இன்றும் கேட்போர் ஏராளம். படத்தில் நடிகை தேவிகா இந்தப் பாடலைப் பாடுவதாக காட்சி அமைப்பு உள்ளது. ‘உனது வரும் காலக் கணவர் ராமர் போல இருப்பாரா’ என்ற கேள்வியைக் கொண்டுள்ள இந்தப் பாடலில் ராமரைத் திரைப்படம் கையாளும் ஒரு அம்சத்தைப் பார்க்கலாம்!

*************

swami_48@yahoo.com

எண்ணெய் இல்லாமல் விளக்கை எரிப்பது எப்படி?

DiwaliOilLampCrop

Oil Lamp picture from Wikipedia

Written by S Nagarajan

Article No 1691; Date 5th March 2015

London Time: 6 am

சம்ஸ்கிருதச் செல்வம் – இரண்டாம் பாகம்

19. எண்ணெய் இல்லாமல் விளக்கை எரிப்பது எப்படி?

.நாகராஜன்

நியாயங்களின் வரிசைத் தொடரில் மேலும் சில நியாயங்களைப் பார்ப்போம்:

अन्तेरंडाविवाहश्चेदादावेव स कुतो न इति न्यायः

ante randavivahascedadaveva sa kuto na iti nyayah

அந்தே ரண்டாவிவாஹஷ்சேதாதாவேவ குதோ இதி நியாயம்

விதவையைக் கல்யாணம் செய்வது பற்றிய நியாயம் இது.

ஒரு விதவையைக் கல்யாணம் செய்து கொள்ள விரும்பினால் ஏன் அவள் மணம் புரிந்து கொண்டு விதவையான பின்னர் அவளை  மணம் புரிந்து கொள்ள விரும்ப வேண்டும்? அவள் கன்னியாக இருந்த போது அவளை மணம் முடித்திருக்கலாமே!

இந்த நியாயம் ஒரு காரியத்தை அது முடிக்க வேண்டிய உரிய காலத்தைக் கடந்து விட்ட பின்னர் முடிக்க நினைப்பதைக் குறிக்கிறது.

குறித்த பருவத்தில் செய்ய வேண்டிய காரியத்தை அந்தந்த காலத்தில் செய்து முடிக்க வேண்டும் என்பதை உணர்த்த வரும் நியாயம் இது.

calpping hands

Clapping hands

अन्धकवर्तकीयन्यायः

andhak vartakiya Nyayah

அந்தகவர்தகீய நியாயம்

கைகளைத் தட்டுபவனும் பறவையும் பற்றிய நியாயம் இது.

ஒருவன் தன் இரு கைகளையும் பலமாகத் தட்டிக் கொண்டே இருக்கிறான். அவன் கைகளில் பறவை உட்கார்ந்திருக்க முடியுமா?

அதன் உயிருக்கே அது ஆபத்தாக அல்லவா அது முடியும்!

இது நினைத்துப் பார்க்கவே முடியாத ஒன்று! ஆக இது போல நினைத்துப் பார்க்க முடியாத ஒரு காரியத்தைக் குறிக்க வரும் நியாயம் இது.

Nausea

Nausea/vomiting image

अन्यद्भुक्तमन्यद्वान्तमितिन्यायः

anyadbhuktam anyadvantamiti nyayah

அன்யத்புக்தம் அன்யத்வாந்தமிதி நியாயம்

சாப்பிட்டது ஒன்று; வாந்தி எடுத்தது இன்னொன்று என்பது பற்றிய நியாயம் இது!

எதையாவது ஒன்றை உண்ட பின்னர் வாந்தி எடுத்தால் உண்டது தானே வர வேண்டும்!

ஒரு கேள்வி கேட்கப்படும் போது அதற்கு விடை அளிக்காமல் வேறு எதையாவது பதிலாகச் சொல்லும் போது இந்த நியாயம் உரைக்கப்படும்.

கேள்வியையே தொடவில்லையே, எதையோ உளறுகிறாயே என்று சொல்ல இந்த நியாயம் பயன்படும்.

oil_lamp

अस्नेहदापनन्यायः

asnehadapana nyayah

அஸ்நேஹதாபன நியாயம்

எண்ணெய் இல்லாமல் எரிக்கப்படும் தீபம் பற்றிய நியாயம் இது!

இது பல இடங்களில் பயன்படுத்தப் படும் ஒன்று.

ஒரு மனிதன் தான் சம்பாதிப்பதை விட அதிகமாகச் செலவழிக்கும் போது எண்ணெயே இல்லாமல் எப்படி தீபம் எரியும்வரவு இல்லாமல் செலவழிப்பது எப்படி சாத்தியம்என்ற இந்த நியாயம் சுட்டிக் காட்டப்படும்.

அஸ்திவாரமே இல்லாமல் ஒருவன் கட்டிடம் எழுப்பினால் அது என்ன ஆகும்?

இயல்பான அழகே இல்லை; தன்னை அழகாக எப்படிக் காட்ட முடியும்?

உள்ளீடே இல்லை; பெரிதாக தன்னை எல்லாம் இருப்பது போல ஒருவன் எப்படிக் காட்ட முடியும்?

நிரந்தர நன்மையை நினைக்காமல் வந்து போகும் ஒன்றை விரும்பினால் அது நிலைக்குமா?

இப்படிப்பட்டப் பல்வேறு சூழ்நிலைகளில் இந்த நியாயம் சுட்டிக் காட்டப்படும்.

punching sky

Punching air picture

अकाशमुष्टिहननन्यायः

akasamushtihanana nyayah

ஆகாசமுஷ்டிஹனன நியாயம்

கைகளின் முஷ்டியினால் ஆகாயத்தை அடிப்பது பற்றிய நியாயம் இது!

ஆக்ரோஷமாக கைகளின் முஷ்டியினால் ஆகாயத்தை ஒருவன் அடிக்கத் தொடங்கினால் அவனை என்னவென்று சொல்வது!

முடியாத ஒன்றை ஒருவன் செய்யும் போது இந்த நியாயம் சுட்டிக் காட்டப்படும்!

???????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

********

swami_48@yahoo.com

குடத்தினுள் இருக்கும் குத்துவிளக்கு!

Clay Pot

Post No 1677; Date 26th February 2015

சம்ஸ்கிருதச் செல்வம் – இரண்டாம் பாகம்

17. குடத்தினுள் இருக்கும் குத்துவிளக்கு!

ச.நாகராஜன்

நியாயங்களின் வரிசைத் தொடரில் மேலும் சில நியாயங்களைப் பார்ப்போம்:

घटप्रदीपन्यायः

ghatapradipa nyaya

கடப்ரதீப நியாயம்

 

ஜாடிக்குள் அல்லது ஒரு  குடத்தினுள் இருக்கும் குத்துவிளக்கு பற்றிய நியாயம் இது.

ஒரு ஜாடிக்குள் குத்துவிளக்கை வைத்தால் அதன் உட்புறம் மட்டுமே பிரகாசமாயிருக்கும். அதே போல ஒரு மேதையின் மேதாவிலாசம் ஒரு சிறிய இடத்தில் மட்டுமே இருந்தால் அதனால் மற்றவர்களுக்கு ஒரு பிரயோஜனமும் இல்லை.

இது போன்ற சமயங்களில் இந்த நியாயம் சுட்டிக்காட்டப் பயன்படும்.


led-outdoor-planter-light

जलमृणालन्यायः

jalamrnala nyayah

 

ஜல ம்ருணாள நியாயம்

 

நீரில் இருக்கும் தாமரை பற்றிய நியாயம் இது.

தடாக நீரில் இருக்கும் ஒரு தாமரையின் தண்டு அந்தக் குளத்தின் நீரின் அளவே உயர்ந்திருக்கும். நீர் மேலே ஏறினால் அதுவும் மேலே வரும். நீர் வற்றி விட்டாலோ அதுவும் கீழிறங்கி விடும். குளமே வற்றி விட்டால் அதுவும் வறண்டு கீழே இருக்கும். ஆனால் அது பட்டுப் போகாது.

 

அதே போல உயர்ந்த மனிதன் ஒருவன் துரதிர்ஷ்டவசமாக துயரமான சூழ்நிலையினால் தாழ்ந்த நிலையை அடைந்து விட்டாலும் அவன் தனது உயரிய குணங்களை இழந்து விட மாட்டான்.

lotus 1

வெள்ளத் தனையது மலர் நீட்டம் மாந்தர்தம்

உள்ளத் தனையது உயர்வு – குறள் 595

 

என்ற குறளில் தாமரை மலரின் நீட்டம் நீரின் அளவே இருப்பது குறிப்பிடப்படுகிறது. இதை வள்ளுவர் உள்ளத்தின் உயர்வுக்கு ஒப்பிட்டுச் சொல்கிறார்.

plane

ज्ञानीविमानन्यायः

 

jnanivimana nyayah

 

ஞானி விமான நியாயம்

ஞானியும் விமானமும் பற்றிய நியாயம் இது.

சமவெளியில் நடந்து செல்லும் ஒரு மனிதனால் ஒரு மலையின் உயரத்தையும் ஒரு பள்ளத்தின் ஆழத்தையும், சம வெளியின் சமபரப்பையும் தெளிவாக அறிந்து கொள்ள முடியும். ஆனால் அவனே ஒரு விமானத்தில் பறக்கும் போது இவற்றைப் பார்த்தால் இவற்றின் வேறுபாடுகளை அறிந்து கொள்ள இயலாது.கீழே இருக்கும் அனைத்துமே ஒரே மாதிரியாக சமமாக இருக்கும்.

