ரிக் வேதத்தில் லஞ்ச ஊழல்!!

bribery_2

Research paper No 1955

Written by London swaminathan

Date: 26 June 2015

Uploaded in London at  காலை 8-47

“வேதோகில தர்ம மூலம்” – வேதங்களே தருமத்தின் ஆணிவேர்—மனு ஸ்மிருதி 2-6

ரிக் வேதம் உலகிலேயே பழமையான நூல். இதன் எதிரிகளும் இப்போது இதன் காலத்தை கி.மு 1700 என்று ஒப்புக்கொள்ளத் துவங்கிவிட்டனர். இது ஒரு சமய நூல். ஆயினும் சமயம் சாராத பல்வேறு தகவல்கள் ஆங்காங்கே பொதிந்து கிடக்கின்றன. ஸ்ரீகாந்த் தலகரி போன்ற அறிஞர்கள் காய்தல் உவத்தல் இன்றி இதை ஆராய்ந்ததில் பல உண்மைகள் தெரிய வந்துள்ளன.

ஊழல் எதிர்ப்புப் போராட்டம், ரிக் வேத காலத்திலேயே துவங்கிவிட்டது. பாணீக்கள் என்போர் லஞ்சம் கொடுக்க முன்வந்தபோது இந்திரனின் தூதராகச் சென்ற நாய் சரமா அதை ஏற்க மறுத்துவிட்டது. பாணீக்கள் என்போர் பீனீஷியர் என்னும் இனத்தினருடன் தொடர்புடையோர் என்றும் உலகில் அவர்கள்தான் அகர வரிசை எழுத்தையும், காசு/பணம் என்னும் கரன்ஸி விஷயத்தையும் உலகிற்குக் கற்பித்தவர்கள் என்றும் முன்னொரு கட்டுரையில் கண்டோம்.

பாணீ என்னும் சொல்லில் இருந்து வணிக சமபந்தமான சொற்கள் அனைத்தும் வந்தன:

பாணீ = வணிக= பணம்= ஆபணம்/மார்க்கெட்= பனியா=வணிகர்.

((சிந்து சமவெளியில் இருக்கும் எழுத்துக்கள் அகர வரிசை எழுத்துக்கள் அல்ல. ஆனால் பிராமி என்னும் லிபி பிற்காலத்தில் அகர வரிசை எழுத்துக்களாக உருவானது. அதிலிருந்து தமிழ் எழுத்துக்களும் தென் கிழக்காசிய நாடுகளில் உள்ள எழுத்துக்களும் உருவாயின. பிராமி லிபி, பீனிஷிய எழுத்திலிருந்து உருவானதாக அறிஞர்கள் பகர்வர்)) நிற்க.

ரிக் வேதத்தின் பத்தாவது மண்டலத்தில் (10-108) ஒரு பாடலில் சரமா கதை வருகிறது. சரமா என்பது உண்மையில் நாயா அல்லது இயற்கையில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு இதை உருவகப்படுத்தி னார்களா என்று பல விளக்கங்கள் உண்டு. எது எப்படியாகிலும் ஒரு விஷயத்தை உவமையாகவோ, உருவமாகவோ பயன்படுத்தவும் அப்படி ஒன்று (நாய்) இருந்தால்தான் முடியும்.

இந்த சம்பவத்தில் வரும் பசுக்கள் சூரிய ஒளியைக் குறிக்கும் என்றும், பாணிக்கள் அதைத் திருடியது சூரிய அஸ்தமனத்தைக் குறிக்கும் என்றும், சரமா என்னும் நாய், சூரிய உதயத்தைக் குறிக்கும் என்றும் ஒரு விளக்கம் உண்டு.

நேற்றைய கட்டுரையில் சரமா, சரமேயஸ் பற்றிச் சொல்லிவிட்டதால் நேரடியாக லஞ்ச ஊழலைப் பார்ப்போம்:

Bribery01

சரமாவின் கூற்று:

ஓ, பாணீக்களே! இந்திரனின் தூதனாக இங்கு வந்தேன்; உங்களிடம் உள்ள பெரும் செல்வத்தைக் கேட்கவந்தேன்

ஓடும் ரசா நதியையும் கடக்கத் தயங்கவில்லை

பாணீக்களின் கூற்று:

அது யார் இந்திரன்? அவன் தூது அனுப்பியது என்னே! இவ்வளவு தூரம் கடந்து வந்தனையே! உங்கள் இந்திரனே வரட்டும். அவனை மாடு மேய்க்கும் வேலையில் அமர்த்துவோம்.

