‘முடி மன்னர், பிடி சாம்பல் ஆவர்’ (Post No.4297)

Written by London Swaminathan

 

Date:13 October 2017

 

Time uploaded in London- 7-37 am

 

 

Post No. 4297

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

பட்டினத்தாரும் நம்மாழ்வாரும் பாடியது:

முடி மன்னர், பிடி சாம்பல் ஆவர்

இரண்டு பெரிய பக்தர்கள், ஒரே கருத்தைச் சொல்லும்போது, அதை நம் மனதில் வைப்பது எளிதாகிறது; மேலும் ஒருவர் வைணவர்கள் போற்றும் நம்மாழ்வார், மற்றொருவர் சைவர்கள் போற்றும் பட்டினத்தார் என்பதைக் காணுகையில் நம் ஆர்வம் கொப்புளிக்கிறது.

 

இருவரும் என்ன சொல்கிறார்கள்?

நீ எவ்வளவு பெரிய ஆள் ஆனாலும் இறுதியில் ஆண்டியும் அரசனும் சந்திக்கும் இடம் ஒன்றே.

 

நம் வாழ்வில் காணா சமரச இடம்

சுடுகாட்டிலோ, இடு காட்டிலோதான் நாம் அனைவரும் வித்தியாசமின்றி சந்திக்கிறோம்

ரம்பையின் காதல் என்ற தமிழ் திரைப்படத்தில் ஒரு அருமையான பாடல்:–

 

சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா

சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா

சமரசம் உலாவும் இடமே.

 

ஜாதியில் மேலோர் என்றும் தாழ்ந்தவர் தீயோரென்றும் பேதமில்லாது

எல்லோரும் முடிவில் சேர்ந்திடும் காடு

தொல்லையின்றினே தூங்கிடும் வீடு

உலகினிலே இது தான் நம் வாழ்வில் காணா

சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா

சமரசம் உலாவும் இடமே.

 

 

ஆண்டி எங்கே அரசனும் எங்கே

அறிஞன் எங்கே அசடனும் எங்கே

ஆவி போன பின் கூடுவார் இங்கே

ஆகையினால் இது தான் நம் வாழ்வில் காணா

சமரசம் உலாவும் இடமே

 

 

பட்டினத்தார் பாடல்

பாமர மக்களுக்குப் புரியும் வகையில் எழுதப்பட்டது திரைப்படப் பாடல். இலக்கிய நயம்பட எழுதப்பட்டது பக்திப் பாடல்; மேலும் பக்திப் பாடல்களைப் பாடுவோர் அதை அடிமனதில் தோன்றும் ஆன்மீகப் பேரூற்றில் இருந்து தருகையில் நாம் மிகவும் ரசிக்கிறோம்; பருகுகிறோம். ஆகையால் காலா காலத்துக்கும் அப்பாடல்கள் அழிவதில்லை. அதே கருத்து திரைப்பாடல்களில் வருகையில் அது அழிந்துவிடுகிறது. ஏனெனில் அவர்கள் காசு, பணத்துக்கு எழுதுகிறார்கள்.

 

இதோ பட்டினத்தார் பாடல்:–

 

முடிசார்ந்த மன்னரும் மற்றுமுள்ளோரும் முடிவில் ஒரு
பிடி சாம்பராய் வெந்து மண்ணவதுங் கண்டு பின்னும் இந்தப்
படிசார்ந்த வாழ்வை நினைப்பதல்லால் பொன்னின் அம்பலவர்
அடிசார்ந்து நாம் உய்யவேண்டும் என்றே அறிவாரில்லையே.

