Sumerian Cuneiform (Wikipedia picture)
Research Paper written by london swaminathan
Research article No 1615; Dated 1 February 2015
இந்திய மொழிகள் எல்லாவற்றிலும் இரண்டு வகைகள் உண்டு. இதை ஆங்கிலத்தில் “ டை க்லாஸ்ஸியா” (Diglossia) என்பர். எழுத்து வழக்கில் இலக்கண சுத்தமாக எழுதுவோம். பேச்சு வழக்கில் இலக்கணம் பற்றிக் கவலைப் படாமல் கொச்சை மொழியாகப் பேசுவோம். டைக்லோஸ்ஸியா (Diglossia) என்ற ஒரே மொழியில் இரண்டு வகை. சில மொழிகளில் இது இரண்டு வகையாக நன்கு கிளைவிட்டுப் போய் தனித் தனியாக வளரும். தமிழில் செந்தமிழ், கொடுந்தமிழ் என இரு வகை உண்டு. இதே போல சம்ஸ்கிருதத்தில் சம்ஸ்கிருதம், ப்ராக்ருதம் என்று இரு பிரிவுகள் உண்டு.
வடமொழி நாடகங்களில் இந்த இரண்டிலும் வசனங்கள் இருக்கும். அரசன், அமைச்சர் ஆகியோர் பேசுகையில் சம்ஸ்கிருதத்திலும் பெண்கள், நகைச் சுவை நடிகர்கள் ஆகியோர் பேசுகையில் ப்ராக்ருதத்திலும் வசனங்கள் இருக்கும். சம்ஸ்கிருதம் இப்போது புழக்கத்தில் உள்ள மொழிகளிலேயே மிக மிகப் பழையது. கிரேக்க, எபிரேய, சீன மொழிகளில் இலக்கியம் என்று ஒன்று தோன்றுவதற்கு முன் சம்ஸ்கிருதத்தில் உலகம் வியக்கும் வண்ணம் இலக்கியம் தோன்றிவிட்டது. இதற்கு 1500 ஆண்டுகளுக்குப் பின் தமிழிலும் பிராக்ருதத்திலும் இலக்கியங்கள் தோன்றின.
இந்திய மொழிகளில் சம்ஸ்கிருதத்தில் சம்ஸ்கிருதம் பிராக்ருதம் என்று இரண்டு கிளைகள் இருப்பது போல சுமேரியாவிலும் இரண்டு கிளைகள் உள்ளன. எமெகிர் (Emegir) என்பது ஆண்கள் மொழி, எமெசால் (Emesal) என்பது பெண் மொழி. இந்தியாவிலும் சம்ஸ்கிருதம் ஆண்மொழி, ப்ராக்ருதம் பெண் மொழி. நாடகங்களில் மட்டும் இன்றி வீட்டிலும் பெண்கள் ப்ராக்ருதத்தில் பேசுவர்.
எமெகிர் பிரிவில் 60,000 வரிகள் வரை களிமண் பலகைகளில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதே போல எமெசால் பிரிவில் இன்னும் 60,000 வரிகள் இருக்கலாம் என்று மதிப்பிடுகின்றனர்.ஆனால் எமெசால், எமெகிர் கிளைகளில் ஒரே பொருளுக்கு வெவ்வேறு சொற்களே உண்டு.
ஆண்கள் மொழியில்– அதாவது எமெகிர் கிளை மொழியில்– “என்” என்ற முன் ஒட்டு (prefix) இருந்தால் அது திருவாளர் Mr என்பது போல. நின் என்ற முன் ஒட்டு(Prefix) இருந்தால் அது திருமதி Mrs / Miss என்பது போல!
பெண்கள் மொழியில் ‘என் – என்பது உமுன் என்றும் நின் — என்பது கஷன் என்றும் மாறும்.’ சம்ஸ்கிருதம்- பிராக்ருதத்திலோ, செந்தமிழ்- கொடுந்தமிழிலோ இந்த அளவுக்கு வேறுபாடு காண இயலாது. சுமேரியாவில் இந்தப் பிரிவினை 4000 ஆண்டுகளுக்கு முன்னரே (கி.மு2000) தோன்றியதாக அறிஞர்கள் நம்புகின்றனர். எமெசால்- எமெகிர் ஆகிய இரண்டில் , எந்த மொழியில் இருந்து எது வந்தது என்ற விவாதம் இன்னும் நீடிக்கிறது. இதை எழுதுவதற்குக் காரணம், இதே போல இந்திய மொழிகளிலும் இரு வகை இருப்பதே. ஒப்பிட்டுப் பார்ப்பது சுவையான, பொருள் படைத்த ஆய்வாக இருக்கும்.
சுமேரியாவில் 60,000 வரிகளும் பொருள் பொதிந்த இலக்கியம் அல்ல. பெரும்பாலானவை ரசீதுகள், பில்கள், வணிக பட்டுவாடா விஷயங்கள்!!! இந்திய இலக்கியங்களிலும், கல்வெட்டுகளிலும் வணிக விஷயஙகள் மிக மிகக் குறைவு.சிந்து சமவெளி முத்திரைகளில் உள்ளவை வணிகச் செய்திகள் என்று வாதிப்போரும் உண்டு. எழுத்துக்களைப் படித்தறியும் காலத்திலேயே அவற்றின் உண்மை புலப்படும். அதுவரை —யாம் அறியோம் பராபரமே— என்ற நிலை நீடிக்கும்.