ஆயினும் சரமா நல்ல நேரத்தில் வந்திருக்கிறாய். நாங்கள் உனக்கு பசு மாடுகள் தருகிறோம்; திரும்பிச் செல்லாதே. எங்களுடைய சகோதரியாக்கிக் கொள்கிறோம்.

சரமாவின் கூற்று:

உங்களை எச்சரிக்கிறேன்; ரிஷிகளுக்கும் இந்திரனுக்கும் இது எல்லாம் தெரியும். நான் போகிறேன்

இந்தத் துதி நீண்ட ஒரு துதி. சம்பாஷணை/ வாக்குவாதம் அடிப்படையில் அமைந்தது.

மேற்கூறிய துதியிலிருந்து நாம் அறிவதென்ன?

நீ கட்சி மாறினால் உனக்கு பதவியும் (சகோதரி), கையூட்டும் (பசு மாடுகள்) கொடுப்போம் என்று பாணீக்கள் கூறினர்.

இந்திரனின் தூதனான சரமா கையூட்டை ஏற்க மறுத்து இந்திரனிடம் போய் விஷயத்தைச் சொல்லிவிட்டது.

bribe3

இதே கதை, பிற்கால இலக்கியங்களான ஜைமினீய பிராமணம், பிருஹத் தேவதா ஆகியவற்றிலும் சிற்சில மாற்றங்களுடன் காணப்படுகிறது:

பாணீக்கள் திருடிய பசுக்கள் , ஒரு குகையில் ஒளித்து வைக்கப்பட்டதென்றும் அவைகளை இந்திரன் மீட்டான் என்றும் அறிகிறோம்.

மஹாபாரதத்திலும், சங்க இலக்கியப் பாடல்களிலும் வரும் ஆநிரை கவர்தல்/ மீட்டலின் “மூலம்”, ரிக்வேதத்தில் உள்ளது. தமிழர்கள் இதை அப்படியே 2000 ஆண்டுகளுக்கு முன் பின்பற்றியதை சங்க இலக்கியப் பாடல்களில் காண்கிறோம். ஆரிய-திராவிட இனவெறிக் கொள்கையினருக்குச் செமை அடி கொடுக்கிறது இது.

இரண்டாவதாக, துப்பறியும் நாயை வைத்து குகையில் ஒளித்துவைத்திருந்த பொருள்களைக் கண்டுபிடிக்கும் வழக்கத்தையும் இந்துக்களே உலகிற்குக் கற்பித்தனர். எல்லா போலீஸ், ராணுவப் பிரிவுகளும் ரிக் வேத ரிஷிகளுக்குக் கடன்பட்டவர்கள்.

மூன்றவதாக, நாய் நன்றியுள்ள பிராணி. அதை மனிதன் வளர்க்கத் துவங்கியது ரிக்வேத அரசர் (இந்திரன்) காலத்திலேயே துவங்கிவிட்டது. இதை மஹாபாரதத்தில் தருமன் – நாய் கதையிலும் (ஸ்வர்க ஆரோஹன பர்வம்) காண்கிறோம்.

நாலாவதாக, பாணீக்கள் என்னும் தீயோர்தான் லஞ்ச ஊழலைப் பரப்பினர். அதை சரமா நிராகரித்து ஊழல் ஒழிப்பு போராட்டத்தை 3700 ஆண்டுகளுக்கு முன்னரே துவக்கிவிட்டது.