ஞானத்தின் கீழ்ப்படியில் இருக்கும் ஒருவன் உயர்ந்தவன், தாழ்ந்தவன், பெரியது, சிறியது, நல்லது, தீயது ஆகிய வேறுபாடுகளின் அடிப்படையிலேயே தன் செயல்களைச் செய்வான். ஆனால் ஞானத்தின் உயர்படியில் இருக்கும் ஞானிக்கோ எல்லா வேறுபாடுகளும் அகன்று விடும். அவனுக்கு அனைத்துமே ஒன்று தான்; சமம் தான்!

 

ஞானியின் உயர்நிலையைக் குறிக்கப் பயன்படும் நியாயம் இது!


potter

दण्डचक्रन्यायः

dandacakra nyayah

தண்ட சக்ர நியாயம்

 

குயவனின், அச்சு மற்றும் கத்தியைக் குறிக்கும் நியாயம் இது.

மண்பானையை உருவாக்க அச்சு, சக்கரம் மற்றும் கத்தி ஆகியவையே காரணமாகும்.

அநேக விளைவுகள் ஒன்றைத் தொடர்ந்து உருவானால் அப்போது இந்த நியாயம் சுட்டிக் காட்டப்படும்.


cloth

दग्धपटन्यायः

dagdhapata nyayah

தக்த பட நியாயம்

 

எரித்த துணி பற்றிய நியாயம் இது.

துணி ஒன்று எரிக்கப்படும் போது, சில சமயம் துணி முழுவதாக எரிந்து விட்டாலும் கூட, அது சரியாக இருப்பது போல வெளிப்பார்வைக்குத் தோன்றும்.

 

ஒன்றுக்கும் உதவாத ஒன்று, வெளிப்பார்வைக்கு சரியானது போலத் தோன்றும் போது இந்த நியாயம் பயன்படுத்தப்படும்.


*************

‘அழுங்கா மனத்து அண்ணல்’ ஶ்ரீ ராம பக்த ஹனுமான்

எங்லிஷ் ஹனுமன்

Written by S Nagarajan

Article No.1671; Dated 24 February 2015.

தமிழ் திரைப்படங்களில் ராமர் – 6

ச.நாகராஜன்

 

அனுமனைப் பற்றிய படம்!

 

இதே கால கட்டத்தில் வந்த இன்னொரு படம் ஶ்ரீ ராம பக்த ஹனுமான். இந்தப் படமும் சம்பூர்ண ராமாயணம் மற்றும் லவகுச ஆகிய படங்கள் அடைந்த வெற்றியைப் பெற்றது. ஹோமி வாடியா ‘பவன் புத்ர’ என்ற படத்தை ஹிந்தியில் எடுத்தார். அதை ஶ்ரீ ராம பக்த ஹனுமான் என்ற பெயரில் தெலுங்கிலும் தமிழிலும் (தமிழில் டப்பிங்) எடுத்தனர்.

தமிழில் எடுத்த படத்திற்கு ஆரூர்தாஸ் டப்பிங்கிற்கான வசனத்தை எழுதினார். இது ஒரு கடினமான கலை. உதட்டசைவிற்கு ஏற்ப சரியான சொற்களை அர்த்தம் மாறாமல் தருவது என்றால் மொழிப் புலமை, முக பாவங்கள், உச்சரிப்பு, இதர மொழியில் உள்ள நுட்பங்கள், கதைப் போக்கு, ஒலியில் எத்தனை வினாடிகளில் சொற்களைத் தர வேண்டும், திரைப்படத்தைப் பார்ப்பவர்களின் எதிர்பார்ப்புகள் என்ன ஆகியவை உள்ளிட்ட ஏராளமான அம்சங்களில் தேர்ச்சி பெற்ற நிபுணராக இருத்தல் வேண்டும்.


ராமமானௌமன்

ஆரூர்தாஸ் அப்படிப்பட்ட நிபுணராக இருந்து பல நூறு படங்களுக்கு வசனம் எழுதினார். இவற்றில் பல படங்கள் டப்பிங் படங்கள். ஜேசுதாஸ் என்ற பெயரை அவர் திருவாரூரைச் சேர்ந்தவர் என்ற காரணத்தினால் சுருக்கமாக ஆரூர்தாஸ் என்று மாற்றியவர் திரைப்படக் கவிஞர் தஞ்சை ராமையாதாஸ். தஞ்சை ராமையாதாஸ் தான் ஶ்ரீ ராம பக்த ஹனுமான் படத்தின் அருமையான பாடல்களை எழுதியவர்.

அழுங்கா மனத்து அண்ணல்

 

மஹாகவி கம்பன் ‘அழுங்கா மனத்து அண்ணல்’ என்று உற்சாகத்தின் ஊற்றாக அனுமனை விவரிப்பான். வால்மீகியோ “அநிர்வேத ஹி      ச்ரியோ மூலம்” என உற்சாகமே அனைத்து நலத்திற்கும் அடிப்படை என்பதை அனுமன் வாயிலாகத் தெரிவிக்கிறான்!

 

அப்படிப்பட்ட அனுமனைப் பற்றிய முழு நீளப் படம் என்றால் எத்துணை சுவையாக உற்சாகத்துடன் அதை அமைக்க வேண்டும்! பொறுப்பைச் சரியாக நிறைவேற்றியதால் மக்கள் கூட்டம் தியேட்டர்களில் அலை மோதியது.

இருதயத்தில் ராமர்

மஹிமை அற்புதம் தான்!

 

மஹிமை அற்புதம் தான் மற்றும் மனமதன் மேலே ராம் ஆகிய இரு  பாடல்களை தஞ்சை ராமையாதாஸ் எழுதினார். இரண்டுமே ஹிட்!

 

மஹிமை அற்புதம் தான் எல்லோராலும் வரவேற்கப்பட்டு இன்றளவும் விரும்பிப் பாடப்படும் ஒரு பாடலாக அமைகிறது.

வலுவான காட்சி அமைப்பு. சபையில் ராமபக்தனை கேலி செய்யவே அனுமன்  கூறுகிறான்:

“மஹாசபையில் ராம பக்தனை கேலி செய்தல் தகாதே

மனதில் எந்நாளும் அகலாதே நிற்கும் ராமனே  எனக்கே சகாயம்

மஹிமை அற்புதம் ஆகும் ராமனின் மஹிமை அற்புதம் ஆம்

மஹிமை அற்புதம் ஆகும் ராமனின் மஹிமை அற்புதம் ஆம்

அபயம் என்று அழைத்தால் துயரம் வராது

ஆஹா புவிமேல் இவன் போல் ஏது

ராமனின் மஹிமை அற்புதம் தான்!

பாடல் 5 நிமிடம் 33 விநாடிகள் ஒலிக்கிறது.

 

ராமனின் மஹிமையைக் கூறும் அனுமன் தன் இதயத்தைப் பிளக்க அங்கே ராமர், சீதையின் திருவுருவங்கள் தெரிய அனைத்து சபையினரும் பிரமித்து ஒரே குரலில்

 

“ரகுபதி ராகவ ராஜாராம் பதித பாவன சீதாராம்” என்று பக்தியுடன் பாடுகின்றனர்.

பிரமிக்க வைக்கும் காட்சியின் முத்தாய்ப்பு அனைவரையும் பரவசப்படுத்தும் ஒன்று.


1957 அனுமன்

மனம் – அதன் மேலே ராம்!

 

அடுத்த பாடல்:

மனமதன் மேலே ராம்

நினைவதன் மேலே ராம்

பாரில் என்றும் நிலைத்திடும் நாமம் ராமனே

மனமதன் மேலே ராம்

நினைவதன் மேலே ராம்

மஹாராம நாமம் தன்னை

ராம ஶ்ரீ ராம் என்றேன்

மஹாராம நாமம் தன்னை

ராம ஶ்ரீ ராம் என்றேன்

ஓயாது அன்பால் பாடு

உள்ளம் தன்னில் இன்றே

என்று இப்படித் தொடர்கிறது பாடல்!


Sri-Rama-Bhaktha-Sri-Hanuman-

ராம நாம மஹிமையைக் கூறும் பாடலைத் தன் அற்புதக் குரல் வளத்துடன் பாடி மனதை உருக வைப்பவர் டி.எம்.சௌந்தரராஜன்!

ஆரம்ப கால கட்டத்தில் பெரும்பாலும் புராணக் கதைகளையே திரை உலகம் சார்ந்திருந்த போதும் அக்கதைகளின் அடிப்படையிலான படங்கள் வெற்றியைப் பெற்றன.

 

மாறி வந்த சூழ்நிலையில் சமூகப் படங்கள் என்று புதிய அலை வீசிய போதும் கூட இதிஹாஸப் படங்கள் வெளி வந்த போது அவை மகத்தான வெற்றியையே பெற்றன.ராமாயணம் தொன்று தொட்டு நமது நாடிகளில் ஊறி இருக்கும் இதிஹாஸம். அது திரைப்படங்களில் இடம் பெற்ற போதெல்லாம் வெற்றியையே பெற்றது!

சிரத்தையுடன் எடுக்கப்பட்ட படங்களுக்கு ராமரின் அருள் இருந்தது என்று தானே இதற்கு அர்த்தம்!

rama-bhakta-anjaneya

********

சிவராத்திரி சபதம்!

Linga-in-Brihadisvara-big

One of the Biggest Lingas, Thanjavur Brhadeeswar Temple, Tamil Nadu

மஹா சிவராத்திரி அன்று சிறப்பான சில சிந்தனைகள்!

சிவராத்திரி சபதம்!

