Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
T S ELIOT தாமஸ் ஸ்டெர்ன்ஸ் எலியட்
(1888 – 1965)
தாமஸ் ஸ்டெர்ன்ஸ் எலியட் (THOMAS STEARNS ELIOT) இந்த நூற்றாண்டின் முக்கியமான கவிஞரும் இலக்கிய விமர்சகரும் ஆவார். அமெரிக்காவில் மிஸ்ஸௌரி மாநிலத்திலுள்ள செயிண்ட் லூயிஸில் பெரிய குடும்பத்தில் பிறந்தார். அமெரிக்காவில் ஹார்வர்டு பல்கலைக் கழகத்திலும் பாரிஸில் சார்போன் பல்கலைகழகத்திலும் பயின்றார். 1914இல் ஆக்ஸ்போர்டிலுள்ள MERTON கல்லூரிக்குச் சென்றார்.
பின்னர் இங்கிலாந்தில் பள்ளி ஆசிரியாராகவும் வங்கி ஊழியராகவும் பணியாற்றினார்.
1915இல் அவர் திருமணம் செய்து கொண்டார். அதே ஆண்டில் முக்கியமானதொரு கவிதையை எழுதினார். அதற்கடுத்த ஆறு ஆண்டுகளில் மேலும் பல கவிதைகளையும் இலக்கிய கட்டுரைகளையும் படைத்தார். ஒரு பத்திரிகையின் உதவி ஆசிரியராக அமர்ந்தார்.
1922ஆம் ஆண்டில் முக்கியக் கவிதையான THE WASTE LANDஐ வெளியிட்டு விருதும் வென்றார். அது ஒரு முக்கிய இலக்கிய விருதை வென்றது. இந்த கவிதை நீண்ட சிக்கலான கவிதை. பலருக்கு இந்த கவிதை பிடிக்கவில்லை. இருந்தபோதும் இந்தக் கவிதை பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு T S ELIOT அவர்களின் புகழைப்பரப்பியது.
வேஸ்ட் லாண்ட் கவிதையில் இந்திய உபநிஷத வரிகளை பயன்படுத்தியுள்ளார். இந்திய தத்துவ ஞான விஷயங்களில் மிகவும் ஈடுபட்டவர் எலியட்.
THE CRITERION என்னும் பத்திரிகையையும் துவக்கினார்.
1932ஆம் ஆண்டில் அமெரிக்கா சென்றார். 18 ஆண்டுகளுக்குப் பின்னர் அமெரிக்காவில் மீண்டும் காலடி எடுத்து வைத்தபோது அவர் ஒரு பிரிட்டிஷ் பிரஜை.
HARVARD பல்கலைகழகத்தில் கவிதைத் துறையில் பேராசிரியராகச் சேர்ந்தார்.
1939ஆம் ஆண்டில் குழந்தைகளுக்கான கவிதை நூல் “OLD POSSUM’S BOOK OF PRACTICAL CATS” என்ற நூலை வெளியிட்டார்.
பல நாடகங்களை எழுதத்துவங்கிய இவர் THE FAMILY REUNION, MURDERIN THE CATHEDRAL ஆகிய நாடகங்களை எழுதினார்.
1948ஆம் ஆண்டில் இலக்கியத்திற்கான நோபெல் பரிசை வென்றார். அதே ஆண்டில் ஆர்டர் ஆஃப் மெரிட் (ORDER OF MERIT) விருதும் வென்றார்.
19 Feb 2014 — But 3000 years before Kanchi Shankaracharya and T S Eliot, the Vedic seers of the Brihad Aranyaka (Big Forest) Upanishad wrote this episode. It …
–SUBHAM–
tags- அமெரிக்க கவிஞர், டி .எஸ். எலியட், Wasteland, T S Eliot
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
அதிசயக் கனவுகள் -2 (First part of the speech was posted last Tuesday)
லண்டனிலிருந்து திங்கள் தோறும் இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியில் 31-5-2021 அன்று ஒளிபரப்பான உரை
அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே, சந்தானம் நாகராஜன் வணக்கம். கனவு பற்றிய அருட் பாசுரங்கள் ஏராளம்.
ஆண்டாள் தமிழை ஆண்டாள்! ஆண்டாள் கண்ட கனவோ தெய்வீகக் கனவு.
வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து,
நாரண நம்பி நடக்கின்றான் என்று எதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புரமெங்கும்
தோரணம் நாட்டக் கனாக் கண்டேன் தோழீ! நான்!
என்று ஆரம்பித்து மொத்தம் பத்துப் பாடல்களில் தன் கனவை அழகுத் தமிழில் பாடுகிறார் ஆண்டாள். நாச்சியார் திருமொழியின் வானளாவிய புகழை வர்ணிக்கவும் முடியுமோ! இந்தப் பத்து கனாப் பாடல்களிலும் வல்லவர் நன் மக்களைப் பெற்று மகிழ்வரே என்று பலனையும் அவரே சொல்கிறார். இப்படி இலக்கியச் செல்வம் ஒரு புறம் இருக்க அவற்றுடன் பிரபல விஞ்ஞானி ஜங் பற்றிச் சிறிது பார்த்தோம்.
கனவின் மீது தீவிரமான ஆர்வம் அவருக்கு ஏற்பட்டதால் ஜங் கனவுகளைப் பற்றித் அறிவியல் பூர்வமாக ஆராய ஆரம்பித்தார். ஏராளமான சுவாரசியமான கேஸ்களை அன்றாடம் அவர் சந்திக்க வேண்டி இருந்தது. ஒரு சுவையான கேஸ் இது:
ஒரு பெண்மணி அவரிடம் சிகிச்சைக்காக வந்தார். அபாரமான புத்திசாலிப் பெண் அவர்.தனது கனவுகளை ஜங்கிடம் விவரிக்க ஆரம்பித்தார். அவற்றை எல்லாம் பொறுமையாகக் கேட்டார் ஜங்.
ஆனால் அவரிடம் பேசுவதிலிருந்து உருப்படியாக ஒன்றையும் அவரால் தெரிந்து கொள்ள முடியவில்லை. அவர் கனவுகளுக்கு அவரால் விளக்கமும் கண்டு பிடிக்க முடியவில்லை. ‘சம்திங் ராங். ஒரு வெறுமை இருக்கிறது’ என்பதை அவர் புரிந்து கொண்டார். ஜங் இப்படிப் புரிந்து கொண்டதை அந்தப் புத்திசாலிப் பெண்மணியும் புரிந்து கொண்டார்.
இதைப் பற்றிப் பேசி விட வேண்டியது தான் என்று ஜங் தீர்மானித்தார். பேச வேண்டிய தினத்திற்கு முந்தைய நாள் அவர் ஒரு கனவு கண்டார். அந்தக் கனவு ……
பிற்பகல் நேரம். நல்ல சூரிய ஒளியில் ஜங் ஒரு பள்ளத்தாக்கில் நடந்து கொண்டிருக்கிறார். அருகே ஒரு செங்குத்தான மலை. அந்த மலையின் மீது ஒரு கோட்டை. அந்தக் கோட்டையின் மேலிருந்த உயரமான கோபுரம் ஒன்றில் ஒரு பெண்மணி தடுப்புச் சுவரின் அருகில் அமர்ந்து கொண்டிருக்கிறார். அவரைப் பார்ப்பதற்காக ஜங் கழுத்தைப் பின்னால் மிக நீட்டிப் பார்க்க வேண்டி இருக்கிறது. ஜங் கழுத்தை நீட்டிய போது……
க்ரிக் என்ற சத்தம் கழுத்தில் கேட்க ஜங் உறக்கம் கலைந்து எழுந்தார். தன் கனவில் பார்த்த பெண்மணி, மறு நாள் பேச நிச்சயித்திருந்த அதே பெண்மணி தான். ஜங்கிற்கு இப்போது விஷயம் புரிந்து விட்டது. அவரை அவ்வளவு தூரம் கழுத்தை நீட்டிப் பார்க்க வேண்டி இருக்கிறதென்றால்…..
