WRITTEN BY S NAGARAJAN
Date: 31 December 2015
Post No. 2443
Time uploaded in London :– 5-50 AM
( Thanks for the Pictures )
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
ஆன்மீக இரகசியம்
பிரார்த்தனை செய்வது எப்படி?
ச.நாகராஜன்
மனிதனுக்கே உரித்தானது பிரார்த்தனை
பிரார்த்தனை செய்வது என்பது ஹிந்து, கிறிஸ்தவம், முஸ்லீம், புத்தம், சமணம், யூதம் உள்ளிட்ட அனைத்து மதங்களைச் சேர்ந்தவர்களும் புரியும் ஒன்று.
மானிட குலம் முழுமைக்கும் பொதுவாக அமைந்த சிறப்பியல்புகளில் பிரார்த்தனையும் ஒன்று; முக்கியமானதும் கூட.
ஆனால் பிரார்த்தனையை எப்படிச் செய்தல் வேண்டும் என்பது மாபெரும் இரகசியம்.
எனக்குச் செல்வம் வேண்டும்; நான் புகழ் பெற வேண்டும்; எனக்கு அதிகாரம் வேண்டும்; நான் அமைச்சராக வேண்டும், எனக்கு பிள்ளை பிறக்க வேண்டும், எனக்கு நோய் நீங்க வேண்டும் என்றெல்லாம் பலரும் கோவில் உள்ளிட்ட பிரார்த்தனை ஸ்தலங்களில் பிரார்த்தனை புரிவதை அறிவோம்.
அவர்களின் நம்பிக்கைக்கும் பூர்வ கர்மவினைகளுக்கும் தக்கபடியும் வேண்டுகின்ற் ஸ்தலத்தில் அருள் பாலிக்கும் தெய்வத்தின் அருளுக்கும் ஏற்ப பெரும்பாலானோரது பிரார்த்தனை நிறைவேறி விடுகிறது.
இதனாலேயே பிரார்த்தனைக்கு மகத்துவம் அதிகமாகிறது.
எப்படிப் பிரார்த்திப்பது
ஆனால் அருளாளர்களும் மகான்களூம் பிரார்த்தனையை சரியாகச் செய்வது எப்படி என்று கூறி அருளி இருக்கின்றனர்.
தாயுமானவர் மிக அழகாகச் சொல்லி இருக்கிறார்:-
எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே!
மக்கள் அனைவரும் இன்புற்றிருக்க வேண்டும் அதுவே அவரது நிரந்தர பிரார்த்தனை.
அன்பர் பணி செய்ய என்னை ஆளாக்கி விட்டு விட்டால் இன்பநிலை தானே எய்தும் பராபரமே
என்றும் அவர் அருளி இருக்கிறார்.
மாபெரும் ரகசியங்கள் இரண்டை மிக எளிமையாகச் சொல்லி விட்டார் அருளாளர்.
அனைவரின் நலனையும் வேண்டு; அனைவருக்கும் தொண்டு செய் – இதுவே நீ நலம் பெற வழி; உனக்கு நன்மை தரும் வழி.
வள்ளலார் கூறும் பிரார்த்தனை இரகசியம்
இராமலிங்க வள்ளலார் சுவாமிகள் ஏராளமான இரகசியங்களை நூல் வடிவிலும் பா வடிவிலும் அருளியுள்ளார். பிரார்த்தனை இரகசியம் பற்றியும அவர் கூறியுள்ளார்.
பிரார்த்தனை என்ற தலைப்பில் அவரது அருள் மொழிகள் இதோ:-
“ஒருவன் பிரார்த்தனை செய்வதில் அவனுக்காக மட்டும் செய்வது சரியல்ல. இந்த உலகமெலாம் வாழும்படி பிரார்த்தனை செய்தல் வேண்டும். அப்படிச் செய்வதால், அதில் ஒருவனுக்கு வேண்டியவை எல்லாம் அடங்கி விடுகின்றன. பிரார்த்தனை செய்ய வேண்டுமாகில் இப்படித்தான் செய்ய வேண்டும்:
“பாதி இரவி லெழுந்தருளிப் பாவியேனை யெழுப்பியருட் ஜோதி யளித்தென் னுள்ளகத்தே சூழ்ந்து கலந்து துலங்குகின்றாய் நீதி நடஞ்செய் பேரின்ப நிதிநான் பெற்ற நெடும்பேற்றை ஓதிமுடியா தென்போலிவ் வுலகம் பெறுதல் வேண்டுவனே
(6ஆம் திருமுறை – பக்கம் 129)
என்பதே பிரார்த்தனையாகும்.”
தான் பெற்ற பெரும் பேற்றை நெடும் பேறு என்று கூறும் அவர் அதை அனைத்து மக்களும் பெற வேண்டுவேனே என்கிறார்.
இது தான் உண்மையான பிரார்த்தனை என்னும் மாபெரும் இரகசியத்தையும் தெள்ளத் தெளிவாகக் கூறுகின்றார்.
“சர்வே ஜனா சுகிநோ பவந்து”
“லோகாஸ் ஸமஸ்தா சுகிநோ பவந்து”
என்று காலம் காலமாக மகான்கள் சொல்லி வருகின்றனர்.
அனைவரின் நலனுக்குமாக அருள் வேண்டுவதே பிரார்த்தனை; அதைச் செய்யும் போது நமது நலன்களும் தாமாகவே கூடி விடும்.
இறைவனின் இந்த அருள் ‘மெக்கானிஸம்’ இரகசியமான ஒன்று.
அதைத் தாயுமானவர், வள்ளலார் போன்றோர் நமக்காக எளிய தமிழில் “உடைத்துப் போட்டுத்” தருகின்றனர்.
ஆக உண்மையான பிரார்த்தனை எது என்பதை அறிந்த சந்தோஷத்தில் கூறுவோம்:
சர்வே ஜனா சுகிநோ பவந்து
லோகாஸ் ஸமஸ்தா சுகிநோ பவந்து
எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே!
********
You must be logged in to post a comment.