Post No.1655;    Dated 16th February 2015

by ச.நாகராஜன்

எளியவரின் கேள்விகள்

கடவுள் இருக்கிறாரா?

இருக்கிறார் எனில் எங்கே இருக்கிறார்? எப்படி இருக்கிறார்?

அவரை என்னால் ஏன் காணமுடியவில்லை? எப்படிக் காண முடியும்?

யாருடன் நான் சேர்வது? யாரை நான் உதறுவது? சுருக்கமாகச் சொல்லப் போனால் யாருக்கு நான் ஓட்டுப் போடுவது?

இப்படி எல்லாம் கேள்வி எழுவது உலகியல் வாழ்க்கையில் இயல்பான ஒன்று தான்!

இதற்கான பதில்களை அற்புதமாக அருளாளர்கள் தங்கள் அழியாப் பாடல்களில் தந்துள்ளனர்.

thirukkaravasal maragatha linga

Thirukkaravasal Maragatha (Emerald )Linga

அப்பரின் அற்புத பதில்கள்!

இவற்றிற்கெல்லாம் பதில் கொடுத்துள்ள அழியாத் தவநெறிச் செல்வர் அப்பரின் அருளுரைகளை சிவராத்திரி தினத்தன்று பார்த்துத் தெளிவோம்!

“விறகில் தீயினன்,  பாலில் படு நெய் போல் மறைய நின்றுளன்” என்கிறார் அப்பர். விறகிலே தீ போல பாலிலே நெய் போல மறைந்து நின்று இருக்கிறான் எம் சிவ பிரான் என்பதே கடவுள் இருக்கிறாரா, எங்கே இருக்கிறார் என்று கேட்பவருக்கான பதில்!

மாசில் வீணையும் மாலை மதியமும்

வீசு தென்றலும் வீங்கு இளவேனிலும்                                         

மூசு வண்டறை பொய்கையும் போன்றதே                                    

ஈசன் எந்தை இணையடி நீழலே

எப்படி இருக்கிறார் எனில் மாசு இல்லாத வீணை போல, மாலை  மதியம் போல, வீசுகின்ற தென்றல் போல, வீங்கு வசந்தம் போல மூசு வண்டறை தடாகம் போல அவனது நீழல் உள்ளது என்பதே எப்படி இருக்கிறார் என்பதற்கு அவர் தரும் பதில்!

Amarnath-Linga

One of the Natural wonders of the World-Ice Linga of Amarnath Caves, Kashmir, India

நியூட்டனின் பதில்!

 

பிரபல விஞ்ஞானி நியூட்டன் ஒரு பெரும் ஆத்திகவாதி. அவரது நண்பர் ஒருவரோ பெரிய நாத்திகர். நியூட்டனின் கடவுள் பக்தியை அவர் ஏற்கவில்லை. ஒரு நாள் நியூட்டன் சூரிய மண்டலத்தின் மாதிரி ஒன்றை ஸ்கேல் மாடலில் அதாவது சிறிய் அளவில் சூரிய மண்டலம் இருப்பது போலவே சுற்றி வரும் கிரகங்களின் தூரம். ஓடு பாதை. அளவு ஆகியவற்றை எல்லாம் நிர்ணயித்து சுழலும்படியான ஒரு அமைப்பில் செய்து வைத்திருந்தார். அற்புதமான அந்தச் சாதனத்தில் ஒரு சிறிய கைப்பிடியைச் சுற்றினால் கிரகங்கள் தனது இயல்பில் சுழல அதனதன் ஓடு பாதையில் அது அது தனது வேகத்தில் சென்று சூரியனைச் சுற்றிக் கொண்டிருக்கும்.

நியூட்டனின் நண்பர் ஒரு நாள் உள்ளே வந்தார். இந்த அபாரமான அமைப்பைப் பார்த்து பிரமித்து நின்று விட்டார். அப்போது அந்த அறையின் ஓரத்தில் தன் மேஜையின் அருகே நாற்காலில் அமர்ந்து நியூட்டன் தீவிரமாக எதையோ சிந்தித்துக் கொண்டிருந்தார். வந்த நண்பர் வியப்புடன் கூவினார்:” ஆஹா! பிரமாதம்! நியூட்டன்! இதை யார் செய்தது?” அவரது ஓங்கிய குரலுக்கு நியூட்டனிடமிருந்து சுவாரசியமின்றி சாந்தமான குரலில்,”ஒருவரும் இல்லை!” என்று பதில் வந்தது. தனது கேள்வியை நியூட்டன் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்று எண்ணிய நண்பர் சற்று உரக்க,”இதை யாரேனும் செய்திருக்க வேண்டுமே! யார் செய்தது என்று நான் கேட்கிறேன்!” என்றார்.

spatika2

Crystal/ Spatika Linga

இன்னும் அமைதியான தாழ்ந்த குரலில் நியூட்டன், “அது தான் ஒருவரும் செய்யவில்லை என்கிறேனே” என்றார்.

இப்போது நண்பருக்குக் கோபம் வந்து விட்டது. தன் நண்பர் இடக்காகப் பதில் சொல்கிறார் என்று நினைத்த அவர் நியூட்டனிடம் சென்று அவரின் தோளைக் குலுக்கி, “ யாரும் செய்யாமல் இது எப்படி உருவானது? தானே தோன்றியதா?” என்று ஆவேசமாகக் கேட்டார்.

அவரைப் பற்றி இழுத்துக் கொண்டு வாசலுக்கு வந்தார் நியூட்டன். வானத்தைச் சுட்டிக் காட்டினார், பிறகு சொன்னார்:” இதோ மேலே பாருங்கள். லட்சக்கணக்கான நட்சத்திரங்கள், கிரகங்கள், அதன் சுழற்சிகள்! இவை எல்லாம் தானே சுற்றுகையில் இந்த வெறும் சாதனம் தன்னைத் தானே தோற்றுவித்திருக்கக் கூடாதா, என்ன!”


nataraja

One of the most beautiful Natarajas; smiling Nataraja of Gangai Konda Choza Puram, Tamil Nadu

நியூட்டனின் பதிலால் விக்கித்து நின்று விட்டார் அவர். கோடானு கோடி நட்சத்திரங்களையும் கிரகங்களையும் இன்ன பிறவற்றையும் தோற்றுவித்தவன் யார்? அவருக்கு உறைத்தது. அன்று முதல் அவர் சிறந்த ஆத்திகரானார்.

விஞ்ஞானி நியூட்டன் சொன்ன பதிலை பல நூற்றாண்டுகளுக்கு முன்பே “இயற்கையைப் பார்; அதைப் படைத்தவனை அறி” என்று மூசு வண்டறைப் பொய்கையைக் காட்டிக் கூறிய அருளாளர் அப்பர்,

“விறகில் தீ ஆகவும், பாலில் நெய்யாகவும் மறைய நின்றிருப்பவன் ஜோதி ஸ்வரூபமானவன் என்று கூறி அவனைப் பார்க்க – அடைய –  உறவு என்னும் கோலை நட்டு உணர்வு என்னும் கயிற்றினால் முறுக வாங்கிக் கடைந்தால் அவன் நம் முன் வந்து நிற்பான்”

என்கிறார்.

hh-shiva-pooja

Sringeri Acharya’s Abhisheka to Spatika Linga

இதை விட அற்புதமாக எளிமையாக இறைவனை அடையும் வழியை யாரேனும் சொல்லி இருக்கிறார்களா?!

“விறகில் தீயினின் பாலில் படு நெய் போல்

மறைய நின்றுளன் மாமணி ஜோதியான்

உறவு கோல் நட்டு உணர்வு கயிற்றினால்

முறுக வாங்கிக் கடைய முன் நிற்குமே”

தென்னாடுடைய சிவன் அவன்! எந்நாட்டவர்க்கும் இறைவன் அவன்!

வாழ்த்த வாயும் நினைக்க மனநெஞ்சும்                                    

தாழ்த்த சென்னியும் தநத தலைவனைச்                                     

 

சூழ்த்த மாமலர் தூவித் துதியாதே                                            

first_abhishekam1

ganapathy Sachidananda Swamiji’s Abhishek to Lord Shiva

வீழ்த்த வாவினையே நெடுங்காலமே என்று பலகாலம் சிவனை எண்ணாமல் காலம் கழித்த தன் வினையை எண்ணி நோகிறார் அப்பர். இப்படி அவர் சொல்வதற்கான காரணம் நம்மை நல் நெறிப் படுத்தவே!

“தேடிச் சென்று திருந்தடி ஏத்துமின்” என்று நம்மை அறை கூவி அழைக்கும் அப்பர் இறைவனை காண முடியாமல் நாம் இருப்பது நம் பண்டை வினைப் பயனாலே என்பதைச் சொல்லி, “ஆடிப்பாடி அண்ணாமலை கை தொழ ஓடிப் போம் நமதுள்ள வினைகளே” என்கிறார்.


2011-01jan-03-nithyananda-photo-1 1008 linga

1008 Lingas at Tiruvannamalai, Tamil Nadu

யாருடன் சேர்வது!

இப்படி அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் சொல்லும் அப்பர் யாருடன் சேருவது, யாரை உதறுவது, இன்னும் கேட்டால் யாருக்கு ஓட்டுப் போடுவது என்பதைத் தானா சொல்ல மாட்டார்!