ஜங் மறுநாள் தன் கனவை அந்தப் பெண்மணியிடம் அப்படியே சொன்னார். அபாரமான புத்திசாலியான அந்தப் பெண்மணியும் தான் உள்ளபடியே விஷயங்களைச் சொல்லாமல் மறைப்பதை ஜங் கண்டு பிடித்து விட்டார் என்பதைப் புரிந்து கொண்டார். அந்தக் கணத்திலிருந்து அனைத்தையும் ஒழுங்காகச் சொல்ல ஆரம்பித்தார். சிகிச்சை நல்ல முறையில் தொடங்கி முன்னேறியது.
நனவு நிலைக்கும் கனவுகளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஒரு நோயாளி ஒரு கனவைச் சொல்கிறார் என்றால் அது எப்படி தன்னைப் பாதிக்கிறது என்று பார்ப்பார் ஜங். பாதிப்பே இல்லை என்றால் ஏதோ ஒரு தவறு இருக்கிறது என்று அர்த்தம். ‘காயப்பட்ட சிகிச்சையாளர் தான் -Wonded healer – இதுவே அவர் coin செய்த சொற்றொடர் தான் – சரியான சிகிச்சை தர முடியும்’ என்ற பொருள் பொதிந்த வாக்கியத்தை உளவியல் சிகிச்சையாளரான ஜங் அடிக்கடி சொல்வார்!
உளவியல் டாக்டராக இருந்தாலும் ஜங்கிற்கு ஏராளமான அமானுஷ்யமான அனுபவங்களும் எதிர்காலத்தைச் சுட்டிக்காட்டும் அபூர்வமான கனவுகளும் அடிக்கடி வந்தன.
1913ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஒரு நாள் ஜங் தனியாக பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று அவருக்கு ஒரு காட்சி தோன்றியது. வட கடலுக்கும் ஆல்ப்ஸ் மலைக்கும் இடையில் உள்ள பகுதியில் பிரம்மாண்டமான வெள்ளம் வடக்குப் பகுதியில் உள்ள தாழ்வான நிலப்பகுதியில் பிரவாகமாகப் பாய்வது போன்ற காட்சியை அவர் கண்டார். அது ஸ்விட்சர்லாந்தை நோக்கி நகர்ந்து வரும் போது தனது நாட்டைக் காப்பாற்றுவதற்காக அங்கிருந்த மலை உயரமாக வளர்ந்து கொண்டே போவதையும் அவர் பார்த்தார். ஒரு பேரபாயம் நிச்சயமாக வரப் போகிறது என்பதை ஜங் உணர்ந்தார்.
மஞ்சள் அலைகளில் அடித்துச் செல்லப்பட்ட சடலங்களின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் இருந்தது. பிறகு வட கடல் முழுவதும் இரத்தமாக ஆனது. இந்தக் காட்சி ஒரு மணி நேரம் வரை நீடித்தது. ஜங் குழம்பிப் போய் மயக்கமடைந்தார்.
இரண்டு வாரங்கள் கழித்து அதே காட்சி திரும்பவும் தோன்றியது. இப்போது காட்சி மிகவும் தெளிவாக இருந்தது, அவருக்குள் ஒரு குரல் தெளிவாகப் பேசியது:” இதோ பார் இது நிச்சயமான உண்மை, இப்படித் தான் நடக்கப் போகிறது. நீ சந்தேகப்படாதே!
அந்த ஆண்டு குளிர் காலத்தில் ஒருவர், ‘சமீப காலத்தில் உலகின் அரசியல் நிலவரம் எப்படி இருக்கும்’ என்று ஜங்கிடம் கேட்டார்,”தனக்கு அது பற்றி ஒன்றும் தோன்றவில்லை என்றும் ஆனால் ரத்த ஆறு ஓடுவதைப் பார்ப்பதாகவும்” ஜங் பதில் கூறினார்,
தான் கண்ட காட்சி ஒரு புரட்சியைக் குறிக்கிறதோ என்று சந்தேகப்பட்ட ஜங் அப்படி எல்லாம் ஒன்றும் நடக்காது என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டார்.
இதே போல 1914ஆம் ஆண்டு கோடை காலத்திலும், வசந்த காலத்திலும் ஆர்க்டிக்கில் குளிர் அலை அடித்து நிலமெல்லாம் பனிப்பாறைகளாக ஆவதாக அவர் மூன்று முறை கனவு கண்டார்.
இப்படி எல்லாம் கனவுகள் வருகிறதே, ஒரு வேளை தனக்கு சைக்கோஸிஸ் வியாதி வந்து விட்டதோ என்று கூடஅவர் எண்ணலானார். ஆனால் நடந்தது என்ன? பல்லாயிரக்கணக்கான உயிர்களை பலி கொண்ட முதலாம் உலகப் போர் அந்த ஆண்டே ஆகஸ்ட் முதல் தேதி அன்று தொடங்கியது. இப்படித் தமது கனவுகள் எல்லாம் பலிப்பதைக் கண்ட அவர் தீவிர ஆராய்ச்சியை மேற்கொண்டு அவற்றின் மூலம் பல்வேறு உண்மைகளைக் கண்டார். கனவுகளுக்கும் நனவு நிலைக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்பதைக் கண்ட அவர், நோயாளிகளைக் குணப்படுத்த அவர்களின் கனவுகளைக் கேட்டு அதற்கு உரிய உண்மைப் பொருளை அவர்களிடம் விண்டுரைத்து அவர்களைக் குணப்படுத்தினார்.
கள்ளம் கபடமற்ற எளியவர்களை அவரால் சுலபமாகக் குணப்படுத்த முடிந்தது, அவரே ஒரு முறை கூறினார் இப்படி:” எனது நோயாளிகளிலேயே நன்றி கெட்டவர்களும் குணப்படுத்துவதில் மிகுந்த கஷ்டங்களைத் தந்தவர்களும் (வழக்கமாகப் பொய் சொல்பவர்களைத் தவிர அவர்களுக்கு அடுத்ததாக உள்ள) புத்திசாலிகள் தாம்! அவர்களின் ஒரு கை என்ன செய்கிறது என்று அடுத்த கைக்குக் கூடத் தெரியாது!”
அவர்களிடம் ஒரு “கம்பார்ட்மெண்ட் சைக்காலஜி” இருப்பதை அவர் அனுபவரீதியாக உணர்ந்தார். எதையும் அறிவு ரீதியாகச் சமாளிக்க முடியும் என்று நம்பும் அவர்கள் உணர்ச்சி கைமீறிப் போகும் சமயத்தில் மிகவும் கஷ்டப்படுகின்றனர் என அவர் கண்டார். எளிதில் மனதில் எந்த எண்ணம் ஓடுகிறது என்பதைக் கண்டுபிடிக்க அரிய முறை ஒன்றை ஜங் வகுத்தார். நூறு வார்த்தைகளை அவர் சொன்னவுடன் எதிரில் இருப்பவர் உடனடியாக அந்த வார்த்தைகளுடன் தொடர்பு கொண்ட தனக்குத் தோன்றும் வார்த்தைகளைச் சொல்ல வேண்டும். பதில் சொல்ல எடுத்துக் கொண்ட நேரம், சொன்ன வார்த்தை இவற்றின் மூலமாக எதிரில் இருப்பவரின் உண்மையான எண்ணம் என்ன என்பதை ஜங்கால் கண்டுபிடிக்க முடிந்தது. இன்று பரவலாக நடைமுறைக்கு வந்து விட்ட இந்த ‘வோர்ட் அசோசியேஷன் டெஸ்டை’ முதலில் வகுத்தவர் ஜங் தான்! ஆக, கனவுக்கும் நனவுக்கும் நிச்சயம் ஒரு தொடர்பு இருப்பதை உறுதி செய்தார் ஜங்! கனவு, ஆவி ஆராய்ச்சி ஆகியவற்றில் ஈடுபட்ட ஜங் அவற்றிற்கு ஒரு புதிய பரிமாணத்தை அறிவியல் ரீதியாக அளித்தார். அவரை உலகெங்கும் பல மாநாடுகளிலும் நிகழ்ச்சிகளிலும் பேச அழைத்தனர். விஞ்ஞானி ஜங்கினால் கனவு என்பது அறிவியல் உலகில் ஒரு புது அந்தஸ்தைப் பெற்றது என்பது மட்டும் உண்மை!!