bribe 2

ஐந்தாவதாக, ஒரு அரசன் தூதரை நியமித்து முதலில் சமாதானம் பேச வேண்டும் என்னும் நாகரீக நடைமுறையை உலகிற்குக் கற்பித்ததும் இந்துக்களே. இதை ராமாயண அனுமன் தூதிலும் மஹாபாரத கிருஷ்ணன் தூதிலும் காண்கிறோம். இதை ரிக் வேதம் சொல்கிறதென்றால் வேத கால நாகரீகம் எவ்வளவு பண்பட்ட, முன்னேறிய நாகரீகம் என்பதை அறிய முடிகிறது. வேத காலத்தில் சபா (அவை), சமிதி (கமிட்டி) என்னும் ஜனநாயக அமைப்புகள் இருந்ததையும் மன்னருக்கு அவை அறிவுரை சொன்னதையும் முன்னொரு கட்டுரையில் தந்தேன். உலகிற்கு வரம்புக்குட்பட்ட முடியாட்சி, பார்லிமெண்டரி ஜனநாயகம் என்பதைக் கற்பித்ததும் ரிக் வேதமே. அதற்குப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இந்த சமுதாயம் பாரத மண்ணில் வசித்தால்தான் இது சாத்தியமாகும். ஏனெனில் உலகில் வேறு எங்கும் இவ்வளவு முதிர்ச்சியைக் காண இயலவில்லை.

ஆறாவதாக,

பிராணிகளையும், பறவைகளையும் தூது அனுப்பும் பாடல்கள் சங்க இலக்கியத்திலும் பிற்கால தமிழ் இலக்கியத்திலும் உண்டு. வேதத்தில் ஆரம்பித்த நாய் விடு தூது, நள தமயந்தி காலத்தில் அன்னம் விடு தூதாக வளர்ந்து, காளிதாசன் காலத்தில் மேகம் விடு தூதாக (மேகதூதம்) மலர்ந்து, தமிழில் கிளி விடுதூது, குயில் வீடு தூது என்பன போலப் பல்கிப் பெருகின.

நாய்கள் நன்றியுள்ள பிராணிகள். மனிதனைவிட 3000 மடங்கு மோப்ப சக்தியுடையவை. இதை ரிக்வேத ரிஷிகள் அறிந்து அதன் பெயரில் ஒரு பாடல், துதி “இயற்றியிருப்பது” உலகில் வேறெங்கும் இல்லாத புதுமை!

வேதங்களை 450–க்கும் மேலான ரிஷிகள் “யாத்ததாக” வெளிநாட்டினர் செப்புவர். ஆனால் நம்மவர், அவை வானில் ஒலி ரூபத்தில் எப்போதும் உள்ளவை என்றும் 450+ ரிஷிகள் அதை ரேடியோ போலக் கேட்டு நமக்குச் சொன்னார்கள் என்றும் நம்புவர். ஆகவே அவை மனிதனால் இயற்றப்பட்டவை அல்ல.

ப்ருஹத் தேவதா, ஜைமினீய பிராமணம்

ஜைமினீய பிராமணத்தில் முதலில் சுபர்ணன் என்னும் கருடன் தூது போனதாகவும் அது லஞ்சம் வாங்கியதாகவும் அதற்குப் பின்னரே சரமா அனுப்பப்பட்டதாகவும் இருக்கிறது. லஞ்சம் வாங்கிய சுபர்ணனை இந்திரன் கண்டிக்கிறான்.சரமா, நன்றியோடு பணி புரிகிறது

பிருஹத் தேவதாவில் சரமா, லஞ்சம் வாங்கியதாக கதையில் ஒரு ‘ட்விஸ்ட்’ ( திடீர் மாற்றம்) இருக்கிறது. இந்திரன் அதைக் கண்டித்து ஒரு அடி கொடுத்தவுடன் “பாலை” அப்படியே கக்கி விடுகிறது. பின்னர் சரமா, பாணீக்களிடம் போகிறது.

வேதகால ரிஷிக்கள் சங்கேத மொழியிலேயே பாடுவர். ஆகையால் “பால்” என்பர்.

சாணக்கியன் எழுதிய அர்த்தசாஸ்திரத்தில் வரும் ஒரு மேற்கோள் நினைவுக்கு வருகிறது:

தண்ணீரில் வாழும் மீன்கள் எப்படி நீரைக் குடிப்பது உண்மையோ, அப்படி அரசாங்க அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதும் உண்மை.

prison-cell-phone-bribery2

தமிழில் ஒரு பழமொழி உண்டு:

தேனை வழித்தவன் புறங்கையை நக்காமல் இருப்பானா?

