கிட்டூர் (உ.பி.) என்னுமிடத்திலுள்ள பாரிஜாதம் (விக்கிபீடியா)
Written by London swaminathan
Date: 30 December 2016
Time uploaded in London:- 10-09 am
Post No.3496
Pictures are taken from different sources; thanks.
contact; swami_48@yahoo.com
நாரதர் என்றாலேயே கலகம்தானே! கலகம் ஏற்பட்டால்தான் தீர்வு பிறக்கும் என்பது இவரால்தான் வந்ததோ? ஒரு மாம்பழத்தைக் கொண்டுவந்து முருகனுக்கும் , கணபதிக்கும் இடையில் போட்டி வைத்து பழனி தலத்தை உருவாக்கினார். ருக்மணிக்கும் சத்யபாமாவுக்கும் இடையே பிணக்கு ஏற்படுத்தி துளசியின் மஹிமையை உலகுக்கு உணர்த்தினார். இந்தக் கதையில் பாரிஜாத பெருமையை உலகுக்குக் காட்டுகிறார்.
நாரதர் ஒரு அரிய பாரிஜாத மலரை தேவலோகத்திலிருந்து கொண்டுவந்து கிருஷ்ண பரமாத்மாவிடம் கொடுத்தார். அவர் அதை யாரிடம் கொண்டு கொடுக்கிறார் என்று பார்த்துக் கொண்டே நின்றார். அவருக்கும் தெரியும் கிருஷ்ணருக்குப் பல மனைவியர். அவர்களில் ருக்மணிக்கும் சத்யபாமாவுக்கும் இடையே கொஞ்சம் சலசலப்பு உண்டு என்று.
அவர் எதிர்பார்த்த மாதிரியே கொஞ்சம் சுவையான செய்தி கிடைத்தது. அந்த பாரிஜாத மலரை, கொஞ்சமும் தயங்காமல், யோசிக்காமல் ருக்மணியிடம் கொடுத்தார் கிருஷ்ண பரமாத்மா .
நாரதர், நாராயண, நாராயண – என்று உச்சரித்தவாறே விரைந்தார். சத்யபாமாவைக் கண்டார். ஒன்றுமே பேசாமல் முகத்தைத் தொங்கப் போட்டுக்கொண்டு சோகமே உருவாக நின்றார். சத்ய பாமாவுக்கு ஒரே பயம். என்ன நடந்ததோ, ஏது நடந்ததோ என்று அன்பாக விசாரித்தார்.
நாரதர் சொன்னார்::
ஒன்றுமில்லை, அரிய, பெரிய பாரிஜாத மலர் ஒன்றை உங்களுக்காகப் பறித்துக் கொண்டுவந்து கிருஷ்ணரிடம் கொடுத்தேன். நீங்கள் அவருக்கு மிகவும் பிடித்தமானவரே உங்களிடம் அது வந்துவிடும் என்று நினைத்தேன். அவரோ ஒரு நொடியும் தாமதிக்காமல் ருக்மணியிடம் கொடுத்துவிட்டார். அதுதான் எனக்கு பெரிய கவலை, துக்கம்:
கிட்டூர் (உ.பி.) என்னுமிடத்திலுள்ள பாரிஜாதம் (விக்கிபீடியா)
சத்யபாமா சொன்னார்:
அப்படியா சேதி? இப்போதே அந்த மலரை இங்கே கொண்டுவரச் சொல்லுகிறேன் என்றாள்.
நாரதர்: வேண்டாம், வேண்டாம்; அது ஒரு மலர்தானே. மரத்தையே கொண்டுவரச் சொல்லி கிருஷ்ணனிடம் கட்டளை இடுங்கள் என்றார்.
சத்யபாமா ஓடிப்போய் கோப க்ருஹத்தில் படுத்துக் கொண்டு கதவைச் சாத்திக் கொண்டாள். அந்தக் காலத்தில் அரசர்கள் பல மனைவியரை மணந்ததால் கோபக்காரர் அறை அல்லது வீடு ஒன்று வைத்திருப்பர். எந்த மஹாராணிக்கு மனத்தாங்கல் ஏற்படுகிறதோ அவர் அங்கு போய் அமர்ந்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்துவார். மன்னர்களும் யாராவது ஒரு மனைவியரைக் காணவில்லை என்றாலும் முதலில் அஙுங்குதான் போய்ப் பார்ப்பார்.
சத்யபாமாவைத் தேடிக்கொண்டு கண்ணனும் அங்கே வந்தார்; கோபத்துக்கான காரணத்தை அறிந்தார்.
தேனே! மானே! கல்கண்டே! கரும்பே! இதற்கா கோபம்? நீ சொன்ன படி மரத்தை வேரோடு பெயர்த்தெடுத்து வருகிறேன். ஐந்து நிமிடம் பொறு என்று புறப்பட்டார்.
இதற்குள் நாரதர் இந்திர லோகத்துக்குச் சென்று, ” இந்திரா, வர வர லோகத்தில் திருட்டு பயம் அதிகமாகி வருகிறது. உன் பாரிஜாத மரத்தைக் கொஞ்சம் கண்காணித்து வா” என்று சொல்லிவிட்டுப் போனார்.
கிருஷ்ணன், பாரிஜாத மரத்தை அடியோடு பெயர்ப்பதை அறிந்து அவரைக் கையும் களவுமாகப் பிடித்தார்.
பவள மல்லிகை
கண்ணன் உண்மைக் காரணத்தைச் சொன்னவுடன் அவருக்குப் பரிதாபம் ஏற்பட்டது. எனக்கும் பல மனைவியர்; பல சண்டைகள்; உன் பிரச்சனை புரிகிறது. நீ இருக்கும்வரை இது பூவுலகில் இருக்கட்டும் என்றவுடன் கண்ணனும் அதை எடுத்துவந்து சத்யபாமாவின் தோட்டத்தில் ஊன்றி வைத்தான்.
கண்ணன் இறந்தவுடன் துவாரகாபுரி கடலுக்குள் சென்றது. அப்போது அந்த பாரிஜாத மரம் இந்திரலோகத்துக்கே சென்றுவிட்டது.
இப்பொழுது உத்தரப் பிரதேசத்தில் கிட்டோர் என்னுமிடத்தில் உள்ள ஒரு மரம் பாரிஜாதம் என்று கருதப்படுவதாக விக்கிபீடியா படம் போட்டுள்ளது. தமிழ்நாட்டில் பவள மல்லிகைக்கும் பாரிஜாதம் என்ற பெயர் உண்டு.
–சுபம்–