Precognitive Dreaming என்ற வரும்பொருள் உரைக்கும் கனவுகளில் பிரம்மாண்டமான விபத்துக்கள் முன்பேயே கனவில் கண்டு அவை நிகழ்வதற்கு முன்பேயே கூறி இருக்கும் நிகழ்ச்சிகள் ஏராளம் உண்டு. டைட்டானிக் கப்பல் மூழ்கப் போகிறது என்பதை பிரபல நாவலாசிரியரான க்ரஹாம் க்ரீன் (Graham Green) தனது கனவில் கண்டார். அப்போது அவருக்கு வயது ஐந்து தான். இவை போன்ற நிகழ்ச்சிகளால் ஆச்சரியம் அடைந்த உளவியலாளர் ஜே.ஸி.பார்க்கரும் (J.C.Barkar) பத்திரிகையாளர் பீட்டர் பேர்லியும் (Peter Fairley) ஒரு அறிக்கையை வெளியிட்டனர். இப்படி முன்னாலேயே கனவு காண்போர் தங்கள் கனவு விவரங்களைத் தெரிவிக்குமாறு அவர்கள் விடுத்த வேண்டுகோளுக்கு 76 பதில்கள் வந்தன. அதில் 22% நுணுக்கமான விவரங்களோடு கனவுக் காட்சிகள் இருந்தன. இதனால் இன்னும் உற்சாகம் அடைந்த அந்த இருவரும் Premonitions Bureau என்ற ஒரு நிறுவனத்தையே ஆரம்பித்தனர். இதன் முக்கிய நோக்கம் வருங்கால விபத்துக்கள் பற்றிய கனவுக் காட்சிகள் தங்களுக்குக் கிடைத்தால் விபத்துக்களைத் தடுத்து விடலாம் இல்லையா? ஆனால் இந்த ஆய்வு தொடரவில்லை. சில ஆண்டுகளில் இது நின்று போனது. இதே போன்று அறிவியல் அடிப்படையில் இன்னும் பெரிய ஆய்வு ஒன்றை 1947இல் பிரிட்டிஷ் உளவியலாளர் ஆலிஸ் பக் (Alice Buck) என்ற பெண்மணி தொடங்கினார். அவரும் அவரது இரு துணை ஆய்வாளர்களும் விவரமான கனவு டயரிகளைத் தொகுத்து தங்கள் பதிவுகளை ‘பாதி உண்மையானவை’ – Partial Predictions- என்பவற்றோடு பொருத்திப் பார்த்தனர். அவர்களது பிரமிக்க வைக்கும் முடிவுகள் 1954-56 இல் வெளிவந்தது.
இப்படிப்பட்ட கனவுகள் ஏன், எப்போது, யாருக்கு ஏற்படுகிறது என்பதை அறிவியல் கண்டுபிடிக்க முடியவில்லை. அருளாளர்களுக்கோ காட்சிகள் தரிசனங்களாக வருகின்றன. ஸ்வாமி விவேகானந்தர் அமெரிக்கா செல்லலாமா, கடலைக் கடப்பது முறையா என்று முடிவெடுக்க முடியாமல் தத்தளித்த நிலையில் அவரது கனவிலே பகவான் ராமகிருஷ்ணர் வந்து கடல் மீது தோன்றி, வா, வா என்று அழைத்தார். அதனால் உள்ளம் பூரித்த ஸ்வாமிஜி குருநாதரின் ஆணை கிடைத்து விட்டது என்று அமெரிக்கா சென்றார். ஹிந்து மதத்தை ஏற்றம் பெறச் செய்தார்; உலகப் புகழ் பெற்றார்.
பிரபல நூலாசிரியரான பால் பிரண்டன் (Paul Brunton) காஞ்சி பரமாசார்யரை செங்கல்பட்டில் தரிசனம் செய்து விட்டு சென்னை திரும்பினார். அன்று இரவு அவர் கனவில் ஒரு தரிசனம் கிடைத்தது. பரமாசாரியர் அவர் கனவில் தோன்றினார். ‘எளிமையாக இரு நீ தேடுவது கிடைக்கும்’ என்று அவர் அருளாசி கூறினார். இதனால் மிக்க மகிழ்ச்சியுற்ற பால் பிரண்டன் அவரது அறிவுரையின் படி திருவண்ணாமலை சென்று பகவான் ரமணரை தரிசித்தார். அதனால் ரமணரை மேலை நாடுகளுக்கு அறிமுகப்படுத்தினார். அதன் மூலமாக உலகெங்கிலுமிருந்து ஆன்மீகத் தேடலில் இருந்தோர் ஏராளமாக திருவண்ணாமலை வரத் தொடங்கினர்.
அரவிந்தரோ பின்னால் தான் சந்திக்கப்போகும் மனிதர்களை முன்பாகவே தனது காட்சிகளில் கண்டார். இதை அவர் ஒரு ‘உள்ளுணர்வு சக்தி’ – It is an intuitive Power – என்கிறார் அவர். ஒரு காட்சியில் அவர் கவர்னராக ஆக வேண்டும் என்று விரும்பிய ஒருவரைக் கண்டார்; அவரை நேரில் காண முயன்றார். ஆனால் அவர் சென்று பார்த்த அலுவலகத்தில் இருந்தவரோ வேறு ஒருவர். அவர் விரும்பியவர் அங்கு கவர்னராக இல்லை. சிறிது காலம் கழித்து அவரது மைத்துனர் போஸ் என்பவர் அரசு அதிகாரி ஒருவருடன் சண்டை போட, அதன் காரணமாக அவரை அரசு அலுவலகம் வரச் சொல்லி சம்மன் ஒன்று வந்தது. ஆனால் கடிதம் போஸ் என்பதற்கு பதிலாக கோஷ் என்று இருக்கவே அரவிந்த கோஷ் தன்னை அழைப்பதாக எண்ணி அங்கு சென்றார். அங்கே தான் யாரைக் கனவில் முன்னர் கண்டாரோ அவரே கவர்னராக வீற்றிருந்தார். இதே போல பின்னால் தன்னிடம் வரப் போகின்ற பிரபல எழுத்தாளர் வ.ரா.வை அவர் முன்னாலேயே தனது காட்சியில் கண்டார். இந்த இரு விவரங்களையும் அவரே பதிவு செய்துள்ளார்.
இந்த தரிசனக் காட்சிகள் எனப்படும் கனவுக் காட்சிகள் ஒரு புறம் இருக்க கனவு என்பதற்கு ஒரு புதிய பரிமாணத்தைத் தந்து அனைவரையும் ஆன்மீகத்தில் உயரத்தில் ஏற்றுகிறார் பகவான் ரமண மஹரிஷி. பக்தர் ஒருவர் அவரிடம் கனவு நிலைக்கும் நனவு நிலைக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்று கேட்கிறார். அதற்கு பதில் தரும் மஹரிஷி ரமணர், கனவில் ஒருவர் அநேக வெவ்வேறு உடல்களை எடுக்கிறார், புலன் தொடர்பு வந்தவுடன் கனவிலிருந்து விடுபட்டு தனது உடலுக்குத் திரும்புகிறார் என்றார்.
ஜாக்ரத, ஸ்வப்ன, சுஷுப்தி ஆகிய மூன்று நிலைகளைப் பற்றி ஹிந்து சாஸ்திரங்கள் மிக விரிவாக துல்லியமாக, உண்மைகளை எடுத்துரைக்கின்றன. இதை மிகத் தெளிவுற விளக்கி பிரம்மத்தை விளக்கியுள்ளார் ரமண மஹரிஷி. விரிவாக கவனத்துடன் படிக்க வேண்டிய உரைகள் அவருடையவை. கனவு என்பது யாரால் சொல்லப்படுகிறது? விழித்திருக்கும் ஒருவனால் விழிப்பு நிலையில் சொல்லப்படுகிறது அது. ஆனால் கனவு நிலையும் நனவு நிலையும் உண்மைப் பரம்பொருளின் முன்னர் உண்மையற்றவை. Unreal! அத்வைத நோக்கில் உலகம் மாயை!! Unreal என்று உலகை எப்படிச் சொல்லலாம்? மலடி மகன், வானத்துப் பூ என்று சொல்வது போல அது உண்மையற்ற வார்த்தையா? இல்லை. எப்படி ஒருவன் கனவில் தனது தேவைகளை கனவிலேயே பூர்த்தி செய்து கொள்கிறானோ அதே போலத் தான் நனவான நிஜ வாழ்க்கையிலும் நடக்கிறது.