 

 

பொருள் மிகவும் எளிது:

பெரிய  வைர, ரத்தின, தங்க கிரீடங்களை (மணி முடி) தாங்கி பாரையே ஆண்ட அரசர்களும் இறுதில் இறந்த பின்னர் எரிக்கப்பட்டு ஒரு கைப்பிடி சாம்பல் ஆகிவிடுவர். இதைப் பார்த்த பின்னரும், பலரும் போகும் வழிக்குப் புண்ணியம் சேர்க்காமல், மேலும் மேலுமாசைகளைப் பெருக்கி வாழ மக்கள் விரும்புகின்றனர். திருத் தில்லை அம்பலத்தில் ஆடும் இறைவனின் அடிகளை நாடும் நாட்டம் வரவில்லையே!

 

இது பட்டினத்தாரின் ஏக்கம்.

இதோ நம்மாழ்வார் பாசுரம்:

அடிசேர் முடியினர் ஆகி அரசர்கள் தாம் தொழ

இடிசேர் முரசங்கள் முற்றத்து இயம்ப இருந்தவர்

பொடிசேர் துகளாய்ப் போவர்கள் ஆதலில் நொக்கெனக்

கடிசேர் துழாய் முடிக்கண்ணன் கழல்கள் நினைமினோ

–திருவாய் மொழி, திவ்வியப் பிரபந்த பாடல் எண் 3009

 

பொருள்:-

 

பேரரசர்கள் ஒரு சமயம். மற்ற சிற்றரசர்களின் முடிகள் தங்கள் காலில் படும்படி (காலில் விழுந்து வணங்கும்போது) ஆட்சி புரிந்தனர். இடி போன்ற முரசங்கள் ஒலிக்கும்படி சபை வீற்றிருந்தனர். ஆனால் அவர்களே பின்னொரு நாளில் இவை அழியும்படி, போரில் தோற்று பொடியாக, துகளாக ஆனார்கள். ஆகவே மணம் பொருந்திய துளசி மாலையை அணிந்த கண்ணன் திருவடிகளை நினை மனமே; இப்போதே நினை மனமே.

 

ஆக நம்மாழ்வாரும் பட்டினத்தாரும் பேசும் பெரிய மன்னர்கள் தகுதி நமக்கு இல்லை. ஆனால் அவர்களுகே அந்தக் கதி என்றால் ஊர் பேர் தெரியாத நமக்கு எந்த கதியோ?

 

இறைவன் சந்நிதியில் மட்டுமே நாம் அனைவரும் சமம்.

 

–சுபம்–

பட்டினத்தாரும் பம்பர விளையாட்டும்! (Post No.3563)

Written by London swaminathan

 

Date: 21 January 2017

 

Time uploaded in London:- 9-17 am

 

Post No.3563

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

 

contact: swami_48@yahoo.com

 

 

பெரிய தத்துவங்களை அன்றாடம் காணும் சிறிய பொருட்களைக் கொண்டு விளக்குவதில் சமர்த்தர் பட்டினத்தார். காதற்ற ஊசி, ஒன்பது வாய் தோல் பை, எண் சாண் உடம்பு, ஆற்றில் கரைத்த புளி, ஒருவன் வாழ்நாளில் மூன்று முறை முழங்கும் சங்கு, உளியிட்ட கல் என்று நிறைய அழகான எடுத்துக்காட்டுகளையும் உவமைகளையும் நமக்களிக்கிறார்.

 

அவர் சிறு வயதில் நாம் எல்லோரும் விளையாடிய பம்பரத்தையும் பட்டத்தையும் கூடப் பாடலில் பதித்து, நம் மனதில் அரிய கருத்துகளைப் புதைக்கிறார்.

 

நமது உடல் பற்றி சந்யாசிகள் என்ன சொல்கிறார்கள் என்பது அத்தனையையும் சிலவரிகளில் சொல்லும் அழகே தனி அழகு!

