Post No. 10,364
Date uploaded in London – – 21 NOVEMBER 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
இன்று ஞாயிற்றுக் கிழமை நவம்பர் 21 -ம் தேதி 2021
ஆம் ஆண்டு
இது ‘ஆகாச த்வனி’ யின் உலக இந்து சமய செய்தி மடல் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்,
நமஸ்காரம் செய்திகள் வாசிப்பது VAISHNAVI ANAND
எங்கள் நிகழ்ச்சிகளை ஞாயிற்றுக் கிழமை தோறும் லண்டன் நேரம் பிற்பகல் 1 மணிக்கும், இந்திய நேரம் மாலை 6-30 மணிக்கும் FACEBOOK.COM/ GNANAMAYAM மற்றும் ZOOM வழியாக நேரடியாகக் கேட்கலாம்./ காணலாம்.
Xxxx
கார்த்திகை திருவிழா-
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தீபத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மகா தீபம் நவம்பர் 19ம் தேதி வெள்ளிக்கிழமை மாலையில் கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயரமுள்ள மலையின் உச்சியில் ஏற்றப்பட்டது.
மகாதீபம் ஏற்றுவதற்கு தூய செம்பினால் செய்யப்பட்ட தீப கொப்பரை பயன்படுத்தப்பட்டது. தீப கொப்பரை, தீபத்திற்கு தேவையான நெய், திரி ஆகியவை கோவிலில் சிறப்பு வழிபாடு செய்யப்பட்டு மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது.
மகா தீபம் ஏற்றுவதற்காக 3 ஆயிரம் கிலோ நெய் பயன்படுத்தப்படுகிறது. தீப நெய் முழுவதும் பக்தர்கள் செலுத்தும் காணிக்கையாகும். இந்த மகா தீபம் தொடர்ந்து 11 நாட்கள் மலை உச்சியில் காட்சியளிக்கும். கார்த்திகை தீபத்தின் போது திருவண்ணாமலைக்கு வர முடியாதவர்கள் இந்த 11 நாட்களில் வந்து மகாதீபத்தை தரிசனம் செய்து கொள்ளலாம்.
40 கிலோ மீட்டர் வரை மகா தீப ஜோதி தரிசனத்தை பார்க்க முடியும்.
மாலையில் கோவிலில் சாமி சன்னதியில் இருந்து பஞ்சமூர்த்திகளான விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகர், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகியோர் ஆடியபடி தனித்தனியாக வெளியே வந்து சாமி சன்னதி முன்பு உள்ள தீப மண்டபத்தில் இருந்த தங்க விமானத்தில் எழுந்தருளினர்.
அதைத்தொடர்ந்து சுமார் 6 மணியளவில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர் சாமி சன்னதியில் இருந்து ஆடியபடியே கொடிமரம் அருகே வந்து காட்சி அளித்தார். பின்னர் சாமி சன்னதி முன்பு அகண்டதீபம் ஏற்றப்பட்டது. அதேநேரத்தில் மலைஉச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது. அப்போது கிரிவலம் சென்ற பக்தர்கள், நகரின் வீதிகள் மற்றும் வீடுகளின் மாடிகளில் நின்றிருந்த பக்தர்கள் ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ என்ற பக்தி முழக்கம் எழுப்பி பரவசத்துடன் மகாதீபத்தை வணங்கி தரிசனம் செய்தனர்.
XXX
ரெங்கநாதர் கோவில் படிக்கட்டுகளில் 1,008 தீபங்கள்
கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி கோவில்களில் தீபங்கள் ஏற்றி பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.
நாமக்கல் ரெங்கநாதர் கோவில் படிக்கட்டுகளில் 1,008 தீபங்கள் ஏற்றப்பட்டது.
நாமக்கல்லில் கார்த்திகை தீப திருவிழா நவம்பர் 19ம் தேதி வெள்ளிக்கிழமையன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி பெண்கள் வீடுகள், தெருக்கள் மற்றும் கோவில்களில் விளக்கு ஏற்றி வழிபாடு செய்தனர். நாமக்கல் ரெங்கநாதர் கோவில் படிக்கட்டுகளில் நேற்று 1,008 தீபம் ஏற்றி வழிபாடு செய்யப்பட்டது.