 

“சங்க நிதி பதுமநிதி இரண்டும் தந்து தரணியொடு வான் ஆளத் தருவரேனும் மங்குவார் அவர் செல்வம் மதிப்போம் அல்லோம் மாதேவர்க்கே காந்தர் அல்லர் ஆகில் அங்கமெலாம் குறைந்து அழுகு தொழுநோயராய் ஆ உரித்துத் தின்று உழலும் புலையரேனும்

 

கங்கை வார் சடைக்கரந்தார்க்கு அன்பர் ஆகில் அவர் கண்டீர் நாம் வணங்கும் கடவுளாரே!”

என்ற அவரது வாக்கு அள்ள அள்ளக் குறையாத சங்க நிதி, பத்ம நிதி இரண்டையும் கொடுத்து பூலோகம் இந்திர லோகம் இரண்டையும் ஆளும் உரிமையையும் தந்தாலும் அவர் சிவனுக்கு அன்பர் இல்லை எனில் அவர் செல்வத்தை உதறி எறிந்து அவரையும் உதறுவோம். மாறாக கொல்லக் கூடாத பசுவைக் கொன்று தின்னும் புலையன் என்றாலும் அவன் சிவனின் அன்பன் எனில் அவனை கடவுளாக வணங்கி அவன் தாள் பணிவோம்” என்கிறார்!


PERUVUDAYAR+THAYIR

Curd/ Yogurt Abhishek

ஆழ்ந்த கருத்து உடைய இந்தப் பாடல் சிவ அன்பர்கள் அனைவரும் வாழ்நாள்  முழுவதும் பேணிக் காப்பதற்கான லட்சியப் பாடல்!

சிவனை வணங்காதார் முகம் பார்க்காதே என்று அவர் சொல்லும் போதே பணத்தையும் சலுகைகளையும் தந்து ஓட்டுக் கேட்கும் நாத்திகர் பக்கம் சேராதே, மாறாக எளியவராக இருந்தாலும் சிவன் கோவிலையும் சிவ பக்தியையும் போற்றும் நல்லோரை நாடு, வணங்கு என்று அவர் கூறுவதில் இக உலக இயலுக்கான உபதேசமும் அதில் அடங்கி இருக்கிறதல்லவா!


nithya1

சிவராத்திரி சபதம்

மஹா சிவராத்திரி அன்று அப்பரின் அருளை வேண்டி மாபெரும் சபதம் ஏற்போம்!

சிவனை வணங்காத நாத்திகரை ஒரு நாளூம் சேரோம்; எம் நண்பர்களையும் சேர விடோம்; சிவ பக்திச் செல்வர்களுடன் இணங்குவோம்; அவர்களை வணங்குவோம் என்ற சபதம் ஏற்று முன்னேறுவோம்.

சிவ பிரானின் தமர் (தமர் – உறவினர்) நாம் , ஆகவே அவர் வாக்குப் படி

“அஞ்சுவது    யாதொன்றும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை!”

தென்னாடு உடைய சிவனே போற்றி!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!

abhisheka-bilva

Bilva/ Vilva Archana to Lord Siva

************

contact swami_48@yahoo.com

தமிழ் திரைப்படங்களில் சம்ஸ்கிருதம்! – 2

Karnan2

by ச.நாகராஜன்

Post No 1624: Date 5th February 2015

 

திரைப்படங்களில் சுபாஷிதம்

தமிழ் திரைப்படங்களில் சுபாஷிதம் எனப்படும் தனி ஸ்லோகங்களைக் கூட காண முடியும். கமலஹாஸன் நடித்த படத்தில் வரும் ஒரு ஸ்லோகம் இது:

புஸ்தகம் வனிதா வித்தம் பரஹஸ்தம் கதம் கதம் I                           அதவா புநராயேன ஜீரண ப்ரஷ்ட ண்ட II

புஸ்தகம், பெண், பணம் ஆகியவை அடுத்தவன் கைக்கு மாறினால் போனது போனது தான்! திரும்பி வந்தாலும் ஜீரணிக்கப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டு பின்னமும் துண்டுகளாகவும் உருமாறி வரும் என்பது இதன் திரண்ட பொருள்!

கர்ணனில் கீதை

பகவத் கீதை உலகமெலாம் போற்றப்படும் அற்புத நூல். இதையும் தமிழ்ப் படங்களில் பலவற்றிலும் காண முடியும். குறிப்பாகச் சொல்ல ஒரே ஒரு படத்தை எடுத்துக் காட்டலாம்.

1963ஆம் ஆண்டில் வெளியாகிய படம் கர்ணன். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கர்ணனாகவும் என் டி ராமாராவ் கண்ணனாகவும் எஸ்.பி.முத்துராமன் அர்ஜுனனாகவும் நடித்து னைவரின் பாராட்டையும் பெற்ற படம் இது.

அதில் கீதையை என் டி ராமாராவ் சுருக்கமாகவும் அழகாகவும் போர்க்களக் காட்சியில் இப்படிக் கூறுவார்:

 

மரணத்தை எண்ணிக் கலங்கிடும் விஜயா!

மரணத்தின் தன்மை சொல்வேன்;

மானிடர் ஆன்மா மரணமெய்தாது,

மறுபடிப் பிறந்திருக்கும்;

மேனியைக் கொல்வாய்! மேனியைக் கொல்வாய்!

வீரத்தில் அதுவும் ஒன்று;

நீ விட்டு விட்டாலும் அவர்களின் மேனி,

வெந்து தான் தீரும் ஓர் நாள்.

 

என்னை அறிந்தாய், எல்லா உயிரும்,

எனதென்றும் அறிந்து கொண்டாய்;

கண்ணன் மனது கல் மனதென்றோ

காண்டீபம் நழுவ விட்டாய்

காண்டீபம் நழுவ விட்டாய்

மன்னரும் நானே, மக்களும் நானே,

மரம் செடி கொடியும் நானே;

சொன்னவன் கண்ணன், சொல்பவன் கண்ணன்;

துணிந்து நில் தர்மம் வாழ.

 

புண்ணியம் இதுவென்றிவ் வுலகம் சொன்னால்,

அந்தப் புண்ணியம் கண்ணனுக்கே;

போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும்

போகட்டும் கண்ணனுக்கே.

 

கண்ணனே காட்டினான், கண்ணனே சாற்றினான்;

கண்ணனே கொலை செய்கின்றான்.

காண்டீபம் எழுக! நின் கை வன்மை எழுக!

இக்களமெலாம் சிவக்க வாழ்க!

karna

கண்ணதாசனின் அற்புத கவிதை வரிகள் கீதையின் சுருக்கத்தைத் தந்து நம் உளத்தை உருக்குகிறது; மகிழ்விக்கிறது. இதைத் தொடர்ந்து கீதையில் நான்காவது அத்தியாயத்தில் வரும் முக்கியமான ஸ்லோகம் அப்படியே சம்ஸ்கிருதத்தில் கம்பீரமாக ஒலிக்கிறது.

நல்லோரைக் காத்தற்கும் தீயோரை அழித்தற்கும் தர்மத்தை நிலைநாட்டுவதற்காகவும் யுகம் தோறும் அவதரிக்கிறேன் என்ற பொருள் உடைய இந்த ஸ்லோகம் கேட்போரைப் பரவசப்படுத்துகிறது:

 

பரித்ராணாய சாதூனாம்,

விநாசாய துஷ்க்ருதாம்;

தர்ம சம்ஸ்தாபனார்த்தாய,

சம்பவாமி யுகே யுகே.  (கீதை நான்காம் அத்தியாயம் எட்டாவது ஸ்லோகம்)


papanasam

பாபநாசம் சிவனின் அமர கீதங்கள்

இனி தமிழ் திரையுலகின் ஆரம்ப வருடங்களை எடுத்துப் பார்த்தாலோ அங்கும் சம்ஸ்கிருத வார்த்தைகளைப் பரவலாகக் கொண்ட பாடல்களை

நாம் காண முடியும்:

பாபநாசம் சிவன் பெரும் சாஹித்யகர்த்தா. அழகிய இனிமையான பாடல்களை எழுதிய திரைப்படப் பாடலாசிரியர். பெரும் புகழ் பெற்ற கவிஞர். சுமார் 2400 கீதங்களை இயற்றியவர். இவற்றில் திரைப்படப்பாடல்கள் மற்றும் சுமார் 800. இதுவரை முறையாகத் தொகுக்கப்பட்ட கீர்த்தனைகள் 400. அனைத்துப் பாடல்களையும் முறையாகத் தொகுக்கும் முயற்சியை அவரது மகள் இப்போது செய்து வருகிறார்.

என்ன தவம் செய்தனையசோதா என்ன தவம் செய்தனை என்ற இவரது பாடலை இன்றும் மேடை தோறும் வீடு தோறும் கேட்க முடிகிறது. இது போல ஏராளமான உள்ளம் உருக்கும் கீதங்களை யாத்தவர் இவர்.

papanasam2

மன்மத லீலையை வென்றார் உண்டோ?

ராதே உனக்கு கோபம் ஆகாதடி போன்ற நூற்றுக் கணக்கான இவரது பாடல்களுக்கு இன்றும் ஒரு தனிப் பெருமை உண்டு.