ஒரு எளிய உதாரணத்தைச் சொல்லலாம். இரவிலே கயிறை ஒருவன் பாம்பு என்று நினைத்து பயப்படுகிறான். ஆனால் அது உண்மையில் கயிறே என்று ஒருவன் எடுத்துச் சொல்லும் போது உண்மை தெளிவாகிறது. உலகம் நிலை இல்லாதது என்பது இது போலத் தான். ஆனால் சாஸ்திரங்கள் என்ன கூறினாலும் உலகம் இருக்கத்தானே செய்கிறது; நடக்கிறோம், பேசுகிறோம், உண்கிறோமே! இதற்கு பகவான் ஒரு உதாரணத்தைத் தந்து விளக்குகிறார்: ஒரு கண்ணாடியில் ஒரு காட்சியை நாம் காண்கிறோம். அது பிரதிபிம்பம் என்று தெரிந்தாலும் அதை நம்புகிறோம், அது இருக்கவே செய்கிறது. அதே போலத்தான் பிரதிபிம்பமாகத் தெரியும் உலகமும். கனவில் ஒருவன் எப்படி பொருள்களைப் பார்க்கிறானோ, பேசுகிறானோ, உண்கிறானோ திருப்தி அடைகிறானோ அது போலத்தான் இதுவும்! ஆக உலகம், வாழ்க்கை, நனவு அதாவது -ஜாக்ரத கனவு அதாவது- ஸ்வப்ன, மற்றும் சுஷும்னா ஆகிய நிலையை அறிய நான் யார் என்று ஆன்ம விசாரம் செய் என்று அருளுரை பகன்றார் அவர். எளிய வழியான இது பிரம்மத்தை அறிய அடைய சுலபமான வழி என்பது அவரது அருளுரை!
சாமான்ய மனிதனுக்கு கனவு பற்றி எவ்வளவு ஆர்வம் இருக்கிறதோ அதே அளவு ஆர்வம் விஞ்ஞானிகளுக்கும் இருக்கிறது. இன்னும் வருங்காலத்தை நிகழ்காலத்தில் எப்படி காண முடிகிறது என்பது காலத்தைப் பற்றிய ஒரு ஆய்வாகும். அதன் உள்ளே நுழைந்தால் பிரமிக்க வைக்கும் அரிய உண்மைகளைக் காணலாம். அதை சமயம் கிடைக்கும் போது இன்னொறு முறை பார்ப்போம்.
ஆக, கனவு என்பது சாதாரண ஒரு விஷயம் என்று அதை ஆராயப் புகுந்தால் அது பிரம்ம ஞானம் வரை அடையும் வழியைச் சுட்டிக் காட்டுகிறது. நல்ல கனவு காண்போம்; அந்தக் கனவு மெய்ப்பட வாழ்வோம். நன்றி வணக்கம்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
MARCEL PROUST
(1871 – 1922)
மார்செல் ப்ரூஸ்ட் புகழ்பெற்ற பிரெஞ்ச் எழுத்தாளர். அவருடைய REMEMBRANCE OF THINGS PAST (Lost in Time), புகழ்பெற்ற நாவலாகும். இதுதான் உலகிலேயே நீளமான நாவல். ஏழு வால்யூம்கள்; 4215 பக்கங்கள்!!
ப்ரூஸ்ட் சிறுவயதில் மிகவும் பலவீனமாக இருந்தார். இவர் பிழைப்பாரா என்பது இவரது பெற்றோர்களுக்கு சந்தேகமாகப் போய்விட்டது. பெரியவனாக வளர்ந்த பின்னரும் இதே கதைதான். ஆஸ்த்மா நோய் அவரைத் தொற்றிக் கொண்டுவிட்டது. சிறு வயதிலேயே இவருக்கு நாவல் எழுதவேண்டும் என்பது ஆசை. அவர் வாழ்நாளில் சேர்த்த திறமையெல்லாம் ஒரே புத்தகத்தில் காட்டிவிட்டார்.
பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்த ப்ரூஸ்ட் செல்வச் செழிப்புக் காரணமாக பாரிஸ் மாநகரில் செல்வந்தர் வட்டாரத்தில் மிகவும் பெயர்பெற்று விளங்கினார். அனைத்து நடன நிகழ்ச்சிகளிலும் கேளிக்கைகளிலும் இவர் பங்கு கொண்டார். சென்றவிடமெல்லாம் பெரிய நாவல் எழுதும் தனது உள்ளக்கிடக்கையை வெளியிட்டார். இப்படி நேரத்தை வீணடிப்பவர் எந்தக் காலத்திலும் நாவல் எழுதப்போவதில்லை என்று கூறி நண்பர்கள் பரிகசித்தனர். இருந்தபோதிலும் நாவலுக்கான கருப்பொருளை அவர் தொடர்ந்து தேடிவந்தார்,
வயதாக ஆக அவருக்கு ஆஸ்த்மா நோய் அதிமாகித் தொல்லைக் கொடுத்தது. இதனால் வெளியே செல்வதை அறவே நிறுத்திவிட்டு ஒரு அறைக்குள் முடங்கியவாறு எழுதத்தொடங்கினார். இரவு முழுதும் வேலை பகல் முழுதும் தூக்கம் என்ற வழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார். இரவுநேர அமைதியில் அவர் முழுக்கவனம் செலுத்தி எழுதமுடிந்தது. அறைக்குள் ஒரு சிறு சப்தம்கூட நுழைய முடியாதபடி ‘கார்க்’குகளை (CORK) வைத்து ஓட்டைகளை அடைத்துவிட்டே எழுதத் தொடங்குவார்.
ப்ரூஸ்ட்ஸுக்கு நாற்பத்தி இரண்டு வயதானபோது நாவலின் முதல்பகுதி வெளியிடப்பட்டது. அதற்கு ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் இரண்டாவது பகுதி வெளியானது.
அடுத்த பதினான்கு ஆண்டுகளுக்கு அவர் தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்தார். அவர் இறக்கும் தருவாயில் கடைசி தொகுதியை திருத்தி எழுதும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
லண்டனிலிருந்து ஞாயிறுதோறும் இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் தமிழ்முழக்கம் நிகழ்ச்சியில் 30-5-2021 அன்று ஒளிபரப்பான உரை!
பூலோக குமாரி, ஹே, அம்ருத நாரி!
பாலே – ரஸ ஜாலே, பகவதி ப்ரஸீத காலே
நீல ரத்நமய நேத்ர விசாலே, நித்ய யுவதி பத நீரஜ மாலே
லீலா ஜ்வாலா நிர்மித வாணி நிரந்தரே நிகில லோ கேஸாநி
நிருபம ஸுந்தரி நித்ய கல்யாணி, நிஜம் மா குரு ஹே மன்மத ராணி!
மஹாகவி பாரதியார் வாழி! ஆலயம் அறிவோம்! வழங்குவது
பிரஹன்நாயகி சத்யநாராயணன்.
ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம் பெறுவது நீலத்திரைகடல் ஓரத்திலே நின்று நித்தம் தவம் செய்யும் குமரி எல்லை என்று மஹாகவியால் போற்றப்படும் குமரி எல்லையில் கோவில் கொண்டு அருள் பாலிக்கும் கன்யாகுமரி திருத்தலம் ஆகும். பாரதத்தின் தென் கோடியில் உள்ள இந்தத் தலம் நாகர்கோவிலிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்து மா கடல் தெற்கிலும் வங்காள விரிகுடா கிழக்கிலும் அரபிக்கடல் மேற்கிலும் இருக்க இந்த முப்பெரும் கடலின் சங்கம இடத்தில் இந்தத் தலம் அமைந்திருக்கிறது. இது 51 சக்தி பீடங்களில் ஒன்றாகும். தேவியின் முதுகுப் பகுதி விழுந்த இடம் இது. இந்தத் தலத்தைப் பற்றிய புராண வரலாறு ஒன்று உண்டு.