பின்னர் நாமக்கல் பாலதண்டாயுதபாணி சாமி கோவிலில் 1,008 தீபங்கள் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது.
இதேபோல் பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டன.
மேலும் நகர் முழுவதும் வீடுகள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் வீதிகளில் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு இருந்ததை காண முடிந்தது. பெரும்பாலான கோவில்களின் முன்பு சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. சுற்றிலும் நின்ற பக்தர்கள் கோஷங்கள் எழுப்பியவாறு உப்பை தூவினர்.
XXX
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் திருவிழா
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில்
பெரியகார்த்திகையான வெள்ளிக்கிழமையன்று கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. மாலை 6 மணிக்கு பொற்றாமரைகுளம், அம்மன் சன்னதி, சுவாமி சன்னதி, பிரகாரங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் லட்ச தீபம் ஏற்றப்பட்டது. மீனாட்சி, சுந்தரேசுவர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி காட்சி அளித்தனர்.
பின்னர் அவர்கள் பஞ்ச மூர்த்திகளுடன் புறப்பாடாகி கிழக்கு சித்திரை வீதியில் அம்மன் சன்னதி, சுவாமி சன்னதி முன்பு எழுந்தருளினார்கள். அங்கு இரவு 7 மணிக்கு சொக்கப்பனை தீபம் ஏற்றப்பட்டது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
Xxxxxx
திருமலையில் கனமழை- பாலாஜி கோவிலைச் சுற்றி வெள்ளம்
திருப்பதி: திருமலையில் பெய்த கன மழை காரணமாக அருவிகளில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் மலைப் பாதையில் 13 இடங்களில் மண் சரிந்து, போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மழை காரணமாக தரிசன டிக்கெட் முன்பதிவு செய்து கொண்டு தரிசனம் செய்ய முடியாத பக்தர்கள் வேறு ஒரு நாளில் வந்து தரிசனம் செய்ய தேவஸ்தானம் அனுமதி வழங்கிஉள்ளது
திருப்பதி அருகே பாடிபேட்ட பகுதியில் சொர்ணமுகி ஆற்றங்கரையில் பழங்கால சிவன் கோவில் இருந்தது. ஆற்றில் ஏற்பட்ட வெள்ள பெருக்கு காரணமாக சிவன் கோவில் முற்றிலும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.
திருப்பதி பாலாஜி வெங்கடேஸ்வரர் கோவிலில் மழையா ல் சாமி தரிசனமும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இதே போல கேரளத்தில் சபரிமலையில் கன மழை காரணமாக சனிக்கிழமைய ன்று அய்யப்ப சாமி தரிசனம் நிறுத்தி வைக்கப்பட்டது.
XXXX
ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர் கொலை வழக்கை என்.ஐ.ஏ., விசாரிக்க வேண்டும்: மத்திய அமைச்சர்
”ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர் கொலை வழக்கை என்.ஐ.ஏ., விசாரிக்க வேண்டும்,” என மத்திய அமைச்சர் முரளிதரன் வலியுறுத்தினார்.
கேரள மாநிலம் பாலக்காடு அருகே சில தினங்களுக்கு முன் எலப்புள்ளியை சேர்ந்த ஆர்.எஸ்.எஸ்.,பிரமுகர் சஞ்ஜித் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இவரது வீட்டிற்கு, வெளியுறவுத்துறை துணை அமைச்சர் முரளிதரன் வந்தார். சஞ்ஜித் மனைவி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
இதன் பின், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கேரள மாநிலத்தில் இது போன்ற தாக்குதல் சம்பவங்களுக்கு மாநில அரசு தான் பொறுப்பு ஏற்கவேண்டும். சஞ்ஜித் கொலை வழக்கில் போலீஸ் விசாரணையை தொய்வு ஏற்படுத்த சில சக்திகள் மாநில அரசின் பின்னால் செயல்படுகின்றன.