1945இல் வெளியாகி சக்கைப் போடு போட்ட படமான சகுந்தலை படத்தில் அனைத்து பாடல்களையும் இயற்றியவர் பாபநாசம் சிவன் தான். இசை அமைத்தவர் எஸ்.வி.வெங்கட்ராமன்.எம்.எஸ். சுப்புலெட்சுமியும் ஜி.என்.பாலசுப்பிரமணியனும் பாடிய ஒரு பாடலின் சில வரிகள் இதோ:

பிரேமையில் யாவும் மறந்தேனே

பிரேமையில் யாவும் மறந்தேனே  .. பிரேமையில் ஜீவனம் உனதன்பே ஜீவனம் உனதன்பேஎன்

அன்பே வானமுதும் விரும்பேனே

பிரேமையில் யாவும் மறந்தோமோ   ..பிரேமையில்

பிரேமை வெண்ணிலா ஜோதி வீசி  . . என் உள்ளம்

பரவசமாக பிரேமை வெண்ணிலா ஜோதி வீசி

என்னை மறந்தேன் மதனமோகனா

என்னை மறந்தேன் மதனமோகனா

இப்படி தமிழும் சம்ஸ்கிருதமும் சரியான விகிதத்தில் கலந்து குழைத்து அமுத கானம் வழங்கியவர் பாபநாசம் சிவன்.


haridas

எம் கே டி பாடிய பாடல்கள்

கிருஷ்ணா முகுந்தா முராரே போன்ற துதிப் பாடல்களில் இவர் சம்ஸ்கிருத சொற்களையே அதிகம் கையாண்டார். இன்றும் பக்தர்கள் தவறாமல் கேட்கும் பாடல் இது.

எம்.கே.தியாகராஜர் நடித்துப் பாடி இவர் எழுதிய பாடல்கள் தமிழும் சம்ஸ்கிருதமும் கலந்த ஒரு அழகிய சங்கமம். காலத்தால் வெல்ல முடியாத இந்தப் பாடல்களின் பட்ட்டியலை எழுதத் தொடங்கினால் அது ஒரு தனி நூலாக விரியும்.

 

ஆக இப்படி தமிழ் திரைப்படங்கள் ஆரம்பித்த காலத்திலிருந்து இன்று வரை சம்ஸ்கிருதம் உரிய இடத்தை தமிழ் திரைப்படங்களில் பெற்றுக் கொண்டே தான் இருக்கிறது.

நம் கலைஞர்களுக்கு மொழிப் பற்று உணடு; மொழி வெறி இல்லை. இந்த நல்ல போக்கு எதிர்காலத்திலும் தொடரும்; தொடர வேண்டும்.

இதை எதிர்ப்பவர்கள் அரசியலில் தமிழை வணிகமாகப் பயன்படுத்தும் சுயநலமிகள் என்பதை நன்கு அறிந்து கொண்ட தமிழர்கள் அவர்களை காலம் தோறும் உதாசீனப்படுத்தி வருவதையே இது காட்டுகிறது

krishna mkt

தமிழும் சம்ஸ்கிருதமும் நமக்கு இரு கண்கள்

நமது நோக்கம் தெளிவானதாக இருத்தல் வேண்டும். தமிழும் சம்ஸ்கிருதமும் இந்தியராகிய நமக்கு இரு கண்கள்.

தமிழை உலகத்தின் தலையாய அழகிய மொழி என்பதை ஆதாரங்களுடன் தருவோம்; நம் மொழியை இன்னும் அதிக வளம் வாய்ந்த செழுமை மொழியாக ஆக்குவோம். அதே நேரத்தில் சம்ஸ்கிருதத்தைக் கற்று நம் பண்பாட்டை இன்னும் அதிகமாக வேரூன்ற வைப்போம், இதற்கு திரைப்படமும் ஒரு கருவி என்பதால் அதிலும் இதே கொள்கையைக் கடைப் பிடிப்போம்!

********* முற்றும்

contact swami_48@yahoo.com

சிவனை நோக்கி கனவில் நடந்த கிருஷ்ணார்ஜுன பயணம்!

Mbharat7a

ஞான ஆலயம்

மஹாசிவராத்திரி 2015 பிப்ரவரி 17ஆம் தேதி வருகிறது. அதையொட்டிய சிறப்புக் கட்டுரை இது. சிவனைப் போற்றித் துதித்து சகல பேறுகளையும் பெறுவோம்.

சிவனை நோக்கி கனவில் நடந்த கிருஷ்ணார்ஜுன பயணம்!

by ச.நாகராஜன்

 

Post No 1621; Dated 4th February 2015

 

சிவபக்தன் அர்ஜுனன்

மஹாபாரதம் விளக்கும் தெளிவான ஒரு உண்மை நர நாராயணர்களே அர்ஜுனனாகவும் கிருஷ்ணனாகவும் அவதரித்தனர் என்பது.

அர்ஜுனன் சிறந்த சிவ பக்தன். அர்ஜுனனின் வில்வித்தையைக் கண்டு மகிழ்வதற்காக வேடனாக வந்த சிவன் பன்றியின் பின் பக்கமாக அம்பு எய்ய அர்ஜுனன் அது செல்லாது என்கிறான். ஆனால் தர்ம சாஸ்திரப்படி அது செல்லும் என்று கூறிய சிவன் அர்ஜுனனைப் பலவிதமாக திக்குமுக்காடச் செய்து அவன் வில்வித்தையைக் கண்டு மகிழ்கிறார். ஒரு கட்டத்தில் வில்லைத் தூக்கி எறிந்த பார்த்தன் மல்யுத்தம் செய்ய முன்வர சிவன் மகிழ்ச்சியோடு அவனை எதிர் கொள்கிறார். யுத்தத்தின் ஒரு அங்கமாக சிவனின் காலை அர்ஜுனன் மடக்கிப் பிடிக்கவே தன் காலில் விழுந்த பக்தனுக்கு அனுக்கிரஹம் செய்வதையே கடமையாகக் கொண்ட சிவன் தன் சுய உருவத்தைக் காண்பித்து அவனை ஆசீர்வதிக்கிறார். பிரமித்து நிற்கும் அர்ஜுனன் தனது பெரும் பேறை எண்ணி மகிழ்கிறான். (இன்னொரு கூற்றின் படி வேடனைத் தாக்குப் பிடிக்க முடியாத நிலையில் அர்ஜுனன் சிவலிங்கத்தைத் தொழ கேட்டதை அனுக்ரஹிக்கும் சிவன் வேட உருவத்தை மாற்றி சிவனாக அவன் முன் தோன்றி ஆசீர்வதிக்கிறார்)


Shiva_gave_bow_arjun

அர்ஜுனனின் சபதமும் கவலையும்

இப்படிப்பட்ட மாபெரும் சிவ பக்தன் ஒரு நாள் பெரும் சோதனைக்கு ஆட்பட்டுக் கவலையில் ஆழ்ந்தான். அபிமன்யுவின் அநியாயமான மரணத்திற்கு சிந்து தேச அரசனான ஜயத்ரதனே காரணம் என்பதை அறிந்து பெரும் கோபம் அடைந்த அர்ஜுனன் மறுநாள் சூரிய அஸ்தமனத்திற்குள் அவனைக் கொல்வதாக சபதம் பூணுகிறான். அன்று இரவு தான் அவனுக்குப் பெரும் கவலை ஏற்பட்டது. தனது சபதத்தை அறிந்த கௌரவ சேனை முழுவதும் மறுநாள் ஜயத்ரதனைக் காக்க வருமே, இந்த சோதனையிலிருந்து எப்படி மீள்வது என்று சிந்தித்தவாறே உறக்கத்தில் ஆழ்ந்தான்.

கனவில் நடந்த அதிசயப் பயணம்

அப்போது அவனுக்கு கனவு ஒன்று தோன்றுகிறது. கிருஷ்ணர் அர்ஜுனனிடம் வந்து கவலைக்குக் காரணம் என்ன என்கிறார். மறுநாள் ஜயத்ரதனைக் கொல்வது சாத்தியமா என்கிறான் அர்ஜுனன்..

உடனே கிருஷ்ணர் அர்ஜுனனை அழைத்துக் கொண்டு கைலாயம் செல்கிறார். இருவரையும் கண்ட சிவன் வந்த விஷயம் என்ன என்று கனிவுடன் கேட்கிறார்.

கிருஷ்ணரும் அர்ஜுனனும் அவரைத் துதித்து மறுநாள் நடக்கவிருக்கும் போருக்காக பாசுபத அஸ்திரத்தைப் பெறுவதோடு அதன் பிரயோகத்தையும்  அறிவதற்காக வந்துள்ளதாகவும் சிவன் அனுக்ரஹம் புரியவேண்டுமெனத் துதிப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

உடனே சிவ பெருமான் அருகில் உள்ள தடாகத்தில் உள்ள வில்லையும் அம்பையும் எடுத்து வருமாறு பணிக்கிறார். அருகே உள்ள தடாகத்திற்கு கிருஷ்ணார்ஜுனர்கள் சென்ற போது அங்கே பயங்கரமான இரு ஸர்[ப்பங்களை தடாகத்தில் பார்க்கின்றனர். அர்ஜுனன் சதருத்ரியம் என்னும் வேத மந்திரத்தால் துதிக்க அந்தப் பாம்புகள் இரண்டும் ஒன்று வில்லாகவும் இன்னொன்று அம்பாகவும் மாறவே வியப்படைந்து அவை இரண்டையும் எடுத்துக் கொண்டு சிவபிரானிடம் வருகிறான்.

arjuna

அந்த வில்லையும் அம்பையும் சிவபிரான் பெற்றவுடன் அங்கு ஒரு பிரம்மச்சாரி எழுகிறான். அவன் வில்லிலே அம்பைப் பூட்டிக் காண்பிக்க அர்ஜுனன் அந்த நிலையை நன்கு கற்றுக் கொண்டு ருத்ரன் கொடுத்த மந்திரத்தையும் பெற்றுக் கொள்கிறான்.

