
Written by london swaminathan
Date: 16 May 2016
Post No. 2816
Time uploaded in London :– காலை 9-05
( Thanks for the Pictures)
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)
ஒரு ஊரில், வாதக்கோன், வையக்கோன், ஏதக்கோன் – என்று மூன்று பேர் வசித்தனர். சிலர் அவர்களிடம், ஒரு நல்ல காரியம் செய்ய நன்கொடை வசூலிக்கச் சென்றனர். அவர்கள் ஒவ்வொருவரும் என்னதெரியுமா சொன்னார்கள்?
வாதக்கோன் நாளை என்றான், வையக்கோன் பின்னையென்றான்
ஏதக்கோன் யாதொன்றும் இல்லை என்றான் – ஓதக் கேள்
வாதக்கோன் நாளையினும் வையக்கோன் பின்னையினும்
ஏதக்கோன் இல்லை இனிது
பொருள்:
நாளைக்கு வா, தருகிறேன் என்றான் வாதக்கோன்; மறு நாள் போனபோதும் நாளைக்கு வா, தருகிறேன் என்றான்; இப்படி நாட்கள் உருண்டோடின.
கொஞ்சம் நேரம் கழித்து வாருங்கள், தருகிறேன் என்றான் வையக்கோன்; சிறிது நேரம் கழித்துச் சென்றால், ஐயா, வெளியே போய்விட்டார்- என்று மனைவி சொன்னாள்; மாலை நேரத்தில் சென்று பார்த்தால், ஐயா, இப்பொழுதுதான் போன் செய்தார்; அவசர ஜோலியாக வெளியூர் செல்வதாக; எப்பொழுது திரும்பிவருவார் என்று சொல்லவில்லை என்றாள் மனைவி.
ஏதக்கோன் வீட்டுக்கு, நன்கொடை கேட்கச் சென்றபோது, இதோ பாருங்கள், இந்த மாதிரிப் பணிகளுக்கெல்லாம் நான் நன்கொடை கொடுப்பதுமில்லை; அந்த அளவுக்கு என்னிடம் பணமும் இல்லை என்றான்.
இந்த மூன்று ஆட்களில் இல்லை என்று சொன்னானே ஏதக்கோன்; அவன்தான் நல்லவன் – என்கிறார் அவ்வையார்.
சம்ஸ்கிருதத்திலும் அழகான பாடல் உண்டு (நான் முன்னர் எழுதிய கட்டுரையிலுந்து)

Pari, who gave his chariot to a climbing plant, one of the Seven Tamil Philanthrophists
தானதூஷணம்
அநாதரோ விலம்பஸ்ச வைமுயம் சாப்ரியம் வச:
பஸ்சாத் பவதி ஸந்தாபோ தான தூஷண பஞ்சகம்.
ஐந்து வகைத் தானங்கள் குறையுடைய தானம்; அவையாவன:
அநாதர- மரியாதை இல்லாமல் வழங்கும் தானம்
விலம்ப: – தாமதமாகக் கொடுக்கும் தானம்
வைமுக – முக்கியம் கொடுக்காமல் இருப்பது
அப்ரியம்வச: – திட்டிக் கொண்டே கொடுப்பது
பஸ்சாத் சந்தாப- கொடுத்த பின்னர் வருந்துவது
உத்தமன், மத்திமன், அதமன்
தமிழில் நீதிவெண்பா பாடல் ஒன்றும், இதே கருத்தை அழகாக விளக்கும்:
தானறிந்தோருக்குதவி தன்னாலமையுமெனில்
தானுவந்தீதல் தலையாமே—ஆனதனால்
சொன்னாற் புரிதலிடை சொல்லியும் பன்னாள் மறுத்துப்
பின்னாட் புரிவதுவே பின்.
பொருள்:– ஒருவர் தான் அறிந்த ஒருவருக்கு உதவி செய்ய முடியுமானால், அவர் கேட்கும் முன்னால், மகிழ்ச்சியுடன் தானே வலியப் போய் உதவி செய்தால், அது தலையானது; முதன்மையானது; உத்தமம்.
அவர் கேட்ட பின்னர், உதவி செய்வது இடைப்பட்டது; மத்திமம்.
அவர் கேட்ட பின்னரும் பல நாள் தாமதித்து, பின்பு உதவுவது கடைப்பட்டது; கடைத்தரமானது; அதமம்.
அன்பர்களே! நண்பர்களே! நாம் எல்லோரும் உத்தமர்களாக வாழ்வோம்! அல்லது வாழ முற்படுவோம்.
ஆங்கிலப் பழமொழிகளிலும் இதே கருத்தைக் காணலாம்:–
He gives twice who gives quickly
To refuse and to give tardily is all the same
He that is long a giving knows not how to give
Long tarrying takes all the thanks away
முந்தைய கட்டுரைகள்:
கருமிகள் பெரும் கொடையாளிகள்! ஒரு கவிஞரின் கிண்டல் (12 மே, 2016)
நன்கொடை/ தானம் பற்றிய பழமொழிகள், பாடல்கள் (25 பிப்ரவரி 2016)
–சுபம்–
You must be logged in to post a comment.