எனவே, இந்த கொலை வழக்கை தேசிய புலனாய்வு முகமை ( என்.ஐ.ஏ., ) விசாரணை நடத்த கேரள அரசு முன்வர வேண்டும்.இவ்வாறு, முரளிதரன் தெரிவித்தார்.இதன்பின், திருச்சூர் மாவட்டம் சாவக்காட்டில் கொலை செய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர் பிஜுவின் வீட்டிற்கு சென்று ஆறுதல் அளித்துள்ளனர்.
சஞ்சித் என்பவரை மனைவியின் கண் முன்பாக முஸ்லீம் கட்சியைச் சேர்ந்தவர்கள் வெட்டிக் கொன்றதாக பாரதீய ஜனதா குற்றம் சாட்டுகிறது. இதுவரை கேரள போலீசார் யாரும் கைது செய்யாதது மேலும் இந்த சந்தேகத்தை வலுப்படுத்துகிறது. ஏனெனில் அவர்கள் ஆளும் கட்சியான மார்க்சிஸ்ட் கட்சிக்கு நெருக்கமானவர்கள் என்ற குற்றச் சாட்டும் எழுந்துள்ளது.
சஞ்ஜித் கொலை செய்யப்பட்டபோது, அப்பகுதியில் ஒரு போலீஸ்காரர் இருந்துள்ளார். இது தெரிந்தும், போலீசார் குற்றவாளிகளை தப்பவிட்டுள்ளனர். கொலை சம்பவம் பதிவான சி.சி.டி.வி., கேமரா காட்சிகள் இருந்தும் போலீசார் குற்றவாளிகளை பிடிக்க திணறுகின்றனர். இவை போலீஸ் விசாரணையின் தொய்வினை காட்டுகிறது.
இதில், ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுகளின் அழுத்தம் உள்ளது. குற்றவாளிகளை பிடிப்பதில் போலீஸ் தாமதம் செய்தால், மாநில அளவில் ஆர்ப்பாட்டம் நடத்துவோம். இவ்வழக்கை என்.ஐ.ஏ., விசாரிக்க கோரி நாளை (22ம் தேதி ) மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க உள்ளோம்.இவ்வாறு, சுரேந்திரன் தெரிவித்தார்.
XXXX
நரேந்திர கிரி மரண வழக்கு குற்றப் பத்திரிகை தாக்கல்
நரேந்திர கிரி மரணம் தொடர்பான வழக்கில், அவரது சீடர் உட்பட மூன்று பேருக்கு எதிராக, சி.பி.ஐ., குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது.
உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் உள்ள பாகம்பரி மடத்தில் செப்., 20ல், மடத்தின் தலைவரும், ‘அகில பாரதிய அகார பரிஷத்’ என்ற சாதுக்களுக்கான அமைப்பின் தலைவருமான நரேந்திர கிரி, துாக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய அவரது சீடர் ஆனந்த் கிரி போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து இந்த வழக்கு, சி.பி.ஐ., வசம் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கில், அலகாபாத் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ., தாக்கல் செய்தது.அதில் ஆனந்த் கிரி, அலகாபாத் ஆஞ்சநேயர் கோவில் பூசாரி ஆத்யா திவாரி மற்றும் அவரது மகன் சந்தீப் திவாரி ஆகிய மூன்று பேரும், சதி செய்து நரேந்திர கிரியை தற்கொலைக்கு துாண்டியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
XXX
சபரிமலையில் ‘ஹலால்’ சர்க்கரையா? விளக்கம் கேட்டது கேரள ஐகோர்ட்
சபரிமலையில் பயன்படுத்துவது ‘ஹலால்’ சர்க்கரை என தகவல் பரவி வரும் நிலையில் அது தொடர்பாக விளக்கம் அளிக்கும் படி திருவிதாங்கூர் தேவசம்போர்டு மற்றும் மாநில அரசுக்கு, கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சபரிமலை அய்யப்பன் கோவில் பிரசாதமான அரவணை பாயாசம் தயாரிக்க சர்க்கரை சப்ளை செய்யும் உரிமை டெண்டர் மூலம் வழங்கப்படுகிறது. பெரும்பாலும் மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்துதான் சர்க்கரை வருகிறது. சில நாட்களாக பம்பை குடோனில் இருந்து வரும் சர்க்கரை சாக்குகளில் ‘ஹலால்’ என்ற முத்திரை உள்ளது; இது தொடர்பான வீடியாக்களும் வெளியானது.