ஆனால் ரிக்வேதம் முதல் சாணக்கியன் வரை எல்லோரும் லஞ்சத்தைக் கண்டித்துள்ளனர்.

ரிக் வேத சரமா, கிரீஸ் நாட்டுக்கு போனது எப்படி?

indra

Research paper No 1953

Written by London swaminathan

Date: 25 June 2015

Uploaded in London at காலை 9-50

ரிக்வேதத்தில் (10-108) சரமா என்ற நாயின் கதை பத்தாவது மண்டலத்தில் உள்ளது. அந்த நாய்க்கு இரண்டு குழந்தைகள் (குட்டிகள்). அவற்றின் பெயர் சரமேயஸ். இந்து கிரேக்க நாட்டில் ஹெர்மஸ் ஆனது. பாரசீகர்களுக்கும் (ஈரான்), கிரேக்கர்களுக்கும் (கிரீஸ்) எஸ் – என்ற எழுத்து எல்லாம் எச்- என்ற எழுத்தாகி விடும். சிந்து என்ற நதியின் பெயரை உச்சரிக்க முடியாமல் நமக்கு ஹிந்து என்ற பெயர் சூட்டியவர்களும் அவர்கள்தான்.

சரமா என்பது ஹெர்மஸ் ஆனது மாக்ஸ்முல்லர் காலத்திலிருந்தே அடிபட்ட விஷயம்தான். ஆயினும் “ரிக் வேதத்தில் வரலாறு” — என்ற ஆங்கில நூலை எழுதிய ஸ்ரீகாந்த் தலகரி இதை மூன்று தலைப்புகளில் விரிவாக ஆராய்ந்து சில புதிய விஷயங்களைச் சொல்கிறார். சுருக்கமாகக் காண்போம்:

ரிக் வேதம் உலகிலேயே பழமையான நூல்; இந்துக்களின் பூர்வீக வரலாற்றை இதிலிருந்து ஓரளவு அறியலாம். ஏனெனில் இது வரலாற்று நூல் அல்ல. மதம் பற்றிய நூல்.

சர்மா கதை ரிக் வேதம் தவிர, ஜைமினீய பிராமணம், பிருஹத் தேவதா ஆகிய நூல்களிலும் இருக்கிறது.. சரமா பற்றிய துதி என்ன செப்புகிறது:

1.சரமா நீண்ட பாதை வழியாகச் சென்று ரசா நதியைக் கடந்து, பாணிக்களைச் சந்தித்து, அவர்களுடைய செல்வம் வேண்டும் என்று இந்திரன் கேட்டதைச் சொல்கிறது.

2.பாணிக்கள் அதை நிராகரித்து, இந்திரனை வேண்டுமானால் மாடு மேய்ப்பவனாக நியமிக்கத் தயார் என்று சொல்லி எள்ளி நகையாடுகின்றனர்.

3.சரமா, இதனால் வரும் விளைவுகளைச் சொல்லி எச்சரிக்கிறது.

4.இந்திரனுடன் போரிடத் தயார் என்று சொல்லும் பாணிக்கள், சரமாவைத் தங்கள் பக்கம் வரும்படி கோருகின்றனர்.

5.சரமா, அதை நிராகரித்துவிட்டு இந்திரனிடம் சென்று விடுகிறது.

6.பாணிக்கள், இந்திரனின் பசுக்களைத் திருடிச் சென்று குகைகளில் வைத்தனர். சரமா தூது சென்றும் பலிக்கவில்லை; பின்னர் இந்திரன் சண்டை போட்டு அவைகளை மீட்கிறான்.

சரமேயஸ் பற்றி என்ன அறிகிறோம்?

அவை இரண்டும் யம தர்மனின் காவல் நாய்கள்.

talagheri book

தலகரி சொல்கிறார்: இது அன்றாடம் நிகழும் இயற்கை நிகழ்வைப் பின்னர் கதையாக மாற்றி விட்டனர். அதாவது சூரியன் பூமிக்கு அடியில் (பின்புறம்) சென்று மறைவதையும் பின்னர் மறுநாள் வெளிவருவதையும் கூறும் கதை இது என்கிறார். துதியில் வரும் பசுக்கள்—சூரிய ஒளியையும், சரமா – உதயத்தையும், பாணிக்கள் — இருளையும் குறிக்கும் என்பார்.

