அவதாரத்தின் ஸங்கல்ப மஹிமை! (Post No.3381)

Written by S NAGARAJAN

 

Date: 23 November 2016

 

Time uploaded in London: 5-37 AM

 

Post No.3381

 

Pictures are taken from various sources; they are representational only; thanks.

 

 

 

 

contact; swami_48@yahoo.com

 

 

பகவான் ஸ்ரீ சத்யசாயிபாபாவின் ஜெயந்தி தினம் நவம்பர் 23ஆம் தேதி வ்ருகிறது. அதையொட்டிய சிறப்புக் கட்டுரை

 

அவதாரத்தின் ஸங்கல்ப மஹிமை !

 

ச.நாகராஜன்

 

உலகப் போர் இப்போது வராது!

 

சென்ற நூற்றாண்டில் அவதரித்து இந்த நூற்றாண்டிலும் வாழ்ந்து உலகெங்கிலும் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள கோடிக் கணக்கான மக்களை அன்பு மூலம் ஆட்படுத்தி சேவை செய்யத் தூண்டி இறையருளைப் பெற வைத்த அற்புத அவதாரம் ஸ்ரீ சத்யசாயி அவதாரம்!

சாயி அன்பர்கள் அவர் எப்படி அற்புதங்களை நிகழ்த்தினார் ஏன் இன்னும் பல ஆண்டுகள் வாழவில்லை என்பன போன்ற கேள்விகளை எல்லாம் கேட்பதில்லை.

 

 

ஏனெனில் அவரது உரையைப் பல ஆண்டு காலம் கேட்டு அதில் ஊறி அருளில் திளைப்பவர்கள் அவர்கள். மிக சுலபமாக எந்த ஒரு கஷ்டமான கேள்விக்கும் அவர்களால் ஒரே வரியில் பதில் அளிக்க முடியும்.

அது தான் ஸங்கல்ப மஹிமை!

 

 

அவரது ஸங்கல்பம் இல்லாமல் எதுவும் நடக்காது.

தேவையான காலத்தில் தேவையானோருக்கு தேவைப்பட்ட இடத்தில் அவரது ஸங்க்ல்ப மஹிமையால் தேவைப்பட்ட அருளாசி கிடைக்கும் இது திண்ணம். ஆகவே அவர்கள் எதைப் பற்றியும் அலட்டிக் கொள்வதில்லை.

 

 

இன்றும் புட்டபர்த்தியில் பிரசாந்தி நிலையத்தில் அதே அமைதி தவழ அவரது சமாதியின் சாந்நித்தியத்தில் சாந்தி பெற முடிகிறது என்றால் அதுவும் அவரது ஸ்ங்கல்பமே

பிரபல கம்யூனிஸ்டாக இருந்து மும்பையிலிருந்து ப்ளிட்ஸ் பத்திரிகையை நடத்தி வந்த ஆர்.கே.கராஞ்சியா பாபாவின் அன்பினால் கவரப்பட்டார். அவரது அருளுக்குப் பாத்திரமானார். ஏராள்மான விளக்கங்களை அவரிடமிருந்து பெற்ற அவர் தனது பத்திரிகையில் பாபாவிற்கென தனி ஒரு காலமே (Column)தந்தார்.

 

   1976 செப்டம்பரில் நட்ந்த சம்பவம் இது. அப்போது உலகெங்கும் ஒரு  குளிர் யுத்த நிலைமை நிலவியது. ரஷியா அமெரிக்கா என வல்லரசுகள் போர் மேகத்தை நிலவ விட்டு உலகினரைத் தவிப்பில் ஆழ்த்திய காலம் அது. உலகில் வாழ்ந்த அனைத்து ராஜதந்திரிகளும் கூட போர் வருவது தவிர்க்க முடியாத ஒன்று என்றே கூறினர்.  

ஆர்.கே.கராஞ்சியா பாபாவைத் தரிசித்தார். பேட்டியும் கிடைத்தது. அப்போது அவர் உலகப் போர் மூண்டு விடும் அபாயத்தைச் சுட்டிக் காட்டி போர் வந்து விடுமோ என்று கேட்டார்.

 

 

பாபா அந்தக் கேள்வியை எளிதாக எடுத்துக் கொண்டு, ‘வரவே வராது’ என்று பதிலளித்தார்.

