Post No 1677; Date 26th February 2015
சம்ஸ்கிருதச் செல்வம் – இரண்டாம் பாகம்
17. குடத்தினுள் இருக்கும் குத்துவிளக்கு!
ச.நாகராஜன்
நியாயங்களின் வரிசைத் தொடரில் மேலும் சில நியாயங்களைப் பார்ப்போம்:
घटप्रदीपन्यायः
ghatapradipa nyaya
கடப்ரதீப நியாயம்
ஜாடிக்குள் அல்லது ஒரு குடத்தினுள் இருக்கும் குத்துவிளக்கு பற்றிய நியாயம் இது.
ஒரு ஜாடிக்குள் குத்துவிளக்கை வைத்தால் அதன் உட்புறம் மட்டுமே பிரகாசமாயிருக்கும். அதே போல ஒரு மேதையின் மேதாவிலாசம் ஒரு சிறிய இடத்தில் மட்டுமே இருந்தால் அதனால் மற்றவர்களுக்கு ஒரு பிரயோஜனமும் இல்லை.
இது போன்ற சமயங்களில் இந்த நியாயம் சுட்டிக்காட்டப் பயன்படும்.
जलमृणालन्यायः
jalamrnala nyayah
ஜல ம்ருணாள நியாயம்
நீரில் இருக்கும் தாமரை பற்றிய நியாயம் இது.
தடாக நீரில் இருக்கும் ஒரு தாமரையின் தண்டு அந்தக் குளத்தின் நீரின் அளவே உயர்ந்திருக்கும். நீர் மேலே ஏறினால் அதுவும் மேலே வரும். நீர் வற்றி விட்டாலோ அதுவும் கீழிறங்கி விடும். குளமே வற்றி விட்டால் அதுவும் வறண்டு கீழே இருக்கும். ஆனால் அது பட்டுப் போகாது.
அதே போல உயர்ந்த மனிதன் ஒருவன் துரதிர்ஷ்டவசமாக துயரமான சூழ்நிலையினால் தாழ்ந்த நிலையை அடைந்து விட்டாலும் அவன் தனது உயரிய குணங்களை இழந்து விட மாட்டான்.
வெள்ளத் தனையது மலர் நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு – குறள் 595
என்ற குறளில் தாமரை மலரின் நீட்டம் நீரின் அளவே இருப்பது குறிப்பிடப்படுகிறது. இதை வள்ளுவர் உள்ளத்தின் உயர்வுக்கு ஒப்பிட்டுச் சொல்கிறார்.
ज्ञानीविमानन्यायः
jnanivimana nyayah
ஞானி விமான நியாயம்
ஞானியும் விமானமும் பற்றிய நியாயம் இது.
சமவெளியில் நடந்து செல்லும் ஒரு மனிதனால் ஒரு மலையின் உயரத்தையும் ஒரு பள்ளத்தின் ஆழத்தையும், சம வெளியின் சமபரப்பையும் தெளிவாக அறிந்து கொள்ள முடியும். ஆனால் அவனே ஒரு விமானத்தில் பறக்கும் போது இவற்றைப் பார்த்தால் இவற்றின் வேறுபாடுகளை அறிந்து கொள்ள இயலாது.கீழே இருக்கும் அனைத்துமே ஒரே மாதிரியாக சமமாக இருக்கும்.
ஞானத்தின் கீழ்ப்படியில் இருக்கும் ஒருவன் உயர்ந்தவன், தாழ்ந்தவன், பெரியது, சிறியது, நல்லது, தீயது ஆகிய வேறுபாடுகளின் அடிப்படையிலேயே தன் செயல்களைச் செய்வான். ஆனால் ஞானத்தின் உயர்படியில் இருக்கும் ஞானிக்கோ எல்லா வேறுபாடுகளும் அகன்று விடும். அவனுக்கு அனைத்துமே ஒன்று தான்; சமம் தான்!
ஞானியின் உயர்நிலையைக் குறிக்கப் பயன்படும் நியாயம் இது!
दण्डचक्रन्यायः
dandacakra nyayah
தண்ட சக்ர நியாயம்
குயவனின், அச்சு மற்றும் கத்தியைக் குறிக்கும் நியாயம் இது.
மண்பானையை உருவாக்க அச்சு, சக்கரம் மற்றும் கத்தி ஆகியவையே காரணமாகும்.
அநேக விளைவுகள் ஒன்றைத் தொடர்ந்து உருவானால் அப்போது இந்த நியாயம் சுட்டிக் காட்டப்படும்.
दग्धपटन्यायः
dagdhapata nyayah
தக்த பட நியாயம்
எரித்த துணி பற்றிய நியாயம் இது.
துணி ஒன்று எரிக்கப்படும் போது, சில சமயம் துணி முழுவதாக எரிந்து விட்டாலும் கூட, அது சரியாக இருப்பது போல வெளிப்பார்வைக்குத் தோன்றும்.
ஒன்றுக்கும் உதவாத ஒன்று, வெளிப்பார்வைக்கு சரியானது போலத் தோன்றும் போது இந்த நியாயம் பயன்படுத்தப்படும்.
*************
You must be logged in to post a comment.