முன்னொரு காலத்தில் பாணாசுரன் என்னும் அசுரன் பிரம்மாவை நோக்கிக் கடும் தவம் புரிய பிரம்மா அவன் முன் தோன்றி அவனுக்கு வரம் அளிக்கத் திருவுள்ளம் கொண்டார். ஒரு கன்னிப் பெண்ணைத் தவிர வேறு யாராலும் தனக்கு மரணம் வரக் கூடாது என்று அந்த அசுரன் வேண்ட, அந்த வரத்தை அருளினார் பிரம்மா. மிக்க வலிமை உடைய அசுரன் கன்னிப் பெண்ணால் தனக்கு அழிவு ஏற்படவே முடியாது என்ற எண்ணத்தால் தேவர்கள் உள்ளிட்ட அனைவரையும் கொடுமைப் படுத்த ஆரம்பித்தான். தேவர்கள் திருமாலை அணுக அவர் பாணாசுரனின் வரம் பற்றி விளக்கி சிவனை அணுகுமாறு கூறினார். சிவபிரானை அணுகிய தேவர்கள் தங்களின் குறையை முறையிட்டனர். சிவபிரான் இந்த அசுரனை அழிக்கத் தகுதி வாய்ந்தவள் தேவியே என்று கூற, தேவர்கள் தேவியை நோக்கித் தவம் புரிந்து வேண்டினர். அவர்களுக்கு அருள் புரிய எண்ணிய தேவி கன்யாகுமரி தலத்தில் ஒரு பெண்ணாக அவதரித்தாள்.
கன்னியாக இருந்த தேவி சிவபிரானை மணக்க எண்ணிக் கடும் தவம் புரிந்தாள். அப்போது அருகில் சுசீந்திரத்தில் தாணுமாலயனாக இருந்த சிவபிரான் தேவியை மணக்க எண்ணினார். மணம் முடிந்தால் தங்கள் துயர் தீராதே என்று இதனால் தேவர்கள் பயந்தனர். ஆனால் தேவரிஷியான நாரதர் இதுவும் சிவபிரானின் அருள் விளையாடலே என்பதை உணர்ந்தார். சிவபிரானின் முன், அவர் ஒரு கோரிக்கையை வைத்தார். மணம் முடிக்கும் இடத்திற்கு மாப்பிள்ளையான சிவபிரான் சூரியோதயத்திற்கு ஒரு நாழிகை முன்னதாகவே வந்து விட வேண்டும் என்றும் அப்படி வரவில்லை எனில் மணம் நடக்காது என்றும் அவர் கூற அதை அப்படியே சிவ பிரான் ஏற்றார். மண நாளன்று தாணுமாலயன் கன்யா குமரி இருந்த இடத்தை நோக்கி வரும் போது நாரதர் சேவல் வடிவில் இருந்து கூவினார். சிவபிரான் விடிந்து விட்டது என்பதால் தன் இருப்பிடம் திரும்பினார்.
தன்னை மணக்க சிவபிரான் வருவார் என்று காத்திருந்த குமரியம்மன் அவர் வராததால் எல்லையற்ற கோபம் கொண்டாள். திருமணத்திற்கென வைக்கப்பட்டிருந்த பண்டங்களையும் வண்ண மலர்களையும் கடற்கரைப் பரப்பில் வீசினாள். இதுவே கன்யாகுமரி கடற்கரை வண்ணமயமாக இன்றும் காட்சி அளிப்பதற்கான காரணம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் பாணாசுரன் கன்யாகுமரியின் அழகில் மயங்கித் தன்னை மணக்குமாறு கோரினான். தேவி மறுத்தாள். ஆனால் தேவியை மணக்க எண்ணிய அசுரன் அவள் அருகில் வந்த போது தேவியானவள் வானுயரும் வடிவம் எடுத்து அசுரனைக் காலில் போட்டு வதம் செய்தாள். தேவர்கள் பூ மழை பொழிந்து தேவியின் உக்கிரத்தைத் தணித்தனர். தேவி சாந்தம் அடைந்து சிவபிரானை நோக்கிக் கடும் தவம் செய்ய ஆரம்பித்தாள்.
குமரி அம்மன் என்றும் பகவதி அம்மன் என்றும் துர்க்கை என்றும் பல்வேறு பெயர்கள் தேவிக்கு உண்டு. தன் யோக சக்தி அனைத்தையும் அம்மன் தனது மூக்குத்தியில் இறக்கி வைத்திருப்பதால் அந்த மூக்குத்தி ஜொலிக்கும் ஒன்றாக அமைந்திருக்கிறது. தூரத்தில் வரும் கப்பல்கள் மூக்குத்தி ஒளியால் வழி காட்டப்பட்டு வந்தன. சில மாலுமிகளோ மூக்குத்தி ஒளியை கலங்கரை விளக்கம் என்று எண்ணி விபத்துக்குள்ளாயினர். ஆகவே கோவிலின் முன்புற வாயில் மூடப்பட்டு, வடக்குப் புறமாக வாயில் வைக்கப்பட்டது. கிழக்கு நோக்கி கொண்டு பகவதி அம்மன் உள் மண்டப கர்பக்ருஹத்தில் எழுந்தருளியுள்ளாள். ஒரு கரத்திலே இலுப்பைப் பூ மாலையை தரித்து மற்றொரு கரத்தைத் தொடை மீது அமர்த்தி தவக்கோலத்தில் அம்மன் காட்சி அளிக்கிறாள். கோவிலின் உள்பிரகாரத்து தென் மேற்குக் கோடியில் விநாயகர் சந்நிதி உள்ளது. அங்குள்ள மணி மண்டபம் ஆறு தூண்களுடன் அமைந்திருக்க அதன் முன்னே சபா மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.
கன்யாகுமரி ஹிந்து மதத்தின் எழுச்சிக்கு வழி கோலிய அற்புதத் தலமாகும். இங்கு தான் ஸ்வாமி விவேகானந்தர் தனது பாரத யாத்திரையின் போது வந்து 1892 டிசம்பரில் அருகிலிருந்த பாறைக்கு நீந்திச் சென்று மூன்று நாட்கள் தவம் புரிந்தார். அலைகடலின் மீது தோன்றிய ராமகிருஷ்ணர் அவரை வா என்று அழைக்கவே அவர் அமெரிக்கா செல்ல இறுதி முடிவு எடுத்தார்; அங்கு சென்றார். உலகையே வென்றார். அவர் தவம் புரிந்த இந்தப் பாறையில் விவேகானந்தர் மணி மண்டபம் அமைக்கப்பட்டு அவரது திருவுருவச் சிலை நிறுவப்பட்டு 1972இல் இது திறக்கப்பட்டது. இங்கு செல்ல படகு வசதிகளும் உண்டு.
இந்தப் பாறையின் முக்கிய சிறப்பு அம்சம் இங்கு தேவியின் ஸ்ரீ பாதம் அமைந்திருப்பது தான். தேவி தவம் புரிந்த பாறை இது என்பதால் இது ஸ்ரீபாதப்பாறை என்று அழைக்கப்படுகிறது. தேவியின் பாதச் சுவடு உள்ள இடம் தரிசனம் செய்யக் கூடியபடி அழகுற பாதுகாக்கப்பட்டிருக்கிறது;
காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் கன்யாகுமரி பகவதி அம்மன் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம்.
ஓம் சக்தி ஓம் பராசக்தி ஓம் சக்தி ஓம்! ஓம் சக்தி ஓம் பராசக்தி ஓம் சக்தி ஓம்!! நன்றி, வணக்கம்!
தர்மம் என்றால் என்ன என்பதை விளக்கும் சுபாஷிதம் உள்ளிட்ட சில சுபாஷிதங்கள் இதோ:
தாரணாத் தர்மமித்யாஹு: தர்மோ தாரயதே ப்ரஜா: |
யஸ்யாத் தாரணசம்யுக்தம் ச தர்ம அதி நிச்சய: ||
தர்மம் என்ற வார்த்தை தர்மா என்ற வார்த்தையிலிருந்து வந்த ஒன்றாகும். சமுதாயத்தை ஓரிழையில் ஒருங்கிணைப்பது தர்மமே. ஆகவே எது அனைத்து மக்களையும் ஒருங்கிணைக்கிறதோ அது நிச்சயம் தர்மமே தான்!