திகைத்துப் போன கராஞ்சியா, “ஏன், என்ன காரணம்?” என்று கேட்டார்.

ஸ்வாமி, “என் ஸங்கல்பம் இல்லை. உலக்ப் போர் வராது” என்றார்.

 

 

அந்தப் பதிலால் ஸ்வாமியின் மஹிமையை அனைவரும் உணர்ந்து கொண்டனர். நிபுணர்கள் உள்ளிட்ட அனைவரும் கணித்துக் கூறிய உலகப் போர் மூளவே இல்லை.

அவதார ஸங்கல்பம்

ஒரு அவதாரம் ஏன் இப்படிச் செய்யவில்லை, அப்படிச் செய்யவில்லை என்பதைக் கேட்க யாருக்கும் அதிகாரம் கிடையாது என்பதை பாபா மிகத் தெளிவாகத் தனது உரையில் கூறி இருக்கிறார்.

 

 

1976ஆம் ஆண்டு நீலகிரியில் கோடை வகுப்புகள் நடத்தப்பட்டன. அதில் தினமும் உரையாற்றிப் பல சந்தேகங்களுக்கு விளக்கம் அளிப்பர்ர் பாபா.

அப்போது ஆறாவது நாள் கருத்துரையில் அவர் கூறியது:

“ஒரு அவதார புருஷர் எல்லாக் காலங்களிலும் எல்லாவற்றையும் செய்யக் கூடியவராக இருந்தாலும் அவர் எல்லாக் காலங்களிலும் தன் சக்திகளை எடுத்துக் காட்டும் செயல்களைச் செய்ய மாட்டார். தகுதியுள்ள மனிதரிடம் மட்டுமே தன் கருணையைப் புரிவார்.சில சூழ்நிலைகளில் விதிமுறைகளின் படி குறிப்பிட்ட காலத்தில் எதைச் செய்ய வேண்டுமோ அதைச் செய்ய வேண்டி மனித நிலையில் வந்து அத்த்கைய செயல்கள் செய்யப்பட இருக்கின்றன”

 

 

 

பகவானின் தெளிவான உரையைக் கேட்ட பின்னர் அவரது ஸ்ங்கல்பம் இருந்தால் மட்டுமே ஒரு செயல் செயல்படும் என்பதை அனைவரும் உணர்ந்து கொண்டனர்.

பீஷ்மரின் சபதமும் திரௌபதியின் பிரார்த்தனையும்

அவதாரத்தின் ஸங்கல்ப மஹிமையை விளக்க ஏழாம் நாள் கருத்துரையில் மஹாபாரத சம்பவம்  ஒன்றை அவர் விளக்கிக் கூறினார் இப்படி:

 

 

பாரத யுத்தத்தின் ஒன்பதாம் நாளனறு துரியோதனனும் துச்சாதனனும் பாண்டவர்களைக் கொல்ல வேண்டிய அவசியத்தை பீஷ்மரிடம் வலியுறுத்திய் போது ஆவேசத்துடன் மறு நாள் சூரிய அஸ்தமனத்திற்குள் அவர்களை வதம் செய்வதாக் பீஷம்ர் உறுதி கூறினார்.

அந்தச் செய்தியைக் கேட்ட திரௌபதி திடுக்கிட்டாள். பீஷமர் போட்ட சபதத்தை நிறைவேற்றுவதற்கான வல்லமை கொண்ட வீரர் அல்லவா?

 

 

வழக்கம் போல ஸ்ரீ கிருஷ்ணரை அவள் பிரார்த்தித்தாள். அவரது பாதங்களில் விழுந்து சரணமடைந்தாள்.

“சகோதரி! பயப்படாதே, உன்னால் முடிந்ததை நீ செய்! என்னால் முடிந்ததை நான் செய்கிறேன்” என்றார் கிருஷ்ணர்.

அன்று நள்ளிரவில் திரௌபதியிடம் வந்த அவர், “கிளம்பு,
ஏன், எங்கு என்று கேட்காதே! என்னைப் பின் தொட்ர்ந்து வா”
என்றார்.

 

 

 

யுத்த களத்தில் தன்னை யாரும் அறியக் கூடாது என்பதற்காக ஆடையால் தன்னைப் போர்த்திக் கொண்ட திரௌபதி கிருஷ்ணரைப் பின் தொடர்ந்தாள்.