எனது கருத்து: இது துவக்கத்தில் சரியாக இருக்கலாம். பின்னர் அதையே உவமையாக்கி மற்றொரு சம்பவத்தைக் குறிக்கவும் பயன்படுத்தி இருக்கலாம்.

பாணிக்கள் என்பவர்களை  பீனீஷியர்கள் என்று இன்னொரு கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன். அவர்கள்தான் பணம் (காசு) என்பதையும் அகர வரிசை எழுத்து முறை என்பதையும் உலகிற்குக் கற்றுக் கொடுத்தவர்கள் என்று மேலை நாட்டுப் புத்தகங்கள் கூறும்.

பாணி என்ற சொல்லிலிருந்து வந்த சம்ஸ்கிருதச் சொற்கள் அனைத்தும் வணிக சம்பந்தமானவை:

பாணி = பணம் = வணிக = பனியா/வியாபாரி = ஆபணம் = கடை/மார்க்கெட்

sarama_and_her_chil

முக்கிய தொடர்பு

சரமா கதை, கிரேக்க நாடு தவிர, உலகில் வேறு பல நாடுகளிலும் இருக்கிறது. பாரசீகத்திலும், ரோமானிய சாம்ராஜ்யத்திலும், ஸ்காண்டிநேவிய பண்பாடுள்ள நாடுகளிலும் இருக்கிறது. ஆயினும் அங்கெல்லாம் அது உருச் சிதைந்து காணப்படுகிறது. இவை எல்லாம் தொடர்பு படுத்தும் முழுக்கதை ரிக் வேதம் ஒன்றில்தன் இருக்கிறது!! எடுத்துக் காட்டாக ஹெர்மஸ் என்பது ரோம் கலாசரத்தில் மெர்குரி என்ற தெய்வமாக ஆனதாக எழுதுவர். அவரும் வணிகக் கடவுளே. மெர்கண்டைல் போன்ற வணிகச் சொற்கள் அதிலிருந்தே வந்தன. ஆனால் ஹெர்மஸ் – மெர்குரி வணிக விஷயத்தைத் தொடர்புபடுத்த ரிக் வேத பாணி ஒன்றால்தான் முடியும். இது போல ட்யூடானிக் (ஸ்காண்டிநேவிய) கலாசாரத்தில் அசீர் (அசுர என்பதன் உரு மாறிய வடிவம்), வாணீர் (பாணி என்பதன் சிதைந்த வடிவம்) என்ற இரண்டு வகைத் தெய்வங்கள் சண்டையிடும் கதைகள் உள்ளன. இது நமது புராணங்களில் தேவாசுர யுத்தமாக —- (கடல் கடைந்து அமிர்தம் எடுத்த கதை) —– வருகிறது.

சுருங்கச் சொல்லின் நான்கு நாட்டுக் கதைகளின் மூலம் வேதத்திலுள்ள சரமா கதையில் இருக்கிறது!!

வெள்ளைக்காரன் இந்தியாவுக்குள் நுழைந்தவுடன் ஒரு பெரிய கதை கட்டிவிட்டான். பாருங்கள்! சம்ஸ்கிருதம் போலவே ஐரோப்பிய மொழிகள் எல்லாம் இருக்கின்றன. ஆகையால் நீங்களும் எங்களைப் போல வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள். பாருங்கள்! தமிழ் மொழி போலவே, சிதிய மொழி உள்ளது. ஆகையால் திராவிடர்களும் மத்திய தரைக் கடலிலிருந்து வந்தவர்கள் என்று மாக்ஸ்முல்லர், கால்டுவெல் பாதிரியார் எல்லாம் கதை கட்டிவிட்டனர். இவை எல்லாம் இப்போதைய ஆராய்ச்சியில் புஸ்வாணமாகப் போய்விட்டன.

dog3

யார் யாரிடமிருந்து கடன் வாங்கினர்?

இன்னும் சில திராவிடங்களும், மார்கஸீய வாதிகளும், அதுகளும் இதுகளும் — நீங்கள் எல்லாம் வெளியே இருந்து வந்தவர்கள் என்று வாதிடுகிறார்கள் அல்லவா?