இப்படியாக, சிவன் பாசுபாதாஸ்திரத்தை அர்ஜுனனிடம் கொடுத்து ஆசீர்வதிக்கிறார்.. கனவிலேயே நடக்கும் இந்த அதிசயப் பயணமும் பாசுபதாஸ்திரத்தைப் பெறும் நிகழ்ச்சியும் மஹாபாரதம் துரோண பர்வத்தில் வேத வியாஸரால் விவரிக்கப்படுகிறது. படிப்போரைப் புல்லரிக்க வைக்கும் அதிசய நிகழ்வு இது! (துரோண பர்வத்தில் 80, 81 அத்தியாயங்களிலும் 147,148ஆம் அத்தியாயங்களிலும் விவரிக்கப்படுகிறது – 1922ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்ட ம.வீ.ராமானுஜாசாரியார் பதிப்பு).கனவில் இப்படியொரு அற்புத அஸ்திரம் பெறும் நிகழ்வைச் சுட்டிக் காட்டும் ஒரே இலக்கியம் மஹாபாரதமே!

பாசுபதாஸ்திரம்

பாசுபதாஸ்திரம் சாதாரணமாக மனிதர்கள் மேல் பிரயோகிக்கப்படக் கூடாத தெய்வீக அஸ்திரம். மனம் பரிசுத்தமான, பாவமற்ற ஒருவனே அதைப் பெற முடியும். சிவன் அர்ஜுனனை மனிதர்களிலேயே உத்தமமான ஒருவனாக அங்கீகரித்து அதை உலகிற்குக் காட்டிய சம்பவம் இது. கிருஷ்ணரும் அர்ஜுனனை கீதையில் ‘பாவமற்றவனே’ என அழைப்பதையும் காணலாம்.

மந்திரம் கூறி வெறும் கண்களினால் எய்யப்படும் ஆச்சரியமான பாசுபதாஸ்திரத்தை ஜயத்ரதன் மீது கிருஷ்ணரின் ஆணையால் அர்ஜுனன் பதினான்காம் நாள் நடந்த போரில் பிரயோகிக்க அவன் தலை அறுந்து ஆகாயத்தில் பறக்கிறது.

உடனே கிருஷ்ணர், ‘”அர்ஜுனா! அதைக் கீழே விழ விடாதே. அவனது தகப்பன் விருத்தக்ஷத்திரன் அந்தத் தலை யார் மீது விழுகிறதோ அவன் தலை சுக்கு நூறாக வெடிக்க வரம் வாங்கியுள்ளான். இப்போது தவத்தில் ஆழ்ந்துள்ள அவன் மீது தலையை விழச் செய்” என்று கட்டளை இடுகிறான்.


shivaarujuna

Baphuon, Cambodia

அர்ஜுனன் தலையை ஆகாயத்தில் பந்தாடிச் சுழலவிட்டு அதை விருத்தக்ஷத்திரன் மடியில் விழச் செய்யவே அவன் தலை சுக்கு நூறாக வெடிக்கிறது.

ஒரே கல்லில் இரண்டு மாங்காய்! சிவ, கிருஷ்ணரின் அனுக்ரஹம் சேர்ந்து இருக்கும் போது அர்ஜுனனால் எதைத் தான் சாதிக்க முடியாது!

மகாபாரதம் விவரிக்கும் அற்புதமான சிவானுக்ரஹத்தை கதை நெடுகிலும் ஆங்காங்கே காணலாம். சிவ பக்தியின் மஹிமையையும் பயனையும் உணர்ந்து மெய் சிலிர்க்கலாம்.


mahabalipuram

சிவன் வழி நடத்திச் சென்ற மஹாபாரதப் போர்

இன்னொரு மாபெரும் ரகசியத்தையும் துரோண பர்வத்தின் இறுதி அத்தியாயத்தில் (263ஆம் அத்தியாயம்) காணலாம்.துரோண வதம் முடிகிறது. அர்ஜுனன் தற்செயலாக அங்கு வந்து சேர்ந்த மஹரிஷி வியாஸரிடம், “மஹரிஷியே! பகைவர்களைக் கொன்றேன். ஆனால் எனது முன்னால் அக்னி போன்று பிரகாசிக்கும் ஒரு மஹாபுருஷர் சென்று கொண்டிருப்பதைக் காண்கிறேன். அவர் சென்ற வழியே நான் செல்கிறேன். அவர் செல்லும் வழியெல்லாம் பகைவர் அழிகின்றனர். எல்லோரும் நான் தான் பகைவரைக் கொன்று கொண்டிருப்பதாக எண்ணுகின்றனர். அவர் யார்?” என்று விளங்காத மர்மத்தைத் தெரிந்து கொள்ளூம் ஆவலில் கேட்கிறான்.

மஹரிஷி வியாஸர்,” அவரே சங்கரர். பக்தர்களுக்கு அழியாத வரம் கொடுத்து அனுக்ரஹிக்கும் மகாதேவனைச் சரண் அடை” என்று அருளுகிறார்.

மஹாபாரதப் போரில் அர்ஜுனனைக் கருவியாகக் கொண்டு சிவனே யுத்தத்தை முன் நின்று நடத்திய மாபெரும் அதிசயச் செய்தியை அர்ஜுனன் மற்றும் வியாஸ முனிவரின் வார்த்தைகளால் தெரிந்து கொள்ள முடிகிறது.


Rudram-Namakam-Chamkam-800x737

சிவ ரகசியம்:சத ருத்ரியம்

சிவனின் மஹிமைகளை வியாஸர் அர்ஜுனனுக்குத் தெளிவாக விவரிக்கையில் பல ரகசியங்கள் நமக்குப் புலப்பட ஆரம்பிக்கின்றன. அவற்றில் முக்கியமான சில:-

1)ஆயிரம் வருட காலம் இடைவிடாமல் சொன்னாலும் சிவனின் குணங்களின் பெருமையை என்னால் சொல்ல முடியாது – வியாஸர்

2)பக்தர்களை அவரே எல்லா இடுக்கண்களிலிருந்தும் விடுவிக்கிறார். நீண்ட ஆயுளும், ஆரோக்யமும், ஐஸ்வர்யமும், தனமும்,புஷ்களமான அபீஷ்டங்களையும் அவரே பக்தர்களுக்கு அனுக்ரஹிக்கிறார்.

3)அபீஷ்டங்களுக்கு பிரபு ஆதலின் அவர் ஈஸ்வரர் (எனப்படுகிறார்).மஹா பூதங்களுக்கு ஈஸ்வரராக இருப்பதால் அவர் மஹேஸ்வரர்.

4)பிரம்மா, வருணன், இந்திரன், யமன்,  குபேரன் இவர்களைத் தண்டித்து சம்ஹரித்தலால் அவர் ஹரன். பலாத்காரமாக இரண்டு கண்களும் மூடப்பட்டபோது மூன்றாவதாக ஒரு கண்ணை உருவாக்கிக் கொண்டதால் அவர் முக்கண்ணர்.

5) அவரது மங்களரூபமானது  தொடைகள் வரை அக்னி மயமானது. மறு பாதி சந்திரமயமானது. யார் ஒருவர் அவரைத் தொழுகிறாரோ அவர் சகல ஐஸ்வர்ங்களையும் பெறுகிறார்.

இப்படி சத ருத்ரியமாக சிவனின் பெருமைகளை வேத வியாஸர் விவரிப்பது பிரமிக்க வைக்கும் பெரும் வேத ரகசிய விளக்கமாகத் திகழ்கிறது.

rudram

சிவன், சக்தி, விநாயகர், முருகன் விஷ்ணு என அனைவரின் மஹிமைகளையும் விளக்கும் அபூர்வமான இலக்கியமான மஹாபாரதம் உலகின் தலையாய அற நூல். இதைப் பரப்புவதன் மூலம் அறத்தை தலை நிறுத்தி பாரதத்தை உலகின் உன்னத ஸ்தானத்தில் ஏற்ற முடியும் என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை!

 

contact swami_48@yahoo.com

1621 articles are available in English and Tamil. Absolutely Free!!!!

om namashivaya

****************

தமிழ் திரைப்படங்களில் சம்ஸ்கிருதம்! – 1

linga-movie-wallpapers

by ச.நாகராஜன்

Written by S Nagarajan

Post No. 1617;  Dated 2nd February 2015

 

உலகின் ஒப்பற்ற மொழி தமிழ்

தாய் மொழியின் மீது பற்று கொள்ளாதவனை மனிதனாகவே கருத முடியாது. அதே சமயம் இதர மொழிகளின் மீது காழ்ப்புணர்ச்சி கொள்பவனையும் மனிதனாகக் கருத முடியாது.

உலகின் ஒப்பற்ற தனி மொழியான தமிழின் பெருமையைச் சொல்ல வல்லவர்கள் பல மொழியையும் அறிந்திருக்க வேண்டும். குறிப்பாக சம்ஸ்கிருதத்தை அறிந்திருக்க வேண்டும்.

சம்ஸ்கிருதமும் அறிவோம்

பாரதப் பண்பாட்டின் ஆணி வேராக விளங்கும் வேதங்கள், உபநிடதங்கள், புராணங்கள், இராமாயண, மஹாபாரத இதிஹாஸங்கள் ஏராளமான காவியங்கள், மற்றும் கலைகளை விளக்கும் நூல்கள் எனப் பல்லாயிரக்கணக்கில் சம்ஸ்கிருத அறிவுக் களஞ்சியம் விரிந்துள்ளது. ஆகவே காழ்ப்புணர்ச்சி அற்ற சமரஸ நோக்கில் எதையும் கற்று ஏற்றம் பெறுவதே சிறப்பு.