நேராக பீஷ்மரின் கூடாரத்தின் அருகே சென்றார் கிருஷ்ணர். செருப்புகளைக் கழட்டுமாறு திரௌபதியிடம் சைகை காட்டிய கிருஷ்ணர் பீஷ்மரியின் காலடியில் விழுந்து வணங்குமாறு பணித்தார்.

 

(அந்தக் காலத்தில் பணக்காரப் பெண்மணிகள் போட்டிருக்கும் செருப்பு பலத்த சப்தத்தைக் கிளப்புமாம் – பாபா)

அதன்படி செருப்புகளை அவிழ்த்து விட்டுச் சென்ற திரௌபதி பீஷ்மரின் காலடியில் விழுந்து வணங்கினாள்.

“தீர்க்க சுமங்கலி பவ! நீண்ட காலம் சுமங்கலியாய் வாழ்வாயாக” என்று வாழ்த்தினார் பீஷ்மர். மனம் குளிர்ந்தாள் திரௌபதி.

 

 

வணங்கி வாழ்த்துப் பெற்றது திரௌபதி என்பதை அறிந்த பீஷ்மரின் மனம் சஞ்சலத்திற்குள்ளானது.

“இப்படி ஒரு திட்டத்தை இந்த நள்ளிரவு நேரத்தில் உனக்கு வகுத்துத் தந்தது யார்” என்று வினவினார் பீஷ்மர்.

அப்போது ஒரு துணிமூட்டையுடன் சிரித்தவாறே உள்ளே நுழைந்தார் கிருஷ்ணர். திட்டத்தை வகுத்தவர் யார் என்பதற்கு விடை கிடைத்து விட்டது!

 

 

 மூட்டையில் என்ன இருக்கிறது என்பதை அறிய ஆவலுற்ற பீஷ்மர் அதை அவிழ்த்துக் காண்பிக்க வேண்டினார்.

அநத மூட்டையை அவிழ்த்த போது அதில் திரௌபதியின் செருப்புகள் இருந்தன.

 

தன் பக்தர்களுக்காக அவர்களது செருப்பைக் கூடச் சுமக்கத் தயார் என்பதை அவரது செயல் மூலம் அறிந்து கொண்ட பீஷ்மர் இறைவனின் ஸங்கல்பமே வெல்லும் என்று மன அமைதி அடைந்தார்.

 

விதிர்விதிர்த்துப் போன  திரௌபதியோ அவதாரத்தின் எல்லையற்ற கருணையைக் கண்டு ஆனந்த பாஷ்பம் பொழிந்தாள்.

 

துரியோதனனுக்குக் கொடுத்த வாக்குறுதியா, திரௌபதிக்குக் கொடுத்த ஆசீர்வாதமா எது பலிக்கப் போகிறது. என்று உள்ளம் ஊசலாட இரவு முழுவதும் உறங்காத பீஷ்மருக்கு ஒன்று மட்டும் புரிந்து விட்டது. “அவதார புருஷரின் ஸங்கல்பப்படியே அனைத்தும் நடக்கும்” என்று.

மறு நாள் போரில் பீஷ்மர் விழுந்து பட்டார். ஆனால் அவர் கிருஷ்னரின் எல்லையற்ற அருளைப் புரிந்து கொண்டவராக ஆகி இருந்ததால் துயரப்படவில்லை. ஸங்கல்ப மஹிமையை உணர்ந்தவராக அமைதியாக அம்புப் படுக்கையில் இருந்து உரிய காலத்தில் உயிரை விட்டார்.

 

 

பாபா இந்தக் கதையை மிகவும் விரிவாக விளக்கிய போது அனைவரும், ‘அவதாரத்தின் நோக்கத்தையும் அது ஆற்றும் செயலையும் அவதாரம் மட்டுமே அறிய முடியும்; அதை அவதாரம் விளக்கத் தேவையில்லை; அதை முழுதுமாக அறியவும் யாராலும் முடியாது’ என்பதை விளங்கிக் கொண்டனர்.

சாயியின் லீலை சொல்லுக்குட்படாதது. அற்புதமானது. விளக்க முடியாதது.

 

 

எல்லையற்றை அன்பின் உருவான ஸ்ரீ சத்யசாயிபாபாவின் மலரடிகளில் நமஸ்கரித்து அவரது ஸங்கல்ப மஹிமையால் அருள் பெற்று உயரிய நிலையைப் பெறுவோமாக!

*****