The word “Dharma” is derived from “Dharma”. It is “dharma” which holds society together. Hence if something is able to hold people together, no doubt it is dharma. (Henceforth dharma)
உண்பது, உறங்குவது, பயம், பாலியல் உணர்வு ஆகியவை மனிதனுக்கும் மிருகங்களுக்கும் பொதுவானவை. மனிதரையும் மிருகங்களையும் வேறுபடுத்திக் காட்டுவது தர்மமே. எனவே, தர்மம் இல்லையென்றால் மனிதன் மிருகத்திற்குச் சமானமே!
Eating, sleep, fear, and sexual instinct are common to both human beings and animals. It is dharma which separates the two because, without dharma the human being is same as the animal.
*
ஸத்யஸ்ய வசனம் ச்ரேய: சத்யாதபி ஹிதம்வதேத் |
யத்பூதஹிதமத்யந்தம் ஏதத் மதம் மம ||
ஸத்யத்தையே பேசுவது சிறந்தது; அதிலும் மற்றவர்க்கு ஹிதம் தருவதையே சொல்வது இன்னும் சிறந்தது. நாரதர் கூறுகிறார்: ஸத்யமே அனைவருக்கும் பயன் அளிக்கும் என்பது என் கொள்கை!
Telling truth is recommended, but more than that, tell those things which are in interest of all. According to Narada, truth is that which is beneficial to (all) beings.
*
ந ராஜ்யம் ந ராஜாசீத் ந தண்ட்யோ ந ச தாண்டீக: |
தர்மேணைவ ப்ரஜாஸ்சர்வா ரக்ஷந்தி ஸ்ம பரஸ்பரம் ||
எந்த ராஜ்யமும் எந்த அரசனும் எந்த குற்றவாளியும் எந்த ஒரு நீதிபதியும் ஒரு குற்றவாளிக்குத் தண்டனை வழங்குதல் முடியாது. மக்கள் ஒருவரை ஒருவர் தர்மத்தினாலேயே காத்துக் கொள்கின்றனர்.
சமூக நலனில் அக்கறை கொண்டுள்ள தொண்டு நிறுவனங்களான முதியோர் இல்லம், குழந்தைகள் காப்பகம் முதலியவை அதிகரிப்பது சமுதாயம் வளர்கிறது என்பதற்கான ஒரு அறிகுறியே. ஆனால் உண்மை என்னவெனில் இப்படிப்பட்ட தொண்டு நிறுவனங்கள் அதிகரிப்பதன் காரணம் உறவினரோ அல்லது அண்டை அயலாரோ தங்கள் தர்மத்தைச் செய்யும் கடமையிலிருந்து நழுவி விட்டனர் என்பது தான்!
There is no kingdom nor any king; no criminal nor any judge to administer penalty to the criminal. People protect each other by virtue of dharma, If the number of social service organizations such as orphanages, child care centres etc. keeps growing then is it a healthy sign of progress of society. Yet, the fact remains that the need to such institutions arises in the first place because the relatives or neighbours may have failed to do their dharma!
*
வித்வத்வம் ச ந்ருப்த்வம் ச நைவ துல்யம் கதாசன |
ஸ்வதேஷோ பூஜயதே ராஜா வித்வான் சர்வத பூஜ்யதே ||
வித்வத்வமும் அரசாளும் அதிகாரமும் ஒரு நாளும் சமம் அல்ல. (புலவரும் அரசரும் சமமானவர் அல்லர்) ஏனெனில் ஒரு அரசனின் மதிப்பு அவனுடைய ராஜ்ய எல்லைக்கு உட்பட்டிருக்கிறது. ஒரு வித்வானுக்கோ சென்ற இடமெல்லாம் சிறப்பு தான்.
கற்றவர்க்குச் சென்றவிடமெல்லாம் சிறப்பு என்பதைச் சொல்லும் பல தமிழ் செய்யுள்களை இங்கு ஒப்பு நோக்கலாம்.
Kingship and erudition are never comparable; because king’s adulation is restricted to his own kingdom while the sage is respected everywhere (king gets respect from his own country whereas learned person received it fro everywhere).
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
இன்று May 30 -ஆம் தேதி — ஞாயிற்றுக் கிழமை ,2021
உலக இந்து சமய செய்தி மடல்
தொகுத்து வழங்குபவர் வைஷ்ணவி ஆனந்த்
இது ‘ஆகாச த்வனி’ யின் உலக இந்து சமய செய்தி மடல் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்,
நமஸ்காரம் செய்திகள் வாசிப்பது VAISHNAVI ANAND
எங்கள் நிகழ்ச்சிகளை ஞாயிற்றுக் கிழமை தோறும் லண்டன் நேரம் பிற்பகல் 2 மணிக்கும், இந்திய நேரம் மாலை 6-30 மணிக்கும் நேரடியாகக் கேட்கலாம்.
Xxxx
ஆயுர்வேத மருந்தைதயாரிக்க திருப்பதி தேவஸ்தானம் உதவும்
ஆயுர்வேத மருத்துவர் ஆனந்தய்யாவின் கொரோனா தடுப்பு மருந்தை தேவையான அளவில் தயாரித்து அளிக்க திருப்பதி- திருமலை தேவஸ்தானம் முன் வந்துள்ளது.
ஆந்திராவின் நெல்லுார் மாவட்டம், கிருஷ்ணபட்டணத்தைச் சேர்ந்த ஆனந்தய்யா என்ற ஆயுர்வேத மருத்துவர், கொரோனாவுக்கு ஆயுர்வேத மருந்து தயாரித்து நோயாளிகளுக்கு வழங்கி வந்தார்.
இந்த மருந்தின் மேல் மக்களுக்கு அபரிமிதமான நம்பிக்கை வந்துள்ளது. இந்நிலையில், இந்த மருந்து குறித்து அறிந்த, திருப்பதி திருமலை தேவஸ்தானம், தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள ஆயுர்வேத பல்கலைகழக அதிகாரிகள், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோரை நேரடியாக கிருஷ்ணபட்டணம் அனுப்பி உள்ளது.
அவர்கள், ஆயுர்வேத மருத்துவர் ஆனந்தய்யாவை சந்தித்து உரையாடி, மருந்து தயாரிக்கப் பயன்படும் வனமூலிகைகள், அதன் தயாரிப்பு முறைகள் உள்ளிட்டவற்றை நேரடியாக பார்வையிட்டனர்.
ஆயுஷ் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் உள்ளிட்ட துறைகளிடமிருந்து உரிய அனுமதி கிடைத்ததும், இந்த ஆயுர்வேத மருந்தை அதிக அளவில் தயாரித்து மக்களுக்கு வழங்க தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது.
நாட்டின் மிக பெரிய ஆயுர்வேத பல்கலைக்கழகம் மற்றும் மருந்து தயாரிப்பு கூடம் திருப்பதியில் உள்ளது. எனவே, இந்த மருந்தை தயாரித்து தேவஸ்தான ஆயுர்வேத மருந்தகம் வாயிலாக மக்களுக்கு வினியோகிக்க தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது
Xxxx
பாபா ராம்தேவ் சவால்! அவங்க அப்பா வந்தாலும் என்னை கைது செய்ய முடியாது!!
அவங்க அப்பா வந்தாலும் என்னை கைது செய்ய முடியாது என பாபா ராம் தேவ் பேசியிருக்கும் வீடியோ மேலும் சர்ச்சையாகியுள்ளது.
யோகா குரு பாபா ராம்தேவ் சமீபத்தில் ஆங்கில மருத்துவமான அலோபதி மருத்துவத்துக்கு எதிராக சில சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து இருந்தார். மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷவர்தன் அறிவுறுத்தலின் பேரில் அவர் தனது கருத்துகளை வாபஸ் பெற்றுக்கொண்டார்.