வெகுஜன கவர்ச்சியாக இன்றைய நாட்களில் விளங்கும் திரைப்படங்களில் சம்ஸ்கிருதம் நிறையவே இருக்கிறது. இதில் தப்பு ஏதும் இல்லை. காலம் காலமாக நாம் தமிழகத்தில் அன்றாடம் வழங்கி வரும் சில சொற்களின் ஆணி வேரை சம்ஸ்கிருத மூலத்தில் பார்க்க முடியும்.


lingaa-teaser

நடிகர் திலகம், நடிகையர் திலகம், மக்கள் திலகம்

எடுத்துக் காட்டாக சடங்கு பற்றிய திரைப்படக் காட்சிகளை எடுத்துக் கொள்வோம். எத்தனை பாடல்கள் உள்ளன! இந்த சடங்கை எந்த ஜாதியினராவது விட்டு விடுவார்களா, இன்றும் கூட!

சடங்கு என்ற சொல் ஷட் +அங்கம் = ஷடங்கம் என்ற சம்ஸ்கிருத சொல்லில் இருந்து எழுந்த ஒன்று.

 

திரைப்படங்களில் அபாரமாக நடிக்கும் நடிக நடிகையரைக் கூட திலகம் என்று தான் சொல்கிறோம். நடிகர் திலகம், நடிகையர் திலகம், மக்கள் திலகம் என நம் மனம் கவர்ந்த சிறப்பு நடிக நடிகையரை யாராலும் மறக்க முடியுமா, என்ன?

உச்ச கட்ட போற்றுதலாக நாம் கொடுக்கும் திலகம் ஒரு சம்ஸ்கிருதச் சொல் தான்!

தமிழ்க் கம்பன் சீதையை வனிதையர் திலகம் என்று தான் வர்ணிக்கிறான்!

சூப்பர்ஸ்டார் பாடும் சிவ தாண்டவ ஸ்தோத்திரம்

காட்சி அமைப்புகளையும் பாடல்களையும் எடுத்துக் கொள்வோம். இப்போது சமீபத்தில் வந்த சூப்பர்  ஸ்டார் ரஜினிகாந்தின் படமான லிங்காவில் சிவன் கோவில் திறப்பு என்னும் ஒரு அருமையான காட்சி வருகிறது. அதில் அவர் சிவனைத் துதிக்கும் தோத்திரப் பாடல் ராவணனால் செய்யப்பட்ட சிவ தாண்டவ ஸ்தோத்திரம். இது பல தெலுங்குப் படங்களில் இடம் பெற்ற ஒன்று. ஏராளமான பாடகர்களால் பாடப்பட்ட ஒன்று. அருமையான இசை அமைப்பாளர்கள் கம்பீரமான இந்த ஸ்தோத்திரத்திற்கு இசை அமைத்துள்ளனர்.


stotra best

ஜடாடவீகலஜ்ஜலப்ரவாஹபாவிதஸ்தலே

கலேவலம்ப்ய லம்பிதாம் புஜங்கதுங்கமாலிகாம்.

டமட்டமட்டமட்டமன்னிநாதவட்டமர்வயம்

சகார சண்டதாண்டவம் தனோது ந: ஸிவ: ஸிவம்.

 

ஜடாகடாஹஸம்ப்ரமப்ரமன்னிலிம்பனிர்ஜரீ

விலோலவீசிவல்லரீவிராஜமானமூர்தனி.

தகத்தகத்தகஜ்வலல்லலாடபட்டபாவகே

கிஷோரசந்த்ரசேகரே ரதி: ப்ரதிக்ஷணம் மம.

என்று இப்படி ஆரம்பிக்கும் அற்புதமாக சிவ நடனத்தை விவரிக்கும் பாடலைக் கொண்டுள்ள காட்சி பொருத்தமான  இடத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது லிங்கா படத்தில்!

இந்த சிவ தாண்டவ ஸ்தோத்திரம் நீளமான ஒன்று அர்த்தம் பொதிந்த ஒன்று. இது முழுவதுமாக படத்தில் இடம் பெறவில்லை.. ஆனால் ரங்காராவ் ராவணனாக நடித்து இந்த ஸ்தோத்திரத்தை கம்பீரமாகப் பாடும் காட்சி தெலுங்கு படத்தில் இடம் பெற்றுள்ளது.

துர்கா மற்றும் காயத்ரி மந்திரம்

தமிழ் படங்களில் வரும் கல்யாணக் காட்சிகளில் தவறாமல் இடம் பெறும் மந்திர ஸ்லோகம்

சர்வ மங்கள மாங்கல்யே சிவே ஸர்வார்த்த சாதிகே

சரண்யே த்ரியம்பகே கௌரி நாராயணி நமோஸ்துதே

இது துர்கா ஸப்த சதியில் மையமாக உள்ள ஸ்லோகம். தாலி அணியும் போது சொல்லப்படும் இந்த ஸ்லோகத்தைப் பல்வேறு படங்களிலும் கேட்டிருக்கிறோம்.

ஓம் பூர்புவஸ்ஸுவ: தத்ஸவிதுர்வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோயோன: ப்ரசோதயாத்


stotram 3

என்ற காயத்ரி மந்திரத்துடன் ஆரம்பிக்கும் படங்கள் ஏராளம். மிக முக்கியமான காட்சிகளில் பின்னணியாக (அர்த்தமுடன் பொருந்தி இருக்கிறதோ இல்லையோ, அந்தக் காட்சியின் ‘எபெக்டைக்’ கூட்ட) பயன்படுத்தப்பட்டு வரும் இந்த மந்திரம் அபாரமான சக்தி உடைய மந்திரம்!

லஜ்ஜாவதியே! அசத்துற ரதியே!

இன்னும் பாடல்களில் வரும் வரிகளைப் பார்ப்போம்:

“சிநேகிதனே ரகசிய சிநேகிதனே” (ஸ்நேஹிதன் – நண்பன்)

“லஜ்ஜாவதியே என்னை அசத்துற ரதியே” (லஜ்ஜை – நாணம், வெட்கம்)

இப்படி எழுதிய கவிஞர்கள் தமிழ்ப் பற்று குறைந்த அல்லது இல்லாத கவிஞர்கள் என்று பட்டம் சூட்டி விடலாமா, என்ன? தேர்ந்தெடுத்த வார்த்தைகளை பொருத்தமான காட்சிகளுக்கென பாடல் வரிகளாக யாத்துள்ளனர், அவ்வளவு தான்!

ப்ரியா, ப்ரியமானவளே என்ற தலைப்பு போல எத்தனை தலைப்புகள்!

அன்புள்ளவளே என்று ஏன் தலைப்பு வைக்கவில்லை என்று சண்டை போடலாமா?

 

சர்வாதிகாரி என்ற வார்த்தையில் உள்ள ஆணவமும் கம்பீரமும் தக்க இடத்தில் திரைப்படத்தில் உபயோகப்படுத்துவதில் என்ன தவறு?

ஆழமுள்ள அர்த்தத்தைத் தரும் சில சொற்களை வசனகர்த்தாக்கள் (அடடா, இங்கு கர்த்தா வந்து விட்டது) பயன்படுத்துவது இயல்பு தான்!

 

திரைப்படங்களிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் வரும் சம்பந்தி, த்ரோஹம், விஸ்வாசம் போன்ற வார்த்தைகளைத் தொகுக்க ஆரம்பித்தால் அதற்கு முடிவு தான் ஏது?


krishnadevaraya

யாதும் ஊரே யாவரும் கேளிர்

 

தமிழர்கள் இயல்பாகவே உள்ள அருமையான பண்பாட்டில் ஊறி வளர்ந்தவர்கள்; வளர்பவர்கள்; இனியும் வளரப் போகிறவர்கள்.

யாதும் ஊரே; யாவரும் கேளிர்

தீதும் நன்றும் பிறர் தர வாரா”

என்ற அருமையான வைர வரிகளை உலகிற்கு அளித்த தமிழ்ப் புலவன் தமிழர் தம் பரந்த மனோபாவத்தை அல்லவா சுட்டிக் காட்டி இருக்கிறான்!

இந்த வழி நல்ல வழி’ நம் தமிழர் வழி. வளரட்டும் இது.

 

-தொடரும்

எமெகிர், எமெசால்: சுமேரிய சம்ஸ்கிருதமும், சுமேரிய பிராக்ருதமும்!

Sumerian_26th_c_Adab

Sumerian Cuneiform (Wikipedia picture)

Research Paper written by london swaminathan

Research article No 1615; Dated 1 February 2015

இந்திய மொழிகள் எல்லாவற்றிலும் இரண்டு வகைகள் உண்டு. இதை ஆங்கிலத்தில் “ டை க்லாஸ்ஸியா” (Diglossia) என்பர். எழுத்து வழக்கில் இலக்கண சுத்தமாக எழுதுவோம். பேச்சு வழக்கில் இலக்கணம் பற்றிக் கவலைப் படாமல் கொச்சை மொழியாகப்  பேசுவோம். டைக்லோஸ்ஸியா (Diglossia) என்ற ஒரே மொழியில் இரண்டு வகை. சில மொழிகளில் இது இரண்டு வகையாக நன்கு கிளைவிட்டுப் போய் தனித் தனியாக வளரும். தமிழில் செந்தமிழ், கொடுந்தமிழ் என இரு வகை உண்டு. இதே போல சம்ஸ்கிருதத்தில் சம்ஸ்கிருதம், ப்ராக்ருதம் என்று இரு பிரிவுகள் உண்டு.