 

 

 

பீற்றல் துண்டம் பேய்ச்சுரைத் தோட்டம்

அடலைப் பெரிய சுடலைத் திடருள்

ஆசைக் கயிற்றில் ஆடும் பம்பரம்

ஓயா நோய்க்கிடம் ஓடு மரக்கலம்

மாயா விகாரம் மரணப் பஞ்சரம்

சோற்றுத் துருத்தி கானப் பட்டம்

விதி வழித் தருமன் வெட்டும் கட்டை

சதுர்முகப் பாணன் தைக்கும் சட்டை

ஈமக் கனலில் இடு விருந்து

காமக் கனலில் கருகும் சருகு

 

என்று கோயில் திருப்பதிகத்தில் பாடி நமக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார். இப்படிப்பட்ட உஅடலுக்குத் தான் நாம் தினமும் அலங்காரம் செய்டு நேரத்தை வீணாக்குகிறொம். இதைவிட முக்கியமான விஷயங்களைப் புறக்கணிக்கிறோம் என்பது ப்ட்டினத்தாரின் ஆதங்கம்.

 

ஒரு அழகான வாலிபன் அல்லது யுவதியின் 20 வயதுப் படத்தையும் எண்பது வயதுப் படத்தையும் அகுகருகே வைத்துப் பார்த்தால் பட்டினத்தார் சொல்லும் செய்தி நன்கு விளங்கும்.

 

ஆசைக் கயிற்றில் ஆடும் பம்பரம், கானப் பட்டம் (காற்றில் சலசலக்கும் பட்டம்) என்பன மிகவும் அருமையான உவமைகள்.

திருவள்ளுவரும் இந்த உடல் போடும் ஆட்ட பாட்டங்களை நமக்கு நினைவு படுத்துகிறார்:-

 

நில்லாதனவற்றை நிலையின என்றுணரும்

புல்லறிவாண்மை கடை (குறள் 331)

 

உலகில் அழியக்கூடிய பொருட்களை நிலையாக இருக்கப்போகிறது என்று எண்ணினால் அந்த சிற்றறிவு ஒருவருக்கு இழிவான நிலை ஆகும்.

 

இதை எல்லாம் ஏன் சொல்லுகிறேன் என்று அதே அதிகாரத்தில் (நிலையாமை) வேறு ஒரு குறளில் சொல்லிவிட்டார்:-

 

நாச்செற்று விக்குள் மேல் வாராமுன் நல்வினை

மேற்சென்று செய்யப்படும் (335)

 

நாக்கு பேச முடியாமல் இழுத்துக்கொண்டு கடைசி விக்கல் (மரணம்) வருவதற்கு முன்னரே ஒருவன் விரைவாக தரும கைங்கரியங்களைச் செய்ய வேண்டும். நல்லறங்களைச் செய்ய வேண்டும்.

 

ஒன்றே செய்க, அதுவும் நன்றே செய்க, அதையும் இன்றே செய்க என்ற ஆன்றோரின் வாக்கை இதை விட தெளிவாக எப்படிச் சொல்ல முடியும்?

 

 

இன்னொரு இடத்தில் பம்பரத்தையும் காற்றாடியையும் குறிப்பிடுகிறார் பட்டினத்தார்!

 

கோபத்தீ மூட்டும் கொல்லன் துருத்தியை

ஐம்புலப் பறவை விளைமரப் பொதும்பை

ஆசைக் கயிற்றில் ஆடும் பம்பரத்தை

காசில் பணத்தில் சுழலும் காற்றாடியை

 

என்று அடுக்கிக் கொண்டே போய்

 

எம்பெருமான் நின் இணையடிக்கபயம்

அம்பலத் தரசே அடைக்கலம் உனக்கே

 

என்று இறைவனிடம் சரண் அடைந்து விடுகிறார். கோபத்தால் நாம் அனல் பறக்கும் மூச்சு விடுவதை ‘கொல்லன் துருத்தி’ என்றும் காசுக்காக நாம் ஆளாய்ப் பறப்பதை ‘காற்றாடி’ என்றும் சொல்லி கடவுளின் காலில்

விழுகிறார்.

