அதிசய ரத்தினக் கற்கள்- கம்பன் பாடல்களில்! (Post No.4884)
Research article Written by London Swaminathan
Date: 5 April 2018
Time uploaded in London – 8-49 am (British Summer Time)
Post No. 4884
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.
WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU
சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், தமிழில் ராமாயணத்தைத் தந்தான் கவிச் சக்ரவர்த்தி கம்பன். அவன் காலத்தில் சோழ வள நாடு சோறு மட்டுமின்றி ரத்தினக் கற்களிலும் செழிப்பாக இருந்தது. இதை அ வனது பாடல்களில் காண முடிகிறது. அது மட்டுமா?
அதிசய நாக ரத்தினம் பற்றியும், தொட்டதை எல்லாம் தங்கமாக்கும் ‘ஸ்பர்ஸ்வேதிக்’ கல் பற்றியும் கம்பன் பாடுகிறான். இது அக்கால நம்பிக்கைகளை எடுத்துக் காட்டுகிறது
‘ஸ்பர்ஸவேதி’ என்னும் கல்லை சித்தர்கள் வைத்திருந்தார்கள் என்றும் அதனால் அவர்கள் வேண்டிய அளவுக்குத் தங்கக் கட்டிகளைப் பெற்றார்கள் என்றும் இந்துக்கள் நம்புவர். மேலை நாட்டிலும் மத்திய காலத்தில் இப்படி ஒரு நம்பிக்கை இருந்தது.
கம்பன் சொல்வான்; ராமன் ஒர் ஸ்பர்சவேதிக் கல் போலும்; அவன் தொட்டதெல்லாம் தங்கம் ஆகி விடுகிறதே என்று!
நாகரத்தினம் உண்டு என்றும், இதைக் கொண்டே நாகங்கள் இரை தேடும் என்றும் தமிழர்கள் நம்பினர் (காளிதாசன் காவியங்களிலும், சங்கத் தமிழ் பாடல்களிலும் உள்ள விஷயங்களை ஏற்கனவே ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையில் கொடுத்துள்ளேன்)
கம்பன் இதைச் சொல்கிறான்:-
சுந்தர காண்டத்தின் நிந்தனைப் படலத்தில் சீதையைத் தேடி அசோக வனத்துக்குள் வந்த ராவணனை வருணிக்கும் கம்பன் செப்புவான்:-
ஒரு மணி தேடும் பல் தலை அரவின்
உழைதொறும் உழைதொறும் உலாவி
காம மயக்கத்தால் சீதை இருக்கும் இடத்தை மறந்து போன ராவணன், தன் ஒப்பற்ற மாணிக்கத்தை இழந்த பல தலைப் பாம்பு போலப் பற்பல இடங்களிலும் அவளைத் தேடித் திரிந்தபடி வந்தான்.
அனுமன் கடலைத் தாண்டிய வேகத்தில் கடல் நீர் கிழிந்ததாம். அதில் பாதாள லோகமும் அங்கே வாழும் நாகர்களுடைய ரத்தினங்களும் மின்னியதாம்.
கீண்டது வேலை நல் நீர் கீழ் உறக் கிடந்த நாகர்
வேண்டிய உலகம் எல்லாம் வெளிப்பட மணிகள் மின்ன
–கடல் தாவு படலம், சுந்தர காண்டம்.
உருக் காட்டுப் படலத்தில் ராமனின் மோதிரத்தை அனுமான் சீதையிடம் கொடுத்தவுடன், மாணிக்கத்தைத் தேடும் பாம்புக்கு அந்த ரத்தினம் கிடைத்து விட்டால் எவ்வளவு மகிழ்ச்சி கொள்ளுமோ அது போல சீதையின் மன நிலை இருந்ததாம்.
‘இழந்த மணி புற்று அரவு எதிர்ந்தது எனல் ஆனாள்’– என்பான்.
வேதிகை மணி
அதிசயமான வேதிகை மணி பற்றிய பாடலும் சுந்தர காண்டம் உருக்காட்டுப் படலத்திலேயே வருகிறது:-
நீண்ட விழி நேரிழைதன் மின்னின் நிறம் எல்லாம்
பூண்டது ஒளிர்பொன் அனைய பொம்மல் நிறம் மெய்யே
ஆண்தகைதன் மோதிரம் அடுத்த பொருள் எல்லாம்
தீண்டு அளவில் வேதிகை செய்தெய்வ மணிகொல்லோ
பொருள்:-
நீண்ட கண்களையும் சிறந்த அணிகலன்களையும் உடைய சீதையின் மின்னல் போன்ற உடலின் நிறமானது, மோதிரத்தின் ஒளியால் பொன்னிறம் பெற்றுப் பொலிவும் பூண்டது. இது உண்மை! எனவே, இராமனது மோதிரம் தன்னை நெருங்கும் எல்லாப் பொருள்களும் தன்னைத் தீண்டுகிற மாத்திரத்தில் பொன்னாக மாற்றுகின்ற தெய்வத் தன்மை பெற்ற ஸ்பரிசவேதி என்னும் ரசவாத குளிகைதானோ?