 

வடமொழி நாடகங்களில் இந்த இரண்டிலும் வசனங்கள் இருக்கும். அரசன், அமைச்சர் ஆகியோர் பேசுகையில் சம்ஸ்கிருதத்திலும் பெண்கள், நகைச் சுவை நடிகர்கள் ஆகியோர் பேசுகையில் ப்ராக்ருதத்திலும் வசனங்கள் இருக்கும். சம்ஸ்கிருதம் இப்போது புழக்கத்தில் உள்ள மொழிகளிலேயே மிக மிகப் பழையது. கிரேக்க, எபிரேய, சீன மொழிகளில் இலக்கியம் என்று ஒன்று தோன்றுவதற்கு முன் சம்ஸ்கிருதத்தில் உலகம் வியக்கும் வண்ணம் இலக்கியம் தோன்றிவிட்டது. இதற்கு 1500 ஆண்டுகளுக்குப் பின் தமிழிலும் பிராக்ருதத்திலும் இலக்கியங்கள் தோன்றின.

 

இந்திய மொழிகளில் சம்ஸ்கிருதத்தில் சம்ஸ்கிருதம் பிராக்ருதம் என்று இரண்டு கிளைகள் இருப்பது போல சுமேரியாவிலும் இரண்டு கிளைகள் உள்ளன. எமெகிர் (Emegir) என்பது ஆண்கள் மொழி, எமெசால் (Emesal)  என்பது பெண் மொழி. இந்தியாவிலும் சம்ஸ்கிருதம் ஆண்மொழி, ப்ராக்ருதம் பெண் மொழி. நாடகங்களில் மட்டும் இன்றி வீட்டிலும் பெண்கள் ப்ராக்ருதத்தில் பேசுவர்.

music sumerian

எமெகிர் பிரிவில் 60,000 வரிகள் வரை களிமண் பலகைகளில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதே போல எமெசால் பிரிவில் இன்னும் 60,000 வரிகள்  இருக்கலாம் என்று மதிப்பிடுகின்றனர்.ஆனால் எமெசால், எமெகிர் கிளைகளில் ஒரே பொருளுக்கு வெவ்வேறு சொற்களே உண்டு.

ஆண்கள் மொழியில்– அதாவது எமெகிர் கிளை மொழியில்–  “என்” என்ற முன் ஒட்டு (prefix) இருந்தால் அது திருவாளர் Mr என்பது போல. நின் என்ற முன் ஒட்டு(Prefix) இருந்தால் அது திருமதி Mrs / Miss என்பது போல!

பெண்கள் மொழியில் ‘என் – என்பது உமுன் என்றும் நின் — என்பது கஷன் என்றும் மாறும்.’ சம்ஸ்கிருதம்- பிராக்ருதத்திலோ, செந்தமிழ்- கொடுந்தமிழிலோ இந்த அளவுக்கு வேறுபாடு காண இயலாது. சுமேரியாவில் இந்தப் பிரிவினை 4000 ஆண்டுகளுக்கு முன்னரே (கி.மு2000) தோன்றியதாக அறிஞர்கள் நம்புகின்றனர். எமெசால்- எமெகிர் ஆகிய இரண்டில் , எந்த மொழியில் இருந்து எது வந்தது என்ற விவாதம் இன்னும் நீடிக்கிறது. இதை எழுதுவதற்குக் காரணம், இதே போல இந்திய மொழிகளிலும் இரு வகை இருப்பதே. ஒப்பிட்டுப் பார்ப்பது சுவையான, பொருள் படைத்த ஆய்வாக இருக்கும்.

 

சுமேரியாவில் 60,000 வரிகளும் பொருள் பொதிந்த இலக்கியம் அல்ல. பெரும்பாலானவை ரசீதுகள், பில்கள், வணிக பட்டுவாடா விஷயங்கள்!!! இந்திய இலக்கியங்களிலும், கல்வெட்டுகளிலும் வணிக விஷயஙகள் மிக மிகக் குறைவு.சிந்து சமவெளி முத்திரைகளில் உள்ளவை வணிகச் செய்திகள் என்று வாதிப்போரும் உண்டு. எழுத்துக்களைப் படித்தறியும் காலத்திலேயே அவற்றின் உண்மை புலப்படும். அதுவரை  —யாம் அறியோம் பராபரமே— என்ற நிலை நீடிக்கும்.

sumer

ஆதி மனிதன் கவிதையிலா பேசினான்?

எல்லா மொழிகளிலும் முதலில் கவிதைகளே (Poetry)  எழுதப்பட்டுள்ளன. அதற்கு நீண்ட நெடுங்காலத்துக்குப்  பின்னரே உரை நடை(Prose) தோன்றியது. ஆனால் சம்ஸ்கிருத மொழியில் மட்டும் ரிக்வேத கவிதைகளைத் தொடர்ந்து உடனே யஜுர் வேத உரை  நடைப் பகுதி, பிராமணங்கள், ஆரண்யங்களில் உள்ள உரை நடைப் பகுதிகள் வந்ததாக  வெளி  நாட்டினர் கூறுவர். இது சரியா என்றும் ஆராய வேண்டும். சரி இல்லை என்றே எனக்குத் தோன்றுகிறது. தமிழில் சங்க இலக்கியத்துக்கு  500 ஆண்டுகளுக்குப் பின்னரே உரை நடை நூல்கள் தோன்றின.

(தற்போது ரிக் வேத காலம் .கிமு.1700 என்று பலரும் ஒப்புக்கொள்ளத் துவங்கிவிட்டனர். மேலும் மேலும் ஆராய்ச்சி செய்தால் பால கங்காதர திலகரும் , ஜெர்மானியர்   ஹெர்மன் ஜாகோபியும் சொன்ன கி.மு 4000 என்பதை ஒப்புக்கொள்வர்)

 

இதே போல எல்லா மொழிகளிலும் நாட்டுப்புற இலக்கியம் (Folklore) , கதைகள் (Fiction)  போன்றவை மிகவும் பிற்காலத்தில்தான் எழுந்தன. அதாவது இலக்கியமாக எழுத்து வடிவம் பெற்றது பிற்காலத்தில் தான்.

தமிழிலும் பிராக்ருதம் போல இலக்கியங்கள் உண்டு. அதை நாம் நாட்டுப்புற இலக்கியம் என்போம். முதலில் மனிதர்கள் நாட்டுப் புற/ பேச்சு மொழியையத் தான் பேசி இருப்பார்கள். ஆனால் அதில் இலக்கியம் உருவாவது பிற்காலத்தில்தான். தமிழில் நாட்டுப்புற  இலக்கியம் மிகச் சமீப காலத்தில்தான் உருவானது.. இதே போல வட நாட்டிலும் வேதங்கள் தோன்றி 1500 ஆண்டுகளுக்குப் பின்னர்தான் ப்ராருத நூல்கள் தோன்றின. ஆனால் பேச்சு வழக்கில் இது சம்ஸ்கிருதத்துக்கும் முன்னர் இருந்திரு க்கலாம். ஏனெநில் எந்த மொழி மக்களும் அன்றாடம் கவிதை நடையில் பேசி இருக்க மாட்டார்கள். தமிழிலும் கூட கல்வெட்டு வாசகங்கள் இலக்கிய நடையில் இல்லாமல் கொச்சையாகவே இருக்கிறது. பிற்காலத்தில் மட்டுமே நல்ல கவிதை நடையில் அமைந்துள்ளது.

 

நிறைய பேர் இதைப் புரிந்து கொள்ளாமல் ஏதோ இரண்டு மொழிகள் இருந்ததாக நினைக்கின்றனர். சுருக்கமாகச் சொன்னால் சம்ஸ்கிருதம் இலக்கிய மொழி. பிராக்ருதம் பேச்சு மொழி. எப்படி தமிழ் சினிமாக்களில் கதா நாயகன் —-  ராஜா, அல்லது அமைச்சர் அல்லது அதிகாரி வேடத்தில் நடிக்கும் போது —– தூய இலக்கிய மொழியையும், கிராமத்தான் வேடத்தில் நடிக்கையில் கொச்சை மொழியிலும் பேசுகிறானோ அல்லது நகைச்சுவை நடிகன் கொச்சை மொழியில் பேசுகிறானோ அதே போல வடமொழி நாடகங்களில் எழுதப்பட்டுள்ளது.

 

கி.மு. முதல் மூன்று நூற்றாண்டுக் காலத்தைச் சேர்ந்த தமிழ் கல்வெட்டுகள், பிராமி லிபியில் ஓரிரு வரிகளில் கொச்சையான மொழியில் இருப்பதும் ஆய்வுக்குரியது. இதே காலத்தில் அசோகரோவெனில் நீண்ட வாசகம் உள்ள பெரிய கல்வெட்டுகளைப் பொறித்து விட்டார். தமிழில் ஏன் அப்படி இல்லை, அதே நீளம் உடைய கல்வெட்டுகள் தோன்ற எவ்வளவு காலம்  பிடித்தது என்பது வரலாற்று மாணவர்களுக்கு சுவையான பயிற்சியாக இருக்கும்.

சுமேரியவிலும் இப்படிஒரு நிலை இருப்பது நம்மவர்களுக்குத் தெரியாது. அங்கே பெண்கள் மொழியை அலியாக (ஆணும் இல்லை- பெண்ணும் இல்லை) இருந்த புரோகிதர்களும் உபயோகித்தனர். ஒரே மொழியில் கூட இவ்வளவு வேறுபாடா ,அதுவும் 4000 ஆண்டுகளுக்கு முன் என்பதை ஆராய்ந்தால் மொழிகள் பற்றிய புதிய கொள்கையை உருவாக்க முடியும்.

contact swami_48@yahoo.com