ஆதி மனிதன் கவிதையிலா பேசினான்?
எல்லா மொழிகளிலும் முதலில் கவிதைகளே (Poetry) எழுதப்பட்டுள்ளன. அதற்கு நீண்ட நெடுங்காலத்துக்குப் பின்னரே உரை நடை(Prose) தோன்றியது. ஆனால் சம்ஸ்கிருத மொழியில் மட்டும் ரிக்வேத கவிதைகளைத் தொடர்ந்து உடனே யஜுர் வேத உரை நடைப் பகுதி, பிராமணங்கள், ஆரண்யங்களில் உள்ள உரை நடைப் பகுதிகள் வந்ததாக வெளி நாட்டினர் கூறுவர். இது சரியா என்றும் ஆராய வேண்டும். சரி இல்லை என்றே எனக்குத் தோன்றுகிறது. தமிழில் சங்க இலக்கியத்துக்கு 500 ஆண்டுகளுக்குப் பின்னரே உரை நடை நூல்கள் தோன்றின.
(தற்போது ரிக் வேத காலம் .கிமு.1700 என்று பலரும் ஒப்புக்கொள்ளத் துவங்கிவிட்டனர். மேலும் மேலும் ஆராய்ச்சி செய்தால் பால கங்காதர திலகரும் , ஜெர்மானியர் ஹெர்மன் ஜாகோபியும் சொன்ன கி.மு 4000 என்பதை ஒப்புக்கொள்வர்)
இதே போல எல்லா மொழிகளிலும் நாட்டுப்புற இலக்கியம் (Folklore) , கதைகள் (Fiction) போன்றவை மிகவும் பிற்காலத்தில்தான் எழுந்தன. அதாவது இலக்கியமாக எழுத்து வடிவம் பெற்றது பிற்காலத்தில் தான்.
தமிழிலும் பிராக்ருதம் போல இலக்கியங்கள் உண்டு. அதை நாம் நாட்டுப்புற இலக்கியம் என்போம். முதலில் மனிதர்கள் நாட்டுப் புற/ பேச்சு மொழியையத் தான் பேசி இருப்பார்கள். ஆனால் அதில் இலக்கியம் உருவாவது பிற்காலத்தில்தான். தமிழில் நாட்டுப்புற இலக்கியம் மிகச் சமீப காலத்தில்தான் உருவானது.. இதே போல வட நாட்டிலும் வேதங்கள் தோன்றி 1500 ஆண்டுகளுக்குப் பின்னர்தான் ப்ராருத நூல்கள் தோன்றின. ஆனால் பேச்சு வழக்கில் இது சம்ஸ்கிருதத்துக்கும் முன்னர் இருந்திரு க்கலாம். ஏனெநில் எந்த மொழி மக்களும் அன்றாடம் கவிதை நடையில் பேசி இருக்க மாட்டார்கள். தமிழிலும் கூட கல்வெட்டு வாசகங்கள் இலக்கிய நடையில் இல்லாமல் கொச்சையாகவே இருக்கிறது. பிற்காலத்தில் மட்டுமே நல்ல கவிதை நடையில் அமைந்துள்ளது.
நிறைய பேர் இதைப் புரிந்து கொள்ளாமல் ஏதோ இரண்டு மொழிகள் இருந்ததாக நினைக்கின்றனர். சுருக்கமாகச் சொன்னால் சம்ஸ்கிருதம் இலக்கிய மொழி. பிராக்ருதம் பேச்சு மொழி. எப்படி தமிழ் சினிமாக்களில் கதா நாயகன் —- ராஜா, அல்லது அமைச்சர் அல்லது அதிகாரி வேடத்தில் நடிக்கும் போது —– தூய இலக்கிய மொழியையும், கிராமத்தான் வேடத்தில் நடிக்கையில் கொச்சை மொழியிலும் பேசுகிறானோ அல்லது நகைச்சுவை நடிகன் கொச்சை மொழியில் பேசுகிறானோ அதே போல வடமொழி நாடகங்களில் எழுதப்பட்டுள்ளது.
கி.மு. முதல் மூன்று நூற்றாண்டுக் காலத்தைச் சேர்ந்த தமிழ் கல்வெட்டுகள், பிராமி லிபியில் ஓரிரு வரிகளில் கொச்சையான மொழியில் இருப்பதும் ஆய்வுக்குரியது. இதே காலத்தில் அசோகரோவெனில் நீண்ட வாசகம் உள்ள பெரிய கல்வெட்டுகளைப் பொறித்து விட்டார். தமிழில் ஏன் அப்படி இல்லை, அதே நீளம் உடைய கல்வெட்டுகள் தோன்ற எவ்வளவு காலம் பிடித்தது என்பது வரலாற்று மாணவர்களுக்கு சுவையான பயிற்சியாக இருக்கும்.
சுமேரியவிலும் இப்படிஒரு நிலை இருப்பது நம்மவர்களுக்குத் தெரியாது. அங்கே பெண்கள் மொழியை அலியாக (ஆணும் இல்லை- பெண்ணும் இல்லை) இருந்த புரோகிதர்களும் உபயோகித்தனர். ஒரே மொழியில் கூட இவ்வளவு வேறுபாடா ,அதுவும் 4000 ஆண்டுகளுக்கு முன் என்பதை ஆராய்ந்தால் மொழிகள் பற்றிய புதிய கொள்கையை உருவாக்க முடியும்.
contact swami_48@yahoo.com
You must be logged in to post a comment.