Written by london swaminathan
Date: 2 May 2016
Post No. 2774
Time uploaded in London :– 11-58 AM
( Thanks for the Pictures)
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)
மஹாபாரதம் உத்யோக பர்வத்தில் ஒரு அருமையான ஸ்லோகம். இதே கருத்தை வள்ளுவனும் பிற்காலத்தில் எழுதியிருக்கிறான்:–
த்வாவம்பசி நிவேஷ்டவ்யோ கலே பத்வா த்ருடாம் சிலாம்
தனவந்தமதாதாரம் தரித்ரம் ச தபஸ்வினம்
–மஹாபாரதம், உத்யோக பர்வம் 33-60
அதாத தனிக – பணமிருந்தும் கொடுக்க மறுப்பவன்
அதபஸ்வி தரித்ர – (கடவுள்) நம்பிக்கையற்ற ஏழை
த்வா- இருவரும்
கலே பத்வா த்ருடாம் சிலாம்- கழுத்தில் கல்லைக் கட்டி
அம்பசி நிவேஷ்டவ்ய = கடலில் மூழ்கடிக்கப்படவேண்டியவர்கள்.
வெறுமனே கடலில் தூக்கிப்போட்டால், ஒருவேளை நீந்திக் கரை சேர்ந்துவிடுவார்களே என்றெண்ணி, கழுத்தில் கல்லைக் கட்டி கடலில் தூக்கி எறிக என்கிறது மஹாபாரதம்.
வள்ளுவனும் இப்படி சுடு சொற்களையே பெய்கிறான்: கையை முறுக்கு, தாடையில் ஓங்கி அடித்து நொறுக்கு, கரும்பை நசுக்கிப் பிழிவது போல கருமியை நசுக்கு – என்பான் வான் புகழ் வள்ளுவன்!!
“வள்ளுவனும் வன்முறையும்”, “பாரதியும் வன்முறையும்” என்று 24 ஜூலை, 2013ல் நான் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி இதோ:
மரண தண்டனைக்கு ஆதரவு
மரண தண்டணைக்கு ஆதரவு தருபவன் வள்ளுவன். அவன் தீவிர அஹிம்சாவாதி அல்ல. தீயோரை அழிப்பது பயிர்களின் களைகளை நீக்குவது போல என்று அழகான உவமை தருகிறான். இதோ அந்தக் குறள்:
கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனோடு நேர் (550)
பொருள்: நாட்டில் உள்ள கொடியோரை மரண தண்டனை கொடுத்து அழிப்பது, பயிர்கள் நன்றாக வளர உழவர்கள் களை எடுப்பது போல் ஆகும்.
ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்
எண்ணின் தவத்தான் வரும் (264)
கீதையில் ‘’பரித்ராணாய சாதூணாம் விநாசாய ச துஷ்க்ருதாம்’ என்று கண்ணன் சொன்னதன் எதிரொலி இது. ‘’தீயோரை அழிப்பதும் நல்லோரைக் காப்பதும் என் குறிக்கோள்’’ என்று பகவான் கண்ணன் சொன்னதை, தவமுடைய யாரும் செய்ய முடியும் என்பதை வள்ளுவன் ஒப்புக்கொள்கிறான்.
கன்னத்தில் அடி, கையை முறுக்கு, கரும்பு போல நசுக்கு
அதிகாரம் 108, கயவர்கள் பற்றியது. அதில் கஞ்சர்களையும் சேர்த்துத் திட்டுகிறார். கயவர்களின் கன்னத்தில் அடித்து ஆளை நொறுக்கு என்றும் சொல்வான் வள்ளுவன்.
ஈர்ங்கை விதிரார் கயவர் கொடுறுடைக்கும்
கூன்கைய ரல்லா தவர்க்கு (1077)
பொருள்: கன்னத்தில் அடித்து நொறுக்கினால்தான் கயவர்கள் உதவி செய்வர். அதுவரை சாப்பிட்ட பின்னர் ஈரக் கையால் கூட உதறித் தெறிக்க மாட்டார்கள்.
இன்னொரு குறளில் கரும்பு போல கசக்கி நசுக்கு என்கிறான்.
சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல்
கொல்லப் பயன்படும் கீழ் (1078)
பொருள்: சான்றோர்கள் சொன்ன மாத்திரத்திலேயே பிறர்க்கு உதவி செய்வர். கயவர்கள் மட்டும் கரும்பு போல் கொன்று பிழிந்தால்தான் பயன்படுவார்கள்.
வள்ளுவன் கோபக்காரனும் கூட. சோற்றுக்கே அலையவேண்டிய நிலை இருக்குமானால் பிரம்மாவே பிச்சை எடுக்கட்டும் என்று அவனைச் சபிக்கவும் தவறவில்லை.
இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகு இயற்றியான் (1062)
பொருள்: உலகில் சிலர் பிச்சை எடுத்துத்தான் உயிர் வாழவேண்டும் என்றால், அந்த பிரம்மாவே பிச்சை எடுத்து அழியட்டும்.
ஆக தேவையானபோது வன்முறையைப் பிரயோகிக்கலாம்; அதர்மம் செய்வோருக்கு எதிராக மட்டும் வன்முறையைக் கையாளலாம்.
–சுபம்–
You must be logged in to post a comment.