சமீபத்தில் பாபா ராம்தேவ் பேசிய வீடியோவில், “அலோபதி மருத்துவத்தாலும், தடுப்பூசியாலும் 10 ஆயிரம் மருத்துவர்கள், லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் கொரோனா சிகிச்சையில் அலோபதி மருத்துவ முறை முற்றிலும் முட்டாள்தனமானது என்றும், இந்த முறையை நீக்கிவிட்டு ஆயுர்வேத முறையை அமல்படுத்த வேண்டும் என்றும் பாபா ராம்தேவ் விமர்சனம் செய்தார்.
இதுதொடர்பாக பாபா ராம்தேவ் 15 நாள்களுக்குள் மன்னிப்பு கோர வேண்டும், இல்லையெனில் ரூ.1,000 கோடி நஷ்டஈடு கோரி அவதூறு வழக்கு தொடரப்படும் என்றும் இந்திய மருத்துவ சங்கம் (ஐஎம்ஏ) சார்பில் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
.
பாபா ராம்தேவின் கருத்துக்களால் சர்ச்சை உருவானதைத் தொடர்ந்து அந்த வீடியோ பதிவிலிருந்து அக்கருத்துக்கள் நீக்கப்பட்டன. இதுகுறித்து விளக்கமளித்துள்ள பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம், “நாங்கள் என்றும் அலோபதி மருத்துவத்திற்க்கு எதிரானவர்கள் அல்ல. அந்நிகழ்வில் பாபா ராம்தேவ் அவர்கள் தனக்கு வாட்ஸ் ஆப்பில் பரவலாக பகிரப்பட்ட கருத்துகளையே மேடையில் படித்துக் காட்டினார். இதற்கும் அவருக்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை. சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் கருத்துக்கள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானது என்பதை தெளிவுபடுத்திக்கொள்கிறோம்” என்கிறது அந்த நிறுவனம்.
பதஞ்சலி நிறுவனம் குற்றச்சாட்டு
இந்திய மருத்துவ சங்கத்தின் தலைவர் டாக்டர் ஜே ஏ ஜெயபால் இந்தியாவை கிறிஸ்தவ மயமாக்க சதி செய்வதாகவும் அதனால்தான் ஆயுர்வேதம் மற்றும் யோகா முறைகளைக் குறை கூ றுவதாகவும் யோகா குரு பாபா ராமதேவின் உதவியாளர் ஆசார்ய பாலகிருஷ்ணா டிவிட்டரில் குற்றம் சாட்டினார்.
இந்நிலையில் பாபா ராம்தேவின் மற்றொரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
அந்த வீடியோவில், “அவங்க அப்பனால் கூட என்னைக் கைது செய்ய முடியாது. அவர்கள் சும்மா கத்திக்கொண்டு இருக்கிறார்கள்” என்று ராம்தேவ் பேசுகிறார்.
xxxxx
கேரள தேவசம் போர்டின் வருவாய் ரூ.261 கோடியில் இருந்து ரூ.21 கோடியாக சரிவு
திருவாங்கூர் தேவசம் போர்டின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் பக்தர்கள் அனுமதிக்கப்படாததால், ஆண்டு வருவாய் ரூ.261 கோடியிலிருந்து ரூ.21 கோடியாகக் குறைந்துள்ளது.
கேரள மாநிலத்தின் தென் மாவட்டங்களில் உள்ள சபரிமலை உட்பட அனைத்து கோவில்களும் திருவாங்கூர் தேவசம்போர்டின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகின்றன. இந்தக் கோவில்களிலிருந்து கிடைக்கும் வருவாய், தேவசம்போர்டின் கட்டுப்பாட்டில் இயங்கும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர் உள்ளிட்ட பல்வேறு செலவுகளுக்கு உதவுகிறது. ஊதியம், ஓய்வூதியம் என, ஆண்டுக்கு ரூ.40 கோடி அளவுக்கு செலவு செய்யப்படுகிறது.
கோவிட் காரணமாக கடந்த 2020ம் ஆண்டிலேயே சபரிமலையில் பக்தர்களின் அனுமதிக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் கோயில் மூலம் கிடைக்கும் வருவாய் கடுமையாக பாதிக்கப்பட்டது. தற்போது ஆண்டு வருவாய் ரூ.261 கோடியிலிருந்து ரூ.21 கோடியாகக் குறைந்துள்ளது. இதனால், செலவுகளை மேற்கொள்ள மாநில அரசிடம் தேவசம்போர்ட் நிதி கோரியுள்ளது. தற்போது கேரளா மட்டுமின்றி நாடு முழுவதும் உள்ள கோவில்களின் வருவாய் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
xxxx
தமிழ்நாட்டு அமைச்சர்களின் பங்களாக்கள் வாஸ்துப்படி மாற்றி அமைப்பு!
புதிய அமைச்சர்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பங்களாக்களை, வாஸ்துப்படி மாற்றி அமைக்கும் பணி துவங்கியுள்ளது.
சென்னை, கிரீன்வேஸ் சாலையில், அமைச்சர்கள் மற்றும் நீதிபதிகளுக்காக 70 அரசு பங்களாக்கள் உள்ளன. இவற்றை பொதுப்பணி துறையினர் பராமரித்து வருகின்றனர்.தி.மு.க., அரசு பொறுப்பேற்ற நிலையில் 30 அமைச்சர்களுக்கு, பங்களாக்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன.
முதல்வர் ஸ்டாலின், தனக்கு பங்களா வேண்டாம் என்று கூறி விட்டார். மூத்த அமைச்சர்கள் துரைமுருகன், வேலு ஆகியோர் சென்னையில் வசிப்பதால், அவர்களுக்கும் அரசு பங்களாக்கள் ஒதுக்கப்படவில்லை. எதிர்க்கட்சி தலைவராக பொறுப்பேற்றுள்ள, முன்னாள் முதல்வர் இ.பி.எஸ்.., வேண்டுகோளை ஏற்று, அவர் தங்கியுள்ள பங்களா மீண்டும் ஒதுக்கப்பட்டு உள்ளது.
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் பலரும் பங்களாக்களை காலி செய்து வருகின்றனர். ஐந்து பேர் இன்னும் காலி செய்யவில்லை. இந்நிலையில், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பங்களாக்களில் வாஸ்துப்படி சில பணிகளை மேற்கொள்ள வேண்டும் என, பொதுப்பணி துறை அதிகாரிகளிடம் தி.மு.க., அமைச்சர்கள் பலர் வேண்டுகோள் வைத்துள்ளனர்.
இதையடுத்து, அவர்களது வீட்டை வாஸ்துப்படி மாற்றி அமைக்கும் பணிகள் துவங்கியுள்ளன. அமைச்சர்களின் விருப்பத்திற்கு ஏற்ப, புதிதாக படுக்கை, சோபா, நாற்காலிகள், மின் விசிறி, ‘ஏசி’ மற்றும் மின் விளக்குகள் வாங்கப்பட்டு உள்ளன.
Xxxxx
அக்னி நட்சத்திரம் நிறைவையொட்டி அருணாசலேஸ்வரர் கோவிலில் 108 கலசாபிஷேகம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது கடந்த May 4-ந் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கியது. அக்னி நட்சத்திரம் தொடங்கிய பிறகு வெயிலின் தாக்கம் கடுமையாகவே இருந்தது. பகல் மட்டுமின்றி இரவு நேரங்களிலும் அனல் காற்று வீசியது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் அக்னி நட்சத்திரம் நிறைவையொட்டி புனிதநீர் அடங்கிய 108 கலசங்கள் வைத்து கடந்த 26-ந் தேதி மாலையில் இருந்து 4 கால யாக பூஜை தொடங்கியது. தொடர்ந்து 27-ந் தேதி பகலிலும் கோவிலில் கலசங்கள் வைத்து மகா யாகம் நடந்தது.
ரமேஷ் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டு வேத மந்திரங்களை கூறினர். தற்போது கொரோனா ஊரடங்கு தொடர்ந்து அமலில் உள்ளதால் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்பட வில்லை. பின்னர் மங்கல வாத்தியங்கள் முழங்க மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து கலசங்களில் உள்ள புனித நீர் மூலம் அருணாசலேஸ்வரருக்கு அபிஷேகம் செய்தனர்.