ஆரண்ய காண்டம், சூர்ப்பநகை சூழ்ச்சிப் படலத்தில் ராவணன் மாணிக்கத் தேரில் ஏறி வந்ததாகவும் அங்கே ஒன்பது மணிகளால் (நவரத்னம்) ஆன மரங்கள் இருந்ததாகவும் கூறுகிறான்
‘மாணிக்க மானத்திடை மண்டபம் காண வந்தான்‘
‘பொற்பு உற்றன ஆய் மணி ஒன்பதும் பூவில் நின்ற‘
நவரத்தினத் தேர், நவரத்தின மோதிரம்!
ராமன் ஏறிய தேர் பற்றிய வர்ணனை மிகவும் சுவையானது;-
பொன் திரள் அச்சது வெள்ளிச் சில்லி புக்கு
உற்றது வயிரத்தின் உற்ற தட்டது
சுற்று உறு நவமணி சுடரும் தோற்றத்து
ஒற்றை ஆழிக் கதிர்த் தேரொடும் ஒப்பதே
–பால காண்டம்
ராமனின் தேரின் அச்சு-தங்கம், சக்கரம்-வெள்ளி, தேர்த் தட்டு- வைரம், பார்டர்- நவ அர் ரத்தினக் கற்கள், சூரியனின் ஒற்றைச் சக்கரம் போன்றது.
கிட்கிந்தா காண்டம், கார்காலப் படலத்தில் நவ ரத்தின மோதிரம் பற்றிய வருணனை வருகிறது:
நானிறச் சுரும்பும் வண்டும் நவமணி அணியின் சார- என்ற பாடலில் பல நிறங்களுடைய சுரும்புகளும் வண்டுகளும் நவ மணிகள் இழைக்கப் பெற்றுக் கைகளில் அணிந்து கொள்ளும் மோதிரம் வளை போலக் காந்தள் மலரில் மொய்த்தன– என்று வருகிறது.
இவ்வாறு நவரத்தினம், தங்கம், வெள்ளி பற்றிய குறிப்புகள் நிறையவே உள்ளன. இவை சோழர் கால செல்வ வளத்தின் எதிரொலி என்றால் மிகையாகாது.
My Old Articles: –
கம்பன், காளிதாசன் | Tamil and Vedas
https://tamilandvedas.com/tag/கம்பன்-காளிதாசன்/
18 Oct 2016 – விஷத்தை நீக்கும் இரத்தினக் கற்கள். மனு தம சாத்திரமும் விஷம் பாதிக்காமல் இருக்க அதற்கான ரத்தினக் கற்களை அணிய வேண்டும் என்கிறது (மனு 7-218).காளிதாசன் சொல்லுகிறான்:- ரகுவம்சம் 2-32. திலீபன் மேய்த்த தெய்வீகப் பசுவை சிங்கம் தாக்கியது. உடனே கோபமடைந்த …
ரத்தினக் கற்கள் | Tamil and Vedas
https://tamilandvedas.com/tag/ரத்தினக்-கற்கள்/
22 வகை ரத்தினக் கற்கள். மனிதருள் மாணிக்கம் என்று சிலரைப் போற்றுகிறோம்; ஆங்கிலத்தில் அவன் ஒரு ரத்தினம்என்று நல்லோரைப் போற்றும் மரபுச் சொற்றொடர் உண்டு. மாமன்னன் விக்ரமாதித்தன் அரசவையில் உலக மஹா கவிஞன் காளிதாசன் உள்பட ஒன்பது அறிஞர்கள் இருந்ததை …
நாகரத்தினம் பற்றி வராகமிகிரர் கூற்று …
https://tamilandvedas.com/…/நாகரத்தினம்-பற்றி-…
13 Feb 2015 – முடிவுரை: யாரேனும் எங்கேனும் நாகரத்தினக் கல் இருக்கிறது என்று சொன்னால் அவர்களிடம் ஏமாந்து போய்விடாதீர்கள். சங்கத் தமிழ் இலக்கியத்திலும் சம்ஸ்கிருத இலக்கியத்திலும் ஏதோ ஒரு உவமையாகத் தான் இதைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். நாக ரத்தினம் என்பது …
https://tamilandvedas.com/tag/மாணிக்கம்/
முடிவுரை: யாரேனும் எங்கேனும் நாகரத்தினக் கல் இருக்கிறது என்று சொன்னால் அவர்களிடம் ஏமாந்து போய்விடாதீர்கள். சங்கத் தமிழ் இலக்கியத்திலும் சம்ஸ்கிருத இலக்கியத்திலும் ஏதோ ஒரு உவமையாகத் தான் இதைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். நாக ரத்தினம் என்பது உவமையே …
TAGS- ரத்தினக் கற்கள், நவரத்தினம், நாக ரத்தினம், வேதிகை மணி, தங்கம் ஆக்கும் கல்
—சுபம்–