
Article written by London swaminathan
Date: 23 May 2016
Post No. 2832
Time uploaded in London :– 9-58 AM
( Thanks for the Pictures)
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)
குள்ளமாக இருப்பவர்களைக் கேலி செய்வது எல்லா கலாசாரங்களிலும் இருக்கிறது.
“கள்ளனை நம்பினாலும், குள்ளனை நம்பலாகாது” – என்று தமிழ்ப் பழமொழி கூறும். சர்கஸிலும் கூட நகைச் சுவை உண்டாக்க, குள்ளர்களையே பயன் படுத்துகின்றனர். கோமாளி என்றாலே – குள்ளர்கள்தான் என்று ஆகிவிட்டது.

வள்ளுவர் வாழ்ந்த தமிழகத்திலும் இவ்வாறு கேலி செய்தனர் போலும். உடனே வள்ளுவன் சொன்னான்:
உருவு கண்டெள்ளாமை வேண்டும் உருள் பெருந்தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து (குறள் 667)
பொருள்:– பெரிய தேருக்கு முக்கியமானது அச்சாணிதான். அது கழன்று விழுந்தால் தேரே குடை சாயும். அது போல உலகிலும் பலர் உருவத்தில் சிறிதாயிருப்பர், அவர்கள் தேர்ச்சக்கர ஆணி போன்றவர்கள்; ஆகையால் குள்ளர்களைக் கேலி செய்யாதே என்கிறான் வள்ளுவன்.
ஓங்கி உலகளந்த உத்தமனாக – த்ரிவிக்ரமானாக – உருவெடுக்கும் முன்னர் திருமாலும் வாமனனாக (குள்ளமாக) இருந்தான். இதையொட்டியே “மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி (புகழ்) பெரிது” என்பர்,
அவ்வையாரும் அழகாகச் சொன்னார்:-
மடல் பெரிது தாழை மகிழினிது கந்தம்
உடல் சிறியரென்றிருக்க வேண்டா – கடல் பெரிது
மண்ணீரும் ஆகாஅதனருகே சிற்றூரல்
உண்ணீரு மாகிவிடும்
–வாக்குண்டாம், அவ்வையார்
பொருள்:–தாழம்பூ மடலுடன் பெரிதாக இருக்கும். மகிழம் பூ சிறியதாக இருக்கும். ஆயினும் மகிழம்பூ மணமே இனியது. கடல் பெரிதாக இருக்கலாம்; ஆயினும் அதன் நீரை யாரும் பருக முடியாது. அதனருகே ஒரு சிறிய நல்ல நீரூற்று இருந்தாலும் அதற்குத்தான் மதிப்பு அதிகம்.
சூரியனும் குடையும்
அறநெறிச்சாரம் என்னும் நூலிலும் ஒரு பாடல் உண்டு:–
பல கற்றோம் யாம் என்று தற்புகழ்தல் வேண்டாம்
அலர் கதிர் ஞாயிற்றைக் கைக்குடையும் காக்கும்
சிலகற்றார் கண்ணும் உளவாம் பலகற்றார்க்கு
அச்சாணி அன்னது ஓர் சொல்
பொருள்:–
பெரிய சூரியனின் ஒளியை மறைக்க கையிலுள்ள ஒரு குடை போதும்; கொஞ்சம் படித்தவர்கள் கூட ஒரு சொல்லினால் மற்றவர்களை மடக்கிவிட முடியும். ஆகையால் நாந்தான் மெத்தப் படித்தவன் என்ற செருக்கு வேண்டாம்.

விரலான் கதை
சிறியவர், பெரியவர் என்ற உருவங்களை வைத்து உலகில் ஏழு குள்ளர்கள், லில்லிபுட் மனிதர்கள் என்று பல கதைகள் உண்டு. ஜோனதன் ஸ்விப்ட் எழுதிய (லில்லிபுட்) கல்லிவரின் யாத்திரை நம்முடைய விரலான் கதையைக் காப்பி அடித்து எழுதப்பட்டது என்று நான் முன்னர் ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்றில் கூறினேன். இதோ அந்தக் கட்டுரை:–
சூரியனுடன் சுற்றிவரும் குள்ள முனிவர்கள் யார்: 31 டிசம்பர், 2011
–subham–





You must be logged in to post a comment.