 

அதுவும் கூட வள்ளுவன் சொன்னதே!

வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு

யாண்டும் இடும்பை இல (குறள் 4)

 

விருப்பு வெறுப்பற்ற கடவுளின் காலில் விழுந்தவருக்கு எந்தக் காலத்திலும் துன்பம் வராது — என்கிறான் வள்ளுவனும்.

 

நாமும் பட்டினத்தார், வள்ளுவன் வாய்ச்சொல் வழி நிற்போம்.

 

–சுபம்–

பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை (Post No.3531)

Written by London swaminathan

 

Date: 10 January 2017

 

Time uploaded in London:-6-24 am

 

Post No.3531

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

contact; swami_48@yahoo.com

 

 

பட்டினத்தார் பாடல் எளிமையான வரிகளில் பெரிய கருத்துக்களைப் போதிக்கிறது. எல்லோருக்கும் தெரிந்த பஞ்சதந்திரக் கதையைக் கூட அவர் ஆன்மீகச் செய்தியைப் பரப்பவும், உணர்த்தவும் பயன்படுத்துகிறார்.

 

கவர் பிளந்த மரத்துளையிற் கால் நுழைத்துக் கொண்டே

ஆப்பதனை அசைத்துவிட்ட குரங்கதனைப் போல

அகப்பட்டீர் கிடந்துழல அகப்பட்டீரே. — பட்டினத்தார் பாடல்

 

 

அது என்ன குரங்கு கதை?

 

ஏற்கனவே பஞ்ச தந்திரக் கதைகள் படிக்காதவர்களுக்கும், படித்து மறந்தவர்களுக்கும் சுருக்கமாகத் தருகிறேன்:-

 

 

ஒரு ஊரில் பணக்கார வணிகன் ஒருவன் கோவில் கட்டுவதற்கு ஆசைப்பட்டான். ஊருக்கு வெளியேயுள்ள தோப்பில் நிலம் ஒதுக்கினான். நிறைய கட்டிடக் கலைஞர்கள் வேலைகளைத் துவக்கினர். சிலர் கல் தச்சர்கள் ; மற்றும் பலர் மரத் தச்சர்கள். மத்தியானம் உணவு நேரம் வந்துவிட்டால் ஊருக்குள் போய்ச் சாப்பிட்டுவிட்டு தோப்புக்குத் திரும்பி விடுவர். ஒரு நாள் ஒரு பெரிய கருங்காலி மரத்தைப் பாதி அறுத்த தச்சன் அதன் பிளவில் ஒரு மரத்தால் ஆகிய ஆப்பு ஒன்றைச் சொருகி வைத்துவிட்டுச் சாப்பிடச் சென்றான்.

 

அந்தத் தோப்பில் நிறைய குரங்குகள் இருந்தன. ஒரு குரங்குக்கு “விநாச காலே விபரீத புத்தி” என்ற பழமொழிக்கு இணங்க கோணல் புத்தி வந்தது. மரத்திலிருந்து கீழே இறங்கி வந்து அந்தக் கருங்காலி மரத்தின் பிளவுக்குள் காலை வைத்துக் கொண்டு பலம்கொண்ட மட்டும் அந்த ஆப் பை இழுத்தது. ஆப்பு வெளியேவந்த அதே நேரத்தில் மரத்தின் பிளவு மூடுபட்டு குரங்கின் காலைக் கவ்விப்  பிடித்தது. குரங்கு தப்பிக்க முடியாமல் கீச்சு கீச்சு என்று கத்தியது. இதுதான் “வேண்டாத சனியனை விலை கொடுத்து வாங்கிய”தற்குச் சமம்.

