வானவர்க்குத் தான் தெய்வம் நீ என்றால் அது உனக்குப் புகழா, என்ன?
Written by S NAGARAJAN
Post No.2221
Date: 7th October 2015
Time uploaded in London: 9-34 am
Thanks for the pictures.
Don’t use pictures. Don’t reblog for at least a week.
ச.நாகராஜன்
இறைவனை எப்படி விளக்குவது?
இறைவன் பெரியவன்! எல்லாம் வல்லவன்!!
ஆகவே “ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி வழுவிலா அடிமை செய்ய வேண்டும்” என்று ஆழ்வார் ஆசைப்படுகிறார் (நம்மாழ்வார் திருவாய் மொழி 3 -3 1)
ஆனால் இறைவன் யார்? எங்கே இருக்கிறான்? உருவமாகவா? அருவமாகவா? மனிதருள் அவதாரமாகவா? இயற்கையாகவா? மணியாகவா? ஒளியாகவா?
கேட்கிறார்:
புகழும் நல் ஒருவன் என்கோ?
பொருவில் சீர்ப் பூமி என்கோ?
திகழும் தண் பரவை என்கோ?
தீ என்கோ? வாயு என்கோ?
நிகழும் ஆகாசம் என்கோ?
நீள் சுடர் இரண்டும் என்கோ?
குன்றங்கள் அனைத்தும் என்கோ?
மேவு சீர் மாரி என்கோ?
விளங்கு தாரகைகள் என்கோ?
நாவியல் கலைகள் என்கோ?
ஞான நல்லாவி என்கோ?
பங்கயக் கண்ணன் என்கோ?
பவளச் செவ்வாயன் என்கோ?
அங்கதிர் அடியன் என்கோ?
அஞ்சன வண்ணன் என்கோ?
செங்கதிர் முடியன் என்கோ?
திரு மறு மார்வன் என்கோ?
சாதி மாணிக்கம் என்கோ?
சவி கொள் பொன் முத்தம் என்கோ?
சாதி நல் வயிரம் என்கோ?
தவிவில் சீர் விளக்கம் என்கோ?
ஆதியஞ் ஜோதி என்கோ?
ஆதியம் புருடன் என்கோ?
அடியவர் வினை கெடுக்கும் நச்சு மாமருந்தம் என்கோ?
நலங்கடல் அமுதம் என்கோ?
அச்சுவைக் கட்டி என்கோ?
அறுசுவை அடிசில் என்கோ?
நெய்ச்சுவைத் தேறல் என்கோ?
நான்கு வேதப் பயன் என்கோ?
சமய நீதி நூல் என்கோ?
நுடங்கு கேள்வி இசை என்கோ?
இவற்றுள் நல்ல மேல் என்கோ?
வினையின் மிக்க பயன் என்கோ?
கண்ணன் என்கோ? மால் என்கோ? மாயன் என்கோ?
வானவர் ஆதி என்கோ?
வானவர் தெய்வம் என்கோ?
வானவர் போகம் என்கோ?
வானவர் முற்றும் என்கோ?
ஊனமில் செல்வம் என்கோ?
ஊனமில் சுவர்க்கம் என்கோ?
ஊனமில் மோக்கம் என்கோ?
ஒளி மணிவண்ணன் என்கோ?
நளிர்மணிச் சடையன் என்கோ?
நான்முகக் கடவுள் என்கோ? (திருவாய்மொழி 3-4- 1 முதல் 7)
யாரை இறைவன் என்று சொல்வது? எப்படி அவனை விவரிப்பது?
தேவர்களுக்கு மட்டுமா தெய்வம் அவன்?
அவன் வானில் உறைபவர்க்கு மட்டும் தான் தெய்வம், அவர்களுக்கு மட்டுமே அருள் பாலிப்பான் என்றால், அவன் ஒரு தெய்வமா, அப்படிப்பட்ட தெய்வத்தால் எனக்கு என்ன பயன்? அவனுக்கு அது புகழ் ஆகுமா?
ஈசன் வானவர்க்கு என்பன் என்றால் அது தேசமோ? (திருவாய்மொழி 3-3-4)
நிச்சயம் இல்லை!
சரி, மேலே சொன்ன அனைத்தில் யார் என ஆழ்வார் இறைவனை இனம் கண்டாரா?
கண்டார்; விடையையும் தெரிவித்து விட்டார்! இப்படி:-
“யாவையும் எவரும் தானாய் அவரவர் சமயம் தோறும் தோய்விலன்
புலன் ஐந்துக்கும் சொலப்படான்
உணர்வின் மூர்த்தி “
அவனை அடையக் கூடிய வழி? அதையும் கூறுகிறார்;-
ஆவி சேர் உயிரின் உள்ளால் ஆதுமோர் பற்றிலாத பாவனை அதனைக் கூடில் அவனையும் கூடலாம்! (திருவாய்மொழி 3-5-10)
‘இல்லதும் உள்ளதும் அல்லது அவன் உரு’! ((திருவாய்மொழி 1-2-4)
“பிணக்கு அற அறுவகைச் சமயமும் நெறி உன்னி உரைத்த கணக்கறு நலத்தனன்” (திருவாய்மொழி 1-3-5)
ரகசியம் புரிகிறது
ஆஹா! ஆழ்வார் சொன்ன ரகசியம் கொஞ்சம் புரிகிறது.
இறைவன் அனைவருக்கும் பொது; அனைத்தும் ஆனவன் அவன்! அனைவருக்கும் அருள் பாலிப்பவன்.
வேண்டுதல் வேண்டாமை இலான்!
ஒவ்வொரு சமயமும் தன் தெய்வம் என் தெய்வம் என்று சொல்லுபவனும் அவனே! பற்றிலாத பாவனை கூடில் அவனையும் கூடி விடலாம்.
அந்த பாவனை வருவதற்கு அவன் நினைவு வேண்டும்; பக்தி வழி நடத்தல் வேண்டும்; சேவை செய்ய வேண்டும். To know God; To Love God; To Serve God இதுவே வழி!
இதைச் செய்தால் ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி வழுவிலா அடிமை செய்ய முடியும்!
இதைத் தெளிவாகச் சொல்கிறார், நமக்காக, நம்மாழ்வார்!
ஆழ்வாரின் பாடல்கள் அத்தனையும் நம்மை வாழ்விக்கும் அமுதம்!
******************
You must be logged in to post a comment.