இந்நிலையில் சபரிமலை நிர்வாக அதிகாரி சன்னிதானம் போலீசில் கொடுத்த புகாரில், அரவணை தயாரிப்பு ஒரு குறிப்பிட்ட மதத்தினருக்கு கொடுக்கப்பட்டுள்ளது என்றும், ஹலால் சர்க்கரை பயன்படுத்தப்படுகிறது என்றும் வதந்தி பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே சபரிமலை கர்ம சமிதி ஒருங்கிணைப்பாளர் குமார், கேரள உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், அப்பம், அரவணை தயாரிக்க ‘ஹலால்’ முத்திரை உள்ள சர்க்கரையை பயன்படுத்த தடை விதிக்கும் படி கோரியுள்ளார்.
இதில் ஆஜாராகி விளக்கமளித்த திருவிதாங்கூர் தேவசம்போர்டு வழக்கறிஞர், 2019ல் வாங்கிய சர்க்கரையில் சில பாக்கெட்டுகளில் ஹலால் முத்திரை இருந்தது என்றும், இது வளைகுடா நாடுகளுக்கு அனுப்ப தயாரிக்கப்பட்டடு தவறுதலாக வந்து விட்டது என்றும் தெரிவித்தார். இது தொடர்பாக உரிய விளக்கம் அளிக்கும் படி கேரள அரசுக்கும், திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கும் உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
XXXX
லண்டனிலிருந்து இரண்டு செய்திகள்
தீபாவளித் திரு நாளை ஒட்டி பிரிட்டிஷ் பிரதமர் பாரிஸ் ஜான்சனும் பிரிட்டிஷ் உட்துறை அமைச்சர் ப் ரிதி படேலும் லண்டனில் உள்ள நீஸ்டன் சுவாமி நாராயணன் கோவிலுக்கு நவம்பர் 7ம் தேதி விஜயம் செய்தனர். அங்குள்ள சுவாமிநாராயணரின் பா ல வடிவ சிலைக்கு அபிஷேகமும் செய்தனர். பின்னர் சுவாமி நாராயண் தொண்டர்கள் , கோவிட் வைரஸை எதிர்த்து செய்து வரும் பணிகளைக் காட்டும் கண்காட்சியையும் பார்வையிட்டுப் பாராட்டினார்கள்
இது ஒரு புறம் இருக்க, இந்தியாவின் ஒடிசா மாநில பூரி நகரில் உள்ள ஜகன்னாத் கோவிலைப் போல பிரிட்டனிலும் ஒரு கோவில் கட்டும் பணி துவக்கப்பட்டுள்ளது. இதற்கான துவக்க விழாவும் பூஜையும் சவுத்தாலி ல் உள்ள ராமர் கோவிலில் நடந்தது 4 மில்லியன் பவுண்ட் செலவில் 2024ல் கோவிலை எழுப்புவதற்கு ஸ்ரீ ஜெகன்நாத் சொ சைட்டி முடிவு செய்துள்ள து.
ஒரிஸ்ஸாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு வேப்ப மரத்தின் அடிமரத்திலிருந்து செதுக்கப்பட்ட , ஜெகான்நாதன் பலபத்ரன், சுபத்ரா , சுதர்சன சக்ரம் ஆகியோருக்கு பிராண பிரதிஷ்டை செய்யப்பட்ட து
XXXXX
இத்துடன் லண்டனிலிருந்து வரும் செய்திகள் நிறைவடைந்தன………………………….. செய்திகளை உங்களுக்கு வழங்கியவர் VAISHNAVI ANAND
நன்றி, வணக்கம்
tamilhindu, newsroundup, 211121