இப்படி குரங்கு போய், ஆப்பு வைத்த இடத்தில் கால் சிக்கியது போல, நாம் எல்லோரும் ஆசை வயப்பட்டு சிக்கிக் கொள்கிறோம். குரங்கு சப்தமிட்டது போலவே நாமும் துயரம் வருகையில் ஓலம் இடுகிறோம். இதைப் பட்டினத்தார் மிக அழகாகப் பாடுகிறார்:-

 

“நாப்பிளக்கப் பொய்யுரைத்து நவநிதியம் தேடி

நலம் ஒன்றும் அறியாத நாரியரைக் கூடிப்

பூப்பிளக்கப் பொய்யுரைத்துப் புற்றீசல் போலப்

புலபுலெனக் கலகலனப் புதல்வர்களைப் பெறுவீர்

காப்பதற்கும் வழியறியீர் கைவிடவும் மாட்டீர்

கவர் பிளந்த மரத்துளையிற் கால் நுழைத்துக் கொண்டே

ஆப்பதனை அசைத்துவிட்ட குரங்கதனைப் போல

அகப்பட்டீர் கிடந்துழல அகப்பட்டீரே.

— பட்டினத்தார் பாடல்

(நவ நிதியம்= ஒன்பது பெரிய நிதிகள், நாரி=பெண், பூப்பிளக்க= பூமியே பிளக்கும் அளவுக்கு/ நாக்கு கிழிய)

 

விலைமாதுடன் பட்டினத்தார் மோதல்

செல்வச் செழிப்பில் மிதந்த பட்டினத்தார், ஒருமுறை  விலை மகளிர் வீட்டுக்கு இன்பம் துய்க்கப் போனார். அந்த இருமனப் பெண்டிரோ இந்த ஆள் நல்ல காம வேட்கையுடன் வந்துள்ளான். ஆளை கொஞ்சம் காக்கப்போட்டு நன்றாகப் பணம் கறக்கலாம் என்று திட்டமிட்டாள். இவர் வாசல் திண்ணையில் நெடுநேரம் காத்திருந்தபின் அந்தப் பெண் மினுக்கி குலுக்கி நடந்து வந்தாள். பட்டினத்தாருக்கு கொஞ்சம் ஞானம் பிறந்தது.

ஒரு பட்டுப் பாடினார்:-

சீ போ, கழுதை! உன்னுடன் இன்பம் துய்க்க /அனுபவிக்க வந்த ஆள் போய்விட்டான். இனி நான் உன்னைத் தொட்டால் என்னைக் காலால் எட்டி உதை. நீ என்னைத் தொட்டாலோ நான் உன்னை எட்டி மிதிப்பேன்.

 

தோடவிழும் பூங்கோதைத் தோகை உனை இப்போது

தேடினவர் போய்விட்டார் தேறியிரு — நாடி நீ

என்னை நினைந்தால் இடுப்பில் உதைப்பேன், நான்

உன்னை நினைத்தால் உதை.

–பட்டினத்தார் பாடல்

 

–Subham–

அலெக்ஸாண்டரும் பட்டினத்தாரும்

அலெக்ஸாண்டர் மாமன்னன். 2300 ஆண்டுகளுக்கு முன் மாசிடோனியாவில் இருந்து புறப்பட்டு இந்தியா வரை வந்து உலகின் பல நாடுகலை வென்ற பெரு வீரன். இந்து மதக் கருத்துக்களில் பெரும் ஈடுபாடுகொண்டவன் என்பதை நிர்வாண சாமியார்களுடன் அலெக்ஸாண்டர் என்ற கட்டுரையில் எழுதியுள்ளேன். நிலையாமை பற்றி இந்து மதம் சொல்லும் கருத்தை அவன் வியப்பான ஒரு செயல் மூலம் உலகிற்கு உணர்த்திச் சென்றான்.