அதற்குப் பதில்:

வேதம் என்பது கி.மு.1700 ஐ ஒட்டி எழுந்தது என்பது இப்போது எல்லோராலும் ஒப்புக் கொள்ளப் படுகிறது. அதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர்தான் கிரேக்க மொழியில் நூலே தோன்றியது. லத்தீன், தமிழ் முதலியன அதற்கும் மிகமிகப் பின்னே வந்தவை. ஸ்காண்டிநேவிய கதைகள் எல்லாம் நேற்று (கி.பி.700) வந்தவை. இப்படியெல்லாம் யாராவது புத்திசாலித் தனமாக சொல்லிவிடுவார் என்பதை அறிந்த தந்திரக்கார குள்ள நரி வெள்ளைக் காரன் – வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவது போல- இன்னுமொரு பொய்யையும் ஏற்றிவைத்தான். இதற்கெல்லாம் மூலம் ஒன்று இருந்தது – அதிலிருந்து தோன்றியவை இவை என்றான். ஆனால் அதுவும் செல்லாக் காசு ஆகிவிட்டது.

சம்ஸ்கிருத மொழிக்கும் கிரேக்க மொழிக்கும் இடையே மட்டுமே ஆயிரம் ஆண்டு இடைவெளி! ஆட்டைச் சாப்பிட விரும்பிய ஓநாய் , அட நீ கலக்காவிடில் உன் அப்பன் கலக்கியிருப்பான் என்று சொல்லி ஆட்டை முழுங்கிய ஈசாப் கதை ஞாபகம் வருகிறதல்லவா? அந்த ஓநாய்தான் வெள்ளைத் தோல் படைத்த வெளிநாட்டான்! அந்த ஓநாய்க்காக முதலைக் கண்ணீர் விடுபவைதான் திராவிடங்களும் அதுகளும் இதுகளும்!

முடிவுரை:

1.இந்திய-ஐரோப்பிய புராணக் கதைகளில் வரும் எல்லா அம்சங்களையும் கொண்ட கதைகள் வேதங்களில் மட்டுமே உள்ளன (மற்ற கலாசாரங்களில் இதே கதைகளின் சில அம்சங்கள் மட்டும் உருமாறிச் சிதைக்கப்பட்டு சட்னியாகவோ அவியலாகவோ காணப்படுகின்றன. ஹெர்மஸ் என்னும் கிரேக்க தேவனின் கதையில் சரமா, பாணீக்களின் அம்சங்கள் – அவியல் போலக் காட்சி தரும்).

2.வேதங்களிலுள்ள கதைகள் இல்லாவிடில் இவைகளைத் தொடர்புபடுத்த முடியாமலே போயிருக்கும் (மொழி விஷயத்தில் ஒற்றுமை இருந்தால் மூலக் கதை. கலாசரத்திலும் தொடர்பு இருக்க வேண்டுமல்லவா? அது வேதத்தில் மட்டுமே உளது.

  1. மேலும் பீனிஷியர்கள் பற்றிய தகவல் எல்லாம் காலத்தால் மிகவும் பிந்தியவை. வேதத்தில் உள்ள பாணீக்களுடன் பணம், ஆபணம்(மார்க்கெட்/கடை) முதலியவற்ரைத் தொடர்புபடுத்துவது சரியெனக் கொண்டால், அந்தக் காலத்திலேயே வேத கால மக்கள் வணிகம், வியாபாரம் ஆகியவற்றில் சிறந்து விளங்கினர் என்றும் முடிவு செய்யலாம். (உலகிற்கு பணம் என்ற சொல்லே ரிக் வேதத்தில் இருந்து வந்தது என்று சில வாரங்களுக்கு முன் ஒரு கட்டுரை எழுதியுள்ளேன்).

4.எல்லாக் கதைகளிலும் இழையோடும் பொது அம்சங்கள்:–

அ)பசுக்களைத் திருடுதல்

ஆ)சரமா தூது போதல்

இ)பாணிக்கள் என்போர் தீயோராக வருதல்

ஈ)நாய்கள் இறந்தோருடன் செல்லுதல்

–சுபம்–