Xxxx
திருப்பதியில் கருட வாரதி மேம்பாலத் திட்டம்
ஆந்திர நிலம் திருப்பதி திருமலையில் உள்ள வெங்கடேசப் பெருமாளை பக்தர்கள் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கில் சென்று தரிசனம் செய்து வந்தனர். தற்போது கொரோனா பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் பக்தர்கள் வரத்து பெரிதும் குறைந்துள்ளது. திருப்பதி நகரில் கருட வாரதி என்ற பெயரில் மேம்பாலம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது.
இதற்கான பணிகளை கபிலதீர்த்தம் சர்க்கிள் வரை மேற்கொண்டு வருகின்றனர். கொரோனா ஊரடங்கிலும் தொடர்ச்சியாக பணிகள் நடைபெற்று வருகின்றன. பாலத்தை விரைவாக கட்டி முடிக்கும் வகையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பாலம் கட்டுமானப் பணிகளை திருப்பதி நகராட்சி பூங்கா அருகே தேவஸ்தான தலைவர் ஒய்.வி.சுப்பா ரெட்டி நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது தேவஸ்தான தலைமை பொறியாளர் ரமேஷ் ரெட்டி உடனிருந்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய சுப்பா ரெட்டி, நான்கு வழி மேம்பாலமாக கட்டப்பட்டு வரும் கருட வாரதியை அலிபிரி டோல்கேட் வரை நீட்டிக்க வேண்டும்.
இதன்மூலம் திருமலைக்கு வாகனங்களில் செல்லும் பக்தர்களுக்கு மிகுந்த உதவியாக இருக்கும். பல்வேறு சிக்னல்களில் நின்று செல்வது தடுக்கப்பட்டு கால விரயத்தை தவிர்க்கலாம். திருமலைக்கு நடைபயணமாக செல்ல விரும்பும் பக்தர்களும் அலிபிரிக்கு விரைவாக சென்றடைய முடியும்.
இதற்கான கூடுதல் செலவு குறித்து திருமலை திருப்பதி தேவஸ்தான வாரிய உறுப்பினர்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும். அதில் உரிய முடிவெடுத்த பின்னர் செலவை ஏற்பது இறுதி முடிவு எடுக்கப்படும் என்று கூறினார்.
xxxxx
ஆச்சாள்புரம் சிவலோக தியாகராஜர் கோவிலில் திருஞானசம்பந்தர்-தோத்திரப்பூர்ணாம்பிகைக்கு திருக்கல்யாணம்
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே ஆச்சாள்புரத்தில் சிவலோக தியாகராஜர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருஞானசம்பந்தருக்கும் அந்த பகுதியில் உள்ள திருநல்லூரை சேர்ந்த நம்பியாண்டார் நம்பி மகள் தோத்திரப்பூர்ணாம்பிகைக்கும் வைகாசி மாதம் மூல நட்சத்திரத்தில் திருமணம் நடைபெற்ற வரலாறு உள்ளது.
அந்த ஐதீகத்தின்படி ஆண்டு தோறும் நடைபெறுவது வழக்கம். அதன்படி திருஞானசம்பந்தருக்கு திருக்கல்யாணம் வைகாசி மாதம் மூல நட்சத்திரத்தில் இரவு 10 மணிக்கு திருஞானசம்பந்தர்- தோத்திரப்பூர்ணாம்பிகைக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.
இதனையடுத்து மாலை மாற்றும் வைபவம் நடந்தது. பின்னர் சாமி-அம்மன் வீதி உலா நடந்தது. திருக்கல்யாண நிகழ்ச்சியில் அர்ச்சகர்கள் மட்டும் பங்கேற்றனர். பக்தர்கள் யாரும் பங்கேற்கவில்லை.
Xxxxx
கோவில்கள் மூடல்: இந்த ஆண்டும் களையிழந்த வைகாசி விசாகம்
வைகாசி மாதத்தில் வரும் விசாக நட்சத்திர நாள், முருகப் பெருமான் அவதரித்த நாளாகக் கொண்டாடப்படுகிறது. இதனை வேனில் விழா என்றும் கூறுவர்.
முருகன் கோவில்களில் ஆண்டுதோறும் வைகாசி விசாக திருவிழா விமர்சையாக நடைபெறுவது வழக்கம். கடந்த ஆண்டு கொரோனோ பரவல் காரணமாக வைகாசி விசாக திருவிழா பக்தர்கள் இன்றி எளிமையாக நடைபெற்றது.
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கோவிலில் பக்தர்கள் வழிபாடு செய்வதற்கு அரசு தடை விதித்துள்ளது. எனவே செவ்வாய்க்கிழமை) அனைத்து முருகன் கோவிலில் வைகாசி விசாக விழா எளிமையாக நடைபெறறது.
மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது இதையடுத்து முருகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார் . கொரோனா பரவல் காரணமாக இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி இல்லை. பூஜைகளில் கோவில் சிவாச்சாரியார்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் மட்டுமே கலந்து கொள்கின்றனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
ஆறுமுகப்பெருமான் அவதரித்த தினமாதலின் விசாகம் விசேஷ தினமாகக் கொண்டாடப்படுகின்றது. இத்தினத்தில் கோயில்களில் வசந்தோற்சவமும், பிரமோற்சவமும் நடைபெறும், இத்தினம் பலசமயத்தாருக்கும் ஒரு புனித நாளாகும்.வைணவத்தில் நம்மாழ்வார் அவதார நாளாகவும் இந்நாள் கொண்டாடப்படுகின்றது. இந்நாளில் திருசெந்தூரில் மிகவும் சிறப்பான வழிபாடு நடக்கும். புத்தன் அவதரித்ததும் நிருவாணமடைந்ததும் இதே திதியிற்தான் என்பர்.
Xxxx
கோவை ஈஷா அமைப்பின் கொரோனா தடுப்பு சேவை!
. கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பதற்காக ஈஷா சார்பில் முதல்கட்டமாக 500 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகள், பிபிஇ கிட்டுகள், முக கவசங்கள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் தமிழக அரசுக்கு வழங்கப்பட்டன.
அத்துடன், கொரோனாவால் உயிரிழக்கும் நபர்களை மயானத்திற்குக் கொண்டு செல்வதற்காக 2 வாகனங்களும் வழங்கப்பட்டன.
கோவை வந்திருந்த அமைச்சர்கள் மா சுப்பிரமணியன், சக்கரபாணி, ராமச்சந்திரன் ஆகியோர் கொரோனா தொற்று சிகிச்சை தொடர்பாக ஆய்வு நடத்தினர். அப்போது சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் நாகராஜன், அரசு மருத்துவமனையின் டீன் நிர்மலா ஆகியோர் உடனிருந்தனர்.
அப்போது அவர்களிடம் கொரோனா சிகிச்சைக்கு உதவும் வகையில் கோவை அரசு மருத்துவமனைக்கு 500 பிபிஇ கிட்கள், 5 ஆயிரம் என்95 மாஸ்க்கள், 500 சிபிஏபி முக கவசங்கள் வழங்கப்பட்டன.
ஈஷா சார்பில் கோவையில் உள்ள கிராமங்களில் செய்யப்படும் சேவைகள் குறித்து நிருபர்களிடம் தெரிவிக்கப்பட்டது. அதன்படி குறிப்பிட்ட கிராம மக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்குவது, நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் யோகப் பயிற்சிகளைக் கற்றுக்கொடுப்பது, முன் களப் பணியாளர்களுக்கு முக கவசம் சானிடைசர் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு பணிகளைத் தொடர்ந்து செய்து வருகின்றனர்.
அதேபோல் தமிழ்நாட்டில் ஈஷாவின் பராமரிப்பில் இயங்கும் 18 மயானங்களில் கொரோனா நோயாளிகளைத் தகனம் செய்யும் சேவையும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாகத் தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
xxxx
இத்துடன் லண்டனிலிருந்து வரும் செய்திகள் நிறைவடைந்தன………………………….. செய்திகளை உங்களுக்கு வழங்கியவர் வைஷ்ணவி ஆனந்த்………………………… நன்றி, வணக்கம்