 

சாகும் தருவாயில் அவனுக்கு ஞானோதயம் வந்தது. தன்னுடைய அமைச் சர்களை அழைத்தான். நான் இறந்த பின்னர் என்னுடைய உடலை அடக்கம் செய்யுங்கள். ஆனால் என்னுடைய உடல் முழுவதையும் மூடிவிட்டு இரண்டு கைகளும் திறந்த நிலையில் வெளியே தெரியும்படி விட்டுவிடுங்கள் என்றான். அவன் உலகிற்கு அளிக்க விரும்பிய செய்தி இதுதான்: வரும்போது எதையும் கொண்டுவரவில்லை. போகும்போது எவ்வளவு பெரிய மன்னனாலும் வெறும் கைகளோடுதான் போக வேண்டும்.

 

அலெக்ஸாண்டர் கூறியபடியே அவரது சடலம் புதைக்கப்பட்டது. அலெக்ஸாண்ட்ரியா நகரில் தங்க சவப்பெட்டியில் அவன் சடலம் புதைக்கப்பட்டது. அலெக்ஸாண்டர் எதை செயலில் செய்து கட்டினானோ அதை பட்டினத்தார் பாடலில் பாடிவிட்டார்.

 

பட்டினத்தார் சோழ நாட்டின் காவிரிபூம்பட்டினத்தில் பெரும் வணிகர் குலத்தில் பிறந்தார். கொடிகட்டிப் பறந்தும் அவருக்கு குழந்தைகுட்டி இல்லை. திருவிடைமருதூர் தோட்டத்தில் கண்டு எடுக்கப்பட்ட ஒரு பிள்ளையை வளர்ப்பு மகனாக வளர்த்தார். ஒரு நாள் அந்தப் பையன் ஒரு சிறிப பெட்டியை அம்மாவிடம் கொடுத்துவிட்டு மாயமாய் மறைந்தான். அதில் காதற்ற ஊசியுடன் ஒரு புதிரையும் எழுதிவிட்டுச் சென்றான். அது பட்டினத்தாரின் கண்களைத் திறந்தது. சிவபெருமானே அந்தப் பையன் உருவில் தன் மகனாக வளர்ந்தான் என்று அவர் எண்ணினார். அவர் பாடிய திரு ஏகம்ப மாலையில் வரும் பாடல் அலெக்ஸாண்டரின்  கருத்தை அப்படியே பிரதிபலிக்கிறது. இதோ 2 பாடல்கள்:

Countries conquered by Alexander the Great.

 

பிறக்கும்பொழுது கொடுவந்ததில்லை பிறந்து மண்மேல்

இறக்கும்பொழுது கொடுபோவதில்லை இடை நடுவில்

குறிக்கும் இச்செல்வம் சிவன் தந்ததென்று கொடுக்கறியா

திறக்கும் குலாமருக்கு என் சொல்லுவேன்கச்சி ஏகம்பனே

 

முடிசார்ந்த மன்னரும் மற்றுமுள்ளோரும் முடிவில் ஒரு

பிடி சாம்பராய் வெந்து மண்ணவதுங் கண்டு பின்னும் இந்தப்

படிசார்ந்த வாழ்வை நினைப்பதல்லால்  பொன்னின் அம்பலவர்

அடிசார்ந்து நாம் உய்யவேண்டும் என்றே அறிவாரில்லையே.

 

(பட்டினத்தார் பாடல் கருத்துக்களை நான் முன்னர் எழுதி வெளியிட்ட “பட்டினத்தாருடன் 60 வினாடி பேட்டி” என்ற கட்டுரையில் காண்க.)

Stamp for Alexander, Greece, year 1968

(இலக்கியத் திருடர்களுக்கு அன்பான வேண்டுகோள்: நான் 20 தலைப்புகளில் எழுதிய “60 வினாடி பேட்டிகள்” பல பிளாக்-குகளில் என் பெயரும் (லண்டன் சுவாமிநாதன்), பிளாக் பெயரும் இல்லாமல் அவர்களே எழுதியது போல வெளியாகி இருக்கிறது. தமிழ்த் தாய்க்கும் தமிழ் எழுத்தாளர்களுக்கும் மதிப்பு கொடுங்கள்)